சக்தியின் கவிதைகள்

சக்தியின் கவிதைகள்




எல்லோருக்குமான இசை
பறையிசை …….!!!!
*******************************
வெட்டப்பட்டு சிதறிக் கிடக்கின்றது
பறையை வாசித்த கட்டை விரல்,

தரையில் சிதறிய கட்டை விரல் துடிக்கிறது
மீண்டும் ஓரு முறை
பறையை வாசிப்பதற்கு,

தோட்டியின்
தோலில் மாட்டிய பறை
அறுந்து கீழே விழுந்து ஓடுகிறது,
சாலையின் தரையில் வெட்டப்பட்டு கிடக்கும் கட்டை விரலைத் தேடி,

காலில் கட்டிய
சலங்கைகளின்
முத்துக்கள்
சிதறிச் சாலைகளில்
தெறித்து ஓடுகின்றன
துடித்துக்கொண்டிருக்கிற கட்டை விரலின் நாடித்துடிப்பை நிறுத்துவதற்காக,

சாவுக்கு ஆடிய கால்கள்,
அந்த கண் திறக்காத சாமிக்கும் அடித்த கைகள்
கண் கலங்கி நிற்கிறது
வெட்டப்பட்ட விரல்களால்
பறையை வாசிக்க முடியாததால்,

மீண்டும் முளைத்துக் கொள்கிறன்
கட்டை விரலும் பறையும்
மகனின் கைகளில்,

அதிர்ந்து ஓங்கி
ஒலிக்கிறது சேரியெங்கும்
மகனின் தோளில்
மாட்டிய மாட்டுத்தோல் பறை,
சங்கப்பறையாக,
சமத்துவப் பறையாக
சாதிக்கெதிரான பறையாக…..!!!!!

மாட்டுக்கறி எலும்புகள்
****************************
சைக்கிள் பெட்டியில்
ஏற்றப்பட்ட மாட்டுக்கறி
தெரு முழுவதும் வலம் வருகிறது அதிகாலை வேளையில்,

தெருவில்
வலம் வரும் சைக்கிளை மறைத்து நிற்கின்றனர் பெண்களும்
குழந்தைகளும் பாத்திரத்தைக் கையில் ஏந்தியவாறு,

“கறி கறி” என்று கூவிக்கொண்டே
சைக்கிளை நகர்த்துகிறான்,
இரத்த கரையை உடல் முழுவதும் பூசிய அப்பாசாமி,

அரை கிலோ, ஓரு கிலோ
என கறியை வாங்கிக்கொண்டு
நகருகின்றனர் பெண்கள் வீட்டின் அடுப்பாங்கரையை நோக்கி,

பெட்டியின் ஓட்டை
வழியாக சாலையில் ஓழுகும்
மாட்டுக்கறி இரத்தத்தை
நக்கிக்கொண்டே பின்தொடர்கிறது கருப்பு நிற நாய் ஒன்று,

வாங்கிய கறியை
அருவாமனையால் செருவாக அறிகிறார் அப்பா திண்ணையில்
அமர்ந்து கொண்டு,

காக்கைகள் காலையிலிருந்தே
தலையைச் சுற்றியே வட்ட மடித்துக்
கொண்டிருக்கின்றன
அப்பா எலும்புத் துண்டுகளை
அறுத்துத் தூக்கி வீசுவதால்,

அடுப்புச் சட்டியில்
வெந்து கொண்டிருக்கின்றன
மாட்டுக்கறி எலும்புகள்,
வேகாத முட்டி எலும்புகளை
தட்டில் போட்டுக் கடித்து இழுக்கிறார்கள்
பல்லு போன தாத்தாவும் பாட்டியும்,

அடுப்பிலிருந்து இறக்கிய
சட்டியைச் சுற்றியே
அமர்ந்து கொண்டு மாட்டுக்கறியை போட்டிப் போட்டு சாப்பிடுகின்றனர் மாட்டுக்கறியின் வாசத்தையே
அறியாத அண்ணனும் தம்பியும்,

தெருவு முழுவதிலும்
தோட்டம் முழுவதிலும் கிடக்கின்றன
எலும்பு துண்டுகள் ,
எலும்பு துண்டுகளைப் பொறுக்கி
சாக்கு பையில் போட்டு கொண்டு
நடக்கிறார் அடையாளம்
தெரியாத முதியவர் ஒருவன்…….!!!!!

கவிஞர் ச.சக்தி,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,
9791642986,