Voor Velaikkaran ShortStory by K Praveen Kumar. கி. பிரவீன் குமாரின் ஊர் வேலைக்காரன் சிறுகதை

ஊர் வேலைக்காரன் சிறுகதை – கி. பிரவீன் குமார்




எலே மாயி, எலே மாயி இங்க வாடா இப்படியே எத்தனை நாளைக்குத் தான்  கதைபேசிட்டு இருக்க போற.நம்ம டீ கடைக்கு வேலைக்குவரது.

வரேன் துரை. சரி குமாரு எனக்கு வேலை வந்துருச்சு அப்புறம் பேசலாம்.

எலே மாயி டீ கடையில நீ போடுற டீக்கு எல்லா பையலும் இங்கதான் வரனும் பார்த்துக்க!

சரிதுரை.

எதாவது தேவைனா எங்க அப்பன் இருப்பான். அவன்கிட்ட கேட்டுக்க. எனக்கு தலைவலிக்குற மாதிரியிருக்குடா மாயி. எனக்கு இப்ப போதையிலை வாங்கிதாடா.

“இவன் வேற என்ன வேலைக்குலாம் அனுப்ப போறானோ தெரியலை” என தன்னுள் புலம்பிக்கொண்டு வாங்க சென்றான்.

சில நாட்கள் கடந்தது.

மாயி நம்ம டீ கடையில தான், இப்ப எல்லபையலும் வரானுங்க, எல்லாம் உன் கைவித்த தான்யா மாயி.  சரிவாடா மாயி உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கு ஆஸ்பத்திரி வரை போயிட்டுவரலாம்.

அப்படியா! என்னாச்சு துரை உடம்புக்கு?

எலே! வாடா மாயி  வாயபொத்திக்கிட்டு!

என்ன துரை “ஒயின் சாப்” பக்கமா வண்டிய நிறுத்துறிங்க.

நீ இந்த கடைக்குபோயி உன் கையில இருக்கிற பணத்த எடுத்து, ஒரு புள்ளூ வாங்கிட்டுவாடா. எதுக்கு துரை அதலாம்? நான் சொல்லுறத மட்டும் செய்யுடா முதல, நேரத்த வீணாக்காதடா கஞ்சாமாயி.

இந்தாடா! மாயி இந்த தீனிய வாயில போட்டு திண்ணுக்கிட்டு கிட. நான் இந்த புள்ள வையித்துல ஊத்திட்டுவரேன். இப்படி குடுத்துல தண்ணீ ஊத்துரமாரி ஊத்துரானே! இன்னைக்கு என்ன கூத்து நடகப்போகுதோ தெரியலை?

சரிடா மாயி இப்ப வீட்டுக்கு போலமா?

சரிதுரை.

இப்பத்தாண்டா தெம்பா இருக்கு. நேரமாச்சு ஏறுடா வண்டில. 

பார்த்து வண்டிய ஓட்டூங்க துரை.

 துரை, துரை,…! வண்டிய நேரா ஓட்டூங்க, வண்டி வருது முன்னாடி!

எலே மாயி வண்டிய நல்லா தாண்டா ஓட்டூறேன். வண்டிதாண்டா வேற எங்கேயோ போகுது. நாளைக்கு வண்டிய சர்வீஸ்க்கு விடனும்டா.

துரை, வண்டி ரோட்ட விட்டு வேற எங்கேயோ போகுது! கடவுளே நீ தான் இவன் கிட்டயிருந்து காப்பாதனும்! என சொல்லிகொண்டு இருக்கும்போது வண்டி சாலையின் ஓரத்தில் நிலைத்தடுமாறி தடம் புரண்டது.

சொல்லி வாய மூடல அதுக்குள்ள வண்டிய முள்வேலில ஏத்திடானே!

“அய்யோ” ! கடவுளே கை, காலெல்லாம் ஒரே காயமா  இருக்கே!

துரை, துரை,…? நீங்க எங்கயிருக்குறிங்க?

ய் மாயி,இங்க வாடா வந்து வண்டிய தூக்குடா மாயி.

உடம்பு எல்லாம் இரத்தமா வருது துரை வாங்க ஆஸ்பத்திரிக்குப் போவோம்.

டேய் ! வீட்டுல கேட்டா. காருக்காரன் இடுச்சுட்டான்னு சொல்லிரு வேற எதுவும் சொல்லாத.

சரி துரை வாங்க போலாம்.

மறுநாள் காலையில்.

“நாம இனி இவன் கடைக்கு போககூடாதுடா சாமி” என முடிவு எடுத்தான்.

என்னயா மாயி  தனியாபொழம்பிக்கிட்டு இருக்க? உடம்புலாம் காயமா வேற இருக்கு?

அது பெரிய கதை குமாரு!

இப்படியே எத்தன நாளைக்குத் தான் ஊருக்காரனுங்களுக்கு சும்ம வேலை செய்ய போற? உனக்குனு குடும்பம், குட்டி இல்லையா?

அட விடு குமாரு. அதலாம் கடந்து வந்தாச்சு. இங்க வந்து இருபது, முப்பது வருசமாவது இருக்கும். நமக்கு இப்படி இருக்குறது தான் நிம்மதியா இருக்கு. இந்த ஊருக்காரனுங்க அப்படித்தான். அவனுங்களுக்கு தேவைனா என்னைய வேலைக்கு கூப்பிடுவானுங்க. இப்படியே பழகிடுச்சு குமாரு. கடவுள் நல்ல உடல் ஆரோக்கியத்த தந்துருக்கான். அப்பறம் எதுக்கு குமாரு காசு பணம்.

“ய்யோ நீ தத்துவமெலாம் நல்ல தான் பேசுற”. சரி எதாவது சம்பளத்துக்கு  வேலைக்குப் போக வேண்டியது தானே. விருப்பமில்லாமலாம் இல்ல குமாரு. முன்னாடி மாதிரி வேலை செய்யமுடியலை.

சரியா காலையில  இருந்து எதாவது சாப்பிட்டியா, இல்லையா?

 அதுலாம் எப்பயாவது தான் குமாரு.

இந்தாயா மாயி இப்போதிக்கு இந்த காச வச்சு நைட்டாவது  நல்லா சாப்பிட்டுக்க. சரியா மாயி நாளைக்கு பாக்கலாம்.

இரவு சாப்பிட்டு  முடித்துவிட்டு, தெரு கடையில் இருக்கும் படிக்கட்டில கொசுக்கடியுடன் தன்னிடம் இருந்த வேட்டியினால் போர்த்திக்கொண்ட தூங்கினான். ஏங்க! எங்கங்க போனீங்க? எவ்வளவு நேரமா உங்கள தேடுறது?

பக்கத்துல சின்ன வேலையா போயிருந்தேன். என்னா மயிலு? என்ன வேணும்?

ஏங்க! தீபாவளி வருது நம்ம பிள்ளைகளுக்குத் துணி, பட்டாசுலாம் வாங்கனும். அப்படியே குடும்பத்தோடு சேர்ந்து கோவிலுக்கபோயிட்டு வரலாமாங்க?

சரி மயிலு போகலாம்.

என்னையா பரமசிவம் (மாயி) நல்லநாளுக்குப் பொண்டாட்டி, பிள்ளைங்ககூட வெளியே கெளம்பிட்ட போல? சரி, சரி நல்ல இருந்தா சரிதான்டா மாயி.

என்டி மயிலு என்னைக்கும் இல்லாம இன்னைக்கு மட்டும் சந்தோசமா இருக்குடி. என்னானு தெரியல ! 

ஆமாங்க. நீங்க எங்க கூட இருந்தா எங்களுக்கும் சந்தோசமாதான் இருக்கு. நீங்க தான் எங்கள விட்டுட்டு போகிடுறிங்க.

இனி போக மாட்டேன்டி மயிலு. உன்ன நல்லா பாத்துகிறேன்.

 மனநிறைவுடன் தன் குடும்பத்துடன் நடந்து சென்றான்.

“ய்யோ மாயி,”ய்யோ”…எந்திரியா! மணி ஏழு ஆச்சு! இன்னும் என்னையா தூக்கம் வருது? எந்திரியா! இந்த சிட்டையில இருக்குற பொருளை வாங்கிட்டுவாய, கடைக்குச் சாப்பிட ஆளு வரப்போறாங்க.

சரி தாயி வாங்கிட்டுவறேன் என பறி எழுந்த மாயி, கண்களைத் துடைத்துக் கொண்டு தன் அன்றாட ஊர் வேலையை செய்ய நடந்து சென்றான்.

Chandru poems சந்துரு கவிதைகள்

சந்துரு கவிதைகள்



(1) வோட்காவின் நிறம்
***************************
இரைச்சல் நிறைந்த
இரவு நேரத்து மது விடுதியில்
எதிரெதிரே அமர்ந்து கொண்டிருப்பவர்கள்
கடவுளும் சாத்தானைப்போலவும்
தெரிகிறார்கள்.
இருவரின் கோப்பைகளிலும்
நுரைத்து மிதக்கிறது மது
சாத்தானின் கிண்ணத்தில்
ஒயினின் ரத்தச்சிவப்பிலும்
கடவுளின் கோப்பையில்
வோட்காவின் வெண்ணிறத்திலும்
முகம் காட்டித் தளும்புகிறது மது.
சாத்தான் வேகமாகவும்
கடவுள் நிதானமாகவும் பருகுகிறார்கள்
போதையில்
சாத்தானின் உதட்டிலிருந்து
குழைந்த வார்த்தைகள்
வசவுகளாய் வந்து விழுகின்றன

அவை மனிதர்கள் குறித்த
மதிப்பீடுகளாய் இருக்கிறது
எனினும் சிவந்து சுழற்றும்
சாத்தானின் கண்களில்
பரிமாறுபவன் மீதான அன்பு கசிகிறது
மனித வெறுப்பை வெளிக்காட்ட முடியாமல்
அடுத்தடுத்த ஃபெக்குகளை
வார்த்தைகளற்று
குடித்து முடிக்கிறார் கடவுள்…
நிறை போதையுடன் வெளிவருபவர்களிடம்
கட்டிங்குக்காக கை நீட்டும்
ஒரு மது அடிமையிடம்
கை விரிக்கும் இருவரில்
உண்மையில் ஒருவரிடம்
ஏதுமில்லாதிருந்தது…
இருவரும் தள்ளாடி
அவரவர் இருப்பிடமடைந்தபின்
மூடிய மதுக்கூடத்தில்
மூர்ச்சையுற்று வீழுந்து கிடக்கும்
வார்த்தைகளையும் சேர்த்து
கூட்டிப் பெறுக்கத் தொடங்குகிறான்
கைவிடப்பட்ட முதியவனொருவன்…
இடையிடையே இடுப்பை அடிக்கடி
தொட்டுப்பார்த்துக் கொள்ளும்
அவன் உணர்வுகளில்
இன்பமாய் அசையத் தொடங்குகிறது
சாத்தான் வற்புறுத்தி
கையளித்துப்போன
குவாட்டர் பாட்டில்…

(2) தோழி
************
எப்போதும் என்னையே பார்த்தபடி
உன் தோழியிடம்
ஏதோதே
சிரித்துச் சிரித்து பேசும் நீ
ஒரு நாளும் என்னிடம் பேசியதேயில்லை
வேறொரு முகபாவத்துடன்
நீ சிரித்து பேசும்போதெல்லாம்
என்னைப் பற்றித்தான்
ஓயாமல் பேசுகிறாய்
என்பதை மட்டும்
அடி மனசு அடித்துச் சொல்லும்…
ஆனால்
உன் தோழியின்
அர்த்தமற்ற முறைப்புக்கு
அடிக்கடி பயந்து நான்
வேறு திசை பார்த்து நிற்பேன்…

நிச்சயமாய்த் தெரியுமெனக்கு
பார்வைகளால் தினமும் நீ
பருகியதும்
பகிர்ந்து கொண்டதும்
என் மீதான காதல் என்பது மட்டும்
நிச்சயமாய் தெரியும் எனக்கு…
ஒரு மழை மாதத்தில்
திடீரென நீ
மாயமாகிப் போனபோது தான்
நிரந்தரமாய் எனக்குள் சூல்கொண்ட
வெற்றிடங்களின்
வெறுமையை உணர்ந்தேன்
இதுவரை
உன் ஒற்றைப் பார்வைக்குள்
என்னைத் தொலைத்து
உள்ளுக்குள் ஒளித்துவைத்திருந்த
உன் மீதான என்
மொத்தக் காதலின் ஆழத்தையும்
அப்போதுதான்
நானே அறிந்துகொண்டேன்…

உனக்கென்ன ஆனதென்ற
தாளவியலா தவிப்பில்
துளிர்க்கும் கண்ணீரை மறைத்துக்கொண்டு
தயங்கித் தயங்கி
கடுகடுப்பாய் எப்போதும் முறைக்கின்ற
உன் தோழியிடம் கேட்டேன்
நீ தூர தேசம் குடிபெயர்ந்துவிட்டதாய்
எப்போதும் திரும்பமாட்டாயென
குமிழ்ச்சிரிப்புடன்
சொல்லிவிட்டுப்போனாள்…
காலங்கள் பல கடந்த பின்னும்
என்னைப்பற்றி அன்று நீ
என்னென்ன பேசினாய் என்பதை மட்டும்
இன்று வரை சொல்லவேயில்லை
என் மனைவியாகிப்போன
உன் தோழி…

(3) கடவுளும் ஏடிஎம் இயந்திரமும்
*****************************************
கையிருப்பு உள்ளதா இல்லையா
என்று அறிய முடியாதபடி
அசைவின்றி அமர்ந்திருக்கும் கடவுள்
ஏ டி எம் எந்திரத்தை
நினைவுறுத்திவிடுகிறார்…
டெபிட் கார்டுகள் போலவே
தேவையானவற்றை
மனப்பரப்பில் தேய்த்து
கோரிக்கைகளாய் வைத்து நிற்கின்றனர்
மனிதர்கள்…

கடவுச்சொல்லுக்கு பதில்
நம்பிக்கைகள்
எண்களாய் இடப்படுகின்றன
பதிந்த மாத்திரத்தில்
சட்டென வெளியே முகம் காட்டும்
பணத்தாள்களைப் போல் பக்தர்களும்
அகத்துக்குள் வெளிவந்து விழும்
நிறைவின் நிழலுடன்
அறையை விட்டு வெளியேறுகின்றனர்
கடவுச்சொல் மறந்தவர்களும்
காலாவதி அட்டை வைத்திருப்பவர்களும்
வேண்டுதல் பலிக்காத பக்தனைப்போல்
புதிய அட்டைகளுக்கும்
புதிய பின்னுக்கும்
மேலாளரிடம் விண்ணப்பிக்கின்றனர்.
இழந்தவற்றை திரும்பத்தரும்
அதிகாரமிருப்பதால்
ஏடிஎம் எந்திரத்தைவிட
சக்தி மிக்கவராகிவிடுகிறார் மேலாளர்.
பணமில்லாத எந்திரங்கள்
சக்தி குறைந்த தெருவோரக் கடவுளாய்
காட்சி தருகின்றன.
எப்போதும் பணமிருக்கும் ஏடிஎம்கள்
புகழ் பெற்ற தலங்களாய்
நம்பப்படுகின்றன.

எனினும்…
காலியாவதும் நிறைப்பதுமாய்
மேலாளர் கட்டுப்பாட்டில் இருக்கும்
ஏடிஎம் எந்திரங்களுக்குள்
தங்களுக்கான கடவுச்சொல்லை இட்டு
பணத்தை நிரப்பிச்செல்பவர்களை
பார்க்கும்போதெல்லாம்
கடவுள் எனும் ஏடிஎம்மை படைத்து
அதை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்
மனிதர்களின் தொடரோட்டம்
நினைவுக்கு வந்து விடுகிறது…

(4)
காணச்சகியாதவர்கள்
கல்லெறிந்ததில்
சேற்றுக்குள் சிக்கி
துரிதமாய் நிகழ்ந்து விட்டது
நிலாவின் மரணம்…
கொலை செய்த பெருமிதத்தில்
கடந்து சென்றவர்கள்
திரும்பி வரும்போது
அதே குட்டையில்
சிரித்துக்கொண்டிருந்தது
மற்றுமோர் நிலா…

 

(5) கனவுகளின் தொப்பை
*****************************
துவக்கத்தில்
குறுந்தகட்டைப்போல்
தட்டையாகவே இருந்தது கனவுகள்
நாட்கள் செல்லச்செல்ல
கனவுகளுக்கு
தொப்பை விழ ஆரம்பித்து விட்டது
நாளைகளை யோசிக்காமல்
தினசரிகளுக்குள்
சுற்றிய ராட்டிணங்களில்
ஒரு குழந்தையின் குதூகலத்துடன்
மகிழ்ந்திருந்தது அது…
வளர்ந்த பருவத்தின் பிறகு
பார்ப்பதையெல்லாம்
மேயத்தொடங்கியதால்
பிளாஸ்டிக் பையை விழுங்கிய
மாட்டின் வயிறுபோல்
செரிமானமற்று
ஊதத் தொடங்கிவிட்டது..
பறக்கும்போதே இறகுகள் உதிர்ந்து
மடிந்துபோகும்

ஈசல் கனவுகள் இங்கு ஏராளம்…
மத்தாப்பு வெளிச்சமாய் மின்னி
நிரந்தரமாய் இருட்டில் அமர்ந்துகொள்ளும்
கனவுகளும் அதிகம்
தடைகள் சோம்பல்
தோல்விகளின் அழற்சியால்
சத்தமில்லாமல்
தற்கொலை செய்துகொள்ளும்
கனவுகளை யாரும் அறிவதில்லை
பனி மூட்டத்தில் பாதை புலப்படாமல்
இழுத்துச்சென்ற கனவை
பள்ளத்தாக்குகளில் எறிந்து
அடிவாரம் திரும்புவோர் அநேகம்
எனினும்….
விட்டுக்கொடுத்ததாலும்
பிறகு பார்த்துக்கொள்ளலாமென்று
பரண்களில் வீசியெறிந்த
கனவிலொன்று
எழுப்பப் படும் நாளுக்காக
கசக்கியெறிந்தவனை
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது…