Vasuthenthira's Red Parrot Novel in tamil translated by Yumavasuki book review by Dhurai. Arivazhakan சிவப்புக் கிளி நாவல் தமிழில்-யூமா வாசுகி - துரை. அறிவழகன்

நூல் அறிமுகம்: வசுதேந்திராவின் சிவப்புக் கிளி நாவல் தமிழில்:யூமா வாசுகி – துரை. அறிவழகன்



மண்மணம் பேசும் கிளி

இயற்கையை நேசிப்பதும், இயற்கையோடு ஒன்றிப்போவதுமே மகத்தான கலைகள் பிறப்பதற்கான ஊற்றுக்கண்ணாக அமையமுடியும். இயற்கையோடு இணைந்த வாழ்வினை வாழ்ந்த நம் மூதாதையரின் தொன்ம வாசம் கொண்ட மண்ணை ஊடுருவிப் பார்க்கவும் உணரவும் நெகிழ்வான கண்கள் வேண்டும். அத்தகைய கண்கள் கொண்ட கலை ஆளுமைகளால் மட்டுமே உன்னதக் கலைப் படைப்பைப் படைக்க முடியும். இயற்கை, மண்மீதான நேசம், கவித்துவ மொழி என பல நிறங்கள் கரைந்து உருக்கொள்ளும் படைப்பு மனம் கொண்டவரான கன்னட மேதமை “வசுதேந்திரா”வின் அத்தகைய உன்னதப் படைப்புதான் “சிவப்புக் கிளி” எனும் நாவல்.

கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்திலுள்ள “சாத்தூரில்” பிறந்தவர் “வசுதேந்திரா” அவர்கள். பால் புதுமையினருக்கான உள்ளூர் அமைப்புகளோடு இணைந்து களப்பணி ஆற்றுபவர் இவர். இவரது நூல்கள் அனைத்தும் இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனை கண்டு சாதனை படைத்தவைகள். “கன்னட சாகித்திய அகாதெமி” விருது உள்பட பல்வேறு விருதுகளை தனது மகுடங்களாகக் கொண்ட சிறப்புப் பெற்றவர் “சிவப்புக் கிளி” மூல நூலின் ஆசிரியர் “வசுதேந்திரா” அவர்கள்.

பல்லுயிர்களுக்கும், இயற்கைச் சூழலுக்கும் இடையிலான உறவு குறித்த உணர்வு ரீதியிலான புரிதலுடன் ஒரு படைப்பு உருக்கொள்ளும் போது அப்படைப்பு காவியத்தன்மை பெறுகிறது. அக்காவியத்தன்மை என்பது அழகியல் வடிவம் சார்ந்ததாக மட்டுமில்லாமல் வாசக மனதைத் தைத்து ஒரு மகத்தான மாற்றம் நோக்கி அழைத்துச் செல்வதாகவும் அமைந்துவிடுகிறது.
இவ்வாறு கலை மேன்மையும், சமூக அக்கறையும் கொண்ட படைப்புகளே காலத்தின் தேவையாக உள்ளது; காலத்தின் உன்னத ஆன்மா இப்படைப்புகளின் வழியாகவே மலர்ந்து பேசுபொருளாக நிலைத்து நின்றுவிடுகின்றன. நேசமும், பிணைப்பும் என்பது மனிதர்களுக்கு இடையிலானது மட்டுமல்ல; புல், பூண்டு, வெட்டுக்கிளி, இலை, தழை, பறவை, மரம் என பிரபஞ்சத்தின் சகல பல்லுயிர்களையும் ஒன்றிணைத்து மலரும் இம்மண்ணின் மகத்தான உறவாகும். இவ்வாறான பேரன்பு கொண்ட ஆத்மாவில் பிறக்கும் எழுத்துக்கள்தான் காலத்தின் முகத்தில் அறையும் சாட்சியங்களாக நிலைக்கின்றன.

பிரச்சாரம், அறிவுறுத்தல் எனும் காரணிகள் ஏதும் துருத்தி நிற்காமல் அழகியலுக்குள் கரைந்து உருவாகும் “சிவப்புக் கிளி” போன்ற படைப்புகளே காலத்தில் அழியாத கலைமேன்மை கொள்கின்றன. ஒரு இலையின் நுனியிலுள்ள பனித்துளிக்கும் இப்பிரபஞ்சத்தை நிறைத்திருக்கும் அனைத்து நுண்ணுயிரிகளுக்கும் இடையிலான மகத்தான தொடர்புக் கண்ணிகள் குறித்த விழிப்புற்ற ஆன்மாவை “வசுதேந்திரா”வின், சிவப்புக் கிளி வழியாகப் பார்க்க முடிகிறது. கலையின் வெற்றியும் கலைஞனின் வெற்றியும் இத்தகைய விழிப்புற்ற ஆன்மாவில்தான் அடங்கியுள்ளது.

வசுதேந்திராவின் களங்கமற்ற மற்றும் அறிவகங்காரமற்ற மொழி, இயற்கையோடு கரையும் போது அழகிய படிமங்கள் பூத்து வாசிப்பு மனங்களை பரவசப்படுத்திவிடுகிறது. சூரிய கதிர்களின் தீண்டலில் காற்றோடு பனி கலக்கும் கணத்தில் மண்ணிலிருந்து வெளிப்படும் மணம், வசந்த காலத்தில் துளிர்க்கும் தளிர் இலைகள், ஈர நிலத்தில் விழுகையில் ‘சொத்’தென்ற சப்தம் எழுப்பும் பனம் பழம், பனங்குருத்தை மென்றபடி பம்மிக் கிடக்கும் காடைகள் என மனிதன் அவதானித்து நேசம் கொள்ள இயற்கை எல்லையற்று விரிந்து இருக்கிறது. சிறுதுளி நீர்ச்சொட்டுக்குள் மறைந்து நிற்கும் குளம், குட்டை, ஓடை, ஏரி, கடல் என விரியும் நிலவியலைப் பேசத் தெரிந்தவனே அசலான கலைஞனாகப் பரிமளிக்க முடியும். அவ்வாறு தன் சிறகுகளை விரித்து நிற்கும் கலைஞராக வசுதேந்திராவை ‘சிவப்புக் கிளி’ நூல் வழியாகப் பார்க்க முடிகிறது.

மண்ணை ஆளும் விகார மனம் மனிதனுக்குள் விழித்தெழும் போதெல்லாம் இயற்கை தன் வசீகர முகத்தை மாற்றிக் கொண்டுவிடுகிறது. பலவேறு படைப்புகளில் தன் மனம் தொட்ட பாத்திரங்கள் குறித்து ஒரு பதிவில் சொல்லும் போது “சிவப்புக் கிளி” நாவலில் வரும் ‘ ஈரப்பா’வின் கதாபாத்திரத்தையும் குறிப்பிடுகிறார் ‘யூமா வாசுகி’ அவர்கள்.
மரபு வழியிலான அறிவை நவீன எந்திரங்களின் கண்டுபிடிப்புகள் வழியாக மனிதன் ஆள நினைக்கும் போது இயற்கை எதிர்வினை புரியத் தொடங்குகிறது. தாவரங்கள் குறித்த அறிவுச் செழிப்பை வைத்திய அறிவாக மறுவரைவு செய்த “இருளர்” மொழியை நவீனம் உள்ளுணர வேண்டும். ‘காடர்’ மற்றும் ‘இருளர்’ பழங்குடி இன மக்களின் தொன்ம அறிவை நோக்கி நவீனம் திரும்பும் போது புதிதான சிலவற்றை மனித இனம் பெறமுடியும் என்பது திண்ணம். அத்தகைய சிந்தனைப் புள்ளி நோக்கிய திறவாக அமைந்துள்ளது “வசுதேந்திரா”வின் ‘சிவப்புக் கிளி’ நாவல்.

நிகழ் புள்ளியில் நின்று மூதாதையர் வாழ்வை நோக்கியும், இனி வரும் தலைமுறை சந்ததிக்கான வாழ்வை நோக்கியும் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது “சிவப்புக் கிளி” நூல். நவீன முன்னகர்வு எனும் பொய்யுரைக்கு நாம் தொலைத்து வரும் மண்ணையும், வாழ்வையும் பேசுகிறது இந்நாவல்.
நவீனம் என்ற பூச்சோடு எந்திரங்களின் துணை கொண்டு மனிதன் இந்தப் பூமியை ஆளத்தொடங்குகையில் அவன் எதையெல்லாம் இழக்கிறான், எப்படி அழுக்கடைகிறான் என்பதை பச்சை நிறம் மறைந்து சிவப்புப் பூச்சுப் பெறும் கிளிவழி குறியீடாகப் பேசுவதே நாவலின் சிறப்பாக அமைகிறது. கிளிகளின் இறக்கைகள் நிறம்மாறும் போது மனித குல வாழ்வை அச்ச ரேகைக்கள் சூழ்ந்து பதைபதைக்க வைத்துவிடுகிறது.

“விவசாயத் தோட்டம்” குறித்த ஒரு பால்ய வயதுச் சிறுவன் எழுதும் கட்டுரை வழியாக மலரும் நாவல் மூதாதையர் மண்ணின் உடங்கருவல் வாடையோடு முற்றுப்பெறுகிறது. தொன்ம மண்ணின் பாரம்பரிய விதை வித்தாக வாழும் “ஈரப்பா”வின் வாழ்வு சிதைவதை அடிக்கோடாகக் கொண்டு தலைமுறை மாற்றம் காட்சி பெறுகிறது.
பால்ய நிலத்தின் நிறம் மாறும் ஒரு சமூக அவலம் வாசிப்பு மனதைத் தைத்து ரணமாக்கிவிடுகிறது. மண்ணுடனும், இயற்கையுடனும் பிணைந்திருந்த நம் தொன்ம வாழ்விலிருந்து விலகும் போது நம் சுவாசப்பாதையில் படியும் அழுக்கைச் சுட்டி அகவிழிப்பை ஏற்படுத்தும் வகையில் நாழி ஓட்டு அடுக்குகளாக காட்சிபெறுகிறது நாவலின் களம். மூதாதையர் வாழ்வின் பொருள்பொதிந்த வாசம் சுமந்து, பதைபதைக்கச் செய்கிறது “வசுதேந்திரா”வின் “சிவப்புக் கிளி” எனும் அழகியல் சாரம் கொண்ட குறியீட்டு நாவல்.

நூல் : “சிவப்புக் கிளி”
கன்னட மூலம் : ‘வசுதேந்திரா’
மலையாளம் வழி தமிழில்: ‘யூமா வாசுகி’
விலை: ரூ.40 /- பக்கங்கள் : 48
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி :044-24332424, 24332924, 24356935
Web : Tamizhbooks.com

B.V.Sugumaran's Dhiya novel in tamil translated by Yuma vasuki book review by Dhurai. Arivazhakan பி.வி.சுகுமாரனின் தியா நாவல் தமிழில்-யூமா வாசுகி - துரை. அறிவழகன்

நூல் அறிமுகம்: பி.வி.சுகுமாரனின் தியா நாவல் தமிழில்:யூமா வாசுகி – துரை. அறிவழகன்



“குழந்தைகளின் விருப்பப் பள்ளிக்கான திறவுகோல்”

2016ல் சிறார் இலக்கிய விருது பெற்ற குழந்தை பருவத்தினருக்கான நாவல் பி.வி. சுகுமாரனின், “தியா”. துளிர்க்கும் பருவத்து பசு இலை குறுஞ்செடிகளுக்கு வானத்தின் திசை காட்டும் பொறுப்புமிக்க பெரியவர்களும் வாசித்து நாவலின் உள்ளோட்டத்தை உள்வாங்கி சிறார் உலகுக்கு கடத்தலாம். கல்வியின் சாரத்தையும், மணத்தையும் கொண்ட அரசுப் பள்ளிகளின் சிறப்பு உணர்த்தும் எழுத்துக்கள்.

நூலின் மூல ஆசிரியர் பி.வி. சுகுமாரன் அவர்கள் கேரள பாலக்காட்டை வசிப்பிடமாகக் கொண்டவர். “தியா” நாவலுக்கான “கேரள பாயல்புக்ஸ் சிறார் இலக்கிய விருது” மட்டுமல்லாமல், “ஃபாதர் சின்னப்பா நாவல் விருது” மற்றும் “ராஜீவ் காந்தி கலாசார விருது” ஆகிய விருதுகளையும் பெற்றவர்.
கையகள நிலத்தை அளந்து சிறுகக் கட்டி பெருக வாழும் மனநிலை விலகி, பறப்பதைப் பிடிக்கும் மன உலகு கொண்டவர்கள் நடுத்தர வாழ்வியல் குடும்பத்தினர். அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகள் கல்வி கற்பதை இழுக்காகவும், தனியார் பள்ளி மாயப் பெருமையில் மூழ்கி தத்தளித்து தடுமாறும் பொருளியல் வாழ்வில் பயணிப்பவர்கள் இவர்கள். இந்த முரண் நகையை தன் எழுத்தின் சித்தரிப்பில் துல்லியமாக காட்சிபடுத்தி உள்ளார் நாவலாசிரியர் பி,வி.சுகுமாரன்.
கனவுச் சிறகுகளுடன் பரந்து, விரிந்த ஆகாயத்தில் சிறகடிக்க வேண்டிய பருவத்தில் முடக்கப்பட்ட சிறகுகளுடன் தங்களை சுருக்கிக் கொண்டு பயணிக்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகும் குழந்தை மனதின் தெறிப்புகள் இழையோட பின்னப்பட்ட படல் இந்நாவல்.

சுய பெருமை எனும் மாபெரும் பொய்ப் பிம்பத்துடன் தங்கள் குழந்தைகளின் சிறகுகளை பொசுக்கும் பெற்றோர்களுக்கு சில உண்மைகளை உணர்த்தும் வகையில் தீட்டப்பட்டுள்ள சித்திரம் “தியா” நாவல். இச்சித்திரத்தின் வழி அரசுப் பள்ளிகளின் உயர் தன்மை நிறம்பெறுகிறது. மாயத் திரை விலக்கி, குழந்தைகளின் அக உலகம் மலர்வதற்கான இதமான காற்றை படரச் செய்யும் இது போன்ற வரவுகள் பிற மொழிகளில் இருந்து தமிழ் மண்ணில் உயிர் பெறும் போது சிறார் இலக்கியம் புது திசையில் புத்தொளி பாய்ச்சலுடன் பயணிக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
நாவலின் நாயகி ஆறு வயதுச் சிறுமி “தியா” நடந்த பாதை, கண்ட காட்சிகள், செய்த குறும்புகள், மலர்வுகள் என அவள் வாய்வழி விவரிக்கப்பட்ட யதார்த்த உண்மைகளின் அலையோட்டம் கொண்ட நாவல் “தியா”. அனுபவ துணுக்குகளில் சிறிதான புனைவு நிறம் சேர்த்து நாவலை அழகுற மலரச் செய்துள்ளார் ஆசிரியர். இதுவே நாவலின் கூடுதல் சிறப்பு.

1966ல் கும்பகோணத்துக்கு அருகாமையிலுள்ள திருவிடைமருதூரில் பிறந்தவர் யூமா வாசுகி. ‘மாரிமுத்து’ எனும் பெயரில் உள்ளொளி பாய்ந்த ஓவியங்களை இவர் தீட்டியுள்ளார். மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்த ‘கசாக்கின் இதிகாசம்’ நாவலுக்காக 2017ஆம் ஆண்டு ‘சாகித்திய அகாதெமி’ விருதினை பெற்றவர் இவர்.
‘உனக்கும் உங்களுக்கும் – 1993’; ‘தோழமை இருள் – 1997’ ; ‘இரவுகளின் நிழற்படம் – 2001’ ; ‘என் தந்தையின் வீட்டை சந்தை யிடமாக்காதீர் – 2008’ ; ‘சாத்தானும் சிறுமியும் – 2012’ ; ஆகிவைகள் இதுவரை வெளிவந்துள்ள இவரது பூரணத்துவம் பெற்ற கவிதை நூல்கள்.
“பொதுவாக ஒரு எழுத்தாளரின் படைப்புகளைத் தொடர்ந்து வாசிக்கையில் நாம் அவைகளுக்குள் ஒரு பொதுத்தன்மையை கண்டடைய முயற்சிப்போம். யூமா வாசுகியின் படைப்புகளை வாசிக்கையில் அதிலுள்ள பொதுத் தன்மையென எனக்குள் ஒரு வார்த்தை தோன்றுகிறது; “கள்ளமின்மை” – என சொல்கிறார் இளம் எழுத்தாளர் ‘சுரேஷ் பிரதீப்’.

யூமாவின் கவிதைகளை வாசிப்பது என்பது, குழந்தைமையை தொலைத்துவிடாத ஒரு தூய மனதை வழி தொடரும் நிகழ்வாகவே எனக்குப்படுகிறது. ‘எங்கே யாருக்கும் அவர்கள் கையசைத்தாலும், அங்கே நானும் நின்று ஏற்றுக்கொள்வதெப்படி’ என்று கையசைக்கும் குழந்தைகளின் உலகில், குழந்தைகளின் கையசைப்பை யாசித்து நிற்கும் எளிய மனிதராகவே தன்னை இருத்திக் கொள்ளும் ‘யூமா வாசுகியை’ அவரது எழுத்துக்களின் வழி காண முடிகிறது.
சத்தியமான இலக்கிய வாழ்வு என்பது மகுடங்களைத் தருவதில்லை; ஆனால் சிறகுகளைத் தரக்கூடியது. அத்தகைய காருண்ய சிறகுகளக் கொண்ட கலை ஆளுமையாகத் திகழ்பவர் யூமா வாசுகி. “நுண்ணுணர்வுகள் சலனித்துக் கொண்டிருக்கும் மனவோடை யூமாவுடையது” என்கிறார் எழுத்தாளரும், விமர்சகருமான ‘சி.மோகன்’ அவர்கள். குழந்தைமையும், களங்கமின்மையும் கலந்து கைகோர்த்து உலாவுகிற தூய வெளியை கருவாகச் சுமந்து யூமா வாசுகியின் படைப்புக்கள் உருக்கொள்கின்றன. பாசாங்கொழித்து முன் நிற்கும் தவிப்புக்கு உயிர்நீர் வார்க்கும் ஈரக்கரங்கள் போல இவருடைய ஒவ்வொரு கவிதையும் வாசிப்பு அகத்தை நனைக்கிறது. வெள்ளந்தி மனிதர் யூமாவின் ஒவ்வொரு வார்த்தையும் அன்பின் மகரந்தக் கருவை தன்னுள் கொண்டுள்ளது. கவிதை பெருவெளி எனும் பேரொளிக்குள் தன்னைக் கரைத்துக் கொண்டு ‘ஃபினிக்ஸ்’ பறவையாக எழும் யூமா வாசுகி அவர்கள் எதிர்வரும் படைப்பாளிகளுக்கான நற்சிறந்த பாதையாளர்.

தணலென தகிக்கும் வாழ்வின் நடுவே மொழி எனும் மானுடச்சொல் கொண்டு ஒரு தொல்மரமாக உருவெடுத்து நிற்கிறார் யூமா வாசுகி.
பிற மொழி சிறார் இலக்கியக் கதவின் பெரும் திறவுகோல் ‘யூமா’ அவர்கள் என்பதை “தியா” நாவலின் மொழிபெயர்ப்பு மீண்டும் நிரூபணம் செய்கிறது. அசல் மற்றும் சுய புனைவு என இரு நிலங்களிலும் கால்பதித்து மொழியாக்கம் செய்யும் கலை அறிந்தவர் யூமா அவர்கள். இசையின் ஓசையும், இயற்கையும் முயங்கி வெளிப்படும் காவியத்தன்மை கொண்ட மொழி கட்டமைப்பின் தீண்டல் நெகிழ்வை கண்டடையலாம் “யூமா வாசுகியின்” மொழிபெயரிப்பு சிறார் இலக்கிய நூல்களின் வாசிப்பு வழியாக.

எளிமையான விவரிப்பில் கதை நகரும் போது எழுத்து குறித்த சமூகப் பொறுப்பு உணர்ந்த ஆளுமையை பார்க்க முடிகிறது. சிறார் இலக்கியத்தின் அண்டரண்டப் பட்சி ‘யூமா வாசுகியின்’ அவர்கள் மலையாள மூலத்தின் உணர்வு ஒளி சிறிதும் பிசகாமல் நேர்த்தியுடனும், அழகியலுடனும் மொழி பெயர்த்துள்ளார். சிறார் இலக்கியத்தின் உயிர்ப்பான நிலம் மொழிபெயர்ப்பு கதைகள்; அதனை சிறப்புற தாய் மொழி வாசிப்பின் நெருக்கத்தை ஏற்படுத்துபவை யூமா வாசுகியின் மொழிபெயர்ப்பு.

சிறார்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளின் மீது நேசமும் அக்கறையும் கொண்ட பெரியவர்கள் வாசிக்க வேண்டிய சிறப்பான நாவல் பி.வி.சுகுமாரனின், “தியா”.

நூல் பெயர் : “தியா”
நூல் வகை : “சிறார் நாவல்”
மலையாள மூலம்: பி.வி.சுகுமாரன் / தமிழில் : யூமா வாசுகி
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (புக்ஸ் ஃபார் சில்ரன்)
பக்கங்கள் : 110 விலை : 100 /-
தேவைக்கு :”புக்ஸ் ஃபார் சில்ரன்”,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி :044-24332424, 24332924, 24356935
புத்தகம் வாங்க : Tamizhbooks.com

Writer Alexander Ruskin Writes Appa Siruvana Iruntha Pothu Book Review By Durai. Arivalagan. Book Day is Branch of Bharathi Puthakalayam. நூல் அறிமுகம்: அப்பா சிறுவனாக இருந்தபோது

“முதிர்ந்த அகத்தின் படைப்பூக்கப் பதிவுகள்” – துரை. அறிவழகன்



பெரியவர்களான நாம் அனைவரும் ஒரு காலத்தில் சிறுவர்களாக இருந்தவர்களே. வளர்ந்த பிறகும் தங்கள் குழந்தைமையை காப்பாற்றி வைத்திருக்கும் மூத்த சிறார்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய குழந்தைமையை தக்க வைத்திருக்கும் படைப்பூக்க பொக்கிஷமாக இந்நூலின் ஆசிரியர் நம்முன் உருக்கொண்டு காட்சியளிக்கிறார். இத்தகைய எழுத்தாளரின் முதிர்ந்த சிறகுகளில் இருந்து உதிர்ந்த இறகுகளின் வண்ணத் தெறிப்புகளாக விரிகிறது இவரது சிறார் கதைகள்.

பூக்காத, கனி தராத மரங்களையோ, செடிகளையோ தேடிச் செல்லாத சிறுபறவைகளைப் போன்றவர்கள் சிறார்கள். ஒரு கனிந்த மனதின் படைப்பூக்கத்தில் மலரும் படைப்புகளை நோக்கித்தான் சிறார்களின் வாசிப்பு மனம் பயணிக்கும். அத்தகைய படைப்புகள்தான் சிறார்களுக்குள் உணர்வெழுச்சியைக் கடத்தும்.
‘குட்டி இளவரசன்’ சிறார் நாவலை எழுதிய ஆசிரியர் ‘ அந்த்வர்ன் து செந்த் எக்சுபரி’ அந்த நூலை தனது நெருங்கிய நண்பருக்குச் சமர்ப்பணம் செய்திருப்பார்.

அவ்வாறு சமர்ப்பணம் செய்யும் போது அதற்கான காரணமாக, “எல்லா பெரியவர்களும் ஒருமுறை குழந்தையாக இருந்தவர்கள் தான்; பலரும் அதனை நினைவு கொள்வதில்லை; ஆனால் அந்தக் குழந்தை உலகை காப்பாற்றி வாழும் வயது முதிர்ந்தவர்” என்று தனது நண்பர் குறித்துக் குறிப்பிடுவார் எக்சுபெரி.

உண்மையில் கால ஓட்டத்தின் நெருக்கடி மிகுந்த பல் சக்கரத்தில் சிக்கிக் கொண்டு தாங்கள் பெரியவர்களாக வளரும் போது தங்களின் குழந்தைமையின் சிறகுகளை தொலைத்திருப்பார்கள் பெரும்பாலானவர்கள். இத்தகைய துரதிருஷ்டம் எதுவும் நேர்ந்துவிடாத ஒரு முதிர்ந்த கனி மரமாக எழுத்தாளர் “அலெக்சாந்தர் ரஸ்கின்” அவர்களை இத்தொகுப்பு நூலின் கதைகள் வழியாக நாம் பார்க்க முடிகிறது.

“நீங்கள் மனந்திருந்தி குழந்தைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்” ; “ஆகையால் இந்தக் குழந்தையைப் போல் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ அவனே பரலோக ராஜ்ஜியத்தில் பெரியவனாயிருப்பான்”. இவ்வாறு விவிலியத்தில் ஒரு வசனம் வரும். இதன் சாரத்தை உணர்ந்தால் இவ்வசனத்துக்குள் பொதிந்துள்ள சிறார் அறத்தை நாம் உணர முடியும். இத்தகைய அறம் வாய்க்கப் பெற்ற முதிர்ந்த மரத்தில்தான் சிறார் உலகுக்கான கதைகள் பூக்களும், கனிக்ளுமாக பூத்தும், காய்த்தும் குலுங்க முடியும். இத்தகைய கதை மரம்தான் “அப்பா சிறுவனாக இருந்த போது…” எனும் ‘ரஸ்கின்’ அவர்களின் புகழ்பெற்ற தொகுப்பு நூல்.

மொழி ஆற்றலும், உணர்வாற்றலும் நுணுக்கமாக வெளிப்பட வேண்டிய வடிவம் சிறார் இலக்கியம். அலெக்சாந்தர் ரஸ்கின் அவர்களின் கதைகளை மொழிபெயர்ப்பின் வழி வாசித்து அந்த எழுத்துக்களின் வேரையும், கிளையையும் உள்வாங்கிக் கொண்டு மறுவரைவு செய்துள்ளார் ‘ஈஸ்வர சந்தான மூர்த்தி’ அவர்கள். தனித்த மொழியாக்கம், நீரோட்டமான எழுத்து நடை, அனுபவ முதிர்ச்சியின் பரவசம் என எண்ணற்ற சிறார் கதைகளுக்கான அடிப்படை இலக்கணங்களை இவரின் மறுவரைவாக்கத்தில் காண முடிகிறது.

Writer Alexander Ruskin Writes Appa Siruvana Iruntha Pothu Book Review By Durai. Arivalagan. Book Day is Branch of Bharathi Puthakalayam. நூல் அறிமுகம்: அப்பா சிறுவனாக இருந்தபோது

சிறார் படைப்பாளியின் படைப்புகளுக்குள் படர்ந்து கிடக்கும் புறவய நிகழ்வுகளின் அகவயப்பட்ட உணர்வு இழையோட்டத்தின் உன்னதத்தை இத்தொகுப்பில் உள்ள கதைகளின் வாசிப்பு நமக்கு உணர்த்துகிறது. இயற்கையை நெருங்கிப் பேசுவதும், இயற்கைக்குள் தங்களைக் கரைத்துக் கொண்டவர்களுமான குழந்தைகளின் மொழியை புரிந்து கொள்வதும், அக்குழந்தைகள் நேசிப்பவற்றை சொல்ல முயல்வதுமே சிறார் உலகுக்கான திறவுகோல். இத்தகைய சிறார் உலகிற்கான திறவுகோலாக அமைந்துள்ளது இத்தொகுப்பிலுள்ள கதைகள்.

‘ஜென்’ தியான நிலை கொண்டவர்கள் குழந்தைகள்; நிகழ் கணமாக மாறிவிடும் அற்புதம் அவர்களுடையது.

ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமான பூக்கள் பூக்கின்றன; அனைத்திலுமான பிரகாசமாய் ஒளிர்கிறது குழந்தைகளின் இதயம். பனி, நிலவு, பூக்கள் ஆகியவைகள் குழந்தைகளின் மொழியில் மலைகள், ஆறுகள், புற்கள், மரங்களின் சித்திரமாக காட்சி பெறுகின்றன. இத்தகைய உளவியல் வாய்க்கப் பெற்ற சிறார்களின் அக தரிசன உணர்வுகளைத் துல்லியமாகக் காட்டும் கதைப் பரப்பினைக் கொண்ட நூல் இது. தர்க்க சிந்தனை, அறிவகங்காரம், நீதி போதனை ஆகிய முட்கள் இல்லாத கருத்தியல் புனைவுகள் இந்த நூலிலுள்ள கதைகள்.

சிறார் கதைகளின் அசல் தன்மையை தனக்குள் நீர்ப்பொதியாகச் சுமந்து, ‘ஈஸ்வர சந்தான மூர்த்தி’ அவர்களின் மறுவரைவு மொழியில் கலை மேன்மையுடன் மலர்ந்துள்ளது ” அப்பா சிறுவனாக இருந்த போது …” எனும் இத்தொகுப்பு நூல்.

சிறு சிறு ஒளிகளைக் கோர்த்து ‘இருபத்தியொரு’ கதைகளின் படலாக விரிந்து நிற்கிறது இந்நூல். தொகுப்பிலுள்ள கதைகளின் வாசிப்பு நம்மை நம் குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் செல்கிறது. சிறார்கள் இந்நூலை வாசிப்பதன் வழியாக அவர்கள் தங்களின் பருவத்தைப் புரிந்துகொள்வதுடன் எளிதான அறிதலுடன் கடந்து செல்லவும் முடியும்.

குழந்தைகளின் அக மலர்ச்சியைப் புறக்கணித்த அறிவூட்டல் எவ்வித வளமையையும் குழந்தைகளுக்குச் சேர்க்காது என்பதை உணர்ந்து எழுதப்பட்ட கதைகளைத் தொகுப்பில் காண முடிகிறது. குழந்தைகளுக்காகப் பெரியவர்கள் படைக்கிற அனைத்துப் படைப்புகளுமே “நாங்கள் எங்களுக்குள் வாழ்கின்ற குழந்தைமையை இழந்துவிடவில்லை” என்பதைச் சொல்லும் வெளிப்பாடுகள்தான். இதனால்தான் குழந்தைமையைத் தீண்டிய படைப்புகள் காலத்தால் உச்சம் பெற்றுத் திகழ்கின்றன. இத்தகைய மனமுதிர்வு பெற்ற ஆளுமை பெற்றவராக இத்தொகுப்பின் கதைகள் மூலம் காட்சி பெறுகிறார் “அலெக்சாந்தர் ரஸ்கின்”.

யதார்த்தத்திற்கும், கனவு நிலைக்கும் இடைப்பட்ட கதவினைத் திறக்கும் திறவுகோலாகச் செயல்படுகிறது ரஸ்கின் அவர்களின் கதைகள். அதீத புனைவு எதுவும் இல்லாமல் முற்றிலும் யதார்த்த தளத்தில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு “அப்பா சிறுவனாக இருந்தபோது…” எனும் இக்கதை நூல். கதைகளால் நிரம்பிய ஒரு பன்முக ஆளுமையாக முதிர்ந்து நிற்கும் ஒரு எழுத்துக் கலைஞரின் மேன்மையை நமக்கு உணர்த்துகிறது இந்த நூல்.
மழைத் துளிகளினூடாக சூரிய ஒளிக்கதிர்கள் ஊடுருவும் போது ஏற்படும் வானவில்லின் நிறங்கள் கொண்ட கதைகள் ரஸ்கின் அவர்களின் கதைகள். “சிறார்

கதைகள் சிறார்களுக்கு மட்டுமேயானதல்ல; பெரியவர்களும் வாசிக்கலாம்; அவ்வாசிப்பின் வழி தங்கள் குழந்தைமையை மீட்டெடுக்கலாம்” எனும் உண்மையை உணர்த்தும் வகையில் மலர்ந்துள்ளது இச்சிறார் கதைத் தொகுப்பு.

– துரை. அறிவழகன்

நூல் : “அப்பா சிறுவனாக இருந்தபோது…”
வகை : கதைகள்
மூலம் : “அலெக்சாந்தர் ரஸ்கின்”
மொழிபெயர்ப்பு : “நா. முகம்மது செரீபு” / மறுவரைவு : “ஈஸ்வர சந்தான மூர்த்தி”
வெளியீடு : “புக்ஸ் ஃபார் சில்ரன்” (பாரதி புத்தகாலயம்)
விலை : ரூ.110.00 / பக்கங்கள் 128
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

நூல் தேவை தொடர்புக்கு : 044-24332424