வறுமை கவிதை – வெ.நரேஷ்
வா என் அருமை வறுமையோ வா
என்னைத் தீண்டிச் செல்ல வா
உன்ன உணவும்
உடுத்த உடையும் இல்லை வா
இருக்க இடமும் இல்லை
உன் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள வா
கல்வியும் இல்லை
கனவுகளும் இல்லை
என்னை மீண்டும் மீண்டும்
தீண்டிச் செல்ல வா
என் வருமையைப் பற்றி
வாய்விட்டுப் பேச வயசும் இல்லை
வளர்ந்தபின் கேட்டால் அதிகார தொல்லை வா
சாலை ஓரம் உறங்குகிறேன் விடிவதற்குள் வா
விழித்துக்கொண்டால் சந்திப்போம்…
-வெ.நேரேஷ்
வா கண்ணே!!! கவிதை – ம.வி
வா கண்ணே வா…
எதுவும் தவறில்லை எனச் சொல்லும் உலகில்
நீ பெண்ணாகப் பிறந்தது மட்டும் எப்படித் தவறாகும்? …
வா கண்ணே வா…
ஆடை சுதந்திரம் என்று நீ அணியும் ஆடையில்
அவன் திணிக்கும் ஆண்மையின் வக்கிரம் எப்படி உன் தவறாகும்…
வா கண்ணே வா…
மழலையின் சிரிப்பிலும் மங்கையின் அழகிலும்
அரக்கனின் கண்ணுக்கு காமம் தான் தெரியும் என்றால்
அது எப்படி உன் தவறாகும்…
வா கண்ணே வா…
சாதிக்க நினைத்து சாலைக்கு வந்தாய்
அடுப்படியில் உன்னை அடக்கித் தான் வைத்தார்கள்…
வெகுண்டு எழுந்து நீ வெளியிலே வந்தாய்
வெறி நாய்களால் உனை விரட்டினார்கள்…
கண்களில் கனவுகள்..
நெஞ்சினில் ஏக்கங்கள்..
மூன்று வயது குழந்தைக்கும் முட்டி தெரிய ஆடை வேண்டாம்..
முதிர் வயது மூதாட்டிக்கும் முந்தி சேலை மூட வேண்டும்..
எத்தனைத் துயரம் தான் தாங்குவாயோ…
இது எப்போது மாறும் என்று ஏங்குவாயோ…
போதும் நீ பொறுத்தது போதும் பெண்ணே
நீ முன் செல்லும் பாதை உன் கண்கள் முன்னே
தடைகளை தகர்த்து நீ செல்வாய் பெண்ணே
கனவுகள் மெய்ப்பட வெல்வாய் பெண்ணே
நீ உலகத்தின் உச்சிக்கு செல்லும் வேளை
வரும் சரித்திரம் உன் பெயர் சொல்லும் நாளை!!!
– ம.வி !
ஆடை அரசியல் கட்டுரை – மணிமாதவி
ஆதிகாலத்துல மனுசன் ஆடை அணிந்தது கிடையாது. உடையில்லாம தான் காடுகள்ல சுத்தி திரிஞ்சான். அதுல ஆண் பெண் பேதம்ங்குறது கிடையாது. யாருமே உடையணிஞ்சது இல்ல… அடுத்து ஒவ்வொரு நாகரீக மாற்றத்தின் போதும் உடை நவீனத்துவம் பெற்றுகிட்டே வருது.இலை, தழை அணிஞ்சு திரியுறான்… அடுத்து தான் துணி நெய்ய கண்டுபிடிக்கான்… துண்டு துணியை மேலையும் கீழயும் சுத்தினது தான் முதல் ஆடை வடிவமைப்பு… இப்படித்தான் உடை நாகரீகம் படிப்படியா வந்துட்டே இருந்தது….
உடைங்குறது நமக்கு மிக நெருக்கமானது … அது கொடுக்கும் பார்வை தான் இங்க நம்மோட வெளிப்பாடு. ஆள் பாதி ஆடை பாதின்னு சொல்றத கேட்ருக்கோம்… தெருல நடந்து போகுறப்ப ஆடையில்லாம ஒருத்தர பார்த்தா நமக்கு தோன்ற முதல் எண்ணம் அவர் மனபிறழ்சி உள்ளவரா இருக்கக்கூடும்ங்குறது தான்….. இல்ல பிச்சைகாரரா இருப்பாங்களோன்னு தான் நினைப்போம்…. உடைங்குறது உடலை மறைக்கவும், சுற்றுசூழல் மாற்றத்துலயிருந்து நம்ம பாதுகாக்கவுங்குற நிலை மாறி உடைதான் நம் உடல் மொழியாகவே பார்க்கப்படுது.
உடைக்குக்குறது இங்க சாதி,மதம் வெளிப்படுத்தும் அங்கீகாரம் … கபாலி படத்துல ஒரு வசனம் வரும் காந்தி ஏன் கதர் அணிந்தார்ன்னும், அம்பேத்கர் ஏன் கோட்டுபோட்டார்ன்னும் காரணம் இருக்குன்னு.. அதற்கு பின் பெரிய அரசியலே இருக்கு…..
இத்தனை அரசியல் பின்புலம் இருக்குறப்ப பெண்களோட உடை மட்டும் ஆண்களுக்கு கிளர்ச்சி தந்தே ஆகணும்ங்குற நோக்கத்துலயே இங்க வடிவமைக்கப்படுது. ஆடை அணியாத போது பெண்களோட உடல் அடிமைப்படுத்தபடல… ஆடைகளுக்கு பின் மனிதநாகரீகத்துல மதம் புகுத்தப்படுது… அது எப்படி பெண்களின் மாதவிடாய் தீட்டுன்னு ஒதுக்குச்சோ அதே போல பெண்களோட உடலையும் அருவறுப்பாய்,அவமானமாய் சித்தரிக்கத்தொடங்குது….
இந்த உடைதிணிப்பை கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டிய சூழல்ல இருக்கோம்…. ஒரு பெண் சேலை உடுத்திருக்கப்போ இடையோ, மார்போ உடை விலகி தெரிஞ்சாலும் அது கண்ணியமான உடைன்னு சொல்ற நாம …. ஒரு பேண்ட், டாப் போட்ருக்கப்போ கைய தூக்கும் போது வெளிதெரியுற இடுப்பு அந்த உடையை கவர்ச்சியா காட்டுதுன்னு சொல்றோம். ஒரு சுடிதார்க்கு சால் போடலைனாலே துப்பட்டா போடுங்க தோழின்னு சொல்ற அளவு பெண்களோட உடை கொச்சைப்படுத்தப்படுது… இங்க கொச்சைப்படுத்தப்படுறது பெண்ணோட உடையில்ல உடல்…..
ஆண்,பெண் உடலீரப்புங்குறது இயற்கை.. ஆனால் பெண்களுக்கான உடையமைப்பு இப்ப பெரும்பாலும் உடலீர்ப்புக்காக பயன்படுத்தப்படும் சாதனமாதான் பெண்களோட உடலை பயன்படுத்துது….
சமீபத்துல ஒரு பெண்கள் உடையகத்துக்கு போனேன்…. நான் அங்க பார்த்த உடைல 75% சதவீதத்துக்கும் மேல உள்ள பெண்கள் அணியுற டாப்ஸ், சுடி எல்லாமே ,மார்பு பகுதிக்கு தனியா ஒரு பகுதியும் கீழ்பாத்தை தனியா பிரிக்கும் மாதிரியான வடிவமைப்பு…. மார்பு பகுதி எல்லா பெண்ணுக்கும் இருக்கும்… ஆனால் அதை ஏன் எடுப்பா காட்டி தனியா பார்ட்டீசன் கொடுத்து பிரிக்கனும்…. ஆண்கள் யாரும் அப்படி தனியா பிரிக்குற மாதிரி உடையணிந்து பார்த்துருக்கோமா….
ஏன் மார்பை அப்படி காட்டணும்….75% க்கு மேல உடை அப்படித்தான்…. ஏன்னு கேட்டப்ப ட்ரெண்டுன்னு சொன்னாங்க… ட்ரெண்ட் வரும் … ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி… ஆனால் ஆடை தேர்ந்தெடுப்புல கொஞ்சம் கவனம் வைங்க மக்கா…. நமக்கு மட்டும் இல்ல நம்ம குழந்தைகளுக்கும்…. எடுப்பா காட்டி அழகு பார்க்க நம்ம உடல் சாதனம் இல்ல…..
நவீனம், உடை சுதந்திரம்ங்குறது வேற…. காலசூழலுக்கு ஏற்ப உடை மாறும்… ஆனால் இங்க பெண் உடைசுதந்திரம்ங்குறது ஆண் எதை பார்க்கணும்ங்குறத பொறுத்து அமைய கூடாது….
பெண் உடைசுதந்திரம்ங்குறத பத்தி பெரியார் அழகா சொல்லிருப்பார்….”எது உனக்கு உடுக்க ஏதுவா இருக்கோ அதை உடுத்து…. ஆண்கள் மேல்சட்டையும், பேண்ட்டும் போடுறப்போ கண்ணியமா தெரியுதா அதே போல உனக்கு எது இலகுவோ அதை கண்ணியமா உடுத்துன்னு”
பெண்கள் உடலை முழுசா மூடியிருக்கனும்னு சொல்றதும் …. எது வெளிதெரியணும், எது எடுப்பா காட்டனும்னு பெண்களை போகபொருளாய் காட்டுறதும், அலங்கார கருத்தாக்கங்கள் தான்…
நாகரீகம்ங்குறது அதிகாரத்தின் கட்டமைப்புங்குற மார்க்ஸ் கூற்றை நினைவில் வைங்க. அடிமைத்தனம் வேற வேற வடிவுல வருதே தவிர அடிமைத்தனம் அப்படியே தான் இருக்கு. பொண்ணுங்க நம்ம நமக்கான உணர்வு, சுதந்திரம், உடைன்னு நமக்கானத சிந்திக்க தவறுறப்ப அதை ஆண் கைல எடுக்காங்க. நமக்கானது நம்மளோட சுயதேர்வா இல்ல திணிக்கப்பட்டதான்னு நாம தான் முடிவு பண்ணணும்.
ஆடை அரசியல் அதிலும் பெண் ஆடை அரசியல் அதிகம் இங்க…. எதை நாம் தேர்வு செய்யணும்ங்குறது நம்ம கைல…. எல்லாருக்கும் இருக்குற அதே மார்புதான் நமக்கும் என்ன பாலூட்டிங்குறதால அதன் வளர்ச்சி அதிகம். அதை எடுப்பா காட்டி தான் தீரணும்ங்குற அவசியமில்லை…. பெண் ஆடை சுதந்திரம் வேற….. இரண்டையும் குழப்பாம கண்ணியமான ஆடை தேர்வை எடுப்போம்.
-மணிமாதவி
சக்தியின் கவிதைகள்
மனிதனும் பறவைகளும்….!!!!
……………………………………………
எங்கள்
கிராமத்தின் சாலையோரம்
ஒரு குளக்கரை,
குளக்கரையின் ஓரம்
ஓங்கி வளர்ந்த ஒரு மாமரம்,
ஓங்கி வளர்ந்த மாமரத்தின்
கிளைகளில் ஊஞ்சல்
கட்டி ஆடுகிறார்கள் அறியாத
சிறு வயது குழந்தைகள்,
ஊஞ்சலாடும் குழந்தைகளின்
பசியைப் போக்குகின்றன
மரத்தில் பழுத்துத்
தொங்கும் மாம்பழங்கள்,
சூரியனின் வெப்பத்தை
தாங்காத தவிடனும் கலியனும்
குளக்கரை மரத்தடி நிழலில்
இளைப்பாறுகிறார்கள்
கடலில் சூரியன்
கரையும் நேரம் வரை,
கிளிகளும், ஆந்தையும்,
காகமும், மரத்தின்
கிளைகளில்
அமர்ந்தவாறு மாம்பழங்களைப்
பதம் பார்க்கின்றன
கூர்மையான அலகுகளால்,
மாம்பழங்களைப் பதம்
பார்த்த பறவைகள்
மாம்பழக் கொட்டைகளை
விசிறி விடுகின்றன குளக்கரையின் ஓரமாக
செடியாக முளைப்பதற்கு,
குளக்கரை சுற்றியும்
மரங்கள் மரக்கிளைகளில்
பறவைகளும்
குழந்தைகளும்
ஊஞ்சலாடுகின்றன
சூரியனின் ஒளியில்,
நிழல் தரும்
மரங்களில் தஞ்சம்
அடைகிறார்கள்
மனிதனும் பறவைகளும்…..!!!!!!
அழுக்குதுணியும் வண்ணானும்..!!!
……………………………………………………..
விடியற்காலையில் வீடு வீடாக
சென்று வாசலில் நிற்கிறான்,
அழுக்கடைந்த துணிகளை
வாங்கி மூட்டையாக கட்டி தோளில்
சுமந்து செல்பவன் வண்ணான்,
தோளில் தூக்கிய அழுக்கு
மூட்டை துணிகளை பாரம் தாங்காமல்
கழுதையின் முதுகில் ஏற்றிவிடுவான் வண்ணான்,
மூட்டையை சுமந்த
கழுதைகள் மலைப்பாம்புகளை
போல நகர முடியாமல்
சிரமத்துடன் நகருகின்றன
ஆற்றங்கரையை நோக்கி,
சாலையில் வீசப்பட்ட
பேப்பர்களையும்
இலைகளையும் பொருக்கி
பசியாறிக்கொண்டே
ஆடி ஆடி நகருகிறது
மூட்டையை சுமந்த கழுதைகள்,
அடுப்பை மூட்டி பானையில்
அழுக்கு துணிகளை போட்டு
வெள்ளாவி வைத்து அழுக்கை
நீக்குபவன் வண்ணான்,
ஓவ்வொரு துணிகளுக்கும்
சோப்பை போட்டு ஆற்று நீரில்
அலசி வெண்மை
படுத்துபவன் வண்ணான்,
ஆற்றங்கரையில் புல்களை
மேய்ந்து கொண்டுக்கின்றன
மூட்டையை சுமந்த கழுதைகள்,
அழுக்கு துணியின்
கரைகள் கரைந்து ஓடுகிறது
ஆற்று நீரில்
வண்ணானின் முதுகுவலியால்,
அழுக்கை நீக்கிய
துணிகளை சூரியனின்
வெயிலில் காய வைத்து
மடித்து வேட்டியில் மூட்டையாக
கட்டி கழுதையின் முதுகில் ஏற்றி
ஓவ்வொரு வீடாக இறக்கி
வைப்பவன் வண்ணான்,
அழுக்கு துணிகளை
சலவை செய்த வண்ணான்
வீடு வீடாக நிற்கிறான்
பாத்திரத்தை கையில்
ஏந்தியவாறு
இரவு நேரத்தில்
ஒருவேளை உணவுக்காக……!!!!!!
எனக்கின்று எப்படி உறக்கம் வரும்? கவிதை – ஆதிரன் ஜீவா
உடை தானே!
அவள் விரும்பும்படி
கொண்ட நம்பிக்கைப்படி உடுத்தட்டுமே!
எனக்கென்ன வந்தது?
ஏட்டிக்குப் போட்டியென
காவித் துண்டணிந்து எதிர்ப்பைக் காட்டியதும்
கூட்டுப் புழுவாக வீட்டிற்குள்
அடங்கி இருப்பாள் என முட்டாளாய் இருந்துவிட்டேன்.
பர்தா அணிந்து
பைக்கில் அவள் பறந்தது கண்டு,
காவித் துண்டுகளும் ஆரஞ்சுத் தொப்பிகளும்
எல்லோருக்கும் வழங்கப்பட்டன…
தனியாய் மாட்டிக் கொண்ட ஆட்டுக் குட்டியைக்
குதறக் காத்திருந்த
வெறிநாய் கூட்டத்தில்
நானும் ஒருவனானேன்…
ஆடல்ல, நான் சிங்கமென
காட்டி விட்டாள்;
பாடம் புகட்டி விட்டாள்..
என் மதப் பண்டிகை மட்டும்
பள்ளியில் கொண்டாடப் பட்டபோது,
தபால் ஆபீஸ் பிள்ளையார் வங்கிப் பிள்ளையார் முளைத்த போது,
புதிய திட்டங்களை வேத பூஜையுடன் தொடங்கியபோது,
அமைதிகாத்தானே என் சகோதரன்!
அவள் உடை; அவள் உரிமை
போராடட்டும் என விட்டிருக்க வேண்டும்…
இல்லையெனில்
கல்விக் கட்டண உயர்வு,
நுழைவுத் தேர்வு,
உதவித்தொகை நிறுத்தி வைப்பு என
இன்னும் இணைத்திருக்க வேண்டும்.
நான் அறியேன்…
பின்னொரு நாள் நிகழ்த்த இருக்கும்
வன்முறை ஆட்டத்திற்கான
ஒத்திகை தான் இது என்று…
நான் அறியேன்…
எனக்கு வழங்கப்பட்ட
காவித் துண்டுகளும் ஆரஞ்சு தொப்பிகளும்
ஹரித்துவார் மாநாட்டில்
‘ஆர்டர்’ செய்யப்பட்டவை என்று…
நான் அறியேன்…
என் சொந்த சகோதரர்களை வெறுப்பதற்கான நியாயங்கள் தான்
மதப்பற்று என்பதை…
எனக்கின்று எப்படி உறக்கம் வரும்?
ஹைக்கூ கவிதைகள் – இரா.கலையரசி
1)
பிழிந்த துணியில்
கொட்டித் தீர்த்தது
மழை.
2)
வரைந்த ஓவியத்தை
தீண்டி மகிழ்ந்தான்
பார்வை மாற்றுதிறனாளி
3)
காற்றிடம் சண்டை இட்டு
வாசலில் தர்ணா
சருகுகள்
4)
சுடுகாட்டுப் பிணங்கள்
சண்டை இட்டன
சாதிச் சங்கத்திற்கு.
காதுகளைக் கொஞ்சிய
அவனை அணைத்தேன்
அலைபேசி
வசந்ததீபனின் குறுங்கவிதைகள்
வெள்ளாவிப் பானைகளில்
முட்டுத்துணி
குழந்தைப்பீத்துணி உட்பட
தூய்மையாக்க
வேகுகிறான் மாடன்.
🦀
கைக்கருப்புக்கு அரிசிப்பொரி படையல்
தலைச்சன் குழந்தைக் கரு பூசு மை
என ஊரைப் பயமுறுத்தி
ரத்தம் கக்கிச் செத்தான் மந்திரவாதி.
🦀
குடித்தான் குடித்தான்
குடித்தான் குடித்தான்
அவன் அவனையே
குடித்து முடிந்தான்.
🦀
காதல் பூவா ?
பூக்கிறது உதிர்கிறது
உதிர்கிறது பூக்கிறது
கண்ணிமைக்கும் நேரத்தில்.
🦀
வெயில் ஏந்தி
வாழ்க்கையின் சுவற்றில்
ஒளிப்படங்கள் காட்டும்
கண்ணாடியாய் மனைவி.
🦀
பூக்கள் மட்டுமல்ல
கனிகளும்
தானியங்களும்
தானே வசந்தம்.
🦀
கனவு வராக்கூடாதெனப் பிரார்த்திக்கிறேன்
அழுகைச் சத்தம் கேட்கிறது
மனசு பரிதாபப்பட கனவு சிரிக்கிறது.
🦀
ஆண்டாளையோ
அக்கமா தேவியையோ
ஒளவையையோ எந்த பெண்ணையோ
இழிவு படுத்தும் எவரும்
ஈனர்கள் தான்.
சட்டை பொத்தான்கள் பெண்களுக்கு இடதுபுறத்திலும், ஆண்களுக்கு வலதுபுறத்திலும் இருப்பது ஏன்?
நீங்கள் எப்போதாவது ஷர்ட்களை துவைக்கும் போதே அல்லது இஸ்திரி செய்யும் போது பெண்களின் சட்டையில் பொத்தான்கள் (பட்டன்) இடது பக்கத்தில் அல்லது ஆண்கள் சட்டையில் பொத்தான்கள் வலதுபுறத்தில் இருப்பதைக் கவனித்திருப்போம். அது ஏன் என்று கேள்விக்குப் பதில் நாம் யோசித்துக் கூட இருக்க மாட்டோம். ஆனால் அதன் பின்னணியில் இருக்கும் காரணங்கள் நம்மை நீண்ட தூரம் நம்மை அழைத்துச் செல்கிறது.
நீண்ட காலத்திற்கு முன்பு, உடைகள் எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும் என்பதைப் பாலினம் தான் தீர்மானித்தது. இப்போது யுனிசெக்ஸ் ஃபேஷன் மற்றும் பரிணாம வளர்ச்சியுடன், ஆண்களும் பெண்களும் தங்கள் ஆடைகளை தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது. இனி பெண்களுக்கு பேன்ட் அல்லது ஆண்களுக்குப் பாவாடை போன்ற ஆடைகளை வைத்து ஒருவரின் பாலினத்தைத் தீர்மானிக்க முடியாது. இவை இப்படி இருப்பினும், சட்டைகளுக்கு வரும்போது, பொத்தான்களின் வேறுபாடு மட்டும் இன்னும் தொடர்கிறது. நீங்கள் ஒருபோதும் கவனித்தது இல்லை என்றால், பெண்களின் சட்டைகளில் பொத்தான்கள் இடதுபுறத்திலும் ஆண்களுக்கு வலதுபுறத்திலும் இருப்பதைக் கவனியுங்கள். அது சரி, இந்த வேறுபாட்டிற்கு என்று எந்த நடைமுறை காரணமும் இல்லை, ஆனால் 1850களில் இருந்து அதையே பரிந்துரைக்கும் பல கோட்பாடுகள் உள்ளன. வாருங்கள் சற்று உள்நோக்கி கவனிப்போம். பொத்தான்கள் 13ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வடிவமைக்கப்பட்டது. அப்போது தான் பெரும்பாலான புதிய தொழில்நுட்பங்களும் உருவாக்கப்பட்டது. அப்போது பொத்தான்கள் எல்லோர் ஆடையிலும் இடம் பிடிக்கவில்லை. ஏனென்றால் அதன் விலை கூடுதலாக இருந்திருக்கிறது.
அந்த காலத்தில் ஆடைகள் பெரும்பாலும் உயர்த்தட்டு மக்களுக்குரியது என்று இருந்தது. அவற்றில் பெண்கள் உடுத்தும் ஆடைகள் பல அடக்கு ஆடையே பயன்படுத்தினர். மறுமலர்ச்சி மற்றும் விக்டோரியன் சகாப்தத்தில் பெண்களின் ஆடைகள் பெரும்பாலும் ஆண்களை விட மிகவும் கடினமானதாகவும், விரிவானதாகவும் இருந்தன – பெட்டிகோட்கள், கோர்செட்டுகள் மற்றும் பெரிய பாவாடைகள் எனப் பயன்படுத்தப்பட்டது. அப்போதெல்லாம் பெண்களுக்கு அவர்களின் பணிப்பெண்களே ஆடையை உடுத்தினார் . அப்படி அணிவிக்கப்படும் ஆடைகளைப் பணிப் பெண்கள் தான் பொத்தான்களைப் பூட்டுவதற்கு இலகுவாக இருக்க வேண்டும் என்பதற்காக இடது புறத்தில் பொத்தான்கள் தைக்கப்பட்டது என்றொரு கருத்துண்டு.
நாம் பெரும்பாலான மக்கள் வலது கை பழக்கம் உள்ளவர்கள் பெண்கள் பொதுவாகக் குழந்தைகளை இடது கைகளில் வைத்திருப்பார்கள், இடதுபுறத்தில் பொத்தான்களை வைப்பதன் மூலம் இலகுவாக பொத்தானை திறந்து தாய்ப்பால் கொடுக்க முடியும் என்று கருத்தும் நிலவியது.
ஆனால் ஃபேஷன் வரலாற்று இணையப் பதிவர் குறிப்பிடுகையில் 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளிலும் ஆண்கள் வேலைக்காரர்களால் ஆடை அணிந்திருப்பார்கள். இதற்கிடையில், 18 ஆம் நூற்றாண்டு வரை பெண்களின் ஆடைகளில் பொத்தான்கள் அரிதாகவே இருந்தன, 1860க்கு பிறகுதான் பெண்களுக்குப் பொத்தான்கள் இடதுபுறத்தில் தோன்றத் தொடங்கியது – குறைந்தது 100 ஆண்டுகளுக்குப் பிறகு பணிப்பெண்கள்/வேலைக்காரர்கள் இத்தகைய பணிகளுக்குப் பயன்படுத்தத் தொடங்கினர். சிந்திக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் ஏன் உயர் வர்க்க மக்கள் வேலைக்காரர்களுக்காக ஆடையில் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்பது இன்றும் கேள்வியே?
ஆனால் ஆண்கள் சட்டையில் பொத்தான்கள் வலது புறத்தில் தைக்கப்பட்ட தன் காரணம் அவர்கள் போர்க்களத்திலும், ராணுவத்திலும் ஆயத்தங்களைக் கையாள வலது கையே பயன்படுத்தினர். அப்படிக் கையாளும் போது சட்டையில் உள்ள வலதுபுறத்தில் பொத்தான்கள் வடிவமைத்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இது இந்த அனுபவத்திலிருந்து வந்திருக்கலாம். ஆனால் இந்த சௌகரியம் பெண்களுக்கு ஏன் கிடைக்கவில்லை.
நெப்போலியன் கோட்பாட்டின் படி பெண்கள் பலர் பிரெஞ்சு பேரரசர் நெப்போலியன் பொனபார்ட்டின் கை-இடுப்பு போஸ்டை கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவரின் அந்த போஸ் கண்ணியத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. அதனை அறிந்த பேரரசு நெப்போலியன் பெண்களின் சட்டைகளில் உள்ள பொத்தான்களை ஆண்களுக்கு எதிர் பக்கத்தில் வைக்கும் படி உத்தரவிட்டார். அப்படிச் செய்தால் பெண்கள் கேலிக்கூத்தாகப் பார்க்கமுடியாது என்பது அவரின் கோட்பாடு. தனி ஒருவரின் தேவைக்காக ஓட்டு மொத்த பெண்களின் ஆடையிலும் தனது வெறுப்பைச் செலுத்துவது எவ்விதமான பாகுபாட்டை வலியுறுத்தி இருக்கிறார் என்பது புரிகிறது.
அதையும் கடந்து ஒரு விஷயம் என்னவென்றால், அப்போதெல்லாம் குதிரை சவாரி செய்யும் போது பெண்கள் வலப்புற பக்கவாட்டில் அமர்ந்து சவாரி செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது. பெண்கள் குதிரை சவாரி செய்யும் போது காற்று அவர்களில் மேல் பாய்வதைக் குறைத்து துணியை விலக விடாமல் தடுக்க இடதுபுறத்தில் பொத்தான்கள் பயன்படுத்தப்பட்டதும் ஒரு காரணம் என்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து எளிய மக்களும் ,உயர் தட்டு மக்களின் ஆடையையே விரும்பினர். அப்போதெல்லாம் பொத்தான்கள் விலைமதிப்புமிக்கதாகப் பார்க்கப்பட்டது. இருப்பினும் விலைமதிப்புமிக்கவை இடது புறம் இருக்க வேண்டும் என எண்ணினர். அதன் நீட்சியே ஆண்களின் சட்டையிலும் பெண்களின் சட்டையிலும் பொத்தான்கள் நிரந்தரமாக வலதிலும் இடதிலும் இடம்பெற்றது .
ஆடையில் பாலின சமத்துவம்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பாலியல் வல்லுநர் ஹாவ்லாக் எல்லிஸ் எழுதுகிறார் ஆண் மற்றும் பெண்: இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பாலியல் கதாபாத்திரங்களின் ஆய்வு (1894 இல் வெளியிடப்பட்டது), பெண்களின் ஆடைகள் வலமிருந்து இடமாக பொத்தான் இருப்பது பெண்களின் “வலிமை மற்றும் வேகத்தைக் குறைப்பதாக இருந்திருக்கூடம் என்கிறார். எனவே ஆண்களை விடப் பெண்கள் குறைவானவர்கள் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார். பெண்கள் ஆடையில் உள்ள சிரமங்களால் பல கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேர்ந்தது.
மற்றொரு கோட்பாடு என்ன வலியுறுத்துகிறது என்றால் பெண்களின் ஆடைகள் விடுதலையை வெளிப்படுத்தத் தொடங்கியதும், ஆண்களின் ஆடைகளிலிருந்து (எ-டு காட்டு: பேன்ட்) கடன் வாங்குவதும், உற்பத்தியாளர்கள் இடதுபுறத்தில் உள்ள பொத்தான்களை ஆண்கள் மற்றும் பெண்களின் ஆடைகளை வேறுபடுத்துவதற்கான ஒரு நடைமுறையாகப் பராமரித்தனர். எவ்வாறாயினும், மினசோட்டா ஆடை வடிவமைப்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிம் ஜான்சன் “பாலினங்களுக்கிடையில் பாகுபாட்டை நாம் தொடரும் வரை அது நம் ஆடையிலும் தொடரும் என்கிறார்.
பெண்களின் சட்டையில் உள்ள இடதுபக்க பொத்தான்கள் பாலின பாகுப்பாடின் ஒரு அடையாளம். யார் யாரே சிந்தனையில், அடுக்கு முறையில் பெண்களின் ஆடையிலும் தொடர்ந்த இருக்கிறது என்றால் மிகையாகாது. ஆனால் இன்று காலம் மாறி வருகிறது. அதன் வடிவமே பெரிய நிறுவனங்கள் யூனிசெக்ஸ் உடைகளைக் கையில் எடுத்திருக்கிறது. அவை ஆண்களைப் போன்றே சட்டையில் பொத்தான்கள் வலது பக்கத்தில் வைக்க உந்துகிறது. இது போன்ற முன்னெடுப்புகள் கட்டாயம் ஆடையில் சமத்துவத்தை நோக்கிப் பயணிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
சிந்துஜா சுந்தர்ராஜ்