உலக மீன்வள தினம் (நவம்பர் 21) சிறப்பு கட்டுரை
வரிவிதிப்பில் சமூக, பொருளாதார நீதி – என்.குணசேகரன்
மார்க்ஸ், எங்கெல்ஸ் பார்வையில் கற்பனா சோசலிஸ்டுகள் – எஸ்.வி.ராஜதுரை
அத்தியாயம் 30: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
நூல் அறிமுகம்: ஜோசப் ராஜாவின் ’பெருந்தொற்றும் யுத்தமும்’ – பெரணமல்லூர் சேகரன்
“ஓங்கி மண்டையில் அறைந்தாற் போல் நம்மை உலுக்கி எடுக்காத புத்தகத்தை எதற்கு வாசிப்பானேன்?”..காஃப்கா.
இந்த மேற்கோளே ஓங்கி மண்டையில் அறைவதைப் போல்தான் உள்ளது. ஜோசப் ராஜாவின் ‘பெருந்தொற்றும் யுத்தமும்’ என்னும் கவிதைத் தொகுப்பினை வாசித்து முடித்தபின் காஃப்காவின் மேற்கோள்தான் நினைவுக்கு வந்தது. ஓங்கி மண்டையில் அறைந்தாற்போல் நம்மை உலுக்கி எடுக்கும் நூலாக உள்ளதால் இந்நூலை வாசிக்க வேண்டும் என பரிந்துரைப்பது சாலப் பொருத்தமானதே.
பெருந்தொற்று இரண்டு ஆண்டுகளாக உலகின் பெரும்பான்மையான நாடுகளை உலுக்கி எடுத்துவிட்டது. டார்வின் கூற்றுப்படி ‘தகுதியுள்ளது பிழைக்கும்’ என்று எடுத்துக் கொள்வதா? வலுத்தவன் கையே ஓங்கும் என்று எடுத்துக்கொள்வதா?
எப்படிப் பார்த்தாலும் சோஷலிச நாடுகளில் மட்டுமே இறப்புக்களும் பாதிப்புக்களும் குறைவு என்பது அனுபவ உண்மை. சின்னஞ்சிறு கியூபா ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். கியூப மருத்துவர்கள் உலக நாடுகளுக்குச் சென்று கொரோனா சிகிச்சைகளை மேற்கொண்டு சேவையாற்றியது வெள்ளிடைமலை. காரணம் சோஷலிச நாடுகளுக்கு மக்கள் நலனே முதன்மையானது. லாப வெறி கொண்ட முதலாளித்துவ நாடுகளில் மரண ஓலங்களும் பொருளாதார பாதிப்புக்களும் அதிகம். அதற்குச் சான்று அமெரிக்கா. தனது சொந்த நகரமான நியூயார்க் நகரில் நாற்சந்தியில் அப்போதைய அதிபர் ட்ரம்ப்புக்கு நிர்வாண சிலையெழுப்பி அதைச்சுற்றி மக்கள் போராட்டம் நடத்தியது சமூக வலை தளங்களில் வைரலானது.
இந்தியாவில் கொரோனா உச்சக்கட்ட நிலையில் இருந்தபோதும் கூட மக்களுக்கு நிவாரணம் வழங்காமலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்குச் சொந்த ஊர் செல்ல எந்த ஏற்பாடும் செய்யாமலும் ஊரடங்கு மகாராசாவாய் மாளிகையை விட்டு வெளிவராமல் தாடி வளர்த்து நாடகமாடினார் பிரதமர். வலுவான போராட்டங்களுக்குப் பிறகே தடுப்பூசி இலவசமாக்கப்பட்டது.
இத்தகைய கசப்பான அனுபவங்களை வெறுமனே கண்டும் கேட்டும் செல்பவர்கள் மனிதர்களாகக் கருதப்பட மாட்டார்கள். குறிப்பாக படைப்பாளிகள் மௌனம் காத்தலும், கொரோனா கொடூரங்களைப் பற்றி எழுதாமல் இன்ன பிறவற்றை எழுதலும் ஏற்க இயலாதவை. அத்தகைய வரிசையில் வராத எந்நேரமும் மக்கள் நலனையே எண்ணக் கூடிய கவிஞர்களுள் ஒருவராக ஜோசப் ராஜா இருப்பதனால் அவரது தூரிகையிலிருந்து வரும் கவிதைகள் காத்திரமானவையாக, ஆளும் வர்க்கத்தால் மழுங்கடிக்கப்பட்டு மயக்க நிலையில் உள்ள மக்களைத் தட்டி எழுப்பும் கவிதைகளாக பரிணமிக்கின்றன. அத்தகைய கவிதைகளை அவ்வப்போது தொகுப்பாக வெளியிட்டு வருவது அவரது சிறப்பு.
இந்திய மக்களைப் பற்றி எழுதும் கவிஞர்,
“ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றுதிரட்டி
தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு
மாலையில் தொலைக்காட்சியில் தோன்றி
சமூக இடைவெளி பழகுங்கள்
என்று சொல்லும் தலைவர்களை
பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
இந்த தேசத்தின் மக்கள்”
என்கிறார்.
“பெருந்தொற்றின் தடுப்பு மருந்துகளிலும்
பெருந்தொற்றின் தடுப்பு ஊசிகளிலும்
அவர்களால் இலக்கு வைக்கப்பட்ட
இலாபமானது
தன்னுடைய நிர்வாணத்தைத் திறந்து காட்டி
உண்மையை உரக்கச் சொல்லத்தான் செய்கிறது”
என பெருநிறுவன ஆளும் வர்க்கத்தைப்பற்றி நெத்தியடியாய் வந்து விழுகிறது கவிதை.
உச்சக்கட்ட கொரோனா கொடூரக் காட்சியை,
“கண்களை மூடினால்
ஆக்சிஜன் உருளைகளோடு
அலைந்து திரியும் மனிதர்கள்
அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்
ஒவ்வொரு மருத்துவமனைகளிலும்
உயிர்பிடித்துக் காத்துக் கொண்டிருக்கும்
உயிரச்சங்கள் நிறைந்த ஒவ்வொரு முகங்களும்
என்னை நோக்கி எழுந்து வருகின்றன
அணையாமல் எரிந்து கொண்டிருக்கும்
அந்தச் சுடுகாட்டு நெருப்பு
என்னைச் சுற்றி எரிந்து கொண்டிருப்பதாக
உணர்கிறேன் நான்”
என தன்னிலையிலிருந்தே படக்காட்சியாக்கியுள்ளார் ஜோசப் ராஜா.
விரக்தியின் விளிம்பில் அழுது புலம்புவதல்ல இவரது கவிதை. நம்பிக்கை ஊட்டுவதாகவும் உள்ளது என்பதற்கு,
“பேரிடரிலும் பெருந்தொற்றிலும்
எப்படி அழிந்துபோனோம் என்பதல்ல
எப்படி எழுந்து நின்றோம் என்பதில்தான்
மானுட வலிமையும்
மானுட ஒற்றுமையும் பிரகாசிக்கப் போகிறது”
எனும் கவிதையே சான்று.
ஊடக அதர்மத்தையும் அதை வெறுமனே கடந்து செல்லாமல் நாமாற்ற வேண்டிய கடமையையும் இவ்வாறு எழுதுகிறார் கவிஞர்.
“எதைக் காட்ட வேண்டும்
எதை மறைக்க வேண்டும்
என்பதை அறிந்தே செய்கிறார்கள்
எல்லாவற்றையும் ஊடுருவி
எதைப் பார்க்க வேண்டும் என்பது
உங்களுக்கும் எனக்கும் கடமையாகிறது”
“சுற்றிலும் பிணங்கள்
எரிந்து கொண்டிருக்கும் போது
தாடி வளர்த்துக் கொண்டு
வாளாவிருப்பது
என்னைப் போன்ற
சாதாரணக் கவிஞனுக்குச் சாத்தியமா என்ன?”
என் மறைமுகமாக பிரதமரைச் சாடும் அதே நேரத்தில் தம்மைச் சாதாரணக் கவிஞனாக அவையடக்கத்துடன் குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.
“ஒரு தேர்தலுக்குத் தேசபக்தியென்றால்
அடுத்த தேர்தலுக்கு மதவெறி
உங்களால் கற்பனை செய்ய முடியாத
எந்தக் கொடூரமான காட்சிகளையும்
திட்டமிடுவதே இல்லை அவர்கள்
அவர்கள் விஷத்தை வைத்திருக்கிறார்கள்
அவர்களும் விஷமாகவே மாறியிருக்கிறார்கள்
அவர்களுக்கு எல்லாமும் இயல்பாகவே இருக்கிறது
மதவெறியைத் தூண்டிவிடுவதும்
கலவரத்தை நிகழ்த்திக் காட்டுவதும்
கணப்பொழுதில் அவர்களால் முடியக்கூடியதுதான்
இப்படியாகத் தேர்தலில் வெற்றிபெற்ற பின்
மக்களின் வெற்றியென்று சொல்லிக் கொள்வார்கள்”
என ஆளும் வர்க்கத்தை எளிமையாகப் புரிய வைப்பதில் வெற்றி பெற்றுள்ளார் கவிஞர்.
கொரோனா மரணங்கள் குறித்த வழக்கில் பொறுமையிழந்த நீதிபதியொருவர்,
“இந்த மரணங்கள்
இனப்படுகொலைக்குச் சமமானது”
என்று
உணர்ச்சிவசப்பட்டு உண்மையைச் சொன்னார்
அப்படியென்றால்
இந்தப் படுகொலைகளுக்கு
யார் பொறுப்பேற்பது?”
எனக் கேள்வியெழுப்புவதோடு,
“உங்களுடைய செயலுக்காகத்தான்
காத்திருக்கிறேன்
உங்களை மட்டும் நம்புகிறேன்
அந்த இடி முழக்கத்தை
இந்தக் காதுகள் கேட்குமென்றும்
அந்தச் சூறாவளியை
இந்தக் கண்கள் பார்க்குமென்றும்
அந்தப் பரவசத்தை
இந்தக் கைகள் எழுதுமென்றும்
உறுதியாக நம்புகிறேன்
நெடுங்காலம்
என்னைக்
காத்திருக்கச் செய்யாதீர்கள்”
என்னும் கவிஞரின் வேண்டுகோளை மக்கள் நிறைவேற்ற வாசகர்கள்தானே தூண்டுகோலாக இருக்க வேண்டும்.
இடையிடையே தத்துவ வகுப்பெடுக்கவும் தவறவில்லை கவிஞர்.
“சிந்தனைக்கும் செயலுக்கும் பின்னால்
வர்க்கச் சார்பு அடங்கியிருப்பதைப் போல
துயரங்களுக்குப் பின்னாலும்
வர்க்கச் சார்புதான் அடங்கியிருக்கிறது
துயரங்கள் பொதுவானதல்ல
வர்க்க பேதம் ஒழிக்கப்படும்போது
துயரங்களும் ஒழிந்துவிடும்”
என்பது உண்மைதானே!
கொரோனா கவிதைகளுக்கிடையில் ‘சாதியம்’ இறந்த உடலைப் புதைக்கக்கூட அனுமதிக்காத கொடுமையை நிகழ்ந்த நிஜ சம்பவத்தைக் கூறி நம்மைத் தட்டி எழுப்புகிறார் ஜோசப் ராஜா. அக்கவிதையின் சில வரிகள் இதோ:-
“வீரளூர் கிராமத்தில்
இறந்துபோன அந்த
எளிய மனுஷியின் உடலை
மயானத்திற்கு எடுத்துச் செல்வதற்கு
எல்லோரும் நடந்து செல்லும்
அந்தப் பாதை மறுக்கப்பட்டது
உங்களை வருத்தவில்லையா?”
நாடு சுதந்திரம் பெற்று பவள விழா கொண்டாடியாகிவிட்டது. ஆனாலும் வீடற்றவர்களுக்கு வீடு கனவாகவே நீடிக்கிறது. பட்டா இல்லை எனக்கூறி ஏழை மக்களின் வீடுகளை இடிக்கிறது அதிகார வர்க்கம்.
“ஒரு வீட்டை இடிப்பது
அதுவும் இடித்துத் தரைமட்டமாக்குவது
ஒரு குடும்பத்தின்
கனவுகளையும் ஆசைகளையும் லட்சியங்களையும் கூட்டுழைப்பையும்
இடிததுத் தரைமட்டமாக்குவதல்லவா
இடிக்கப்படும் வீடுகளில்
துடித்துக் கொண்டிருக்கிறது இதயம்”
என கவிதை வடிக்கிறார் கவிஞர்.
ரஷ்யா உக்ரைன் யுத்தம் கவிஞரை வெகுவாக பாதித்து அதன் விளைவாக நெடுங்கவிதைகள் வந்துள்ளன.
“பெருந்தொற்றின் பழைய காட்சிகள்
பின்னுக்குத் தள்ளப்பட்டு
யுத்தத்தின் புதிய காட்சிகள்
முன்னுக்கு வருகின்றன
பெருந்தொற்றின் காட்சிகளை
உருவாக்கிக் கொண்டிருந்தவர்கள் தான்
யுத்தத்தின் காட்சிகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்”
என மறைமுகமாக ஏகாதிபத்தியத்தைச் சாடும் கவிஞர்,
“யுத்தமென்னும் பெருமடியில்
சுரந்து கொண்டே இருக்கும் லாபம்தான்
விலக்கமுடியாத விடையாக இருக்கிறது
இத்தனைக்குப் பிறகும்
ஆயுத வியாபாரிகளின் பேராசை களையும்
முதலாளிகளின் முட்டாள்தனமான
விருப்பங்களையும்
ஒவ்வொரு கொடூரங்களுக்கும் பின்னால்
ஒவ்வொரு காட்சிகளுக்கும் பின்னால்
மறைந்திருக்கும் அவர்களின் கொடூரங்களையும்
புரிந்து கொள்ள மாட்டீர்களா தோழர்களே!”
என ஆதங்கத்துடன் வினா எழுப்புகிறார்.
ரஷ்யா-உக்ரைன் போருக்குச் காரணமான நேட்டோவை,
“நேட்டோ என்பது
இந்த நூற்றாண்டின்
மானுடத் திரளின் முதன்மையான எதிரி
நேட்டோ என்பது
இந்த உலகத்தின்
ஒட்டுமொத்த வளங்களையும்
வாரிச்சுருட்டத் துடித்துக் கொண்டிருக்கும்
பெருமுதலாளிகளின் பெரும்பிணைப்பு
நேட்டோ என்பது
உலகத்தின் ஒற்றுமையைச்
சீர்குலைக்கத் தயாராக இருக்கும்
உலகத்தின் அமைதியைக் கெடுக்க நினைக்கும்
அற்பர்களின் அதிகாரக் கூட்டமைப்பு”
எனப் படம்பிடித்துக் காட்டுகிறார் நூலாசிரியர்.
இறுதியாக,
“ஆயுதச் சங்கிலியின் ஆணிவேராக
முதலாளித்துவத்தை ஒழிக்காமல்
போரை எப்படி ஒழிக்கப் போகிறீர்கள்
நம்புங்கள்
நோயைக் கண்டறிந்து கொண்டால்
குணப்படுத்துவது சுலபம்தான்!”
எனும் கவிதை மூலம்
“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” எனும் திருக்குறளை நினைவூட்டுகிறார் ஜோசப் ராஜா.
“என்னுடைய வார்த்தைகளுக்கான வேர்கள் இந்த மண்ணிலும், இந்த மக்களின் முகங்களிலும் மட்டுமே ஆழப்பதிந்திருக்கிறது. அந்த வேர்கள் தான் வார்த்தைகளின் இயக்குவிசையாய் இருந்து வழிநடத்துகிறது” என்று தமது முன்னுரையில் குறிப்பிட்டுள்ள நூலாசிரியரின் வார்த்தைகள் அர்த்த அடர்த்தி மிக்கவை. இந்நூலை அழகுடன் அச்சிட்ட தமிழ் அலை பதிப்பகத்துக்குப் பாராட்டுக்கள்.
– பெரணமல்லூர் சேகரன்
நூல் : பெருந்தொற்றும் யுத்தமும்
ஆசிரியர் : ஜோசப் ராஜா
விலை : ரூ.₹150/-
பக்கங்கள் 120
வெளியீடு : தமிழ் அலை
3 சொக்கலிங்கம் காலனி
தேனாம்பேட்டை
சென்னை 600 086
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]
இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @ 75 : தொடர் – 14 நரேந்திர மோடியும் வேளாண்மைச் சந்தைப் பொருளாதாரமும் – பாகம்-1 பேரா.பு.அன்பழகன்
மன்மோகன் சிங்கின் முதல் கால கட்ட ஆட்சி சிறப்பானதொரு பொருளாதார வளர்ச்சியைக் கண்டது ஆனால் இரண்டாம் கால கட்ட ஆட்சியில் அந்த அளவிற்கு சோபிக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் வேளாண்மையில் ஏற்பட்ட சில நிகழ்வுகளாகும். காலம் தவறிய பருவ மழை, சில மாநிலங்களில் வறட்சி, சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு போன்றவை முக்கிய காரணிகளாக இருந்தன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும் விலை உயர்வு, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு, அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் போன்றவை பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் ஏப்ரல் – மே 2014ல் நடைபெற்ற தேர்தலில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, ஊழல் ஒழிப்பு, வேலைவாய்ப்பை உருவாக்குவது போன்ற உறுதிமொழிகளைப் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்தது. இதன் பலன் இக் கூட்டணி 336 இடங்களில் பெரும் வெற்றியைப் பெற்றது. பா.ஜ.க தனித்து 282 இடங்களில் வெற்றி பெற்றது. நரேந்திர மோடி நாட்டின் 16வது பிரதமராக மே 26, 2014ல் பிரதமராகப் பதவி ஏற்றார். முழுமையாக ஐந்து ஆண்டுகள் 2019வரை பிரதமராக ஆட்சி செய்தார்.
இந்தியாவில் மோடிக்கு முன்பு நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் சுயச்சார்பை நோக்கிய பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்திருந்தனர். நரசிம்ம ராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோர்களின் ஆட்சி சந்தை சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால் மோடி அரசு துவக்கத்தில் தனித்துவமான கொள்கைகள் எதையும் முன்னெடுக்கத் திட்டமிடவில்லை. ஆனால் தேசிய அளவில் பல பிரதமர்கள் இதுவரை கடைப்பிடித்த கொள்கைகளை மாற்ற முனைந்தது. இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தியா பல்வேறு மொழி, கலாச்சாரம், இனம், இயற்கை சூழலைக் கொண்ட நாடு. இதற்கான முக்கியத்துவம் இவற்றின் இயல்பிற்கு ஏற்ப கொடுத்து வந்தநிலையில் ஒரே நாடு ஒரே கொள்கை என்பதை மோடி அரசு பின்பற்றியது.
இந்தியாவில் ஐந்தாண்டு திட்டங்களை உருவாக்கச் சோவியத் ரஷ்யாவை முன்மாதிரியாகக் கொண்டு மார்ச் 15, 1950ல் அன்றைய பிரமர் நேருவால் உருவாக்கப்பட்ட திட்டக்குழு 12 ஐந்தாண்டு திட்டங்களைத் தந்தது. இது கலைக்கப்பட்டு ஜனவரி 1, 2015ல் பிரதம மந்திரியைத் தலைவராகக் கொண்ட நிதி ஆயோக் (NITI Aayog) என்ற அரசுக்கு (ஒன்றிய, மாநிலங்கள்) உத்திகளையும், ஆலோசனைகளையும் வழங்கும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பானது திட்டக்குழு போல் அல்லாமல் அரசுக்கு ஆலோசனைகளை வழங்கும் ஆனால் கொள்கைகளை நடைமுறைப்படுத்தாது, நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரமற்றதாக இருக்கும், பகுதி நேர உறுப்பினர்களை நியமித்துக்கொள்ளும் என்ற இயல்புகளைக் கொண்டதாக உள்ளது. நிதி சார்ந்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்து பட்டு பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரியினை நடைமுறைப்படுத்தியது. மோடியின் முதல் கட்ட ஆட்சிக் காலத்தில் இவ்விரண்டு நடவடிக்கைகளும் பெருமளவிற்குப் பொருளாதாரத்தின் மீது தாக்கங்களை ஏற்படுத்தியது.
நவம்பர் 8, 2016ல் 86 விழுக்காடு பண சுழற்சியைக்கொண்ட உயர் மதிப்புடைய ரூ.500, ரூ.1000 பணங்களை மதிப்பிழக்கச் செய்யப்பட்டது. இதன் வழியாகக் கருப்புப் பணம், கள்ளப் பணம், தீவிரவாதம் ஒழிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் அதிக அளவில் நீர்மப் பணம் புழக்கத்தில் பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பண மதிப்பிழப்பு நடைமுறைப்படுத்தப்படும்போது உழவுப் பணிகள் துவங்குகிற காலம் எனவே அதிகமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதுபோல் கட்டுமானத்துறை, சிறு, குறு தொழில்கள் பெருமளவிற்குப் பாதிப்பிற்கு உள்ளானது. இதனால் வேலை இழப்பு ஏற்பட்டு வேலையின்மை அதிகரித்தது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவாக 6.1 விழுக்காடாக வேலையின்மை 2017-18ல் காணப்பட்டது.
காலம் காலமாக ஒன்றி, மாநில அரசுகள் பல்வேறு வரிகளை விதித்து வந்த நிலையில் இதனை முறைப்படுத்த ஒரே நிலையிலான வரியினை நாடு முழுவதும் விதிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது சரக்கு மற்றும் சேவை வரியினை (ஜி.எஸ்.டி) கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டது. நரேந்திர மோடி அரசு பதவி ஏற்றபின்பு இதனைச் சட்டமாக்கி ஜூலை 1, 2017ல் 17 மறைமுக வரிகளை ஒன்றிணைத்து நடைமுறைப் படுத்தியது. இது ஐந்தடுக்கு முறையில் மத்திய ஜி.எஸ்.டி, மாநில ஜி.எஸ்.டி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி என்ற வழிகளில் வரி விதிக்கப்படுகிறது. இந்த நடைமுறையினால் நுகர்வோர் அதிகம் பயனடைவார்கள் என்று கூறப்பட்டது. உண்மை நிலையில் இதனால் அரசுக்கான வருமானம் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது ஆனால் இது நடைமுறைப்படுத்தப்பட்டபின் நுகர்வுப் பொருட்களின் விலை குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நுகர்வோர், உற்பத்தியாளர்கள், சிறு வணிகர்கள், விவசாயிகள் பெருமளவிற்கு ஜி.எஸ்.டியால் பாதிக்கப்பட்டனர். பல மாநிலங்களின் சொந்த வரி மூலம் பெறப்படும் வருவாய் குறைந்தது. ஜி.எஸ்.டி வழியாகப் பெறப்பட்ட வருவாயையும் ஒன்றிய அரசு சரியாக மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. பல சிறு, குறு தொழில்கள் இவ் வரியினால் பாதிக்கப்பட்டு, மூடப்பட்டது.
பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையில் வேளாண்மை மேம்பாட்டிற்கான உறுதி மொழி, வாசகங்கள் (slogam), புதிய திட்டங்கள், நடவடிக்கைகள், ஏதும் பெரிய அளவில் இடம்பெறவில்லை. ஆனால் சில குறிப்பிட்ட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளாக இந்திய உணவுக் கழகம் திறம்படச் செயல்பட வைப்பது, விவசாயிகள் மேம்பட புதிய தொழினுட்பங்களைப் புகுத்துவது, தேசிய வேளாண் சந்தை அமைப்பது, மக்களின் பழக்கங்களோடு தொடர்புடைய வேளாண் விளைபொருட்களை மேம்படுத்துவது, விலை நிலைப்பு நிதியை உருவாக்குவது, வேளாண்மையை லாபகரமானதாக மாற்றுவது, மண் வளத்தைப் பாதுகாக்க நடவடிக்கை, இயற்கை சீற்றங்களால் ஏற்படும் வேளாண் இழப்பினைச் சரிசெய்யக் காப்பீட்டை நடைமுறைப்படுத்துதல் போன்றவை பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் வேளாண்மை சார்ந்ததாக இருந்தது.
மோடியின் முதல் கட்ட ஆட்சிக்காலமான 2014-15 முதல் 2018-19வரையில் மேற்கொண்ட முக்கியமான நடவடிக்கைகள், 1) நீர் பாதுகாப்பு மற்றும் அதன் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரதம மந்திரி கிரிஷ் சிஞ்சாய் யோஜனா 2015ல் தொடங்கப்பட்டது. 2) பிப்ரவரி 2016ல் விவசாயிகளின் வருமானத்தை இரண்டுமடங்காக 2022க்குள் அதிகரிப்பது. 3) நிதி ஆயோக்கால் மார்ச் 2016ல் மாதிரி நில குத்தகைச் சட்டம் வடிவமைக்கப்பட்டுக் குத்தகைச் சட்டத்தை மேம்படுத்தி குத்தகை தாரர்கள் பயனடையச் செய்யப்பட்டது. 4) ஏப்ரல் 2016ல் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா என்ற விரிவான பயிர்க் காப்பீடுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 5) வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை சந்தை படுத்துதல் (மேம்பாடு மற்றும் வசதியளிப்பு) சட்டம் 2017 நடைமுறைப்படுத்தப்பட்டது (ஏப்ரல் 2017ல்). இதன்படி மாநிலங்களில் இனம்கண்டுள்ள அனைத்து சந்தைகளையும் ஒருமுகப்படுத்துதல், தனியார் சந்தை, நுகர்வோர் சந்தை, நேரடிச் சந்தைப் படுத்துதல் போன்றவை அமைத்தல், கிடங்குகள், குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகள் அனைத்தையும் சந்தை முற்றமாகப் பிரகடனப் படுத்துதல், சந்தை கட்டணம், முகவர் கட்டணம் போன்றவற்றில் நியாயமான முறையினைப் பின்பற்றுதல், மின்னணு வர்த்தகத்திற்கு ஒருநிலையிலான அனுமதி, சந்தைக் கட்டணங்கள் ஒரு நிலையில் மட்டும் விதிப்பது, கிராமிய சந்தைகளில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக வேளாண் விளைபொருட்களை வாங்க வழி செய்தல் போன்றவை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டது.
6) ஆகஸ்ட் 2017ல் தண்ணீரை உச்ச அளவிற்குப் பயன்படுத்த நுண்ணீர் பாசன முறையினை ஊக்குவிக்க ‘ஒரு சொட்டு நீரில் அதிக விளைச்சல்’ (per drop, more crop) என்ற முறை முன்னெடுக்கப்பட்டது. 7) ஏப்ரல் 2018லிருந்து வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதியை 2022-23ல் இரட்டிப்பாக்குதல். 8) பாரம்பரிய விவசாய மேம்பாட்டுத் திட்டம் (Paramparagat Krishi Vikaas Yojana) மார்ச் 2018ல் தொடங்கப்பட்டு இயற்கை வேளாண்மையை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 9) பிரதான் மந்திரி அன்னதாதா வருவாய் பாதுகாப்பு இயக்கம் (Pradhan Mandri Annadata Aay Sanrakshan Abhiyan) செப்டம்பர் 2018ல் தொடங்கப்பட்டு விவசாயிகளுக்குக் கட்டுபடியாகும் விலையை வேளாண்மை விளைபொருட்களுக்கு உறுதி செய்வதாகும். 10) டிசம்பர் 2018ல் ‘வேளாண் ஏற்றுமதிக் கொள்கை’ வெளியிடப்பட்டது இதன்படி ஏற்றுமதியை இரட்டிப்பாக்குதல், இந்திய விவசாயிகளை ஒன்றிணைப்பது, வேளாண் விளைபொருட்களை உலகளாவிய மதிப்பு சங்கிலத் தொடரை உருவாக்குவதாகும். 11) குறு, சிறு விவசாயிகளின் வருமானத்தை உறுதிசெய்யும் விதமாகப் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்ற திட்டம் பிப்ரவரி 2019ல் தொடங்கப்பட்டது. 12) வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படும் யூரியாவினைப் பாதி அளவாக்க 2022-23 குறைத்தல்.
இந்தியாவில் விவசாயக் குடும்பங்கள் வேளாண்மை மற்றும் கால்நடைகள் வளர்த்தல் வழியாக மொத்த வருவாயில் 2002-03ல் 50.1 விழுக்காடு பெற்றிருந்தனர் இது 2015-16ல் 43.1 விழுக்காடாகக் குறைந்தது. இதே காலகட்டத்தில் கூலி வழியாகப் பெறும் குடும்ப வருமானமானது 38.7 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக அதிகரித்துள்ளது (Ashok Gulati 2021). பிப்ரவரி 28, 2016ல் பெல்லாரியில் நடந்த விவசாயிகளின் பேரணியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் வருமானத்தை 2022ல் இருமடங்காக அதிகரிக்க உள்ளதாகக் குறிப்பிட்டார். அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2017ல் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் விவசாயிகள் வருமானத்தை இருமடங்கு அதிகரிப்பதைப் பற்றிக் குறிப்பிட்டார். இதற்காக அசோக் தல்வாய் தலைமையில் ஏப்ரல் 2016ல் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. செப்டம்பர் 2018ல் இக் குழு அறிகையினை அரசுக்கு அளித்தது. இதன்படி 2012-13ல் விவசாயிகளின் மாத வருமானம் ரூ.8059 ஆக இருந்ததை 2022-23ல் ரூ.17862 ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி ஆண்டுக்கு 10.4 விழுக்காடு வருமானத்தை 2015-16 மற்றும் 2022-23 இடையில் உயர்த்த இலக்கு வகுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிப்பது, கால்நடை உற்பத்தித் திறனை அதிகரிப்பது, வள ஆதாரங்களைத் திறனாகப் பயன்படுத்துவது, வேளாண் உற்பத்திக்குத் திறனான பணமதிப்பினை உருவாக்குவது, இரண்டாம் நிலையிலான வேளாண் நடவடிக்கைகளின் பரவலை ஏற்படுத்துதல் போன்றவை முன்னெடுக்கப்பட்டது.
உணவு தானிய மேலாண்மை முறையினை அரசு தலையிட்டு நடைமுறைப்படுத்தியது. இதன்படி அரசு நெல், கோதுமைக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலையினை அளித்து கொள்முதல் செய்வது, கொள்முதல் செய்யப்பட்ட உணவு தானியங்களை 5 லட்சம் நியாய விலைக் கடைகள் வழியாகப் பொது விநியோக முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டது. 2013ல் பொது விநியோக முறையானது தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வந்தது. இதனை இந்திய உணவுக் கழகம் ஒருங்கிணைப்பு முகவராக இருந்து செயல்படுத்துகிறது. இதன்படி ஆண்டுக்கு 61.4 மில்லியன் மெட்ரிக் டன் தானியங்கள் 8.13 மில்லியன் மக்களுக்கு வழங்கப்பட்டது. மொத்த மக்கள் தொகையில் 67 விழுக்காட்டினர் இதனால் பயனடைந்தனர். பொதுவாக உணவுக்கான அதிகபட்ச மானியம் 2001-02முதல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் 2016-17 மற்றும் 2017-18ல் இதற்கான மானியம் ரூ.1.1 லட்சம் கோடி, ரூ.1.0 கோடி என்று முறையே வழங்கப்பட்டது. 2017-18லிருந்து 2018-19ல் மானியமானது 71 விழுக்காடு அதிகரித்தது. 2001-02லிருந்து அடுத்து வந்த 17 ஆண்டுகளில் 10 மடங்கு உணவுக்கான மானியம் அதிகரித்திருந்தது.
உணவு தானிய மேலாண்மை முறையில் கிடங்குகள் பற்றாக்குறை, போக்குவரத்தில் முறையற்ற மேலாண்மை, கசிவுகள், போக்குவரத்து வழியாகப் பரிமாற்றம் செய்யும்போது தானியங்கள் சிந்துதல், இந்திய உணவுக் கழகம் திறனற்று இருப்பது போன்றவற்றால் அதிக செலவுகள், விரயங்கள் ஏற்படுகிறது எனவே இதனைச் சரிசெய்ய மோடி அரசானது சாந்த குமார் தலைமையில் உயர் மட்டக் குழு ஒன்றை அமைத்தது. இக்குழுவானது ஜனவரி 2015ல் தனது அறிக்கையை ஒன்றிய அரசுக்குச் சமர்ப்பித்தது. அதன்படி 1) நடைமுறையில் உள்ள உணவு தானிய வழங்கலைக் குறைத்து அதற்குப் பதில் ரொக்கப் பண மாற்றத்தை அனுமதிப்பது, 2) இந்திய உணவு கழகம் நடைமுறையினைச் சரிசெய்து புறக்கணிக்கப்பட்ட மாநிலங்களில் கொள்முதல் வழியாக உணவுப் பொருட்களைத் தகுந்த விலைகொடுத்து வாங்குதல், 3) தேசிய உணவுப் பாதுகாப்பினால் பயனடையும் 67 விழுக்காடு மக்களின் பங்கை (மொத்த மக்கள் தொகையில்) 40 விழுக்காடாக்கக் குறைத்தல், 4) மாநில மற்றும் தனியார்த் துறையினை ஈடுபடுத்தி வெளிப்புற நடவடிக்கைகளின் வழியாக உணவு தானிய இருப்பை அதிகரிப்பது, 5) அதிக அளவிற்கு விளைபொருட்களைக் கையாள வினியோகச் சங்கிலியை மேம்படுத்துவது, கணினி மயமாக்குவது, அதிக அளவிற்கு உழலுக்கு வழி வகுக்கும் உணவு தானியம் கையாளும் முறையினை ஒழிப்பது போன்றவை பரிந்துரைக்கப்பட்டது.
மார்ச் 31, 2018ன்படி இந்தியாவில் 6676 முறைப்படுத்தப்பட்ட மொத்த விலைச் சந்தைகள் இயங்கிவந்தது. ஆனால் தேவைக்கு ஏற்ற அளவில் இச் சந்தை இல்லாததால் அரசு பல்வேறு திட்டங்கள் வழியாக வேளாண் சந்தைகளைத் தொடங்கியது. வேளாண்மை மற்றும் கால்நடைகளைச் சந்தைப்படுத்துதல் சட்டம் 2017, 2018-19ல் கிராம வேளாண் சந்தை, 2016ல் தேசிய வேளாண்மைச் சந்தை, 2018ல் பிரதான் மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கம், 2018ல் வேளாண் ஏற்றுமதி கொள்கை, வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை ஒப்பந்த வேளாண் மற்றும் சேவைச் சட்டம் 2018, 2016ல் சந்தைப் படுத்துதலுக்கான உரிமத்தை விலக்கிக் கொண்டது போன்றவை வழியாக வேளாண் சந்தைப் படுத்துதலை மேம்படுத்தியது.
குறைந்த பட்ச ஆதார விலையை 2003ல் மாதிரி வேளாண் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் குழு (APMC) என்பதை ஏற்றுக்கொண்டு பல மாநிலங்கள் நடைமுறைப்படுத்தியது. இதனால் ஒப்பந்த மற்றும் நேரடிச் சந்தை படுத்துதலுக்குத் தனியாரை அனுமதித்ததால் இச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் பல மாநிலங்களில் குறைந்த அளவிலே சந்தைப்படுத்துதலில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர முடிந்தது. பொதுவாக வேளாண்மைச் சந்தையானது திறனற்றதாகவும், வெளிப்படைத் தன்மையற்றதாகவும், முற்றுரிமை உடையதாகவும் இருந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். எனவே ஏப்ரல் 2017ல் வேளாண்மை உற்பத்தி மற்றும் கால்நடைகளைச் சந்தைப் படுத்துதல் (APLM) சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி மாநிலம் முழுவதும் ஒத்த நிலையிலான சந்தைகளைப் பிரகடனம் செய்தல், தனியார்ச் சந்தைகளை அமைப்பது. விவசாயி-நுகர்வோர் சந்தைகளை உருவாக்குதல், நேரடிச் சந்தையை ஏற்படுத்துவது, கிடங்குகள் மற்றும் குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகளைச் சந்தை முற்றமாக அறிவிப்பது, நியாயமான சந்தைக் கட்டணம் மற்றும் முகவர் கட்டண விதிப்பு, மின் சந்தை அமைப்பது போன்றவை உருவாக்கப்பட்டது.
மாதிரி ஒப்பந்த வேளாண் சட்டம் 2018ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி விவசாயிகளுக்கும் வாங்குபவருக்கும் இடையே நேரடி ஒப்பந்த முறை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை விற்றுப் பணம் பெறலாம் என்பதால் இழப்புகள் தவிர்க்கப்படும். வாங்குபவர்களும் குறிப்பிட்ட காலத்தில் விளைபொருட்களை விவசாயிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த முறையில் இடைத் தரகர்கள் இல்லாமல் நடைபெறுவதால் விவசாயிகள் லாபம் பெற இயலும் (Pavneet Kauris et al 2018).
கிராமப்புற வேளாண் சந்தைகள் 2018-19ல் 22941 இருந்தன இதில் 22000 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் உதவியுடன் மேம்படுத்தப்பட்டது. 10000 கிராமப்புறச் சந்தைகள் வேளாண் சந்தைப்படுத்துதல் உள்கட்டமைப்பு நிதியினைப் பயன்படுத்தி உள்கட்டமைப்புகளை மேம்படுத்தப்பட்டது. வேளாண் நுட்ப உள்கட்டமைப்பு நிதியின் வழியாக ரூ.200 கோடி மதிப்பீட்டில் ஜூலை 1, 2015ல் தேசிய வேளாண்மைச் சந்தை அமைக்கப்பட்டது. ஏப்ரல் 14, 2016ல் மின்னணு தேசிய வேளாண்மைச் சந்தை தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் வெளிப்படைத்தன்மையைப் பின்பற்றுவது, உழவர்களின் வருமானத்தை அதிகரிப்பது, அதிக அளவில் வாங்குபவர்களை அந்த அந்த மாநிலத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உருவாக்கித்தருவது போன்றவையாகும். மின்னணு தேசிய வேளாண்மைச் சந்தையானது மூன்று முக்கிய முன் தேவைகளைக் கொண்டது. இதன்படி 1) மாநிலம் முழுவதும் வர்த்தகம் செய்ய ஒரே உரிமத்தை உறுதிசெய்வது, 2) மாநிலம் முழுவதும் ஒரே முனையத்தில் கட்டணம் விதிப்பது அல்லது மாநிலம் முழுக்க கட்டணமற்ற சந்தையினை அளிப்பது. 3) மின்னணு முறையில் ஏலம் நடத்துவது போன்றவையாகும். இத் திட்டத்தின்படி நாடுமுழுவதும் 585 வேளாண் உற்பத்தி மற்றும் சந்தைப் படுத்துதல் குழுக்கள் இணைக்கப்பட்டது. இதனால் 1.66 கோடி விவசாயிகள் பயனடைந்தனர். அதே சமயம் மின்னணு தேசிய வேளாண்மைச் சந்தையில் கட்டணமற்ற முறை பின்பற்றப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றது, விவசாயிகளுக்குத் தகுந்த விலை கிடைக்கவில்லை, விவசாயிகளுக்குப் பணம் செலுத்த மின்னணு பரிமாற்றம்; பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் காணப்படுகிறது.
மோடி தலைமையிலான ஆட்சியின் முதல் கால காட்டத்தில் 2014ல் வறட்சி ஏற்பட்டது, அடுத்து 2015ல் கடுமையான வறட்சி நிலவியது இதனால் உணவு தானிய உற்பத்தி 13.03 மில்லியன் மெட்ரிக் டன், 0.5 மில்லியன் மெட்ரிக் டன் என்ற அளவு குறைந்தது. பருப்பு உற்பத்தி 2.1 மில்லியன் மெட்ரிக் டன், 0.8 மில்லியன் மெட்ரிக் டன் எனக் குறைந்தது. இதனால் உணவுப் பணவீக்கம் அதிகரித்தது. பருப்பிற்கான நுகர்வோர் விலையானது 2016ல் முதல் பாதியில் 33 விழுக்காடு அதிகரித்தது. உணவுப் பணவீக்கத்தில் குறிப்பாகப் பருப்பு விலை உயர்வினைக் கட்டுப்படுத்த அதன் உற்பத்தியை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி பருப்பிற்கானக் குறைந்த பட்ச ஆதரவு விலையினை அதிகரித்தது, பருப்பு இறக்குமதி செய்தது இதனால் விலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில் பருவமழை நன்றாக இருந்ததால் பருப்பு உற்பத்தி அதிகரித்தது. இந்த நிகழ்வுகளால் பருப்பு விலையானது 2017-18ல் கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இதுபோன்ற நிலையே எண்ணெய்வித்திலும் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளானார்கள். இதனைப் போக்க அரசு பிரதான் மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. இத் திட்டத்தின் முக்கிய நோக்கம் விவசாயிகளின் வேளாண் விளைபொருட்களுக்குக் கட்டுபடியாகும் விலையினை உறுதி செய்வதாகும். இத்திட்டத்தின் மூன்று உபதிட்டங்கள் இடம் பெற்றிருந்தது. 1) விலை ஆதரவு திட்டம்: இதன்படி ஒன்றிய அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகவராகச் செயல்பட்டுப் பருப்பு, எண்ணெய் வித்துக்கள், கொப்பரை போன்றவற்றுக்குத் தகுந்த விலையினை அளித்தது. இந்திய உணவுக் கழகத்தை இதில் ஈடுபடச் செய்தது. 2) விலைப் பற்றாக்குறையைச் செலுத்தும் திட்டம் (PDPS): இதன்படி இனம்காணப்பட்ட வேளாண் சந்தையில் பதியப்பட்ட விவசாயிகளுக்குத் தங்களின் விளைபொருட்கள் விற்பனையில் குறைந்த பட்ச ஆதார விலைக்கும் உண்மையில் விற்கப்படும் விலைக்கும் உள்ள வேறுபாட்டு விலைப் பற்றாக்குறையினை அறிந்து விவசாயிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிற்குப் பணம் செலுத்துவதாகும். மேலும் வெளிப்படையான ஏலச் சந்தையினை விவசாயிகளுக்கு உருவாக்கித் தருவதாகும். 3) தனியார்த் துறை அனுமதி: கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் அரசானது தனியார்த் துறையினை வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் செய்ய முன்னோட்ட அடிப்படையில் நடைமுறைப்படுத்தியது. ஆனால் மாநில அளவில் இதற்கான தகுந்த வரவேற்பு இல்லை. பிரதான் மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கமானது சிறு, குறு விவசாயிகளிடையே சென்றடையாததால் இத் திட்டம் வெற்றிபெற இயலவில்லை.
2014ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் வேளாண் விளைபொருட்களுக்கு அதன் செலவுடன் 50 விழுக்காடு கூடுதலாக விலை அளிப்பதாக அறிவித்தது. இதன்படி 2018-19ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் குறைந்த பட்ச ஆதரவு விலையை A2 + FL என்ற அடிப்படையில் விலை தீர்மானம் செய்து அத்துடன் 50 விழுக்காடு கூடுதலாக சேர்த்து குறைந்த பட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டது. ஆனால் C2 என்ற செலவினை கணக்கில் கொள்ளாமல் இவ்விலை அளிக்கப்பட்டதால் A2 + FL வானது C2 வைவிட 38 விழுக்காடு குறைவாக இருந்தது. அதே சமயம் இவ் விலை அறிவிக்கப்பட்டபோது பன்னாட்டுச் சந்தையில் வேளாண் விளைபொருட்களின் விலை வீழ்ச்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோல் இவ் குறைந்தபட்ச விலை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கவில்லை காரணம் அரசு கொள்முதல் செய்யப்படும் கொள்முதல் மையங்களில் மட்டுமே இது பின்பற்றப்பட்டது. மேலும் இவ்விலை அறிவிக்கப்பட்டபோது எற்கனவே நடப்பில் இருந்த குறைந்த பட்ச ஆதரவு விலையைனைத்தாண்டி எந்த பெரிய மாற்றமும் எற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த பட்ச ஆதரவு விலையானது மொத்த வேளாண் விளைபொருட்களின் மதிப்பில் 6 விழுக்காடு மதிப்புடையவற்றுக்கு மட்டுமே பயனளிப்பதாக இருந்தது. இக் குறைந்த பட்ச ஆதரவு விலையானது மிகக்குறைவான விவசாயிகளுக்கு மட்டுமே பலனை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரங்களைத் திறம்படப் பயன்படுத்தி வேளாண் வருமானத்தை அதிகரிக்க அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. இந்தியாவில் பாதிக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் இயற்கையைச் சார்த்திருக்கிறது. நீர்ப்பாசனம் அனைத்து விவசாயிகளின் நிலங்களுக்கும் கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காகப் பிரதான் மந்திரி கிரிஷ் சிஞ்சாய் யோஜனா என்ற திட்டம் 2015ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 6 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களுக்குச் செயற்கை நீர்ப்பாசன வசதி, 5 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலத்திற்குச் சொட்டுநீர் பாசனம், விவசாயப் பண்ணைகள் அமைப்பது, போன்றவற்றை இத்திட்டம் நிறைவேற்ற முனைந்தது. இதன்படி 99 முதன்மையான நீர்ப்பாசன திட்டங்களை இனம்கண்டு நீர்ப்பாசன வசதியை 2019க்கு முன்பு மேம்படுத்தத் திட்டம் வகுக்கப்பட்டது ஆனால் பிப்ரவரி 2019ல் 4 திட்டங்கள் மட்டுமே முடிவுறும் தறுவாயில் இருந்தது, 51.4 விழுக்காடு திட்டங்கள் டிசம்பர் 2019ல் முடிவுபெறும் தறுவாயில் இருந்தது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாம் கட்ட ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாற்றியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் இருந்ததை பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) என்று பெயர் மாற்றம் செய்து 2016ல் இவ் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இப் புதிய திட்டம் விவசாயிகள் செலுத்தவேண்டியப் பிராமியத்தினை குறைத்துச் செலுத்த வழிவகுத்தது மட்டுமல்ல சில கட்டுப்பாடுகளையும் விலக்கிக் கொண்டது. 2015-16ல் இத் திட்டமானது மொத்த விளைநிலப் பரப்பில் 22 விழுக்காடு நிலங்களை உள்ளடக்கியிருந்தது, 2017-18ல் இது 29 விழுக்காடாகவும், 2018-19ல் 29.33 விழுக்காடாகவும் அதிகரித்தது. இதனால் 1.56 விவசாயிகள் பயனடைந்தனர். இக் காப்பீட்டில் பயனடைய ஆதார் இணைப்பு கட்டாயம் என்பதால் முழு அளவிற்கு விவசாயிகளுக்குப் பலன் சென்றடையவில்லை. நெசவாளர்கள் இத்திட்டத்தின் வழியாகக் கடன்பெற வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது ஆனால் இதில் பல முறைகேடுகள் காணப்பட்டது, மாநில அரசு கால வரையறைக்குள் விவரங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்பதால் காப்பீட்டுத் தொகை பெறுவதில் கால தாமதம் ஏற்பட்டது. காப்பீட்டு நிறுவனங்கள் தாமதப்படுத்திக் காப்பீட்டுத் தொகையை வழங்கியது. காப்பீட்டு நிறுவனங்கள் அதிகமாக இந்த திட்டத்தால் லாபம் அடைந்தது. தோட்டக்கலை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு இந்த காப்பீடு நடைமுறைப்படுத்தவில்லை. எனவே அக்டோபர் 1, 2018ல் அரசு இந்த திட்டத்தில் சில மாறுதல்களைச் செய்து (தாமதமாக வழங்கும் காப்பீட்டுத் தொகைக்கு அதற்கான வட்டியையும் சேர்த்து வழங்குதல், சராசரி நகர்விற்குக் கடந்த 7 ஆண்டுகளில் 5 ஆண்டுகளை எடுத்துக்கொள்வது, விவசாயிகளுக்குக் காப்பீடு செய்ய மேலும் கால அவகாசம் அளிப்பது, அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளையும் கணக்கில் கொள்வது) நடைமுறைப்படுத்தியது. ஆனால் திறனற்ற நடைமுறை, வெளிப்படைத் தன்மையற்ற நிலை, தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டாதது போன்ற பின்னடைவுகள் இத் திட்டத்தில் காணப்பட்டது.
இந்தியாவில் குறு, சிறு விவசாயிகள் (2 ஹெக்டேர் நிலத்திற்குக் கீழ் வைத்திருப்பவர்கள்) 2015-16ஆம் ஆண்டு தரவுகளின்படி மொத்த விவசாயிகளில் 86 விழுக்காடு உள்ளனர். இவர்கள் தங்களின் வேளாண் பணியினை மேற்கொள்ள முறைசாராக் கடன்களை அதிமாகப் பெறுவதால் கடன் தொல்லைக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்கின்றனர். NCRBயின் தரவுகளின்படி 1995முதல் 2016ஆம் ஆண்டுவரை 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2012-13ஆம் ஆண்டு தரவுகளின்படி பெரிய விவசாயிகளின் குடும்ப வருமானம் சிறு விவசாயிகளின் குடும்ப வருமானத்தைவிட 5.6 மடங்கு அதிமாக உள்ளது. பெரிய விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக ரூ.46307 வருவாய் ஈட்டுகின்றனர் ஆனால் சிறு விவசாயிகள் ரூ.44345 மட்டுமே ஈட்டுகின்றனர். விவசாயிகளின் மொத்த வருமானத்தில் 47.9 விழுக்காடு மட்டுமே வேளாண்மை சாகுபடியினால் கிடைக்கிறது (Suijit Mistra et al 2021). இயற்கைச் சீற்றங்கள், காலநிலை மாறுபாடு போன்றவற்றால் சிறு, குறு விவசாயிகள் அதிக இழப்பினை எதிர்கொள்கின்றனர். இதன்பொருட்டு ஒன்றி அரசானது பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தை 2019ல் நடைமுறைப்படுத்தி குறு, சிறு விவசாயிகளுக்கு எந்த விதக் கட்டுப்பாடுமின்றி ஆண்டுக்கு ரூ.6000 ரொக்கத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் மூன்று தவணைகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. 2019-20ல் இத் திட்டத்திற்கு ரூ.75000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல் தவணையினை ஏப்ரல் 1, 2019ல் விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்பட்டது. மார்ச் 7, 2019ன் படி 2.2 கோடி விவசாயிகள் இதனால் பயனடைந்தனர். இத்திட்டமானது நில உடைமையாளர்களுக்கும், பயிரிடப்படக்கூடிய நிலத்திற்கு மட்டுமே பொருந்தக்கூடியதாகும். அரசு ஊதியம் பெறுபவர்கள், குத்தகை தாரர்கள், நிலமற்ற விவசாயிகள் இத்திட்டத்தைப் பயன்படுத்தமுடியாது. மேம்படுத்தப்படாத நில ஆவணங்கள், விவசாயிகளிடையே வங்கிப் பழக்கமின்மை போன்ற காரணங்களால் இத்திட்டம் முழு அளவிற்கு வெற்றிபெறவில்லை. அத்திமான அளவிற்கு இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படுவதால் (ஜி.டி.பியில் 0.4 விழுக்காடு) அரசின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கக் காரணமாக உள்ளது.
வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளின் உள்கட்டமைப்பினை மேம்படுத்தி வேளாண் தொழில் முனைவோர்களை ஈடுபடச் செய்யவும், வேளாண் வணிகத்திற்கு நிதி உதவியினைச் செய்யவும், ராஷ்டிரிய கிரிஷ் விகாஸ் யோஜனா திட்டத்தை 2018-19ல் தொடங்கப்பட்டது. இதுபோன்று வேளாண்மை இயந்திரமயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. வேளாண் கழிவுகளால் பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேசம் மாநிலங்களில் வேளாண் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் சுற்றுச் சூழல் பாதிப்படைகிறது எனவே இதனைக் கையாள்வதற்கு நிதி உதவி மற்றும் மானியத்தில் இயந்திரங்கள், கருவிகள் வழங்கும் திட்டமும், வாடகைக்கு இயந்திரங்கள் அளிக்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. விவசாயிகளிடையே சுற்றுப்புறச் சூழல் மாசடைவதை அறியவும் மாற்று நடைமுறையினைக் கடைப்பிடிக்கவும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. உள்நாட்டுக் கால்நடைகளைப் பாதுகாக்கவும் அவற்றை அதிகரிக்கவும் ராஷ்டிரிய கோகுல் திட்டம் 2014ல் தொடங்கப்பட்டது. பிரதான மந்திரி கிசான் சம்பதா யோஜனா என்ற திட்டம் ரூ.6000 கோடி செலவில் 2016-2020க்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி உணவுப் பூங்கா அமைத்தல், முன்னோக்கி-பின்னோக்கிய தொடர்புகளை உருவாக்குவது, உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுக்கு உள்கட்டமைப்பை அமைப்பது, சங்கிலித் தொடர் குளிர்பதனக் கிடங்கு மற்றும் மதிப்புக் கூட்டல் கட்டமைப்பை ஏற்படுத்துதல், வேளாண்-செயல்பாட்டுத் தொகுதிகளுக்குக் கட்டமைப்பை உருவாக்குதல் போன்றவை வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
Source: Pulapre Balakrishnan 2022.
மோடி பிரதமராகப் பதவி ஏற்றபோது நிதிப் பற்றாக்குறையானது 2013-14ல் 4.4 விழுக்காடாக இருந்தது இது அடுத்து வந்த ஆண்டுகளில் குறைந்து 3.4 விழுக்காடாக 2018-19ல் இருந்தது. பணவீக்கம் பொருட்களின் விலையினைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெட்ரோல் விலை, உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்ததால் பணவீக்கமானது 2013-14ல் 9.5 விழுக்காடாக இருந்தது 2018-19ல் 3.4 விழுக்காடாகக் குறைந்தது (Pulapre Balakrishnan 2022). இதில் அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் பணவீக்கம் குறையவில்லை என்றும் எரிபொருள் (பெட்ரோல்-டீசல்) விலை பன்னாட்டு அளவில் குறைவது என்பது பணக் கொள்கைக்கு அப்பாற்பட்ட புறக் காரணியாகும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி 2013-14லிருந்து 2016-17 வரை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் 2017-18ல் 1.3 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந்தது. இது மேலும் 2018-19ல் 0.9 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந்தது. இதற்கு முக்கியக் காரணம் பணமதிப்பிழப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதும், சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டதுமாகும். இதன் விளைவு வேலையின்மை அதிகரிக்கத் தொடங்கியது (வேலையின்மை 2015-16ல் 5 விழுக்காடும், 2017-18ல் 6.1 விழுக்காடும், 2018-19ல் 5.8 விழுக்காடுமாக இருந்தது). இத்துடன் தொழிலாளர் பங்கேற்பு ஆற்றலும் குறையத் தொடங்கியது. மோடி தொன்மைப் பொருளியல் அறிஞர்கள் கடைப்பிடித்த “குறைந்த பட்ச அரசு” என்ற உத்தியைப் பின்பற்றி பன்னாட்டு நிறுவனங்கள், பெருநிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். 2008ல் ஏற்பட்ட உலகளாவிய நிதிச் சிக்கலிருந்து பல நாடுகள் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பாததால் இந்தியாவின் அயல்நாட்டு வர்த்தகம் பெருமளவிற்குப் பாதிக்கப்பட்டிருந்தது. மோடி பதவி ஏற்ற அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வேளாண்மையின் வளர்ச்சியானது பூஜ்யத்திற்குக் கீழ் சென்றது. வெளிநாட்டு முதலீடு வரத்து குறைந்தது, தேவை குறைந்தது. உற்பத்தியாளர்கள் பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரியால் பாதிக்கப்பட்டு உற்பத்தியை நிறுத்தி இருந்தனர்.
வேளாண் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது மோடியின் முதல் கட்ட ஆட்சிக் காலத்தில் சராசரியாக 2.9 விழுக்காடு வளர்ச்சியடைந்தது இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அடைந்ததைவிட (4.3 விழுக்காடு) குறைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வேளாண் துறையின் செயல்பாடுகள் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுவதற்கு முக்கியக் காரணம், இந்திய வேளாண்மை அதிக அளவில் பருவமழையினை சார்ந்திருப்பதாகும். 49 விழுக்காடு விளைநிலங்கள் மட்டுமே நீர்ப்பாசன வசதியைப் பெற்றுள்ளது. பருவமழையானது 2002ல் -19.2 விழுக்காடு குறைவான மழையும், 2004ல் -13.8 விழுக்காடும், 2009ல் -21.8 விழுக்காடும், 2014ல் -12 விழுக்காடும், 2015ல் 14 விழுக்காடு குறைவாக மழையினைப் பெற்றுள்ளது. இதனால் உணவு தானிய உற்பத்தியானது இக்கால கட்டங்களில் குறைந்திருந்தது. இந்தியச் சுதந்திரம் அடைந்து தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகள் வறட்சியினை 1965 மற்றும் 1966லும், 1986 மற்றும் 1987லும், 2014 மற்றும் 2015லும் எதிர் கொண்டுள்ளது. மோடி ஆட்சியில் இத்தகைய தொடர் இரண்டு ஆண்டுகள் வறட்சியினை சந்தித்தால் வேளாண்மை பாதிக்கப்பட்டது. இதைத் தவிர உள்நாட்டில் விலையில் எற்றத் தாழ்வு நிலவியதும், உலகளாவிய அளவில் வேளாண் விளைபொருட்களின் விலை வீழ்ச்சி அடைந்திருந்தது. இத்துடன் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை (e-NAM) மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் (Farmer Producer Company) போன்றவற்றால் வேளாண்மையின் லாபம் பாதிக்கப்பட்டது. அரசியல் கட்சிகளின் உறுதிமொழிகள் நிறைவேற்றாமல் இருந்தது, பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் நீர்மமாகப் பணம் பயன்படுத்த முடியாமல் போனது போன்றவை வேளாண்மை வளர்ச்சிக்கான தடைகளாக இருந்தது. இதன் காரணமாக மோடி ஆட்சியின் முதல் கால கட்டத்தில் வேளாண் வளர்ச்சி குறைந்ததற்கான முக்கியக் காரணமாக அறியப்படுகிறது.
அசோகா குலாட்டி, ஸ்வேதா சைனி மற்றும் ரஞ்சனா ராய் (2021) என்பவர்களின் ஆய்வுப்படி A2 செலவை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் நெல்லின் லாப விளிம்பானது (விழுக்காட்டில்) 2012-13 108 ஆக இருந்தது 2015-16ல் 90 ஆகக் குறைந்துள்ளது, கோதுமை 183லிருந்து 155 ஆகக் குறைந்துள்ளது, கரும்பு 183லிருந்து 153ஆகக் குறைந்துள்ளது, சோளம் 101லிருந்து 79ஆகக் குறைந்துள்ளது. பருப்பு வகைகள் மட்டும் அதிகரித்துள்ளது. இச்செலவுடன் சொந்த உழைப்பிற்கான பணமதிப்பு, சொந்த நிலத்தின் வாடகை மதிப்பு, சொந்த மூலதனத்திற்கான வட்டியும் சேர்த்துப் பார்த்தால் லாப விளிம்பானது எதிர்மறையில் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ரிச்சா குமாரின் (2019) ஆய்வின்படி வேளாண் பயிர்களில் புதிய பூச்சிகளின் தாக்குதல் ஏற்படுவது, அதிக களைகள் உருவாகுவது, மண்ணின் வளத் தன்மை குறைந்து வருவது, ரசாயன உரத்திற்கு மாற்று நடைமுறையில் பயன்படுத்த முன்வராத நிலை, இடுபொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரித்திருப்பது, மானியம் மற்றும் கடன் நிவாரணம் தொடர்ந்து அதிகரித்திருப்பது போன்றவை அன்மைக் காலங்களில் வேளாண்மையில் காணப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார் (Richa Kumar 2019).
சுக்பால் சிங்கின் (2013) ஆய்வுப்படி 2003ஆம் ஆண்டு தரவுகளின்படி 40 விழுக்காடு இந்திய விவசாயிகள் வேளாண் தொழிலை விருப்பமின்றி தொடர்வதாகவும், இதற்கு முக்கியக் காரணம் குறைவான லாபம், அதிகமான இடர், வேளாண் தொழிலில் ஈடுபடுவதால் சமூகத்தில் குறைத்து மதிப்பீடு செய்யப்படுவது போன்றவை என்று குறிப்பிட்டுள்ளார். இவர்கள் நல்வாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ளனர், அவ் வாய்புகள் அமையப்பெற்றால் வேளாண்மையிலிருந்து வெளியேறத் தயாராக உள்ளனர் என்கிறார். மற்றொரு வகையில் வேளாண்-வேளாண் சாரா வருமானத்தின் இடைவெளியானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று இவ் ஆய்வு குறிப்பிடுகிறது. 1980களின் இடையில் இவ் இடைவெளியானது 1:3 என்று இருந்தது, 1990களின் மத்தியில் இது 1:4.8 என அதிகரித்தது, 2011-12ல் இது 1:3.12 என்று மாற்றமடைந்தது. வேளாண்மையில் வருமானம் இரு மடங்காக அதிகரிக்க வேண்டுமென்றால் 20 ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொள்ளும் என்று புள்ளிவிவர ஆதாரங்களுடன் இவ் ஆய்வு தெரிவிக்கிறது (Sukhpal Singh 2018 2018).
இந்தியா இத்துவரையில்லாத காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டுள்ளது, விவசாயிகள் லாப விளிம்புநிலை குறைந்து வருவது என்பது வேளாண்மையின் இந்திய தற்போது எதிர்கொள்ளும் மிகப் பெரிய அறைகூவலாக உள்ளது. இந்தியாவில் சராசரி சாகுபடிப் பரப்பானது தொடர்ந்து குறைந்து வருகிறது இதற்கு முக்கியக் காரணம் குடும்ப அமைப்பின் பிரிகையால் நிலம் துண்டாடப் படுவதாகும். இந்த நிலை தொடர்ந்தால் விவசாய வருமானம் மேலும் குறையும். தற்போது அதிகரித்திருக்கும் வேளாண் உற்பத்தி போதுமான அளவில் இல்லை. இதனை மேலும் அதிகரிக்க அரசு அடிப்படையாக வேளாண் துறையுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பினை உருவாக்க வேண்டும், காலநிலை மற்றும் பருவநிலை மாற்றம் போன்றவற்றை உணர்ந்து இடுபொருட்களை மாற்றிப் பயன்படுத்தவேண்டும். இந்திய விவசாயிகள் வேளாண் செயல்பாடுகளில் எவ்வித திறன் மேம்பாட்டையும் பெற்றிருக்கவில்லை என்பதால் அவர்களின் திறன் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.
-பேரா.பு.அன்பழகன்
இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @ 75 : தொடர் – 13 ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (மன்மோகன் சிங்), புதுத் தாராளமயக் கொள்கையும், வேளாண்மையும் – பேரா.பு.அன்பழகன்
இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி அரிதான வளர்ச்சியினைக் காண முடிந்தது, அடுத்த கால் நூற்றாண்டில் 3லிருந்து 4 விழுக்காடு வளர்ச்சியினையும், 20ஆம் நூற்றாண்டின் கடைசி கால் பகுதியில் 6 விழுக்காடு வளர்ச்சியினையும் கண்டது. இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் தொடக்க நிலையில் தொடர்ந்து விரைவான விரைவான வளர்ச்சியினைப் பெற்றிருந்தாலும் அத்துடன் சமுதாயத்தில் சமனின்மை என்ற நிலையும் காணப்பட்டது. 1980க்கு முன்பு அரசியல் மற்றும் கொள்கைகள் வாணிபச் சார்பு, வளர்ச்சிச் சார்பு என்ற இரண்டிற்கும் எதிரானதாக இருந்தது. ஆனால் 1980க்கு பின் வளர்ச்சிச் சார்பு மற்றும் வாணிபம் சார்பு நிலைக்கு ஆதரவான அரசியலும், கொள்கைகளும் உருவானது. 1990களில் சந்தைச் சார்பு நிலையினைப் பின்பற்றிய இந்தியா பன்னாட்டுப் பொருளாதாரத் தளங்களில் தடம் பதிக்கத் தொடங்கியது. வாணிபச் சார்பின் உத்திகள் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவானது ஆனால் சந்தத்தைச் சார்பு உத்திகள் நுகர்வோர்களுக்கான ஆதரவான நிலையுடையது. சந்தை சார்பு உத்திகள் போட்டியினை உருவாக்கி உற்பத்தியைப் பெருக்கும். இந்த நிலையில் பொருளாதார வளர்ச்சியும் உள்நாட்டு வாணிபம் மேம்பாடு அடையத் தொடங்கியது. அதே சமயம் இதன் விளைவுகள் அரசியல் பெருக்கத்தினால் வட்டார மற்றும் வகுப்புச் சமனின்மை அதிகரித்தது, மொழிசார் தேசியத்தின் தாக்கம் குறைந்தது, அரசியல் காரணங்களினால் நலன் சார் அணுகுமுறைகள் உருவாகியது.
இந்தியாவில் தனிக் கட்சி ஆதிக்கம் முடிவுற்று கூட்டணி ஆட்சிகள் ஒன்றி அரசியல் தொடர்ந்து நடைமுறையிலிருந்தது. 2004ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் (ஐ.மு.கூட்டணி), பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (தே.ஜ.கூட்டணி) போட்டியிட்டது. தேர்தல் முடிவில் ஐ.மு.கூட்டணி 218 இடங்களிலும், தே.ஜ.கூட்டணி 181 இடங்களிலும் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து ஐ.மு.கூட்டணியானது மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சியமைத்தது. இக் கூட்டணி 2004 முதல் 2009 முடிய ஆட்சியில் இருந்தது. மீண்டும் 2009ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் 262ல் ஐ.மு.கூட்டணியும், 159ல் தே.ஜ.கூட்டணியும் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து மீண்டும் மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சி அமைந்தது. இக் கூட்டணி ஆட்சி முழுமையாக பத்து ஆண்டுகள் மே 2009 முதல் மே 2014வரை நீடித்திருந்தது. பல மாநிலக் கட்சிகள் ஐ.மு.கூட்டணியில் இடம் பெற்றிருந்ததால் குறைந்தபட்ச பொது செயல் திட்டமானது உருவாக்கப்பட்டது. இதன்படி ஆண்டுக்கு 7 – 8 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி, வேளாண்மை, உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் வேலைவாய்ப்பினை உருவாக்குதல், முதலீட்டைப் பெருக்குவது, வேலைவாய்ப்பு திட்டம் மூலம் கூலியினை அளித்து குடும்பத்திற்கான சம்பாத்தியத்தை உருவாக்குவது, வேளாண்மை மற்றும் உள்கட்டமைப்புகள் மீது கவனம் செலுத்துவது போன்றவை இடம் பெற்றிருந்தது (GoI 2004).
ஐ.மு.கூட்டணி அரசின் ஜனரஞ்சக திட்டங்களான தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம், தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம், சீர்திருத்தங்களை மறுசீரமைப்பிற்கு உட்படுத்தியது மற்றும் உள்கட்டமைப்புகள் மீது அதிக கவனம் செலுத்தியது போன்றவற்றைக் குறிப்பிடலாம் (Maitreesh Ghatak et al 2014). அதே சமயம் பொருளாதார வளர்ச்சியில் தடுமாற்றம், விலை உயர்வு, இந்தியப் பணம் வலுவிழந்தது, நிதிப் பற்றாக்குறை போன்றவை ஐ.மு.கூட்டணி அரசில் காணப்பட்டது. மார்ச் 7, 2005ல் பிரதமர் மன்மோகன் சிங் பன்னாட்டு உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தில் உரையாற்றும்போது, இரண்டாவது பசுமையை புரட்சியானது பழம், காய்கறிகளின் உற்பத்தியினைப் பெருக்குவதை நோக்கமாகக் கொண்டது என்றார். இதற்காகத் தோட்டக்கலை இயக்கம் (mission) உருவாக்கப்பட்டு நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள், கருவுற்ற தாய்மார்கள் பயனடையும் வகையில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டம் இந்தியத் திட்டக் குழுவினால் வடிவமைக்கப்பட்தைக் குறிப்பிட்டார். இரண்டாவது பசுமைப் புரட்சியானது, பொது-தனியார்-பங்கேற்புடன் நடத்தப்படும் என்றும், இதனை நடைமுறைப்படுத்த அமெரிக்காவுடன் ஒன்றிணைந்து செயல்படத் தீர்மானிக்கப்பட்டது என்றார். இதன்படி 1) நீர் ஆதாரப் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு உணவு உற்பத்தியை எதிர்கொள்ளும் வழிமுறைகளைக் காண்பது, 2) அறுவடைக்கும் பிந்தைய நிலைகளில் வீணாகும் விளைபொருட்களின் அளவினைக் குறைப்பது, சேமிப்புக் கிடங்குகளை மேம்படுத்துவது, பன்னாட்டு அளவில் விவசாயிகள் வேளாண் வாணிபத்தில் பங்கேற்பை ஊக்குவிப்பது போன்றவை முன்னெடுக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் இந்தியா உலக உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியினை மேற்கொள்ளத் திட்டங்கள் தீட்டப்பட்டது.
ஐ.மு.கூட்டணி அரசைப் பொறுத்தவரையில் இரண்டு முக்கிய அறைகூவல்களை எதிர்கொண்டது. அவை, 1) பொருளாதார அறைகூவல்கள் 2) அரசியல் அறைகூவல்கள் ஆகும். பொருளாதார அறைகூவல்களைப் பொருத்த அளவில் உள்கட்டமைப்புகளுக்காக விளைநிலங்களைக் கையகப்படுத்துதலின்போது பெரும் எதிர்ப்புகளை அரசு எதிர்கொண்டது. உயர் பொருளாதார வளர்ச்சியானது திறனுடைய தொழிலாளர்களின் தேவையினை அதிகரித்தது. ஆனால் அடிப்படையில் இந்தியாவால் குறைந்த திறனுடையவர்களையே உருவாக்கிக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.மு.கூட்டணி அரசானது தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. ஆனால் அதில் பல்வேறு குளறுபடிகள் காணப்பட்டது. ஏழைகளுக்கான திட்டமாக இது இருந்தாலும் அரசியல் தலையீடுகள் அதிகமாக இருந்தது. அரசியல் ரீதியாகக் காங்கிரஸில் இரட்டைத் தலைமை காணப்பட்டது. பா.ஜ.கவின் இந்துத்துவ கொள்கை வேரூன்றி இருந்தது. காங்கிரஸ் தலைமுறை, வாரிசு அரசியல் பெரும் விவாதப் பொருளாக மாறியது. அரசியல் ரீதியாகச் செயல்பாடுகள் மக்களுக்கு எடுத்துச் செல்வதில் தோய்வு காணப்பட்டது. நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு போன்றவற்றில் ஊழல் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
2004-05ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது. 2005-06ல் தேசிய தோட்டக்கலை இயக்கம் செயல்படுத்தப்பட்டது. இதன்படி பழங்கள், காய்கறிகள், மருத்துவத் தாவரங்கள், வாசனைப் பொருள் உற்பத்தித் தாவரங்களை விளைவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 2005-06ல் ஒன்றிய அரசின் உதவியுடன் வேளாண் சீர்திருத்த விரிவாக்கத்திற்கு மாநில அரசுகள் திட்டம் செயல்படுத்த நிதி உதவி அளிக்கப்பட்டது. 2005-06ல் வேளாண்மைக்கான நடைமுறை ஆராய்ச்சி முன்னோடித் திட்டத்திற்கான தேசிய நிதி உருவாக்கப்பட்டது. இத்துடன் இதே ஆண்டில் தேசிய வேளாண் கண்டுபிடிப்புகளுக்கான திட்டம் தொடங்கப்பட்டது. வேளாண் சந்தை படுத்துதலுக்கு 2003 வேளாண் உற்பத்தி சந்தை குழு சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. 2006ல் பாரத் நிர்மாண் என்ற கால வரம்பு (2005 – 2009) திட்டம் அறிவிக்கப்பட்டது. விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மையளிக்கும் திட்டம், பிராதான மந்திரி கிராம சாலை திட்டம், விரைவுபடுத்தப்பட்ட கிராமப்புற குடிநீர் வழங்கல் திட்டம், இந்திரா வீட்டு வசதி திட்டம், ராஜீவ் காந்தி கிராம மின் இணைப்பு திட்டம், கிராம பொது தொலைப்பேசி போன்றவற்றை உள்ளடக்கி ஒரு குடையின் (பாரத் நிர்மாண்) கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டது. நீர் ஆதாரம். வெள்ள மேலாண்மை மற்றும் மண் அரிப்பு தடுப்பு திட்டம் மார்ச் 2005ல் தொடங்கப்பட்டது. நீர்த் தேக்கம் பழுது பார்த்தல், மறுசீரமைப்பது, நீர்த் தேக்கத்தை மீண்டும் பெறுவது போன்றவை இந்தியாவில் 16 மாவட்டங்களில் 700 நீர்த் தேக்கங்கள் வழியாகச் செயல்படுத்தப்பட்டது. இதனால் 20000 ஹெக்டேர் விளைநிலங்கள் பயனடைந்தது (GoI 2005).
இந்திய விவசாயிகள், நிதி நிறுவனங்கள், கூட்டுறவு, தனிநபர், உறவினர்கள்;, முகவர்கள், வண்டிக்காரர்கள், வியாபாரிகள் போன்ற ஆதாரங்களின் வழியாக அதிக அளவிற்குக் கடன் பெற்று வேளாண் சாகுபடி செய்பவர்களாக இருக்கின்றனர். 1951-61ல் கிராமப்புறக் கடனில் 75 விழுக்காடு முறைசாரா வழியாக அதிக வட்டிக்கு வண்டிக்காரர்களிடம் பெற்றிருந்தனர். இதனைப் போக்க 1969, 1980ல் இந்திய அரசு வங்கிகளை தேசியமயமாக்கியது. இதன் விளைவு 1991ல் இவ்வகைக் கடன் 25 விழுக்காட்டிற்குக் கீழ் குறைந்தது. ஆனால் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டபின் முறைசார் (நிறுவனக் கடன்) திடீரென வீழ்ச்சியடைந்தது. 1992ல் நரசிம்மம் குழுவின் பரிந்துரையான வேளாண்மைக்கு “இலக்கின் முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்குதல்” பரிந்துரைக்கப்பட்டதால், விவசாயிகள் அதிக வட்டிக்கு முறைசாரா வழியாக மீண்டும் கடன் பெறத் தொடங்கினர். அரசு அளித்த வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை அவர்களின் சாகுபடி செலவை எதிர்கொள்ள முடியாத நிலையே இருந்தது. இதனால் விவசாயிகள் மேலும் அதிகமாகக் கடன் பெறத் தொடங்கினர். எனவே, ஐ.மு.கூட்டணி அரசானது 2004-05 முதல் 2007-08 முடிய வேளாண் கடன் வழங்கலை இரட்டிப்பு ஆக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 2003ல் வேளாண் குடிகளில் கடன்பட்டோர் 48.6 விழுக்காடாக இருந்தது 2013ல் 51.9 விழுக்காடாக அதிகரித்தது. இக் கடன் நிலை மாநிலங்களுக்கிடையே பெருத்த வேறுபாட்டுடன் காணப்பட்டது. கடன்பட்ட விவசாயிகளின் பங்கானது உச்ச அளவாக ஆந்திரப் பிரதேசத்தில் 93 விழுக்காடாகும். தேசிய அளவில் வேளாண் குடிகளில் கடன் பெற்றோரில் 60 விழுக்காட்டினர் நிறுவனம் சார் கடனாளிகள் ஆவார்கள். விவசாயப் பணிகள் மேற்கொள்ளக் குறைந்த வட்டியில் குறுகிய கால கடன் வழங்க 1998ல் கிசான் கிரெடிட் அட்டை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியானது உள்ளடக்கிய நிதி முறையினைப் பின்பற்றியதால் ஐ.மு.கூட்டணி ஆட்சியின் இறுதியில் (2013ல்) விவசாயிகளுக்கு 392 லட்சம் கடன் அட்டைகள் வழங்கப்பட்டது. இவர்கள் பெறும் கடனைச் சரியான தவணைக்குள் திருப்பிச் செலுத்தப்பட்டால் பூஜ்ய வட்டி என்று அறிவிக்கப்பட்டது. அரசின் விவசாயிகளுக்குக் கடன் வழங்கும் திட்டம் சீரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டதன் விளைவு 2003ல் வேளாண் குடிகளின் சராசரிக் கடன் ரூ.12885லிருந்து 2013ல் ரூ.47000ஆக அதிகரித்தது. இந்த வளர்ச்சியானது 375 விழுக்காடாக இருந்தது குறிப்பிடத்தக்கது (Sher Singh Sangwan 2015).
2008-09ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் விவசாயிகள், நெசவாளர்களின் கடன் ரூ.6000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் 3 கோடி சிறு, குறு விவசாயிகள் பயனடைந்தனர். தேசிய விவசாயக் கொள்கை செப்டம்பர் 2007ல் தேசிய விவசாயக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. 2007-08ல் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகவர் விரிவாக்கத் திட்டம் 300 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2007-08ல் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் துவக்கப்பட்டது. இதன்படி வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிக்கக் கோதுமை, நெல், பருப்பு உற்பத்தியை 10 மில்லியன் டன், 8 மில்லியன் டன், 2 மில்லியன் டன் என்று முறையே 11வது திட்ட கால முடிவிற்குள் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தேசிய தோட்டக்கலை இயக்கம் மே 2005ல் தொடங்கப்பட்டது. இதன்படி தோட்டக்கலை வட்டார அணுகுமுறையின் அடிப்படையில் உற்பத்தியினை அதிகரிப்பது, ஊட்டச்சத்து உறுதியினை சாத்தியமாக்குவது, வேளாண் குடிகளின் வருமானத்தை உயர்த்துவது போன்றவை முன்னெடுக்கப்பட்டது. மார்ச் 2005ல் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகவர் திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி மாநில அரசுகளுக்கு தொழில்நுட்ப விரிவாக்கத்திற்கு உதவி செய்தது. மார்ச் 2006ல் தெளிப்பு நீர் மற்றும் சொட்டு நீர்ப் பாசனத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி நாடு முழுவதும் 3.4 லட்சம் ஹெக்டேர் பயனடைந்தது. அக்டோபர் 2006ல் தேசிய மூங்கில் இயக்கம் தொடங்கப்பட்டது இதன்படி மூங்கில் உற்பத்தியினை விளைவித்து வேலைவாய்ப்பை உருவாக்க முனைந்தது. 1996-97ல் தொடங்கப்பட்ட விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மையளிக்கும் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து டிசம்பர் 2006 முதல் புதிய வழிகாட்டுதலுடன் நடைமுறைப்படுத்தப்பட்டது. தேசிய நீர்த் தேக்கங்கள் பழுதுபார்த்தல், மறுசீரமைத்தல், புதுப்பித்தல் திட்டம் 2005ல் ரூ.300 கோடியில் தொடங்கப்பட்டது. தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் ஆகஸ்ட் 2007ல் தொடங்கப்பட்டது. தேசிய விவசாய மேம்பாட்டுத் திட்டம் ஆகஸ்ட் 2007ல் வேளாண் வளர்ச்சியினை அதிகரிக்க ரூ.2500 கோடி செலவில் தொடங்கப்பட்டது. எண்ணெய் வித்துக்களுக்கான தொழில்நுட்ப இயக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் விளைவு 1980கள் மற்றும் 1990களின் முற்பகுதியில் விளைச்சல் விரைவான அதிகரிப்பை அடைந்தது. ஆனால் 1990களில் வர்த்தகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் சமையல் எண்ணெய் அதிகமாக இறக்குமதியானது இதனால் உள்நாட்டில் எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் விவசாயிகள் இழப்பினை எதிர்கொண்டனர், சாகுபடி செய்யும் விளைநிலப் பரப்பும் குறையத் தொடங்கியது. மீண்டும் 2001ல் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் வித்துக்கள் மீது வரி விதித்ததால் சமையல் எண்ணெய் விலை உயர்வடைந்தது. இதன் தொடர்ச்சியாக விவசாயிகள் எண்ணெய்வித்துக்கள் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டினர். 2010-11ல் இறக்குமதிக்கான சமையல் எண்ணெய் மீது வரிவிதித்தது இதனால் உள்நாட்டில் எண்ணெய் வித்துக்களின் சாகுபடிப் பரப்பு அதிகரித்தது.
Source: Government of India (2016): Indian Public Finance Statistics 2015-2016,” Ministry of Finance, Department of Economic Affairs, Economic Division.
Source: GBGA (2013) “How has the Dice Rolled: Response to Union Budget 2013-14,” Centre for Budget and Governanace accountability, New Delhi, www.cbgaindia.org.
ஐ.மு.கூட்டணி அரசானது கிராமப்புற மேம்பாட்டிற்குப் பல்வேறு திட்டங்களை நடைமுறைப் படுத்தியது. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி சட்டம், பிரதான மந்திரி அவாஸ் யோஜனா, பிரதான மந்திரி கிராம சதக் யோஜனா, தேசிய சமுதாய உதவி திட்டம், தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம் போன்றவை கிராமப்புற மேம்பாட்டிற்கு மன்மோகன் சிங் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டது (Amit Basole 2017). ராஷ்டிரிய கிரிஷ் விகாஸ் யோஜனா திட்டம் 2007ஆம் ஆண்டு விவசாயம் சார்ந்த துறைகளிலிருந்து வருகின்ற வருமானத்தை ஆண்டுக்கு 4 விழுக்காடு அளவிற்கு உயர்த்த கொண்டுவரப்பட்டது. இதற்கான ரூ.25000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. விதை, உரம், தோட்டக்கலை, வேளானமை இயந்திரமயமாக்கல், வேளாண் விரிவாக்கம், பயிர்ச் சாகுபடி, சந்தைப் படுத்துதல், பரிசோதனை ஆய்வகம், நீர்ப்பாசனம், வேளாண் ஆராய்ச்சி, நீர்த் தேக்கம் மற்றும் கூட்டுறவு போன்றவற்றின் மீதான மேம்பாட்டிற்கு கவனம் செலுத்துவதற்காக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. கிராமப்புறங்களில் தொடர் வேலை என்பது இயலாத நிலையினை உணர்ந்து தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டம் செப்டம்பர் 2005ல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இத் திட்டம் பிப்ரவரி 2, 2006ல் நாட்டில் முதல்கட்டமாக 200 மாவட்டங்களில் ரூ.11300 கோடி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2009ல் இத்திட்டத்தை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இத்திட்டம் கிராமப்புறத்தில் திறன் குன்றிய உழைப்பாளர்களுக்கு ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலைவாய்ப்பினை அளிப்பதை நோக்கமாக்க கொண்டது. இத் திட்டத்தினால் கிராமப்புற உள்கட்டமைப்பு வலுப்படுத்தக் குறிப்பாக நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதை முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. இத் திட்டத்தில் சம்பூர்ணா கிராமின் ரோஜ்கர் யோஜனா திட்டமும், உணவுக்கு வேலைத் திட்டமும் ஒன்றாக இணைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. 2007-08ல் இத் திட்டம் 330 மாவட்டங்களிலும், 2008-09ல் 596 மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் வழியாக ஐ.மு.கூட்டணி ஆட்சி காலத்தில் 2006-07ல் 90.5 கோடி மனித வேலைநாட்கள் உருவாக்கப்பட்டது. 2009-10ல் இது 283.6 கோடியாகவும், 2013-14ல் இது 220.4 கோடியாகவும் அதிகரித்தது (Ashok Pankaj 2017). இத்திட்டத்தைக் கிராமப்புற பஞ்சாயத்துகள் வழியான நடைமுறைப்படுத்தப்பட்டது. ஐ.மு.கூட்டணி அரசானது 2004ல் முதல் முறையாக பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தைத் துவக்கி கிராமப்புற மேம்பாட்டிற்கும் தனிக் கவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது (GBGA 2009). கால்நடைகள் வேளாண்மை வளர்ச்சிக்கும், கிராமப்புற வருமான பெருக்கத்திற்கும் முக்கிய பங்காற்றுவதால் 2013-14ல் தேசிய கால்நடை இயக்கம் ரூ.307 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. 2014ல் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கம் தொடங்கப்பட்டது. இதன்படி பழங்கள், காய்கறிகள், காளான், பூக்கள், நறுமணப் பொருட்கள், மரங்கள் போன்றவை வளர்ப்பதாகும். இதன்படி 11வது திட்டக் காலத்தில் இவற்றை பயிரிட 23.4 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்களை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டது. 2012ல் சி.ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தியாவின் சர்க்கரை துறை முறைப்படுத்துதல் அறிக்கையின்படி கரும்பு விவசாயிகள் பயனடையும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் முக்கியமானது, சர்க்கரையைக் கொள்முதல் செய்து பொது விநியோக முறையில் மக்களுக்கு வழங்கப்படவேண்டும் என்பதாகும். 2010-11ல் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் பசுமைப் புரட்சியை நடைமுறைப்படுத்த ரூ.400 கோடி 2010-11 மற்றும் 2011-12ஆம் ஆண்டுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது, இது 2012-13ல் ரூ.1000 கோடியாக அதிகரித்தது (GoI 2013).
விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்து வருவதைத் தடுப்பதற்காகப் பேரா.ராதாகிருஷ்ணன் தலைமையில் கிராமப்புற கடன் நிலைக்கான வல்லுநர் குழு 2006ல் அமைக்கப்பட்டது.
இக்குழு ஜூலை 2007ல் தனது அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்தது. அதில் அளவுக்கு அதிகமான மக்கள் வேளாண்மையினைச் சார்ந்திருக்கின்றனர், கிராமப்புறம் தொடர்ந்து பெருமளவிற்கு பன்முகமடையாமல் உள்ளது, தலா வேளாண் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது, பாசனத்திற்கான தண்ணீரின் தேவை அதிகரித்து வருகிறது, வட்டார ஏற்றத் தாழ்வு அதிகரிப்பு, கடன் இருப்பில் பற்றாக்குறை, வேளாண்மையின் மீதான பொதுத் துறை முதலீடு போதுமான அளவிற்கு இல்லாமல் உள்ளது, குறைவான தொழில்நுட்ப பயன்பாடு, சுற்றுப்புறச் சூழல் பாதிப்படைந்திருப்பது போன்ற அறைகூவல்களை இந்திய வேளாண்மை சந்திக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. இந்த அடிப்படையில் பிரதம மந்திரி தொகுப்பை நாட்டில் 31 மாவட்டங்களில் ரூ.28000 கோடிக்கு அடுத்த மூன்றாண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தியது (GoI 2007). 2007-08ல் கிராமப்புறத்தில் உள்ள நிலமற்ற குடும்பங்களுக்கான சமூகப் பாதுகாப்பு திட்டமான ஆம் ஆத்மி பீமா யோஜனா தொடங்கப்பட்டது. வேளாண் துறையின் வளர்ச்சி ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. 2009ல் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை, 2010-11ல் சில மாநிலங்களில் வறட்சி, 2012-13ல் தாமதமான பருவ மழை போன்ற நிலை நிலவியது. அதே சமயம் எப்போதும் இல்லாத அளவாக 2011-12ல் உணவு தானியம் 259.32 மில்லியன் டன் உற்பத்தியானது. எட்டாவது திட்ட காலத்தில் வேளாண் வளர்ச்சி சராசரியாக 4.8 விழுக்காடும், 9வது திட்டத்தில் 2.5 விழுக்காடும், 10வது திட்டத்தில் 2.4 விழுக்காடும், 11வது திட்ட காலத்தில் 3.6 விழுக்காடும் இருந்தது (GoI 2013) எனவே நீடித்த வேளாண் வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு 12வது திட்டக் காலத்தில் ஆண்டுக்கு 4 விழுக்காடு வேளாண் வளர்ச்சியினை உறுதிசெய்ய முடிவெடுத்தது. ஆனால் இத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு ஐ.மு.கூட்டணி ஆட்சி முடிவுற்றதால் இதனை நடைமுறைப்படுத்த இயலவில்லை.
இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்த நடைமுறைக்குப் பிந்தைய காலங்களில் பல முதன்மைப் பயிர்களின் உற்பத்தியும், உற்பத்தித் திறனும் 1980களில் அதிகரித்திருந்தது. ஆனால் 2001 – 2010ஆம் ஆண்டுகளுக்கிடையே பருப்பு மற்றும் பருத்தியின் உற்பத்தியும், உற்பத்தித் திறனும் அதிகரித்தது. நெல், சர்க்கரை, கோதுமை உற்பத்தியும், உற்பத்தித் திறனும் 1980களுடன் ஒப்பிடும்போது 1990களில் அதிகரித்திருந்தது. பருத்தி உற்பத்தி 2000-01 மற்றும் 2009-10ஆம் ஆண்டுகளுக்கிடையே அதிக வளர்ச்சியை அடைந்ததற்கு முக்கியக் காரணம் பி.டி.பருத்தி ரக தொழில்நுட்பமாகும். ஆனால் இதனைச் சாகுபடி செய்ய அதிக செலவும், இடரும் இருந்ததால் 2010-11 மற்றும் 2015-16ல் உற்பத்தி வளர்ச்சி, உற்பத்தித் திறன் குறைந்தது.
அட்டவணை: வேளாண்மை செயல்பாடுகள் (விழுக்காடு)
விவரங்கள் | 1981-82 முதல் 1989-90 வரை | 1990-91 முதல் 1999-00 வரை | 2000-01 முதல் 2009-10 வரை | 2010-11 முதல் 2013-14 வரை |
வேளாண் வளர்ச்சி | 2.9 | 2.8 | 2.4 | 2.1 |
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி | 4.7 | 5.3 | 6.8 | 3.7 |
மொத்த நீர்பாசன பரப்பு வளரச்சி | 2.07 | 2.28 | 1.11 | 1.36 |
உணவு தானிய உற்பத்தி வளர்ச்சி | 2.8 | 1.79 | 1.03 | 0.66 |
Source: Shantanu De Roy (2014): “Economic Reforms and Agricultural Growth in India,” Economic and Political Weekly, Vol 52 (9). Pp 67-72.
அட்டவணை: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் வேளாண்மையின் போக்கு
விவரங்கள் | 2003-04 | 2004-05 | 2005-06 | 2006-07 | 2007-08 | 2008-09 | 2009-10 | 2010-11 | 2011-12 | 2012-13 | 2013-14 |
உண்மை வேளாண் வளர்ச்சி | 9.0 | 0.2 | 5.1 | 4.2 | 5.8 | 0.1 | 1.0 | 7.7 | 3.6 | 1.8 | 3.7 |
ஜிடிபி-க்கு வேளாண்மையின் பங்கு | 20.3 | 19.0 | 18.3 | 17.4 | 16.8 | 15.8 | 14.7 | 14.5 | 14.1 | 13.7 | 13.9 |
வேளாண்யின் மூலதன ஆக்கம் (ஜிடிபி-யில் மூ) | 2.1 | 2.1 | 2.2 | 2.2 | 2.3 | 2.7 | 2.6 | 2.3 | 2.4 | NA | NA |
உணவு தானிய உற்பத்தி (மி.ட) | 213 | 198 | 209 | 217 | 231 | 236 | 218 | 245 | 259 | 255 | 266 |
தலா உணவு தானிய இருப்பு (கிராம்) | 438 | 463 | 422 | 445 | 443 | 436 | 444 | 437 | 454 | 450 | 401 |
குறைந்த பட்ச ஆரவு விலை(ரூ) நெல் (சாதாரணம்) கோதுமை | 550 630 | 560 540 | 570 700 | 620 850 | 745 1000 | 900 1080 | 1000 1000 | 1000 1170 | 1080 1285 | 1250 1350 | NA NA |
Source: GoI (2017): “Economic Survey 2016-17,” Ministry of Finance, Government of India.
அட்டவணை: ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒப்பீடு
ஆண்டு சராசரி | தேஜகூ (1998-04) | ஐமுகூ-I (2004-09) | ஐமுகூ-II (2009-13) | ஐமுகூ (2004-13) |
உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (%) | 5.9 | 8.0 | 7.0 | 7.6 |
பொதுப் பணவீக்கம் (தொழிற்சாலைப் பணியாளர்கள்) (%) | 5.4 | 6.1 | 10.4 | 8.1 |
உணவுப் பணவீக்கம் (தொழிற்சாலைப் பணியாளர்கள்) (%) | 4.2 | 7.0 | 11.6 | 9.0 |
நிதிப்பற்றாக்குறை (ஜிடிபி யில் % ஆண்டுக்கு) | 5.5 | 3.9 | 5.5 | 4.6 |
அந்நியச் செலாவணி வரத்து (பில்லியன் டாலர்) | 2.85 | 15.44 | 16.19 | 20.22 |
வேளாண்மைக்கான விவசாயக் கடன் வளரச்சி (%) | 135.97 | 140.93 | 132.90* | 307.81* |
உணவு தானிய உற்பத்தி (%) | 202 | 218 | 244 | 229.6 |
குறிப்பு: * 2011-12 வரை
Source: Maitreesh Ghatak, Parikshit Ghosh, Ashok Kotwal (2014): “Growth in the Time of UPA – Myths and reality,” Economic and Political Weekly, Vol 49 (16), pp 34-43 and
http://www.rgics.org/sites/default/files/Facts-NDA-UPA.pdf.
Source: Shantanu De Roy (2014): “Economic Reforms and Agricultural Growth in India,” Economic and Political Weekly, Vol 52 (9). Pp 67-72.
ஒப்பீட்டு அளவில் பொருளாதார வளர்ச்சியானது தே.ஜ.கூட்டணி ஆட்சியில் 5.9 விழுக்காடாக இருந்தது, ஐ.மு.கூட்டணி ஆட்சியின் முதல் காலகட்டத்தில் 8.0 விழுக்காடாகவும், இரண்டாவது காலகட்டத்தில் 7.0 விழுக்காடாகவும், ஒட்டுமொத்தமாக 7.6 விழுக்காடாகவும் இருந்தது. பொருளாதார வளர்ச்சியானது தே.ஜ.கூட்டணி ஆட்சியைவிட ஐ.மு.கூட்டணி அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கடைசி ஆண்டான 2012-13ல் பொருளாதார வளர்ச்சி அதிக அளவில் குறைந்தது. தொழில் மற்றும் சேவைத் துறையின் வளர்ச்சியானது ஐ.மு.கூட்டணி ஆட்சிக்காலத்தில் தே.ஜ.கூட்டணியின் ஆட்சியைவிட செயல்பாடுகள் சிறந்து காணப்பட்டது. ஆனால் உணவு பணவீக்கம், தே.ஜ.கூட்டணி அரசியைவிட (4.2 விழுக்காடு) ஐ.மு.கூட்டணி அரசில் (9.0 விழுக்காடு) அதிகமாக இருந்தது. ஆனால் அந்நியச் நேரடி முதலீடானது தே.ஜ.கூட்டணி ஆட்சியில் ரூ.2.35 பில்லியன் டாலராக இருந்தது ஐ.மு.கூட்டணி ஆட்சியில் 20.22 பில்லியன் டாலராக அதிகரித்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மானியமானது தே.ஜ.கூட்டணி ஆட்சியில் 1.6 விழுக்காடாக இருந்தது ஐ.மு.கூட்டணி ஆட்சியில் இது 2.6 விழுக்காடாக அதிகரித்தது. இதுபோல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் அளவு தே.ஜ.கூட்டணி ஆட்சியில் 50 விழுக்காடாக இருந்தது ஐ.மு.கூட்டணி ஆட்சியில் 61 விழுக்காடாக அதிகரித்தது. ஐ.மு.கூட்டணி அரசு பதவி ஏற்றபோது வேளாண்மை மீதான பொது-தனியார்-பங்கேற்பு முதலீடானது 2003-04ல் 20:80ஆக இருந்தது 24:76 என்று 2013-14ல் மாற்றம் அடைந்தது. மொத்த வேளாண்மைக்கான முதலீட்டில் பொதுத்துறை 20 முதல் 25 விழுக்காடு என்ற வீச்சில் 2003-04 மற்றும் 2013-14ஆம் ஆண்டுகளுக்கிடையே இருந்தது. நீர்ப்பாசனமும் உணவு உற்பத்தியும் நேர்மறைத் தொடர்புடையது. 1980ல் நீர்பாசனப் பரப்பளவு அதிகமாக அதிகரித்திருந்தது ஆனால் 1990களில் இது குறைவான அளவிற்கே உயர்ந்தது. இதற்கு முக்கியக் காரணம் பொதுத் துறை முதலீடு நீர்ப்பாசனத்திற்குக் குறைவான நிதி ஒதுக்கீடு செய்ததாகும். மொத்த உற்பத்தியில் நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டிற்கு 2005-06ல் 0.8 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட்டது 2013-04ல் இது 0.6 விழுக்காடாகக் குறைந்தது. இது போல் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான ஒதுக்கீடு 1998-99ல் ஜி.டி.பியில் 0.44 விழுக்காடாக இருந்தது 2011-12ல் இது 0.32 விழுக்காடாகக் குறைந்தது. இதே ஆண்டுகளில் வேளாண் விரிவாக்கத்திற்கு 0.15 விழுக்காடாக இருந்தது 0.05 விழுக்காடாகக் குறைந்தது (Shantanu De Roy 2017).
உணவு விலையானது தே.ஜ.கூட்டணி ஆட்சியில் மெதுவாக அதிகரித்தது ஆனால் ஐ.மு.கூட்டணி ஆட்சியில் இது வேகமாக அதிகரித்துக் காணப்பட்டது. குறைந்த பட்ச ஆதரவு விலையானது ஐ.மு.கூட்டணி காலத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் 2005-06 மற்றும் 2013-14ஆம் ஆண்டுகளுக்கிடையே நெல்லுக்கு 11.3 விழுக்காடும், கோதுமைக்கு 10.1 விழுக்காடும், கரும்புக்கு 12.9 விழுக்காடும், பருத்திக்கு 9.2 விழுக்காடும் உயர்த்தி வழங்கப்பட்டது (Krishnasamy et al 2015). மேலும் இக் காலகட்டத்தில் 650 லட்சத்திற்கு மேல் விவசாயிகள் கடன் பெற்றனர். உணவிற்கான மானியம் மூன்று மடங்கு அதிகரித்தது. உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி 35 கிலோ உணவு தானியம் ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. ஐ.மு.கூட்டணியில் தலா வருமானம் மூன்று மடங்கு அதிகரித்தது. இரண்டு லட்சம் கி.மீட்டருக்குமேல் கிராமப்புற சாலைகள் கட்டமைக்கப்பட்டது. வறுமையானது ஆண்டுக்கு 2 விழுக்காடு குறைந்தது (Govardhana Naidu 2016). ஐ.மு.கூட்டணி ஆட்சிக்காலத்தில் வேளாண் வருமானம் 2004-05 மற்றும் 2011-12ஆம் ஆண்டுகளுக்கிடையே 5.36 விழுக்காடு அதிகரித்தது. குறிப்பாக வேளாண் சாகுபடியாளர்களின் வருமானம் 7.29 விழுக்காடு இதே காலகட்டத்தில் அதிகரித்திருந்தது (Ramesh Chand et al 2015).
ஐ.மு.கூட்டணி அரசில் எரிசக்தி உருவாக்கம், சாலைக் கட்டமைப்பு, ரயில் கட்டமைப்பு, கனிம வளங்களை எடுத்தல், தொலைத் தொடர்பு விரிவாக்கம் போன்ற முக்கியக் கட்டமைப்பின் மீது முதலீடுகள் செய்யப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பதியல் உள்கட்டமைப்பின் மீதான முதலீடு 4.76 விழுக்காடாக தே.ஜ.கூட்டணியில் இறுதி காலமான 2003-04ல் இருந்தது 2008-09ல் 7.32 விழுக்காடாகவும், 2010-11ல் 8.4 விழுக்காடாகவும் ஐ.மு.கூட்டணி ஆட்சியில் அதிகரித்தது. ஐ.மு.கூட்டணி ஆட்சிக் காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உள்கட்டமைப்பின் மீதான முதலீடு 7-8 விழுக்காடு அளவிலிருந்தது ஆனால் இது தே.ஜ.கூட்டணி ஆட்சியில் 5 விழுக்காடாக இருந்தது குறிப்பிடத்தக்கது. உள்கட்டமைப்பை ஏற்படுத்த அதிக அளவிலான வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள், கிராமப்புற ஏழைகள், பழங்குடியினரிடையே பெரும் கொந்தளிப்பு உருவானது. அதே நேரம், ஏழைகள் பெருமளவிற்குக் குறைந்தனர். 1993-94 மற்றும் 2004-05ஆம் ஆண்டுகளுக்கிடையே ஆண்டுக்கு 0.74 விழுக்காடு ஏழ்மை குறைந்தது ஆனால் இது 2004-05 மற்றும் 2011-12ஆம் ஆண்டுகளுக்கிடையே ஆண்டுக்கு 2.18 விழுக்காடு ஏழைகள் குறைந்தனர், குறிப்பாக இது கிராமப்புறங்களில் 0.75 விழுக்காடு மற்றும் 2.32 விழுக்காடு என்று முறையே குறைந்தது குறிப்பிடத்தக்கது (Maitreesh Chatak et al 2014).
பொருளாதார சீர்திருத்தமானது வேளாண்மையில் சிறிய அளவில் பயிர் தொழிலில் ஈடுபட்டவர்களைப் பெரிதும் பாதித்து. கிராமப்புற உள்கட்டமைப்பு மீது பொதுத்துறை முதலீடு குறைந்தது, குறிப்பாக நீர்ப்பாசனம், வேளாண் ஆராய்ச்சி, வேளாண் விரிவாக்கம், சிறு விவசாயிகளுக்குக் கொடுக்கும் கடன் குறைந்தது போன்றவை வேளாண் செயல்பாட்டை வலுவிழக்கச் செய்தது. 2011-12ல் வேளாண்மையை 59 விழுக்காடு ஆண் உழைப்பாளர்களும், 75 விழுக்காடு பெண் உழைப்பாளர்களும் சார்ந்திருந்தனர். உயர் பொருளாதார வளர்ச்சி கிராமப்புற வறுமையைக் குறைக்கக் கூடியதாகும். வேளாண் வளர்ச்சி 2விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடு வரை அதிகரித்து இத்துடன் பொருளாதாரமும் 9 விழுக்காடு அதிகரித்தால் வேளாண் சார் துறைக்கும் வேளாண் சாரத் துறைக்கும் உள்ள வருமான இடைவெளியினை குறைக்கும் என்று திட்டக்குழு (2006ல்) கணித்துள்ளது. வேளாண்மையின் வளர்ச்சியானது 1981-82 முதல் 1989-90க்கும் 2010-11 முதல் 2013-14க்குமிமையே அதிக அளவில் குறைந்துள்ளது. வேளாண்மையின் முக்கியப் பயிர்கள் சீர்திருத்தக் காலங்களுக்குப்பின் பொதுவாகக் குறைந்த அளவு வளர்ச்சி காணப்படுகிறது (Shantanu De Roy 2017).
இந்தியப் பொருளாதாரத்தை பொருத்த அளவில் வேளாண்மையினை உள்ளடக்கிய முதன்மைத் துறையானது மற்ற இரு துறைகளான தொழில் மற்றும் சேவையைவிட மிகவும் பின்தங்கியதாகவும், அதிக பாதிப்பினை உடையதாகவும் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. அதே சமயம் வேளாண்மை சார் வேiவாய்ப்பு மற்றும் உற்பத்தியும் திடமான முன்னேற்றம் கண்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள வேளாண் குடிகள் 70 விழுக்காட்டினர் போதுமான வருமானமின்றி வாழ்ந்து வருகின்றனர். வேளாண் சாராத துறையானது கிராமப்புற வேலைவாய்ப்பை உருவாக்குவதில் தொடர்ந்து முக்கியப் பங்காற்றுகிறது. ஆனால் வேளாண் சார் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. கிராமப்புறங்களில் 2005ல் வேளாண் சாரா வேலைவாய்ப்பு 27 விழுக்காடாக இருந்தது 2010ல் 32 விழுக்காடாகவும், 2015ல் 42 விழுக்காடாக அதிகரித்தது. வேளாண்மை மூலம் போதுமான வருமானம் ஈட்ட முடியாதல் 52 விழுக்காடு வேளாண் குடிகள் கடனாளிகளாக உள்ளனர். இவர்கள் சராசரியாக ரூ.47000 கடனை உடையவர்களாக உள்ளனர். தொழிலாளர் அமைச்சகத்தின் கணக்கின்படி 76.9 விழுக்காடு கிராமப்புற குடிகள் மாதம் ரூ.10000 வருமானம் பெறுகின்றனர். 90 விழுக்காட்டுக் கிராமப்புறக் குடிகள் குறிப்பாக விவசாயிகள், கைவினைஞர்கள் அரசின் குறைந்தபட்ச கூலியினைக்கூட பெறமுடியாத நிலையில் உள்ளனர். தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி வேளாண்மை மூலம் பெறும் வருமானம் 2003ல் ரூ.1060 ஆக இருந்தது 2013ல் ரூ.3844 ஆக அதிகரித்தது. இந்தியாவில் தற்போது 30 விழுக்காடு வேளாண் குடிகள் வண்டிக்காரர்கள், வணிகர்களிடம் கடன் பெற்றுள்ளனர் (Amit Basole 2017). இந்தியாவின் வேளாண்மையின் வழியாக பெரும் வருமானமானது 2004-05ல் ரூ.434160 கோடியாக இருந்தது 2011-12ல் ரூ.1144363 கோடியாக அதிகரித்தது. அதேசமயம் வேளாண் சார் தொழிலாளர்களின் எண்ணிக்கையானது 9.27 கோடியிலிருந்து 7.82 கோடியாகவும், வேளாண் சாகுபடியாளர்களின் எண்ணிக்கை 16.61 கோடியிலிருந்து 16.62 கோடியாகவும் இவ் ஆண்டுகளில் குறைந்துள்ளது (Ramesh Chand et al 2015).
மன்மோகன் சிங்கின் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசு பணவீக்கம், பன்னாட்டு நிதி சிக்கல், எரிபொருள் விலை ஏற்றம், உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, அதிக வட்டி வீதத்தினால் முதலீட்டில் பின்னடைவு, ஊழல் போன்ற நிகழ்வுகள் காணப்பட்டது. அதே சமயம் கிராமப்புற வேலை வாய்ப்பு உருவாக்கம், கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு, நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், உணவு பாதுகாப்புச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம், கிராமப்புற சுகாதார இயக்கம், தகவல் அறியும் சட்டம், தொழில்நுட்ப மேம்பாடு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு முன்னுரிமை போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டது. (Anil Padmanabhan 2014). இந்திப் பொருளாதாரம் சேமிப்பு மற்றும் முதலீடு அதிகரித்தது, பொருளாதார கட்டுப்பாடு இல்லாமல் தடையற்றதாக இருந்தது, வறுமை துல்லியமாக்கக் குறையத் தொடங்கியது, உள்கட்டமைப்புகள் அதிக வேகமெடுத்தது போன்றவை பல்வேறு தளங்களில் இந்தியாவை முன்னோக்கி அழைத்துச் சென்றது (Maitreesh Ghatak et al 2014). ஒப்பீட்டு அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைவிட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அனைத்து பேரியல் பொருளாதார நிலைகளில் சிறந்ததாக இருந்தது.
1991ல் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கம், துரிதமான பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக திறனை அடைவது என்ற இரட்டை இலக்கைக் கொண்டதாக இருந்தது. இதனைக் கட்டுப்பாடற்ற சந்தை வழியாக அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் உற்பத்தித் திறன் அதிகமானது. 1991ல் பொருளாதாரச் சீர்திருத்தின பிந்தைய நிலைகளில் பொருளாதார வளர்ச்சி வேகமெடுத்தது. 2003-04க்கு பிந்தைய ஐந்தாண்டுக் காலத்தில் 10 விழுக்காட்டிற்குச் சற்றே குறைவான வளர்ச்சியினை கண்டது. ஆனால் 2008ல் ஏற்பட்ட உலக நிதிச் சிக்கல் இந்த உயர் வளர்ச்சியினை முடிவிற்குக் கொண்டுவந்தது. இதனால் நீடித்த தொழிற் கொள்கை, வர்த்தகக் கொள்கை போன்றவை உற்பத்தித் துறையினைக் குறிவைத்து உருவாக்கப்பட்டது. ஆனால் சேவைத் துறை விரைந்த வளர்ச்சியினை பெற்றது. வேளாண் துறையினைப் பொருத்தமட்டில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டதுமட்டுமல்ல மக்கள் தொகை உயர்விற்கு ஏற்ற வகையில் உணவு உற்பத்தி அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இக்காலத்தில் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு உணவு தானிய தலா கையிருப்பானது குறைந்தது. இதற்கான காரணம், தாராளமயமாக்கப்பட்ட சந்தை மற்றும் தொழில், சேவைத் துறைகளுக்குக் கொடுத்த முக்கியத்துவம் வேளாண்மைக்கு அளிக்கப்படவில்லை என்பதாகும்.
இந்திய வேளாண்மை அதிக அளவில் பருவ மழையை நம்பி உள்ளது. பருவமழையில் ஏற்றத் தாழ்வு ஏற்படுவதால் நிலத்தடி நீர் பெருமளவிற்கு உரியப்படுகிறது. நீர்ப்பாசன ஆதாரங்களான ஆழ்துளைக் கிணறு, கிணறு போன்றவற்றுக்கு அதிக செலவு ஏற்படுவதால் விவசாயிகள் கடன் பொறியில் சிக்குகின்றனர். இரண்டாம் கட்ட பசுமைப் புரட்சியானது நவீனத் தொழில்நுட்ப பயன்பாட்டுடன் தொடர்புடையது. இதனை அதிக அளவில் உள்ள குறு, சிறு விவசாயிகளால் மேற்கொள்ளாதது வேளாண்மையின் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அன்மைக் காலமாக பல்வேறு காரணங்களினால் மண் வளம் நிறைந்த பகுதியில்கூட உற்பத்தித் திறன் குறைந்து வருகிறது. வேளாண்மை மீதான பொதுத் துறை முதலீடு குறைந்து காணப்படுவது போன்றவை வேளாண் துறையின் செயல்பாடுகளில் பிற்போக்கான நிலை உள்ளதற்கான காரணங்களாகக் கண்டறியப்படுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதல் கட்ட ஆட்சியில் சிறப்பான பல அம்சங்கள் வேளாண்மையை மேம்படுத்தக் கொண்டுவரப்பட்டது அதன் வளரச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் இரண்டாம் கட்ட ஆட்சிக் காலத்தில் இதற்கான முன்னெடுப்பு குறைவாகவே இருந்தது. அளவுக்கு அதிக உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான கவனம் செலுத்தப்பட்டதால், வேளாண் விளைநிலங்கள் அதிக அளவில் கையகப்படுத்தப்பட்டது. இது விவசாயிகளின் மத்தியில் பெரும் எதிர்ப்பினை உருவாக்கியிருந்தது. இதுவே ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கான வாட்டர்லூ வாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
– பேரா.பு.அன்பழகன்
இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @ 75 : தொடர் – 12 தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (அடல் பிஹாரி வாஜ்பாய்) வேளாண்மைக்கான கிராமப்புற உள்கட்டமைப்பும் – பேரா.பு.அன்பழகன்
பொருளாதாரச் சீர்திருத்தங்கள், பாபர் மசூதி இடிப்பு, பம்பாய் தொடர் குண்டு வெடிப்பு, மண்டல் குழு பரிந்துரையை நடைமுறைப் படுத்தப்பட்டது போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கிடையே 1996ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) தனித்து 161 இடங்களில் வெற்றிபெற்றது இதனைத் தொடர்ந்து அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசு மே 16,1996ல் பதவி ஏற்றது ஆனால் அரசுக்குப் போதுமான எம்.பிகளின் ஆதரவு இல்லை என்பதால் மே 31,1996ல் ஆட்சியினை இழந்தது. இவர் மொத்தமாக 13 நாட்கள் மட்டுமே இக்காலகட்டத்தில் பிரதமராக இருந்துள்ளார். அடுத்து பிரதமராகப் பதவி ஏற்ற எச்.டி.தேவ களொடா, ஐ.கே.குஜரால் ஆட்சிகள் அரசியல் நெருக்கடியினால் குறுகிய காலமே நீடித்தது. மீண்டும் 1998ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க 182 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாகத் திகழ்ந்தது (காங்கிரஸ் 147 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது). தெலுங்கு தேசம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க), திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அடல் பிஹாரி வாஜ்பாய் மீண்டும் பிரதமரானார். அ.இ.அ.தி.மு.க தன்னுடைய ஆதரவை விளக்கிக் கொண்டதால் ஏப்ரல் 1998ல் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. வாஜ்பாய், மார்ச் 1998 முதல் ஏப்ரல் 17,1999முடிய 13 மாதங்கள் பிரதமர் பதவியில் இருந்தார். இதன் பின் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முயன்றும் தோல்வியடைந்ததால் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் செப்டம்பர்-அக்டோபர் 1999ல் நடைபெற்றது. இதில் பா.ஜ.க கூட்டணி 296 இடங்களைப் பெற்றது, காங்கிரஸ் கூட்டணி 134 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து வாஜ்பாய் தலைமையில் தேசிய முற்போக்கு கூட்டணி அமைக்கப்பட்டு அதற்குத் தலைமையேற்று பிரதமராக அக்டோபர் 13, 1999 முதல் மே 2004வரை பதவி வகித்தார். மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவி வகித்தபோது முழு காலத்தையும் நிறைவு செய்தார் மேலும் காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் முழு கால அளவில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது (Biban Chandra 2000).
வாஜ்பாய் ஆட்சி பெரும் சவால்களின் காலமாகும். ஒரு பக்கம் கூட்டணிக் கட்சிகளின் வேறுபட்ட கொள்கைகள், மற்றொரு பக்கம் வலதுசாரிகளின் கடும் நெருக்கடி என்று ஆட்சிக் காலம் முழுக்க பயணித்தார். 1999ல் இந்து ராஷ்டிரா அமைத்திடவும், ராமர் கோவில் கட்டவும் வலதுசாரி அமைப்புகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது. ஆனால் கூட்டணிக் கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர். அணு குண்டு சோதனை கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தள்ளிப் போடப்பட்டதை வாஜ்பாய் அரசானது மே 1998ல் ராஜஸ்தான் பாலைவனத்தில் உள்ள பொக்ரான் என்ற இடத்தில் உடனுக்குடன் மூன்று முறை சோதனையை நடத்தியது. இது இந்தியாவிற்குள் பெரிய அளவிற்கு வரவேற்பினைப் பெற்ற அதேவேலையில் மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தன. இதன் தொடர்ச்சியாக இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. இந்தியாவின் அணு குண்டு சோதனையைத் தொடர்ந்து பாக்கிஸ்தானும் அணு குண்டு சோதனையினை நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழ்நிலை உருவானது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு வாஜ்பாய் இருநாடுகளுக்கிடையே பேருந்து போக்குவரத்தை 1999ல் துவக்கிவைத்தார். ஆனால் பாக்கிஸ்தான் இந்தியப் பகுதிகளில் தொடர்ந்து ஊடுருவி வந்தனர். இந்தியாவின் கார்கில் பகுதியில் பாக்கிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இதனால் இந்தியா-பாக்கிஸ்தான் கார்கில் போர் உண்டானது. நூற்றுக் கணக்கான இந்தியப் படைவீரர்கள் இதில் வீர மரணம் அடைந்தனர். இந்தியா கடுமையாகப் போர்புரிந்ததாலும், பன்னாட்டு அழுத்தத்தின் காரணமாகவும் பாக்கிஸ்தான் ராணுவம் பின்வாங்கியது. அரசியல் காரணங்களுக்காகவே பா.ஜ.க இதனைக் கையாண்டது என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது (Biban Chandra 2000).
டிசம்பர் 1999ல் ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹாருக்கு இந்தியப் பயணிகள் விமானம் நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவிலிருந்து 179 பயணிகள், 11 விமான ஊழியர்களுடன் தீவிரவாதிகள் கடத்தினர். 36 போராளிகளை விடுவிக்க நிபந்தனை முன்வைக்கப்பட்டது. கடைசியில் மூன்று முக்கியப் போராளிகளை விடுவித்து பயணிகளை மீட்டனர். அமைதியை ஏற்படுத்த ஆக்ரா பேச்சுவார்த்தை ஜூலை 2001ல் இந்தியப் பிரதமர் வாஜ்பாய்க்கும் பாக்கிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷ்ரப்பிற்கும் இடையே நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. அமெரிக்காவில் செப்டம்பர் 11, 2001ல் இரட்டை கோபுரங்கள் அல்-கொய்தா தீவிரவாதிகளால் விமானம் மூலம் மோதி தாக்குதல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா இந்தியாவை அரவணைத்துச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே இந்தியா மீது விதிக்கப்பட்ட அணு ஆயுத சோதனையின்போது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை அமெரிக்கா விலக்கிக் கொண்டது (Biban Chandra 2000).
1999 மற்றும் 2000ல் இரு பெரும் புயல், 2001ல் குஜராத்தில் நில நடுக்கம், 2001ல் பாராளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல், 2002-2003ல் கடுமையான பஞ்சம், 2002ல் குஜராத்தில் வன்முறையினால் படுகொலைகள் வரை நடந்தது. 2001ல் தெஹல்கா என்ற ஊடகம் பல்வேறு அரசியல் (பா.ஜ.க உட்பட), உயர் பாதுகாப்பு அலுவலர்களின் ஊழல் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டது. இது நாட்டில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. 2001ல் இந்திய யூனிட் டிரஸ்ட் ஊழல் நடைபெற்றது. இதனால் லட்சக்கணக்கான சிறு முதலீட்டாளர்கள் தங்களது சேமிப்பினை இழந்தனர். இதற்குப் பிரதமருக்கு நெருக்கமானவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுபோல் பெட்ரோல் நிலையங்கள், எரிவாயவு முகவர், மண்ணெண்ணெய் வியாபாரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் போன்றவை தொடர்ந்து வாஜ்பாய் அரசை அச்சுறுத்தி வந்தன. மாநிலச் சட்டசபைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்று வந்தன.
2003ல் எரிபொருள் நெருக்கடி சவாலை வாஜ்பாய் பிரதம மந்திரியாக இருந்தபோது எதிர் கொண்டார். மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து துணிவுடன் மேலும் பல சீர்திருத்தங்களை (புதுப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள்) நடைமுறைபடுத்தினார். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். 1999ல் 4.7 விழுக்காடு என்றிருந்த பணவீக்கம் 2004ல் 3.8 விழுக்காடாக் குறைந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 1999ல் 6.7 விழுக்காடாக இருந்தது 2004ல் 8 விழுக்காடாக அதிகரித்தது. பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தது, அந்நியச் செலாவணி கையிருப்பில் கணிசமான இருப்பு, பணவீக்கம் கட்டுக்குள் இருந்தது போன்ற சாதகமான போக்கும் காணப்பட்டது.
ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டமானது வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நடைமுறைப்படுத்தப்பட்டது. இத் திட்டமானது வறுமை ஒழிப்பு, வேலையின்மையினைப் போக்குதல் ஆகியவற்றை வேளாண் வளர்ச்சியினை முடுக்கிவிடுவதன் வழியாக அடைய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. எனவே வேளாண் வளர்ச்சி ஆண்டுக்கு 4.5 விழுக்காடு என்ற இலக்கினை முன்னிறுத்தியது. உணவு தானியம், எண்ணெய் வித்துக்கள், சர்க்கரை, போன்றவை 1980களில் வளர்ச்சியின் அளவில் ஒப்பிடும்போது 1990களில் குறைந்து காணப்பட்டது. ஆனால் பழவகைகள், காய்கறிகள் போன்றவை வளர்ச்சியில் மேம்பட்டிருந்தது. இந்தியாவில் வேளாண்மையானது வட்டார ஏற்றத்தாழ்வுடன் இருந்தது. இந்தியாவின் கிழக்குப் பகுதிகளான கிழக்கு உத்திரப் பிரதேசம், கிழக்கு மத்தியப் பிரதேசம், பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம், அசாம் போன்றவை அதிக வளங்கள் உள்ள பகுதியாகும். ஆனால் அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்தப்படாமல் (utapped) இருந்தது. உண்மையில் இந்த பகுதி சரியாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால் நாட்டின் 50 விழுக்காடு உணவு உற்பத்தியினைப் பெற்றிருக்க முடியும். எனவே ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டமானது இதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டது. வேளாண்மையில் சில அறைகூவல்கள் அதன் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தன. அதில் குறிப்பாக மாநிலங்களில் பாதிக்கு மேற்பட்ட விளைநிலங்கள் சிறு, குறு விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டு வந்தது, குத்தகைகுப் பயிரிடுபவர்கள் பற்றிய சரியான விவரங்கள் பெறப்படுவதில்லை, குத்தகை தாரர்கள் அதிக அளவில் விளைபொருட்களை நில உடைமையாளர்கள் பங்கிட்டுக்கொள்ளும் முறை புழக்கத்திலிருந்தது, விளை நிலப்பரப்புகள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுகிறது, நிறுவனக் கடன் முறை மிகவும் பலவீனமாக இருந்தது, பல்வேறு காரணங்களினால் மண்ணின் தன்மை குறைந்து காணப்பட்டது, நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது. இது போன்ற நிலைமையினை மாற்றி அமைத்து வேளாண் வளர்ச்சியினை அதிகரிக்க வாஜ்பாய் அரசு முயன்றது. இதற்காக வேளாண் உள்கட்டமைப்பினை உருவாக்குவது, குளிர்பதன கிடங்குகளைக் கட்டமைப்பது, ரயில், துறைமுகம், தகவல் தொடர்பினை வலுப்படுத்துதல், கிராமப்புறச் சாலை இணைப்பினை ஏற்படுத்தித் தருதல் பொன்றவை வாஜ்பாய் அரசு முன்னெடுத்த முக்கிய முயற்சிகள் ஆகும் (Chandra Shekhar Prasad 2009).
1980களின் பிற்பகுதியிலிருந்து 1990களின் முற்பகுதிவரை அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களின் பலன் தொழில் மற்றும் சேவைத் துறைகளுக்குச் சாதகமாக இருந்தது. ஆனால் வேளாண் துறை தகுந்த பலனைப் பெற இயலவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து 1990ஆம் ஆண்டுகளின் முற்பகுதி வரையில் எந்த ஒரு பெரிய சீர்திருத்தங்களும் வேளாண்மைக்காகத் தனிப்பட்டுச் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. 1990களின் பிற்பகுதியில் வேளாண்மையினை நோக்கிய சிறப்புச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் முக்கியமானது, உர விலையினைப் பகுதி அளவில் கட்டுப்பாட்டை நீக்குதல், வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்தும்போது எதிர்கொள்ளும் தடைகளைக் களைவது, அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955 கட்டுப்பாட்டில் தளர்வு செய்தல், முக்கிய வாணிபப் பயிர்களின் முன்னோக்கிய வர்த்தகத்தை நடைமுறைப்படுத்துதல், இலக்கின் அடிப்படையில் பொது விநியோக முறையினை நடைமுறைப்படுத்துதல், கிராமப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியை உண்டாக்குதல், வர்த்தக அளவுக் கட்டுப்பாட்டிற்குப் பதில் வரிகளை விதிப்பது போன்றவை ஆகும் (Malrika Singh 2017).
விவசாயிகள் இயற்கைச் சீற்றங்களினால் வேளாண்மையில் தோல்வி ஏற்பட்டு இழப்பினைச் சந்திக்கின்றனர். இதனைப்போக்க ஒருங்கிணைந்த பயிர்க் காப்பீட்டுத் திட்டம் 1985 தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் தேசிய வேளாண்மைக் காப்பீட்டுத் திட்டம் (National Agricultural Insurance Scheme) என்பது 1999-2000ல்; தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தினால் 1999-2000லிருந்து 2015-16ஆம் ஆண்டுவரை 2691 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர் (https://agricoop.nic.in). 2002-03ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் நிதி அமைச்சர் இந்திய வேளாண்மைக் காப்பீட்டு வரையறுக்கப்பட்ட நிறுவனம் தொடங்கப்படுவதை அறிவித்தார். அதுவரை வேளாண்மைக்கான காப்பீட்டுத் திட்டங்களை இந்தியப் பொது காப்பீட்டுக் கழகம் நடைமுறை படுத்திவந்தது. இந்த புதிய அறிவிப்பினால் அனைத்து வேளாண் காப்பீட்டுத் திட்டங்களையும் இது நடைமுறைப்படுத்துகிறது.
வாஜ்பாய் அரசானது 2000ல் தேசிய வேளாண் கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதன்படி,
- வேளாண்ஆராய்ச்சி, மனித வள மேம்பாடு, அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் சந்தைப் படுத்துதல், தனியார் முதலீடுகளை ஊக்கப்படுத்துவது.
- வேளாண்வளர்ச்சி ஆண்டுக்கு 5 விழுக்காடு அதிகரிக்கச் செய்தல்.
- நாட்டின்பல்வேறு பகுதிகளுக்கு வேளாண் விளைபொருட்களைக் கொண்டு செல்வதற்கானக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்ததை நீக்குதல்.
- விவசாயிகளின்மேம்பாட்டிற்கு வேளாண்மைக்கு வெளியே முறைப்படுத்துதல் மற்றும் வரி வசூல் செய்யும் முறைக்குச் சரியான அளவீடுகளை உருவாக்குதல்.
- வேளாண்வளர்ச்சிக்கான அடிப்படையான கிராமப்புற மின்சாரத்திற்கு முன்னுரிமை அளித்தல்.
- விவசாயக்கடன் தகுந்த நேரத்திலும், போதுமான அளவிலும் விவசாயிகளுக்குக் கிடைக்கக் கிராமப்புறங்களில் நிதி நிறுவன முறையினை கட்டமைப்பது போன்றவையாகும்.
2000-01ல் வேளாண்மைக்கான பேரியல் மேலாண்மை திட்டம் (Macro Management of Agriculture Scheme) அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முதன்மை நோக்கமாக உணவு தானியம் மற்றும் இதர வேளாண் விளைபொருட்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பது ஆகும். இத் திட்டம் 17 கூறுகளை உள்ளடக்கியது. இதன்படி ஒருங்கிணைந்த தானிய மேம்பாட்டுத் திட்டம் நெல், கோதுமை, சிறுதானியங்கள் விளைவிக்கும் பகுதிகளில் மேற்கொள்வது, சிறப்புச் சணல் மேம்பாட்டுத் திட்டம், சரியான கரும்பு சாகுபடி செய்யும் திட்டம், ஒருங்கிணைந்த மற்றும் சமமான உரம் பயன்படுத்துதல், சிறு விவசாயிகள் வேளாண் இயந்திரப் பயன்பாட்டிற்கு உட்படுத்துதல், வானம் பார்த்த விளைநிலங்களில் தேசிய நீர் மேம்பாட்டுத் திட்டம், விதை உற்பத்தி, மண் வளப் பாதுகாப்பு, கலர்-உவர்ப்பு நிலங்களை மேம்படுத்துதல், நிலப் பயன்பாட்டுக் கழகம், நலிந்தவர்களுக்குக் கடன் வழங்கக் கூட்டுறவு, கூட்டுறவு மூலம் பெண்களுக்குக் கடன் உதவி, வேளாண் கடன் நிலைப்பு நிதி, ஆதிதிராவிடர்-பழங்குடியினர்களுக்குச் சிறப்புத் திட்டம் போன்றவை இதன் மூலம் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
தேசிய விதைக் கொள்கை 2002: வேளாண்மையில் விதை ஒரு முக்கிய இடுபொருளாகும். தரமான விதைகளைப் பயன்படுத்தப்பட்டதால் இன்று வேளாண்மையில் தன்னிறைவினை அடைந்துள்ளோம். 1950ல் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 50 மில்லியன் டன் என்ற அளவில் இருந்தது பசுமைப் புரட்சியின் விளைவால் மேம்படுத்தப்பட்ட, அதிக விளைச்சல் தரக்கூடிய விதைகளைப் பயன்படுத்தப்பட்டதால் 200 மில்லியன் டன்னிற்கும் அதிகமாக உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டது. எனவே உணவு உற்பத்தியினை எதிர்காலத்தில் சிறந்த அளவிற்கு அடையவும், புதிய உணவு தானிய வகைகளை உருவாக்கவும் தேசிய விதைக் கொள்கை 2002 நடைமுறைப்படுத்தப்பட்டது (https://seednet.gov.in/).
2004ஆம் ஆண்டு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சாமிநாதன் தலைமையில் தேசிய விவசாயிகள் குழு (National Commission on Farmers) அமைக்கப்பட்டது. இக்குழுவானது விவசாயிகள் மற்றும் வேளாண் துறையில் மேற்கொள்ள வேண்டிய ஆலோசனைகளை டிசம்பர் 2005 முதல் அக்டோபர் 2006வரையில் ஐந்து முறை அறிக்கையினை அரசுக்கு அளித்தது. இதன்படி,
- நிலம், நீர், கால்நடைகள்மற்றும் உயிரிய வளங்கள் (Bioresources) குறித்த சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல்.
- விவசாயிகளின்நண்பன் என்ற அடிப்படையில் சாகுபடி விரிவாக்கம், பயிற்சி மற்றும் அறிவாற்றல், இணைப்பு, கடன் மற்றும் காப்பீடு போன்ற சேவைகளை வழங்குதல்.
- வேளாண்விளைபொருட்களுக்குக் கட்டுபடியாகும் விலையினை உறுதி செய்தல்.
- இடுபொருட்கள்மற்றும் விநியோகச் சேவைகள் அளித்தல்.
- வேளாண்பல்கலைக் கழகங்களில் உள்ள பாடத்திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருதல்.
- வேளாண்மையைப்பொதுப் பட்டியலுக்குக் கொண்டுவருதல்.
- தேசியஉணவு பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக் குழு அமைத்தல்.
- அனைவருக்குமானப்பொதுவிநியோக முறை.
- இந்தியவர்த்தக அமைப்பை நிறுவுதல்.
- வேளாண்மைச்செலவு மற்றும் விலைக் குழுவை தன் அதிகாரம் பெற்ற அமைப்பாக மாற்றி அமைத்தல்.
- வேளாண்விளைபொருட்களுக்கு அதன் செலவிலிருந்து கூடுதலாகக் குறைந்தது 50 விழுக்காடு குறைந்தபட்ச ஆதரவு விலையினைத் தருவது.
- கிராமப்புறவேளாண் சார் வாழ்வாதார முயற்சியினைத் தொடங்குவது.
இந்த அறிக்கையினை மாநிலங்களுடன் விவாதித்து அரசு தேசிய விவசாயக் கொள்கை 2007க்கு ஒப்புதலுக்காக சமர்ப்பித்தது.
வேளாண்மைக்கு மிக முக்கியமானது வேளாண் பொருட்களைச் சந்தைப் படுத்துதல் ஆகும். இதற்காக வாஜ்பாய் அரசானது வேளாண் சந்தைத் தகவல் வலைப்பின்னல் (Agricultural Marketing Information Network – AGMARKNET) என்ற திட்டம் 2000ல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய வேளாண் சந்தைகளுடன் இணைப்பினை ஏற்படுத்துவது, இந்திய இணையவழிப் பொருட்கள் பரிமாற்றத்துடன் இணைப்பினை ஏற்படுத்தி, தேசியத் தகவல் மையத்தின் வழியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. தேசிய அளவில் சந்தை நிலவரங்களை உடனுக்குடன் விவசாயிகளுக்குத் தெரிவிப்பது, புதிய அறைகூவல்கள் பற்றி விவசாயிகளுக்குப் புத்தாக்கம் செய்வது, வேளாண் சந்தையைத் திறம்படச் செயல்பட வைப்பது, சந்தை ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் வேளாண் தொடர்பான திட்டங்களை விவசாயிகளுக்குத் தெரிவிப்பது போன்றவை ஆகும் (www.indiafilings.com/learn/agmarknet/).
தேசிய இயற்கை வேளாண்மை மேம்பாட்டுத் திட்டம் (National Project on Organic Farming) பத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. இயற்கை வேளாண்மையினை மேம்படுத்தத் தொழில்நுட்பத் திறனை உருவாக்குவது, அறிவியல் அறிவினை வளர்த்தெடுப்பது, தடைகளைக் கண்டு அவற்றைக் கடந்து வருவது போன்ற நிலைகளில் உதவுவதற்காக அமைக்கப்பட்டது. இதற்காக பத்தாவது திட்டக் காலத்தில் ரூ.57.04 கோடியும் பதினோராவது திட்டக் காலத்தில் ரூ.101 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
1998-99ல் கிசான் கடன் அட்டைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது இதன்படி விவசாயிகளுக்கு நீக்குப் போக்குடன் கடன் அளிக்கவும், செலவு-திறனுடைய முறையில் வழங்கப்படவும் வழிவகை செய்யப்பட்டது. இதனை வணிக வங்கிகள், கிராமப்புற வட்டார வளர்ச்சி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், மத்தியக் கூட்டுறவு சொசைட்டி, பொன்றவை வழியாகக் கடன் அளிக்க வசதியை ஏற்படுத்தித் தந்தது. இதன்படி 1989-99ல் 7.84 லட்சம் கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டது இது 2001-02ல் 93.4 லட்சமாக அதிகரித்தது. சிறு, குறு விவசாயிகள் பயன்பெறவும், மத்திய மாநில அரசுகள் 1997-98ல் சோதனை அடிப்படையில் பயிர்க் காப்பீட்டு என்ற புதிய திட்டம் 8 மாநிலங்களில் உள்ள 24 தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் 1999-2000ல் இந்த திட்டம் புதிய வடிவமாகத் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜனவரி 21, 2004ல் விவசாயிகளின் சந்தேகங்களைப் போக்கவும், வழிகாட்டவும் விவசாயிகள் தொலைப்பேசி மையங்கள் அனைத்து வாரநாட்களிலும் காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை இயங்க அனைத்து மாநிலங்களிலும் உருவாக்கப்பட்டது. மே 18, 2001ல் விவசாயத் தொழிலாளர்களுக்கு முதன் முதலில் அவர்களின் சமூகப் பாதுகாப்பையும், நலனையும் அடிப்படையாகக் கொண்டு விவசாயத் தொழிலாளர் பீமா யோஜனா (Khethihar Mazdoor Bima Yojana) என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
வேளாண் விளைபொருட்களில் அழுகக்கூடியது (காய்கறிகள், பூக்கள்), அழுகாமல் குறிப்பிட்ட காலம் வரை பயன்பாட்டுக்கு உடையது (தானியம், பருப்பு வகைகள்) என்று பிரிக்கலாம். வருடத்தில் சில சாகுபடிக் காலங்களில் இவை மிதமிஞ்சிய அளவில் உற்பத்தியாகி அளிப்பு அதிகரிப்பதால் விளைபொருட்களை மிகவும் குறைந்த விலையில் விற்று பெரும் இழப்பினை விவசாயிகள் சந்திக்கின்றனர். எனவே இதனைப் போக்க 2001-02ல் கிராமப்புறச் சேமிப்புக் கிடங்கு திட்டம் (Gramin Bhandaran Yojana) தொடங்கப்பட்டது. இதன்படி தனிநபர், நிறுவனங்கள், உழவர்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், மற்றும் பல்வேறு கூட்டுறவுச் சங்கங்களுக்குக் கிராமப்புறங்களில் வேளாண் சேமிப்புக் கிடங்குகள் கட்டவோ அல்லது சீரமைக்கவோ அரசு நிதி அளிக்கிறது. இதனால் வேளாண் விளைபொருட்கள் வீணாகுவதை தவிர்க முடியும் (Saumitra Mohan 2017).
வாஜ்பாயின் முக்கியப் பொருளாதாரச் சாதனைகளாகத் தங்க நாற்கரச் சாலை, பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள் திட்டம், அரசு தொழில் மற்றும் வாணிப நிலைகளில் முதலீடு விலகல் (disinvestment), நிதிப் பற்றாக்குறையினைக் குறைக்க நிதி பொறுப்புச் சட்டம், புதிய தொலைத் தொடர்புக் கொள்கை, அனைவருக்கும் கல்வி இயக்கம் (Sarva Shiksha Abhiyan போன்றவை ஆகும். இந்தியா சுதந்திரம் அடைந்தும் கிராமப்புறங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதற்கான முக்கியக் கரணம் முதன்மைச் சாலைகளுடன் கிராமங்கள் இணைப்பினைப் பெற்றிருக்கவில்லை என்பதாகும். எனவே 2000ல் பிரதம மந்திரி கிராமப்புறச் சாலைகள் இணைப்பு திட்டம் (Pradhan Mantri Gram Sadak Yojana) தொடங்கப்பட்டது. இதன்படி அனைத்துக் காலநிலையினைத் தாங்கக்கூடிய கிராமப்புறச் சாலை இணைப்பினை 1000 பேர் வசிக்கக்கூடிய சமதளக் குடியிருப்புப் பகுதிகளிலும் (பின்னால் 500 நபர்கள் என்று 2007ல் மாற்றி அமைக்கப்பட்டது), மலை மற்றும் வனப் பகுதிகளில்; 500 நபர்கள் வசிக்கக்கூடியக் குடியிருப்புகளுக்கு (பின்னால் 250 நபர்கள் என்று 2007ல் மாற்றியமைக்கப்பட்டது) சாலை இணைப்பினை உறுதி செய்வதற்காகத் தொடங்கப்பட்டது. இதனால் கிராமப்புறங்களின் உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு வேளாண் உற்பத்தி பொருட்கள் வெளிச்சந்தையில் விற்பனைக்குக் கொண்டுசெல்லவும், விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டது (Saumitra Mohan 2017). தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம் மற்றும் பிரதம மந்திரி கிராமப்புறச் சாலை இணைப்பு திட்டம் வழியாக 1997-2002ஆம் ஆண்டுகளுக்கிடையே 23814 கி.மீ நீளத்திற்குத் தேசிய நெடுஞ்சாலை கூடுதலானது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் 60 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கியது. 2002ல் இந்தியா பெரும் வறட்சியினை சந்தித்தது. இதற்குக் காரணம் இயல்பான மழையைவிட 19 விழுக்காட்டுக்குக் குறைவான மழைப்பொழிவு இருந்ததாகும். இதனால் 38 மில்லியன் டன் உணவு உற்பத்தி குறைந்தது (Amitabh Tiwari 2021).
1996-97ல் தொடங்கப்பட்ட விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மையளிக்கும் திட்டத்தின் கீழ் 2002ல் விரைவு செயலாற்றும் திட்டம் துவக்கப்பட்டது. 2003-04ஆம் ஆண்டு முடிய 18 நீர்ப்பாசன திட்டங்களுக்குக் கடன் அளிக்கப்பட்டது. பாசனப் பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மை திட்டம் (Command Area Development and Water Management Programme) மறுசீரமைக்கப்பட்டு ஏப்ரல் 2004ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி 133 நீர்ப்பாசன திட்டங்கள் இதன் மூலம் பயன் பெற்றது. விவசாயிகளுக்கானக் கடன் அளவு 1999-2000ல் ரூ.46268 கோடியாக இருந்தது 2004-05ல் ரூ.85686 கோடியாக அதிகரிக்கப்பட்டது. 1998-99ல் தொடங்கப்பட்ட விவசாயக் கடன் அட்டை திட்டம் டிசம்பர் 2004 முடிய 435 லட்சம் கடன் அட்டைகள் வழங்கப்பட்டு ரூ.111459 கோடி கடன் கொடுக்கப்பட்டது. தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின்படி 1999-00ல் ரபி பருவத்திலிருந்து 2004 காரீப் பருவம் முடிய 5.89 கோடி விவசாயிகள் பயன் அடைந்தனர். இத்துடன் 2003-04ல் முன்னோட்ட அடிப்படையில் விவசாயிகள் வருமானக் காப்பீடு திட்டத்தினால் (Farm Income Insurance Scheme) 2004 காரீப் பருவத்தில் 2.22 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றனர். இதுபோல் விதை உற்பத்தி மற்றும் பகிர்வில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
விவசாயிகள் அதிக உரங்கள் பயன்படுத்தக் குறைந்த விலையில் மானியத்துடன் வழங்க அரசு நடவடிக்கையை மேற்கொண்டது. உர மானியம் 2000-01ல் ரூ.13800 கோடி வழங்கப்பட்டது இது 2003-04ல் ரூ.11847 கோடியாகக் குறைந்தது. வேளாண்மையை இயந்திரமயமாக்கலுக்கு அரசு முன்னுரிமை அளித்தது. இதன்படி இயந்திரமயமாக்கல் மற்றும் மின்சாரப் பயன்பாட்டின் பங்கானது 1971-72ல் 40 விழுக்காடாக இருந்தது 2003-04ல் 84 விழுக்காடாக அதிகரித்தது. 1999-2000க்கும் 2003-04க்கும் இடையில் 11.17 லட்சம் டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டது, இது ஆண்டுக்குச் சராசரியாக 223333 விற்பனை அளவாக இருந்தது. இதுபோல் விசைக் கலப்பைகள் (power tillers) இதே காலகட்டத்தில் 68034 விற்பனையானது, இது ஆண்டுக்குச் சராசரியாக 13606 விற்பனையானது. அதேசமயம், வேளாண்மையின் மீதான பொதுத்துறை முதலீடுகள் குறைந்து வந்தது. 1990களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மைக்கான மூலதன ஆக்கமானது 1.92 விழுக்காடாக இருந்தது 2003-04ல் 1.3 விழுக்காடாகக் குறைந்தது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் வேளாண் பொருட்களின் ஏற்றுமதியின் பங்கானது 2002-03ல் 12.8 விழுக்காடாக இருந்தது 2003-04ல் 11.8 விழுக்காடாகக் குறைந்தது. எனவே வேளாண் ஏற்றுமதியினை ஊக்குவிக்க வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை 2004-2009ல் வேளாண்மைப் பொருட்களின் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதன்படி சிறப்பு வேளாண் உற்பத்தி திட்டம் (Vishesh Krishi Upaj Yojana) தொடங்கப்பட்டு பழவகைகள், காய்கறிகள், பூக்கள், சிறிய வகைக் காடுகளில் உற்பத்தியாகும் பொருட்கள் போன்றவை ஏற்றுமதி செய்ய ஊக்குவிக்கப்பட்டது. இத்துடன் வேளாண் ஏற்றுமதி மண்டலம் உருவாக்கப்பட்டது. இந்திய வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்கின்ற அதே வேலையில் சில வகைப் பொருட்களை (சமையல் எண்ணெய், உலர் கொட்டைகள் மற்றும் பழங்கள், பருப்பு வகைகள்) இறக்குமதி செய்கிறது. இதன்படி மொத்த இறக்குமதியில் சராசரியாக ஆண்டுக்கு 4.6 விழுக்காடு வேளாண் பொருட்கள் பங்கெடுத்துக்கொள்கிறது.
அட்டவணை: வாஜ்பாய் ஆட்சியில் இந்திய வேளாண் உற்பத்தி
வேளாண் உற்பத்தி | 1998-99 | 2003-04 | ||||
பரப்பு (மில்லியன் ஹெக்டேர்) | உற்பத்தி (மில்லியன் டன்) | உற்பத்தி திறன் (கி/ஹெ) | பரப்பு (மில்லியன் ஹெக்டேர்) | உற்பத்தி (மில்லியன் டன்) | உற்பத்தி திறன் (கி/ஹெ) | |
நெல் | 44.80 | 86.08 | 1921 | 42.41 | 88.28 | 2051 |
கோதுமை | 27.52 | 71.29 | 2590 | 26.62 | 72.11 | 2707 |
எண்ணெய் வித்துக்கள் | 26.23 | 24.75 | 944 | 23.44 | 25.29 | 1072 |
சர்க்கரை | 4.05 | 288.72 | 71203 | 4.00 | 237.31 | 59119 |
பருப்பு வகைகள் | 23.5 | 14.91 | 634 | 24.45 | 14.94 | 623 |
சிறுதானியங்கள் | 29.34 | 31.34 | 1068 | 30.76 | 38.12 | 1228 |
அனைத்து உணவு தானியங்கள் | 125.17 | 203.61 | 1627 | 124.24 | 213.46 | 1707 |
தலா உணவு (தானியங்கள் + பருப்புகள்) | — | — | 447.0 கிராம் | 462.7 கிராம் |
Source: Government of India (2005, 2007): “Economic Survey2004-05 & 2006-07,” Ministry of Finance, Government of India.
அட்டவணை: இந்தியப் பொருளாதாரப் போக்கு (விழுக்காட்டில்)
காரணிகள் | 1950-1964 | 1965-79 | 1980-1990 | 1991-2004 | 1980-2004 |
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி | 3.7 | 2.9 | 5.8 | 5.6 | 5.7 |
தொழில் வளர்ச்சி | 7.4 | 3.8 | 6.5 | 5.8 | 6.1 |
வேளாண் வளர்ச்சி | 3.1 | 2.3 | 3.9 | 3.0 | 3.4 |
மொத்த முதலீட்டிற்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் உள்ள விகிதம் | 13 | 18 | 22.8 | 22.3 | 22.5 |
Source: Atul Kohli (2006): “ Politics of Economic Growth in India 1980-2005,”Economic Political Weekly, 41, (14).
Source: Atul Kohli (2006): “ Politics of Economic Growth in India 1980-2005 Part II: The 1990s and Beyond,”Economic Political Weekly, 41, (15).
வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் இந்திப் பொருளாதாரம் உச்ச அளவான 8 விழுக்காடு வளர்ச்சியினைத் தக்க வைத்துக்கொண்டிருந்தது. அதே சமயம் பணவீக்கம் 4 விழுக்காட்டுக்குக் குறைவான அளவிலும், அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகமாகவும் இருந்தது. வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறைகளும் ஆண்டு பொருளாதார வளர்ச்சி வீதமானது ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தில் 3.2 விழுக்காடும், எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் 4.7 விழுக்காடும், ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தில் 2.1 விழுக்காடுமாக இருந்தது. இது 2003-04ஆம் ஆண்டு 9.6 விழுக்காடாக அதிகரித்தது.
இந்திய அரசின் வேளாண் வளர்ச்சித் திட்டங்கள் வறுமையை ஒழிப்பதில் முக்கிய காரணமாக்கத் திகழ்கிறது. 1970-71ல் இந்தியாவின் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் 59 விழுக்காடாக இருந்தது, 1977-78ல் 51.3 விழுக்காடாகவும், 1983ல் 44.5 விழுக்காடாகவும், 1993-94ல் 36 விழுக்காடாகவும், 1999-2000ல் 26.1 விழுக்காடாகவும், 2004.05ல் 22.1 விழுக்காடாகவும் குறைந்தது. ஆனால் தற்போதும் உலக அளவில் வறுமையின் கீழ் வாழ்பவர்களில் எண்ணிக்கையின் அடிப்படையில் அதிக பங்கினை இந்தியா பகிர்ந்துகொள்கிறது. இதற்கு முக்கியக் காரணம் தேவைக்கு அதிகமான தொழிலாளர் ஆற்றல் வேளாண்மையினைச் சார்த்திருப்பதாகும். வட்டார நிலையில் பார்த்தால் வறுமையில் வாழ்பவர்களில் பெரும் பங்கினைக் கிராமப்புறங்கள் பகிர்ந்துகொள்கிறது. குறிப்பாக விவசாயிகள் பாதிக்குமேல் வறுமையில் வாழ்கின்றனர் என்கிறது புள்ளிவிவரம். நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகள், கிராமப்புறக் கைவினைஞர்கள் அதிகமாக வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர். வறுமை ஒழிப்புத் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், அது பெருமளவிற்குக் கைகொடுக்கவில்லை. 1970களில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டம் வறுமையை ஒழிப்பதில் சிறப்பான பலனை அளிதது. எனவே 2000களின் இடையில் இத்திட்டத்தைத் தேசிய அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவினை அடைந்து மட்டுமல்ல உலக அளவில் வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதி செய்யும் முன்னனி நாடாகவும் உள்ளது. இருந்தும் அதிக அளவிலான மக்கள் உணவின்றி வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். இதற்காக உணவு பாதுகாப்புச் சட்டம் 2013ல் கொண்டுவரப்பட்டது. இதன்படி குறைந்த விலையில் உணவு தானியம் பொது விநியோக முறையின் மூலமாக வழங்கப்பட்டது. இதனால் 800 கோடி மக்கள் பயன் பெறுகின்றனர். வேளாண்மையில் முக்கிய உற்பத்தியாகப் பருத்தி திகழ்கிறது. 1950-51ல் தலா துணியின் அளவு 9 மீட்டராக இருந்தது 2002-03ல் 31.4 மீட்டராக அதிகரித்தது. பல மாநிலங்கள் ஏழை மக்களுக்கு இலவச துணி அளிக்கும் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டுவருகிறது. இது போன்று இந்தியா சுதந்திரம் அடைந்தபோது வறுமை, பாக்கிஸ்தானிலிருந்து அதிக அளவில் அகதிகள் வருகை போன்றவற்றால் பாதிக்கப்பட்டது. இதனால் வீடற்றவர்கள் பெருமளவிற்கு காணப்பட்டனர். இத்துடன் கிராமங்களில் பெருமளவிற்கு மண்-குடிசை வீடுகளில் வாழ்ந்து வந்தனர். இதனைப் போக்க அரசு ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டங்களைப் பல்வேறு பெயர்களில் அவ்வப்போது நடைமுறைப்படுத்தியது. இதன் விளைவு வீடற்றவர்கள் எண்ணிக்கை குறைந்தது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 0.15 விழுக்காடு மக்கள் வீடற்றவர்களாக உள்ளனர். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் ஆகிய மூன்று அடிப்படைத் தேவைகளை மக்களுக்கு வழங்கத் தொடர்ந்து அரசு பல்வேறு உத்திகளை இன்றும் கடைப்பிடித்து வருகிறது.
டியாகோ மயோரானோ (2014) என்பவருடைய ஆய்வுக் கட்டுரையில், கிராமப்புற பொருளாதாரம் மோசமான பாதிப்பினை அடைந்ததற்கான காரணங்களை விளக்கியுள்ளார். அதன்படி 1) விவசாயிகள் கடன் பெறுவது மிகவும் கடினமாகிக் கொண்டுவந்தது, 2) பன்னாட்டுப் போட்டியிலிருந்து விவசாயிகளை போதுமான அளவிற்குப் பாதுகாக்கப்படாதது, 3) பொதுத் துறை முதலீடு வேளாண்மை மீது தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது போன்றவை ஆகும். இவை அனைத்தும் வேளாண் துறையின் வீழ்ச்சிக்கான முக்கியக் காரணமாக இருந்துள்ளது என்கிறார். இந்த பாதிப்பினால் 1995-2011ஆம் ஆண்டுகளுக்கிடையே 2.7 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். 1980களில் வேளாண்மைக்கு அளித்த முக்கியத்துவம் ஒப்பீட்டு அளவில் 1990களில் அளிக்கப்படவில்லை. குறிப்பாக மொத்த முதலீட்டில் வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான முதலீட்டு விகிதமானது தொடர்ந்து குறைந்து வந்துள்ளது. 1980ல் மொத்த திட்ட ஒதுக்கீட்டில் வேளாண்மை, கிராமப்புற வளர்ச்சி மற்றும் நீர்ப்பாசனத்திற்கு 25 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட்டது, இது 1989ல் 19 விழுக்காடாகக் குறைந்தது, 2008ல் 18 விழுக்காடாக மேலும் குறைந்தது. ஆனால் இந்த முதலீட்டு இடைவெளியைத் தனியார் மற்றும் பொது-தனியார்-கூட்டேற்பு (PPP) வழியாக நிறைவடையச் செய்தது. இதுபோல் மொத்த முதலீட்டு ஆக்கத்தில் வேளாண்மையின் மொத்த முதலீட்டு ஆக்கமானது 1980ல் 16.1 விழுக்காடாக இருந்தது 1999ல் 11.5 விழுக்காடாகவும், 2005ல் 7.3 விழுக்காடாகவும் குறைந்தது (Diego Maiorano 2014).
உணவு மற்றும் உரங்களுக்கு அளிக்கப்பட்ட மானியம் 1980 மற்றும் 2004க்குமிடையே மாறுபட்டு இருந்தது. இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் உரத்திற்கான தலா மானியம் 600 விழுக்காடு அதிகரித்தது ஆனால் உணவிற்கான தலா மானியம் 202 விழுக்காடு அதிகரித்திருந்தது. 1990களில் உரத்திற்கான தலா மானியமானது 160 விழுக்காடும், உணவிற்கான தலா மானியம் 308 விழுக்காடும் அதிகரித்திருந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உரத்திற்கான நிதி ஒதுக்கீட்டு அளவு 0.40 விழுக்காடாக 1980ல் இருந்தது. 1989ல் 1.11 விழுக்காடாக இது அதிகரித்தது. இதுபோல் உணவிற்கு இதே காலகட்டங்களில் 0.53 விழுக்காட்டிலிருந்து 0.9 விழுக்காடாக அதிகரித்தது. இந்திய உணவுக் கழகம் நெல் மற்றும் கோதுமைக்கானக் கொள்முதல் விலையானது 1980களில் குறைந்திருந்தது ஆனால் பொருளாதாரச் சீர்திருத்தக் காலங்களில் அதிகரித்துக் காணப்பட்டது (Diego Maiorano 2014). பொதுவாகப் புதுப் பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகள் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதில் வேளாண்மைக்கான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. குறிப்பாக வேளாண் சார்ந்த உள்கட்டமைப்புகள் (சாலைகள், சேமிப்புக் கிடங்குகள்) வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவு கிராமப்புற மேம்பாடு, வேளாண் வளர்ச்சி போன்றவற்றில் நேர்மறை விளைவுகள் தோன்றியது. ஆனால் இதனைத் தக்கவைக்க அடுத்து வரும் காலங்களிலும் வேளாண்மைக்கான நிதி ஒதுக்கீடு அதிகம் தேவை இருந்தது.
– பேரா.பு.அன்பழகன்