Bioscope Karan 26th WebSeries by Vittal Rao. This Series About Germany movies பயாஸ்கோப்காரன் ஜெர்மன் சினிமா ஒன்று 26 – விட்டல்ராவ்

தொடர் 26: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



ஜெர்மன் சினிமா ஒன்று
                                          – விட்டல்ராவ்

ஒவ்வொரு நாட்டு சினிமாவும் அதன் மௌனப்படங்களின் செழுமையிலிருந்து தனக்கான உன்னத வடிவை பேசும் படத்துக்கு கொண்டு சென்றதை உலக சினிமா வரலாறு குறிப்பிடும் சிலவரிகளாகும். ஒரு திரைப்படத்தின் கதையம்சம் கொலை, திகில், இசை, நாடகம், காதல், சாகசம், வலாற்று நிகழ்வு, அறிவியல், ஆன்மீகம் என்று பலதரப்பட்டதாயிருக்கலாம். அது முக்கியமல்ல. “ஒரு ஒட்டு மொத்த பார்வைக்கு முழுமையான கலை வடிவாக திரைப்படம் அமைந்திருபபதே அதன் அதி உயர்ந்த மேன்மையைச் சொல்லுவது, இதில் கதைக்கோ, நடிகர்களுக்கோ ஒரு பங்குதான் இருக்கும். இயக்குனரும் காமிரா ஒளிப்பதிவாளரும்தான் முக்கிய பங்கு வகிப்பவர்கள்.

நவீன கலைகளின் 20-ஆம் நூற்றாண்டுப் பார்வைகளில் முக்கியமான ஒரு பார்வை “எக்ஸ்பிரஷனிஸம்” [EXPRESSIONISM]. எக்ஸ்பிரஷனிஸம் என்பது கலையின் வழியே குறிப்பிட்ட உணர்வுகளை வெளிப்படுத்திக் காட்டுதல் என்றாகிறது. 19-ம்நூற்றாண்டின் இறுதியில் இருந்த ரியலிஸம் மற்றும் இம்ப்ரஷனிஸம் போன்ற கலைக் கோட்பாடுகள் வைக்கும் மரபார்ந்த வடிவங்கள் உண்மையான கலையை உருவாக்குவதில் தடையாக இருந்ததாய் எக்ஸ்பிரஷனிஸ்டுகள் தீர்மானித்தனர். ஜெர்மனியில் இவ்வகை கோட்பாடு அன்றைக்கு பெரிதும் பின்பற்றப்பட்டு “ஜெர்மன் எக்ஸ்பிரஷனிஸம்” என்றே சொந்தம் கொண்டாடினர். ஜார்ஜ் கெய்ஸர், ஏர்னஸ்ட் போல்லர் என்பவர்கள் எக்ஸ்பிரஷனிஸ்ட் நாடகாசிரியர்களென அறியப்பட்டவர்கள். பெர்ட்டோல்ட் ப்ரெக்ட் [BERTOLT BRECHAT] உலகப் புகழ்பெற்ற எக்ஸ்பிரஷனிஸ்ட் நாடகாசிரியர். டி.எஸ். எலியட், ஜேம்ஸ் ஜாய்ஸ், சாமுவேல் பெக்கட், போன்றவர்கள் ஆங்கில மொழியில் எழுதிக்கொண்டிருந்த எக்ஸ்பிரஷனிஸ்டுகள் இசையிலும் ரிச்சர்டு வாக்னர் எக்ஸ்பிரஷனிஸ உத்திகளை தத்தம் இசைக் கோர்வைகளில் ஈடுபடுத்தினர். ஜெர்மனி சினிமாவும் அவ்வப்போது குழம்புச் சோற்றுக்கு ஊறுகாய் தொட்டுக் கொள்ளுவதுபோல எக்ஸ்பிரஷனிஸத்தைத் தொட்டுக் கொண்டது.

Bioscope Karan 26th WebSeries by Vittal Rao. This Series About Germany movies பயாஸ்கோப்காரன் ஜெர்மன் சினிமா ஒன்று 26 – விட்டல்ராவ்

ஜெர்மனிய சினிமாவின் அதிமுக்கிய ஆரம்பப் பேசும்படம் “M” ஒரு தொடர் கொலைகாரனைப் பற்றியது. கொலை [MURDER] அல்லது கொலையாளி [MURDERER] என்பதைக் குறிக்கும். வார்த்தையின் முதல் எழுத்தான “M” படத்தின் பெயராகிறது. தொடர்கொலை சம்பவங்களை வைத்து சுவாரசியமான ஹாலிவுட் படங்களாக BOSTON STRANGLER, NO WAY TO TREAT AZ LADY, 10, RILLINGTON PLACE மற்றும் FRENZY என்பவை “M”–ன் பாதிப்பால் பின்நாட்களில் தயாரிக்கப்பட்டவை. மிகச்சிறந்தவையாகக் கொண்டாடப்பட்ட PSYCHO மற்றும் SILENCE OF THE LAMBS ஆகிய இருபடங்களுக்கும் அரிச்சுவடியாயிருப்பதும் “M”தான்.

1931-ல் வெளிவந்த “M” ஜெர்மன் தயாரிப்பாளர் – இயக்குநர் FRITZ LANG-ன் முதல் பேசும்படம் [ஜெர்மன்மொழி], LANG ஏற்கெனவே ஆல்ஃபர்டு ஹிட்ச்காக் 1927-ல்தயாரித்து இயக்கிய THE LODGER என்ற மௌனப்படத்தின் பாதிப்பாலும், ஹிட்ச்காக்கின் 1929ம் வருடத்து பேசும்படமான BLACKMAIL என்பதின் தொழில் நுணுக்கங்களின் கவனிப்போடும் “M” படத்தை உருவாக்கினதாகக் கூறப்படுகிறது.

ஃபிரிட்ஜ் லேங் 1890-ல் வியன்னா நகரில் பிறந்தவர். இவரது முதல் மௌனத் திரைப்படம்- 1919-ல் HALBBLUT [THE WEAKLING] என்ற பெயரில் ஜெர்மனிய UFA ஸ்டூடியோவில் தயாரித்து வெளியிட்டார். பெண்ணொருத்தியோடான காதலால் அழிந்து போகும் மனிதன் ஒருவனின் கதை இப்படம். இக்கருத்தை அவரது வேறு சில படங்களும் தொடர்ந்து கொண்டிருந்தன. இப்படங்கள் யாவுமே லேங்குக்கு வெற்றியைத் தந்தவை. கடைசியாக அவர் தயாரித்து இயக்கி மிகப்பெரிய வெற்றியளித்த அறிவியல் கதைப்படம் METROPOLIS [1927]. அதன்பிறகு இயக்கிய திரைப்பட வரலாற்றில் நிலையான பெயரைப் பெற்றது அவரது முதல் பேசும்படமான “M” [1931]. தம் படத்தில் திகில் காட்சிகளின் போக்கில் சஸ்பென்ஸை உருவாக்கி அவர் மிகச் சிக்கலான ஒலிப்பதிவை [RECORDING] பயன்படுத்தியிருக்கிறார். EDVARD GRIEG-ன் இசைக்கோர்வை பிரமிக்க வைத்ததாயிருக்கிறது.

Bioscope Karan 26th WebSeries by Vittal Rao. This Series About Germany movies பயாஸ்கோப்காரன் ஜெர்மன் சினிமா ஒன்று 26 – விட்டல்ராவ்

1933-ல் ஜெர்மனியின் திரைப்பட ஸ்டூடியோக்கள் யாவும் நாஜி விளம்பர இலாகாவுக்கு தலைவராயிருந்த ஜோசப் கோயபெல்ஸின் [JOSEPH GOEBBELS] கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வரப்பட்டன. ஜெர்மனியின் முக்கிய திரைப்பட இயக்குனர்களும் நட்சத்திரங்களும் ஜெர்மனியிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் ஹாலிவுட்டை சென்றடைந்தனர். லேங்கின் திறமையைக் கண்டு மகிழ்ந்த நாஜிகள் அவரை ஜெர்ன் UFA ஸ்டூடியோவுக்கு தலைமைப் பொறுப்பேற்குமாறு 1933-ல்கேட்டுக் கொண்டபோது, அவர் அமெரிக்காவுக்குத் தப்பியோடிவிட்டார். மிகுந்த வெற்றிகரமான திரைப்படக் கலைஞராய் விளங்கிய LANG 1976-ல் காலமானார். அவர் இறுதியாக 1953-ல் தயாரித்து இயக்கியது “THE BIG HEAT” என்ற படம்.

Bioscope Karan 26th WebSeries by Vittal Rao. This Series About Germany movies பயாஸ்கோப்காரன் ஜெர்மன் சினிமா ஒன்று 26 – விட்டல்ராவ்

ஜெர்மன் நகரமான டுஸ்ஸெல்டார்ஃப் [DUSSELDORF] பகுதியில் பீட்டர் குர்பென் [PETER KURTEN] என்ற மனம் வக்கரித்தவன் சிறுமிகளைக் கொலை செய்து வந்ததை அன்றைய பத்திரிகைச் செய்திகள் “டுஸ்ஸெல்டார்ஃபின் ரத்தக்காட்டேரி” என்று அழைத்து வந்தன. “M” திரைப்படம் 1931-ல் திரையிடப்பட்டபோது பீட்டர் குர்டெனின் கொலைச் செய்திகளைப் படித்து மனத்தில் தேக்கியிருந்த ஜெர்மன் திரைப்பட ரசிகர்கள் படத்தின் கதைக்கு புதியவர்களாய் காட்டிக் கொள்ளவில்லை. பிறகு லேங், தன் படத்தின் கதைக்கு குர்டென் விஷயம் மூலக்கருத்தல்லவென்று கூறிவிட்டார். ஆனாலும் படத்தைப் பார்க்கையில் யார் குற்றவாளி என்பது முன்கூட்டியே தீர்மானிக்க இயலாத வகையில் லேங் கொண்டு போயிருப்பார். சிறுமிகளை ஏமாற்றிக் கொன்றுவிட்டு அவர்களின் முதுகில், “M” என்ற எழுத்தை எழுதிவிடுவான். கொலை செய்யுமுன் ஒரு ராகத்தை சீழ்க்கை ஒலியால் எழுப்புவான். இந்த ராகம், [EDVARDGRAIK] எட்வார்டு கிரேக்கின் இசையமைப்பில் திகழும், “HALL OF THE MOUNTAIN KING” எனும் பாடலின் ராகமாகும்.

ஃபிரஞ்ஜ் பெக்கெர்ட் [FRANZ BEKERT] என்ற மனநோய் பீடிக்கப்பட்ட இளைஞன் அழகிய சிறுமிகளை தின்பண்டங்கள் தந்து பாலியல் ரீதியாய் தீண்டி உணர்வுச் சுகம் பெற்றவனாய் கொலை செய்து வருகிறான். ஒவ்வொரு சிறுமியின் கொலைச் செயலும் மிகுந்த பூடகத்தனமாய் ஒருசில குறியீட்டுக் காட்சிகளோடு நமக்கு புரிய வைக்கப்படுகிறது. முதற் கொலைக் காட்சியில், பெக்கர்டின் நிழல்தான் நமக்குக் காட்டப்படுகிறது. உடனே காட்சி மாறி, சிறுமியின் வருகையை எதிர்நோக்கி வீட்டிலிருக்கும் அம்மாவைப் பார்க்கிறோம். அடுத்து ஜன்னலும், வெளிப்பகுதியும் காட்டப்படுகிறது. காலியான அறைகள் காட்டப்படுகின்றன. மேஜைமீது காலியான இரவுச் சாப்பாட்டுத் தட்டும் கடைசியாக புல்தரையில் உருண்டு சென்று நிற்கும் சிறுமியின் பந்தையும் காமிரா காட்டுகிறது, ஓர் ஒற்றை பலூன் காற்றில் மிதந்து போவதைக்காட்டி சிறுமி இறந்ததை உணர வைக்கிறார் லேங். கொலையாளி பெக்கெர்டின் பின்பக்கம் மட்டுமே படம் முழுக்கக் காட்டப்படுகிறது. அவன் தலைக்கு பரிசு ஒன்றை அறிவித்து, போலீசு வேட்டையாடும் சமயம். ஊர்மக்கள் சட்டத்தை தம் கையிலேந்தி ஒன்று திரண்டு அவனை அடித்துக்கொல்ல திட்டமிடுகின்றனர். இந்த முறையில் பெக்கர்டின் முடிவு ஏற்படுகிறது.

பீட்டர் லோரி [PETER LORRE] என்ற ஹங்கேரிய நடிகர் அப்பாவித் தனமான முகத்தோடு சிறுமிகளைக் கொலை செய்யும் பெக்கர்பாக அதிசிறப்பாய் நடிக்கிறார். இன்ஸ்பெக்டர் கார்ல் லேஹ்மன் [KARL LAHMANN] பாத்திரத்தில் ஆட்டோ வெர்னிக் [OTTO WERNICKE] என்பவர் சிறப்பாய் செய்திருக்கிறார். “M” மீண்டும் அதேபெயரில் அமெரிக்க ஹாலிவுட் தயாரிப்பாக 1951-ல் ஜோசப் லோஸி [JOSEPH LOSEY] என்பவரால் இயக்கப்பட்டு திரையிடப்பட்டது அவ்வளவு சிறப்பாயில்லை.

ஜெர்மனி என்றவுடனே சட்டென நினைவுகளில் மேலெழும்புவது ஹிட்லரும், இரண்டாம் உலகப்போரும் யூதர்கள் அழிப்பும். அந்த நினைவுகளை தூண்டும்படி கொஞ்சம் வரலாற்றுத் தகவல்களோடு போர் சாகசத் திரைப்படங்களை ஏராளமாய்த் தயாரித்து அளித்தது ஹாலிவுட். ஆனால், அவை பெரும்பாலும் ஒருதலைப்பட்சமான பார்வையில், சிந்தனையில் எடுக்கப்பட்டவை. உலக யுத்தத்தின் இறுதிப் பகுதியின் அரங்குகளில் பங்கேற்ற அமெரிக்கப்போர் இயந்திரம், பிரிட்டன், பிரான்ஸ், போலந்து, ஹங்கேரி, ரஷ்யா அளவுக்கு உயிர் பலிகளையும், ஊர்சிதைவு அழிவுகளையும் சந்திக்கவில்லை. ஹாலிவுட் தயாரிப்புகளாய் நாம் பார்க்கநேரிட்ட 2-ம் உலகப்போர் பின்னணியிலமைந்த பெரும்பாலான திரைப்படங்களில் ஜெர்மன் போர் இயந்திரத்தை சுக்குக்கும் உதவாதது போலவும், புத்தி கூர்மை, யுக்தி, வியூகம், என எல்லாவற்றிலுமே அமெரிக்க ராணுவம்தான் மற்ற எல்லா நாட்டு ராணுவங்களைக் காட்டிலும் உயர்ந்ததாயும் சிறப்பானதாயும் காட்டிக்கொள்ளும் விதமாகவே எடுக்கப்பட்டு வந்தன. அதேசமயம் உலகப்போர் பின்னணியில் இத்தாலி, பெல்ஜியம், போலந்து, ஹங்கேரி, ரஷ்யா ஆகிய நாடுகளில் உருவான திரைப்படங்கள் ஓரளவுக்கு நியாயமான பார்வையையும் நம்பகத் தன்மையையும் கொண்டிருப்பன. அவற்றில் ஜெர்மன் தயாரிப்புகளில் உருவான சில திரைப்படங்களைப் பற்றி பார்க்கலாம்.

EIN LIED VON LIEBE UND TOD- இந்த ஜெர்மன் சொற்றொடர், GLOOMY SUNDAY எனும் ஜெர்மன் திரைப்படத்துக்கான மூல நாவலின் தலைப்பு ஆகும், நாவலை எழுதியவர் NICK BAR KOW என்பவர் மூன்று ஆண்களுக்கு இடையில் ஒரு பெண் என்றும் சொல்லலாம். இத்தோடு கொலைக்காரத்தனமான ஓர் இனியபாடலும் – இசையும் சேர்ந்த பயங்கர காலக்கட்டத்து கதை. கதை, 2-ம் உலகப்போருக்கு முந்தைய 30-களின் ஹங்கேரிய தலைநகர் புடாபெஸ்டில் ஓர் உயர்தர உணவுவிடுதியில் நடைபெறுகிறது. விடுதியின் பெயர் ஸாபோ [SIABO]. அதன் உரிமையாளரான லாஸ்லோஸாபோ [LASZLOSZABO] ஒரு ஹங்கேரிய யூதர். அந்த உணவுவிடுதியில் பரிசாரகம் செய்யும் அழகிய யூத இளம்பெண் இலோனா வர்னால் [ILLONA VARNAL] என்பவள். இசைஞானமும் இனிய குரலும் கொண்ட இலோனாவும் விடுதி உரிமையாளர் லாஸ்லோஸாபோவும் காதலர்கள்.

மூன்று ஆண்களுக்கிடையில் ஒரு பெண் மற்றும் அபாயகரமானதொரு அற்புதபாடல் என்பது இப்படத்தின் சாரம். மேற்கத்திய சாஸ்திரிய இசை ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி, ஹங்கேரி, போலந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் புகழ்பெற்ற இசைமேதைகளை கொண்டிருந்தன. ஹங்கேரிய பெருநகர் புடாபெஸ்டில் [BUDAPEST] உணவு விடுதிகளில் மற்ற ஐரோப்பிய, ஓட்டல்களில் இருப்பது போலவே பியானோ இசைச்சேவை முக்கியமாயிருக்கும். ஸாபோ உணவு விடுதியிலும் மிக மதிப்பு வாய்ந்த பியானா இருந்தது. அதை இசைக்க இசைக்கலைஞன் வேண்டி அறிவிப்பு செய்தபோது பலர் நிராகிக்கப்பட ஓர் இளைஞன் ஏழ்மை கோலத்தில் வந்து வாசித்து ஸாபோவை கவர்ந்து பணியில் அமருகிறான். அவன் பெயர் ஆண்ட்ராஸ் அராடி [ANDRAS ARADJ]. ஆன்ட்ராஸும் இலோனாவும் இசையின் இழுப்பில் ஈர்க்கப்படுகின்றனர். இதன்போக்கில் இலோனா ஒரே சமயத்தில் இரு ஆண்களை மனம் – உடல் ரீதியாக காதலித்து பழகுகிறாள். ஆன்ட்ராசும் ஸாபோவும் இந்த விஷயத்தில் ஒருவரையொருவர் தாராளமாய் அனுசரித்தே நடந்து கொள்ளுகின்றனர். திரௌபதை – பாண்டவர்கள் உறவுகூட இவ்வளவு நெருக்கமாய் இருந்திருக்குமென்பதுகூட சந்தேகம். இச்சமயம் ஜெர்மனியில் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் முன்னணியிலிருந்த தொழில் அதிபர் ஹான்ஸ் எபர்ஹார்டுவைக் [hanseberhardwieck] என்பவன் புடாபெஸ்டுக்கு வந்தவன் ஹாபோ உணவு விடுதியில் இலோனா பரிமாறிய மாட்டிறைச்சி ரொட்டிச் சுருளின் சுவைக்கு [BEEF ROLL] அடிமையாவதோடு இலோனாவிடமும் மனம் பறிகொடுக்கிறான்.

Bioscope Karan 26th WebSeries by Vittal Rao. This Series About Germany movies பயாஸ்கோப்காரன் ஜெர்மன் சினிமா ஒன்று 26 – விட்டல்ராவ்

இதனிடையில் ஆன்ட்ராஸ் ஒரு புதிய இசைக்கோர்வையை பியானோவில் வாசிக்கிறான். அது அவன் மனதில் அதற்கான வார்த்தை வடிவங்களைக் கொண்ட இசைக்கோர்வை. அதை அவன் “GLOOMY SUNDAY” என அழைக்கிறான். அவ்விசைக் கோர்வை முதலில் மனதைச் சுண்டியிழுக்கும். அது சிறிது சிறிதாக ஓர் உயர்ந்த சோக வேகத்தை நோக்கிச் செல்லும். பரந்து நீண்டு வேகமெடுத்த ஆற்றைப்போல. அதன் ஓட்டம் அதிசோகமானது. இசைக்கோர்வையை கேட்பவர் வாடி வதங்க, சாய்ந்து சுருள வேண்டியது. பிறகு அச்சோக இசைக்கோர்வையால் ஒரு பயங்கர சூழலுக்கு கேட்போரை இழுத்து செல்லும். அதில் கேட்போரில் சிலர் அமிழ்ந்து சுழன்று செத்துப் போவர். நிறையபேர் தாங்க முடியாது தற்கொலை செய்து கொண்டார்கள். ஆன்ட்ராஸின் நோக்கம், தன் இசையைக் கேட்பவர் தற்கொலை புரியவேண்டுமென்பதல்ல. ஆனால் பலவீனமான இதயமுள்ளவர்கள் அந்த இசையால் தாங்கவொண்ணா சோகம் மேலிட்டு அதீத உணர்ச்சிவசப்பட்டு தற்கொலை செய்து கொண்டார்கள் அல்லது மார்வலி கண்டுமாண்டார்கள்.

பியானோவில் இசைக்கப்பட்ட GLOOMY SUNDAY கோர்வையின் சோகம் மேலிட்ட உணர்ச்சிப் பெருக்கால் ஒரு கனவான ஸாவோ விடுதியில் விழுந்து சாகிறார். அடுத்தடுத்து ஐந்து தற்கொலை நிகழ்வுகளை அந்தப்பாடல் ஏற்படுத்தவும் இதுபோன்ற செய்திகளுக்கே காத்திருக்கும் ஊடகம் ஒன்று தன் நிருபர்களை அனுப்பி ஆன்ட்ராஸை பேட்டியெடுத்து GLOOMY SUNDAY கீத விவகாரம் பத்திரிகையில் முதற்பக்க செய்தியாகப் போடுகிறது.

ஒரேசமயம் இரு ஆண்களோடு உறவு வைத்த இலோனாவின் வாழ்வில் மூன்றாவது காதலனாக அதேசமயம் ஒருதலைக்காதலாக – ஜெர்மன் பணக்காரன் ஹான்ஸ் எபர்ஹார்டுவைக் நுழைகிறான். ஒருநாள் விடுதியில் தனக்கு மிகவும் பிடித்தமான மாட்டிறைச்சி ரொட்டிச் சுருளை நிறைய உண்டு நிறைய குடித்த போதையில் அவன் இலோனாவை தன்னை மணக்கும்படி வற்புறுத்துகிறான். அந்த அழகி அவனது காதலையும் திருமண யோசனையையும் நிராகரிக்கிறாள். மனம் உடைந்த ஹான்ஸ்டான் வூபு ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முற்படுகையில் ஸாபோ குதித்து அவனைக் காப்பாற்றி ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கிறான்.

2வது உலகப்போர் தொடங்கி உலகெங்கும் உள்ள யூத இனத்தை அழிக்கும் காரியத்தில் முன்னேறும் ஹிட்லர், ஜெர்மனிக்கான “இறுதித் தீர்வை” [FINAL SOLUTION] முன்வைக்கிறார். ஹிட்லரின் இறுதித்தீர்வுத் திட்டம் படுபயங்கரமானது. நாஜி ஆக்கிரமிப்பிலிருந்த ஐரோப்பிய பகுதியில் வாழும் யூதர்களை விஷவாயுக் கிடங்குகளில் அடைத்தும், துப்பாக்கிச் சூட்டிலுமாய் கொன்றழிப்பதுதான் அது. போர் சுறுசுறுப்படையும் சமயம், ஹான்ஸ் ஜெர்மன் ராணுவத்தில் ஒரு கர்னல் பதவி பெற்று, ஹங்கேரியின் யூதர்களை இறுதித் தீர்வுக்குள் அழிக்கும் படையின் பொறுப்புள்ள ஓர் உயரதிகாரியாக புடாபெஸ்ட்டுக்கு வருகிறான். இப்போது அவன் அதிகாரபூர்வமாகவே இலோனாவை அடைய முயற்சிக்கிறான். அப்போதும் அவன் உடன்படுவதில்லை. இதற்குள் ஆன்ட்ராஸின் இசைக்கோர்வை GLOOMY SUNDAY – நூற்றைம்பது தற்கொலைகளைக் கண்டு விடுகிறது. இலோனாவின் தூண்டுதலின் பேரில் ஆன்ட்ரஸ் “இருள் சூழ்ந்த இரவு” இசைக்க வார்த்தைகளைத் தேடிவார்த்தை வடிவப் பாடலாக்குகிறான். அந்த இசைக் கோர்வையும் பாடலும் மட்டுமே அவனது படைப்பு ரீதியான இசையும் பாடலுமாகும்.

அப்பாடலைத் தன் இனிய குரலில் இலோனா பாடுவாள். ஹான்ஸ் தன் சக அதிகாரி லெப்டினண்டு கர்னல் ஈஷ்மனுடன் உணவருந்த வந்தவன் மாட்டிறைச்சி பண்டத்துக்கு சொல்லிவிட்டு காத்திருக்கையில், ஈஷ்மன் “இதென்ன, யூதனின் ஓட்டலா?” என்று கேட்பதை ஆன்ட்ராஸ் கவனிக்கிறான். இறுதித் தீர்வை நினைவூட்டுகிறான் ஈஷ்மன். இருவரும் அபரிதமாகக் குடித்துவிட்டு பியானோ இசைக்க ஆன்ட்ராசை கேட்க, ஆன்ட்ராஸ் மறுக்கிறான். ஹான்ஸ் வற்புறுத்துகிறான். ஆன்ட்ராஸ் மறுத்து பியானோவிலிருந்து தள்ளி உட்காரவே, நிலைமை விபரீதமாக காத்திருக்க இலோனா இசைக்காக பாடலைப் பாடுகிறாள். அவர்கள் எழுந்து போகையில் ஈஷ்மன் இடறி விழுந்தவன், ஸாபோதான் வேண்டுமென்றே தள்ளியதாக “யூதப்பன்றியே, என திட்டி அடித்து உதைக்கிறான். ஹான்ஸ் சமாதானப்படுத்தி அழைத்துப் போகிறான். ஒரு வெடிச்சத்தம் கேட்கிறது. ஆன்ட்ராஸ், ஹான்ஸின் துப்பாக்கியைப் பறித்துத் தன்னைச் சுட்டுக்கொண்டு செத்து கிடக்கிறான். GLOOMY SUNDAY பாடலுக்கு தற்கொலை புரிந்து கொண்ட 151-வது மனிதனாகிறான் ஆன்ட்ராஸ்.

யூதர்களை கூட்டம் கூட்டமாய் ரயிலில் ஏற்றி காஸ் சாம்பர்களுக்குள் அடைத்துக் கொல்ல கொண்டு போகிறார்கள். பணம், நகைகள் தருபவர்களை அதிகாரிகள் உயிர்பலியிலிருந்து தப்புவித்து போரிலிருந்து விலகி நிற்கும் “நியூடரல்” தேசங்களுக்கு போய்விட அனுமதிச்சீட்டு தருகிறார்கள். இலானாவையும் ஸாபோவையும் காப்பாற்றுவதாய்க் கூறிவிட்டு ஹான்ஸ் ஸாபோவை விஷவாயுப் பயணம் போகும் ரயிலில் ஏற்றியனுப்பி விடுகிறான். இலோனா கெஞ்சுகிறாள். ஸாபோவைக் காப்பாற்ற ஹான்ஸுக்கு அவள்தன் உடலையே தருகிறாள். அவளை அனுபவித்துவிட்டு ஏமாற்றி விடுகிறான் ஹான்ஸ்.

போர் முடிவுக்கு வருகிறது. வயதான ஹான்ஸ் தன் கிழ மனைவியோடு புடாபெஸ்டுக்கு வந்து ஸாபோ விடுதிக்குள் நுழைகிறான். 80-வயதை தொழிலதிப நண்பர்கள் அவனை அங்கு வரவழைத்துக் கொண்டாடுகிறார்கள். அதே மாட்டிறைச்சி ரொட்டிச் சுருள் தட்டில். ஸாபோ விடுதியை வயதான இலோனாவும் அவன் மகனும் பார்த்துக் கொள்ளுகிறார்கள். அதே GLOOMY SUNDAY பாடல் இசைத்தட்டு போடப்படுகிறது. பாடல் முடிகையில் ஹான்ஸ் துடிதுடித்து ஸாபோ விடுதியின் தரையில் சவமாகக் கிடக்கிறான்.

GLOOMY SUNDAY என்ற உள்ளத்தை உருக்கும் பாடலைப் படத்தில் இலோனாவுக்கு குரல் கொடுத்து அருமையாகப் பாடியவர் ஹதர்நோவா [HEATHER NOVA] என்பவர். ஹான்ஸ் எபர்ஹார்டு பாத்திரத்தில் BENBECKER என்ற ஜெர்மன் நடிகரும், ஆன்ட்ராஸாக STEFANO DIONISI என்பவரும், ஸாபோவாக JOACHIM KROL என்பவரும், இலோனாவாக ERIKA MAROZSAN என்ற நடிகையும், அற்புதமாய் நடித்திருக்க, ஒப்பற்ற ஒளிப்பதிவை போலந்து காமிராமென் EDWARD KLOSINSKI என்பவர் செய்திருக்கிறார். இச் சிறந்த ஜெர்மன் திரைப்படத்தை இயக்கிய ஜெர்மன் இயக்குனர் ROLF SCHUBEL தம் நேர்காணலில் கூறியதாவது “IT IS DIFFERENT TO THE WAY AMERICANS DEPICT NAZIS IN THEIR MOVIES, BUT ONE NEEDS STO DIFFERENTIATE AND FIND OTHER WAYS OF PLAYING NAZIS.” இதே கருத்தில்தான் ஜெர்மனியில் வேறு பலர் எடுத்திருக்கும் உலகப்போர் படங்களும் இருக்கின்றன. பெரிய எடுத்துக்காட்டு: “வீழ்ச்சி” – DOWNFALL எனும் ஒப்பற்ற 2-ம் உலகப்போர் பற்றிய ஜெர்மன் படம்.

Bioscope Karan 26th WebSeries by Vittal Rao. This Series About Germany movies பயாஸ்கோப்காரன் ஜெர்மன் சினிமா ஒன்று 26 – விட்டல்ராவ்

போரின் கடைசி கட்டம். பெர்லின் முற்றுகை. பெரு நகரம் ரஷ்ய ராணுவத்தால் நாற்புறமும் சுற்றி வளைக்கப்பட்டு விட்ட நிலையில், ஜெர்மனியின் தலைநகர் பெர்லின் போர் அரங்காக மாறிவிட்ட துரதிர்ஷ்டம். பெர்லினுக்கு மேற்கு முனையில் அமெரிக்கப்படை அதன் நான்கு ஸ்டார் பெற்ற தளபதி ஜெனரல் பேட்டன் [PATTON] தலைமையில் வந்து பெர்லினுக்குள் நுழைய காத்திருந்தது. அவர் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஐசனோவரின் அனுமதி – உத்தரவு பெறாது நேரடியாக தன்னிச்சையாக பெர்லின் நகருக்குள் நுழைந்து ஹிட்லரை கைது செய்ய நினைத்தார். பெர்லினுக்கு கிழக்கு முனையில் ரஷ்ய ராணுவம் ஜெனரல் ஜுகாவ் [GEN.ZUCKOV] தலைமையில் பெர்னிலுக்குள் நுழைய கடுமையாகப் போரிட்டு முன்னேறி வந்தது. அவர் எந்த ஒரு காரியத்துக்கும் தன் நாட்டு அதிபர் ஜோசப் ஸ்டாலின் அனுமதியும் உத்தரவுக்குமே பணிந்து செயல்படுவார். ஜெனரல் பேட்டன் பெர்லினுக்குள் முதலில் நுழைவதை சோவியத்துகள் எதிர்த்தார்கள்.

பல வகையிலும் ஜெர்மனியின் ரஷ்ய ஆக்கிரமிப்பின்போது நாஜி ராணுவத்தின் பயங்கர தாக்குதலில் கோடிக்கணக்கில் ரஷ்யர்களைப் பறிகொடுத்திருந்தது சோவியத் யூனியன். இறுதிப்போரின் வெற்றிமுனைக்கு லகம் வந்ததே, ஜெர்மன் இராணுவத்தை ரஷ்ய கடுங்குளிர் தட்பவெப்பம் வரும் வரை பல இன்னல்களைப் பொறுத்து காத்திருந்து அவர்களை அடித்து நாசமாக்கி இன்று பெர்லின் கிழக்கு வாசலில் வந்து நிற்கும் ரஷ்யாதான். பெர்லினிக்குள் முதலில் நுழையும் வாய்ப்பும் ரஷ்யாவுக்குத்தான் உரித்தானது என்று ஜெனரல் ஜுகாவ் கூறுகிறார். பேட்டனோடு பேசிப் பயனில்லையென்று அவர் ஸ்டாலினைத் தொடர்பு கொண்டு பேச, அவர் ஐசனோவரோடு தொடர்பு கொண்டு நிலைமையை கூறுகிறார். ஐசனோவர் ஜெனரல் பேட்டனிடம் ரஷ்யர்களே பெரலின் நுழைவை முதலில் வைத்துக் கொள்ளப்படும் என்று கூறிவிட்டு பேட்டனை தன்னை வந்து பார்க்க கட்டளையிடுகிறார்.

சுயேச்சையாக முடிவு எடுத்ததற்காகவும், ரஷ்ய தளபதியோடு தேவையின்றி வாக்குவாதம் செய்ததற்காகவும் தண்டனையாக ஜெனரல் பேட்டனின் நான்கு நட்சத்திரங்களையும் பறித்துக் கொண்டதோடு அவருக்கு ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகள் எதுவுமில்லாமல் வெற்று மனிதனாக பேட்டனை அனுப்புகிறார். பிற்காலத்தில் அமெரிக்கா தன் பிரபல கவச மோட்டார்களுக்கு ‘PATTON TANKS’ என பெயரிட்டு பாகிஸ்தானுக்கு கொடுத்தது.இந்த பிரம்மாண்ட பேட்டன் கவச மோட்டார்களில் நூற்றுக்கணக்கானவற்றை பாகிஸ்தான் இந்தியபோரில் [60-கள்] இந்திய ராணும் தன்னிடமிருந்த பழங்கால பிரிட்டிஷார் விட்டுப்போன CENTURIAN TANKS-களைக் கொண்டே நாசமாக்கியது வேறு வரலாறு.

இந்த நிலையில் ரஷ்ய ராணுவம் ஜெர்மன் ராணுவமான “வெஹர்மாட்” படையுடன் கடுமையான இறுதிச் சண்டையில் ஈடுபட்டிருக்கிறது. இனி DOWNFALL திரைப்படம். இந்தப்படம் மிகச் சிறந்த அந்நிய மொழிப் படம் என 2004-ல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 2004-ல் வெளிவந்த இப்படம் மிகச் சிறந்த போர் பின்னணிப் படங்களில் ஒன்றாக உலகளவில் கருதப்படுகிறது.

“THIRD REICH” என்பது ஜெர்மன் அரசின் ஹிட்லர் காலத்தைக் குறிப்பது. “RISE AND FALL OF THIRD REICH” என்பது மற்றொரு பிரம்மாண்டமான பழைய திரைப்படம். “THE FALL OF BERLIN” என்பது ரஷ்ய தயாரிப்பிலான பிரம்மாண்டமான 70MM திரைப்படம். நூற்றுக்கணக்கில் 2-ம் போர் பின்னணியில் சர்வதே மொழிகளில் திரைப்படங்கள் இருக்கின்றன.

ஹிட்லரும் அவரது அதிமுக்கிய அதிகாரிகள் எனும் ஃபாசிஸ சக்திகளும் அடங்கி ஒடுங்கி ஹிட்லரின் பாதுகாப்பு நிலவறைக்குள் [BUNKER] குழுமியிருக்கும் 2-ம் உலகப் போரின் இறுதிக்கட்டம். ஹிட்லர் தன் இறுதி நாட்களில் தனது சிறப்பு பங்கரில் தனக்கான பெண் காரியதரிசியைத் தேர்வு செய்து நியமிப்பதிலிருந்து படம் தொடங்குகிறது. அந்த அழகிய இளம் பவேரியப் பகுதயைச் சேர்ந்த காரியதரிசியின் பெயர், ட்ரோட்ல் கங்க் [TRAUDL JUNGE] கங்க்-ன் பார்வையில் வார்த்தைகளை வழியே முழுப்படமும் சொல்லப்படுவதாய் இயக்குனர் எடுத்துச் செல்லுகிறார். ஜோக்கும் ஃபெஸ்ட் [JOACHIM FEST]என்பவர் எழுதிய “INSIDE HITLERS’S BUNKER என்ற ஜெர்மன் நூலையும் ஹிட்லரின் இறுதிகால காரியதரிசிப் பெண் ட்ரோடள் கங்க்-ம்மெல்லிசா முல்லர் [MSELISSA MULLER] என்ற பெண்ணும் சேர்ந்து எழுதிய “இறுதி நேரம் வரை” [UNTILTHE FINAL HOUR] என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு DOWNFALL திரைப்படம் தயாரிக்கப்பட்டது.

ஹிட்லர தமது வலிமை மிக்க 9-வது படைப்பிரிவை பெரிதும் நம்பியவராய் ஒளிமங்கிய தம் பதுங்கு அறைகளிலிருந்து கொண்டு, முன்னேறிவரும் ரஷ்ய துருப்புகளுடன் பலத்த பதிலடி தந்து விரட்டியடிக்குமென எதிர்பார்த்து தம் படைத் தளபதிகளுக்கு தைரியம் தருகிறார். அவர்களோ, “9-வது படைப்பிரிவு முற்றிலும் ரஷ்யர்களால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் செயலிழந்து நிற்கிறது” என்று பதிலளிக்கின்றனர். நாம் ஹிட்லரின் முகமாற்றத்தைக் கவனிக்கிறோம். அவரது அசுரத்தனமான மன உறுதி கிழட்டு முகத்தில் இன்னும் வெளிப்படுகிறது. அதே சமயம் உடல்ரீதியாக மிகவும் சீணிக்கப்பட்டும் நரம்பு தளர்ந்தும் உளவியல் தொந்தரவும் மேலிட்ட அவரது இடதுகை சதா நடுங்கிக் கொண்டிருப்பதையும் மற்றவர்கள் அதை கவனித்து விடாதபடிக்கு அதை மறைக்கும் பொருட்டு அவர் பின்புறமாய் அந்தக் கையைக் கட்டிக் கொண்டு செயல்படுவதைப் பார்க்கிறோம். ஜெர்மன் இராணுவத்தில் ஆள் பற்றாக்குறையால் பள்ளிக்கூடப் பையன்களையும் சேர்த்து ஆயுதமேந்த வைக்கின்றனர். அவர்களை நிற்க வைத்து விசாரித்தபடியே, “எதிர்கால ஜெர்மனி” என்று ஹிட்லர் குறிப்பிடுவது திகிலூட்டுகிறது. பெர்லினை சுற்றிவளைத்து நகரை நோக்கி முன்னேறும் ரஷ்யப்படைகளிலிருக்கும் தொலைவை அவ்வப்போது ஹிட்லருக்கு தெரிவிக்கப்படுகையில், அவர் 12-வது படைப்பிரிவை அனுப்பச்சொல்லுகிறார்.

12-வது படைப்பிரிவும் ரஷ்யர்களால் வளைக்கப்பட்டு நகர முடியாதிருக்கிறது” என அவர்கள் சொல்லும்போது ஆத்திரத்தில் கத்துகிறார் ஹிட்லர். ஹிட்லரைத் தப்பித்து ஓடிவிடும்படி கேட்டுக் கொள்ளுகிறார்கள். தன்னால் அது இயலாதென்று கூறி மறுத்து விடுகிறார் ஹிட்லர். அதே சமயம் அவரது படைப்பிரிவினருள் பலரும், GESTAPO காவல் துணை அதிகாரிகள் சிலரும்,
எஸ். எஸ். [S.S.(SCHLDZ STAFFEL)] எனும் கொடிய சிறப்புப்படையின் முக்கியமானவர்களும் அர்ஜெண்டினா போன்ற நாடுகளுக்குத் தப்பி ஓடிவிட்டார்கள். அவரைச் சுற்றியிருந்த பெண் ஊழியர்கள் இறுதிவரை அவரோடயே இருந்துவிட முடிவு செய்கின்றனர். நேரம் வந்துவிடுகிறது. “நாம் ரஷ்யர்களிடம் சரணடைவதைவிட அமெரிக்காவிடம் சரணடைவதே நல்லது. நான் வேண்டுமானால் ஐசனோவரிடம் பேசுகிறேன்”, என்கிறார் கோயபெல்ஸ். ஹிட்லர் அந்த யோசனையை ஏற்பதில்லை.

“ஒருவேளை சோவியத் தளபதியுடன் பேசவேண்டியிருக்குமானால் எவ்விதமான முறையில் வணக்கம் செலுத்த வேண்டும், ஹை ஹிட்லர் எனக் கூவி கையை விரைப்பாக உயர்த்தி நீட்டும் நாஜி வணக்கமா அல்லது சாதாரண சல்யூட் செய்வதா?” என்று ஒரு பெண் கேள்வியெழுப்புகிறாள். எதிரிகள் மிக அருகில் வந்துவிட்ட நிலையில் முடிவாக ஹிட்லர் கூறுகிறார், “எல்லாவற்றையும் எரித்து அழித்து விடுங்கள். என் எழுத்துக்கள், பதிவுகள், ஆவணங்கள் வையும் அவர்கள் கையிலல் சிக்கிவிடாவண்ணம் எல்லா கோப்புகளையும் எரித்து விடுங்கள். நானும் போய்விடுகிறேன். என்உடல் அவர்கள் கையில் கிடைத்து உலகுக்கு காட்சிப் பொருளாகாதபடி தீயிட்டு அழித்துவிடுங்கள்” என்று ஹிட்லர் தன் கடைசி இரா போஜனத்தை தம் நெருங்கிய வட்டத்து ஊழியர்கள், தளபதிகள், அதிகாரிகளோடு சாப்பிட்டு முடிக்கிறார். அவர்களை வரிசையாக நிற்க வைத்து கை குலுக்கி விடை பெறுகிறார்.

பெண் ஊழியர்களிடம் விடைபெறும் காட்சியில் ஹிட்லரும்கூட நம் மனதை நெகிழ வைத்துவிடுகிறார். இத்தனைக்கும் தன் காரியங்களுக்காக அவர் வருந்துவதேயில்லை. ஹிட்லர் என்ற அரக்கனின் இறுதிக்கட்டம் கூட மனிதர்களான நம்மை நெகிழ வைத்து விடுகிறது. “NINE HOURS TO RAMA” என்ற 60-களின் தடை செய்யப்பட்ட திரைப்படம் பலத்த எதிர்ப்புகளையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டே தடை செய்யப்பட்டது. அதை எழுதியவர் ஸ்டான்லி ஓல்பிரட் [STANLEY OOLPRET] என்பவர். காந்தியை சுட்டுக் கொன்தற்கு ஒன்பது மணி நேரம் முன்பாக கோட்சேயின் நினைவுகளை பின்னோக்கிச் சொல்லும் நாவல் அது. அந்த இந்து தீவிரவாதியின் பேரில்கூட ஒரு கணத்தில் நெகிழ்வு ஏற்பட்டுவிடக்கூடும். ஏனென்றால் நாம் சாதாரண மனிதர்கள்.

முதலில் ஹிட்லர் நேசிக்கும் அவரது அல்சேஷன் நாய் விஷம் [சயனேடு] வைத்து சாகடிக்கப்படுகிறது. ஒண்டிக் கட்டையாக ஹிட்லர் சாகக்கூடாதென்று, அத்கு முன் அவருக்கு திருமணம் செய்வித்து இருவரையும் சாகவிடவேண்டுமென்று ஏற்பாடாகிறது. ஈவா ப்ரான் [EVA BRAUN] என்பவளை திருமணம் செய்து வைக்கிறார்கள். ஹிட்லரும் மனைவியான ஈவா ப்ரானும் சுட்டுக்கொண்டு சாகிறார்கள். இக்காட்சி சில கணங்களுக்கு நம்மை சிலிர்க்கச் செய்து விடுகிறது. அந்த இரு உடல்களையும் எரிக்க பெட்ரோல் இல்லை. ஹிட்லருடைய கார் உள்ளிட்ட பல வண்டிகளிலிருந்து பெட்ரோல் எடுக்கப்பட்டு கொண்டு வந்து ஊற்றி எரிக்கிறார்கள். இந்தக் காட்சியம் அசாதாரணமாய் நிறுத்திவிடுகிறது. இதற்கு முன்பாக கோயபெல்ஸின் மனைவி பதினான்கு குழந்தைகளுக்கு சயனைடு ஊட்டி கொல்லும் காட்சி நம்மை ஆட வைத்து விடுகிறது. அடுத்து தங்களைச் சுட்டுக் கொண்டு சாகும் கோயபெல்ஸ் தம்பதிகளின் உடல்களும் எரிக்கப்படுகின்றன. பெர்லின் சோவியத் இராணுவம் வசமாகிறது. பெண்கள் வெளியேறுகையில் போரிலீடுபட்ட சிறுவன் ஒருவனோடு ட்ரோட்ல் கங்க் போகையில் ஒரு பாலத்தடியில் கிடாசப்பட்ட சைக்கிள் ஒன்றைப் பையன் எடுத்துவர அவனை முன்னால் வைத்து கங்க் மிதித்துச் செல்லும் காட்சியோடு படம் முடிகிறது.

அடால்ஃப் ஹிட்லராக மிக்க தோற்ற ஒற்றுமையோடும் மிக அற்புதமாயும் நடித்தவர் சுவிஸ் நாட்டு நடிகர் ப்ரூனோ கான்ஸ் [BRUNO GANZ] இப்படத்தில் நடிப்பதற்கு முன்பே இவர் முக்கிய ஜெர்மன் பேசும் நடிகராக போற்றப்பட்டவர். கான்ஸ் தமது 77-வது வயதில் 2019-ல் ஜுரிச் நகரில் கான்ஸர் நோயால் காலமானார். ட்ரோட்ல் கங்க் பாத்திரத்தில் நடித்தவர் அலெக்ஸாண்ட்ரா மரியா லாரா [ALEXANDRA MARIA LARA] என்பவர். ட்ரோட்ல் கங்க் ஹிட்லரின் இளம் பக்தையென குறிப்பிடப்பட்டவள். ஜெர்மனியிலிருந்த பல்வேறு நிறுவனங்களில் காரியதரிசியாகப் பணியாற்றிய கங்க் 2002-ல் காலமாகும்வரை மியூனிக் நகரில் வசித்து வந்தான். படத்தின் இறுதியில் வயதான கங்க் ஹிட்லரோடுதான் பணிபுரிந்த இறுதி அனுபவத்தை ஓரிரு நிமிடங்களுக்குப் பேசிய பேச்சும் தோற்றமும் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு பிறகு படத்தின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஹிட்லரின் மனைவி ஈவா ப்ரானாக ஜுலியன் கொஹ்லெர் [JULIANE KOHLER] என்பவள் நடித்திருக்கிறாள். திரைக்கதை வசனத்தை பெர்ன்ட் ஐஷிங்கர் [BERND EICHINGER] என்பவர் எழுத ஒளிப்பதிவை ரெய்னர் க்ளாஸ்மன் திறம்பட காமிராவில் செய்திருக்கிறார் [RAINER KLAUSMANN] இசைப் பொறுப்பு ஸ்டீஃபன் ஜக்கரிரியா [STEPHAN ZACHARIA] என்பவரது அற்புதமான முறையில படத்தை இயக்கியவர் ஆலிவர் ஹிர்ஷ்பைகல் [OLIVER HIRSCHBIEGEL] இதே காலத்தில் (2003) வெளிவந்த மிக மிக அற்புதமான 2-ம் உலகப்போர் ஜெர்மன் திரைப்படம் “தஸ் பூட்” [DAS BOAT] ஹிட்லரின் “U BOAT” எனவும் அறியப்பட்ட பயங்கர நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றைக் கொண்ட அரிய படம் புதிய இளையவர்களோடு பயணமாகும். அதி நவீன நீர்மூழ்கியுள்ள காமிராவுடன் பத்திரிகையிலிருந்து வந்த யூத நிருபரும் ஒருவன் வேசிகளோடு கிளப்பில் ஆடலும் பாடலும் குடியுமாய் தொடங்கி ஆழ்கடலுக்குள்ளும் வெளியில் மிதந்தும் பாய்ந்தோடும் நீர்மூழ்கி, குடித்துவிட்டால், உள்மனம் உண்மைகளை உளரவைக்கும். வயதான தாம்ஸன் காப்டன் குடிபோதையில் கூறுகிறார்: “பெண் உறவில்லாத ஹிட்லர். சதா சுருட்டே வாயில் கதியான குண்டன் சர்ச்சில்” இப்படத்தில் ஒரு நீர்மூழ்கிக் கப்பலின் உள்ளே சகல காட்சிகளையும் பார்க்கிறோம்.

மாலுமிகளின் அந்தரங்க வாழ்க்கையும் கோடி காட்டப்படுகிறது. புகழ்பெற்ற பிரிட்டிஷ் நாசகாரி கப்பல் [DESTROYER] ஒன்றை ஓபோட் அடித்து மூழ்கி விடும்காட்சி சிலிர்க்க வைக்கிறது. இறுதியில் DAS BOOT நீர் மூழ்கி பலமாய் தாக்கப்பட்டு 260 மீட்டர் ஆழத்துக்கு கீழே மூழ்கி பாறை படிமங்களில் மோதி நிறைய விரசல்களைப் பெற்று கடல் நீரின் அதிவேக பாய்ச்சல் மிக்க கசிவுகளால் சிறுகச் சிறுக செத்துக் கொண்டிருக்கும் இறுதி காட்சிகள். நிகரற்ற இந்த ஜெர்மன் யுத்தப் படத்தை இயக்கியவர் வுல்ஃகாங் பீட்டர்சன். [WOLF GONG PETERSON].

Bioscope Karan 25th WebSeries by Vittal Rao. This Series About Italy movies பயாஸ்கோப்காரன் ஃபெல்லினி மற்றும் அண்டோனியோனி 25 – விட்டல்ராவ்

தொடர் 25: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



இத்தாலி – 3
ஃபெல்லினி மற்றும் அண்டோனியோனி

Bioscope Karan 25th WebSeries by Vittal Rao. This Series About Italy movies பயாஸ்கோப்காரன் ஃபெல்லினி மற்றும் அண்டோனியோனி 25 – விட்டல்ராவ்

நையாண்டி என்பது [SATIRE] கவிதை, கதை, நாடகம் என தொடங்கி, சினிமாவின் ஓர் அங்கமாயும் விளங்கலாயிற்று. தமிழில் சிறுகதைகள் சிலவற்றில் நையாண்டியை [SATIRE] மிக அற்புதமாக செய்து காட்டியவர் புதுமைப்பித்தன். இதில் சுயதிருப்தியும் அடங்கும், பழிவாங்கலுமுண்டு… இந்த முக்கிய இலக்கிய வகைப் பிரிவு மராத்திய நாடகம், தமிழ்சினிமா என்றும் தொட்டிருக்கிறது. உலக சினிமாவில் இத்தாலிய பங்களிப்பாக மிக உயர்ந்த நையாண்டி வகைப் படங்களை இயக்கியளித்தவர், ஃபெடரிகோ ஃபெல்லினி [FEDERICO FELLINI], இத்தாலிய சினிமாவின் முதல் அலை நியோ ரியலிஸம் என்றால், இரண்டாவது அலை பெல்லினியின் Satire வகைப் படங்களும், மைகேலாஞ்செலோ அண்டோனியோனியின் [MICHELANGELO ANTONIONI] அங்கத முடிவைத் தீண்டிய பல படங்களும் எனலாம். பெல்லினி ஓரிரு படங்களை நியோ ரியலிஸப் பாணியில் [LA STRADA; I VITELLONI] இயக்கிய பின்னர் தான் தனது சட்டையர் மற்றும் சுயசரிதை வகைப் படங்களை [ROMA; AMARCORD; SATYRICON] இயக்கினார்.

பெல்லினி 1921-ல் ரிமினி [RIMINI] எனும் சிற்றூரில் பிறந்து தனது 19வது வயதில் ரோமுக்கு இடம் பெயர்ந்தார். சட்டம் படிக்க புறப்பட்டவர், சினிமாவுக்குள் மூழ்கிப் போனார். பத்திரிகைகளில் நிருபராயும், கிசு கிசு விஷயங்களை துண்டுத் துக்கடாவாய் எழுதுபவராயுமிருந்திருக்கிறார். 1944-45ல் அவர் புகழ் பெற்ற இத்தாலிய இயக்குனர் ராபர்டோ ரோசெல்லினியிடம் உதவி இயக்குனராயிருந்து “ROME- OPEN CITY” படத்துக்கு திரைக்கதை எழுதினார். 50-களில் அவர் தாமே திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார்.
1953-ல் அவர் “I VITELLONI” எனும் ஜனரஞ்சகமும் நியோரியலிஸமுமாய் ஒரு கருப்பு வெள்ளைப் படத்தை இயக்கினார். இதற்குப் பிறகு பெல்லினி இந்தப் பாதையை விட்டு வெளியேறினார்.

ஐந்து இளைஞர்கள் தங்கள் வீட்டிலிருந்து கிடைத்த பணத்துடன் மனம்போன போக்கில் மது, மாது, சூது என்று செலவழித்துச் சுற்றும் கதைப் படம். இதில் வரும் பல நிகழ்வுகளில் சில பெல்லினியின் சுய வரலாறுபோல என்பாருண்டு. ஓரளவுக்கு நன்கு எடுக்கப்பட்ட படம். 1954-ல் பெல்லினியின் புகழ் பெற்ற கருப்பு, வெள்ளைப் படம். “LA STRADA” (பாதை) வெளிவந்தது. மெக்சிகோவில் பிறந்து ஹாலிவுட்டில் சங்கமித்த பிரபல குணசித்திர நடிகர் ஆந்தனி குவின் [ANTHONY QUINN] ஜம்பனோ [ZAMPANO] எனும் முரட்டு கோபக்கார கழைக்கூத்தாடி பாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். ஜம்பனோ மனைவியை இழந்த நிலையில், மச்சினியை மணக்க ஏழை மாமியாருக்கு நிறைய பணம் தந்து புது மனைவியோடு தன் பயணத்தைத் தொடருகிறான்.

ஜம்பனோவின் இளம் மனைவி ஜெல்ஸோமினாவாக [GELSOMINA] பெல்லினியின் மனைவி மசீனா [MASINA] நடித்திருக்கிறார். மோட்டார் சைக்கிள் மீது அமர்ந்த பெரிய கூடாரம் போனற வாகனத்தில் ஜம்பனோ தனக்கான படுக்கை, சமையல் என்ற சகலத்தையும் ஏற்படுத்தி நீண்ட சாலையில் பயணித்து அங்கங்கே நிறுத்தி சின்னச் சின்ன வித்தைகளைக் காட்டி காசு வாங்கிப் பிழைக்கும் முரட்டுக் கழைக் கூத்தாடி. அந்தப் பாத்திரத்தில் பிரமாதமாக நடிக்கும் ஆந்தனி குவினின் உடல் வாகுவில் மூன்றில் ஒரு பங்கே உடல் வாகு கொண்ட மசீனா, நிஜ வாழ்க்கையில் தன் கணவரும், படத்தின் இயக்குனருமான பெடரிகோ பெல்லினியின் உடல் வாகுவில் நான்கில் ஒரு பங்கே உள்ளவர். இவரது பாத்திரமும் நடிப்பும் இரக்கத்தைக் காட்டிலும் சிரிப்பையே அதிகம் வரவைக்கும்படியாயிருக்கிறது.

ஜம்பனோவுடன் ஊர் சுற்றி, உலகம் சுற்றி உபயோகமாய் புதுப் புது வித்தைகளைக் கற்று அம்மாவுக்கும் நிறைய பணம் அனுப்புவதாய் குதியாட்டம் போட்டு புறப்பட்ட ஜெல்சோமினா ஒரு வேளைச் சோற்றுக்கும் ஒரு பிடி அன்புக்கும் ஏங்கி அவஸ்தைப்படுகிறாள். முதல் நாளே, தான் கம்பி வளையத்துக்குள் நுழைந்து அதை அறுக்கும் வித்தையின்போது கூட்டத்தைப் பார்த்துச் சொல்லும் வசனத்தை மாற்றிச் சொன்னதற்காக அவளைக் குச்சியால் விளாசி வெளியில் படுக்க விடுகிறான் ஜம்பனோ. அவள் இருக்கும்போதே வேறொரு வேசியோடு படுத்ததைக் கண்டு மனமும் உடலும் பதறிய ஜெல்சோமினா ஓர் இரவன்று ஓடிப் போய் விடுகிறாள். ஒரு சிறு சர்க்கஸ் ஆட்டக் குழுவைச் சந்திக்கிறாள். அதில் இசைத்து விதூஷகன் புரியும் விகடனும், மிக உயரத்தில் கட்டில் கயிற்றின் மேல் நடந்து சாகசம் புரியும் பபூனையும் சந்திக்கிறாள். அந்த பபூன் பாத்திரத்தில் ரிச்சர்டு பேஸ்ஹார்ட் [RICHARD BASE HEART] மிக நன்றாக செய்திருக்கிறார். ஜம்பனோ அங்கு வந்து சர்க்கஸில் புதிய நட்சத்திரமாய் சேர்கிறான். ஆனால் தன் பழைய எதிரியான பபூனுக்கும் அவனுக்கும் கடும் சண்டை ஏற்படுகிறது. பபூனை தாக்கியதற்காக கைதாகி சிறையிலடைக்கப்படுகிறான் முரடன் ஜம்பனோ.

முரடனை விட்டு விட்டு தன்னோடு வந்து விடும்படி ஜெல்சோமினாவை கேட்கிறான் விதூஷகன். அவள் மறுத்து விடுகிறாள். அதே சமயம் விடுதலையடைந்து வந்த ஜம்பனோ விதூஷகனை தாக்கிக் கொன்றுவிட்டு அவனுடைய காரையும் சேதப்படுத்தி விடுகிறான். ஜெல்சோமினா ஓடிப்போய் கான்வென்ட் ஒன்றில் தஞ்சம் புகுந்து அங்கேயே மாண்டு போகிறாள். இதை பல நாட்கள் கழித்து அறிய வரும் ஜம்பனோ தனது எல்லா குற்றங்களையும் நினைத்து கடற்கரையில் கதறி விடுகிறான். இப்படம் மெலோடிராமாடித் தனத்தைக் கொண்டிருந்தாலும் பெல்லினியை உச்சத்துக்கு இட்டுச் சென்றது. LASTRADA என்றால் பாதை அல்லது பயணம் என்றாகிறது.

பெல்லினியின் சில திரைப்படங்கள் தேவாலய மதரீதியான ஒழுக்கவியல் தர்மத்துக்கு சிக்கலாயிருந்த காரணங்களால் இத்தாலியில் முக்கியமாக கத்தோலிக்கத் தலைமை பீடமான பாப்பல் நகரம் இருப்பதால், அரசு தணிக்கைக் குழுவினரால் மிகுந்த சிக்கலுக்கு உள்ளாயின. இவரது பல படங்கள், நெறிப் படி ஒழுங்காக ஒருங்கிணைந்த மதக் கோட்பாடுகளைக் குறித்த எதிர்மறையான விமர்சனங்களைக் கொண்டிருக்கும். ஆனால், பசோலினியினின்றும் தூரம் தள்ளியிருப்பவை. ஒரு பார்வைக்கு ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டதாயும் தெரியும். அதே சமயம் சில தகவல்கள் அடிப்படையில் பெல்லினிக்கு நிறைய மூட நம்பிக்கையுமுண்டு. தேவைப்படும்போதெல்லாம் அவர் ESP எனும் மீடியம்களையும் ஜோசியர்களையும் கலந்தாலோசித்ததுண்டு என அறியப்படுகிறது. மற்றொரு வேடிக்கையான செய்தி – அவர் தன் எல்லா படங்களின் ஆரூடங்களையும், அன்றைக்கு டெல்லியில் அசோக் ஓட்டலில் போய் தங்கி உலகின் பல்வேறு பிரபலங்களுக்கு ஜோதிடம் கணித்து இதோபதேசம் புரிந்துவந்த இராமகிருஷ்ண சாரதி என்ற ஜோதிட நிபுணரிடம் ஆலோசித்து [தொலைப்பேசி வழியாக] அறிவாராம். பெல்லினி இந்தியாவுக்கு வருகை புரிந்ததில்லை.

Bioscope Karan 25th WebSeries by Vittal Rao. This Series About Italy movies பயாஸ்கோப்காரன் ஃபெல்லினி மற்றும் அண்டோனியோனி 25 – விட்டல்ராவ்

தன் வரலாறுபோல படங்கள் பண்ணுவதில் பெல்லினி சமர்த்தரீ. அவ்வகையான படங்களில் ஒன்று அவர் 1972-ல் இயக்கிய வண்ணப்படமான, “பெல்லினியின் ரோமா” [FELLIN`S ROMA] இப்படம் அவரின் நினைவுகளிலிருந்து முக்கிய நிகழ்வுகளை நையாண்டி ததும்ப காட்சிக் கோர்வையாக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அவர் தம் ரோம் நகரை எவ்வளவுக்கு நேசிக்கிறார் என்பது விளங்கும் மிக தாராளமாயும் அள்ளி வாரியிறைத்து வகை வகையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெல்லினியின் சுய வரலாறு.

முதலில், தன்னைப் பள்ளிச் சிறுவனாக பூகோளமும் சரித்திரமும் ரோம் நகரின் வழியாக காண்பவராகக் காண்பிக்கிறார். அதைச் சொல்ல மாணவ, மாணவிகளை ஒரு தாடி வைத்த குரூர ஆசிரியரும் வயதான வசீகரமிக்க ஆசிரியையும் அழைத்துக் கொண்டு சிறு ஆற்றை கடப்பதிலிருந்து படம் தொடங்குகிறது. ஆசிரியர் பெருமையோடு மாணவர்களிடம் சொல்லுகிறார்.
இந்த ஆறுதான் ரூபிகான்; [RUBICN] இந்த ஆற்றை ஜுலியஸ் சீசர் கடந்துபோனார். இப்போது அதை நாம் கடக்கிறோம்.”

பிறகு வகுப்பறைக் காட்சி. ஆதியில் காட்டில் கிடந்த இரு ஆண் குழந்தைகளை ஒரு பெண் ஓநாய் பாலூட்டி வளர்த்தது. அவை வளர்ந்து ரோமுலாஸ், ரீமஸ் [ROMULOUS, REEMAS] என்று அழைக்கப்படுகின்றனர். அதனால் அவ்விடமும் ரோம் என பெயர் கொண்டது. அன்றைக்கு தங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பெண் ஓநாயின் உருவம் இன்றும் ரோம் நகர முக்கிய காட்சி கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. பெல்லினியின் ஆசிரியர் சிறு ஒளி ஒலி காட்சி மூலம் அந்த தங்க ஓநாயைக் காட்டிவிட்டு தொடர்ந்து ரோம் நகரின் புகழ்பெற்ற இடங்களைக் காட்டிக் கொண்டே வருகையில் ஒரு காட்சியில் படம் சிக்கிக் கொண்டு நின்று விடுகிறது. அக் காட்சியைக் கண்ட சிறுவர்கள் எழுந்து குதித்து கூச்சலிட்டு கைதட்டுகின்றனர். அக்காட்சியை நகர்த்த இயலாது. தாடிக் கார ஆசிரியர், விளக்கை போடுங்கள் என்று கத்துகிறார். கூடவே அதைப் பார்க்காதீர்கள், அது பிசாசு, என்று கத்துகிறார். இருட்டில் ஒரு கணம் அவர் முகம் தாடி வைத்த பிசாசாகவே தோன்றுகிறது பிள்ளைகளுக்கு, கூச்சல் அடங்கவில்லை. அந்த காட்சியில், முழு நிர்வாண கோலத்தில் ஒரு பெண் தன் பின் பக்கத்தைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள்.

பிறகு, ஜீலியஸ் சீசர் நாடகம் நடித்துக் காட்டப்படுகிறது. “YOU TOO BRUTE?” என்று கேட்டுக் கொண்டே புரூட்டஸ்ஸின் கடைசி கத்திக் குத்தோடு சீஸர் சாயும் காட்சி.
அதன் பிறகு பெல்லினி ஓர் இளைஞனாக அறிமுகமாகிறார். நிகழ்வுகள் இதிலிருந்து வேகமாக நகர்த்தப்படுகின்றன. ரோமா பெல்லினியின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை, அவற்றில் முக்கியமானவற்றை ரோம் நகர வரலாறு வழியாக ஓர் அரிய தினப்படி சேதிக்குறிப்புப் பெட்டகமாய் [DIARY] தத்தளித்திருக்கிறார் ஃபெடரிகோ ஃபெல்லினி, படத்தின் இறுதி காட்சிகளில் ஒன்று ஃபாசன் காட்சி [FASION PARADE] ஆண், பெண்கள் புதுப் புதுசாக உடையணிந்து உடையலங்கார காட்சி நடைபெறுகிறது. அதில் பங்கேற்று நவீன மோஸ்தரில் மத ரீதியான ஆடைகளை [சாமியார்- கன்னியாஸ்திரிகளின் அங்கிகள்] அணிந்து போப் பாண்டவர் வந்து போகும் காட்சி. அதைத் தொடர்ந்து மடாலய கன்னிகளும், பாதிரியார்களும் ஆடைகளணிந்து ஒயிலாக நடந்துபோகும் காட்சிகள் பெல்லினியின் நையாண்டித்தனத்துக்கு ஆபத்தான உதாரணங்கள், ரோமா ஏற்கெனவே 1969-ல் பெல்லினி இயக்கிய வண்ணப்படமான “சட்டைரிகன்” [SATYRICON] என்ற படத்தின் தொடர்ச்சியாகவே கருதப்படுகிறது.

மிகவும் விவாதிக்கப்பட்ட பெல்லினியின் கருப்பு வெள்ளைப் படம் “8½” 1965-ல் வெளிவந்த இப்படம் சர்வதேச அளவில் விவாதங்களையும் உயர்ந்த மதிப்பீடுகளையும் கொண்டது. இதில் மார்செல்லோ மாஸ்டிரியாயினியின் நடிப்பு அபாரம். கருப்பு வெள்ளை ஒளிப்பதிவை அதன் உச்சத்துக்கு இட்டுச் சென்ற உலகத் திரைப்படங்களில் 8½ ஒன்று என கூறலாம். படம், நாம் ஏற்கெனவே த்ரூஃபா, [DAY FOR NIGHT] மிருனாள் சென் செய்த, திரைப்படங்களுக்கெல்லாம் முன்னோடியாய் எடுக்கப்பட்ட, “திரைப்படத்துக்குள் திரைப்படம்” வகையானது. படத்தின் இறுதிக் காட்சி ஆரம்பக் காட்சிக்கே வந்து நிற்கிறது. படத்தின் ஆரம்பத்தில் இடம் பெறும் சாலைப் போக்குவரத்து நெரிசல் காட்சி நிகழ்வுகள் அதியற்புதம். இதில் பெல்லனி ஒரு “FANTACY” காட்சியையும் புகுத்தியுள்ளார்.

ரோமானிய வரலாற்றை ஒட்டின பழங்கதை, அதற்கான பழங்கட்டிடங்கள் சார்ந்த நாவல் ஒன்றை பெட்ரோநியஸ் [PETRONIUS] என்பவர் எழுதினார். அந்நூலை அடிப்படையாய்க் கொண்டு தன் வரலாறு திரைப்படம் ஒன்றை பெல்லினி “சட்டைரிகன்” [SATYRICON] என்று 1969-ல் இயக்கினார். பெல்லினி வரலாற்றை மறுகட்டமைப்பு செய்து காட்டியவர் என்பது ரோமா, சட்டைரிகன் ஆகிய இரு படங்களில் தெரிகிறது. இருபடங்களுமே அவரது இளமைக் கால சம்பவங்களை ரோமானிய வரலாறு ஊடாக நையாண்டி வகையில் கொண்டுசெல்லப்பட்டவை. பெட்ரோ நியஸ்ஸின் நாவலை ரோமானி கொடுங்கோல் மன்னன் நீரோவின் காலத்திலிருந்த வாழ்க்கையை மறு வாசிப்பாக காட்சிரூபப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் அவரது இயக்கத்தில் வந்த மற்றொரு அரிய படம் “அமர்கார்டு” [AMARCORD].

1973-ல் பெல்லினியின் இயக்கத்தில் வெளிவந்த அமர்கார்டு சென்னைத் தியேட்டர் எங்காவது ஒன்றில் திரையிடப்படக்கூடும் என்று அ.ராமதுரை சொல்லிக்கொண்டிருந்தார். ராமதுரை சேப்பாக்கத்திலுள்ள ரெவின்யூ போர்டில் குமாஸ்தா. சர்வதேச திரைப்பட விழாவின்போது தினமணிகதிர் சார்பாக நான் போயிருந்தபோது, ஆனந்தவிகடன் சார்பாக அவர் வந்திருந்தார். ஹாலிவுட் திரைப்படங்கள் குறித்து விலாவாரியாகவும் நன்றாகவும் பல வெகுஜன இதழ்களில் எழுதி வந்தவர் அ.ராமதுரை. இப்போது இல்லை. அவர்தான் பெல்லினி பற்றியும் அவரது அமர்கார்டு பற்றியும் எனக்கு அன்றே சொன்னவர். ஆனால் படம் சென்னையில் பொதுத் திரையிடல் பெறவேயில்லை.

“அமர்கார்டு” என்றால், “நான் நினைவு கூறுகிறேன்” என்றாகிறது. காலம்: முசோலினியின் பாசிஸகாலம். பெல்லினி தம் இளமைப் பொழுதுகளை நக்கல் நையாண்டித்தன காட்சிகள் வழியாக அன்றைய இத்தாலியின் உணர்ச்சிமிக்க ரசாபாச நிகழ்வுகள், பருவ வயதின் ஆசாபாசங்கள் மற்றும் அரசியல் அட்டூழியங்களைக் காட்சி நகர்வுகளால் கோர்த்தளித்திருக்கிறார். அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் நினா ரோட்டாவின் [NINA ROTTA] உயரிய இசைக்கோர்வை மறக்க முடியாதது. அவரது நினைவுச்சரம் ஒவ்வொன்றும் சிறந்த சிறுகதையொன்றின் உருவைக் கொண்டிருக்கிறது. எல்லா நிகழ்வுக் கதைகளிலும் தொடர்ந்து அதே பாத்திரங்களை நடமாடவிட்டிருப்பதால் நமக்கு முழுமையான படமாய்க் கிடைக்கிறது. திருமணமாகாத 30 வயது அழகி கிராடிஸ்கா [GRADISCA] இளைஞன் டிட்டோ [TITTO] (இவன்தான் பெல்லினியின் ஆல்ட்டர் ஈகோ) இவனது அம்மா அப்பா, தாத்தா, மனநிலை பிறழ்ந்த 42 வயது மாமா டியோ [TEO] மற்றும் வழக்கறிஞர் ஆகியவர்கள் ஆரம்பம் முதல் இறுதிவரை எல்லா நிகழ்வுகளிலும் பங்கேற்கும் பாத்திரங்கள், வழக்கறிஞர் ஒருவித கதைசொல்லியாக வருபவர். ஆறு முக்கிய நிகழ்வுகளை கதை வடிவில் தம் நினைவுகளாய் காட்சிபடுத்தியிருக்கிறார் பெல்லினி. முரல் நினைவு கூறல் “சொக்கப்பனை எரித்தல்” அல்லது “போகி கொளுத்துதல்” என்று கொள்ளும் வகையில் இத்தாலிய கலாச்சாரத்தில் கிழட்டு சூனியக்காரியை கொளுத்தும் பிரம்மாண்டமானதொரு BONFIRE மிகவும் ரசிக்கத்தக்கது.

இங்கு கார்த்திகையின்போது பணஓலைக் கூடுகளை கோயில் முன்வைத்துக் கொளுத்தும் சொக்கப்பனை தீயிடலும், பொங்கலுக்கு முன் போகி கொளுத்துவதும், இத்தாலியில் வேறுவிதமாய் கொளுத்தப்பட்டு அட்டகாசமாய்க் கொண்டாடப்படுகிறது. கிட்டத்தட்ட நம்மைப்போலவே குளிர்கால BONFIRE தான் அங்கும் குளிர்காலம் முடிவடைந்து வசந்தகாலம் தொடங்கும் நாளன்று இரவில் “கடுங்குளிர் ஒழிந்தது” என்பதை “பழைய சூனியக்காரி எரித்துக் கொளுத்தும் வழக்கம் இத்தாலியில் இருந்து வருகிறது. அதற்காக எல்லாரும் தம் வீடுகளிலுள்ள உதவாத பழைய மரச்சாமான்கள், காகிதங்கள், துணி தினுசுகளையெல்லாம் மைதானத்தில் கொண்டு வந்து குவிப்பார்கள். கிழச்சூனியக்காரியின் உருவ பொம்மை ஒன்று, துணி, மரம், நாரால் செய்யப்பட்ட வண்டியில் கொண்டு வந்து, மைதானத்தில் குவித்துள்ள குப்பை கூளங்கள் மேல் நிறுத்தப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்படும். அப்பகுதி மக்கள் கண்டு களித்து போவர். இந்நிகழ்ச்சி அற்புதமாய் படமாக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பள்ளிப் பருவ வாழ்க்கை நிகழ்வுகள் மிகவும் ரசாபாசமாய் போகிறது. வரலாறு, கணிதம், அறிவியல் வகுப்புகளும், பையன்களின் அட்டகாசமும், சிரிக்கச் செய்வன. கடைசியாக தேவாலயத்தில் பாதிரியாரிடம் பாவ சங்கீர்த்தனம் பெறும் வயது வந்த பள்ளிப் பையன்களின் காட்சி பிரமாதமானது. பாதிரியார் தன்னிடம் பாவமன்னிப்பு கோரி வரும் ஒவ்வொரு பையனையும் பார்த்து கேட்கும் ஒரு கேள்வி, “உன்னை நீ அந்தரங்கமாய் தொட்டுக் கொண்டாயா?” என்பது.

உடனே பையன், “இல்லவே இல்லை” என்று சொல்லவும் மன்னிப்பு பெற்றவனாய் போய்விடுவான். ஒருவன் தனக்குத்தானே தன்னை அந்தரங்கமாய்த் தொடுவதென்பது நாகரிகமான வார்த்தையில் “முஷ்டி மைதுனம் செய்து சுயஇன்பம் அடைந்தாயோ?” எனப்படும் கேள்வி. அதே சமயம் பையன்கள் நால்வர் [பெல்லினியும் ஒருவர்] ஒரு காரில் உட்கார்ந்து அவரவர்கள் தங்களுக்கு இஷ்டமான பெண்ணை கற்பித்து சுய இன்பம் அடையும் காட்சி ஆபாசம் என்பதைவிட நகைச்சுவை மிக்கதாகிவிடுகிறது. அதில் ஒருவருக்கொருவர் சண்டை வேறு. “நீ யாரை மனதில் நினைத்து செய்தாய்?” என்று ஒரு பையன் கேட்க, மற்றவன் தான் மனதில் வரித்த பெண்ணைச் சொல்ல, உடனே முன்னவன், “அது என்னோட ஆளே். அதையேண்டா நீ நினைச்சே?” என்று குஸ்திக்கு வரும் காட்சி.

பாசிஸ ஆட்சியை அமர்கார்டு சமூக நிகழ்வுகள் ரீதியாக கேலி செய்கிறது. கல்யாணச் சடங்கு கூட பாசிஸ முறையிலேயே நடத்தப்படுவதாய் பெல்லினி நைய்யாண்டி செய்கிறார்.

“பாசிஸ்ட் மணமகளுக்கும் பாசிஸ்ட் மணமகனுக்கும்” என்று கூறிவிட்டு சடங்கு தொடங்கும்.

“நான் பாசிஸ்ட் ரோசியை பாசிஸ்ட் மனைவியாக ஏற்கிறேன்” என பாசிஸ மணமகனும், “நானும் அவ்விதமே பாசிஸ்ட் ராபர்டோவை பாசிஸ்ட் கணவராய் ஏற்கிறேன்” என்று பாசிஸ மணப்பெண்ணும் பாசிஸ பாதிரியாரிடம் கூறுவார்கள்.

இறுதிக் காட்சிகளில் ஒன்று, பிரம்மாண்ட பனிமூட்டம், அப்போது ஒரு மயில் பறந்து வந்து தோகை விரிக்கும் காட்சி அருமை. ஒரு மனநல காப்பகத்திலிருந்து 42 வயது மனநோயாளி டியோ என்பவளை, அனுமதியுடன் வெளியில் அழைத்துப்போகும் நிகழ்வு சுவாரசியமானது.

கதாநாயகனுக்கு [பெல்லினி] மாமன் முறையாகும் 42 வயது. மிக உயரமான [TEO] மன நலக் குறைவால் காப்பகத்திலிருப்பவன். ஆணும் பெண்ணுமாய் கூட்டம். கிராமத்து பண்ணை வீட்டுக்குப் போகிற வழியில் மனநலக் காப்பகத்திலிருந்து அனுமதியுடன் டியோ மாமாவையும் [சமர்த்து] அழைத்துப் போகிறது. மற்றவர்கள் அங்குமிங்கும் திரிகையில், ஜேபியில் கற்களோடு டியோ ஒரு பெரிய மரத்திலேறி உச்சிக்கு போய் கத்துகிறான். மற்றவர்கள் ஓடிவந்து அவனை கீழே இறங்கி வர கத்துகிறார்கள். அவன் இறங்காமல் உரக்க தொடர்ந்து பரிதாபமான தொனியில் கத்துகிறான்.

“எனக்கு ஒரு பெண் வேண்டும்” திரும்பத் திரும்ப அந்த மனநிலை பிறழ்ந்த டியோ தனக்கு ஒரு பெண் வேண்டும் என்பதையே பரிதாபமான தொனியில் கத்தி கேட்கிறான்.
“பைத்தியம் முத்தி விட்டதா?” என்று ஒருவர் கேட்கிறார்.

“இல்லை இப்போதான் தெளிந்திருக்கிறது” என்கிறார் ஒருவர்.

அப்போது டியோவின் தந்தை புன்சிரிப்போடு கூறுகிறார், “டியோவுக்கு 42 வயது. இயல்பான காம உணர்வுதான் அது”

அவனை இறங்கி வருமாறு கேட்டுவிட்டு ஏணி மூலம் ஒருவர் ஏறுகிறார். டியோ தன்னிடமுள்ள கற்களில் ஒன்றால் அவர் மண்டையை அடிக்கிறான். இன்னொருவர் ஏறுகிறார். அவரும் கல்லடிப்படுகிறார். கடைசியாக சொல்லியனுப்பி, மனநலகாப்பக வேன் வருகிறது. குள்ளமான நர்ஸ் ஒருத்தி ஏணியில் ஏறவும் டியோ மகிழ்ந்து இறங்கி வண்டியில் ஏறுகிறான்.
அமர்கோடு தன் இறுதி நினைவும் நிகழ்வுமாக 30 வயது அழகிய கிராடிஸ்கா [GRADISCA]வுக்கு நிகழும் திருமணத்தோடு முடிவுறுகிறது.

ஃபெடரிகோ ஃபெல்லினியின் நான்கு படங்கள் சிறந்த அயல்நாட்டுப் படங்கள் எனும் வரிசையில் பரிசு பெற்றவை. 1993-ல் அவர் வாழ்நாள் சாதனைக்கான ஹாலிவுட்டின் ஆஸ்கர் விருது பெற்றார். பெல்லினி அதே ஆண்டு 1993-ல் ரோமில் காலமானார்.

இத்தாலிய சினிமா என்றதும் கூடவே வருவது அதன் நியோரியலிஸ படங்கள். விட்டோரியா டிசிகாவுக்குப் பிறகு வந்த இத்தாலிய இயக்குனர்கள் நியோரியலிஸத்தில் தொடங்கி, போகப்போக வேறு வகைமைகளைப் பிடித்துக்கொண்டனர். அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர் மைகலாஞ்சலோ அண்டோனியோனி [MICHELANGELO ANTONIONI] 1912-ல் வட இத்தாலியிலுள்ள ஃ்பெர்ரரா [FERRARA] எனுமிடத்தில் பிறந்த அண்டோனியோனி இருபது திரைப்படங்கள் செய்தவர். BOLOGNA பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப்பட்டப்படிப்பில் முதன்மை மாணவராக தேர்ச்சி பெற்ற அண்டோனியோனி உள்ளூர் பத்திரிகையொன்றில் திரைப்பட விமர்சனம் செய்து வந்தவர். பிறகு ரோமுக்கு போய் “சோதனை வகை திரைப்பட மையம்”, [EXPERIMENTAL CINEMA CENTRE] என்ற திரைப்படக் கலை பள்ளியில் பயின்றவாறே “CINEMA MAGAZINE” இதழில் பணிபுரிந்தவர். இவை இரண்டுமே பாசிஸத்துக்கு எதிரான நடவடிக்கைகளைக் கொண்டவையென தீர்மானிக்கப்பட்டவை. 40களின் தொடக்கத்தில் ராபர்டோ ரோசெல்லினியுடன் திரைக்கதை எழுதுவதில் இணைந்திருக்கிறார். 1943-ல் அண்டோனியோனி தனது முதல் ஆவணப்படமான “THE PEOPLE OF THE PO” என்பதை எடுத்தளித்தார். அவர் இயக்கிய முதல் முழு நீள கதைத் திரைப்படம் “CRONACA DI UN AMORE” [CHRONICAL OF A LOVE] 1950-ல் வெளியானது.

இவரது துயர முடிவைக் கொண்ட“IL GRIDO” [THE OUTCRY] என்ற விறுவிறுப்பான படம் 1957-ல் வெளிவந்தது. ஆல்டோ [ALDO] மனைவியை இழந்த ஆறுவயது சிறுமிக்குத் தந்தை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் மெகானிக். ஆல்டோ இர்மா [IRMA] என்ற திருமணமானவளை ஏழு வருடமாய் நேசிக்கிறான். அவள் கணவன் வேறு நாட்டில் மரணமுறுவதையடுத்து இர்மா மனம் மாறி விடுகிறாள். ஆல்டோவின் உறவை நிராகரிக்கிறாள். ஆல்டோ வெறுப்பில் வேலையை உதறிவிட்டு, மகளுடன் வேறொரு ஊருக்குப் போனவன் பெட்ரோல் பங்கு வைத்திருக்கும் விதவையுடன் வாழ்கிறான். விதவைக்கு ஆல்டோவின் பெண் ஒரு தலைவலி. அவன், தன் பெண்ணை, தங்கிப்படிக்கும் பள்ளியில் சேர்த்து விட்டு, அங்கிருந்து வேறு இடம் போய் ஒரு விலை மாதுவுடன் இருந்து பார்த்துவிட்டு, சதா நினைவை அலைக்கழிக்கும் இர்மாவைப் பார்க்கப் போகிறான். ஒரு குழந்தையோடு அவளிருப்பதைப் பார்த்ததும் மனமுடைந்து உயரமான இடத்திலிருந்து விழுந்து சாகிறான். இப்படம் ஒருபோதும் அலுப்பேற்படாத வண்ணம் இயக்கப்பட்டுள்ளது.

அண்டோனியோனி 1966-ல் இங்கிலாந்தில் “ப்ளோ அப்” [BLOW UP] என்ற வண்ணப்படம் செய்தார். இப்படம் சென்னை சஃபையர் வளாகத்து புளூடயமண்ட் தியேட்டரில் திரையிடப்பட்டது. மிகவும் பேசப்பட்ட படம். ஜுலியோ கோர்டஸரர் [JULIO CORTAZAR] என்பவரின் சிறுகதையைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ப்ளோ அப் மென்மையானதொரு திகில் வகைப்படம். அண்டோனியோனியின் சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படும் “L`AVVENURA” [THE ADVENTURE] [1960]வும்

Bioscope Karan 25th WebSeries by Vittal Rao. This Series About Italy movies பயாஸ்கோப்காரன் ஃபெல்லினி மற்றும் அண்டோனியோனி 25 – விட்டல்ராவ்ஒரு மர்மத்தைக் கொண்டதாகவேபடும். 1960-ல் லவெஞ்சுரா கேன்ஸ் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்டபோது, அங்கு அண்டோனியோனியை வெறுத்துவந்த கும்பலால் கத்தி, விசிலடித்து ஆரவாரத்து எதிர்த்தனர். ஆனால் அங்கு வந்திருந்த சக்திமிக்க திரைப்பட விமர்சகர்களும் திரைப்பட இயக்குனர்களும் எதிர்ப்பாளர்களின் செயலை மறுத்து, லவெஞ்சுரா கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட படங்களிலேயே தலைசிறந்ததும் முக்கியமானதுமென்றும் சான்றிதழ் எழுதி கையெழுத்திட்டு வெளியிட்டனர். இது நடந்து இரு ஆண்டுகளுக்குள் பிரிட்டனின் புகழ்பெற்ற தர நிர்ணயப் பத்திரிகையான “்SIGHT AND COUND”-ன் சர்வதேச திரைப்பட விமர்சகக் குழுவினரால், அண்டோனியோனியின் LAVVENTURA படம் அதுவரை வெளிவந்த எல்லா படங்களிலும் இரண்டாவது மகத்தான படம் என தீர்ப்பளிக்கப்பட்டது.

பணவசதி கொண்ட ஒரு சிறிய ரோமானிய குழு ஓர் உல்லாச கப்பலிலேறி சிசிலியிலிருந்து பயணிக்கையில் ஆளரவமற்ற பாறைகள் நிறைந்த தீவில் இறங்கி பகற்பொழுதைக் கழிக்க விரும்பி சுற்றி வருகையில் அன்னா என்பவள் காணாமற் போகிறாள். அந்தப்பெண் கப்பலில் வந்த தன் புத்திசாலி சினேகிதி கிளாடியாவிடம் [CLAUDIA] தனக்கும் தன் கட்டிடக் கலை வல்லுன காதலனுக்கும் சரி வரவில்லையென கூறியிருக்கிறாள். தான் ஒரு சுறாமீன் போனதைக் கண்டதாக குளிக்கையில் பொய் சொல்லி பயமுறுத்தியுமிருக்கிறாள். இதன்பின் இருபத்தைந்து நிமிடங்களில் அன்னா காணாமற் போகிறான். ஒரு நிமிடம்விட்டு உண்மையிலேயே நாம் சுறாமீன் ஒன்றைப் பார்ப்பதோடு, நமது பார்வையில் சில கணங்களுக்கே பட்டு மறைகிறது ஒரு படகு. படகு சில வினாடிகளுக்கு தெரிந்து தீவைத் தாண்டி மறைகிறது.

அன்னா என்ன ஆனாள், அவளுக்கு என்னவாயிற்று என்பது எதையும் அண்டோனியோனி படத்தில் இறுதிவரை வெளியிடவேயில்லை. பீட்டர் வயர் [PETER WEIR] இயக்கிய அரிய படமான “PICNIC AT HANGING ROCK” என்ற படத்தின் மர்மமும் கூடவே நினைவுக்கு வருகிறது. பிக்னிக் போன பெண்கள் பள்ளி மாணவிகளில் ஒரு பெண் மர்மமாய் காணமற்போகிறாள். இறுதி வரை அந்த மர்மம் சொல்லப்படாமல் நம்முடைய யூகத்துக்கே விடப்படுகிறது. அண்டோனியோனி, அன்னா என்ன ஆனாள் என்பதைச் சொல்லாததுதான் ரசிகர்களில் ஒரு பிரிவினர் கலாட்டா செய்தது.

அன்னாவின் சினேகிதி க்ளாடியாவும் அன்னாவின் காதலன் சான்ட்ரோவும் [SANDRO] அன்னாவை தீவில் தேடுகையில், இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு அந்த உறவு, உடலுறவு வரை செல்லுகையில் கிளாடியா குற்ற உணர்வால் வதைபடுகிறாள். தொலைந்து போன ஒருத்தியின் காதலனுக்கும், தொலைந்து போனவளைத் தேட முற்பட்ட அவளது சினேகிதிக்கும் ஏற்படும் காதல் உறவோடு நாம் சமாதானமடைவதில்லை. அந்த மறைவின் மர்மம் தீர்க்கப்படாததோடு, அண்டோனியோனியை மீண்டும் இங்கிலாந்தில் செய்த “BLOW UP” படத்திலும் அவ்விதமான அவிழ்க்கப்படாத மர்மத்தை நீட்டவும் செய்கிறது.

அதே சமயம் ப்ளோஅப் லவஞ்சுராவின் தீர்க்கப்படாத மர்மத்துக்கும் அப்பால் அதாவது அந்த மர்ம உணர்வுக்கான வெளியையும் தாண்டிச் செல்லுகிறது எனலாம். விரிவான போலீஸ் புலனாய்வு, சோதனைகளையும் கடந்து கதாநாயகனான புகைப்படக் கலைஞனின் மனவெளிக்கும் வெளியே அந்த மர்மம் தன் பூடக இருப்பை உ ணர்த்துகிறதா என்பது நமக்கான பரிதவிப்பு என்றால் அதையே அண்டோனியோனி மிக அழகாக படத்தின் இறுதிக் காட்சியில் மற்றொரு பூடக முடிச்சவிழ்ப்பாக மிக நாசுக்காக காட்டிச் செல்லுகிறார்.

Bioscope Karan 25th WebSeries by Vittal Rao. This Series About Italy movies பயாஸ்கோப்காரன் ஃபெல்லினி மற்றும் அண்டோனியோனி 25 – விட்டல்ராவ்

மைய பாத்திரமான தாமஸ் [DAVID HEMMINGS என்ற நடிகர்] ஒரு ஃபாஷன் புகைப்படக் கலைஞர். அவன் புகைப்படக் காட்சிகள் கொண்ட காஃபி டேபுள் புத்தகமொன்றைச் செய்ய மேற்கொண்ட நிலையில், ஒருநாள் ஆட்கள் இல்லாத பூங்காவுக்குள் நுழைந்து தன் நூலுக்கான இறுதி வடிவின் சில காட்சிகளை அங்கு படமெடுக்கிறான். தாமஸ், வயதான ஒரு மனிதனும், இளம் பெண் ஒருத்தியும் அங்கு காதலர்களாய் சுற்றுவதைக் கண்டு படமெடுத்து விடுகிறான். அது வேறுவிதமாகிறது. அவனைத் தொடர்ந்து வந்த அந்த இளம் பெண் அவனிடம் சண்டை போட்டு அந்த படத்தைக் கொடுக்கும்படி கேட்கிறாள். தாமஸ் உள்ளே போய் வேறொரு நெகட்டிவ் சுருளைத் தந்துவிட்டு பூங்காவில் எடுத்த படச்சுருளின் நெகட்டிவை மறைத்து விடுகிறான். பிறகு அந்த படச் சுருளை டார்க் ரூமில் கழுவிப் பார்க்கையில் புதர் ஒன்றில் கை ஒன்று யாரையோ குறி பார்த்து துப்பாக்கியொன்றை நீட்டினபடியிருக்கிறது. அடுத்த சட்டகத்தை மேலும் பெரிதாக்கிப் பார்க்கிறான். புகைப்படத்தை அதன் அளவுக்கு மேல் பெரிதாகுவதை “BLOW UP” என்பர். இங்கு படத்தை ப்ளோ அப் செய்வதோடு, ஒரு விஷயமும் ப்ளோ அப் செய்யப்படுகிறது.

அண்டோனியோனி அற்புதமான தலைப்பை அளித்துள்ளார். அடுத்த படம், புதர் அருகே ஒரு மனிதன் கிடப்பது போல. மறுநாள் தாமஸ் அங்கே போய் பார்த்தபோது, ஒரு சடலம் கிடக்கிறது. ரத்தக்கறை. உடனே இதை போலீசிடம் அவன் கூறவும், அவர்கள் அவனோடு அங்கு போய்ப் பார்க்க அங்கே எதுவுமே இல்லை. போலீசார் அவனைத் திட்டி எச்சரித்து அனுப்புகின்றனர். அவனுக்கு குழப்பம் தீரவில்லை. ஒரு வண்டியிலிருந்து கூட்டமாய் ஆணும் பெண்ணும் இறங்கி இரு குழுக்களாக பிரிந்து பந்து விளையாடும் காலி மைதானத்தை அடைகிறார்கள். வாலிபால் விளையாட்டடைத் தொடங்குகின்றனர். வலை கிடையாது, பந்தும் கிடையாது. ஆனால் சகல ஆட்ட நுணுக்கங்களோடும் ஆடுகிறார்கள்.

“லவ் ஆல்”, பந்தை அடிப்பது போல நெட்டுக்கு மேலே போகுமாறு ஒருவன் சர்வீஸ் அடிக்க, மறு அணியில் ஒருவன் திருப்பியடிக்கிறான். இதை தாமஸ் தள்ளி நின்று பார்க்கையில், பந்து கோட்டுக்கு வெளியில் போய் விழுந்ததாய், “அவுட்” என்று கத்துகிறார்கள். ஒருவன் தாமஸைப் பார்த்து, “பால் ப்ளீஸ்”, என்கிறான் புரிந்து கொண்டவனாய் தாமஸும் தரையில் குனிந்து பந்தை எடுப்பது போல் பாவனை செய்து, அதை அவர்களை நோக்கி வீசுவது போல பாவனை செய்ய, படமும் முடிகிறது.

Bioscope Karan 25th WebSeries by Vittal Rao. This Series About Italy movies பயாஸ்கோப்காரன் ஃபெல்லினி மற்றும் அண்டோனியோனி 25 – விட்டல்ராவ்
JACK NICHOLSON

மைகலேஞ்சலோ அண்டோனியோனியின் மற்றொரு அற்புத படம் “பயணி” [PASSENGER] பயணியாக புகழ்பெற்ற நடிகர். ஜாக் நிக்கல் சன் [JACK NICHOLSON] நடிக்கிறார். டேவிட் லோகே [DAVID LOCKE] ஒரு தொலைக்காட்சி நிருபர். வட ஆப்ரிக்காவின் மணல் மேலிட்ட கிராமத்தில் வந்தவன், ஒரு விடுதியில் அறை தேடுகிறான். இன்னொரு பயணியோடு சேர்ந்து தங்க ஒப்புக்கொண்டு அறைக்குப் போனால், அந்த பயணி இறந்து கிடக்கிறான். அவனது டைரியை எடுத்துப் படித்துவிட்டு இறந்தவன் முகத்தை கவனிக்கிறான். ஒரே அச்சில் வார்த்தாற்போல, – தமிழ் சினிமாவின் சகல காலந்தோரும் நடிகர்கள் நடிப்பதற்கேற்றபடி கற்பிக்கப்பட்ட இரட்டை வேடத்துக்கேற்ப – இருக்கவும் நிருபர் இறந்தவனாக மாறிக்கொள்ளுகிறான். T.V நிருபர் இறந்துபோக, இறந்தவன் உயிரோடு நடமாடுகிறான். அதற்குமேல் பிரச்சினைகளை எதிர்கொள்ள திணறுகிறான். இறந்தவனுக்கும் பயங்கரவாத கும்பலுக்குமான தொடர்பு, இறந்தவனின் காதலி என்று ஏகப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ளுகிறான். வெளியில் வந்தவுடனே அவனைக் குறி வைத்து தாக்க பின் தொடரும் நபர்கள். இறுதியில் இவனும் சோக முடிவை மேற்கொள்ளுவதாக படம் முடிகிறது. மைகலேஞ்சலோ அண்டோனியோனி வாழ்ந்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருது உட்பட நிறைய விருதுகளையும் பெற்றவர். அண்டோனியோனி தமது 94ம் வயதில் 2007-ல் காலமானார்.

(இத்தாலிய சினிமா முடிவுற்றது)

தொடர் 24: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

தொடர் 24: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்


இத்தாலி- 2
லூசினோவிஸ் கோண்டி பசோலினி

இத்தாலிய திரைப்பட மேதைகளில் லூசினோவிஸ்கோண்டி (LUCHINO VISCONTI) குறிப்பிடத்தக்கவர். முப்பதுகளின் இறுதியில் புகழ்வாய்ந்த பிரெஞ்சு திரைப்பட மேதை ழான் ரென்வாரிடம் உதவி இயக்குனராயிருந்தவர். இவரது முதல் திரைப்படம். 1943ல் இயக்கி வெளிவந்தது. இப்படம், OSSESSIONE என்பது, சரியாகச் சொன்னால், ராபர்டோ ரோஸ்ஸெலினி முதல் நியோரியலிஸ திரைப்பட இயக்குனரல்ல. விஸ்கோண்டிதான் என்பதற்கு அவரது ஒஸ்ஸெஷன் சாட்சி. அதனால்தான் ராபர்டோவும் தம் கட்டுரையொன்றில், நியோ ரியலிஸத்தின் தந்தை நான் இல்லை, என்று குறிப்பிட்டிருந்தார். ஒஸ்ஸெஷன்தான் அந்த வகையாக 1943ல் செய்யப்பட்ட முதல் நியோரியலிச திரைப்படம். ஆனால்  அதன் மூலக்கதை ஜேம்ஸ் எம்.கேய்ன் (James M.Caine என்றவர் எழுதிய 1934ல் பிரசாரமான  The Postman Always Rings Twice  என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். இப்படம் வெளிவரும் சமயம் கேய்ன் இறந்துவிட்டார். இந்த போஸ்ட்மேன் ஆல்வேஸ் ரிங்ஸ் ட்வைஸ் எனும் மர்ம நாவல் அதே பெயரில் 1946ல் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. இதனால் விஸ்கோண்டியை அவரது படம் ஒஸ்ஸெஷனை முதல் நியோ ரியலிஸத் திரைப்படமாய் எடுத்துக் கொள்ளுவதில்லை.

விஸ்கோண்டியின் அத்திரைப்படம், அன்றைய இத்தாலிய சர்வாதிகாரி முஸ்ஸோலியின் அரசின் ஃபாசிஸ கொள்கையை வன்மையாக எதிர்த்து கண்டிக்கும் ரீதியில் இருந்ததால் இத்தாலியின் பாசிஸ அரசின் அனுமதி வழங்கப்படவில்லை. மூல நாவலை விஸ்கோண்டிக்குப் படிக்கத் தந்தவர் பிரெஞ்சு இயக்குனர் ழான்ரென்வார்தான். அவரிடம் பெற்ற பயிற்சியின் தாக்கம் இந்தப் படத்தில் நன்கு தெரியும் படத்தைப் பார்த்துவிட்டு முஸோலினியின் கலாச்சார அமைச்சராயிருந்த கேய்டனோபோல் வெரெல்லி (Gaetano Polverelli) கக்கூஸ் நாற்றமடிக்கும் படம், என்று விமர்சித்தார்.

Bioscope Karan 24th Web Article Series by Vittal Rao தொடர் 24: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

ஒஸ்ஸெஷன் ஒரு குற்றம் தொடர்பான கதையாயிருந்த போதிலும் விஸ்கோண்டி அந்த மர்மம் குற்றம் எனும் அம்சத்தை மிக மிக அமுக்கி வாசித்து, பொறாமையுணர்வு, அது தொடர்பாக தவிர்க்க முடியாத கொலை செய்யத் தூண்டும் உளவியல் விசயமாய் கதை வடிவை மாற்றிக் கொண்டார். முக்கிய கதாபாத்திரங்கள் இரண்டு, அவற்றில் ஒன்று வழியிலேயே திருமணம் ஒன்றில் சங்கமித்துவிடும். இத் திருமண நிகழ்ச்சியும், அடுத்து கதா பாத்திரம் அதில் அமிழும் நிகழ்வும் அற்புதமாக காட்சி ரூப சித்தரிப்பை படத்தில் கொண்டு வரப் பட்டிருக்கும். இன்னொரு கதாபாத்திரம் சாலையிலேயே நின்றுவிடும். ஒஸ்ஸெஷன் இத்தாலிய நியோரியலிஸ வகைமையையும், அமெரிக்க திரைப்பட வகைமையையும் இணைந்த பெரிய பெரியதொரு எடுத்துக்காட்டாக இருந்திருக்ககூடும். ஆனால் அவை இரண்டின் மூலத் தன்மைகளிலும் ஏதோ ஒரு குறைபாடு காரணமாக இருவித இயக்கங்களும் இணையாமல் தனித்தனியே இருப்பது தெரியவருவதால், படமும் வேறுபட்டுத் தோன்றுகிறது.

விஸ்கோண்டி 1960ல் இயக்கிய படம், ரோக்கோவும் அவனது சகோதரர்களும் Rocco and His Brothers இப்படத்தின் வாயிலாக, விஸ்கோண்டி, தொடக்கத்தில் தாம் கொண்டிருந்த இத்தாலிய நியோரியலிஸ கோட்பாட்டுணர்விலிருந்து வெளியேறி, உணர்ச்சி வயப்படும் மெலோடிராமா முடிவு கொண்டவிதமான திரைப்படமாக்கலுக்கு வந்தவராகத் தெரிகிறார். இதிலிருந்து அவர் மேற்கொண்டு இசை நாடகத் தன்மை மிக்கதும், பிரம்மாண்டமான ஜோடனைகள் மிக்க கதையாடல்களின் மேல் அமைக்கப்பட்ட சிறந்த திரைப்படங்கள் லெபார்டு Leopard வேங்கை மற்றும் லூட்விக் Ludwig 1972, Damned ஆகியவற்றை இயக்கினார். ரோக்கோ, விஸ்கோண்டியின் கடைசி நியோரியவிஸ படமென்று கூறலாம். ரோக்கோவும் அவன் சகோதரர்களும் விஸ்கோண்டியின் சிறந்த படங்களில் ஒன்று. இப்படத்தின் கருப்பு- வெள்ளை ஒளிப்பதிவை காமிரா கலைஞர் ஜிசெப்பெரோடுன்னோ Giuseppe Rotonno அதியற்புதமாய் செய்திருக்கிறார். ஆவணப் படம் போன்ற நியோரியலிஸ வகைமையையும், ஹாலிவுட் மாதிரி ஸ்டைல் வகைமையையும் கலந்தாற்போன்றதொரு வகைமை. இத்தாலியின் சிசிலி நகரிலிருந்து பிழைப்பு தேடி ஒரு விவசாயக் குடும்பம் மிலன் நகருக்கு வருகிறது. அக்குடும்பத்து சகோதரர்களில் ரோக்கோ என்பவன் முன்னுக்கு வர, ஒரு குத்துச் சண்டைக்காரனாகிறான். இவனுக்கு மூத்தவன் முரடன் பொறுப்பற்றவன். பேராசையும் பொறாமையும் நிரம்பியவன், குடும்பத் தலைவரில்லாத அக்குடும்பத்தின் பொறுப்பு குடும்பத் தலைவியான ரோக்கோவின்

Bioscope Karan 24th Web Article Series by Vittal Rao தொடர் 24: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்அம்மா மீது விழுகிறது.

ரோக்கோவின் ஒத்துழைப்பிலும் சாந்த குணத்தாலும் தாய் கடினமான கணங்களை சமாளிக்கிறாள். மூத்த மகன் குடும்பத்தைப் பிரித்து நாசமாக்குவதிலும் ஈடுபடுகிறான். சகோதரர்கள் இருவருமே ஆசைப்படும் அழகியும் கவர்ச்சி மிக்கவளுமாய் பெண்ணொருத்தி, ரோக்கோ, பெண்ணுக்காக குடும்பம் சிதறுவதை விரும்பாது, அவளை அண்ணனுக்கே விட்டுக் கொடுத்து காதலைத் தியாகம் செய்கிறான். ஆனால் இறுதியில் அந்தப் பெண் இறந்து போகிறாள். ரோக்கோவாக பிரெஞ்சு நடிகர் ஆலன் டெலான் நடிக்கிறார். பரவாயில்லை. ஆனால் முரட்டுத்தனம், பொறாமை முதலான குணச்சித்திரங்களை நன்கு வெளிப்படுத்தி பாராட்டப் பட்ட மூத்த சகோதரனாய் நடித்த இத்தாலி நடிகர் ரெனாடோ சால்வடோரி நடிப்பில் முந்திவிடுகிறார்.

லூசினோ விஸ்கோண்டி 1963ல் லெபாரடு Leopard வேங்கை என்ற  மகத்தானதும் பிரம்மாண்டமானதுமான வண்ணப் படத்தை இயக்கி வெளியிட்டார். அவரது மிகச் சிறந்த படங்களில் லெபார்டும் ஒன்று. 1965ல் இப்படம் சென்னை குளோப் தியேட்டரில் திரையிடப்பட்டது. இந்த அரிய பொருள் பொதிந்த அழகியல் செறிவு மிக்க படம் மூன்று வாரங்களில் திரையிடல் நிறுத்தப்பட்டது. பிறகு வந்த From Russia With Love  ஜேம்ஸ் பாண்ட் படம் இதே தியேட்டரில் பத்து வாரங்கள் ஓடியது. சிசிலியில் 1860களில் கரிபால்டியின் இத்தாலிய புரட்சியின்போது நடப்பதான கதை. இத்தாலியின் சிறந்த வரலாற்று நாவலாசிரியர் ஜிசிபேடொமாசி டி லாம்பெடுசா Giusepde Tomasi Di Lampedusaவின்  நாவலைத் தழுவி எடுத்த படம் விஸ்கோண்டியின் திரைக் காவியமென்றே கூறலாம். பகட்டும் படாடோபமும் மிக்க சீமான்களும், சீமாட்டிகளும் நிறைந்த இத்தாலிய நகர்புற உயர்குடிகளின் பிடி தளர்கிறது. மத்தியதர வர்க்கம் எழுகிறது. இந்த எழுச்சிக்கு
தலைமை தாங்கியவர் கரிபால்டி, Garibaldi இவ்வெழுச்சியால் ஓர் ஒன்றிணைந்த புதிய ஜனநாயகம் இத்தாலியில் மலர்கிறது.Bioscope Karan 24th Web Article Series by Vittal Rao தொடர் 24: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

The Leopard Il Gattopardo-1963 இத்தாலியின் இளவரசர் (இளவரசர் 60 வயதானவர் ஃபாப்ரிஜியோ டி சாலினா Prince Fabrizio Di Salina என்பவரது கதை வழியாக ரிசாரிமெண்டோ இயக்கத்துக்குப் பிந்தைய முக்கிய சமூக மாற்றங்களை படம் சொல்லுகிறது. கரிபால்டியின் புரட்சி படை சிசிலியில் நுழைந்ததும் அரசுப் படையோடு கடுமையான போர் நிகழ்கிறது. போர்க் காட்சி குறைந்த நேரமே இடம் பெற்றாலும் விருவிருப்பானது நகரின் தேவாலய பாதிரியார் இளவரசரோடு ஒட்டிக் கொள்பவர். வேடிக்கையான பாதிரியார். ஃபாப்ரிஜியோ இளவரசருக்கு பாதிரியாரை கிண்டல் செய்யாமலிருக்க முடியாது. ஒரு காட்சியில் இளவரசர் குளித்துக் கொண்டிருக்கும்போது அவசர சமாச்சாரமென்று சந்திக்க வரும் பாதிரியார், இளவரசர் முண்டக் கட்டையாகக் குளிப்பதைப் பார்க்க விரும்பாததைச் சொல்லுவார். அதற்கு இளவரசர் நக்கலாகச் சொல்லுவார்.

பாதிரியார் மனித ஆவியையும், ஆத்மாவையும் நிர்வாண கோலத்தில்தான் மனதில் கற்பித்து ஆசீர்வதிப்பார், என்று கரிபால்டியுடனான சண்டையை இளவரசர் தவிர்க்கும் முடிவோடு, குடும்பத்தோடு டொன்னா ஃபுகட்டா Donna Fugata எனும் ஊருக்கு போகிறார். உலகம் மாறிவரும் யதார்த்ததை அறிந்த சீமான்களில் இளவரசரும் ஒருவர். ஒவ்வொன்றும் அப்படியே இருக்க நாம் விரும்பினால், ஒவ்வொன்றும் மாற்றம் பெற்றாக வேண்டும், என்ற கொள்கையுடையவர் அவர். எனவே தம் இனத் தகுதிக்கும், செல்வாக்குக்கும்  மிகவும் குறைந்த உள்ளூர் மேயரின் பெண்ணை திருமணம் முடிக்க தம் சகோதரனின் மகன் டாங்க்ரெடி ஃபல்கோனெரியை மணமகனாக்க  முடிவு செய்கிறார். அவரது வேங்கை வம்சத்துக்கும் மேயரின் குள்ளநரி வம்சத்துக்கும் இடையேயான திருமண பந்தம் படத்தின் இறுதிப் பகுதியில் இடம் பெறுகிறது. இப்பகுதிக் காட்சி மிக அற்புதமாக ஜிசிப்பெ ரோட்குன்னோ Giuseppe Rotonnoவின் காமிராவால் ஒளிப்பதிவாயிருக்கிறது. வங்கத்தின் பிரம்மாண்ட மாளிகைகள் சத்யஜித்ரேயின் சில படங்களில் இடம் பெற்றது போன்று, இப்படத்தில் ஓர் அழகிய அசத்தலான மாபெரும் மாளிகை இக் காட்சிகளில் இடம் பெறுகிறது. ஒளிப்பதிவு அபாரம். மாளிகையின் ஓவியங்கள், சிற்பங்கள், பிரமிப்பூட்டும் மரவேலைப் பாடுகள்… ஆனால் சாலினா வம்சாவளி குடும்பத்தின் ஆண், பெண்களின் முகங்கள் இத்திருமணத்தில் வெளுத்து சோபையிழந்து தோன்றுகின்றன. சினிமா வரலாற்றில் நாவல் ஒன்றைத் தழுவி திரைப்படமாக்கியதில் மிகச் சிறந்த படைப்புகளில் விஸ்கோண்டியின் லேபார்டும் ஒன்று என விமர்சிக்கப்பட்டுள்ளது. இளவரசர் சாதாரண வம்சத்து மேயருடன் திருமண உறவு கொள்ளுவதை விஸ்கோண்டியின் சுய வரலாறு ரீதியான திரைப்பட காட்சியாடல் என்பாருண்டு. பிறப்பில் அதி செல்வாக்கான பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்த லூசினோ விஸ்கோண்டி ஒரு பொதுவுடைமைவாத கொள்கையை ஏற்று கம்யூனிஸ்டாகத் திகழ்ந்ததை அவ்வாறு பேசுவார்கள்.

மணமகனாக பிரெஞ்சு நடிகர் ஆலன் டெலான் இளமை, வசீகரமாய் நடிக்கிறார். அவருக்கு இணையாக கிளாடியா கார்டினேல் Claudia Cardinale நடிக்கிறார். சாலினா இளவரசராக படம் முழுக்க வந்துபோகும் மறக்க முடியாத நடிப்பின் மூலம் கொள்ளை கொள்ளுபவர் புகழ் பெற்ற பிரிட்டிஷ் நடிகர் பர்ட் லங்காஸ்டர் லங்காஸ்டர் படத்தைக் கையாண்டு நடித்திருக்கிறார். போலவே, விஸ்கோண்டியளவுக்கு எந்த இயக்குனரும் லங்காஸ்டரை இதுவரை வார்த்து நடிக்கச் செய்ததில்லை. தனித்த அதி உயர்ந்த சீமானாகத் தோன்றி நடிக்கும் அதே நேரம் மிகுந்த மனிதநேயம்  கொண்டவராகவும் நடிப்பால் வெளிப்படுகிறார். அவ்வாண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான தங்கப் பதக்க விருது லெபார்டுக்கு கிடைத்தது.

லூசினோ விஸ்கோண்டிக்கு மரணம் குறித்தான சிந்தனை சுற்றிச் சுற்றி வந்திருக்க வேண்டும். இப்படத்தில் இறுதிக் காட்சியான பிரம்மாண்ட திருமண ஒப்பந்த ‘‘பால் ரூம் நடனத்தின்போது இளவரசர் ஃபாப்ரிஜியோ ஒரு பெரிய தைல வண்ண ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள ஒரு மனிதனின் மரண கோலத்தை அவ்வுடலைச் சுற்றியமர்ந்துள்ள பெண்களையெல்லாம் பார்க்கிறார். தன் மரணம் குறித்தும் யோசிக்கிறார். லாம்படூசாவின் நாவலில் இறுதியில் இளவரசர் இறந்துவிடுவதாயிருக்கும் முடிவை கிட்டதட்ட மரணவுணர்வோடு சிம்பாலிக்கலாக விஸ்கோண்டி படத்தில் மாற்றியிருக்கிறார். தொடர்ந்து தாம் இயக்கிய STRANGER DAMNED மற்றும் DEATH IN VENICE ஆகிய படங்களின் முடிவும் மரணத்தையே கொண்டவையாக விஸ்கோண்டி உருவாக்கியிருக்கிறார்.Bioscope Karan 24th Web Article Series by Vittal Rao தொடர் 24: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

DAMNED 1969ல் விஸ்கோண்டியின் இயக்கத்தில் உருவான மிகச் சிறந்த படம். இப்படம் எழுபதுகளின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதும், சென்னையில் நடந்தேறிய சர்வதேச திரைப்பட விழாவின்போது  இப்படம் பாண்டி பஜாரிலிருந்த ராஜகுமாரி தியேட்டரில் திரையிடப்பட்டது. இரண்டாவது சுற்றில் பொதுத் திரையிடலாக சஃபையர் திரையரங்கில் வெளியானது. இரு தியேட்டர்களில்  திரையிடப்பட்டபோதும் நானும் எழுத்தாளர் மா. அரங்கநாதனும் இரு முறை பார்த்தோம். டாம் டூம் படம் விழாவில் திரையிடப்பட்ட ஆண்டுதான் இந்திய அரசு  தங்க மயில் பரிசை நிறுவியது. அப்பரிசை சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்ற மிகச் சிறந்த படம் என லூசினோ விஸ்கோண்டியின் டாம்டு
படத்துக்குக் கிடைத்தது.

டாம்டு படத்தின் கதை, ஹிட்லரின் நாஜிக் கட்சி 1933ல் ஜெர்மனியில் அதிகாரத்தைப் பிடித்த காலச் சூழலில் நடக்கிறது. முப்பதுகளின் ஜெர்மன் தொழில் அதிபர் ஒருவரின் குடும்பத்துக்குள் நாஜிஸம் எப்படியெல்லாம் புகுந்து எதிரொலித்தது என்பதை, விஸ்கோண்டியின் படம் நம்மை திகிலுக்கு ஆட்படுத்துகிறது. இவரது திரைப்படங்கள், கதையின் காலத்தின் நகர வீதியமைப்பு, வாகனங்கள், உடைகள், சிகை பேச்சு பாவனையென்று சகலமும், அந்த காலத்துக்கே நம்மை அழைத்துப் போய்விடும். இந்த விஷத்தில் அவருக்கு திலெபார்டு, ரோகோ ஆகிய படங்களில் கலைப் பொறுப்பேற்ற ஆர்ட் டைரக்டர் பியரோ டோசி (PIERO TOSI) பெரிதும் துணை நின்றவர் விஸ்கோண்டி பிரபு குடும்பத்தில் (COUNT LUNCHINO VISCONTI DIMODRONE) 1906ல் இத்தாலியின் மிலன் நகரில் பிறந்தவர். மாபெரும் பிரெஞ்சு திரைப்பட மேதை ழான் ரென்வாரிடம் ஒரு மாதகாலம் மூன்றாவது உதவி இயக்குனராயிருந்து வேணிக் கற்றவர் பலமுறை வீட்டையும், கல்லூரியையும் விட்டு ஓடிப்போன விஸ்கோண்டியை அவரது தந்தை அவரை குதிரைப் படைப் பயிற்சிப் பள்ளிக்கு அனுப்பிவிட்டார். நாஜி எதிர்ப்பாளரும் கம்யூனிஸ்டாகவும் செயலாற்றியதற்காக விஸ்கோண்டி நாஜிகளால் கைது செய்யப்பட்டவர், இவர் திரைப்படங்கள் செய்ததைக் காட்டிலும் மிலன், வியன்னா ஆகிய நகர அரங்கங்களி்ல் நாடகங்களையும், இசை நாடகங்களையும் தான் அதிகளவு இயக்கியவர். DAMNED  படத்தில் ஜெர்மனியில் புகழ் பெற்ற தொழில் நகர் ஒன்றில் மாபெரும் நிஹர் தொழில் சாம்ராஜ்யத்தை கட்டி ஆள்வதில் தடுமாறி அழிந்துப்போன தொழிலதிபக் குடும்பத்தின் கதை.

ஒரு முக்கிய குடும்ப உறுப்பினனாக பிரிட்டிஷ் நடிகர் டர்க் போகார்டு (DIRK BOGARDE)  நடிக்கிறார். சிறந்த தொழில்  மற்றும் வர்த்தக அதிபருக்கான பெரும் பரிசொன்றை பெறும் பொருட்டு அதற்குப் போட்டியாக விளங்கிய சிலரை மிகத் தந்திரமாய் இவர் கொலை செய்கிறார். இவரது மனைவியாக அற்புதமாய் வந்து சோஃபி எனும் பாத்திரத்தை இன்கிரிட் தூலின் செய்கிறார். இவர்களுக்கு ஒருவித மனநோயாளியான மார்டின் என்ற வயது வந்த மகன். இந்த இருபது வயதுப் பையன் மார்டினை, இவன் அம்மா சோஃபி தன் மன ஆளுமைக்குள் அமுக்கியிருக்கிறாள். அவள் மீது மார்டினுக்கு ஈடிபஸ் (OEDIPUS வகை சரீர ஆசையுண்டு. தன்மீதுள்ள தன் தாயின் ஆளுமையை உடைத்து அதிலிருந்து விடுதலையாகும் வேகத்தில் தன் மீது அவளுக்கு மாறாத பகைமையேற்படும் வண்ணம் மார்டின் தன் தாய் சோஃபியைக் கற்பழித்து வல்லுறவு கொள்ளுகிறான். முடிவில் எல்லோரும் விஷமருந்தி இறக்கிறார்கள். சோஃபியாவாக இங்மர் பெர்க்மனின் ஏழெட்டு சுவீடிஷ் படங்களில் நடித்த இங்ரிட் தூலின் சிறப்பாக நடிக்கிறார். மார்டினாக மிகவும் கடினமான மனோவியாதியாளனாய் அபாரமாய் நடித்திருப்பவர் ஹெல்மட் பெர்ஜர் என்ற ஜெர்மன் நடிகர். நாவலாசிரியர் ஆல்பர்ட் காம்யூவின் (ALBERT CAMUS) மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்று அன்னியன் இருத்தலியல் (LA STRANGES) தத்துவத்தின் வாழ்வியல் மாதிரியாக இந்நாவல் அமைந்துள்ளது. இக்கதையை மிக அற்புதமாயும் எளிமையாயும் தயாரித்து இயக்கினார் லூஷினோ விஸ்கோண்டி, OUT SIDER என்று ஆங்கிலத்தில் கிடைத்த நாவலை நானும்
மா.அரங்கநாதனும் இரு முறை வாசித்தோம். அந்த சமயம்தான், அக்கதையை விஸ்கோண்டி STRANGER என்று படமாக்கி, சென்னை காசினோ திரையரங்கில் திரையிடப்பட்டது. அது ஒரு கோடையில் சென்னையில் கோடை வெயிலின் தகிப்பு பேதலிக்க விடுவதுபோல, படத்திலும் சூரியனின் அல்ஜீரிய வெப்பத்தின் கொடுமையில் சுட்டுக் கொன்றதாகக் கூறுகிறான் அந்நியன் மத்தியான காட்சி பார்த்து முடித்து வெளியில் வந்த சுருக்கிலேயே மாலைக் காட்சிக்கான வரிசையில் நானும் அரங்கநாதனும் போய் நின்றோம். நானும் மா.அரங்கநாதனும் ஒரே சமயத்தில் ஒரே நாளில் தொடர்ந்து இருமுறை பார்த்தும் வெறி தணியாத படம் விஸ்கோண்டியின்  STRANGER.

இப்படத்திற்கு இந்திய திரைப்படத் தணிக்கைக் குழு M சான்றிதழ் அதாவது MATURED AUDIENCE ONLY என்ற அறிவு. மனமுதிர்ச்சி பெற்றவருக்கான பிரத்தியேக சான்றிதழ் வழங்கியிருந்தது. இத்தகைய சான்றிதழ் அபூர்வமாக ஒரு சில படங்களுக்கே வழங்கப்பட்டிருக்கின்றன. காம்யூவுக்கும் விஸ்கோண்டிக்கும் ஒரு நெருங்கின தொடர்புண்டு. நாஜிகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராக இருவருமே பிரான்ஸில் எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிறை சென்றவர்கள்.

மார்சா பிரெஞ்சு அல்ஜீரியாவில் குமாஸ்தா வேலைப் பார்த்துக் கொண்டு சுய சமையல், காதலியுடன் விடுமுறைகளில் உடலுறவு உட்பட்ட இனிய பொழுதுகளாய்  கழிக்கும் இளைஞன். பிரெஞ்சு காலனியாதிக்கத்தை எதிர்த்து புரட்சியும், சண்டையுமாய் இருப்பதால் அரபியர் சிலர் இவனோடு வம்பிலிழுக்கின்றனர். இச்சமயம் அவனது அம்மா ஊரில் இறந்துபோகிறாள். சம்பாதித்து தாயைக் காப்பாற்றாது முதியோர் விடுதியில் அவளை சேர்த்திருந்தபோது அவள் இறந்து விடுகிறாள். அவளை ஒரு முறை கூட போய் பார்த்திராத மார்சா இப்போதுபோய் விடுதிக்காரரைப் பார்க்கிறான். இறந்துபோனவளைப் பார்க்காமலேயே திரும்பியும் வந்து விடுகிறான். இவையெல்லாம் இவனைப் பற்றின பெருந்தவறான நடவடிக்கை, இயல்புகளாய் சமூகத்தை உறுத்துகிறது. சமுதாயத்தின் கண்களுக்கு மார்சா ஒரு சராசரி மனிதனுக்கான அடிப்படை குறைந்தபட்ச உணர்வுகளும், மனித நேயமும் ஒரு நிகழ்வுக்கான எதிர்வினையும் இல்லாதவனாய் படுகிறான். உயிர் வாழ்தல், மரணம், உடலுறவுடனான காம உணர்வு என்பனவற்றை அவன் உள்ளார்ந்து உட்சென்று ஈடுபடாது சகலத்தையும் வெளியில் நின்றே வெளிமனிதனாகப் பார்க்கிறான். அதேசமயம் அறிவோடும் உணர்ச்சிகளோடும் இயங்குகிறான். BEING IN NOTHINGNESS என்கிறார் ழான் பல் சார்தர். ஒரு முடிவில்லா நிகழ்காலமாகவே படும் தன் நடப்பியல் வாழ்வில் எந்த எதிர்பார்ப்புமிக்க ஆவலுமற்றவனாய் மார்சா, சிந்திக்க, சிந்தித்து வெளிப்படுத்த தேவையற்றவனாய் தெரிகிறான்.

காதலியுடன் கடும் வெயிலில் ஒரு நாள் கடற்கரையிலிருக்கையில் இரு அரபிய ரவுடிகளுடன் ஏற்படும் மோதலில் ஒருவனை மார்சா கொன்றுவிடுகிறான். கைது, சிறை, விசாரணை, பைபிள் மீது சத்தியம் செய்ய மறுப்பு. இறுதியில் அவனை கில்லடின் முறையில் சிரச்சேதம் எனும் தண்டனை வழங்கப்படுகிறது. இப்படத்தில் மார்சாவாக வரும் புகழ்பெற்ற இத்தாலிய நடிகர் மார்செல்லோ மாஸ்டிரியாயினி மிக மிக அற்புதமாக நடித்திருக்கிறார். அன்றைக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் இப்படத்திற்கு எழுதிய விமர்சனத்தின் இறுதிவரி: EXISTENCIALISM LIVED OUT, என்று குறிப்பிட்டிருந்தது.

பிரம்மாண்டமான மற்றொரு படைப்பை லூட்விக் எனும் திரைப்படம் வழியே தருகிறார் விஸ்கோண்டி. 1972-ல் விஸ்கோண்டி தயாரித்து இயக்கிய இம்மாபெரும் வரலாற்றுப் படம் லூட்விக் மூன்று பகுதிகளாக தரப்பட்டிருக்கிறது. பிரஷ்ஷியாவை (PRUSSIA) அன்றிருந்த சிறிய ஜெர்மனி, மற்றும் பவேரியா என்பனவற்றை ஒன்றிணைத்து ஓர் அகண்ட ஜெர்மனியாக உருவாக்குவதின் வரலாற்றுப் பகுதி இப்படம் லூட்விக்கின் மகுடாபிசேகம் மிக பிரம்மாண்டமானது. பவேரியாவின் இளவரசனாயிருந்து அரசனாகும் லூட்விக்கின் திருமணம் அவன் மனம் போலவே அவ்வளவு பிரமாதமாயில்லை. அவன் ஒரு மனோவியாதிக்காரன். நரம்பு பலவீனம், உணர்ச்சிவயப்படல், ஓரின பாலுறவு என் பதிலும் இசை, இசை நாடகத்திலும் மிக்க ஆர்வம் கொண்டவன்.

வான் பிஸ்மார்க்கின் அகண்ட ஜெர்மனி உருவாக்கத்தில் பவேரியாவும் சங்கமிக்கத் தயாராகும் 19ஆம் நூற்றாண்டு வரலாற்றுப் படம். படத்தின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றாக இருப்பவர் புகழ் பெற்ற பவேரிஸ,  ஆஸ்திரிய பின்னர் ஜெர்மனியரான  இசை மேதாவியும் இசை நாடகக் கலைஞருமான ரிச்சர்டு வாக்னர் (RICHARD WAGNER) ஹிட்லர் தம் கோப உணர்ச்சிகளின்போது வாக்னரின்  இசையை வைத்து கேட்பதின் மூலம் தணிந்துபோவார் என்பதும் வரலாறு வாக்னராக பழம் பெரும் பிரிட்டிஷ் நடிகர் டிரெவார் ஹோவார்டு (TREVOR HOWARD) அற்புதமாய் நடித்திருக்கிறார். லூட்விக் பாத்திரத்தை பிரமாதமாய் நடித்திருப்பவர் ஹெல்மட் பெர்கர் (HELMUT BERGER).

பியர் பவோலோ பசோலினி (PIER PAOLO PASOLINI) என்ற இத்தாலிய பிரமுகரின்  பெயர் உலகத் திரைப் பட வரலாற்றில் பெரும் பரபரப்பை செய்து வந்த ஒன்று மதரீதியான கெடுபிடிகளை, மத ரீதியான ஒழுக்கவியலின் பல்வேறு தளங்களை, சீமான்களை சீமாட்டிகளை, சமூகத்தின் மிகவும் தாழ்ந்த அடித்தட்டு மனிதர்களை ஏன், மனிதன் வசமுள்ள மிருகங்களையும் கூட, பசோலினியளவுக்கு காட்சி ரூப ரீதியாக திரைப்படங்களில் காட்டியதுமில்லை. அதற்காக வாங்கிக் கட்டியதுமில்லை- வேறெவரும் இறுதியாக பொதுவிடத்தில்  அவர் கொலையே செய்யப்பட்டவர். இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் வறுமையை, வறியவர்கள் குவிந்த சேரிகளையும் அதிகரிக்கச் செய்த அதே சமயம் பக்தியையும் பயமுறுத்தல் சேர்த்து புகட்டியது. இலக்கியங்களும் நாடகமும் பிற நிகழ்த்துக் கலை வடிவங்களும் மனிதனை இவற்றின் தார்மீக, சுழல்களின் அமுக்கலினின்றும் விடுவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டபோது அவற்றுடன் சினிமாவும் கைகோர்த்துக் கொண்டது. அவற்றில் ஒன்றாக வந்தது பசோலினியின் சினிமா. அவர் புகழ் பெற்ற சிறுகதைகளை திரைப்படமாக்கியவர். அவற்றில் முக்கியமானவை இரு படங்கள். ஒன்று, டெக்கமரான் (DECAMERON).Bioscope Karan 24th Web Article Series by Vittal Rao தொடர் 24: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

டெக்கமரான் கதைகள் கேலியும், கிண்டலும் சமூக நடப்பியலை ஒளிவு மறைவின்றி பச்சையாகக் காட்டி விமர்சிப்பவை. பாலுறவு சமாச்சாரங்கள் அதிகம். டெக்கமரான் கதைகளை எழுதியவர் இத்தாலிய எழுத்தாளர் பொக்காஷியோ BOCCACCIO ஒரு சமயம் நான் பணிபுரிந்த அலுவலகத்தில் ஒருவர் உணவு இடைவேளையில் ஒரு புத்தகத்தை ஒளித்து வைத்துப் படிப்பார். அந்த காலத்தில் பிரேமா பிரசுரம் என்று ஒன்றிருந்தது. அது பெரும்பாலும் துப்பறியும் நாவல்களையும் ஆபாசம் மிக்க சில கதைப் புத்தகங்களையும் பதிப்பித்து வெளியிடும். வரவேற்பு அதிகம். அவற்றில் ஒன்று, நண்பர் ஒளித்து படித்துக் கொண்டிருந்தது. எனக்கு மிகவும் வேண்டியவராதலால் என்னிடம் அதையெல்லாம் காட்டுவார். வாங்கிப் பார்த்தேன். பொக்காஷியோ எழுதிய கதைகள், டெக்கமரான் கதைகள், என்றிருந்தது. எப்படி போகுது? என்று கேட்டேன்.

சரோஜாதேவி கதைபோல இல்ல, படிச்சிட்டு வேணும்னா தாருங்க, என்றார் நண்பர். அப்படித்தான் பொக்காஷியோ அருளிச் செய்த டெக்கமரான் கதைகள் படிக்கக் கிடைத்தது. டெக்கமரான் கதைகள் படிக்கக் கிடைத்தது. டெக்கமரான் கதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த ஒன்பது கதைகளைக் கொண்ட வண்ணப்படம் டெக்கமரான் பசோலினியின் அரிய இயக்கத்தில் 1970ல் திரைப்படமாயிற்று. அனேகமாய் தான் இயக்கிய படங்களில் ஏதேனும் ஒரு சிறு பாத்திரத்தில் பசோலினியும் நடித்திருப்பார். ஒரு கதை மிக்க நகைச்சுவையும் கிறிஸ்தவ மடாலயங்கள் குறித்த நக்கல் மிக்கதுமானது. எல்லா மதங்களின் மடாலயங்களிலும் இவ்வகை
கூத்து இருக்கவே கூடும்.

ஒரு கன்னியாஸ்திரீகளின் வசிக்குமிடம், பரந்த செழித்து வளர்ந்த காடும் தோட்டமுமான பகுதிக்குள் ஏராளமான குடியிருப்புகள். அவர்களின் தலைவி நடுத்தர வயதுக்காரி. தோட்டக்கார கிழவனால் அவ்வளவு பெரிய தோட்டத்தை சமாளிக்க முடியாமல் உதவியாள் ஒருவனைக் கொண்டு வருகிறான். அவன் ஒரு இளைஞன், கன்னியாஸ்திரிகளின் இடத்தில் இளைஞனாக ஆண்கள் இருக்க அனுமதியில்லை. ஆனால் ஊமை செவிடாயிருந்தால் இளைஞனும் வந்து வேலை செய்யலாம் என்பதால் தோட்டக்கார கிழவனின் சொந்தக்கார இளைஞன் ஊமை. செவிடு என பொய் கூறி வேலையில் அமர்கிறான். தோட்ட வேலை செய்து கையில் இரு இளம் கன்னியாஸ்திரிகள் கவனிக்கின்றனர். காம இச்சை மேலிட்டு அவனோடு ரகசியமாய் உடலுறவு கொள்ள விழைகையில், ஒருத்தி கேட்கிறாள், சரி, குழந்தை உண்டாகி விட்டால் என்ன செய்வது? என்று அதற்கு மற்றவன் அலட்சியமாய் சொல்லுகிறாள், அது இப்போது கவலையில்லை. ஆனால்  பார்த்துக் கொள்ளலாம் அவனையிழுத்துக் கொண்டு இருவரும் பாழடைந்த அறைக்குள் போகின்றனர். வெளியில் நின்று பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு ஒருத்தி போகிறாள். சிறிது நேரம் கழித்து வெளியில் வந்து மற்றவளையும் போக சொல்லுகிறாள். அடுத்தவள் கேட்கிறாள், எப்படியிருந்தது? என்று  ஓ, அருமை, என்கையில் மற்ற கன்னிப் பெண்களும் கவனித்துவிட்டு குடியிருப்புக்குள்ளேயே போலி ஊமையனை அழைத்து உடலுறவுச் சுகம் பெறுகின்றனர். ஒரு நாள் இதைக் கவனித்து கண்டு கொண்ட கன்னிமார் தலைவி ஊமையனை தன் அறைக்கு அழைத்துதனக்கும் உடலுறவுச் சுகமளிக்க கட்டளையிடுகிறாள். அவன் களைத்துப் போய் எழுந்துவிடவும்,  ஏன் முடிக்காது போகிறாய், முடித்துவிட்டுப் போ, என்கிறாள் கன்னிமார் தலைவி. போலி ஊமையன் சலிப்பும் கோபமுமடைந்தவனாக, நான் என்ன மெசினா, ஒரு சமயம் ஒருத்தியோடுதான் முடியும் என்று கத்திவிடுகிறான். தலைவி திடுக்கிட்டு அதிர்ந்துபோய், ஆஹா, ஊமை பேசிவிட்டான், ஊமை பேசிவிட்டான், அற்புதம் அற்புதம் நிகழ்ந்துவிட்டது. என்று கத்திக் கொண்டே ஓடுகிறாள். இப்படியாக மற்ற எட்டு கதைகளும் செக்ஸியும் பக்தியையும் மூட நம்பிக்கைகளையும் எள்ளி நகையாடி  பஸோலினியின் அற்புத இயக்கத்தில் படமாக்கப்பட்டுள்ளன டெகமரான்.

Bioscope Karan 24th Web Article Series by Vittal Rao தொடர் 24: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்ஆங்கில இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் ஜியாஃப்ரி செளஸர் (GEOFFREY CHAUCER) இவர் 1340 வாக்கில் லண்டனில் பிறந்தார். ஏராளமான பயணங்களை மேற்கொண்டவரும், இராணுவம் மற்றும் அரசுப் பணிகளில் பல பதவிகளிலிருந்தவர். ஏராளமான கவிதைகளை எழுதியவர். செளஸர் தமது புகழ் பெற்ற காண்டர்பரி கதைகள் படைப்பை 1387 வாக்கில் எழுதத் தொடங்கியவர். காண்டர்பரி கதைகள் தொகுப்பில் மொத்தம் 24 (இருபத்து நான்கு) கதைகள்  இருக்கின்றன. இவை யாவும் கரடு முரடான ஆங்கில  எழுத்தாயில்லாது  இடைபட்ட ஒரு மொழியில் எல்லா கதைகளையும் கவிதை ரூபத்தில் எழுதியிருக்கிறார் கதையின் முடிவில் தகுந்த குறிப்புகள் தரப்பட்டுள்ளன. செளஸரின் காலத்தில், பொதுமக்கள் காண்டர்பரி புனித தேவாலயத்துக்கு லண்டனிலிருந்து புனித பயணம் மேற்கொள்ளுவது சாதாரண காட்சி. அது சமயம் இந்த யாத்திரையை மேற்கொண்ட யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்தவர், யாத்திரிகர்களை கதை சொல்லவைத்து போட்டி வைப்பது வழக்கம். அவர்களும் நிறைய கதைகளைப் போட்டியில் சொல்லுவார்கள். இந்த நிகழ்வைத் தம் கதைத் தொகுப்புக்கான களமாய் அமைத்து, இங்கிலாந்தின் மத்திய காலத்து சூழலில் கதைகளை எழுதியுள்ளார். சில கதைகள் பொக்காஷியோவின் டெக்கமரான் கதைகளை ஒத்திருக்கின்றன. The CANTERBURY TALES  தொகுப்பின் முதல் பதிப்பு WILLIAM CAXTON ன் அறிமுக உரையோடு 1470ல் அச்சு வடிவில் வெளிவந்தது. காண்டர்பரி கதைகளில் தமக்கு உகந்ததாயும் ரசிகர்களைக் கவரக்கூடியதுமாய் தேர்ந்தெடுத்து  THECANTERBURY TALES  என்ற வண்ணப் படத்தை பிரமிக்கும்படியான காட்சியமைப்புகளோடு பஸோலினி 1971ல் இயக்கினார். பணக்கார கிழட்டு கணவர்கள், அவர்களின் பாலுறவுகள், இளம் மனைவிகளின் கள்ளக் காதலுறவுகள் பாவிகளின் நரகப் பயணம், சாத்தானின் ஆளுமை நரகக் காட்சிகள் யாவும் மற்ற இயக்குனர்கள் அதுவரை துணிந்து அணுகியிருக்காத, முயற்சி செய்திருக்காத வடிவில் பஸோலினி செய்திருக்கிறார். இவரது மற்றொரு முக்கிய- அதிமுக்கிய திரைப்படப் படைப்பு, சாலோ, அல்லது சோடோமின் 120 நாட்கள்  SALO OR THE 120 DAYS OF SODOM எனும் படம். 1975ல் தயாரிக்கப்பட்டது.

பஸோலினியின் சாலோ, வை எவ்வளவுதான் நாகரிக உணர்வோடு பார்த்தோமானாலும், ஓர் அநாகரீக கசப்புச் சுவை நாக்கில் நிற்கும். அல்லது, எவ்வளவு அநாகரிக ரசனையோடு பார்த்தாலும், நாகரிக உணர்வு முன்னதை ஒதுக்கித் தள்ளிவிட்டு தலையெடுக்கும், இரண்டாம் உலகப் போரின் இறுதியில் இத்தாலிய சர்வாதிகாரி பெனிடோ முஸோலினி, மிகச் சொற்ப காலமே ஒரு குடியரசு அந்தஸ்தோடிருந்த ஸாலோ நகரில் கடைசியாகத் தோன்றி உரையாற்றினார்.

மார்க்விஸ் டிசேட்  THE MARQUIS DE SADE என்ற வக்கரித்த பிரபு, வக்கரிப்பான பாலுறவு வகைக்கு தம் பெயரையே சூட்டி, சாலோ அல்லது சோடோமின் 120 நாட்கள், என்ற நூலை எழுதினார்.  பஸோலினி அந்நூலின் விஷயத்தை தம் திரைப்படம் ஊடாக கண்டறிய வைக்கிறார். சேட்-ன் மூல நூலிலிருந்து வெகுவாக படம் வேறுபாட்டாலும், ்அதன் முக்கிய சாரத்தைக் கொண்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில் நடந்த ஃபாசிஸ கொடுமைமிக்க நிகழ்வுகளின்போது சாலோ நகரில் பஸோலினி சிக்கியிருந்தவர். அவரது சகோதரர் சாலோவில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதிகாரத்தை உச்சத்திலேற்றி, அதிகாரத்தை கடவுளாகக் கொள்ளும் ஃபாசிச தத்துவத்தை சிதைக்கும் முடிவோடு பாலுணர்வு வக்கரத்தை பாசிஸ குறியீடாக்கி காட்டுகிறார் பஸோலினி.

நான்கு பாசிஸ அதிகாரிகள், இளம் வாலிபர்களும் இளம் பெண்களும் கைதிகளாகப் பிடிக்கப் பட்ட நிலையில் அவர்கள் மீது தங்கள் முழு அதிகாரத்தையும் பிரயோகித்து அவர்களை வெவ்வேறுவிதமான இயற்கைக்கு மாறான பாலுறவு நடவடிக்கைகளில் உட்படுத்தி சித்திரவதை செய்து மகிழ்கிறார்கள். திரும்பவும் சொன்னார் பஸோலினி,  சாலோ- படம், 1944-ன் முஸோலினியின் பாசிஸ குடியரசை கண்டித்து எதிர்க்கும் விதமாய் செய்யப்பட்ட ஒன்று என்று அந்த நான்கு பாசிஸ பணக்கார உயர்குடியைச் சேர்ந்த கனவான்கள் பிரம்மாண்டமான மாளிகையில் வைத்து இந்த அநியாய அக்கிரம கூத்தை நடந்தேறுகிறார்கள். ஒரு இளைஞனுக்கும் இளம் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இந்த நிர்வாண கோல திருமணத்தை அந்த நால்வரில் ஒருவரான பாதிரியார் அதை நடத்தி வைக்கிறார். ஒரு நிர்வாணமான பெண்ணை மலம் உண்ண வைக்கிறார்கள். இக்காட்சி பார்க்கக் கூச வைக்கும் ஒன்று. அதே சமயம் பசோலினி அதற்கு கூறும் விளக்கம், நுகர்வோர் முதலாளித்துவத்துக்கு எதிரான எதிர்வினை நுகர்வோர் முதலாளித்துவத்தின் பல உணவுப் பொருள் தயாரிப்புகள் உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் அதே சமயம் அப்பாவி மக்களை ஈர்க்கவல்ல JUNK FOOD கலாச்சாரத்துக்கு எதிர்வினையான காட்சி சித்தரிப்பு என்று கூறுகிறார்.

இறுதியில் படத்தில் ஆண், பெண்கள் கழுத்து நெரிக்கப்பட்டு, நாக்குகள் துண்டிக்கப்பட்டு, தலைமுடி நீக்கப்பட்டு அவர்களின் முலைக் காம்புகள் தீயில் எரிக்கப்படுகின்றன. இவையெல்லாம் ஒன்று சேர்ந்ததொரு இசை நாடக ரீதியிலிருக்குமாறு செய்திருக்கும் பஸோலினி, அதற்கென உயர்ந்த ஒரு விதத்தில் வக்கரிப்பான இசை மேதை. காரல் ஆர்ஃப்ஸ் CARL ORFF சின் இசைக் கோர்வையான கார்மினா புரானா) CARMINA BURANA என்பதை பின்னணி இசையாக உபயோகித்திருக்கிறார். இவ்விசையை பஸோலினி அப்பட்டமான பாசிஸ இசையென்றே உறுதியோடு தீர்மானித்தவர். மற்றொரு விசயம், அமெரிக்க கவிஞரான எஸ்ரா பெளண்ட் முஸ்ஸோலினியை ஆதரித்தவர் என்பதால், இன்றைய அரசியலுக்கும் அதன் ஃபாசிஸ வாத கொள்கைகளுக்கும் பின்னணியிலும் முன்னணியிலுமாய் உலகப் பெரும்பணக்காரர்களும் கலைஞர்களுமிருப்பதை கொள்ளலாம். உடலையும், அது சார்ந்த பாலுணர்வையும் வெறுக்குமளவுக்கு பஸோலினியின் சாலோ சித்தரிப்புகளைக் கொண்டது. பாலுணர்வை ஈர்ப்பதற்கு பதிலாக வெறுத்தொதுக்கும் விதமாயுள்ளது.

மிகவும் சக்திவாய்ந்ததும், மனதைப் போட்டு வதைக்கும்படியுமான இத்திரைப்படம் சாலோ முடிக்கப்பட்டு திரையிடலுக்கு வெளிவரும் முன் பொதுவிடம் ஒன்றில் பஸோலினி பரிதாபமாக கொலை செய்யப்பட்டார். 1975ல் நடந்தேறிய இக் கொலை இன்றளவும் அதற்கான முக்கிய காரணத்தை அவரவர் தீர்மானத்துக்கே விட்டுவிட்டது. இவரது கடைசி படமான சாலோ பல நாடுகளில் திரையிட தடை செய்யப்பட்டது. சமீபகாலமாய்த்தான் பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் இப்படம் பல்வேறு வழிகளில் பார்க்க கிடைக்கிறது.

Bioscope Karan 23th Web Article Series by Vittal Rao. This Series About Italy cinema பயாஸ்கோப்காரன் இத்தாலி முதல் பாகம் 23 – விட்டல்ராவ்

தொடர் 23: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

இத்தாலி – 1

நமது பயாஸ்கோப்காரனின் சினிமா பயணம் என்பது யுலிசெஸ்ஸின் கடற்பயணம் போல. பயாஸ்கோப்காரன் ஐரோப்பிய சினிமாவின் முக்கிய திரைப்படங்களைத் தந்திருக்கும் உலகின் முக்கிய திரைப்பட மேதைகளைக் கொண்ட இத்தாலியில் வந்து இறங்கியிருக்கான். இந்திய திரைப்பட மேதைகள் ஒரு சிலருக்கு உந்து சக்தியாகவும் பாதிப்பு ஏற்படுத்தியதாகவும் உள்ள உலகத் திரைப்படங்கள் சிலதை உருவாக்கிய புகழ்பெற்ற திரைப்பட மேதைகளைக் கொண்ட இத்தாலி இரண்டாம் உலகப் போரின் பாதிப்பும் தாக்கமும் பெற்ற இவர்களின் மகத்தான படைப்புகளைக் கொண்டது. போரின் அவலத்தை அப்பட்டமாயும் அங்கதமாயும் அழகியல் நயத்தோடும் சொல்லுபவை. இத்தாலிய சினிமா, உலக சினிமாவில் மிக முக்கிய பங்காற்றியதில் சில மேதைகளைக் கொண்டது. ராபர்டோ ரோசலினி, விட்டோரியா டி சிகா, லூசினோ விஸ்கோண்டி, பியர் பவாலோ பசோலினி ஃபெடரிகோ ஃபெல்லினி, கைலேஞ்சலோ அண்டோனியோனி, பெர்னார்டோ பெர்டு லுஸ்ஸி மற்றும் ஜிசிபே டோர்னடூர் என்ற இயக்குனர் பெயர் பட்டியல் முக்கியமானது. இத்தாலிய சினிமா “நியோ ரியலிஸம்” என்ற திரைப்பட கோட்பாட்டை கண்டெடுத்தது.

Bioscope Karan 23th Web Article Series by Vittal Rao. This Series About Italy cinema பயாஸ்கோப்காரன் இத்தாலி முதல் பாகம் 23 – விட்டல்ராவ்

ராபர்டோ ரோசெல்லினி (ROBERTO ROSSELLIN) இத்தாலிய நியோரியலிஸ சினிமாவின் தந்தையாக குறிப்பிடப்படுவர். 1954-ல் ரோசெல்லினி, “நான் நியோரியலிஸத்தின் தந்தையில்லை”, என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். இந்தக் கட்டுரை முன் வைத்த முரண்பாடு, ரோசெல்லினியின் கலைக்கோட்பாட்டிலிருந்து நேரடியாக எழுப்பப்பட்டதென்று கருதப்படுகிறது. நியோ ரியலிஸம் என்பது திரைப்படத்தில், “ஸ்டைலை” நிராகரித்த ஒரு புதிய ஸ்டைல்! இந்த திரைப்பட ஆக்க வகைமையை ரோசெல்லினி இரண்டாம் உலகப்போரின் உச்சகட்டத்தில் பொருளாதார நெருக்கடி எதிரிகள் ஆக்கிரமிப்பு, வேலையாட்கள் பஞ்சம் என்பனவற்றின் இடையில் கையாண்டு வெற்றி பெற்றார். ஒரு படத்தில் பங்கு பெறும் நடிகர்களும் படப்பிடிப்புக்கான இடங்களுமே, அந்தப் படத்தையும் அதன் இயக்குனரையும் அந்தப் படத்தை உருவாக்குபவையாக இருக்க வைத்தன. ஸ்டூடியோக்கள் தவிர்க்கப்பட்டு, கதை நடக்கும் நிஜமான அசல் இடத்திலேயே படம் எடுக்கப்படுவதோடு, தொழில் ரீதியான நடிகர்களோடு, அந்தந்தப் பகுதியில் வாழ்ந்து நடமாடும் மக்களையே படத்தில் நடிக்கச் செய்வது. இது நியோ ரியாலினி வகை திரைப்பட ஆக்கத்துக்கான எளிமையான விளக்கம். “WE MUST KNOW THINGS OUTSIDE OF ANY IDEOLOGY’’, என்று தன் திரைப்படக் கொள்கையைப் பிரகடனப்படுத்தினார் ரோசெல்லினி.

ரோசெல்லினி 1906-ல் ரோமில் பிறந்தவர். இன்றைக்கு நாம் சிக்கியிருக்கும், “கொரோனா”வைப் போன்ற பேரழிவுப் பெருந்தொற்று நோயாக அந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் பரவிய “ஸ்பானிஷ் ஃப்ளூ” என்ற நோயால் ரோசெல்லினி இருபது மாதங்கள் படுத்த படுக்கையாயிருந்து உயிர் பிழைத்தவர். இவரோடு இவர் சகோதரர் ரென்ஜோ ரோசெல்லினியும் [RENZO ROSSELLINI] இணைந்து நாடகங்கள் போட்டனர். ரென்ஜோ பின்னாளில் ராபர்டோவின் படங்களுக்கு இசையமைக்கும் பொறுப்பாளராகயிருந்து வந்தவர்.

ரோசெல்லினி “ROME OPEN CITY” [ROMA CITTA APERTA] படத்தை 1945-ல் தயாரித்து இயக்கி வெளியிட்டார். இத்தாலியை ஜெர்மன் ராணுவம் 1945-ல் சூழ்ந்து ரோம் நகரை ஆக்கிரமித்தவுடனே இவர் இப்படத்தை செய்து முடித்தார். ஜெர்மனிய ராணுவ ஆக்கிரமிப்பின் போது நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளை அவற்றில் பெங்கு பெற்ற ரோமானிய பொது மக்களின் அவலத்தை அவர்களைக் கொண்டே – கிட்டத்தட்ட ஓர் ஆவணப் படம் போல செய்திருக்கிறார். இப்படத்தின் முக்கிய மையமாயிருப்பது, ஒன்பது மாத ஜெர்மனிய ராணுவ ஆக்கிரமிப்பில், அதை எதிர்த்து ரகசியமாய் போராடிய கம்யூனிஸ்டு “எதிர்ப்பாளர்”களின் கதை.

இரண்டாம் உலகப் போரின் உச்சத்தில் ரோம் நகரம் ஜெர்மன் ராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த மிக நெருக்கடி மிக்க கட்டம். அன்றாட வயிற்றுப் பிழைப்புக்கு போராட்டம். கடுமையான உணவுப் பங்கீடு அமுலில் வருகையில் மக்கள் ரொட்டிக்கு வரிசையில் நிற்கும் காட்சி. நிலக்கரி லாரிகளிலிருந்து சாலையில் சிந்தும் கரியை பொறுக்கும் சிறுவர்கள். அவர்களையே, அப்படியப்படியே அந்தந்த இடங்களிலேயே இப்படம் படமாக்கப்பட்டது. இப்படம் உலகின் முதல் நியோ ரியலிஸ திரைப்படம். அதுவரை, சர்வாதிகாரி முஸோலினி காலத்து “வெள்ளை டெலிபோன் திரைப்படங்கள்” எனும் 1940களின் தொடக்க கால மோகத்தை உடைத்து, கருப்பு டெலிபோன்களை படமாக்கிய முதல் படமும் இதுதான். முஸோலினிக்கு வெள்ளை டெலிபோன் கருவிகளின் மேல் மோகமாதலால், அன்றைய திரைப்படங்களில் இடம் பெற்ற தொலைப்பேசி கருவிகளும் வெள்ளை நிறத்தாலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது.

Bioscope Karan 23th Web Article Series by Vittal Rao. This Series About Italy cinema பயாஸ்கோப்காரன் இத்தாலி முதல் பாகம் 23 – விட்டல்ராவ்
ANNA MAGNANI

ரோமை நாஜிகள் ஆக்கிரமித்ததை, நகர ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்களுன் கம்யூனிஸ்டுகள் அதிகம். கம்யூனிஸ்ட் தலைவன் ஃபிரான்சிஸ்கோ என்பவரின் லித்தோகிராஃபிக் அச்சுக்கூடம் இடம் பெற்றிருந்த அடுக்குமாடி கட்டிடத்தில் மான்ஃபிரெடி எனும் எதிர்ப்பாளர் கம்யூனிஸ்ட் தலைவன் ஒளிந்திருக்கிறான். அதை சந்தேகித்த ஜெர்மன் ஜெஸ்டபோ போலீஸ் திடீரென போய் சோதிக்கிறது. மான்ஃபிரடி தப்பித்து வேறொரு பெண் வீட்டில் தஞ்சம் புகுகிறான். அச்சுக்கூட உரிமையாளர் ஃபிரான்சிஸ்கோவின் மனைவி பினாவும், கம்யூனிஸ்டுகள் மற்றும் ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்கள் மீது அக்கறையும் பரிவும் கொண்ட தேவாலய பாதிரியார் பின் பியட்ரோவும் புரட்சியாளருக்கு உதவி வருகின்றனர். இறுதி வெற்றி ரோம் நகருக்கு கிடைக்கும் தருணத்தில் கம்யூனிஸ்ட் மான்ஃபிரடி பிடிபட்டு மரண தண்டனை பெறுகிறான். அவனுக்கு உதவிய பினா, கர்ப்பிணி கோலத்தில் நாஜிகளால் வீதியில் சுட்டுக் கொல்லப்படுகிறாள். பாதிரியாரையும் சுட்டுக் கொல்லுகின்றனர். பினா பாத்திரத்தில் அன்னா மாக்னானியும் (ANNA MAGNANI), மான்ஃபிரடியாக மார்செல்லோ பாக்ளியரோவும் (MARCELLO PAGLIERO), பாதிரியாராக அல்டோ ஃபாப்ரிஜியும் (ALDO FABRIZI) தொழில்முறை திறனோடு நடித்திருக்கினற்னர். மற்ற பாத்திரங்களை ஏற்ற உப – உபரி நடிக நடிகைகள் யாவருமே நடிகர்களே அல்ல. இப்படம் எடுக்கப்பட்ட அவ்வந்த பகுதிகளிலுள்ள ஜனங்களே நடித்திருக்கிறார்கள். இந்த வகையான புதிய யதார்த்த வழி படமாக்கலை கடக் மற்றும் மிரினாள் சென்னும் தங்கள் சினிமாக்கு பின்பற்றியிருக்கிறார்கள். ரோம் ஓப்பன் சிடிகேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு PALME DOR விருது பெற்றது.

இவ்வகையான நியோ ரியலினி திரைப்பட முறை உலகெங்கும் பின்பற்றப்பட்டது. பிரமிக்க வைக்கும் ஒளிப்பதிவை காமிரா கலைஞர் உபால்டோ அராடா  [UBALDO ARATA] செய்திருக்கிறார்.

ரோசெல்லின் அடுத்தடுத்து செய்த இரு படங்களும் ஓபன் சிடி போலவே நியோரியலிஸ் படங்கள். PAISA [1946]  என்ற படம் யுத்தகால இத்தாலி வாழ்க்கையை ஆறு பகுதிகளில் ஆறு கதைகளில் சொல்லும் படம். ஆறாவது பகுதி அற்புதமானது. மூன்றாவது GERMANY, YEAR ZERO [1947] என்ற படம் ஒரு ஜெர்மனிய பையன் குண்டு வீச்சால் படுமோசமாய் நாசமாகி சிதிலமடைந்த பெர்லின் நகரத்துக்குள் நடமாடும் அனுபவம் பற்றியது. இம் மூன்று திரைப்படங்களும் ராபர்டோ ரோசெல்லினியின் “யுத்த கால முப்படங்கள்”, என்று அழைக்கப்படுபவை. ரோசெல்லினிக்கு உலகப் புகழ்பெற்ற சர்வதேச நடிகை ஒருவரிடமிருந்து கடிதமொன்று வந்தது.

“அன்பார்ந்த திரு ரோசெல்லினி, உங்கள் ஓபன்சிடி, பெய்சா ஆகிய திரைப்படங்களைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். உங்களுக்கு, நன்கு ஆங்கிலம் பேசும், ஜெர்மன் மொழியை மறக்காத, ஃபிரெஞ்சு மொழியில் பேசத் திணறும் இத்தாலிய மொழியறியாத ஸ்வீடிஷ் நடிகை ஒருத்தி தேவையிருக்குமானால் சொல்லுங்கள், நான் உடனே வந்து உங்கள் திரைப்படம் ஒன்றில் நடிக்கத் தயாராயிருக்கிறேன். இப்படிக்கு, இங்கிரிட் பெர்க்மன்.” என்றிருந்தது. அடுத்து ரோசெல்லினி இன்கிரிட் பெர்க்மனை கதாநாயகியாய் வைத்து  STROMBOLI. LAND OF GOD (1949) எனும் படத்தை இயக்கி வெளியிட்டார்.

இப்படத்தைத் தொடர்ந்து இன்கிரிட் பெர்க்மன் ரோசெல்லியின் இயக்கத்தில் ஐந்து படங்களில் நடித்ததோடு இருவரும் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். இந்த உறவு 1956 வரை நீடித்தது. 1956-ல் இன்கிரிட் பெர்க்மன் அமெரிக்க ஹாலிவுட்டின் அழைப்பை ஏற்று அங்கு நிரந்தரமாக இடம் பெயர்ந்தார். 1956-ல் பிரம்மாண்டமான ANASTASIA [1956] என்ற படத்தை YUL BRYNER–வுடன் இணைந்து நடித்தார். ரஷ்ய புரட்சிக்குப் பின் ஜார் மன்னனின் உறவினர்கள் ஃபிரான்சுக்கு தப்பியோடி மறைந்திருந்தனர். அதில் முக்கியமான பெண் அனாஸ்தாசியா. அவர்களைத் தேடிப் பிடிப்பதில் போல்ஷெவிக்குகள் அலைகின்றனர். போல்ஷெவிக் அதிகாரியாக யூல் பிரின்னரும் அவருக்குப்  போக்குக் காட்டும் அனாஸ்தாசியாவாக இன்கிரிட் பெர்க்மனும் சிறப்பாக நடித்திருப்பார்கள். இப்படத்தோடு பெர்க்மனுக்கும் ரோசெல்லினிக்குமான உறவு முடிந்து போனது. இப்படத்தில் நடித்தமைக்காக பெர்க்மன் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்றார். ரோசெல்லினி 1959-ல் INDIA என்ற மிக முக்கியமான ஆவணப்படம் ஒன்றை தயாரித்தளித்தார். ராபர்டோ ரோசெல்லினி 1977-ல் காலமானார். காலமாகும் தருணத்தில் ஏசு கிறிஸ்துவின் கதையை MESSIA என்ற தலைப்பில் படமாக்கினார். அவர் மறைவுக்குப் பிறகு 1978-ல் இப்படம் வெளி வந்தது.

ராபர்டோ ரோசெல்லினி தன் முதல் காதல் மனைவியிலிருந்து கடைசி மனைவி வரை எல்லோரோடும் இறுதி வரை தொடர்பிலிருந்தே வந்திருப்பவர். அவரது மரணத்தின் போது நல்லடக்கம் நடக்கையில் இறுதி மரியாதை செலுத்த அந்த எல்லா காதலிகளும் மனைவிகளும் வந்திருந்து மலர் வைத்துச் சென்ற நிகழ்வு மிக அரிதானது. இந்த நிகழ்வையே ஆரம்பக் காட்சியாக கொண்ட ஒரு ஃபிரெஞ்சு புதிய அலை படத்தை தயாரித்து இயக்கியவர் ஃபிரான்ஸ்வா த்ரூஃபா [FRANCOIS TRUFFAUT] படம் “THE MAN WHO LOVED WOMEN”.

Bioscope Karan 23th Web Article Series by Vittal Rao. This Series About Italy cinema பயாஸ்கோப்காரன் இத்தாலி முதல் பாகம் 23 – விட்டல்ராவ்

நியோரியலிஸ திரைப்படங்களில் மற்றொரு மைல்கல் விட்டோரியா டிசிகா இயக்கிய மிக மிக புகழ் பெற்றதும் உலகத்தின் கவனத்தை பெரிதும் ஈர்த்ததுமான படம் “THE BICYLE THIEVES” விட்டோரியா டி சிகாவின் [VITTORIO DE SICA] புகழ்பாடும் இப்படத்தை பயாஸ்கோப்காரன் மிகவும் காலம் கடந்தே பார்க்க நேரிட்டது. இதற்கு முன்பாக டி சிகாவை நடிகராக சில படங்களில் பார்த்த அனுபவமுண்டு. பிறகு அவர் இயக்கிய பல்வேறு சிறப்பான படங்களைப் பார்த்த பிறகுதான் “சைக்கிள் திருடர்கள்” படத்தையும் அவரது பிற இத்தாலி படங்களையும் பார்க்க நேரிட்டது. சேலம் நியூ சினிமாவில் வெளியான “A FAREWELL TO ARMS” (1957) வண்ணப் படம் அவற்றில் ஒன்று. இந்த புகழ்பெற்ற அமெரிக்க நாவல் அமெரிக்க எழுத்தாளரான ஹெமிங்வே எழுதியது. 1932-ல் கேரி கூப்பர் நடித்த கருப்பு வெள்ளைப் படம் ஒன்றிருக்கிறது.

1957-ன் படத்தில் ராக் ஹட்சன் நடித்திருப்பார் A FAREWELL TO ARMS – நாவல், முதல் உலகப் போர் பின்னணியில் இராணுவ செஞ்சிலுவை வண்டியின் ஓட்டுனருக்கும் இராணுவ நர்ஸ் ஒருத்திக்குமான சோக முடிவைக் கொண்ட காதல். போர் காட்சிகள், தியாகம் எல்லாம் உள்ளிட்டது. கதையில் ஓர் இராணுவ அறுவை சிகிச்சை மருத்துவரின் பாகம், பாத்திரம் மிக முக்கியமானது. அவரை எதிரிகள் குற்றவாளியாக்கி சுட்டுக் கொன்று விடுவார்கள். அந்த உணர்ச்சி மிக்க பாத்திரத்தை ஏற்று அதி சிறப்பாக நடித்தவர் விட்டோரியா டி சிகா. டி சிகாவை நமது பயாஸ்கோப்காரன் மேலும் சில படங்களில் குணசித்திர பாத்திரங்களில் நடித்திருப்பதை பார்க்க நேரிட்டது. [SHOES OF THE FISHERMAN]. இச்சமயம் அவரது அற்புத இயக்கத்தில் உருவான இத்தாலிய படம் “LA CIOCIARA – (1960)” [TWO WOMEN] ஓடியன் திரையரங்கில் இரண்டாவது ஓட்டமாய் திரையிடப்பட்டது. இரண்டாம் உலகப்போர் பின்னணியில் புகழ்பெற்ற இத்தாலிய நாவலாசிரியர் ஆல்பர்டோ மொரேவியா [ALBERTO MORAVIO] எழுதிய நாவலைக் கொண்டு
டி சிகா செய்த உயரிய படம். லா சியோசியாரா போரின் அவலம், மனித உறவுகள், தாய் – மகள் பாசம் என்பனவற்றைக் கொண்டது. இது ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு “TWO WOMEN” என்று வெளியானது.

1901-ல் இத்தாலியில் நேப்பிள்ஸ் நகரில் பிறந்த டி சிகா தன் வறிய குடும்பத்தைக் காப்பாற்ற ஆபீஸ் பையனாக வேலை பார்த்தவர். 17-வது வயதிலேயே சினிமாவில் நடித்தவர். அவரது வசீகர தோற்றம் விரைவில் புகழ் பெற்ற கதாநாயக நட்சத்திரமாக ஜொலிக்க வைத்தது. அவருக்கும் திரைப்பட எழுத்தாளர் சிசேர் ஸவாட்டினிக்குமான
[CESARE ZAVATTINI]  நெருங்கிய உறவு டி சிகாவை உயர்ந்த திரைப்பட இயக்குனராக்கியது. ஸவாட்டினியுடன் இணைந்து 1946-ல் “ஷு ஷைன்” [SHOE SHINE] [ BICYCLE THIEVES] 1948 இரு படங்களையும் செய்தார். சைக்கிள் திருடர்களின் நியோ ரியலினி அதிசயம். இந்தியாவில் ஒரு சத்யஜித் ரே தோன்றுவதற்கும் வழி காட்டியாயிற்று. இவ்விரு படங்களும் இரண்டாம் உலக யுத்த கொடுமையையடுத்து இத்தாலியை வாட்டிய வறுமையைச் செல்லுபவை. பைசைகிள் தீவ்ஸ் படம், சிறப்பு ஆஸ்கார் விருதைப் பெற்றது.

Bioscope Karan 23th Web Article Series by Vittal Rao. This Series About Italy cinema பயாஸ்கோப்காரன் இத்தாலி முதல் பாகம் 23 – விட்டல்ராவ்

யுத்தத்துக்குப் பிந்தைய ரோமில் வேலையற்று உழலும் அன்டோனியோ ரிக்குக்கு [ANTONIO RICCI] சினிமா சுவரொட்டி ஒட்டும் வேலை கிடைக்கிறது. அதற்கு சைக்கிள் அவசியம். சைக்கிள் இருந்தால் தான் வேலை தருவோம் என்கிறார்கள். மனைவி வீட்டு பெட்ஷீட்டுகளை அடகு வைத்து பழைய சைக்கிள் ஒன்றை வாங்கித் தருகிறாள். முதல் நாள் போஸ்டர் ஒட்டும் காட்சியே டி சிகாவின் கலை மேன்மையோடு அரசியல் – சமூக எதிர்கால சிந்தனையும் உள்ளிட்டதாயிருக்கும். அது பெரிய சுவரொட்டி. சுவரின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து ஒட்டப்படும் அச்சுவரொட்டி ஒரு அமெரிக்க ஹாலிவுட் படத்துக்கானது. சுவரொட்டி முழுக்க கவர்ச்சியான நிலையில் ரீடா ஹேவர்த்தின் படம் கொண்டது. இத்தாலியை ஹாலிவுட் சினிமா ஆக்கிரமித்திருப்பதை டி சிகா இந்தக் காட்சி வழியே தெரிவிக்கிறார். முதல் நாள் போஸ்டரை ஏணியில் ஏறி ஒட்டி விட்டு இறங்கிக் கீழே வந்து பார்த்தால் சைக்கிள் காணோம். அண்டோனியோவின் சைக்கிளை யாரோ திருடிச் சென்று விடுகிறார்கள். தனது மகன் – சிறுவன் ப்ரூனோவுடன் [BRUND] திருடுபோன தன் சைக்கிளைத் தேடி அண்டோனியோ ஊரெங்கும் அலைகிறான். பழைய பொருட்கள் – திருட்டு சாமான்களை வாங்கி விற்கும் குஜிலி, அடகுக் கடைகள் எங்கும் பார்த்தாகி விட்டது. பார்க்கும் பழைய சைக்கிள்கள் எல்லாமே களவு போன தன் சைக்கிள் போலவே இருக்கிறது. அப்படியான உணர்வை நமக்கு ஏற்படுத்தும் வகையில் டி சிகா, ஆகா! என்னமாய் காட்சிகளை அடுத்தடுத்து கோர்த்திருக்கிறார். ஒரு சைக்கிள் இவர்களுடையது போலவேயிருக்கிறதால், “இதுதான் நம் சைக்கிள்” என்று ப்ரூனோ கூறவும் அதை எடுக்க முயற்சித்து மாட்டிக் கொள்ளும் காட்சி நமது இரக்கத்தைப் பெறுகிறது.

சைக்கிள் போனதால் கிடைத்த வேலையும் கோவிந்தா! இந்த அலைச்சலில் ரோமானிய சமூகத்தின் பல போருக்குப் பிந்தைய அவலங்களை புரையோடின வகுப்பு பேதங்களை சந்திக்கிறான் அண்டோனியோ. இந்த மகத்தான இத்தாலிய நியோரியலிஸ் படம் விட்டோரியா டி சிகாவை புகழின் சிகரத்துக்கு இட்டுச் சென்றது. தந்தைக்கும் மகனுக்குமுள்ள மாபெரும் பரஸ்பர பரிவை. அன்புறவை, பாசத்தை இப்படம் அபரிதமாகச் சொல்லுகிறது. இப்படத்தில் மிருதுவாய் இழையோடும் அங்கதம் மற்றும் எள்ளல் கூடிய சமூக நகைச்சுவையில் சாப்ளினையும் பார்க்க முடிகிறது. டி சிகாவின் உயரிய இயக்கத்தில் பக்க பலமாய் இணைந்திருப்பது அண்டோனியோவா நடிக்கும் லாம்பர்டோ மாக்கியோரானி [LAMBERTO MAGGFORANI] மற்றும் சிறுவன் ப்ரூனோவாக நடிக்கும் என்ஸோ ஸ்மீலாலா [ENZO STALOLA]. என்ஸோ ஸ்டலோபுலா நடிகனல்ல. அங்கிருந்த பையன். இருவரின் அதி உயர்ந்த நடிப்பும், அலெஸ்ஸாண்ட்ரோவின் இசையும், கார்லோ மாண்டுவோரியின் [CARLO MONTUORI] பிரமாத ஒளிப்பதிவும் மிகச் சிறந்த அயல் மொழிக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுத் தந்தன.

Bioscope Karan 23th Web Article Series by Vittal Rao. This Series About Italy cinema பயாஸ்கோப்காரன் இத்தாலி முதல் பாகம் 23 – விட்டல்ராவ்

இடையில் வேறு படங்களைச் செய்து விட்டு விட்டோ ரியா டிசிகா 1960-ல் “LA CIOCIARA” [TWO WOMEN] என்ற மீண்டும் நியோரியலிஸ பாணியில் ஒரு படத்தை இயக்கினார். இரண்டாம் உலகப் போர் முடியுந்தருவாயில் ஜெர்மனிய படையின் தாக்குதல் ஒருபுறம், நேச நாட்டுப் படைகளின் எதிர் தாக்குதல் மறுபுறம் என்றிருக்கையில் முஸோலியின் கைதுக்குப் பின் இத்தாலிய ராணுவம் சீர் குலைகிறது. இந்த சூழலில் செஸ்ரா எனும் இளம் விதவை கணவனின் கடையைக் கவனித்துக் கொண்டு தன் பதிமூன்று வயது மகள் ரோ செட்டாவுடன் வாழ்கிறாள். குண்டு மாரி பொழியும் நிலையில் கடை மூடப்படுவதும் திறப்பதுமாய். ரோமை விட்டு வெளியேறி மலைப்பகுதியிலிருக்கும், சொந்த ஊருக்கு மகளோடு போய் விட முடிவு செய்கிறாள் செஸீரா. தன் கடையை பார்த்துக் கொள்ளுமாறு கணவனின் நண்பன் ஜியோவன்னியிடம் கேட்டுக் கொள்ள, அதற்கு பிரதியுபகாரமாய் அவன் அவளையே கேட்கிறான். அவனது விருப்பத்துக்கு இணங்கிவிட்டு செஸீரா, ரோசெட்டாவுடன் ரயிலில் புறப்படுகிறாள். வழியில் குண்டு வீச்சுக்கு ரயில் இருப்புப் பாதை சேதமடைந்ததால் ரயில் நின்று விடுகிறது. இறங்கி நடந்தே போய் விடலாமென இரு பெண்களும் தங்கள் மூட்டை முடிச்சுகளைத் தலையிலும் இடுப்பிலும் சுமந்து நடந்து விடுதியொன்றில் தங்குகின்றனர். அங்கும் இத்தாலிய சிப்பாய்கள் பாலியல் ரீதியான தொந்தரவை ஆரம்பிக்கின்றனர். அந்தப் பகுதியில் பாசிஸ்டுகள், ராணுவத்தை விட்டு விட்டு ஓடி வந்து ஒளிந்திருப்பவர்கள், கடத்தல் வியாபாரிகள் நிறைந்திருக்கின்றனர்.

அவ்வூரில் படித்த பணக்கார இளைஞன் ஒருவனுக்கும் செஸீராவுக்கும் காதலுறவு ஏற்படுகிறது. இளைஞன் பாசிஸத்தை எதிர்ப்பவன். ஒருநாள் அங்கு வரும் ஜெர்மானிய இராணுவம் மலைப் பகுதியில் வழிகாட்டியாக பிக்கோலை – இளைஞனை அழைத்துச் செல்லுகின்றனர். அவன் திரும்பல்லை. கிராமத்திலிருக்க பயந்த குடும்பங்கள் வெவ்வேறு திசையில் தப்பிச் செல்லுகையில், செஸீராவும் அவள் பெண்ணும் ஒரு பக்கம் செல்லும் வழியில் குண்டு வீச்சில் சிதிலமடைந்த தேவாலயத்தில் இராவு தங்குகின்றனர். அங்கு வரும் நேச நாட்டு படையைச் சேர்ந்த சிப்பாய்கள் வெறி கொண்டு தாயையும் மகளையும் ஒருவர் முன்னால் இன்னொருவரை, இருவரும் ஒருவரையொருவர் பார்க்கப் பார்க்க கெடுத்து நாசமாக்கி வல்லுலுறவு கொண்டு விட்டு போய் விடுகின்றனர். இந்த நிகழ்வு நடைபெறும் காட்சி மயிர் கூச்செறிய வைக்கும். ஒருகணம் ஆடிப்போய் விடுகிறோம். தாய் செஸீராவாக நடிக்கும் பிரபல இத்தாலி நடிகை சோஃபியா லாரன்ஸ் உலகப் புகழ்பெற்ற நடிகை. இந்த காட்சியிலும், அடுத்து ஒரு லாரியில் அமர்ந்து கண்ணீர் மல்க குடிகார லாரி டிரைவரின் ஆபாச பாட்டை சகித்தவாறு போகும் காட்சியிலும் சோஃபியா நடிப்பின் சிகரத்துக்குப் போய் விடுகிறார். ஓர் எளிய பெண்ணின் அனுபவ ரீதியாக இத்தாலியின் யுத்த வரலாற்றை டி சிகா மிக அழுத்தமாய் – அற்புதமாய் படமாக்கியிருக்கிறார். பல சர்வதேச விருதுகளைப் பெற்ற “இரு பெண்கள்” படத்தில் செஸீராவாக நடித்தமைக்கு சோஃபியா லாரன்ஸ் சிறந்த நடிகை விருது பெற்றவர்.

Bioscope Karan 23th Web Article Series by Vittal Rao. This Series About Italy cinema பயாஸ்கோப்காரன் இத்தாலி முதல் பாகம் 23 – விட்டல்ராவ்

டி சிகா 1963-ல் “THE CONDEMNED OF ALTONA” என்ற அரிய படத்தை இயக்கினார். “ஜெர்மனி யுத்தம் ஓய்ந்த பின்” – என்றும் இதைப் பெயரிடலாம். ஹிட்லர் காலத்தில் அவர் அமைத்திருந்த இரண்டு கொடூரமான அமைப்புகள்: ஜெஸ்டபோ மற்றும் எஸ்.எஸ். [SHUDTS STAFFEL] இந்த எஸ்.எஸ். அமைப்பு ஜெர்மனிய ராணுவத்தை விட கொடூரமானது. இதைச் சேர்ந்த நாஜிகள்தான் யூதர்களை விஷவாயு நிரம்பிய அறைகளில் தள்ளிக் கொன்றவர்கள். ஹிட்லர் மரணமுற்றபின், பாதிக்கப்பட்ட யூதர்களின் தலைவராக வைசந்தால் என்றவர் தலைமையில், அர்ஜெண்டினாவுக்கும் பிற இடங்களுக்கும் தப்பியோடி தலைமறைவான எஸ்.எஸ். தலைவர்களில் பிறகு பிடிபட்டு மரண தண்டனையளிக்கப்பட்டவர்களில் அடால்ஃப் இஷ்மன் [ADALF EACHMAN] எடுவார்டு ரோஷ்மன் [EDUVARD ROSHMAN] ஆகியோர் முக்கியமானவர்கள். அவ்வாறு தேடப்பட்டு வந்த ஒருவன் புத்திபேதலித்துப் போகிறான். அவனது தந்தை பெரிய தொழிலதிபராகிறார் – மேற்கு ஜெர்மனியில் மகனைக் காப்பாற்ற ஒரு பாதாள அறைகட்டி அதற்குள் வைத்திருக்கிறார். அவன் சதா பிதற்றியபடி கிழிந்துபோன எஸ்.எஸ். சீருடையில், பெரிய கரும்பலகையில் கிறுக்கல் கோட்டோவியங்கள் கிறுக்கி ஜெர்மனி நேச நாடுகளால் அழிந்து போய் அதன் இளைஞர்கள் ரவுடிகளாய், கூட்டிக் கொடுப்பவர்களாய் அலைகிறார்கள் என படம் கிறுக்கி தனக்குத் தானே பேசுவான். ஜெர்மன் இளம்பெண்கள் எல்லாம் சோரம் போய் வேசிகளாகி விட்டனர் என்கிறான்.

அப்படியெல்லாம் இல்லை, ஜெர்மனி தொழில்வளத்தில், கடல் வாணிபத்தில் கல்வியில் எவ்வளவு முன்னேறியுள்ளது என்று அவனுக்கு அவன் தொழில் அதிபரான தந்தை சொல்லியும் பயனில்லை. ஒருநாள் அவனைக் காரில் வைத்து மழை பெய்யும் சமயம் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லுகிறார் தந்தை. உயரமான இடத்துக்கு இட்டுச் சென்று துறைமுகத்தில் நங்கூரமடித்து நிற்கும் வணிகக் கப்பல்களைக் காட்டுகிறார். தொழிற்கூடங்களைக் காட்டுகிறார். மகன் சிரித்துக் கொண்டே தன் தந்தையைப் பிடித்துத் தூக்கி வெகு உயரத்திலிருந்து தள்ளிவிடுகிறான். மழை வலுக்கிறது. பைத்தியக்காரனின் தொழிலதிபத் தந்தையின் பிணம் மழையில் கிடக்கிறது. இப்படம் 1964-ல் சென்னை க்ளோப் திரையரங்கில் வெளியானது. இப்படத்தின் கதை-வசனத்தை டி சிகாவின் விருப்பப்படி அமைத்து எழுதியவர் உலகப் புகழ்பெற்ற ஃபிரெஞ்சு எக்சிஸ்டென்ஷியலிஸ தத்துவ மேதை ழோன் பல் சார்தர். கரும்பலகைக் கிறுக்கல் கோட்டோவியங்களை வரைந்தவர் போலந்து ஓவியரும் ஜார்ஜ் பெர்னார்டு ஷாவின் நண்பருமான ஃபெலிக்ஸ் டோபால்ஸ்கி.
[FELIX TOPALSKI]. புத்திபேதலித்த மகனாக சிறப்பாக நடித்தவர் ஆஸ்திரிய நடிகர் மாக்ஸிமில்லியன் ஷெல் [MAXIMILLON SCHELL]. தந்தையாக நடித்தவர் ஃபிரெடரிக் மார்ச்
[FREDERIC MARCH]. டி சிகாவின் சிறந்த படங்களுள் இதுவும் ஒன்று.

Bioscope Karan 23th Web Article Series by Vittal Rao. This Series About Italy cinema பயாஸ்கோப்காரன் இத்தாலி முதல் பாகம் 23 – விட்டல்ராவ்

டி சிகாவின் மற்றொரு யுத்த பின்னணியிலான படம் “SUN FLOWER”. இப்படம்

1969-ல் தயாரித்து இயக்கி வெளியானது. இத்தாலி ஃபிரான்ஸ் கூட்டுத் தயாரிப்பு. இத்தாலிய ராணுவ சிப்பாய் ஒருவன் இரண்டாம் உலகப்போரின் போது ரஷ்ய எல்லைக்கு அனுப்பப்படுகிறான். ரஷ்யாவில் கைதாகி போர் ஓய்ந்த பிறகு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அங்கேயே சூரியகாந்திச் செடிகளை பயிரிட்டு சாகுபடி செய்து கொண்டு வாழ்க்கை நடத்துகிறான். தாய்நாடான இத்தாலிக்குத் திரும்புவதே இல்லை. அவனது இத்தாலிய மனைவி அவனைத் தேடிக் கொண்டு ரஷ்யாவுக்கு வருகிறாள். ஒருவழியாக இராணுவ விவரங்களைக் கொடுத்தபின் அவனை கண்டடைகிறாள். இப்போது அவன் பொது மன்னிப்பு பெற்று, ரஷ்ய குடிமகனாகி, ரஷ்ய பெண்ணை மணந்து ஒரு குழந்தைக்கும் தந்தையாக சுகமாய் வாழ்கிறதைப் பார்த்துவிட்டு இத்தாலிய மனைவி, ஊர் திரும்புகிறாள். இந்தப் படத்தில் ரஷ்ய இயற்கைக் காட்சிகளை ஏராளமாக வழங்கியிருக்கிறார் டி சிகா. இத்தாலி மனைவியாக சோஃபியா லாரன்ஸும், அவளது கணவனாக மார்செல்லோ மாஸ்டிராயினியும் நடிக்கிறார்கள். ரஷ்ய மனைவியாக லூட்மிலா சவேலியெவா [LUDMILA SAVELYEVA] மற்றும் கலினா ஆண்ட்ரீவா [GALINA ANDREEVA] எனும் ரஷ்ய நடிகையும் நடிக்கிறார்கள். சென்னையில் சஃபையர் திரையரங்கில் திரையிடப்பட்ட SUN FLOWER விட்டோரியா டி சிகாவின் சிறந்த படங்களில் ஒன்றாக கொள்ளப்படாதது.

உலக சினிமாவில் மனித நேயத்தை முன்னெடுத்துச் சென்ற திரைப்பட மேதைகளில் டி சிகா ஒருவர். இவர் 1974-ல் காலமானார்.

(வளரும்)

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 19: பயாஸ்கோப்காரன்(கிழக்குமுகமாய் 2) – விட்டல்ராவ்

தொடர் 20: பயாஸ்கோப்காரன்(கிழக்கு முகமாய் 3) – விட்டல்ராவ்

தொடர் 21: பயாஸ்கோப்காரன்(மத்திய கிழக்கில் ஈரான் துருக்கி) – விட்டல்ராவ்

தொடர் 22: பயாஸ்கோப்காரன்(மேற்கு ஐரோப்பிய சினிமா) – விட்டல்ராவ்

Bioscope Karan 22th Web Article Series by Vittal Rao. This Series About Western European cinema பயாஸ்கோப்காரன் மேற்கு ஐரோப்பிய சினிமா 22 – விட்டல்ராவ்

தொடர் 22: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



மேற்கு ஐரோப்பிய சினிமா

துருக்கிய சினிமா மிகவும் அறிவு ஜீவித்தனமாயிருக்கிறது. மிக மிக எளிமையாகத் தோற்றமளிக்கும் துருக்கிய திரைப்படங்கள் சில மிக மிக ஆழமான பொருள் பொதிந்தவை. மனிதனின் வாழ்வியல் பிரச்சினைகளையும் அவற்றின் கேள்விகளையும் உள்ளிட்ட கதையாடல்கள் ஊடே அவற்றுக்கான பதில்களை தாமாகவே மிகவும் சாவதானமான நடையில் தேடிக் கொண்டவையாக இருப்பவை. யோசிக்கும்போது, ஒரு வித “ மணிகவுல் ” தனமான சினிமாவாக சில துருக்கித் திரைப்படங்கள் படுகின்றன. அப்படியிருப்பதுவே அவற்றின் மேன்மை. துருக்கிய சினிமாவின் அரிதான திரைப்படங்கள் சிலதைத் தயாரித்து இயக்கி நடித்து, சர்வதேச அளவில் பெயரும் பாராட்டும் புகழும் பெற்றவர் நூரி பில்கெ சீலான் (NURI BILGE CEYLAN). இவரது மனைவி எப்ரு சீலானும் (EBRU CEYLAN) இவரோடு இவரது படங்களில் நடித்து வருபவர்.

Nuribilgeceylan.jpg
NURI BILGE CEYLAN

நூரி துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லில் 1959 – ல் பிறந்தவர். பொறியியல் பட்டப் படிப்பை முடீத்த இவர் இஸ்தான் புல் நகரின் மிமர் செரியன் (MIMAR SERIAN ) பல்கலைக்கழகத்தில் இரு ஆண்டுகள் திரைப்பட ஆக்கத்துக்கான படிப்பை முடித்துத் தேறியவர். இவரது மனைவி எப்ருவும் அதே சர்வ கலா சாலையில் திரைப்படிப்பு படித்து தேறியவர். நூரி 1995-ல் எடுத்த “ கோஸோ ” ( KOZO ) எனும் குறும்படம் புகழ்பெற்றது. பிறது இவர் கசபா ( KASABA – 1997 ), மாயிஸ் சிகின்டிஸி ( MAYIS SIKIN – NAYIS SIKINTISI – 1999 ), உஸக் (UZAK – 2002 ) க்ளைமேட் (IKLIMLER – 2006 ) ஆகிய திரைப்படங்களைச் செய்திருப்பவர். உளிக் படத்தில் முயன்ற தனித்தன்மைகளை நூரி, க்ளைமேட் படத்தில் தான் முழுமையாகவும் நிறைவாகவும் செய்திருக்கிறார்.

துருக்கிய மொழியில் IKLIMLER என்று சொல்லப்படம் CLIMATES நவீன உலக சினிமாவின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று. இப்படம் ஆக்கப்பட்ட விதம் குறித்தான சிறிய ஆவணப்படம் ஒன்றில், படத்தின் வெவ்வேறு மூன்று காட்சி நிகழ்வுகளை தூரி படமாக்கி இயக்கும் விதத்தைக் காண்கையில், அவர் ஒவ்வொரு வசனத்தையும் ஒவ்வொரு நடிப்பு அசைவையும் எவ்வளவுக்கு எளிதாகவும் அதே சமயம் கால விரயமின்றி கச்சிதமாயும், காட்சி அரங்கேறும் சமயம் – எதிர்பாராத சிறு குறுக்கீடுகளை சமாளிக்கும் விதமும் துல்லியமாக தெரிபவை.

“ க்ளைமேட்ஸ் ” ஓர் இத்தாலியல் ( EXISTENTIALIST ) கோட்பாட்டை உட்கொண்டு உள்ளடக்கிய காவியம். துருக்கியின் புற நகர்ப் பகுதியின் கோடை, மழை, குளிர் – பனிக்காலமென்ற மூன்று பருவ காலங்களின் போது நிகழும் ஓர் ஆண் – பெண் உறவின் சிதறலையும் அது ஒன்று சேருவதையும் உன்னிப்பாக கவனிக்கும் கதையைக் கொண்டிருப்பது. தங்களுக்கு கிடைத்து பிறகு விலகிச் செல்லும் வாழ்க்கையின் பத்தை மீண்டும் தக்க வைக்கும் முயற்சியில் மனப்போராட்டம் கொண்ட ஓர் ஆண் – பெண் உறவைப் பற்றிய அரிய படம் க்ளைமேட்ஸ். மிக உயரிய நடிப்பாற்றலின் வெளிப்பாடும் திகைக்க வைக்கும் காமிரா கோணங்களும் இக்கதையை நகர்த்துகின்றன.

இஸா ( ISA )  வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் கல்லூரி போதகரும், உயர்பட்டப் படிப்புக்கான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு காஸ் ( KAS ) எனும் நகரில் இருப்பவன். இவனது பெற்றோர்கள் சற்று தொலைவிலுள்ள இடத்தில் வசிப்பவர்கள். இவனது காதலி பஹார் ( BAHAR ) . இவள் தொலைக்காட்சிப் படத் தயாரிப்பு நிறுவனமொன்றில் கலை இயக்குனராக பணியிலிருப்பவள். காஸ் நகரில் இஸா ஒரு விடுதியிலிருக்கையில் பஹார் அவனைச் சந்திக்க வருகிறாள். அது நல்ல கோடைகாலம். வெயில் அதிகம். நகரின் புறப்பகுதியிலிருக்கும் மிகப் பழைமையான அசீரிய – பர்ஷிய நகர எச்சமாய் நிற்கும் கட்டிடத்தின் பிரம்மாண்ட தூண்களை இஸா காமிராவில் படமெடுக்கிறான். பஹார் கவனித்தபடி அலுப்பால் பொறுமையிழந்து கொண்டிருக்கிறாள். ஆனால் தனக்கு அலுப்பு எதுவுமில்லை என கூறிவிட்டு தூரமாய் போய் நிற்கிறாள்.

பிறகு அவர்கள் ஸ்கூட்டரில் வெகு தூரத்திலுள்ள அவ்வூர் கடற்கரைக்குச் செல்லுகிறார்கள். இஸா கடலில் நீராட, பஹார் மணலில் அரை நிர்வாணத்தில் சூரிய குளியல் எடுத்த நிலையில் கண்மூடி மல்லாந்து படுத்திருக்கிறாள். இஸா அவளை நெருங்கி, தன் கை கால்களில் படிந்த ஈரத்தைத் துடைத்துக் கொண்டு அன்போடு அழைத்து முத்தமிடுகிறான். அவள் தன்னை மறந்து கிடக்கையில், இஸா விளையாட்டாக மணலை அள்ளி அவளை கழுத்து வரை மூடுகிறான். அவளும் அவனது விளையாட்டை ரசித்தபடி கண் மூடிக் கிடக்கிறாள். திடீரென்று அவன் மணலையள்ளி அவளது மூக்கு வாய் தலை முழுவதையும் மூடி மணல் சமாதி கட்டி விட, பஹார் அலறித் துடித்து எழுந்து விடுகிறாள். இதை, வெறும் விளையாட்டா, அல்லது வினையாவென்று அவளாலும் எடுத்துக் கொள்ள முடியவில்லை நம்மாலும் நினைக்க முடியவில்லை.

அடுத்து அவர்கள் கடற்கரையிலிருந்து விடுதியை நோக்கி மலைப் பாதையில் ஸ்கூட்டரில் வேகமாய் வந்து கொண்டிருக்கையில், பின்னால் உட்கார்ந்து வரும் பஹார், சட்டென்று இஸாவின் கண்களை இறுகப் பொத்துகிறாள். அவன் அலறியடித்து ஸ்கூட்டரை பாலன்ஸ் இழந்து கன்னா பின்னாவென திருப்பியோட்ட அது, “ ஸ்கிட் ” டாகி விழுகிறது. அவன் எழுந்து அவளைத் திட்டி அடிக்கிறான். அவளது அந்த செய்கையால் இருவருமே இறந்து போயிருக்க வேண்டியவர்கள் என்று திட்டுகிறான். அவளைத் தூக்கி கடலில் அமுக்கப் போகிறான். பஹாரும் பதிலுக்கு அவனை அடித்தும் காலால் உதைத்தும் வைக்கிறாள். பிறகு மௌனமாக நடந்தே போகிறாள். அவனிடமிருந்து அவள் பிரிந்து தன் ஊருக்குப் போய் விடுகிறாள். ஏற்கனவே விரிசல் விட்டிருந்த அவர்கள் உறவில் அது மேலும் பெரிதாகிறது.

இதையெல்லாம் பொருட்படுத்தாது இஸா புத்தகக் கடையொன்றில் தன் நண்பன் குய்வன் (GIJVEN ) எனும் பத்திரிகையாளனையும் அவனது கவர்ச்சியான காதலி செராப்பை (SERAP) யும் சந்திக்கிறான். பஹாரையும் அவர்கள் அறிந்தவர்களே. பஹாருக்கும் இஸாவுக்குமான உறவு பற்றியும் பேசுகின்றனர். தான் பத்திரிகை வேலையாய் அன்று வெளியூருக்குப் போக இருப்பதை குய்வன் சொன்னதைக் கேட்டுக் கொண்ட இஸா, அன்றிரவு செராப்பின் வீட்டுக்குப் போய் அவளது விருப்பத்துக்கு எதிராக நுழைகிறான். பஹாருக்கும் அவனுக்குமிடையில் உறவு விரிசலடைந்திருப்பது குறித்து மீண்டும் செராப் கேட்கிறாள். ஆண்  பெண்ணுக்கிடையில் உருவாகும் அந்தரங்க உறவு விரிசலை அறிவதில் தனக்கு ஆர்வமதிகம் என்கிறாள் செராப். இஸா அவளை நெருங்குகிறான். அவளது பலத்த எதிர்ப்பையும், முறியடிப்பையும் மீறி, இஸா செராப்புடன் வல்லுடலுறவு கொள்ளுகிறான். இஸா தன் பெற்றோர்களிடம் போகையில், “ சீக்கிரம் பஹாரை மணந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள் ” , என்கிறாள் அம்மா.

இஸாப்பிற்கு செராப்பிடமிருந்து தொலைப்பேசியழைப்பு வரவும், அவன் அவளிடம் போகிறான். நேற்று அவனால் வல்லுறவுக்கு உட்பட்ட செராப் இன்று தானாக முன் வந்து அவனையழைக்கிறாள். இஸா வேண்டா வெறுப்பாக இருக்கிறான்.

Bioscope Karan 22th Web Article Series by Vittal Rao. This Series About Western European cinema பயாஸ்கோப்காரன் மேற்கு ஐரோப்பிய சினிமா 22 – விட்டல்ராவ்
ISHAKPASHA

அதன் பிறகு இஸா காஸ் நகரை விட்டு பழைமையான இஷக்பாஷா ( ISHAKPASHA ) எனும் நகரையடைந்து புகைப்படமெடுக்கிறான். மழைக் காலம் போய் குளிர்மிக்க பனிக்காலம் வந்திருக்கிறது. தான் தங்கியிருக்கும் விடுதியிலிருந்து வெளியில் பார்க்கையில் பனி மூடிய சூழலில் தொலைக்காட்சித் தொடர் ஒன்றை படமாக்க வண்டியில் வந்து இறங்கும் பஹாரைப் பார்க்கிறான் இஸா. அவன் மனம் முற்றிலும் மாறுகிறது. அவளுக்காக இளகுகிறது. அவள் வந்த பஸ் புறப்படத் தயாராகும்போது இவன் பஸ்ஸில் நுழைந்து அவளருகில் உட்காருகிறான். அவள் திடீரென விசும்பி அழுகிறாள்.

அவளை சமாதானப்படுத்திவிட்டு, இனி இருவரும் முன்பு மாதிரி இருக்கலாமென்றும், இஸ்தான் புல்லுக்குப் போய் திருமணம் செய்து கொண்டு குழந்தைப் பெற்றுக் கொண்டு வாழலாமென்கிறான். அவள் மேற்கொண்டு தனக்கு டெலிபோன் செய்ய வேண்டாமென கூறிவிட, பஸ் புறப்படத் தயாராகிறது. இசா போய் விடுகிறான். ஆனால் இரவு அவனது விடுதியறைக்கு பஹார் வருகிறாள். அவர்கள் உறவு மீண்டும் புத்துயிர் பெறுகிறது. இஸாவாக தூரியும், பஹாராக அவன் மனைவி எப்ருவும் சிறப்பாக நடித்திருக்கும் இப்படத்தின் மிகச் சிறப்பான ஒளிப்பதிவை காமிரா கலைஞர் கோகன் துயாகி ( GOKHAN TUYAKI ) பாராட்டும்படி செய்திருக்கிறார்.

துருக்கிக்கும் கிரேக்கத்துக்கும் ஒருவித தார்மீக எரிச்சல், பொறாமை சண்டையெல்லாம் நிலவி வந்திருக்கிறது. கிரேக்க – ரோமானிய கலை வடிவங்களின் ஆதி கட்டுமான சிதிலங்கள் துருக்கியின் பெருமை வாய்ந்த தொல்லியல் சான்றுகளாய் நிற்பவை.

Bioscope Karan 22th Web Article Series by Vittal Rao. This Series About Western European cinema பயாஸ்கோப்காரன் மேற்கு ஐரோப்பிய சினிமா 22 – விட்டல்ராவ்
MICHAEL CACOYANNIS

கிரேக்க சினிமாவின் நன்கறியப்பட்ட ஓரிரண்டு திரைப்படக் கலைஞர்களில் ஒருவர் மைகேல் ககோயானிஸ் ( MICHAEL CACOYANNIS ). ககோயானிஸ் செய்த இரு கருப்பு வெள்ளைத் திரைப்படங்கள் நவீன கிரேக்க சினிமாவிற்கு பெருமை சேர்த்தவை. அவற்றில் ஒன்று, “ கருப்பு உடையில் ஒரு பெண் ” . ( A GIRL IN BLACK ). Bioscope Karan 22th Web Article Series by Vittal Rao. This Series About Western European cinema பயாஸ்கோப்காரன் மேற்கு ஐரோப்பிய சினிமா 22 – விட்டல்ராவ் ககோயானிஸ் தமது முதல் கிரேக்கப் படம், A WINDFALL IN ATHENS “ – ஐ 1954 – ல் தயாரித்து இயக்கினார். அதன் பிறகு இயக்கி 1956 – ல் வெளிவந்த கருப்பு உடையில் ஒரு பெண் – படம் உலகுக்கு அவரை வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு கிரேக்க சினிமாவையும் மைகேல் ககோயானிஸ்ஸையும், அதில் தகாநாயகியாய் நடித்த எல்லி லாம்பட்டி ( ELLI LAMBETTI ) யையும் சர்வதேச கவனம் பெறச் செய்தது. இப்படத்தின் சில சிறப்புகளில் ஒன்று இதன் படமாக்கல் முறை. இதன் கதை, இயக்குனர் ககோயானிஸை தொடர்ந்து சில காலத்துக்கு அலைக் கழித்துக் கொண்டிருந்திருக்கும் என்பது அடுத்து அவர் செய்த ஓரிரண்டு படங்களைப் பார்க்கையில் தெரிகிறது.

பாவ்லோ ( PAVLO ) திறமையான எழுத்தாளனாயிருந்தும் அதிர்ஷ்டமற்ற இளைஞன். அந்தோனி நடுத்தர வயதான கட்டிட பொறியியல் வல்லுனன். இருவரும் நண்பர்கள். கிரேக்கம், நிறைய சிறு சிறு தீவுகளைக் கொண்டிருப்பது. ஒவ்வொரு தீவும் தனித்துவம் கொண்டதென்றாலும், மக்களின் சிந்தனை, வாழ்வுமுறை என்பவை தீவுக்குத் தீவு எவ்வித வேறுபாடும் கொண்டிருக்கவில்லை. தீவுகளைச் சென்றடைய அழகிய பயணிகள் கப்பல்களுண்டு. அப்படியான கப்பல் ஒன்றில் பாவ்லோவும் அண்டோனியும் ஹைட்ரா ( HYDRA ) எனும் தீவுக்கு பயணித்து போய் ஒரு வாரத்துக்கு தங்கி கழிக்க விரும்பி புறப்படுகிறார்கள். தீவில் இறங்கினதுமே கூலியொருவன் அறிமுகமாகி இவர்களின் ஜங்கமங்களை தூக்கிக் கொண்டவன். அவர்கள் விருப்பப்படி பழைய வீடு ஒன்றில் தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்கிறான்.

அந்த வீடு ஃப்ரோசோ ( PHROSO ) என்ற நடுத்தர வயது விதவைக்குச் சொந்தமானது. அவளுடைய அழகிய இளம் பெண் மரினா ( MARINA), அவளுக்கு இளையவன் மிட்சோ ( MITSO ). அந்த பழுதடைந்த கிரேக்க வீடு போலவே, அந்த குடும்பமும் தத்தளிக்கிறது. பெண்ணுக்குத் திருமணமாக வேண்டும். பையனுக்கு வேலை கிடைக்க வேண்டும். இந்த நிலையில் அம்மாகாரி ஃப்ரோசோவுக்கும் பனாகிஸ் ( PANAGIS ) என்பவனுக்குமான கள்ள உறவு புதர் மறைவில் நடப்பதை சிறுவர்கள் பார்த்துவிட, அம்பலமாகிறது. கோபமுற்ற மகன் மிட்சோ, அம்மாவை தெருவில் வைத்து அடிக்கிறான். குடும்பப் பெயர் கெட்டதால், அக்காவும் தம்பியும் வெளியில் தலைகாட்டவும் முடியவில்லை.

இதையெல்லாம் பாவ்லோவும் அண்டோனியும் கவனிக்கின்றனர். அதே சமயம் பாவ்லோ மரினாவை நேசிக்கிறான். அவளும் அவன் காதலை ஏற்கிறாள். ஆனால் அண்டோனி இதை விரும்பவில்லை. ஊருக்குப் புறப்படும்படி வற்புறுத்துகிறான். மரினா பேரில் ஒருதலைக் காதல் கொண்ட அவ்வூர் இளைஞன் கிறிஸ்டோ வன்முறைக்குத் தயாரா கையில் மரினாவின் தம்பி மிட்ஸோ சண்டை வலித்து ரவுடிகளால் தாக்கப்படுகிறான். கிறிஸ்டோ பாவ்லோவை வம்புக்கிழுத்தபடியே இருக்கிறான். பாவ்லோ மரினாவைத் தன்னோடு ஏதென்சுக்கு வந்து விட கேட்கிறான். அண்டோனி, பாவ்லோ புறப்படாததால் தான் மட்டும் புறப்பட்டுப் போகிறான். கிறிஸ்டோ பாவ்லோவை ஒழித்துக் கட்ட திட்டமிடுகிறான்.

பாவ்லோவ் படகுச் சவாரி செய்ய படகு ஒன்றை வேண்டுகிறான். கிறிஸ்டோ தனது மீன்பிடிக்கும் படகை தர முன் வருவதோடு அதனுள் கடல் நீர் புகும்படி செய்து விடுகிறான். படகு மூழ்கட்டும் என்ற எண்ணம். பாவ்லோ படகை கிளப்புகையில், கரையில் விளையாடிக் கொண்டிருந்த ஆண் – பெண் குழந்தைகள் ஓடி வந்து தங்களையும் ஏற்றிச் செல்லுமாறு கேட்க பாவ்லோ சம்மதித்து குழந்தைகளை ஏற்றிக் கொண்டு படகு வலிக்கிறான். சிறிது தூரம் போனதும் தண்ணீர் படகினுள் புகுந்து அது மூழ்கத் தொடங்குகிறது.

குழந்தைகளில் ஒரு சிறுமி கிறிஸ்டோவின் தங்கை. நிறைய குழந்தைகள் நீரில் மூழ்கி மாண்டு போகின்றன. பாவ்லோவை போலீஸ் கைது செய்து சிறையிலிடுகிறது. அவன் மீது கொலைக் குற்றம் பதிவாகிறது. மரினா கிறிஸ்டோவை கட்டாயப்படுத்தி உண்மையைக் கேட்டறிவதோடு, போலீசில் உண்மையைச் சொல்ல மிரட்டுகிறாள். குற்றமனப்பான்மை தாக்க, அவன் போலீசில் உண்மையைக் கூறி சரணடைகிறான். விடுதலையடைந்த பாவ்லோ கடற்கரையில் இவனுக்காக நிற்கும் மரினாவை எதிர்பார்ப்போடு சந்திக்கிறான்.

இந்தப் படத்தின் கதை வசனம் நடிப்பு எல்லாமே எளிமையானது. ஆனால் படமாக்கப்பட்ட முறை இசை, ஒளிப்பதிவு என்பவை பிரமிப்பூட்டுபவை. பாவ்லோவாக டிமிட்ரி ஹான் ( DIMITRI HORN) என்பவரும் மரினாவாக எல்லி லாம்பெட்டி என்பவரும் ( ELLI LAMBETTI ) சிறப்பாக நடித்திருக்கும் இப்படத்தின் சிறந்த ஒளிப்பதிவை காமிரா நிபுணர் வால்டர் லாஸ்ஸல்லி ( WALTER LASSALLI ) செய்திருக்கிறார். ஆச்சரியம் என்னவென்றால் எட்டே எட்டு வாரங்களில் ஒரே ஒரு காமிராவைக் கொண்டு படமாக்கப்பட்டிருக்கிறது கருப்பு உடையில் ஒரு பெண்.

 

Bioscope Karan 22th Web Article Series by Vittal Rao. This Series About Western European cinema பயாஸ்கோப்காரன் மேற்கு ஐரோப்பிய சினிமா 22 – விட்டல்ராவ்
ZORBA THE GREEK

ககோயான்னிஸ் இயக்கிய மற்றொரு குறிப்பிடத்தக்க கிரேக்கப் படம் “ ஜோர்பா தி கிரீக் ” ( ZORBA THE GREEK ). இப்படம் ஆங்கிலமாக்கப்பட்டு சென்னை ஓடியன் தியேட்டரில் திரையிடப்பட்டது. இப்படம்  1964-ல் வெளிவந்தது. இந்தப் படத்தில் “ க்ரேட் “ ( CRETE ) என்ற கிரேக்கத் தீவின் பொது மக்களே உதிரிபாகங்களில் வியப்பூட்டும்படி நடித்திருக்கிறார்கள்.

நிகோஸ் கஸாண்ட்ஸகிஸ் ( NIKOS KAZANTZAKIS ) கிரேக்க மொழி இலக்கியத்தின் தாஸ்தாயெவ்ஸ்கி என போற்றப்படுபவர். கஸாண்ட்ஸகியின் அமர நாவல், “ ஜோர்பா தி கிரீக் ” ( ZORBA THE GREEK ). இந்நாவலை திரைப்படமாக்கிய தயாரிப்பாளருள் ஒருவர், அதில் ஜோர்பாவாக நடித்த உலகப் புகழ் பெற்ற குணசித்திர நடிகர் ஆந்தனி க்வின். ஆந்தனி க்வின் ( ANTHONY QUINN) ஏற்கனவே “ THE VISIT “ போன்ற அற்புதமான திரைப்படங்கள் தயாரிப்பிலும் பொறுப்பேற்று நடித்த மிக உயரிய நடிகர்.

கிரேக்க தேசத்தின் பல சிறு தீவுகளில் ஒன்று க்ரேட்.. இதில் பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் ஒன்று தூரீந்து செயல்பாடின்றி கிடக்கிறது. க்ரேட் மோசமான வறுமையில் கிடக்கிறது. அச் சுரங்கத்தின் உரிமையாளரின் மகன் இங்கிலாந்து கப்பலில் ஏதென்ஸ் வந்து அங்கிருந்து க்ரேட் தீவுக்கு வருகிறான். கவிதை, கட்டுரைகள் எழுதும் புத்தகப் புழு அவன். நடுவழியில் சரியான மழையில் நரைத்த முடியும் மழிக்காத முகமுமாய் ஒருவன் அறிமுகமாகிறான்.

“ நான் ஜோர்பா. அலெக்சிஸ் ஜோர்பா.” என்று அறிமுகப்படுத்திக் கொண்டவன் சுரங்க வேலையில் அனுபவமிக்கவன் என்பதால் இருவரும் நண்பர்களாகின்றனர். இளைஞன் இங்கிலாந்தில் வளர்ந்த கிரேக்கன். ஜோர்பா தன்னையும் சேர்த்துக் கொள்ள கேட்டு உடன் புறப்படுகிறான். இவர்கள் தீவின் நகரை நோக்கி வாடககைக் காரில் வருவதைப் பார்க்கும் ஓர் அரை லூசு “ அமெரிக்கன் வருகிறான் ” , என்று வீடு வீடாகச் சொல்லுகிறான். வறுமையில் வாடும் அந்த ஜனங்கள், அமெரிக்கன் என்றால் பணக்காரன் என்று எண்ணத்தில் “ கஞ்சிவரதப்பா ”, என்றதும், “ எங்கே வருதப்பா ” , என்று அலை பாய்கின்றனர்.

தீவில் சிறு விடுதி வைத்து நடத்தும் ஹார்டென்ஸ் ( HARTENSE ) என்ற வயதான ஃபிரெஞ்சுக்காரி ஒருத்திக்கு அறிமுகமாகி அவளது இடத்தில் தங்குகின்றனர். இளமையில் பாரிஸில் காபரே நடனக்காரியாக இருந்த அந்த பணக்காரிக்கு நிறைய ஆண் உறவு இருந்தது. எல்லாம் கப்பல் தலைவர்கள். கடைசியாக ஒரு கப்பல்காரன் அவளை விதவையாக்கி இந்தத் தீவில் விட்டுவிட்டு இறந்து போனான். ஹார்டென்சுக்கு துணையாக அரை லூசும், மாலுமி விட்டுச் சென்ற “ காணவரோ ” ( CANAVARO ) என்ற கூண்டுக் கிளியுமிருந்தனர். ஊரில் லோலா என்ற ஓர் அழகிய இளம் விதவை. லோலாபேரில் ஊரில் பலருக்கும் காம இச்சையுண்டு. இளைஞனின் சுரங்கம், நில புலன்களை மாவ்ரண்டோனி என்பவன் பார்த்துக் கொள்ளுகிறான். இவனது மகன் பாவ்லோவுக்கு லோலா மீது பயங்கர காதல். ஆனால் அவள் இவனை விரும்பவில்லை.

ஹார்டென்சுக்கு அந்த வயதிலும் ஓர் ஆண் துணை தேவைப்படுகிறது. அதை, ஜோர்பா பூர்த்தி செய்கிறான். தூர்ந்து சரிந்து பாழாகிக் கிடக்கும் பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் புத்தியிர் பெற உள் கட்டுமானத்துக்கு ஏராளமான மரங்கள் தேவைப்பட்டன. அருகிலுள்ள மலையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவை அவ்வூர் கிறிஸ்தவ தேவாலயத்துக்கு உரியவை. சுரங்கம் மீண்டும் உயிர் பெற்றால் நிறைய பேருக்கு வேலை கிடைக்கும் என்று கூறி ஜோர்பாவும், குட்டி முதலாளியும் அனுமதி பெற்று மரங்களைக் கீழே இறக்க திட்டமிடுகின்றனர்.

இதனிடையில் குட்டி முதலாளிக்கும் விதவை லோலாவுக்கும் காதல் உறவு ஏற்படுகிறது. அவளை நெருங்கும்படி ஜோர்பாவும் முதலாளிக்குத் தூபமிடுகிறான்.

முதல் கட்டமாய் கொஞ்சம் பேர் சுரங்கத்துள் இறங்குகிறார்கள். சுரங்கம் மீண்டும் குமுறி சரிகிறது. இதனால் மிகவும் மனம் தளர்ந்த முதலாளியை உற்சாகப்படுத்தும் பொருட்டு ஜோர்பா நடனமாடுகிறான். இந் நடனமும் அதன் பின் ஒலிக்கும் ஸ்பானிஷ் கிட்டார் வாத்திளய இசையும் மிக மிக ரம்மியமானது மட்டுமல்ல, முக்கியமும் ஆகும். படத்தின் ஜீவன் போன்றது. ZORBA என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் முதுகெலும்பு போன்றது இந் நடனமும் இசைவும். அதற்கான கிரேக்க நாடோடி கிட்டாரின் பெயர் “ சந்தூரி ” ( SANTOURI ) என்பது என்று கூறுகிறான் ஜோர்பா. எப்போதெல்லாம் தன் மனத்தில் தொய்வும், சோர்வும், தோல்வி மனப்பான்மையும் சோகமும் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் தான் நடனமாடுவதாக கூறுகிறான் ஜோர்பா.

“ என் மனைவி இறந்தாள், முதல் மகனும் இறந்தான். அப்போது நான் நடனமாடினேன். அதனால் இன்று நன்றாக இருக்கிறேன் “, என்கிறான்.

அன்றிரவு முதலாளி இளைஞனை லோலாவிடம் அனுப்பி வைக்கிறான்.

மறுநாள் அதைக் கொண்டாடும் விதமாக ரம் குடிக்க வைக்கிறான்.

“ ஜோர்பா, உன்னை கடவுள் ஆசீர்வதிக்கட்டும் ” என்கிறான் இளைஞன். உடனே சட்டென்று தொடர்கிறான் ஜோர்பா.

“ சாத்தானும் கூட, பாஸ் ” , “ நாம் செய்யும் காரியங்களில் சாத்தான்தனமும் கலந்திருக்கு “ , என்கிறான்.

மரங்களை வெட்டி மலையிலிருந்து கீழே கொண்டு வருவதற்கு ஒரு திட்டம் வகுத்து முதலாளியின் ஒப்புதலைப் பெற்ற அவள் ஏதென்சுக்குப் போய் சில முக்கிய உபகரணங்களை வாங்கி வரப் போகிறான். திரும்பி வருகையில் சில அசம்பாவிதங்கள் நடக்கின்றன. லோலா பேரில் அடங்காத காம இச்சை கொண்ட பாவ்லோ அவளோடு முதலாளி இளைஞன் இருப்பதை பார்த்துவிட்டு மனமுடைந்து கடலில் விழுந்து சாகிறான். இது பெரிய விஷயமாகிறது. தேவாலயத்துக்கு எல்லோரும் போகிற நேரம், லோலாவும் புறப்படுகிறாள். இறந்துபோன மகனுக்கு பழி வாங்க அவனது அப்பா முடிவெடுத்து ஊரார் முன்னிலையில், அவளைக் குத்திக் கொன்று விடுகிறான்.

மழை கடுமையான நிலையில் நனைத்தபடி ஃபிரெஞ்சுக்காரி ஹார்டென்ஸ் இறந்து போகிறாள் நாதியற்ற அயல்நாட்டுப் பணக்காரியான அவளது வீட்டுக்குள் அத் தீவின் பஞ்சத்திலடிபட்ட ஆண் பெண்கள் புகுந்து அவளது உடைமைகளை எடுத்துக் கொண்டு போகின்றனர். அரசாங்கம் அவற்றை வசப்படுத்து முன் நாமே எடுத்துக் கொள்ளலாமென்று கத்தியபடியே அவர்கள் சூரையாடுகிறார்கள். இந்தக் காட்சியும் லோலாவின் படுகொலைக் காட்சியும் சிலிர்க்க வைக்கும் விதத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

கடைசி முயற்சியாக, மரங்களை வெட்டி கீழே கொண்டு வருவதைப் பார்க்க தேவாலயப் பாதிரியார் முதல் ஊரே கூடியிருக்கையில், அந்த முயற்சியும் பெருத்த தோல்வியில் முடிகிறது. ஊருக்கே திரும்பி விடுவதாய் முதலாளி இளைஞன் கூறுகிறான். ஜோர்பா மீண்டும் தனியனாய் நிற்கிறான். முதல் முறையாக தனக்கு நடனம் கற்றுத் தருமாறு ஜோர்பாவை முதலாளி கேட்கிறான். நடனமாடுதென்பது, தோல்வி, இழப்பு, மரணம் என்பதன்போது அத்துயரை மறக்கதான் செய்யும் காரியம் என்பான் ஜோர்பா. இப்போது அவன் இளைஞனுக்கு கடற்கரையில் நடனமாட ஒவ்வொரு அடியெடுத்து கற்றுத் தருகிறான்.

ஜோர்பாவாக ஆந்தனி க்வின் ( ANTHONY QUINN ) மிக மிக அற்புதமாக நடித்திருக்கிறார். இந்த நடிப்புக்காக பல்வேறு விருதுகள் பரிந்துறைக்கப்பட்டவர். இளைஞனாக ALAN BATES –ம், லோலாவாக IRNE PAPA – வும் நிறைவாக செய்திருக்கின்றனர். இதன் இனிய இசையை மிகிஸ் ( MIKIS THEODU RAKIS) தியோடோராகிஸும், ஒளிப்பதிவை வால்டர் லாஸ்ஸல்லி ( WALTER LASSALLI ) யும் செய்திருக்கின்றனர்.

நவீன கிரேக்க சினிமாவின் மிக முக்கிய குறியீடாக பரந்துபட்ட பார்வையில் பேசப்படுபவர் தியோடோரோஸ் ஆஞ்செலோ பௌலோஸ் ( THEUDOROS ANGELO POULOS ). இவருடையது பிரமிப்பூட்டும் திரைப் படங்கள்.

தியோ ஆஞ்செலோ பௌலோஸ் ஏதென்சில் 1935-ல் பிறந்தவர். ஏதென்ஸ் பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்து விட்டு, ஃபிரெஞ்சு திரைப்பட பள்ளியான IDHEC – ல் திரைப்படக் கலையை கற்றவர். பிரான்சிலிருந்து 1964-ல் ஏதென்சுக்கு திரும்பியவர். ‘’ DIMOKRATIKI ALLAGI “ என்ற கிரேக்க தினசரி இதழில் 1967 வரை சினிமா விமர்சகராகப் பணியாற்றியவர். 1965-ல் இவர் திரைப்படமெடுக்கத் தொடங்கினார். 1968-ல் “ BROAD CAST “ என்ற குறும்படத்தை இயக்கினார். 1975-ல் இவரது “ THE TRAVELLING PLAYERS “ என்ற படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 1988-ல் வெளியான இவரது “ LANDSCAPE IN THE MIST ”, 1991-ல் வெளியான ‘’ THE SUSPENDED STEP OF THE STORK “. GAZE 1996-ல் எடுத்த “ ULYSSES GAZE “ ஆகிய மூன்று திரைப்படங்களும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டும் பரிசும் பெற்றவை.

சமகால உலக சினிமாவில் இவரது கிரேக்கத் திரைப்படங்கள் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தியவை. அதே சமயம் இவரும் வேறொரு உலக சினிமா ஆளுமை – மேதையின் திரைப்படங்களால் பாதிப்பு பெற்றவர். இவரது முக்கிய பேட்டியைக் கொண்ட ஆவணப்படம் ஒன்று மிக முக்கியமானது. அந்த நேர்காணலில் அவர் இசையைப் பற்றி மிக விரிவாக பேசுகிறார். சத்யஜித் ரே தம் படங்களுக்கான இசை குறித்து பேசியதற்கு இணையானது தியோ ஆஞ்செலோபௌலோசின் இசைக் குறித்த கருத்துக்கள். இவரது படங்களில் இசைக் கோர்வை ரம்மியமாய், எடுப்பாய் சிலிர்க்க வைக்கும்.

இந்த நேர்காணலில் இவர், உலக சினிமாவின் மிகப் பெரிய ஆளுமைகளில் ஒருவரான ரஷ்ய திரைப்பட மேதை, ஆண்ட்ரீ தார்காவ்ஸ்கி குறித்து நிறைய சிலாகிக்கிறார். அவரோடு ஃபிரான்சில் கழித்த நாட்களை பெருமையோடு நினைவு கூர்கிறார். தார்க்காவ்ஸ்கியின் பாதிப்பு தியோவின் பல படங்களில் தெரிகிறது. ஆரம்பத்தில் தாம் ஜெர்மானிய தத்துவ நாடக மேதை BERTOLT BRECHT – ன் ஆளுமையால் முழுக்கவே பாதிக்கப்பட்டிருந்ததாயும் பிறகு அதிலிருந்து வெளியில் வந்து கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாடிலின் மரணம் குறித்த கருத்துக்கு நேரெதிரான வழியில் படம் எடுத்ததாயும் கூறுகிறார்.

Bioscope Karan 22th Web Article Series by Vittal Rao. This Series About Western European cinema பயாஸ்கோப்காரன் மேற்கு ஐரோப்பிய சினிமா 22 – விட்டல்ராவ்

தியோ ஆஞ்செலோ பௌலோசின்  ‘’ ALEXANDER THE GREAT “ 1980-ல் வெளி வந்தது. படம் தொடங்கும்போது ஒரு சிறு வாசகம் : கிரேக்க நாட்டை அந்நியர் படையெடுத்து தாக்க வருகையில் , மாசிடோனிய வீரர்களோடு அலெக்சாண்டர் என்ற வீர இளைஞன் போரிட்டு முறியடித்துத் துரத்தினான். அதன் பின் அவன் ஆசியாவின் பகுதிக்குள் நுழைந்து போரிட்டு, சிறைபட்டிருந்தவர்களை மீட்டான். நிறைய நாடுகளை வென்று மகா அலெக்ஸாண்டர் என்றானான்.

இதையடுத்து 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெறும் கோச்சு வண்டிகளும் குதிரைச் சவாரியுமாயிருந்த காலத்து கிரேக்கம். கிராமங்கள் பலதின் அப்பாவி மக்களுக்குச் சொந்தமான நிலபுலன்களை அங்குள்ள பிரபுக்கள் ஆக்கிரமித்தும் பிடுங்கியும் சொந்தமாக்கிக் கொண்டதை எதிர்த்து கிளர்ச்சி செய்தவர்களை நியாயம் வேண்டி குரல் கொடுத்தவர்களை அரசியல் குற்றவாளிகளாய் அரசு சிறையிலடைத்திருந்தது. அவர்கள் ஒருநாள் சிறையிலிருந்து தப்பி காட்டுக்குள் நுழைகின்றனர்.

ஓரிடத்தில் வெள்ளைக் குதிரையொன்றும் நட்டு வைத்த வாளும், வாள் மீது பண்டைய கால கிரேக்க போர்வீரர் தரிக்கும் தலைக் கவசமும் இருக்கிறது. தப்பி வந்தவர்களில் தலைவனாயிருந்தவன் இவற்றை எடுத்து குதிரைமேல் ஏறி பயணமாகிறான். அவன் அலெக்ஸாண்டர் என எல்லாராலும் அழைக்கப்படுகிறான். அவனைத் தொடர்ந்து தப்பி வந்தவர்களும் அவனோடு இணைந்து ஒரு படையாக உருவாகிறார்கள். கிராமம் கிராமமாக அலெக்ஸாண்டர், அந்த ஹெல்மட் அணிந்து போர்வாளை இடையில் செருகி வெள்ளைக் குதிரைமீதமர்ந்து, தன் படையினர் முன்னும் பின்னும் நடந்து வர பயணித்து கிராமங்கள் தோறும் அறிமுகமாகிறான்.

போலீஸ் நிலையங்களில் புகுந்து துப்பாக்கிகளைக் கொள்ளையடித்துக் கொள்ளுகிறார்கள். ஏழெட்டு பிரபுக்களையும், சமாட்டிகளையும் கடத்தி வந்து பணயக் கைதியாய் வைத்துக் கொண்டு கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன் வைத்து அரசுடன் பேரம் பேசுகிறான் அலெக்ஸாண்டர். தன்னிடமிருக்கும் சீமான்களையும் சீமாட்டிகளையும் விடுவிக்க, கிராம வாசிகளிடமிருந்து அபரிக்கப்பட்ட நிலங்களைப் பிடுஙகி உரியவர்களுக்கு சேர்ப்பிக்க வேண்டும். அலெக்ஸாண்டர் மீதும், அவனது படையினர் மீதும் விதிக்கப்பட்டுள்ள குற்றங்கள் ரத்தாகி, பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.

ஆனால் நிபந்தனைகள் நிராகரிக்கப்படுகின்றன. இடையிடையே அலெக்ஸாண்டருக்கு காக்கய் வலிப்பு வந்து விடும். உடனே அங்குள்ள எல்லோரையும் திரும்பி நின்று முதுகைக் காட்ட கட்டளையிடுவார்கள் காப்டனின் வலிப்பு அவஸ்தை யாருக்கும் தெரிந்து விடலாகாது. ( ஜுலியஸ் சீசரின் விஷயமும் கூட ? ) இந்த அலெக்ஸாண்டர் என்பவன் முழு வழுக்கைத் தலையும் அதை சமன்படுத்தும் விதமாய் பின் சிகையை ஏராளமாய் வளரவிட்டும், தாடியை நீண்டு பறக்க விட்ட தலையைக் கொண்டவன். மனைவி கிடையாது. ஒரே ஒரு மகள், கிராமத்திலுள்ள பழைய வீட்டிலிருக்கிறாள். அலெக்ஸாண்டர் தன் படையுடன் தன் சொந்த ஊருக்கு, பணயக் கைதிகளையும் அழைத்துக் கொண்டு வந்து விடுகிறான்.

இவனுடைய படையைச் சேர்ந்த ஒருவன் பணயக் கைதிகளிலிருக்கும் அழகிய சீமாட்டி ஒருத்தியை கற்பழிக்க முயற்சிக்கையில் பிடிபட்டு அலெக்ஸாண்டரால் தூக்கிலிடப்படுவதோடு பெண் பயணக் கைதிகளை விடுவித்து விரட்டி விடுகிறான். அவனுடைய கோரிக்கைகள் ஏற்கப்படாததால் பணயக் கைதிகளைச் சுட்டுக் கொல்லும்படி உத்தரவிடுகிறான். அச்சமயத்தில் அரசு உயரதிகாரி நிறுத்தக் கோரி நிபந்தனைகள் ஏற்கப்படுவதாய்க் கூறுகிறார். ஆனால் விரைவில் அரசு இராணுவம் கிராமத்தைச் சுற்றி வளைக்கிறது.

தன்னை எதிர்த்து எதிர் புரட்சி செய்தவர்களைச் சுட உத்தரவிடுகையில் அலெக்ஸாண்டரின் மகளே தன் தாயின் திருமண உடை தரித்து சுடப்படுபவர்களோடு சேர்ந்து நின்று, “ நானும் அவர்களில் ஒருத்தியே ” என்கிறாள். அவளையும் சேர்த்து சுட்டுக் கொல்லுகிறார்கள். இதனிடையில் அலெக்ஸாண்டர் என்ற பெயர் கொண்ட சிறுவன் ஒருவனும் அவனது ஆசிரியர் ஒருவரும் படத்தின் முக்கிய பாத்திரங்களாய் வருகிறார்கள். ஆசிரியர்தான் எதிர் புரட்சியாளர்கள் உருவானதுக்கு பொறுப்பானவர் என்பதால் அவரும் சுடப்பட்டுச் சாகிறார்.

இராணுவம் அலெக்ஸாண்டரின் படையினரைச் சுட்டு காலி செய்த நிலையில் மகா அலெக்ஸாண்டரும் இறந்து கீழே சாய்கிறான். அடுத்த காட்சியில் கிரேக்க யுத்த ஹெல்மட்டணிந்த அவனது தலையளவு வெள்ளைக் கற்சிற்பம் தரையில் கிடக்கிறது. இராணுவத் தலைவன் பயந்து அதை நெருங்குகையில் குதிரைக் குளம்பொலி கேட்டு பயந்து ஓடிவிடுகிறான். சிறுவன் அலெக்ஸாண்டர் மட்டக் குதிரை மீதமர்ந்து போகிறான். அவன் மலை மீதிருந்து பார்க்க, நவீன மயமான கிரேக்க நகரம், அதன் பல மாடி கட்டிடங்களோடு தெரிகிறது. இப்படத்தின் கதையோட்டத்தின் வழியே ஆஞ்செலோ பௌலோசியின் அரசியல் சார்பும் தெரிய வருகிறது.

Bioscope Karan 22th Web Article Series by Vittal Rao. This Series About Western European cinema பயாஸ்கோப்காரன் மேற்கு ஐரோப்பிய சினிமா 22 – விட்டல்ராவ்

1991-ல் இவர் எடுத்த ‘’ SUSPENDED STEP OF A STORK “ என்ற அரிய படம், தேசத்துக்க தேசம் கொண்ட எல்லை, போர் நிமித்தம் ஏற்படும் அகதிகள் வருகை, அதன் காரணமான பிரச்சினைகள் உள்ளிட்டது. உலகப் போரின் போதே ரஷ்யாவிலிருந்த ஏராளமான கிரேக்கர்கள் அகதிகளாக கிரீஸுக்கு திரும்பி வந்து பிரச்சினைகள் ஏற்படுத்திய வரலாற்றை இப்படம் ஓர் உரையாடலில் தெரிவிக்கிறது. துருக்கியும் அல்பேனியாவும் கிரேக்கத்துக்கு அண்டை நாடுகள். சற்று தள்ளி இத்தாலிவுமிருப்பதால் இங்கேற்படும் போர்களின் போது பீதியில் மக்கள் அகதிகளாக கிரேக்க பூமிக்குள் நுழைவது வழக்கம்.

சமீபத்தில் நடந்த துருக்கி, சிரியா போர்களின்போது அகதிகளின் வருகை பெருகியது. இந்த பின்னணியில் கிரேக்க அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவர் எவ்வித காரணமுமின்றி மறைந்து விடுகிறார். கொலைக் காட்சி ஊடகம் ஒன்று, அகதிகள், அவர்களின் வாழ்க்கை நிலை, பிரச்சினைகளை பதிவு செய்ய வருகிறது. அதன் முக்கிய மைய இயக்குனரான இளைஞன் ஒருவனுக்கு மறைந்து போன அரசசியல்வாதியைக் கண்டுபிடிப்பதும் ஒரு சவாலாகிறது. அந்த அரசியல்வாதியை அறிந்தவர்களும் கூட அறியாதவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.

அவரோடு நன்கு பழகி உறவு கொண்ட அயல்நாட்டுப் பெய் ( தனக்கு கிரேக்கமொழி தெரியாது என்று சொல்லிக் கொண்டவள் ) தொலைக்காட்சிக்காரனுக்கு அறிமுகமாகி சிலவற்றைக் கூறுகிறாள். உபயோகமற்று ரெயில்வே வெளியில் நிற்கும் நிறைய ரயில்பெட்டிகள் அகதிகள் தங்குமிடங்களாயிருக்கின்றன. அகதிகள் வருகையும் தொடர்ந்து அதிகரித்து கிரேக்கம் ஊதிப் பெருக்கும்போது, அவர்களின் வருகைக்கு தடை விதிக்கிறது. எல்லைக்கோடுகள் வரையப்பட்டு அந்தந்த எல்லையில் அந்தந்த நாட்டு ராணுவம் காவல் புரிகிறது. டி.வி.காரன் தன் கிரேக்க ராணுவ கர்னலின் உதவியுடன் தைரியமாக சுற்றுகிறான்.

ஒருமுறை எல்லைக்கு அழைத்துச் சென்று, கிரேக்க எல்லைக் கோடான நீல நிறக் கோட்டைக் காட்டி கூறுகிறார். “ இந்தக் கோட்டைத் தாண்டி சும்மா, ஓர் அடி வைத்து விடமுடியாது. வச்சா ? ” என்று கூறி வலதுகாலை உயர்த்துகையிலேயே, அடுத்த நாட்டு இராணுவ அதிகாரி துப்பாக்கியுடன் விரைந்து வருவது தெரிகிறது. அடுத்து என்னவேண்டுமாகிலும் நடக்கலாம். அதுவே இப்படத்தின் தலைப்பாகவும் ‘’ THE SUSPENDED STEP OF THE STORK “ என்பது.

அவன் பனிமழையில் ஒரு ரயில் பெட்டிக்குள் நுழைய கூடவே ஒரு மனிதன் வருகிறான். அம்மனிதனின் அனுமதியின்றி நுழைந்ததற்கு மன்னிப்பு கோரி பனிக்காக அண்டுகிறான் டி.வி.காரன். அந்த அகதியின் தோற்றமும் முகமும் டி.வி.காரனக்கு சந்தேகத்தையும் நம்பிக்கையையும், ஆர்வத்தையுமூட்டுகிறது. ஒரு பையன் ஓடி வந்து ரொட்டி வினியோகம் செய்து விட்டு, “ காற்றாடி பற்றி கதை சொல்லு ” என்று அகதியைக் கேட்க, அகதி, காற்றாடி ( பட்டம் )யிலிருந்து, ராக்கெட், அதிலிருந்து வான எல்லை, நாடுகளின் எல்லைகள் வரை சொல்லி விட்டு, மேற்கொண்டு இன்னொரு நாள் பேசலாமென்கிறான்.

டி.வி.குழு ரெயில்வே பெட்டிகளை, அங்கு வசிக்கும் ஏராளமான – கணக்கில் வராத அகதிகளைப் படமாக்குகிறது. அறைக்கு வந்து T.V. இளைஞன் பழைய படம் ஒன்றைப் போட்டு, மறைந்துபோன கிரேக்க வம்சாவளி மந்திரியின் பேச்சையும், முகத்தையும் ZOOM செய்து கவனிக்கிறான். அவன் சந்தேகம் தீருகிறது. ரயில்பெட்டியில் பார்த்த நபரேதான். டி.வி.காரனும் அவனது குழுவும் வருகை தரும் உணவு விடுதியில் ஓர் இளம்பெண் இவனையே உற்று கவனிக்கிறாள். இவனது அறை வரை வந்து விட்டு, தான் போக வேண்டுமென்று கூறி போய் விடுகிறாள். அந்த இளம் கிரேக்க வம்சாவளி அகதிப் பெண் டி.வி.காரனின் மற்றொரு கேள்விக்குறி.

ஒருநாள் அவளிறியாது பின் தொடர்ந்து அகதிக் குடியிருப்பிலுள்ள அவளுடைய இடத்தையடைகிறான். தனக்கு இளைய குழந்தைகள் இரண்டைப் படுக்க வைத்து விட்டு கூறுகிறாள். பிரம்மாண்டமாய் ஓடும் ஆற்றுக்கு அப்பாலிருந்து அகதிகளாய் வந்ததையும், அம்மா இறந்ததையும், அப்பா டெலிஃபோன் பழுது பார்ப்பவராய் வேலை பார்ப்பதாய் கூறுகிறாள். மோசமான பருவநிலையால் டெலிபோன்கள் நிறைய பழுதடைந்ததால் இராப்பகலாக மஞ்சள் சீருடையில் டெலிபோன் பணியாளர்கள் மழையில் வேலை செய்கிறார்கள். அப்பெண்ணின் அப்பா வருகிறார். டி.வி.காரனுக்கு மேலும் ஒரு திடுக்கிடல். வந்தவர், அகதிகள் ரயிலில் பார்த்த அதே ஆள். தங்களோடு உணவருந்த அழைக்கிறார்.

இரண்டொரு நாட்களில் ஆற்றுக்கு மறுபுறமுள்ள தேசத்திலிருக்கும் இளைஞனுக்கும், இங்குள்ள டெலிபோன்காரரின் பெண்ணுக்கும் சோகமான கல்யாணம் நடக்கிறது.மறுகரையில் மணமகனும் அவனைச் சேர்ந்தவர்களுமாய் நிற்க, இக் கரையில் மணப் பெண்ணும் அவள் தந்தையும், மற்ற அகதிகளும் நிற்க, பாதிரியார் சைக்கிளில் வந்து ஆணும் பெண்ணும் அகதிகளால் ஆறு பிரிக்க விலகி நிற்கும் நிலையிலேயே திருமணச் சடங்கை முடித்தவராய்ப் போகிறார்.

“ என் கணவன் ஒருநாள் ஆற்றைக் கடந்து வந்து என்னை அழைத்துப் போகப் போகிறான் ” , என்று மணப்பெண் கூறுகிறாள்.

” நீங்கள் எனக்கு காற்றாடி கதையை சொல்லி முடிக்கவில்லையே ” என்று கேட்கிறான் ரொட்டி வினியோகிக்கும் பையன்.

” நீயே முடிவை அனுமானித்துக் கொள் ”, என்கிறார். மணப்பெண்ணின் தந்தையும் டெலிபோன் பணியாளருமான அகதி. டி.வி.கார இளைஞனைப் பொறுத்தளவு அவனும், கிரேக்க மக்களும் தேடும் மறைந்துபோன மந்திரியும் அவராகத் தானிருக்க வேண்டும் என்பது அவனுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. டி.வி.குழு புறப்படுகிறது.

இப்படத்தில் காணாமற்போன மந்திரியாகவும், அகதியாக டெலிபோன் பணியாளராக வரும் மிகச் சிறந்த இத்தாலி நடிகரும், சர்வதேச அளவில் புகழும் பரிசும் பெற்ற மார்செல்லோ மாஸ்ட்ராயினி நடிக்கிறார். தியோ ஆஞ்செலோபௌலசின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 17: பயாஸ்கோப்காரன்(சினிமாவான சில நவீன நாடகங்கள்) – விட்டல்ராவ்

தொடர் 18: பயாஸ்கோப்காரன்(கிழக்கு முகமாய்) – விட்டல்ராவ்

தொடர் 19: பயாஸ்கோப்காரன்(கிழக்குமுகமாய் 2) – விட்டல்ராவ்

தொடர் 20: பயாஸ்கோப்காரன்(கிழக்கு முகமாய் 3) – விட்டல்ராவ்

தொடர் 21: பயாஸ்கோப்காரன்(மத்திய கிழக்கில் ஈரான் துருக்கி) – விட்டல்ராவ்

Bioscope Karan 19th Web Article Series by Vittal Rao. This Series About Chinese movies பயாஸ்கோப்காரன் கிழக்கு முகமாய் 19 – விட்டல்ராவ்

தொடர் 19: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



கிழக்குமுகமாய்

கீழை நாடுகளில் ஜப்பானின் கலாச்சாரம் என்று சொன்னவுடன் நினைவுக்கு வருவது அவர்களின் கிமோனாயில் மண்டியிட்டு உட்காருவது, தேநீர் உபசரிப்பு, அழகிய குடை மற்றும் விசிறி, இவையனைத்தும் சடங்குகளாகவே மேற்கொண்டு வந்தவை. பண்டைய ஜப்பான் (16-17ம் நூற்றாண்டு) எனும்போது அதன் புகழ்பெற்ற சாமுராய் போர் வீரர்கள், சண்டை காலத்திலும் அமைதி காலத்திலும் அவர்கள் பெற்ற அனுபவங்கள், அவர்கள் உயிருக்கும் மேலாக மதித்த சுயகவுரவம், இதன் காரணமாய் அவர்கள் மேற்கொண்ட தற்கொலைச் சடங்கு என்பவை முக்கிய ஜப்பானிய கலாச்சார பண்பாடுகள். இவற்றை வைத்து ஹாலிவுட்டிலும் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை, SAYANORA ATEA HOUSE AT AUGUSTMOON என்பவை. ஜப்பானின் அசல் இயக்குனர்களால் உருவான மகத்தான திரைப்படங்களைப் பார்க்குமுன் ஜப்பானின் மகத்தான கலைஞன் ஒருவனைப் பற்றியும் பேசலாம்.

Bioscope Karan 19th Web Article Series by Vittal Rao. This Series About Chinese movies பயாஸ்கோப்காரன் கிழக்கு முகமாய் 19 – விட்டல்ராவ்
The Sea of Fertility by Yukio Mishima

யூகியோ மிசிமா- சாமுராய் – ஹராகிரி
யூகியோ மிஷிமா (YUKIO MISHIMA) தன் 45- வது வயதின் போதே 20 நாவல்கள், 39 நாடகங்கள், ஒரு பயண நூல், எண்பது சொச்சம் சிறுகதைகள், மற்றும் கணக்கற்ற கட்டுரைகள் எழுதியிருந்த ஜப்பானின் எழுத்தாளர் 1968-ன் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு முக்கிய தகுதியாளராய் சொல்லப்பட்டிருந்தவர். ஆனால், ஜப்பானின் மற்றொரு நாவலாசிரியர் யாசுநாரி காவ பாட்டா (YASUNARI KAWABATA) என்பவருக்கு அவ்வாண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மிஷிமா திரைப்படங்கள் தயாரித்து இயக்கி நடித்திருக்கிறார். கராத்தே மற்றும் பண்டைய ஜப்பானிய கெண்டோ என்ற வாட்போர் பயிற்சியும் பெற்றவர். இதனால் ஜப்பானின் ஹெமிங்வே என்று அழைக்கப்பட்டவர்.

மிஷிமா நான்கு பகுதிகளாக ஒரு மாபெரும் நாவலை எழுதி முடித்தார். அதன் இறுதி பகுதியை எழுதி முடித்து (THE SEA OF FERTILITY) என்று அதற்கு பெயரிட்டு பதிப்பகத்துக்குச் சேர்த்தார். நிலவில் தண்ணீரற்ற சில்லிட்ட காலியான கடல்கள் என விஞ்ஞானம் கருதும் நிலவுப் பகுதியை SEA OF FERTILITY என அழைப்பார்கள். நாவலின் இவ்விருதி பகுதி ஜப்பானின் பாரம்பரிய கனவான் தன்மைகளையும், 1912 முதல் 1970 வரையிலான புதிய சீமான் செழிப்பையும் அவரது சமகால ஜப்பானிய வாழ்க்கையில் அவர் கண்டுணர்ந்த அதீத வெறுமையையும் பற்றி விவரிக்கப்படுகிறது.

1960ன் தொடக்கத்தில் மிஷிமா SHIELD SOCIETY என்ற தேசியத்தைப் பாதுகாக்கும் படையொன்றைத் தொடங்கினார். அவரது சிந்தனையை ஏற்றுக் கொண்ட இளைஞர்கள் கொஞ்சம்பேர் படையில் சேர்ந்தனர்.

மேற்கத்திய நாகரீகத்தையும் மேற்கத்திய அரசியல் சட்ட அமைப்பையும் தழுவிக் கொண்ட ஜப்பானில்தான் கண்ட பொருளியல் சீரழிவைப் பற்றிய தம் வெளிப்படையான மனக்குறையை மிஷிமா தமது ஆரம்ப எழுத்துக்களிலும் வாழ்க்கையிலும் கையாண்டு வெளிப்படுத்தியவர். ‘‘ஒரு தேசத்தின் உரிமைகளைப் பாதுகாக்க முக்கியமான யுத்தத்தை முற்றிலுமாய் துறக்க வேண்டும்’’ என்று 2-ம் உலகப் போருக்குப் பின் அமெரிக்கா விதித்த அரசியல் சாசனத்தை மிஷிமா ஏற்கவில்லை. உலகப் போருக்கு முன்பிருந்த அசல் ஜப்பானிய அரசியல் சாசனம் புதுப்பிக்கப்பட்டு ஜப்பானிய அரசர் மீண்டும் புனிதமானவராய் அங்கீகரிக்கப்படுவதன் மூலம் யுத்தத்தில் ஜப்பான் இழந்த கெளரவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என விரும்பினார் மிஷிமா.

சுமார் 100 இளைஞர்கள் சேர்ந்தார்கள். ஜப்பான் ராணுவத்தினரை தம் படையில் சேர்க்கும் முயற்சியில் தோல்வியுற்ற மிஷிமா, ராணுவ தளபதியை பேட்டி எடுப்பதுபோல தம் வீரர்களோடு சென்று அவரைக் கட்டி போட்டுவிட்டார். தளபதியின் ராணுவ வீரர்கள் ஓடி வரவும் அவர்களில் எட்டுப் பேரை மிஷிமாவின் வீரர்கள் வாளால் வெட்டிக் கொன்றனர். போலீசும் விரைந்து வந்தது. 1200 ராணுவ வீரர்கள் சுற்றி நின்றனர். தளபதியுடன் கதவைச் சுத்திக் கொண்ட மிஷிமா பால்கனியில் போய் நின்று கொண்டு சாமுராய் பாணியில் உடுத்து பத்து நிமிடங்கள் பேசினார். நடப்பு அரசியல் சட்டத்துக்கு எதிராக கிளர்ந்தெழ ராணுவத்தை அழைத்தார்.

Bioscope Karan 19th Web Article Series by Vittal Rao. This Series About Chinese movies பயாஸ்கோப்காரன் கிழக்கு முகமாய் 19 – விட்டல்ராவ்
Seppuku Image Credit: Wikipedia

மேற்கத்திய பாணி அரசியல் சாசனத்தை ஒழித்து, உலகப் போருக்கு முன்னிருந்த பழைய மன்னரின் அரசியல் சட்டங்களையே பின்பற்றுவதன் மூலம் ஜப்பானியரின் பண்டைய பெருமைகளையும், கலாச்சாரத்தையும் மீட்டெடுக்க தம் படையில் இணையுமாறும் புரட்சி செய்யுமாறும் அழைப்பு விடுத்தார். அவரது முயற்சி ஏற்கப்படவில்லை. மிஷிமா ஜப்பானிய சாமுராய்களின் பாரம்பரிய தற்கொலை வடிவான ‘‘செப்புகு’’ (SEPPUKU)வின் நியதிபடி தன் வாளையெடுத்து தம் வயிற்றில் ஆழமாய் இறக்கினார். செப்புகு என்பதை ஹராகிரி என்றும் அழைப்பார்கள். உடனே தாமதிக்காது அவரது படையைச் சேர்ந்த மகாகட்சு மோரிடா என்பவன் தன் வாளை உயர்த்தி ஒரே வீச்சில் மிசிமாவின் தலையை வெட்டி உருண்டோடச் செய்தான். இது புனித காரியமாக கெளரவ மரணமாய் சாமுராய்கள் கருதுவர். மிசிமாவின் இயற்பெயர், கிமிடேக் ஹிராவோகா (KIMITAKE HIRAOKA) என்பது சாமுராய் பரம்பரையில் வந்த செல்வந்தரின் மைந்தர். ஹராகிரியை வைத்து ஜப்பானில் நிறைய திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அதில் மிகச் சிறப்பான படம், ‘‘ஹராகிரி,’’

ஜப்பானிய திரைப்பட கலைஞர்களில் தனித்துவமிக்க, ஆனால் சரியாக கவனிக்கப்படாத படைப்பாளி மசாகி கோபயாஜி. தீவிரமாய் போரை எதிர்த்தவர் என்ற ரீதியில் மிசிமாவின் கொள்கைக்கு நேர்மாறானவர். இவர் இயக்கிய HUMAN CONDITION என்ற மகத்தான திரைப்படம் மூன்று தொகுப்புகளாய் ஒன்பது மணிநேரம் ஓடக்கூடிய காவியத் திரைப்படம். 1962ல் கோபயாஷியின் மிகச் சிறந்த படமென கருதப்படும் ஹராகிரி வெளிவந்தது. ஜப்பானிய திரைப்படங்களில் மிக முக்கியமானது ஹராகிரி. 1630களின் கதை நிலவரப்படி, ‘‘இயி’’ எனும் வம்சாவளியின் மாளிகைக்கு ஹன்சிரோ ட்சுகுமோ எனும் சாமுராய் ஒருவர் வருகிறார். சாமுராய் எனப்படும் ஜப்பானிய பாரம்பரிய பயிற்சி பெற்ற வாட்போர் வீரர்கள் பிரபுக்களின் பாதுகாப்பாளர் குழுவிலிருப்பார்கள். அன்றைய ஜப்பானில் உள்நாட்டுப் போர்களில் சாமுராய்கள் போரிட்டவர்கள்.

இச்சமயம், அந்தப் போர்கள்ஓய்ந்து, அமைதி நிலவியதால், அங்கிருந்த சாமுராய் குழுக்கள் கலைக்கப்பட்டன. வேறு வேலையில் ஈடுபட முடியாது வறுமையில் உழன்ற ட்சுகுமோ இயிகுல மாளிகைக்கு வந்து அங்கு தான் ஹராகிரி செய்து கொள்ள அனுமதி கேட்கிறார். பணமின்றி, உணவின்றி வறுமையில் கஸ்டப்படுவதைவிட ஹராகிரி மூலம் தன்னை முடித்துக் கொள்ள வந்திருப்பதாய் கூறுகிறார். அன்றைய ஜப்பானில் ஹராகிரி முறையில் உயிர் விடுவது புனித காரியமாய் கருதப்பட்டது. அதைச் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய கடுமையான விதிமுறைகளை ஏற்கவேண்டும். அவசரமின்றி நிதானமாய் செய்யவேண்டும்.

ஹராகிரி ஒரு சடங்கான தற்கொலை குறுவாளாக அடிவயிற்றை இடமிருந்து வலமாய் ஆழமாய்க் கிழித்துக் கொண்டவுடன் இதற்கு உதவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் தம் வாளால் தலையை வெட்டி ஹராகிரி சாவை முடிப்பார். சிலர் பணம் பெறுவதற்காக தான் ஹராகரி செய்வதாய்க் கூறினால் ஐயோ பாவம் என்று பணத்தைத் தந்து அனுப்புவார்கள். சுகுமோவையும் அவ்விதமாய் நினைத்த மாளிகைத் தலைவர் ஓமாகாதா, மோத்தோம் என்ற சாமுராய் பணத்துக்காக வந்ததையும் கட்டாய ஹராகிரியில் மடிந்ததையும் சுகுமோவுக்கு கூறுகிறார். சுகுமோ, தான் பணத்துக்கன்றி உயிரை மாய்த்துக் கொள்ளவே வந்திருப்பதாகக் கூறி ஹராகிரிக்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. அங்கிருக்கும் எல்லா சாமுராய்களும் ஹராகிரி நிகழ்விடத்தைச் சுற்றி தலைவரோடு அமர்நதிருக்கின்றனர்.

சுகுமோ தன் தலையை இறுதியில் வெட்டக்கூடிய வரை தான் தேர்ந்தெடுப்பதாக கோரி தேர்ந்தெடுத்த சாமுராய் வீரன் உடல் நலம் சரியில்லையென கூறி வருவதில்லை வேறொரு நபரை சுகுமோ ஏற்காத நிலையில் தலைவரின் அனுமதியுடன் அவன் தன் கதையைச் சொல்லுகிறான்.

வேலையையும் மனைவியையும் இழந்த சுகுமோவின் அழகிய மகனை மோத்தோமேக்கு திருமணம் செய்து தருகிறார். ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது வறுமை அதிகரித்த நிலையில் சுகுமோவின் மகள் காசநோய் கண்டு அவதியுறுகிறாள். குழந்தைக்கு கடுமையான ஜூரம். எங்காவது பணம் கேட்டு வருவதாய்ப் போன மருமகன் வீடு திரும்பவேயில்லை. வறுமையில் உழன்ற சில சாமுராய்கள் ஹராகிரி செய்துகொள்ள முன் வரும்போது இரக்கப்பட்டு சில பிரபுக்கள் தற்கொலையைத் தவிர்க்க பணம் தந்து அனுப்புவர் அல்லது தங்களிடமே வேலைக்கு சேர்த்துக் கொள்ளுவர் என்ற நினைப்பில் மோத்தோமே இயிமாளிகைக்கு வந்து ஹராகிரி புரிந்து கொள்ள அனுமதி கேட்கிறான். மருத்துவச் செலவுக்கு ஏற்கெனவே அவன் தன் வாளின் அலகை விற்றிருந்ததால் மூங்கில் பிளாச்சலான அலகை கைப்பிடியில் பொருத்தி வைத்திருந்தான். மோத்தோமே பணத்துக்கே ஹராகிரி செய்ய நாடகமாடுகிறான் என நினைத்த மாளிகைப் பிரபு ஹராகிரி செய்ய அனுமதிக்கிறார். மருமகன் இறக்கிறான். தொடர்ந்து குழந்தையும் மகளும் இறக்கவே சுகுமோ அனாதையாகிறார்.

எல்லாவற்றுக்கும் பழிவாங்க சுகுமோ இயி மாளிகைக்கு வந்திருக்கிறார் என்பது அங்குள்ளவர்களுக்குப் புரிகிறது. சுகுமோ ஹராகிரிக்கு உதவிட விரும்பிக் கேட்ட மூன்று பேரும் மூங்கில் வாளைக் கொண்டு மோத்தோமேவை ஹராகிரி புரிய வற்புறுத்தியவர்கள். கதையை முடித்த சுகுமோ அந்த மூவரின் குடுமிகளை அனைவரின் முன் வீசி எறிகிறார். இங்கு வருமுன் மோத்தோமோவைஅவமானப்படுத்திய அந்த மூவரையும் தனித்த வாட்போரில் எதிர்கொண்டு கொல்லாது குடுமிகளை மட்டும் அறுத்துக் கொண்டு வந்திருக்கிறார். எதிரியிடம் குடுமியை இழப்பதென்பது அவமான காரியமாய் சாமுராய்கள் கருதுவார்கள்.

Bioscope Karan 19th Web Article Series by Vittal Rao. This Series About Chinese movies பயாஸ்கோப்காரன் கிழக்கு முகமாய் 19 – விட்டல்ராவ்
Shichirō Fukazawa Image Credit: Wikipedia

காலாவதியாகி அர்த்தமிழந்த சாமுராய் கட்டுபாட்டின் அதிகாரத்தை சுகுமோ கேலி செய்கிறார் மிக்க அவமானமடையும் பிரபு சுகுமோவைக் கொல்லும்படி உத்திரவிட பயங்கர வாட் போர் நடக்கிறது. சுகுமோ நான்கு பேரைக் கொன்றும் பலரைக் காயப்படுத்தியும் சாமுராய் குலத்தின் குறியீடாக இயி இனத்தார் வணங்கப்பட்ட குல தெய்வ உருவத்தை இழுத்து எறிந்து சிதைத்து அவர்கள் என்றென்றும் மறக்க முடியாதபடி அவமானமுறச் செய்த பின் வாளைத் தம் உடலில் பாய்ச்சி தன்னை மாய்த்துக் கொள்ளுகிறார். நடந்தேறிய சகல உண்மை நிகழ்வுகளையும் நேரெதிராக திரித்து பொய்யாகப் பதிவேட்டில் எழுதிவைக்க பிரபு ஆணையிடுகிறார்.
Bioscope Karan 19th Web Article Series by Vittal Rao. This Series About Chinese movies பயாஸ்கோப்காரன் கிழக்கு முகமாய் 19 – விட்டல்ராவ்ஜப்பானிய சமூகத்தின் அடக்குமுறை கூடிய அதிகார அமைப்பு கோபயாஷியின் திரைப்படங்களில் கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகிறது. சுகுமோவாக நகதாய் அற்புதமாய் நடிக்கிறார். மூலக்கதையை எழுதியவர் ஜப்பானின் சிறந்த எழுத்தாளர் YASUHIKO TAKIGUCHI. படத்தின் அற்புதமான ஒளிப்பதிவை செய்திருப்பவர். YOSHIO MIYAJIMA. ஜப்பானிய மொழியில் ஹரா என்றால் வயிறு. கிரி என்றால் இரண்டாக பிளப்பது என்று பொருள்.
சீனாவைப் போலவும் இந்தியாவைப் போலவும் ஜப்பானும் காலங்காலமாய் பாரம்பரிய கலாச்சார சங்கரிகளையும், விசித்திரமான பழக்க வழக்கங்களையும் கொண்டிருக்கும் நாடு. ஜப்பானின் பண்டைய பாரம்பரிய செவி வழிக்கதைகளில் ஒன்று ஒபசூடெ OBASUTE இந்த கர்ண பரம்பரைக் கதையைக் கொண்டு ஜப்பானின் புகழ் பெற்ற நாவலாசிரியர் ஷிசிரோ ஃபுகாஸாவா SHICHIRO FUKAZAWA எழுதிய நாவல் BALLAD OF NARAYAMA (நாராயாமாவின் கவிதை இசை நாடகம்) ஆச்சரியம் என்பதைவிட மனதை உருக்கும் இசை நாடகம் எனலாம்.

இந்நாவலை ஜப்பானிய திரைப்பட மேதைகளில் ஒருவரான கீய்சுகே கினோசிடா KEISUKE KINOSHITA என் பவர் மகத்தான திரைக் காவியமாய் இயக்கியளித்திருக்கிறார். கினோஷிடா, ஜப்பானின் சமகால திரைப்பட மேதைகளில் நன்கு அறியப்பட்ட அகிரா குரோசாலா கோபயாசி மற்றும் யசுஜிரோ ஓசு ஆகியோரின் வரிசையிலிருப்பவர். இவரது நாராயாமா கதைச் சித்தரிப்பின் வகை மிகவும் வேறுபட்டது. அதீத அழகியல் சார்ந்தது. நேராக ஒரு சினிமாவாகச் செய்யாமல், ஜப்பானின் பாரம்பரிய நாடகப் பாணியான தாபுச்சி தியேட்டர் TABUCHI THEATRE கலை வடிவையும், நவீன திரைப்பட கலைமுறையையும் இணைத்து செய்துள்ளார் கினோசிடா ஜப்பானின் கலாச்சார மதிப்பீடுகளை இப்படத்தின் வழியாக அவர் ஆராய்ந்து வெளிப்படுத்துகிறார்.

19-ம் நூற்றாண்டு ஜப்பானின் பணிமூடிய மலைகளிடையே உள்ள சிறிய கிராமத்தில் வாழ்க்கை என்பது சவால்கள் மிக்கது. பஞ்சம், தானியத்தைக் கவர்ந்து செல்லும் கள்வர்கள் ஒரு புறம். அந்த கிராமத்தில் ஒரு வினோத சடங்கு ரீதியான பழக்கம். எழுபது வயதை அடைந்த முதியவர்களை அக்குடும்பத்தின் மூத்த ஆண் மகன் முதுகில் சுமந்துச் சென்று தூரத்திலுள்ள மலையுச்சிலமைந்த இடுகாட்டில் உயிரோடு விட்டு விட்டு வந்துவிட வேண்டும். 70 வயதான முதியவர்கள் அங்கிருந்தவாறே இறப்பார்கள். அவர்கள் அங்கிருக்கும் கடவுளோடு சேர்வார்கள் என்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கையால்தான் உயிரோடு அங்கு பயணித்து விடப்பட்டு இறக்க முதியவர்கள் முன் வருகிறார்கள். எப்போது தங்களுக்கு எழுபது வயதாகும் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள். ஒரு சிலர் அவ்வாறு சாவதற்கு விரும்பாது வாழவே விரும்புகிறார்கள். அந்த இடுகாடு இருக்குமிடம் ஒரு மலையுச்சிப் பகுதி. அம்மலைதான் நாராயாமா. அக்கிராமத்தில் எழுபதை எட்டுபவள் கிழவி ஓரின் (ORIN) இவளைச் சுற்றித்தான் கதை. இவளுக்கு நிறைய பிள்ளைகள், மூத்தவன் தட்சுஹை (TATSUHEI) தாரமிழந்தவன். அவனையு்ம் அவனது குழந்தையையும் கவனித்துக் கொள்ள ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்து வைத்துவிட்டு நாராயாமாவுக்கு நிம்மதியாகப் போய் விடலாமென சொல்லுகிறாள் ஓரின்.

உப்பு வியாபாரி ஒருவன் முயற்சியில் அடுத்த ஊரிலுள்ள விதவைப் பெண் ஓரினுக்கு புது மருமகளாகி தட்சுஹையை மணக்கிறாள். கடமை முடிகிறது, ஓரின் கிழவிக்கும் 70-வது பிறந்த நாள் வருகிறது. 70 வயதிலும் அவளுக்கு 33 பற்களிருக்கின்றன. அவை பிசாசுப் பற்கள் என்று சொல்லி ஊரார் கேலி செய்கிறார்கள். அவ்வளவு பற்களோடு நாராயாமாவுக்கு பயணிப்பது சரியல்ல என வேதனையுறும் ஓரின் தானே முன் பற்களை அடித்து நீக்கிவிடுகிறாள்.

பனிகாலம் தொடங்கவும் ஓரின் தன் மூத்த மகனை தன்னை நாராயமாவுக்குக் கொண்டு விடச் சொல்லுகிறாள். அதற்கான சடங்கும் அதன்போது ஓதப்படும் கட்டளைகளும் முக்கியமானது. ஒரு சிறு நாற்காலியை மகன் முதுகில் கட்டி, அதில் தன் தாயையோ தந்தையையோ உட்காரச் செய்து, தன்னை இறுகப் பிடித்துக் கொள்ள செய்து ஓடை, பள்ளத்தாக்குகள், கரடு முரடான மலைப் பாதைகளில் ஏறியிறங்கி நாராயாமாவை அடைய வேண்டும். போவது யார் கண்ணிலும் படக் கூடாது. இந்த இறுதிப் பயணத்தை யாரும் பார்த்து விடாதபடி இரவோடிரவாகச் செய்ய வேண்டும். ஒரு நீர் நிலையையடுத்து ஏழு வளைவுகள் எனப்படும் ஏழு பள்ளத்தாக்குகளைக் கடந்தால் நாராயாமாவுக்குள் நுழையலாம். சுமப்பவன் திரும்பிப் பார்க்கவே கூடாது அம்மாவை விட்டு விட்டு திரும்பிப் பார்க்காமல் வேகமாய் திரும்பி வரவேண்டும்.

ஒரே ஒரு சலுகை என்னவென்றால், ஏழு வளைவுகளைக் கடந்தும் விரும்பினால் ஒரே ஒரு முறை திரும்பிப் பார்க்கலாம். இவை கட்டளைகள். இக்கட்டளைகள் ஆறுபேர் கொண்ட குருமார்களால் (அதில் ஒருவர் பெண்) நிபந்தனையாக பயணத்தின்போது முதல் நாளிரவில் நடக்கும் சடங்கின் போது ஓதப்படுகின்றன. மறுநாள் நள்ளிரவில் தாயை சுமந்துகொண்டு மலை, காடுகளில் கடுமையான நடைப்பயணம் மேற்கொண்டு விடியும்போது நாராயாமாவை அடைந்து ஓரினை இறக்கிவிட்டு திரும்புகிறான் மகன். வழியில் தன் எழுவது வயது அப்பனை அவனது சம்மதமின்றி வற்புறுத்தி கயிற்றால் கட்டித் தூக்கி வருகிறான் இன்னொரு ஊர்க்காரன். அப்பன் முடியாதென்று சண்டையிடவே, அவரை அப்படியே மலையிலிருந்து உருட்டிவிடுகிறான். ஓரின் மகனுக்கும் அவனுக்கும் இதனால் சண்டை மூண்டு அவனும் தன் வழியிலேயே உருண்டு மாள்கிறான். தட்சுஹை திரும்பி ஓடிப் போய் அம்மாவைப் பார்த்து குதூகலத்தோடு கூறுகிறான்.

Bioscope Karan 19th Web Article Series by Vittal Rao. This Series About Chinese movies பயாஸ்கோப்காரன் கிழக்கு முகமாய் 19 – விட்டல்ராவ்
Akira Kurosawa Image Credit: Wikipedia

‘‘அம்மா, பனி விழத் தொடங்கிவிட்டது. இனி மேல் உனக்கு வலியோ அசெளகரியமோ இருக்காது’ இந்தப் படத்தை கீய்ஷீகே கினோஷிடா ஒரு இசைநாடக வடிவில் தாபுச்சி தியேட்டர் எனும் ஜப்பானிய பாரம்பரிய வடிவில் இயக்கியுள்ளார். படம் முடிவில் பயணிகளையும் சரக்கையும் கொண்ட புகைவண்டித் தொடர் ஒன்று வேகமாய் ஓடுகிறது. ஆளரவமற்ற ரயில்வே ஸ்டேஷனின் பெயர்ப் பலகையில் ஓபாசுடே (OBASUTE) என்ற பெயர் இருக்க அடியில் ‘‘கைவிடப்படும் இடம்’’ என்ற ஜப்பானிய சொற்களிருக்கின்றன. ஓரினாக நாடக நடிகை கினுயோ தனகாவும் (KINUYO TANAKA) மகனாக தெய்ஜி தகாஹாஷியும் (TEIJI TAKAHASHI) சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஜப்பானுக்குள்ளேயே அதிகம் திரையிடப்பட்ட இப்படத்திற்கு ஜப்பானின் 3 கினெமோ ஜூன்போ (KINEMO JUNPO) பரிசுகள் சிறந்த டைரக் ஷனுக்கும் சிறந்த நடிகைக்கும் சிறந்த படத்துக்குமென வழங்கப்பட்டது.
Bioscope Karan 19th Web Article Series by Vittal Rao. This Series About Chinese movies பயாஸ்கோப்காரன் கிழக்கு முகமாய் 19 – விட்டல்ராவ்அதே சமயம் இக்கதையை முழுக்கவும் முற்றிலுமாய் ஓர் அரிய நவீன சினிமாவாக ஷோஹை இமாமுரா இயக்கி வெளியிட்டார். (SHOHEI IMAMURA) பிரம்மாண்டமும் பிரமிப்புமிக்க இப்படம் உலகெங்கும் திரையிடப்படுகையில் சென்னை கெயிட்டி தியேட்டரில் திரையிடப்பட்டது. இமாமுரா பாலே ஆஃப் நாராயாமாவை 1983-ல் தயாரித்து இயக்கி வெளியிட்டார். முதல் வகையில் இடம் பெறாத சில காட்சிகள் இந்த புதிய படத்தில் இடம் பெற்று சினிமா என்பதை காட்டியது. காட்டில் ஓர் இளம் ஜோடி உடலுறவு கொள்ளும் காட்சி. இன்னொரு காட்சி அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. உடற்பசி கொண்ட ஒருவன் அந்த நேரத்துக்கு பெண் துணை கிடைக்காததால், அடுத்த வீட்டுக்காரன் பெண் நாயைப் புணருகிற காட்சி.

மகன் தாய் ஓரினை முதுகில் ஏற்றிக் கொண்டு காட்டுப்பாதை, மலைப்பாதை, மரப்பாலம், பள்ளத் தாக்குகளில் இரவில் கடுமையான நடைப் பயணம் செய்யும் படத்தின் கடைசிக் காட்சி தூக்கி வாரிப் போடுகிறது. நாராயாமா மலையை நெருங்குகையில் கிடக்கும் நூற்றுக்கணக்கான எலும்புக் கூடுகள் முழுசும், சிதறியுமாய் சமீபத்தில் வைக்கப்பட்டு இறந்து போய், பறவைகளால் குதறப்பட்ட ஒரு கிழவியின் எலும்புக்கூட்டோடு தலைமுடியும், மிச்சம் மீதி அழுகிய சதையும் இப்படத்தின் ஒளிப் பதிவை பிரமிக்கும் வகையில் காமிரா கலைஞர் மசாவோ தோச்சிசாவா (MASAO TOCHIZAWA) அமைத்திருக்கிறார். கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் இமாமுராவுக்கு இப்படத்துக்கு தங்க இலச்சினைப் பரிசு அளிக்கப்பட்டது. ஓரின் பாத்திரத்தில் சுமிகோ சகாமோடோ (SUMIKO SAKAMOTO)வும் மகன் தட்சுஹை பாத்திரத்தில் கென் ஓகாடாவும் (KEN OGATA) அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.

உலகப் புகழ் பெற்ற திரைப்பட மேதைகளுள் முக்கியமான ஒருவர் ஜப்பானின் அகிரா குரோசாவா (AKIRA KUROSAWA) இவர் படங்கள் பல முறை அமைப்புகளால் பரிசு பெற்றவை. அவ்வப்போது பிற மொழியிலுள்ள நாடகங்கள், நாவல்களையும் ஜப்பானிய மண்ணின் பாரம்பரியத்துக் கேற்றவாறு படமெடுத்து, அவை எவற்றின் தழுவல் என்பதை நேர்மையோடு பதிவிடுவார். ஷேக்ஸ்பியரின் சில நாடகங்களையும் (RAN, THRONE OF BLOOD) தாஸ்தாவெஸ்கியின் நாவலையும் (IDIOT) குரோ சாவா ஜப்பானிய படங்களாகத் தழுவி எடுத்திருக்கிறார். போலவே இவரது அசல் ஜப்பானிய கதைத் திரைப் படங்களை (RASHOMAN, SEVEN SAMURAI ஹாலிவுட்டிலும் தமிழிலும் கண்ணியமாக வெளிப்படையாக தழுவி படமெடுத்திருக்கிறார்கள். (OUTRAGE, அந்த நாள், THE MAGMFICENT SEVEN)

குரோவாவின் அமரத்துவமான திரைப்படங்களான ரஷோமன், செவன் சாமுராய், ரெட் பியர்டு, இகிரு, யோஜிம்போ, ரான், ட்ரீம்ஸ் என்பவை சும்மா பட்டியலுக்காகச் சொல்லவில்லை. அவரை ஓர் உலகத் திரைப்பட மேதையென கருதச் செய்தவை. ரஷோமன் படத்தின் கதையை தி.சு. சதாசிவத்தின் தமிழ் மொழி பெயர்ப்பில் ஸ்நேகா பதிப்பகம் சிறப்புற வெளியிட்டார்கள். படத்தின் அசல் திரைக்கதை வசனமாகும் இது. குரோசாவா பற்றிய அரிய நூலை திரைப் பட ஆய்வு எழுத்தாளர் எஸ். ஆனந்த் எழுதி தமிழினி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. வெகு சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால், அகிரா குரோசாவா ஜப்பானின் சத்யஜித்ரே என்றால், கோபயாஷி ஜப்பானின் ரித்விக்கடக் எனலாம். குரோசாவா ஜப்பானில் கொஞ்சம் வேலை குறைந்திருந்த நேரத்தில் 1974ல் 1974ல் ரஷ்யாவில் அவ்வரசாங்க அழைப்பின் பேரில் போயிருந்து ஓர் அரிய திரைப்படத்தைச் செய்தார். அதுதான் டெர்சு உஜாலா.

டெர்சு உஜாலா (DERSU UZALA) ரஷ்யமொழியில் குரோசாவா இயக்கி சென்னை தேவி திரையரங்கில் 1975-ல் திரையிடப்பட்டது. விளதிமிர் ஆர்செனியீவ் என்பவர் (VLADIMIR ARSENIEV) ஜார் கால ரஸ்யாவில் பயணம், பத்திரிகை, நிலம் நீர் மலைகளின் ஆய்வுக்கட்டுரைகள் ஏராளமாய் எழுதியவர். அவரது கதை டெர்சு உஜாலா 1902-ல் இடம் பெறுகிறது. ஓர் அதிகாரி சில வருடங்களுக்கு முன் தான் தன் நண்பர் ஒருவரை அடக்கம் செய்த இடத்தைக் காண வருகிறார். அடையாளம் தெரியவில்லை புதைக்கும் சமயம் இருந்த இரு பெரிய மரங்களையும் எடுத்துவிட்டு இடம் பெரிய அரசு கட்டுமான மொன்றுக்காக சீராக்கப்படுகிறது. ஒரு தீர்மானத்தோடு புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் கண்டவராய் அவர் சென்று போனதை நினைவுகூர்கிறார். படமும் இவ்வாறே ஃபிளாஸ் பாக்கில் தொடங்குகிறது.

டெர்சு உஜாலா சோவியத் யூனியன் தயாரித்த மகத்தான 70 MM படம். இது அகிரா குரோசாவா இயக்கிய ரஷ்ய மொழிப்படம். 1902ல் ராணுவத்திலிருந்து வந்த சிலரை ஓர் அதிகாரியின் கீழ் சைபீரிய பகுதி ஒன்றை அதன் பள்ளத் தாக்கு, மலைகள், நீர்நிலை போன்றவற்றை மறு ஆய்வு செய்து காடுகள் அருவிகளையும் உள்ளிட்ட பகுதிகளை சர்வே செய்து புதிய வரை படம் (MAP) ஒன்றைத் தயாரிக்க அனுப்புகிறது. அவர்கள் ஒரு புதிய மனிதனைச் சந்திக்கின்றனர். குள்ளமான வயதான கால்கள் வளைந்த ஒரு வேட்டைக்காரனான அவன் பெயர் டெர்சு உஜாலா சைபீரிய பனிப் பிரதேசம், காடுகள் வனவிலங்குகள், நீர் நிலை எல்லாவற்றையும் அறிந்த டெர்சு ஒரு மங்கோலிய இன காட்டு ஜீவி. மனைவியும் மக்களையும் அம்மை நோய்க்கு பலி தந்த டெர்சு தனியாள் விலங்குகளைக் கொன்று விற்று வாழ்பவன். ஒரு புலியைச் சுட்டுக் கொன்றிருக்கும் அவன் புலியின் கூட்டத்தை எதிர்பார்ப்பவன். ஒரு பெரும் சைபீரிய பனிப் புயல் மிகப் பிரமாதமான காமிரா ஒளிப்பதிவால் படமாக்கப்பட்டுள்ளது.

பனிப் புயல் வருவதை தன் கூர்ந்த மதிநூட்பம், அனுபவ ரீதியாக முன்னதாக டெர்சு சர்வே குழுவை க் காப்பாற்றும் காட்சி படத்தின் சிறப்புகளில் ஒன்று. குழு நகருக்குப் போய்விட்டு சில ஆண்டுகள் கழித்து வரும்போது டெர்சுவின் கண் பார்வை கூர்மை குறைந்திருப்பதை அவன் வேட்டையின்போது குறிதவறுவதிலிருந்து தெரிய வருகிறது. கண்களைச் சோதிக்க அழைத்தால் அவன் காட்டைவிட்டு நகருக்கு வர மறுக்கிறான். கஸ்டப்பட்டு அதிகாரி அவனைத் தம்மோடு நகரத்துக்கு அழைத்து வருகிறார். நகரின் வாழ்க்கை, நாகரிகம் எதுவும் டெர்சுவுக்கு ஒத்துப்போகவில்லை. தன்னை தன் காட்டிலேயே கொண்டு விடும்படி நச்சரிக்கிறான். அதிகாரி அன்றைக்கு அதிநவீனமான வேட்டைத் துப்பாக்கி ஒன்றை பரிசளிக்கிறார். பார்வை குறைவால் சற்று தவறாகக் குறி வைத்தாலும் குறி பிசகாது சுடும் துப்பாக்கி அது என்று சொல்லித் தருகிறார். சில நாட்கள் கழித்து போலீஸ்காரர் ஒருவர் அதிகாரியைத் தேடி வந்து விசாரிக்கிறார்.

”இது உங்கள் பெயர் பொறித்த வேட்டைத் துப்பாக்கி. திருடர்கள் சிலரால் விற்க முற்படுகையில் பிடிபட்டது.”

”ஆனால் இது திருடுபோகவில்லை. டெர்சு உஜாலாவென்ற வேட்டைக்காரருக்கு நான் பரிசாக தந்தாயிற்றே?” என்கிறார் அதிகாரி.

”அவரைக் கொன்று போட்டுவிட்டு இத் துப்பாக்கியை பிடுங்கிச் சென்றிருக்கிறார்கள். அந்த முதியவரின் உடலை வந்து பாருங்கள்.”

Bioscope Karan 19th Web Article Series by Vittal Rao. This Series About Chinese movies பயாஸ்கோப்காரன் கிழக்கு முகமாய் 19 – விட்டல்ராவ்
Fyodor Dobronravov Image Credit: Wikipedia

அதிகாரி போய் பார்த்துவிட்டு சவ அடக்கம் செய்ய ஏற்பாடு செய்கிறார். எல்லாம் முடிந்தவுடன் ஒரு போலீசு பவ்யமாய் சல்யூட் அடிக்கிறார். அதிகாரி அதை ஏற்று திரும்புகையில் இன்னொரு முறையும் போலீசு சல்யூட் செய்கிறார். அதிகாரி புரிந்து கொண்டு முக இறுக்கத்தோடு நகருகிறார். ஜார்மன்னன் காலத்து ரஷ்யாவில் போலீசுகாரர் இனாம் எதிர்பார்த்ததை இக்காட்சி சொல்லுகிறது.

அகிரா குரோசாவாவின் சிறந்த இயக்கத்துக்கு இப்படம் மற்றொரு எடுத்துக்காட்டு. படத்தின் வியத்தகு ஒளிப்பதிவை புரிந்திருப்பவர் காமிரா கலைஞர் ஃபியோடோர் டோப் ரோன் ரவோவ் (FYODOR DOBRONRAVOK) என்ற ரஷ்ய ஒளிப்பதிவாளர். ஐசக் ஷ்வார்ட்ஸ்-ன் (ISAAK SHVARTS) இசைக் கோர்வை நுட்பமானது. அதிகாரியாக ரஸ்ய நடிகர் யூரி சோலோமின் (YURI SOLOMIN) என்பவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். 1975ம் ஆண்டுக்கான சிறந்த அயல்மொழி பட விருது ஆஸ்கார் அகாதமி விருது விழாவில் பெற்ற படம். மாஸ்கோ சர்வதேச பட விழாவில் சிறந்த படத்துக்கான தங்கப் பதக்கம் பெற்ற படம்.

அகிரா குரோசாவாவுக்கும் சத்யஜித் ரேக்கும் ஒரு வகையில் ஒற்றுமையுண்டு என கூறும் வகையில் இருவரது கடைசி படங்களும் தோன்றுகின்றன. ரேயின் ”அகாந்துக்”, அவரது கடைசி படம். குரோசாவின் ”மததாயோ” அவரது கடைசி படம். இரு படங்களும் ஒரு வருக் கொருவர் நன்கு புரிந்து கொண்டு அன்பு காட்டுவதை அடிப்படையாகக் கொண்ட படங்கள், இரு படங்களும் ஆழமான உணர்வுகளைக் கொண்டு, அதிகம் வெளிப்புற காட்சிப் பிடிப்புகள் கொண்டதாயில்லாதவை.
Bioscope Karan 19th Web Article Series by Vittal Rao. This Series About Chinese movies பயாஸ்கோப்காரன் கிழக்கு முகமாய் 19 – விட்டல்ராவ்குரோசாவின் ”மத தாயோ”, 1993-ல் வெளிவந்தது. அவரது முப்பதாவதும் கடைசியுமான படம். 60-வயதை எட்டும் ஆசிரியர், புரொபசர் ஹியாகன் உச்சிடா (HYAKKEN UCHIDA) இரண்டாம் உலகப் போர் நடக்கையில் தம் வேலையை ராஜினாமா செய்துவிட்டு எழுத்துப் பணியில் ஈடுபடத் தொடங்குகிறார். சதா நகைச்சுவை ததும்ப பேசி மாணவர்களின் நிறைந்த அன்பைப் பெற்ற ஆசிரியருக்கும் மாணவர்களில் கொஞ்சம் பேருக்கும் நெருக்கமான பிணைப்பு நிலைக்கிறது. அவர் குடியிருக்கும் வீடு விமானத் தாக்குதலில் நாசமாகி குடிசையொண்றில் கணவனும், மனைவியும் சேர்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், தம் பிறந்த நாளைக் கொண்டாடும் ஆசிரிய தம்பதிகளுக்கு குழந்தையில்லை. அவரது மாணவர்களே அவருக்கு குழந்தைகள். ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் ஜப்பானிய வழக்கப்படி புரெபசரை மாணவர்கள் ஒரு கேள்வியைக் கேட்பார்கள்.

”மஹ்தா-கேய்? (MMAHDA-KAI?) என்றால் நீ தயாரா? அதாவது மறு உலகுக்குபோக தயாரா என்பது.

அதற்கு உச்சிடா, மததாயே! (MADADAYO) என்று பதிலளிப்பார். என்றால் ”இன்னும் இல்லை என்று பொருள். மாணவர்கள் ஒன்று சேர்ந்து பணம் திரட்டி அழகான வீடொன்றைத் தங்கள் அன்பான பேராசிரியருக்குக் கட்டி அதில் குடியமர்த்துகிறார்கள். யுத்தமும் முடிவுக்கு வருகிறது. குழந்தையற்ற உச்சிடா தம்பதிகள், தம் புது வீட்டுக்குள் வந்து சேர்ந்த பூனையொன்றை உயிருக்குயிராய் அன்பு செலுத்தி வைத்திருக்கிறார்கள். அந்தப் பூனை ஒரு நாள் ஓடிப் போய் விடுகிறது. திரும்பி வருவதேயில்லை. உச்சிடா சாப்பிடாமல் குழந்தைபோல் பார்த்துக் கொண்ட பூனையின் நினைவாகவே ஒரு நாள் முழுக்க இருப்பார்.

வேறொரு பூனை வந்துசேருகிறது. பேராசிரியர் தன் 77-வது பிறந்த நாளைக் கொண்டாடும் நாளில் அவரது மாணவர்களின் பேரக் குழந்தைகளும் கொண்டுவரப்படுகின்றன. அன்றும் அவர் உரக்கச் சொல்லுவார் ”மததாயோ” இன்னும் நேரம் வரவில்லை என்று மனித உறவை, மனிதன்- செல்லப் பிராணி உறவையெல்லாம் மிக நளினமாக துளியும் மிகையின்றி அற்புதமான வெகு இயல்பான மிகையற்ற நடிப்பால் மததாயோ மிகச் சிறந்த படங்களில் ஒன்று. பல விமர்சகர்கள் மததாயோவை குரோசாவா தன் இறுதி படமாக தீர்மானித்தே செய்திருப்பதாக ஹேஷ்யம்கூட கூறினார்கள். ஆனால் அவர்களுக்கு அவர் அளித்த – பதில், ”கிடையாது, எனக்கு இன்னும் முடிக்க வேண்டிய படங்கள் கையிலிருக்கின்றன” என்பதுதான்.

தாத்சுவோ மட்சுமுரா (TATSUO MATSUMURA) ஆசிரியர் உச்சிடாவாக வெகு இயல்பாக நடித்திருக்கிறார். குரோசாவின் சிறந்த இயக்கமும் தகாவோ செயிடோ (TAKAO SAITO)வின் காமிரா கலையும் மிகச் சிறப்பான விஷயங்கள்.

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 13: பயாஸ்கோப்காரன் (ஆங்கிலப் படங்களுக்கு தமிழ் தலைப்புகள்) – விட்டல்ராவ்

தொடர் 14: பயாஸ்கோப்காரன் (தழுவல், காப்பி, மொழிமாற்றத் திரைப்படங்கள்)– விட்டல்ராவ்

தொடர் 15: பயாஸ்கோப்காரன் (ஜான் ஃபோர்டு (John Ford) – விட்டல்ராவ்

தொடர் 16: பயாஸ்கோப்காரன்(கருப்பும் வெளுப்பும்) – விட்டல்ராவ்

தொடர் 17: பயாஸ்கோப்காரன்(சினிமாவான சில நவீன நாடகங்கள்) – விட்டல்ராவ்

தொடர் 18: பயாஸ்கோப்காரன்(கிழக்கு முகமாய்) – விட்டல்ராவ்

Bioscope Karan 18th Web Article Series by Vittal Rao. This Series About கிழக்கு முகமாய் – விட்டல்ராவ்

தொடர் 18: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



கிழக்கு முகமாய்

பயாஸ்கோப்காரன் சென்னைக்கு வந்து வாழ்க்கையில் நங்கூரமடித்து நின்றதும் திரைப்படங்களை தியேட்டர்களிலும், திரைப்படச் சங்கங்களிலும், மாறி மாறி பார்த்து வைக்கும் வாய்ப்புகளையும் அனுபவங்களையும் பெற முடிந்தது. கீழை நாட்டு திரைப்படக் கலாச்சாரம் நாட்டுக்கு நாடு வேறுபட்டதாய் ஒருபுறமும், அதேசமயம், ஏதோ ஒரு மெல்லிய சரடால் ஒன்றுக்கொன்று ஒத்திசைத்து நெருக்கமாகி சார்ந்திருப்பதும் கவனிக்கப்படவேண்டியது. சீனப்படம் HONG-FEN [1995]-இல் அரிசி மாவைக் கொண்டு நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் நடுத்தர வயதுப் பெண்ணொருத்தியின் வாழ்க்கைச் சித்தரிப்பு. தன் வாழ்வின் குறிக்கோளாக ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை வாங்க வேண்டும் என்ற ஆசையில் கடுமையாக உழைத்து பணம் சேர்தது வாங்கி விடுகிறாள்.

இப்போது புதுப் பிரச்சினை ஒன்று. அக்கம் பக்கத்திலிருந்து தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் இவள் வீட்டுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க வந்து கூடுகிறார்கள். இவ்வளவு காலமாய் ஒட்டி உறவாடிய சினேகிதிகளை வரவேண்டாமென சொல்ல முடியாது. சிறுசுகள் தொலைக்காட்சிப் பெட்டியைத் தொட்டுப் பார்க்கிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் அதை தடுக்கிறார்கள். பிறகு இவளுக்கே தன் பெருமையை மற்றவர்கள் பேச வேண்டுமென்று நினைத்து எல்லோரையும் வீட்டுக்குள் அனுமதிக்கிறாள். ஒருநாள் டி.வி.பெட்டி வேலை செய்யாமல் மக்கர் செய்கிறது. சொல்லியனுப்பியும் பழுது பார்க்க வல்லுனர் வருவதில் தாமதம் ஏற்படுகிறது. சினேகிதிகளின் வருகை நிற்கிறது. இவளைவிட அதிக அக்கறையோடு “சரியாச்சா, சரியாச்சா?” என்று அவர்கள்தான் சதா இவளைக் கேட்டுக் கொண்டேயிருக்க ஒருநாள் பெட்டி சரியாகிறது. ஆனால் முன் போலில்லை. இப்படத்தை வேறுவிதமாக கன்னடத்தில் பார்த்த மாதிரியுமியிருக்கிறது. [குலாபி சினிமா]. உலகத் திரைப்பட விழாவில் காண நேரிட்ட இச் சீனத் திரைப்படத்தை இயக்கியவர் லீ ஷாவோ ஹோங் [LEE SHAO HONG].

Ermo - Alchetron, The Free Social Encyclopedia

“எர்மோ” [ERMO] எனும் சீனப்படம் [1995] குறிப்பிட வேண்டிய ஒன்று. கிராம வாழ்க்கை, பள்ளிக்கூட நாட்கள், என்பனவான அடிப்படை வாழ்வியல் சங்கடங்களை வைத்து பின்னப்பட்ட கதையைக் கொண்ட இப்படத்தை சிறப்பாக இயக்கியவர் மக்கள் சீனாவின் புதிய சினிமாவுக்கான இயக்குநர் ZHOU XIAOWEN.

Red Cherry (1995) - IMDb

1996-ல் திரைப்பட விழாவில் காட்டப்பட்ட செஞ் செர்ரி [RED CHERRY] மிகவும் பேசப்பட்டு பாராட்டப்பட்டு பல்வேறு விருதுகள், பரிசுகள் பெற்ற படம். இப்படம் ஃபாசிஸ எதிர்ப்பு யுத்தத்தில் அடைந்த வெற்றியின் ஐம்பதாம் ஆண்டு நினைவுக்கு அர்ப்பணிக்கப்படுவதான அறிவிப்போடு வெளியானது.
முன்னாள் சோவியத் யூனியனில் பெலோரஷ்யாவுக்கருகில் இயங்கி வந்த இவானோவ் சர்வதேச அனாதைப் பள்ளிக்கூடத்தில் [IVANOV’S INTERNATIONAL SCHOOL] படித்த சில சீன மாணவர்கள், 1940-1945 கால கட்டத்தில் அடைந்த உண்மையான அனுபவங்களின் அடிப்படையில் உருவான அரிய சீனத் திரைப்படம் செஞ் செர்ரி [RED CHERRY], 2-ம் உலகப் போரில் பெற்றோர்களை இழந்த சூ சூ [CHU CHU] என்ற சிறுமியையும், லுவோ ஜியாமன் [LUO XIAMAN] என்ற சிறுவனையும் அந்த ரஷ்ய சர்வதேசப் பள்ளியில் சேர்க்கின்றனர். ஜெர்மன் நாஜி படைகள் ரஷ்யாவை ஆக்கிரமித்திருக்கும் நிலையில் சண்டை நடந்தவாறு உள்ள 1940-45 கால கட்ட சூழலில் அப்பள்ளிக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெலோரஷ்யாவிலுள்ள கோடை முகாமுக்குச் செல்ல பள்ளி ஏற்பாடு செய்கிறது. கர்னல் கீல் [COL.QIEL] எனும் கிராதக ஜெர்மன் படைத்தலைவன் ரஷ்ய-சீனச் சிறுவர்களைத் தன்னோடு கூடைப்பந்தாட்டமாட கட்டளையிட்டு, முரட்டாட்டம் ஆடி சிறுவர்களை மோதித் தள்ளி காயமுறச் செய்து அதை ரசிக்கிறான். அப்போது பள்ளியின் ரஷ்ய ஆசிரியை மணியடித்து அவர்களை வகுப்புக்கு அழைப்பது நாஜி அதிகாரிக்கு பொறுக்கவில்லை. ஆசிரியை எதிரியின் ஆக்கிரமிப்பையும் கொடுமையையும் குறிப்பால் உணர்த்தி உரையை நிகழ்த்துகிறாள். அவள் பேச்சைக் கேட்கும் ராணுவ அதிகாரி அவளைச் சுட்டு கொன்று விடுகிறான். இதுபோன்ற பல்வேறு துன்பங்களை பிள்ளைகள் அனுபவிக்கிறார்கள்.

அடுத்து ஜெர்மனிய ராணுவ உயர் அதிகாரியான ஜெனரல் ஒருவன் வருகிறான். ஒரு காலை இழந்து பொய்க் காலோடு நடமாடும் ஜெனரல் கொடுமையிலும் கொடுமையானவன். சூ சூவை அவனது இருப்பிடத்தைச் சுத்தம் செய்ய அனுப்புகிறார்கள். நாஜி ஜெனரல் தன்னை ஒரு டாக்டர் என்று சொல்லிக் கொள்ளுபவன், அவனுக்கு குரூர எண்ணம் ஒன்று. அழகிய இளம் பெண்களின் உடலில் தனக்கு மிகவும் பிடித்தமான, நாஜிகளின் மூன்றாம் ரீச் [ஹிட்லரின் பரம்பரை]சின் சுவஸ்திகா சின்னத்தை மையமாய் வரைந்து அதற்கு மேலே இரு சிறகுகளையும் விரித்து நிற்கும் கழுகின் உருவை பலவண்ணங்களால் பச்சை குத்தி வைப்பது [TATTOO]. அம்மாதிரி உடலெங்கும் பச்சை குத்தப்பட்ட பெண்ணைக் கொண்டு வந்து மதுவும் விலை மாதுகளோடும் கும்மாளம் போடும் நாஜி, ராணுவ அதிகாரிகளின் கிளப் ஒன்றின் உயரமான மேஜைமீது நிற்க வைத்து நிர்வாணமாக்கி பார்க்கச் செய்து பரவசமடைகிறான்.

அடுத்த ஓவியம் சூ சூ என்பதாகிறது. அவனது லட்சியமே அதுதான். நடமாடும் உயிருள்ள ஓர் ஓவியக்காட்சி, தன் கோர எண்ணத்தையும் செயலையும் கலை என்றே சொல்லிக் கொள்ளுகிறான். அச்சமயம் ருஷ்யர்கள் ஜெர்மன் ராணுவத்தை தாக்கி வருகிறார்கள். ஜெர்மன் ராணுவம் தோற்கும் படலம். “நம்மைச் சுற்றி ரஷ்யர்கள் வந்து விட்டார்கள். நாம் அழியப் போவது உறுதி. அதற்குள் என் மகத்தான இறுதி ஓவியத்தை முடிக்க வேண்டும்.” என வெறியோடு கூவிவிட்டு சூ சூவை நிர்வாணமாக கவிழ்ந்து படுக்க வைத்து மயக்க ஊசி செலுத்தி மயக்கத்திலாழ்த்துகிறான். இரண்டு மூன்று தினங்களில் பல வண்ணங்களிலான இறகு விரித்த கழுகு மற்றும் சுவஸ்திகா சின்னங்களை நாஜி, ஜெர்மனியின் மூன்றாம் ரீச் சின்னத்தை பச்சைக் குத்தி முடித்துவிட்டு, “இது எனது மாஸ்டர் பீஸ்”, என்று கூறிவிட்டு துப்பாக்கியை எடுத்து வாயில் சுட்டுக்கொண்டு சாகிறான். ரஷ்யர்கள் வருகிறார்கள். தப்பியோடும் ஜெர்மன் சிப்பாய்களை ஒளிந்திருந்து சுடும் லுவோ ஜியாமன் தான் ஒரு கட்டிடத்துக்குள் பதுங்கி அங்கு தன்னைப் பிடிக்க வரும் ஜெர்மானியரை உள்ளே விட்டு பெட்ரோலை கொட்டி வெடி வைத்து அழிப்பதோடு தானும் மரணமுறுகிறான்.

சூ சூவை கோணிப் பையில் போட்டு பொட்டல் வெளியில் கொண்டு போய் போட்டு விட்டு ஜெர்மானியர்கள் ஓடி விடுகிறார்கள். ருஷ்யர்களால் காப்பாற்றப்பட்ட சூ சூவை சர்வதேச பள்ளியின் பிரின்சிபால் அடையாளம் கண்டு கொள்ளுகிறார். இப்போது முக்கிய பிரச்சினை சூ சூ எனும் உயிருள்ள நடமாடும் ஓவியக் காட்சி. அந்த ஓவியம், ஃபாசிஸ நாஜிகளின் மூன்றாம் ரீச்சின் இலச்சினை போன்ற கழுகும் ஸ்வஸ்திகாவும் பல வண்ண மூலிகை மருந்துகளாலான வண்ணங்களைக் கொண்டு அந்த சீனப் பெண்ணின் முதுகெங்கும் பச்சைக் குத்தப்பட்ட ஒன்று. சாமானியத்தில் அழிக்க முடியாது. ருஷ்ய டாக்டர் ஒருவரும் சர்வதேச டாக்டர்களும் இணைந்து சூ சூவின் பச்சைக் குத்தின முதுகுத் தோலை முற்றிலுமாய் உரித்தெடுத்து விட்டு வேறு தோலை வைத்து SKIN GRAFT ரண சிகிச்சை செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால் அந்த அறுவை சிகிச்சை தோல்வியுறுகிறது.

போர் ஓய்ந்து சூ சூ சீன தலைநகர் பைஜிங்கிற்கு 1950-ல் திரும்பி வந்தவள் திருமணம் செய்து கொள்ளாமலே வாழந்து தன் 63வது வயதில் காலமானார் என்பது செஞ் செர்ரியின் வரலாறு. 1996-ன் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான விருது, ஹவுஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவின் சிறப்பு விருது மற்றும் பல விருதுகளைப் பெற்ற இதில் சூ சூவாக நடித்த GUO-KE-YO என்ற நடிகைக்கு சிறந்த நடிகை விருது கிடைத்த RED CHERRY படத்தை இயக்கியவர் YE YING. படத்தின் சிறப்பான ஒளிப்பதிவை செய்தவர் காமிராமேன் ZHANG LI.

File:Pudong, Shangai.png - Wikipediaஷாங்காய் நகரில் 1958-ல் பிறந்து ஹாங்காங்கில் வளர்ந்து உருவான புகழ் பெற்ற சீன திரைப்பட இயக்குனர் ஓங்க் கார் வை [WONG KAR WAI]. பதிப்போவிய பயிற்சி பெற்ற ஓங்க் கார்வை எண்பதுகளில் சினிமா தயாரிப்பு துறையில் உதவியாளராயும் திரைக் கதையாசிரியராயும் தொடங்கியவர். இவரது, “AS TEARS GO BY”, [1988] எனும் சீனப் படம் இவரது ஆழ்ந்த காட்சி ரூப தனி நடையை வெளிப்படுத்திற்று. இவரது பெரிதும் பேசப்பட்ட “சங் கிங் எக்ஸ்பிரஸ்” [CHUNG KING EXPRESS]Chungking Express (1994) - IMDb 1994-ல் வெளிவந்தபோது மேற்குலக திரைப்பட ஆர்வலர்களை வசீகரித்து அசத்தியது. அவரது கிராஃபிக் பயிற்சியின் பின்புலத்தில் சங் கிங் எக்ஸ்பிரஸ் அதி நவீன உத்திகள் கொண்ட வண்ணப்படமாய் அமைந்தது. ஹாங்காங் காவல் துறையைச் சேர்ந்த இளைஞன் ஒருவனின் தன் வருணனையாகச் சொல்லிப் போகும் இப்படத்தில் அவர் புகுத்தியிருக்கும் வண்ண முறையும் ஒலியமைப்பும் அசாத்தியமானது. அதே சமயம் சீனப் பண்பாடு, பாரம்பரியம், சீனக் கலாச்சாரம் என்பனவற்றின் எச்சமாக எதையும் பார்க்க முடியவில்லை. முழுக்க மேலை நாட்டு கலாச்சாரத்தையும் நாகரிக பூச்சாகவும் விளங்கவல்லதாய் அதன் அடிப்படை கதையமைப்பிலிருந்து சகலத்தையும் அமைத்திருக்கிறார் ஓங்க் கார் வை. மேலைநாட்டு கதை வகை, சூழல், நடிப்பு, ஒப்பனை, இசைக் கோர்வைகளாகவே போய்க் கொண்டிருப்பது. ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாற்றையும், கலை, கலாச்சாரப் பண்பாட்டுக்களையும் கொண்ட சீனத்தின் குறியீடுகளாய்க்கூட இவரது படங்களில் பார்க்க முடியவில்லை. அடுத்து, ஓங்கார் வையின் படமான, “DAYS OF BEING WILD”, ஹாங்காங் நகர சூழலையும் வாழ்வியல் முறையையும் கொண்டிருப்பது. ஹாங்காங் 99 ஆண்டுகளாய் பிரிட்டிஷ் காலனியாக இருந்து வந்திருக்கிறதென்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அத்தோடு ஓங்க் கார்வை போன்றோரின் கம்யூனிஸ ஒவ்வாமை காரணமும் இத்தகைய புதிய கலாச்சார முலாம் பூசப்பட்ட சினிமாவை ஆரத் தழுவிக் கொண்டிருக்கலாம்.

அடுத்து ஓங்கார் வை தயாரித்து இயக்கிய “HAPPY TOGETHER” [1997] எனும் நவீன சீனப்படம். இது ஹாங்காங் நகர நவீன நாகரிக வாழ்க்கையில் இரு இளைஞர்களுக்கிடையேயான ஓரினக் கவர்ச்சி காதல் மற்றும் ஓரினப் பாலுறவு பற்றிய படம். ஒரு சமயம் சோகமும், மறுசமயம் மகிழ்ச்சியோடும் போகும் வாழ்க்கைப் பற்றிய படம். இந்தப் படமும் மேற்கு நாடுகளில் மிக்க வரவேற்பையும் பாராட்டுக்களையும் பரிசுகளையும் பெற்றது. ஓரினப் பாலுறவு எங்கும் இருப்பதொன்று. பூடகமான நடவடிக்கைகள் வெடித்துச் சிதறி அம்பலத்துக்கு வந்து உலக அங்கீகாரத்தை வேண்டும்போது எல்லாவற்றுக்கும் உடனடியாய்க் கிட்டுவதில்லை. அதனால் சிக்கலும் சோகமும் தற்கொலை முயற்சிகளும்கூட இவ்வித உறவில் நிகழ்கின்றன. D.H.லாரன்ஸின் பெண்கள் இருவரிடையேயுள்ள ஓரினப் பாலுறவை பற்றிய கதை ஒன்று “FOX” என்ற பெயரில் 70-களில் வெளியானது. விஷயத்தை பூடகமாய் சொல்லும் படம். 1940-களின் தொடக்கத்தில் புகழ் பெற்ற உருது பெண் எழுத்தாளர் திருமதி இஸ்மத் சுக்தாய் “QUILT” [போர்வை] எனும் பெண்களின் ஓரினப் பாலுறவைச் சொல்லும் அதியற்புத சிறுகதையை எழுதியிருக்கிறார்.

தொண்ணூறுகளின் இடையில் தைவானைச் சேர்ந்த மற்றொரு சீன இயக்குனர் ஆங் லீ அமெரிக்க கௌபாய்கள் இருவரிடையேயான ஓரினப் பாலுறவைக் கொண்ட Brokeback Mountain (2005) - IMDb “BROKE BACK MOUNTAIN” என்ற ஆங்கில படத்தை இயக்கி ஆஸ்கர் விருதையும் பெற்றவர். இந்நூற்றாண்டில் எடுக்கப்பட்ட “BLUE IS THE WARMEST COLOUR”, என்ற ஃபிரெஞ்சு திரைப்படம் மிகவும் பேசப்பட்ட பெண்களுக்கிடையேயான ஓரினப் பாலுறவு பற்றிய அரிய படம். இந்தியாவில் ஷபனா ஆஸ்மி, நந்திதா தாஸ், குல்பூஷன் கர்பந்தா ஆகியோர் நடித்த “FIRE”ம் அதே வகை படம். ஓங்க் கார் வையின் “ஹாப்பி டு கெதர்” படத்தில் யூ-ஃபை [YIU-FAI] மற்றும் போ விங்க் [PO WING] எனும் இரு இளைஞர்கள் ஓரினப் பாலுறவு ரீதியாக காதலர்கள். இருவரும் விடுமுறையைக் கழிக்க அர்ஜெண்டினாவுக்கு போயிருக்கையில் விங், யூவை ஒதுக்கி விட்டு தனியேபோய் வேறு பையன்களை ஜோடி சேர்த்துக் கொள்ளுகிறான். யூ, ஹாங்காங்குக்குத் திரும்பிப் போக கடுமையாக வேலை செய்து பணம் சம்பாதிக்கிறான். ஒருநாள் விங் சிலரால் பலமாய்த் தாக்கப்பட்டு கிடக்கையில், யூ அவனைத்தன் இருப்பிடத்துக்குக் கொண்டு வந்து தாய்போல சிகிச்சை உணவெல்லாம் அளித்து உண்மை அன்பு எது என்பதை தெரிவிக்கிறான். இருவரும் பழையபடி நெருக்கமாகி ஊர் திரும்புகிறார்கள். இந்தப் படத்திலும் ஓங்க் கார் வை முழுக்கவும் மேற்கின் மாறிவரும் கலாச்சார மாற்றத்தைத் தாங்கிய ஹாங்காங் சீனர் வாழ்க்கையைத்தான் காட்டுகிறார். படத்தின் சிறப்பம்சம் அதன் உயரிய வண்ண ஒளிப்பதிவு. காமிராமேன் கிறிஸ்டோஃபர் டாயில் [CHRISTOPHER DOYLE] பாரட்டுக்குரிய ஒளிப்பதிவாளர்.

ஓங்க் கார் வையின் வெகுவாகப் பேசப்பட்ட மற்றொரு படம், “2046”. சௌ [CHOW] சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங் நகருக்கு வந்த ஒரு எழுத்தாளனும் பத்திரிகையாளனுமாவான். ஹாங்காங் உல்லாச விடுதிகளுக்குப் பெயர் பெற்ற இடம். அவன் புகழ்பெற்ற சூதாட்ட மையம் மற்றும் விலை மாதர்கள் வசிக்கும் பெரிய விடுதியில் பணியிலமர்கிறான். அவனுக்கு மிகவும் இணக்கமும் ஏற்றம் மிக்கதுமான இடம். அவன், தான் எழுதியவை எதிர்காலத்தை முன்வைத்த, நிகழ்வுகள் அனைத்தும் நிகழ்கால வெளியின் எல்லைக்கப்பாற்பட்ட வெகு தொலைவில் நடந்தேறுவதாய் நினைக்கிறான். ஆனால் அது சரியல்ல. அது அத்தனையும் கடந்த காலத்தவை. அவன் எழுதி வந்த நாவலில் மர்மமான ரயில் வண்டியொன்று அவ்வப்போது வருடம் 2046-ஐ நோக்கி புறப்படும். அங்கு பயணம் மேற்கொண்டு போன ஒவ்வொருவருக்கும் தாங்கள் இழந்துவிட்ட கடந்த கால நினைவுகளை அங்கு போனதும் திரும்பப்பெறும் நோக்கமாகவே இருக்கிறது. 2046-ல் ஒன்றுமே மாற்றமடையவில்லை என்று சொல்லப்படுகிறது. அது உண்மைதானென்பதை யாருமே உறுதியாக அறிந்தவருமில்லை, ஏனெனில் 2046க்கு சென்ற ஒருவரும் திரும்பி வந்ததேயில்லை… ஒருவன் மட்டும் அதை மாற்ற விரும்பி அங்கு நிலையாக நின்றான். இந்த கதைப் போக்கினிடையே “2046” என்பது அந்த சூதாட்ட விலைமாதுள்ள விடுதியில் புகழ்பெற்ற அறை. அறை எண் 2046-ல்தான் சௌவின் காதலியும் இளம் விலைமாதுவான பெண் இருக்கிறாள். இந்த உறவு வாழ்க்கை தொடருகையில் அந்த பெண் வேறொருவனோடு ஜப்பானுக்கு சென்று விடுகிறாள். செள 2046- நாவலின் முடிவுக்கும் மேலே புதியதாக ஒரு பிற்சேர்க்கையை எழுதி முடிக்கிறான் அது 2047. அலுப்பற்ற விறுவிறுப்பான படம். ஓங்க் கார் வையின் சிறந்த இயக்கம், சிறப்பான ஒளிப்பதிவு, எடிடிங்கும் சேர 2046 சிறந்த படமாகிறது.

“BA WANG BIEJI” என்ற சீன சொற்றொடரின் ஆங்கில மொழிபெயர்ப்பு “FAREWELL MY CONGUBINE” என்பது. திருமணம் செய்யாது ஆணோடு சேர்ந்து வாழும் பெண் “காங்குபைன்” ஒரு சீன அரசன் தன் “வைப்பை” இறுதியாக அனுப்பி வைக்கும் கதையாடலைக் கொண்ட புகழ் பெற்ற சீன மிக பழைய பாரம்பரிய இசை நாடகத்தின் பெயர் அது. உலகெங்கும் இந்திய தேவதாசிக் குலம் என்று குறிப்பிடப்பட்ட குடிகள் உட்பட தாசிக்குல குடிமக்களுக்கும் இசை, நடனம், கவிதை, இசை, நாடகம், நாடகம் எனும் கலைத் துறைகளுக்கும் மிக நெருங்கிய தொடர்பு, செயல்பாடு, சேவை என்பவை மறுக்க முடியாத அளவில் இன்றளவு இருந்துவரும் நிரூபணங்கள், அந்த வகையில் பண்டைய சீனமும் அந்த கலைப் பங்களிப்புகளில் அதன் தாசிக்குல மாந்தரின் அர்ப்பணிப்புகளைக் கண்டிருக்கிறது. “காங்குபைன்” படத்திலும் தாசிகளும், பண்டைய சீன கலாச்சாரத்தின் முக்கிய அங்கங்களில் ஒன்றாக விளங்கிய இசை நாடக செயற்பாட்டோடு இணைந்திருப்பதை விரிவாகவே கூறுகிறது.

காங்குபைன் கதை 1924-லின் சீனத்து சூழலிலிருந்து ஆரம்பிக்கிறது. “மலர்ச்சி” என்ற பெயர் கொண்ட பிரபலமான விலைமாதர் இடத்திலுள்ள இளம்பெண் ஒருத்தி தன் ஆறுவிரல்கள் கொண்ட பையனோடு பகலில் வெளியேறி சீனத்தின் புகழ்பெற்ற இசை நாடகக் குழுவின் குருவிடம் ஓடுகிறாள். பகலில் விலை மாதைப் பொதுவிடத்தில் பார்க்கும் ஆண்களின் எதிர்வினை அற்புதமாயும் அளவோடும் படமாக்கப்பட்டுள்ளது.

சீனத் தலைநகர் பைஜிங்கிலிருக்கும் “பைஜிங் திரைப்பட அகாடெமி, கலாச்சாரப் புரட்சியும் நால்வர் குழுவின் [CULTURAL REVOLUTION] செயல்பாடுகளும் ஓய்ந்துபோன நிலையில் 1978-ல் திறந்து விடப்பட்டது. அதில் உருவான சீன திரைப்படக்காரர்களின் ஐந்தாவது தலைமுறையின் முதல் இயக்குனர் வரிசை உலக சினிமா அரங்கில் தோன்றியது. அதில் முக்கியமானவர் கெய்கெ சென் [KAIGE CHEN] சீனாவில் கலாச்சார புரட்சி 1966-ல் உச்சத்திலிருந்த சூழலில், கெய்கெ பெற்று அனுபவித்த மிகக் கசப்பான நினைவுகளை, தைரியமாகவும் தீரத்தோடும் தாம் அற்புதமாய் இயக்கிய “FAREWELL MY CONCUBINE” படத்தில் புகுத்திக் கொண்டு வந்திருக்கிறார்.Farewell My Concubine (1993) - IMDb ஒரு கையில் ஆறு விரல்களிருப்பது இசை நாடக நடிப்புக்கு லாயக்கற்றதென்று கூறி, நாடகப் பள்ளியின் தலைவரும் குருவுமானவர் விலைமாதின் மகனான டௌஜியை [DOUZI]யை நிராகரிக்கிறார். மாணவர்கள் கடுமையாய் தண்டிக்கப்படுமிடம் அது. டௌஜியை விட வயதில் பெரிய லேய்ஜி [LAIZI] காங்குபைனில் அரசனாக நடிப்பவன். டெளஜியின் ஆறாவது விரலை கத்தியில் வெட்டியெறிந்துவிட்டு நாடகப் பள்ளியில் சேர்க்கிறாள் விலை மாதான தாய். அவனை அரசனின்
“வைப்புப் பெண்” [CONCUBINE] பாத்திரத்தில் நடிக்க பயிற்சியளித்து மிகச் சிறந்த நடிகையாகிறான் ஆணாகிய டௌஜி. இதனிடையில் இரண்டாம் உலகப்போர், ஷியாங் கேய் ஷேக்கின் நேஷனாலிஸ்ட் கட்சியினரின் கொடுமை, அட்டகாசம் படத்தில் இடம் பெறுகிறது. ஜப்பானின் ஆக்கிரமிப்பும் ஷியாங்கே ஷேக்கின் கோமிங்டாங் கட்சியெனும் தேசியவாதத்தின் தைவான் தீவுக்கு ஓட, தலைவர் மாவோவின் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் மலர்கிறது.

பின் கலாச்சாரப் புரட்சி, நால்வர் குழுவின் தர்பார் எல்லாம் வந்து போகிறது. இச்சமயம், டௌஜியை அரசு கைது செய்து, அவன் செய்ததாக கலாச்சாரப் புரட்சிக் குழு சுமத்திய குற்றங்களுக்காக விசாரணை நடத்துகிறது. ஷியாங்கே ஷேய்கின் கோமிங்க் டாங் சிப்பாய்களுக்கு பாட்டுப் பாடியதற்காகவும், ஜப்பானிய ராணுவத்துக்கு இசைபாடியதற்குமான குற்றங்களாய் அவை. பிறகு அந்தப் பழி வேறொரு குருவின் மீது திரும்புகிறது. லேய்ஜி ஜுஜியன் [JUXIAN] எனும் அழகிய விலைமாதைத் திருமணம் முடிக்கும் செயலால், நாடகத்தில் அரசனும் அவனது ஆசை நாயகியுமாய் நடித்து, நிஜ வாழ்வில் ஓரினப் பாலுறவிலிருந்த டௌஜியும், லெய்ஜியும் பிரிகிறார்கள். கலவரம் ஒன்றில் ஜுஜியின் கரு கலைந்து போகிறது. இரு இசை நாடகக் கலைஞர்களின் ஐம்பது வருட உறவை இவ்வளவு அரசியல் சமூக நிகழ்வுகளினூடே மிக அற்புதமாக திரைக் காவியமாக்கியிருக்கிறார் இயக்குனர் கெய்கே சென்.

The Piano - Rotten Tomatoes

கேன்ஸ் உலகத்திரைப்பட விழாவில் இப்படத்திற்குக் கிடைத்த GOLDEN PALM விருது சீனப்படம் ஒன்றுக்கு கிடைத்த முதல் கேன்ஸ் விருது. அதே சமயம் இவ்விருது மற்றொரு சிறந்த படமான “THE PIANO” என்ற ஆஸ்திரேலிய படத்துக்கும் காங்குபைனுக்கும் சேர்த்து அளிக்கப்பட்டது. காங்குபைன் பெண்ணாக LESLIE CHEUNG-ம், FENGYI CHANG அரசனாயும் நடித்த இப்படம் 1993-ல் வெளியானது. கெய்கே சென்னின் சமகாலத்து திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும், எழுத்தாளரும், நடிகரும், சிறந்த காமிரா ஒளிப்பதிவாளருமான ஜாங் இமெள [ZHANG YIMOU] 1987-ல் வெளியான சிறந்த சீனப்படம்“RED SORGHUM”, என்ற படத்தை இயக்கியவர்.

[தொடரும்]

முந்தைய தொடர்களை படிக்க கிளிக் செய்க: 

புதிய தொடர்: பயாஸ்கோப்காரன் (முன்னுரை) – விட்டல்ராவ்

தொடர் 2: பயாஸ்கோப்காரன் (கபிலர் மலையும் அரிச்சந்திரனும்) – விட்டல்ராவ்

தொடர் 3: பயாஸ்கோப்காரன் (போரும் சினிமாவும்)– விட்டல்ராவ்

தொடர் 4: பயாஸ்கோப்காரன் (மினி பயாஸ் கோப்) – விட்டல்ராவ்

தொடர் 5: பயாஸ்கோப்காரன் (சில தெலுங்குப் படங்கள்) – விட்டல்ராவ்

தொடர் 6: பயாஸ்கோப்காரன் (ரிபப்ளிக் சீரியல் படங்களும், தமிழ் சண்டைப் படங்களும்) – விட்டல்ராவ்

தொடர் 7: பயாஸ்கோப்காரன் (கூடார வகை தியேட்டர்கள்) – விட்டல்ராவ்

தொடர் 8: பயாஸ்கோப்காரன் (கூடார தியேட்டர்கள்) – விட்டல்ராவ்

தொடர் 9: பயாஸ்கோப்காரன் (கந்தர் ஃபிலிம்சும், மாடர்ன் தியேட்டர்ஸும்) – விட்டல்ராவ்

தொடர் 10: பயாஸ்கோப்காரன் (சினிமா சுவரொட்டித் திருட்டு) – விட்டல்ராவ்

தொடர் 11: பயாஸ்கோப்காரன் (ஹாலிவுட் ஒரு மகா களவுலகு) – விட்டல்ராவ்

தொடர் 12: பயாஸ்கோப்காரன் (சினிமா பார்க்க சீசன் டிக்கட்) – விட்டல்ராவ்

தொடர் 13: பயாஸ்கோப்காரன் (ஆங்கிலப் படங்களுக்கு தமிழ் தலைப்புகள்) – விட்டல்ராவ்

தொடர் 14: பயாஸ்கோப்காரன் (தழுவல், காப்பி, மொழிமாற்றத் திரைப்படங்கள்)– விட்டல்ராவ்

தொடர் 15: பயாஸ்கோப்காரன் (ஜான் ஃபோர்டு (John Ford) – விட்டல்ராவ்

தொடர் 16: பயாஸ்கோப்காரன்(கருப்பும் வெளுப்பும்) – விட்டல்ராவ்

தொடர் 17: பயாஸ்கோப்காரன்(சினிமாவான சில நவீன நாடகங்கள்) – விட்டல்ராவ்

Bioscope Karan 17th Web Article Series by Vittal Rao. This Series About some modern plays that are cinematic சினிமாவான சில நவீன நாடகங்கள் – விட்டல்ராவ்

தொடர் 17: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



சினிமாவான சில நவீன நாடகங்கள்

நவீன அமெரிக்க நாடகம் எனும்போது மிக முக்கியமான பெயர் டென்னிசி வில்லியம்ஸ் (TENNESSEE WILLIAMS) நவீன அமெரிக்க நாடக வெளியில் மிக முக்கியமானவர் டென்னிசி வில்லியம்ஸ் நவீன அமெரிக்க நாடக வெளியில் மிக முக்கியமானவர் டென்னிசி வில்லியம்ஸ் என்பதற்கு, அவரது நாடகங்கள் முக்கியமான சில திரைப்படங்களாக்கப்பட்டதும் ஆகும். 1914-ல் மிஸ்ஸவுரியிலுள்ள கொலம்பஸ் நகரில் பிறந்தார். கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வில்லியம்ஸ் ஒரு காலனி கம்பெனியில் வேலை செய்துகொண்டே இரவு நேரங்களில் எழுதினார். பிறகு 1938ல் மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படிப்பை முடித்தார். டென்னிசி வில்லியம்ஸ் தனது Battles of Angles எனும் நாடகத்துக்காக 1940-ல் ராக்ஃபெல்லர் ஃபெலோசிப் பெற்றவர். இவர் 1948 மற்றும் 1955க்கான புலிட்சர் விருதுகளை இரு முறை பெற்றவர். இவரது Glass Managerie, A STREET CAR Named Desire, Baby Doll, Suddenly Last Summer, The Cat on a Hot Tin Roof, The Night of The Iquana என்ற நாடகங்கள் திரைப்படமாக்கப்பட்டிருக்கின்றன. இவரது The Knightly Quest என்ற குறுநாவலும் பன்னிரெண்டு சிறு கதைகளும் சேர்ந்து ஒரு தொகுப்பாய் வெளி வந்திருக்கிறது. டென்னிசி வில்லியம்ஸ் தமது 71-வது வயதில் நியூயார்க் ஓட்டல் ஒன்றில் 1983ல் இறந்து கிடந்தார். வில்லியம்ஸின் THE CAT ON A HOT TIN ROOF மற்றும் NIGHT OF THE IGUANA ஆகிய இரு நாடகங்களையும் எனக்கு எனது நண்பரும் பழம் பெரும் நடிகருமான ரஞ்சன் அவர்கள் படிக்கக் கொடுத்தார். ரஞ்சனுக்கு ஆர்தர்மில்லர், டென்னிசி வில்லியம்ஸ் இருவரின் நாடகங்கள் மிகவும் பிடித்தமானவை.

Bioscope Karan 17th Web Article Series by Vittal Rao. This Series About some modern plays that are cinematic சினிமாவான சில நவீன நாடகங்கள் – விட்டல்ராவ்

டென்னிசி வில்லியம்சின் A Street Car Named Desire நாடகம் 1951-ல் திரைப்படமாக்கப்பட்டது. மிகச் சிறந்த திரைப்படமாய்க் கருதப்பட்ட இதில் மார்லன் ப்ராண்டோவும் விவியன்லீயும் மிக அருமையாக நடித்திருக்கிறார்கள். மற்றொரு உப பாத்திரமாக காரல் மால்டன் சிறப்பாகச் செய்திருக்கிறார். இப்படத்தின் நடிப்புக்குப் பிறகு ப்ராண்டோவுக்கு அடுத்தடுத்து நடிக்க சந்தர்ப்பங்கள் வந்தபடியிருந்தன. இந்தியாவில் டார்ஜிலிங்கில் பிறந்து இங்கிலாந்தில் குடியேறி நடிகையான விவியன் லீ, 1939-ல் வெளியான பிரம்மாண்ட வண்ணப்படம், Gone with The Wind-ல் கதாநாயகியாய் நடித்தார். இவர் மற்றொரு புகழ் பெற்ற நாடக சினிமா நடிகர் சர் லாரன்ஸ் அலிவியரை மணந்தார். அவரது இயக்கத்தில் இதே நாடகத்தை நாடகமாய் மேடையேற்றியபோது விவியன் லீ அதே பாத்திரத்தை ஏற்றார்.

Desire ( ஆசை) என்பது நியூ ஆர்லியன் நகரின் டிராம் வண்டிகளில் ஒன்றின் பெயர். அந்த வண்டியைப் பிடித்து தன் தங்கை வீட்டுக்கு வந்து தங்கியிருக்க ரயிலில் பயணித்து வரும் ப்ளான்ச் துபோய் (Blanche Duboise) சரியான மனோ நிலையில்லாதவளாய்க் காணப்படுகிறாள். அவளுடைய வாழ்க்கைப் பின்னணி மோசமானது. பள்ளி மாணவன் ஒருவனுக்கும் ப்ளான்சுக்கும் உறவு இருந்து, பையனின் தந்தை பள்ளி நிர்வாகத்துக்குக் கொடுத்த புகாரின் பேரில்தான் அவள் பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறாள். மாறாக தானே முன்வந்து தான் வேலை பார்த்த ஆசிரியைப் பணியை விட்டு விட்டதாகச் சொல்லுகிறாள். ஏராளமாய் நிலுவையிலிருந்த வரி பாக்கிக்காக தங்கள் மூதாதையர் சொத்தான எஸ்டேட்டை இழந்துவிட்டதாகத் தெரிவித்து அதிர வைக்கிறாள். அவளது கற்பிணி தங்கை ஸ்டெல்லாவின் முரட்டு கணவன் ஸ்டான்லி கோவால் ஸ்கிக்கு அவளது வருகையில் துளியும் விருப்பமில்லை. ஸ்டெல்லா இருக்கும் குடியிருப்பு மனை சிறியது. அந்தரங்கத்துக்கு இடப்பஞ்சம். ப்ளான்ச் சொல்வதை நம்பாத ஸ்டான்லி எல்லாவற்றையும் யார் மூலமாயோ விசாரித்து அறிந்து மனைவியிடம் கூறுகிறான். ப்ளான்ச் குளிக்கப் போயிருக்கையில் அவளது பெட்டிகளைக் குடைத்து அவனிடமுள்ள விலையுயர்ந்த உடைமைகளை மனைவி்க்குக் காட்டி, சாதாரண பள்ளியாசிரியைக்கு இதை வாங்க வருமானம் ஏது என்கிறான். எஸ்டேட்டை விற்றுவிட்டு, வரி பாக்கிக்கு இழந்ததாய் பொய் சொல்லுவதாய்க் கூறுகிறான். அத்தோடு நெப்போலிய விதியென்று ஒன்றை நினைவூட்டுகிறான். அந்த சொத்து பாத்தியத்தைக்கான விதிப்படி, மனைவிக்குச் சேர வேண்டிய சொத்தில் கணவனுக்கும் பாத்தியதை உண்டு என்றும், அதன்படி தன்னுடைய சொத்தையும் ப்ளான்ச் ஏமாற்றிவிட்டு தாருமாறாக செலவு செய்வதாகக் கூறி கூச்சலிடுகிறான். இதனிடையில் காதலி இறந்துபோன ஒருவன் ப்ளான்சை விரும்புகிறான் அதுவும் முறிந்து போகிறது. ப்ளான்சின் காதலன் பள்ளி மாணவன் . அவனுடைய தந்தை பள்ளி நிர்வாகத்துக்கு ஆசிரியை மீது புகாரளிக்க, அவளை நிர்வாகம் பணி நீக்கம் செய்கிறது. அவளது காதலனான, பையன் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு சாகிறான். அதை நினைத்தே அவள் மனநலம் பாதிக்கப்பட்டவளாகிறாள். அவளை விரும்பி ஏற்க வந்தவனுக்கு இதை கூறுகிறாள். இதையெல்லாம் ஏற்கத் தயாராக இல்லாத ஸ்டான்லி கோவால்ஸ்கி அவள் மனம் பெரிதும் நோகும்படி சாடுவதோடு தன் மனைவிக்குச் சேர வேண்டிய சொத்தில் பாத்யதையுடைய தனக்கும் இழப்பை ஏற்படுத்தியதாகத் திட்டுகிறான். அவள் வரி கட்டியதற்கான ரசீதுகளை எடுத்து அவன் முன் வைக்கிறபோது அவளுக்கு இறந்துபோன காதலன் எழுதிய கவிதையை அவன் எடுக்கிறான். அவன் அதைத் தொடுவதை விரும்பாத ப்ளான்ச் பிடுங்கிக் கொள்ளுகிறாள். இந்த ரகளையில் வந்து சேரும் ஸ்டெல்லாவை மூர்க்கமாய்த் தள்ளுகிறான் ஸ்டான்லி, அவளது வயிறு அடிபட்டு வலியேற்பட மருத்துவமனைக்கு அவளை கொண்டுபோய் சேர்த்துவிட்டு வரும் கோவால்ஸ்கி மீண்டும் ப்ளான்சை சீண்டுகிறான். மனநோயால் உழலும் அவள் அவனை வெளியேறச் சொல்ல அவன் அவளை நெருங்குகிறான். ப்ளான்ச் ஒரு பெரிய மது புட்டியை உடைத்து ஆயுதமாய்க் கொண்டு தன்னை நெருங்கினால் குத்திவிடுவதாய் எச்சரிக்கிறாள். ஸ்டான்லி அவளைப் பிடித்துக் கிடத்தி வல்லுறவு கொள்ளுகிறான். ப்ளான்ச் முற்றிலும் மனநிலை பிறழ்ந்து போகிறாள். அவளது தங்கை ஸ்டெல்லாவும் வீடு திரும்புகிறவள். ப்ளான்சின் நிலைமை மேலும் மோசமடையும்போது அவளை மனநிலைக் காப்பகத்தில் சேர்க்க ஏற்பாடு நடக்கிறது. காப்பகத்தைச் சேர்க்க முதிய அதிகாரி ப்ளான்சைத் தொட்டு அன்போடு தடவி தன் கையை நீட்டுகிறார். அந்தக் கையோடு தன் கையைப் பிணைத்துக் கொள்ளும் ப்ளான்ச், நீயாகவே இருக்கட்டும், நான் எப்போதும் அந்நியனின் அன்பில் நம்பிக்கைக் கொள்பவள், என்ற தணிந்த கடைசி வசனத்தோடு காப்பக வண்டியிலேற, படம் முடிகிறது.

ஸ்ட்ரீட் கார், ஆஸ்கர் விருது வரலாற்றில் முதல் முறையாக 1951-ல், அவ்வாண்டின் நான்கு நடிப்புக்கான பரிசுகளில் மூன்றைப் பெற்ற முதல் படம், அக்கா தங்கைகள் பாத்திரத்தில் நடித்த விவியன் லீ, கிம் ஹண்டர், அந்நியனாக செய்த கார்ல் மால்டன் ஆகிய மூவருக்கும் நடிப்புக்கான பரிசுகள் கிடைத்தன. எலியா கஸான், இயக்கத்தில் உருவான On The Water Front (1954) படத்தில் அதி சிறப்பாக நடித்த மார்லின் பிராண்டோ அவ்வாண்டின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.

ருஷ்ய நாடக மேதை ஸ்டானிஸ்லாவ்ஸ்கி (K.S.Stanislavsky) நடிப்புக் கலையின் நவீன முறையாக, தணிந்த வகையிலான, உரத்தகதியை நிராகரித்த, படிப்படியாக எடுத்துச் செல்லும் மெத்தாட் (Method) எனும் நவீன நடிப்பை அறிமுகப்படுத்தி தாம் மேடையேற்றிய செகாவின், நாடகங்களில் கையாண்டு வெற்றி கண்டார். இந்த மெத்தாட்வகை- நடிப்புக் கலை நுணுக்கத்தை அமெரிக்காவில் வளர்த்தவர் லீ ஸ்ட்ராஸ் பர்க் என்பவர். லீ ஸ்டீராஸ்பர்கின் முறையை நாடகங்களிலும் திரைப்படங்களிலும் கையாண்டு வெற்றி கண்ட இயக்குனர் எலியா கஸான் (Elia Kazan) துருக்கியில் பிறந்து அமெரிக்காவில் காலூன்றி பல சிறந்த படங்களை இயக்கியவர். நடிகர்கள் தங்கள் சொந்த அனுபவங்களிலிருந்து உடல் மொழி நுணுக்கத்தைப் பெற்று தாம் நாடகங்களில் திரைப்படத்தில் ஏற்கும் கதாபாத்திரங்களில் திரைப்படத்தில் ஏற்கும் கதாபாத்திரங்களில் ஆழ்ந்து இரண்டறக் கலக்க வேண்டும் என்பதை பின்பற்றச் செய்தவர். அத்தகைய நடிகர்களாய் உருவானவர்களில் மார்லன் பிராண்டோ ஜேம்ஸ்டீன், கார்ல் மால்டன், பால் நியூமன், பீட்டர் ஓட்டூல், விவியன் லீ, என்பவர்கள் முக்கியமானவர்கள்.
கவிதை, உரைநடை, இசை, நாடகம், சினிமா, ஓவியம், சிற்பம், நடனம் என்பவை பழைய நிலையிலிருந்து நவீனப்படுத்தப்பட்டு நவீனமான வேகத்தில் நடிப்புக் கலையும் பழைய முறையிலிருந்து நவீன நடிப்புக்கு மாறிக் கொண்டது. நடிப்புக் கலையில் நவீன மாற்றத்தைப் பின்பற்றி இந்தியாவில் வெற்றி கண்டவர்களில் நசிருதின் ஷா, பால்ராஜ் சஹ்னி, உத்பல் தத், செளமித்ரா சட்டர்ஜி, ஸ்மீதா பாட்டில், சபனா ஆஸ்மி, ஆகியோர் முக்கியமானவர்கள். அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராயிருந்தமைக்காக எலியா கஸான் அரசால் விசாரிக்கப்பட்டபோது முன்னாள் உறுப்பினர்கள் எட்டு பேரின் பெயர்களை வெளியிட்டவர்.
டென்னிஸ்ஸ வில்லியம்சின் நாடகங்கள் சுருங்கச் சொன்னால், நான்கு சுவர்களுக்கிடையே நடக்கும் சமகால குடும்ப விவகாரங்கள், கடந்த காலத்தின் ஒதுக்கித் தள்ள இயலாத நினைவுகள், அவை தொடர்பான மன உளைச்சல்கள், மன பலவீனங்கள், மன நோயாளிகள், பாலியல் பிரச்சினைகள், ஆண், பெண் ஒழுக்கவியல் சிதைவுகள் என்ற அம்சங்களை மையமாயும் முக்கியமாயும் கொண்டவை. அவரது சடன்லி லாஸ்ட் சம்மர் (Suddenly Last Summer) நாடகத்தைத் திரைப்படமாக்கிய வடிவில் சினிமாவைக் காட்டிலும் நாடக வடிவமே பிதுங்கி நிற்கிறது. A street Car Named Desire, மற்றும் Night of the Iguana Bioscope Karan 17th Web Article Series by Vittal Rao. This Series About some modern plays that are cinematic சினிமாவான சில நவீன நாடகங்கள் – விட்டல்ராவ் ஆகிய இரண்டைத் தவிர மற்றவை சினிமாவாக்கப்பட்ட, காமிராவில் பதிவு செய்யப்பட்ட நாடக வடிவங்களாகவே படுகின்றன. இந்த நிலை இப்ஸனின் நாடகம் சினிமாவானபோதும் (Enemy of the Public கண சத்ரு சத்யஜித் ரே) சந்திக்க வேண்டியிருந்தது. ஓரளவுக்கு பெர்னாட் ஷாவின் நாடகங்கள் சினிமாவாக்கப்பட்டதில் இத்தகைய நிலைக்கு உட்படவில்லை.

சடன்லி லாஸ்ட் சம்மர் நாடகத்தினின்று திரைப்படம் சற்று வேறுபட்டு தோன்றும், நாடகத்தில் இடம் பெறும் இலை மறைவு காய் மறைவான ஓரினப் பாலியல் நிகழ்வு, விபச்சாரம், நர மாமிசப் பசி என்பவை நீக்கப்பட்ட நாடகமாய் சினிமா முயற்சிக்கப்பட்டிருந்தும் அபரிதமான மன அதிர்ச்சிக்கு மேல் படம் மனதைத் தொட்டு நெருடவில்லை. திரைப்படத்துக்குள்ளே அது நாடகமாகவே நிற்கிறது. பொறுமையை சோதிக்கும் ஒரே வசன மழை. பாத்திரங்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். கடந்த காலத்தில் வாழ்பவர்கள். படம் தொடங்குவது புகழ் பெற்றதொரு மனநிலை பிறழ்ந்த ஆண், பெண் மனநோயாளிகள் சேர்க்கப்பட்டுள்ள ஒரு மருத்துவமனை – விடுதியிலிருந்து பெண் மன நோயாளிகள் இருக்கும் பகுதியில் தொடங்குகிறது கதை. ஒரு வயதான நோயாளி ஆடும் நாற்காலியொன்றில் அமர்ந்து ஆடிக் கொண்டிருக்கிறாள். அந்தப் பிரிவில் ஆடும் நாற்காலி அது ஒன்றே ஒன்றுதான். ஆண், பெண் மனநோயாளிகள் பேர் பாதி குழந்தைகளாகவும் இருக்கிறார்கள். எனவே ஆடும் நாற்காலியில் அமர்ந்து ஆடுவதென்பதும் அவர்களுக்குப் பிடித்தமான செயலாக இருக்கிறது.

Lions view, State Asylum எனப்படும் அந்த மிகப் பெரிய மனநிலை காப்பகத்தின் மேல் தளத்தில் காப்பகத்தின் பொறுப்பாளராய் இருக்கும் பணக்காரி ஒருத்தி நினைத்தபோது லிஃடில் இறங்கி வருவாள்- போவாள். அவளது அழகிய இளம் பெண் ஒருத்தியும்- அவளுக்கு நெருங்கின உறவில் அதே மருத்துவமனை வளாகத்தில் வசிக்கிறாள். இவர்களும் மனநிலை சரியில்லாதவர்களாகவே நடந்துகொள்ளுகிறார்கள். காப்பக மருத்துவமனையின் மனநோய் மருத்துவ நிபுணரும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான இளம் டாக்டர் ஓர் இளம் மனநிலை பிறழ்ந்த பெண்ணுக்கு தலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளுகையில் பிரச்சினை ஏற்படுகிறது. அதையடுத்து காப்பக மேலாளரான சீமாட்டியையும் அவள் உறவினளான இளம் பெண்ணையும் சந்தித்து பேசுகிறார். சில சிக்கல்கள் விலகலும், சேருவதுமாய் படம் முடிகிறது. சீமாட்டியாக பழம் பெரும் நடிகை காத்தரீன் ஹெப்பர்ன் (Katherine Hepburn) அவளது இளம் உறவினளாக எலிசபெத் டேலர், Elizabeth, Taylor) இளம் அறுவை சிகிச்சை நிபுணர் மனோதத்துவ நிபுணராக மாண்ட் காமரி க்ளிஃப்ட் ஆகிய மூவரும் தாம் ஏற்ற பாத்திரங்களை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். அலுக்க அலுக்க வசனம், நாடக சினிமாதான். ஜோசப் எல். மன்கீவிக்ஸின்(Joseph L. Mankiewicz) இயக்கம் சாதாரணம்.

தெற்கு அமெரிக்கப் பகுதியில் ஒரு மாபெரும் பணக்காரர், குடும்பத்தாரால் Big Daddy என்று செல்லமாக , மரியாதைக்கு பயத்தோடு, பெருமைக்காகவும் அழைக்கப்படுபவர். இவரது மக்களில் இவருக்கு செல்லமான மகன் பிரிக் (Brick) ஒரு கால் பந்தாட்டக்காரன். தனது தினசரி உடற்பயிற்சியின்போது தடைகளைத் தாண்டிக் குதிக்கையில் இடறி விழுந்து கால் முறிந்து கட்டுகளோடு ஊன்றுகோலுடன் வீட்டோடு முடங்கியவன் பிரிக். அவனது அழகிய, வாக்குவாதம் கொண்ட மனைவி பூனை என்று செல்லப் பெயரிடப்பட்டு சுருக்கமாக ‘‘மாக்கி’’ என்றழைக்கப்படும் (Maggie The Cat) மார்கரெட். ஒரு பிரம்மாண்ட மாளிகையில் இரண்டு மூன்று குடும்பங்களாயிருக்கும் பிக் டாடியின் பிள்ளைகள், பெண் குடும்பங்களுள், பிரிசீ- மாக்கி தம்பதிகளுக்கு குழந்தை கிடையாது. பிரிக் சிறிது சிறிதாக தன்னம்பிக்கை குறைந்தவனாகி தனது ஆண்மை நிலை மீதும் நம்பிக்கையிழந்தவனாகிறான்.

இதனால் அழகிய இளம் மனவைி மார்கரெட் பேரில் சந்தேகமும் வெறுப்பும் கோபமும் ஏற்பட்டு வளர்கிறது. “மாக்கியெனும் பூனை” யெனப்படும் மார்கரெட்டுக்கு குழந்தையில்லாத நிலை மனத்தில் குழந்தைகள் மேல் ஈர்ப்பு ஏற்படுவதற்கு பதிலாக பெரும் ஒவ்வாமையுணர்வும் வெறுப்பும் கோபமுமாய் ஏற்படுகிறது. பூனை மாக்கி ஒருநாள் பிரிக்கோடான வாக்குவாதத்தின்போது, “நான் உன்னோடு சேர்ந்து வாழவில்லை. நாம் இருவரும் ஒரே கூண்டில் ்இருக்கிறோம். அவ்வளவுதான்” என்கிறாள். எந்தவித அலங்காரமும் இல்லாத நேரான வசனங்களைக் கொண்ட “A CAT ON A HOT TIN ROOF”, நாடகத்திற்காக Bioscope Karan 17th Web Article Series by Vittal Rao. This Series About some modern plays that are cinematic சினிமாவான சில நவீன நாடகங்கள் – விட்டல்ராவ்
1955-ம் ஆண்டிற்கான புலிட்ஸர் பரிசு டென்னிசி வில்லியம்ஸுக்கு கிடைத்தது. ஆறு அகாடெமி விருதுகளுக்கு [சிறந்த படம் உள்ளிட்டது] 1958-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதின்போது பரிந்துரைக்கப்பட்ட படம். பெரிய வசூலை ஈட்டித் தந்த இப்படத்தில் பிரிக்காக பால் நியூமனும், பூனையாக எலிசபெத் டேலரும், பெரியவர் “பிக் டாடி”யாக BURL IVES-ம் மிகச் சிறப்பாக நடித்த இப்படத்தை அனுபவமிக்க ரிச்சர்டு புரூக் (RICHARD BROOK)பிரமாதமாக இயக்கினார்.

அந்த வீட்டின்-மாளிகையின் ஒரு பகுதி பிக் டாடியெனும் பிரிக்கின் தந்தையின் வாழ்நாள் சேகரிப்பான உலகின் பல்வேறு அரிய பொருள்கள் நிறைந்த காட்சிக் கூடமானது. இந்த சூழலில் பெரியவரின் பிறந்தநாள் வருகிறது. பிறந்த நாளை எல்லோரும் கோலாகலமாய்க் கொண்டாடுகிறார்கள். பெரியவர் தம் மனைவியோடு விமானத்தில் வந்திறங்கி கலந்து கொள்ளும்போது கால் அடிபட்டு மாடியில் கோலூன்றி அறைக்குள் இடைவிடாது மது வருந்தியபடியே இருக்கும் ஆவரது செல்ல மகன் விருந்தில் கலந்து கொள்ள கீழே இறங்கி வரவேயில்லை. பெரியவருக்கு கான்சர் நோய் இருப்பது யாவருமறிந்தது. மகன் வராததும், மகனுக்கும் மருமகளுக்கும் உறவு சரியில்லை என்பதும் அவரது உயர் ரத்த அழுத்தத்தை உயர்த்துகிறது. செல்வமும் வசதிகளும் படாடோபமும் நிறைந்த தன்னைவிட, ஒரு பிச்சைக்காரனின் சுதந்திரமும், சுகமும், சிக்கலில்லாத உறவு நிலையும் மேலானது என்று பெரியவர் உணர்கிறார். மகனுக்கும், தந்தைக்கும் காரசாரமான வாய்ச் சண்டை முற்றி கை கலப்பு ஏற்படுமளவுக்குப் போகிறது. அவருக்கு உயர் ரத்த அழுத்தத்திற்கான ஊசி மருந்தை மகனே செலுத்துகிறான். கோபத்தில் அவரது காட்சியறையிலுள்ள அரிய விலையுயர்ந்த பொருட்கள் சிலவற்றை பிரிக் அடித்து நொறுக்குகிறான். மார்கரெட்டையும் அடிக்கப் போகிறான். பாலியல் ரீதியாக தான் வீரியம் குறைந்தவன் என்ற உணர்வாலும் மன உளைச்சல் கொண்ட அவன் தன் மனைவி அன்போடு நெருங்குவதையும் வெறுத்தொதுக்குகிறான். சொத்தில் பெரும் பகுதியை அபகரிக்க இவனது அண்ணனும் அண்ணியும் திட்டமிடுகின்றனர். கான்சர் நோயில் அவதியுறும் பெரியவரின் முடிவை அவர்கள் உள்ளூர எதிர் நோக்கியுள்ள சமயம் ப்ரிக்கும் மார்கரெட்டும் பெரியவரிடம் அன்பு காட்டுகிறார்கள்.

இறுதியில் நொண்டி நொண்டி கொட்டும் மழையில் காரிலேறி ஓட முயலும் மகனைத் தடுத்து நிறுத்த தம் பெருத்த உடம்பைத் தூக்கிக் கொண்டு மழையில் ஓடிவரும் பிக் டாடியின் நடிப்பும் காட்சி விறுவிறுப்பும் படத்தை உச்சிக்கு இட்டுச் செல்லுகிறது. அபார வீச்சு கொண்ட டென்னிசி வில்லியம்சின் முகத்திலடிக்கும் வசனம் எல்லோரும் தணிவு பெற்று புறப்பட்டபடியிருக்க, மாடியிலிருந்து ப்ரிக் தன் மனைவியை, “மாக்கி… மாக்கி” என்று அழைக்கிறான். அதற்கெனவே காத்திருந்தவள் போல உடனே, “இதோ வருகிறேன்” என கூறிவிட்டு மாடியேறி அவனிடம் ஓடி வருகிறாள் மார்கரெட். அவன் அவளை அந்நியோன்யமாய் அணைத்துக் கொள்ளுகிறான். பால் நியூமன் (ப்ரிக்) எலிசபெத் டேலர் (மார்கரெட்-மாக்கி பூனை) பரல் ஐவ்ஸ் (பிக் டாடி-பெரியவர்) இம்மூவரின் அபாரமான நடிப்பை மறக்க முடியாது.

ஹாலிவுட் சினிமாவில் JOHN HUSTON எனும் பெயர் பிரபலமானது. இவர் இயக்கிய படங்களில் MOBI DICK, MALTESE FALCON, AFRICAN QUEEN, SINGER, NOT THE SONG, THE UNFORGIVEN, REFLECTION IN A GOLDEN EYE, NIGHT OF THE IGUANA என்பவை சிறப்பானவை. நைட் ஆஃப் த இகுவானா என்ற திரைப்படம் டென்னிசி வல்லியம்சின் நாடகத்தை திரைப்படமாக்கினார். டென்னிசி வில்லியம்சின் பிற நாடகங்களிலிருந்து IGUANA வேறுபட்டது. நான்கு சுவர்களுக்குள்ளெ அடைபடாமல், பல திசைகளில் கதை திரிகிறது. வசனமும் குறைவு. நாடக வடிவை ஜான் ஷுஸ்டன் திரைப்பட வடிவாக மாற்றிக் கொண்டார். அதற்கு தக்கபடி நாடக எழுத்தாளர் டென்னிசி வில்லியம்சும் உடனிருந்து மாற்றியெழுதிக் கொடுத்தார்.

அமெரிக்க தேவாலயம் ஒன்றில் கிறிஸ்தவ மத புரோகிதராக இருக்கும் ரெவரண்ட் லாரன்ஸ் ஷான்னன் (SHANNAN) பிரார்த்தனையின்போது ஒருநாள் ஏடாகூடமாகப் பேசிக்கொண்டே எல்லோரையும் திகிலுறச் செய்து வெளியேற்றுவதோடு சர்ச்சிலிருந்து தானும் வெளியேறுகிறான். அவன் மீது பாலியல் குற்றமும் இருக்கிறது. ஷான்னன் சுற்றுலா பயணங்களை ஏற்பாடு செய்து பயணிகளை சுற்றுலா பஸ்ஸில் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து காண்பிக்கும் வேலையில் அமர்கிறான். பதினோறு ஆசிரியைகள் கொண்ட குழுவொன்றை பஸ் ஏற்பாடு செய்து சுற்றுலாவுக்கு அழைத்துப் போகிறான். பல்வேறு வயதிலுள்ள அந்தப் பெண்களுக்குள் ஒருத்தி தலைவி. இளம் ஆசிரியை ஒருத்தி ஷான்னனுக்கு வலை வீசுகிறாள். ஒரு விடுதியில் தங்கும்போது கிட்டதட்ட அவர்களிருவரும் உறவு கொள்ள இருக்கையில் ஆசிரியைகளின் தலைவி வந்து விடவும் அது நிகழ்வதில்லை. சுற்றுலா மெக்ஸிகோ பகுதியில் “இகுவானா” [IGUANA] எனும் தலையிலிருந்து வால்வரை முட்களைக் கொண்ட, பார்க்க திகிலூட்டும் ஒரு வகை உடும்புகள் கடற்கரைப் பகுதியில் திரியும். பஸ் மெக்சிகோவுக்குள் நுழையும் வழியெங்கும், நம்மூரில் காய்கறி, பழங்களை காட்டி விற்பதுபோல இருவானா உடும்பைக் கையில் பிடித்துக் கொண்டு விற்பார்கள். ஒரு பெண் பயணி அது என்ன, அதை வாங்கி என்ன செய்யலாமென கேட்டபோது ஷான்னன் கூறுகிறான்.

அது உடும்பு. சாப்பிட கோழிக் கறிபோல இருக்கும். உண்மையில், இருவானா உடும்பினம் செக்ஸ் சமாச்சாரத்தில் விசேசமானது என்று நம்பப்படுவதால் அதை பயணிகள் விரும்பி வாங்குவார்கள். ஷான்னனுக்கு தெரிந்த வசதிகள் குறைந்த தங்கு விடுதிக்கு அழைத்துப் போகிறான். விடுதி உணவகத்தின் உரிமையாளர் அழகிய நடுத்தர வயது விதவையொருத்தி, அவள் கடலில் குளிக்க, உடலுறவு கொள்ள இரு இளம் மெக்சிகன் வாலிபர்களை வைத்திருப்பவள். சமயத்தில் ஆபத்தானவர்கள். விடுதிக்கு சுற்றுலா பயணிகள் வந்து தங்குகிறார்கள் என்பதை அறிந்தால் இளம் பெண் ஓவியர் ஒருத்தி தன் 97-வது வயது தாத்தாவோடு வந்து இலவசமாய் விடுதியில் தங்குவாள். 55 ஆண்டுகளாக முயன்று வந்த கவிதையை இச்சமயம் வெற்றிகரமாக முடித்த கையோடு உயிரையும் விடுகிறார் கவிஞர் தாத்தா. பேத்தியும் ஓவியருமான இளம் பெண் பயணிகளை வரைந்தும், தீட்டியும் காசு சம்பாதிப்பவள். அதையே இப்போதும் செய்கிறாள். ஷான்னனுக்கு குறி வைத்த இளம் ஆசிரியை கடைசியில் பஸ் டிரைவரையே பிடித்துக் கொள்ளுகிறார். அன்றிரவு சமைக்கவென்று இருவானா உடும்பைப் பிடித்து வந்து கட்டிப் போடுகிறார்கள். ஷான்னனும் பாலுணர்வு ரீதியாக அலைபாய்கிறான். ஆசிரியைகள் அவனை அங்கேயே விட்டுவிட்டு பஸ்ஸிலேறி கிளம்பிப் போகின்றனர். ஷான்னன் கடலில் நீந்தப் போகிறான். விடுதிக்காரி அவனைப் பிடித்து வந்து கட்டிப் போடுகிறாள். தன் கட்டுகளை அவிழ்த்து விடுவிக்குமாறு கெஞ்சுகிறான். திமிறி பார்க்கிறான். அதே சமயம், வெராண்டாவில் கட்டப்பட்ட உடும்பும் கட்டவிழ்த்துக் கொண்டு ஓடப் பார்க்கிறது. ஓவியர் ஷான்னனின் கட்டுகளை அவிழ்த்து விடுவிக்கிறாள். விடுதிக்காரி தன் இரு மெய்க்காப்பாளர்களோடு கடலில் நின்று தழுவிக் கொண்டிருந்தவள் ஷான்னனை நினைத்து அவர்களை உதறிவிட்டு ஓடி வருகிறாள். அங்கே ஷான்னன் கட்டப்பட்ட இருவானா உடும்பின் கயிற்றை வெட்டிவிட்டு புதருக்கு அதை விரட்டி விடுகிறான். இகுவானா என்பதை ஒரு பாத்திரத்தின் நிலையை குறியீடாகக் காட்டியிருக்கிறார் வில்லியம்ஸ் விடுதிக் காரியும் ஷான்னனும் இணைகிறார்கள்.
ஜான் ஹீஸ்டனின் சிறந்த இயக்கத்தில், ஷான்னனாக ரிச்சர்டு பர்டனும், விடுதிக்காரியாக ஆவாகார்டனரும், 97 வயது கவியாக 75 வயது நடிகர் ஒருவர் ஆச்சரியப்படும்படி நடித்துள்ளார்கள். இகுவானா 1964-ஆம் ஆண்டு வெளி வந்தபடம்.

நவீன ஆங்கில நாடகங்கள் திரைப்படமாக்கப்பட்ட வகையில் அறிஞர் ஜார்ஜ் பெர்னார்டு ஷாவின் மூன்று நாடகங்கள் இடம் பெறுகின்றன. கிரேக்க பாரம்பரியக் கதையான் ஆன்ரோக்ளீசும் சிங்கமும், எனும் ஷாவின் நாடகம் (Androcles and the lion) செஸ்டர் எர்ஸ்கின் என்பவரால் இயக்கப்பட்டு 1952ல் வெளிவந்த படம். ஆன்றோகிளிஸ் கிரேக்க வீரன், சிங்க ஒன்றின் காலில் தைத்த பெரிய முள்ளைப் பிடுங்கி சிங்கத்தின் துன்பத்தைப் போக்குவதின் மூலம் அதன் இதயத்திலும் நினைவிலும் நிலையாக நிற்கிறான். ஒரு சமயம் கொடுங்கோலனின் ஆணைப்படி சிங்கத்தோடு பொருதுகையில் அச்சிங்கம் தன் நண்பனை அடையாளம் கண்டு கொண்டு உதவுகிறதாய்க் கதை. ஆன்றோ கிளீசாக விகீடர் மச்சூர் தன் உடல் வலிமையுடன் ஏற்கெனவே சில படங்களில் புலி, சிங்கங்களோடு சண்டையிட்ட அனுபவத்தோடு நடிக்கிறார். அவரது காதலியாக ஜூன் சிம்மன்ஸ் வந்து போகிறார்.

Bioscope Karan 17th Web Article Series by Vittal Rao. This Series About some modern plays that are cinematic சினிமாவான சில நவீன நாடகங்கள் – விட்டல்ராவ்

1945ல் ஷாவின் புகழ் பெற்ற நாடகம் சீசரும் கிளியோபட்ராவும் (Caesar and Cleopatra) ஒரு அங்கத நாடகப் படமாய் வெளிவந்தது. இது ஒரு நகைச் சுவை கொண்ட அங்கத நாடகம். கிளியோ பட்ரவாக விவியன்லீயும், ஆண்டனியாக ஸ்டூவர்ட் கிரேஞ்சரும் (Stewart Granger) Claude Rains என்பவர் ஜீலியஸ் சீசராகவும் நடிக்கின்றனர். புகழ் பெற்ற இயக்குனரான காப்ரியல் பாஸ்கல் (Gabriel Paskel) இயக்கிய நல்ல பொழுது போக்குப் படம்.
பெர்னார்டு ஷாவின் நாடகங்கள் திரைப்படமானதில் மிகவும் வெற்றிகரமும், வசூல்மிக்கதும் நீண்ட நாட்கள் தியேட்டரில் ஓடியதுமானது மைஃபேர் லேடி எனும் பெயரில் சினிமாவான பிக்மேலியன் (Pygmalion) நாடகம். பிக்மேலியன் என்று தம் நாடகத்துக்கு ஒரு பண்டைய கிரேக்கக் கதையைக் கொண்டு பெயரிட்டார் பெர்னார்டு ஷா. இந்நாடகம் இங்கிலாந்தில் மாட்சிமை மிக்க His Majestys Theatre, எனும் லண்டன் நகரிலுள்ள புகழ் பெற்ற நாடக அரங்கில் 1914-ல் முதன் முதலில் அரங்கேறி நடித்துக் காட்டப்பட்டது.

பிக்மேலியன், கிரேக்க நாட்டின் சைப்ரஸ் பகுதியை ஆண்டு வந்தவன். அரசன் என்பதோடு சிறந்த சிற்பியுமாவான். அவன் சல வைக்கல், மரம் மற்றும் தந்தத்தில் சிற்பம் வடிப்பதில் சிறந்தவன். ஆனால் பெண்களை வெறுத்து ஒதுக்கியவன். திருமணமே வேண்டாமென்றிருந்தவன். கிரேக்கக் கடவுள்கள் சதா பூ உலக நிகழ்வுகளையே கண்காணித்து அவர்களுக்கு புதிராகவும் பிரச்சினையாகவுமிருக்கும் மானுட செயல்களை திருத்துவதற்கு பண்டைய கிரேக்க புராணத்திலுள்ள அந்தந்த கடவுளர்களை அணுகி தீர்வுகாண்பார்கள். பிக்மேலியன் விஷயம் அவர்களுக்கு தீர்க்கபட வேண்டிய பிரச்சினையாகிறது. காதல், காமம், ஆண், பெண் உறவாடலுக்கான கடவுளான வீனஸ் தேவதையிடம், என்ன பிக்மேலியன் விசயம் கவனம் பெறவில்லையா? என கேட்க, கவனிக்கப்படும் என்கிறது காதல் தேவதை வீனஸ்.

நான் செய்யும் சிற்பப் பெண்களுக்கு நிகரான அழகியாக உயிரோடிருக்கும் பெண்களில் யாருமில்லை, எனவே திருமணம் வேண்டாம் என்று கூறிய பிக்மேலியன் ஓர் அதி அழகியை தந்தத்தில் சிற்பமாய் வடித்து அதற்கு, கலாடியா GALATEA என்று பெயரிட்டு அணைத்து மகிழ்கிறான். வீனஸ் பெரு விழா சைப்ரஸில் கொண்டாடப்படுகையில் கலாடியாவுக்கு வீனஸ் உயிரூட்டுகிறாள். பிக்மேலியன் தான் காதலிக்கும் தான் வடித்த சிற்ப அழகியுடன் இணைகிறான்.
இதனடிப்படையில் பிக்மேலியன் நாடகத்தை படைத்த ஷா, நவீன பிக்மேலியனை பெண்களை வெறுத்த, ஆங்கில மொழியின் மேம்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் பாடுபடும் மொழியியல் வல்லுனராக பேராசிரியர் ஹிக்கின்ஸ் எனும் பாத்திரமாக படைத்திருக்கிறார். ஹிக்கின்ஸ் பொது மக்கள் கூட்டமாய்க் கூடு மிடங்களில் ஓரமாய் அமர்ந்து, மக்கள் ஆங்கிலத்தைப் பேசுகையில் எவ்வளவுக்கு அம்மொழியைக் கொலை செய்கிறார்கள் என்பதை கவனித்து அவர்களின் உச்சரிப்பை சுருக்கெழுத்தில் எழுதிக் கொண்டுபோய் திருத்த பாடுபடுபவர், ஒரு நாள் ஏழைப் பூக்கார இளம் பெண் எலிஸா டூ லிட்டில் என்பவளின் நடைப்பாதை – கேசி ஆங்கில பேச்சை பதிவு செய்வதிலிருந்து ஒரு சவாலை மேற்கொள்ளுகிறார் புரஃபொஸர். அவளை வீட்டுக்கு அழைத்து வந்து முற்றிலும் புதுப்பித்து படாதபாடு பட்டு ஆங்கில மொழியைக் கற்பித்து அதில் வல்லவளாக்குகிறார்.

அவளுடைய தந்தையின் தொந்தரவை, தம் தாயின் தலையீடையெல்லாம் ஒதுக்கி லிஸாவை ஒரு மேட்டுக்குடிப் பெண்ணாக்கி பிரபுக்களும் இளவரசர்களும் கூடி …. நடனமாடும் நிகழ்வில் கலந்து கொள்ள வைத்து வேடிக்கைப் பார்க்கிறார். பணக்கார பிரபு ஒருவரின் மகன் ஃரெட்டி (Freddy) என்பவன் பூக்காரி லிஸாவை காதலிக்கிறான். அவனையே அவள்மணக்கப் போவதாகக் கூறுகிறாள். பேராசிரியர் ஹிக்கின்ஸ் தான் வார்த்தெடுத்த புதிய வார்ப்பான லிஸா தன்னை விட்டு பிரிவதில் துயரமுறுகிறார். இந்நாடகம் பிரம்மாண்டமான தயாரிப்பாக 1965ல் MY FAIR LADY Bioscope Karan 17th Web Article Series by Vittal Rao. This Series About some modern plays that are cinematic சினிமாவான சில நவீன நாடகங்கள் – விட்டல்ராவ் என்ற பெயரில் ஓர் உயரிய இசை நாடகமாய் திரைப்படமாகியது. ஜார்ஜ் கூக்கரின் அற்புத இயக்கத்தில் 70oMM படமாய் சென்னை சஃபையர் திரையரங்கில் வெளியாகி தொடர்ந்து முப்பது வாரங்கள் ஓடிய படம். பேராசிரியர் ஹிக்கின்ஸாக நடித்த ரெக்ஸ் ஹாரிசன் (Rex Harrison) இதே பாத்திரத்தை இருபதாண்டுகளாய் லண்டன் நாடக மேடைகளில் நடித்தவர். பூக்காரியாக நடித்த ஆட்ரி ஹெப்பர்ன் (AUDRY HEPBORN) மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். இந்தப் படத்தை தம் இறுதி நாட்களில் அளித்த பேட்டி ஒன்றில் மிரினான் சென் மிகவும் உயர்வாக பாராட்டியிருக்கிறார்.

(தொடரும்)

முந்தைய தொடர்களை படிக்க கிளிக் செய்க: 

புதிய தொடர்: பயாஸ்கோப்காரன் (முன்னுரை) – விட்டல்ராவ்

தொடர் 2: பயாஸ்கோப்காரன் (கபிலர் மலையும் அரிச்சந்திரனும்) – விட்டல்ராவ்

தொடர் 3: பயாஸ்கோப்காரன் (போரும் சினிமாவும்)– விட்டல்ராவ்

தொடர் 4: பயாஸ்கோப்காரன் (மினி பயாஸ் கோப்) – விட்டல்ராவ்

தொடர் 5: பயாஸ்கோப்காரன் (சில தெலுங்குப் படங்கள்) – விட்டல்ராவ்

தொடர் 6: பயாஸ்கோப்காரன் (ரிபப்ளிக் சீரியல் படங்களும், தமிழ் சண்டைப் படங்களும்) – விட்டல்ராவ்

தொடர் 7: பயாஸ்கோப்காரன் (கூடார வகை தியேட்டர்கள்) – விட்டல்ராவ்

தொடர் 8: பயாஸ்கோப்காரன் (கூடார தியேட்டர்கள்) – விட்டல்ராவ்

தொடர் 9: பயாஸ்கோப்காரன் (கந்தர் ஃபிலிம்சும், மாடர்ன் தியேட்டர்ஸும்) – விட்டல்ராவ்

தொடர் 10: பயாஸ்கோப்காரன் (சினிமா சுவரொட்டித் திருட்டு) – விட்டல்ராவ்

தொடர் 11: பயாஸ்கோப்காரன் (ஹாலிவுட் ஒரு மகா களவுலகு) – விட்டல்ராவ்

தொடர் 12: பயாஸ்கோப்காரன் (சினிமா பார்க்க சீசன் டிக்கட்) – விட்டல்ராவ்

தொடர் 13: பயாஸ்கோப்காரன் (ஆங்கிலப் படங்களுக்கு தமிழ் தலைப்புகள்) – விட்டல்ராவ்

தொடர் 14: பயாஸ்கோப்காரன் (தழுவல், காப்பி, மொழிமாற்றத் திரைப்படங்கள்)– விட்டல்ராவ்

தொடர் 15: பயாஸ்கோப்காரன் (ஜான் ஃபோர்டு (John Ford) – விட்டல்ராவ்

தொடர் 16: பயாஸ்கோப்காரன்(கருப்பும் வெளுப்பும்) – விட்டல்ராவ்

Bioscope Karan 16th Web Article Series by Vittal Rao. This Series About Black And White Classic Movies. Sidney Poitier, Dubbed Movies. கருப்பும் வெளுப்பும் – விட்டல்ராவ்

தொடர் 16: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



கருப்பும் வெளுப்பும்

டாம் மாமாவின் குடில் Uncle Toms Cabine  என்று ஒரு திரைப்படம் சேலம் நியூ சினிமாவில் காலைக் காட்சியாகப் பார்த்தேன். பிறகு சேலத்திலும் சென்னையிலும் பார்த்த பல கருப்பு- வெளுப்பு நிற பேத உணர்வுகளை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களை முறையாக அணுகவும் யோசிக்கவும் முடிந்தது.  அதற்கு முன் அங்கிள் டாம்ஸ் காபின் நூலைப் படித்திருந்ததால் தான் படத்தையும் பார்க்கத் தூண்டியது. உயர்நிலை பள்ளி மாணவர்களின் சராசரி ஆங்கில அறிவுக்குத் தக்கவாறு அவர்கள் ஓரளவுக்குப் புரிந்து கொள்ளும் வகையில் இங்கிலாந்தில் பதிப்பிக்கப்பட்டு இந்தியாவில் கிடைத்து வந்த புகழ் பெற்ற கதை நூல்களில் ஒன்று  Uncle Toms Cabine  ஹாரியட் பீச்சர் ஸ்டோவ் என்பவர் எழுதிய நூல்.

அமெரிக்காவில் குடியேற்ற நாடுகள் காலூன்றி தேர்தல் அரசாங்கம் நிர்வாகம் என ஏற்பட்டவுடன் வீடுகளில் அடிமை வேலை செய்வதற்கு என ஆப்ரிக்காவிலிருந்து கருப்பின மக்களை கூட்டம் கூட்டமாக கப்பலில் கொண்டு வந்து ஏலம் போட்டு  விலைக்கு வாங்கி அவர்களின் உழைப்பை உறிஞ்சிக் கொண்டு  கேவலமான நிலையில்  வைத்திருந்த வெள்ளை முதலாளிகளின் அட்டூழியங்களையும், அதில் டாம் என்னும் கருப்பின முதியவரின் பாகுபாடற்ற அன்பு காட்டல், தியாகம் என்பதையும், சோக முடிவோடு கூறும் நூல்.  அப்பா, அதைப் படித்து ஆழ்ந்து போய் எனக்கு விளக்கிச் சொன்னார். அதைத் திரைப்படமாய்ப் பார்க்கும் நேரம் அப்பா உயிரோடில்லை. படத்தில் அங்கிள் டாம் பாத்திரத்தை ஏற்று மனம் நெகிழ நடித்தவர் O.W.Ficser  என்பவர். கொடுமையான வெள்ளையராக நடித்த அனுபவம் மிக்க நடிகர்  HERBERT LOW சிறப்புற செய்திருக்கிறார், அமெரிக்க உள்நாட்டுப் போர் மூண்டதற்கும் இந்நூலும் ஒரு முக்கிய காரணமென்பர்.

Uncle Tom's Cabin (1965 film) - Bioscope Karan 16th Web Article Series by Vittal Rao. This Series About Black And White Classic Movies. Sidney Poitier, Dubbed Movies. கருப்பும் வெளுப்பும் – விட்டல்ராவ்

அமெரிக்காவில் அடிமை நிலை, கருப்பு வெளுப்பு நிற வேற்றுமை என்பவற்றை விமர்சித்து நூல்களும் திரைப்படங்களும் வந்த வண்ணமேயிருந்த சமயம்- 60களின் தொடக்கத்தில் சேலம் பாலஸ் திரையரங்கில் ஒரு கருப்பு வெள்ளை ஆங்கிலப் படம் வெளியானது. 1965-ல் கருப்பர் – வெள்ளையர் நிற உணர்வு பற்றிய இக்கதைப் படத்தை ஸ்டான்லி க்ராமர்  STANLEY KRAMER இயக்கியிருந்தார். படம்,  THE DEFIANT ONES. நிறபேத உணர்வின் சகிப்புத் தன்மையை விருவிருப்பான காட்சி நகர்வுடன் எடுத்துச் செல்லும் அரிய திரைப்படம். ஜோக்கர் ஜாக்சன் எனும் வெள்ளைக் குற்றவாளியும் ஒரே சங்கிலியால் பிணைத்த விலங்குகளால் பூட்டப்பட்டு வேறு சில குற்றவாளிகளோடு சிறைக்கு வண்டியில் அழைத்துப் போகையில், நடுவழியில் ஏற்படும் விபத்தில் இறந்தவர் போக எஞ்சியவர்களில் ஜாக்சனும் நோவாவும் தப்பித்து ஓடுகின்றனர். போலீசு நாய்களோடு துரத்தி வருகிறது. நிறத்தால் ஒருவரையொருவர் வெறுத்து வெவ்வேறாக இயங்கினாலும் விலங்கால் மட்டுமே ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள். தப்பித்து ஓடி ஒரு கட்டிடத்தில் மாட்டிக் கொண்டு ஊராரால் தாக்கிச் சாகடிக்கப்பட இருக்கையில் அங்கிருக்கும் பெரிய மனிதன் ஒருவனால் காப்பாற்றப்படுகிறார்கள். காரணம், அவரும் இவர்களைப் போலவே தப்பியோடி வந்த மாஜி குத்தப்பட்ட கைதியெண்ணைக் காட்டி தெரிவிக்கிறார். பிறகு இவர்கள் ஒரு  கிராமத்தையடைந்து, சிறுவன் ஒருவனோடு தனித்திருக்கும் விதவையின் வீட்டில் தஞ்சம் புகுகின்றனர்.

உணவு, உறைவிடம் கிடைக்கிறது. வெள்ளை விதவைக்கும் வெள்ளைக் கைதிக்கும் உறவு ஏற்படுகிறது. வெள்ளைக்காரி கருப்புக் கைதி கல்லணை ஒழித்து விடத்தீர்மானிக்கிறாள். கைதிகள் தம் விலங்கை உடைத்து ஒருவருக்கொருவர் வெவ்வேறாகின்றனர். இது வரை அவர்கள் விலங்கால் ஒன்றிணைந்து மனத்தால் நிற உணர்வு மேலிட்டு வெவ்வேறாக இருந்து வந்த நிலையில் – சின்ன நிகழ்வுக்கும் நிற ரீதியாக சிலித்தெழுந்து அடித்துக் கொள்ளும் அவர்கள் ஒரு சின்ன மாற்றம், இப்போது விலங்கிலிருந்து அவர்கள் வெவ்வேறு என்றாகிவிட்டார்கள். நோவா கல்லன் அவர்களின் உணர்வை உறவைப் புரிந்து கொண்டவனாய் தான் எங்காவது போய் விடுவதாய்க் கூறி விடை பெறுகிறான். அதே சமயம் காவலர்களும் நாய்களோடு அந்த இடத்தை நெருங்குகையில் ஜாக்சன் தப்பியோடுகிறான். கல்லனின் அன்பும் நட்பும் அவனுக்குப் புரிகிறது கல்லனின் பெயரைச் சொல்லி உரக்க அழைக்கிறான். காட்டில் ஒளிந்திருக்கும்  அவனைக் கண்டதும் கட்டியணைத்து மன்னிப்பு கோரி, இருவரும் ஒன்றாய் அப்பக்கமாய் ஓடும் சரக்கு ரயில் ஒன்றில் ஏறி அடுத்த மாநிலத்துக்குத் தப்பிக்க முயல்கின்றனர்.

நாய்களின் குரைப்பு பாய்ச்சலோடு போலீசும் நெருங்குகிறது. கல்லான் முதலில் ஏறிக் கொண்ட கடைசி பெட்டியிலிருந்து ஓடி வரும் ஜாக்சனுக்காக கையை நீட்டின்படியே இருக்கற வண்டி வேகமெடுக்கிறது. அதனோடு ஓடி கல்லனின் கையைப் பிடிக்க முடியாது தடுமாறுகிறான் ஜாக்சன். வண்டி மேலும் வேகமெடுக்கிறது. கல்லனும் கீழே குதித்து ஜாக்சனோடு சேர்ந்து கொண்டு தோல்வி- கஸ்டங்களின் போதெல்லாம் தான் வழக்கமாய்ப் பாடும் நீக்ரோ பாட்டைப் பாடுகிறான். முன்பெல்லாம் அப்பாட்டை வெறுத்து சண்டையிட்டு வந்த ஜாக்சன் இப்போது மனதார ரசிக்கிறான். நாய்களோடு போலீசும் இவர்களை அடைந்து மறுபடியும் கைது செய்கிறது. ஜாக்சனாக டோனி கர்டிஸ், கருப்பு கல்லனாக கருப்பு நடிகர் சிட்னி பாய்சியர் மிக அற்புதமாக நடித்திருக்கிறார்கள். ஸ்டான்லி க்ராமரின் அரிய இயக்கம் படம் முழுக்கத் தெரிகிறது. படத்தின் திரைக்கதையை எழுதியிருப்பவர் நெட்ரிக் யங் NEDRICK YOUNG.  ஒளிப்பதிவு. ஸாம் லியவிட் இப்படத்தின் திரைக்கதை வசன கர்த்தாவும், காமிராமேன்  ஒளிப்பதுவிக்காகவும் ஆஸ்கார் விருதுகள் பெற்றனர். பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிப்புக்கான வெள்ளிக் கரடி விருது சிட்னி பாய்ஸருக்குக் கிடைத்தது.

சிட்னி பாய்ஷர் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்திலுள்ள மியாமியில் 1927ல் பிறந்தவர். மன அழுத்தம் காரணமாய் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போனவர். இவரது பெற்றோர்களுக்குச் சொந்தமான தக்காளிப் பண்ணையிலும் பிறகு மியாமியிலுள்ள மருந்துகடையிலும் பணிபுரிந்தார். இவர் மருந்துக் கடையிலிருக்கையில்தான் இவரது மேற்கு இந்திய ஆங்கில உச்சரிப்பாலும், கரிய நிறத்தாலும் அவரைச் சுற்றிய வெள்ளையர் உலகம் கீழாகவும் வித்தியாசமாகவும் பார்ப்பதை உணர்ந்தார். பாய்ஷர்  நியூயார்க் சென்று ஓட்டல்களில் பிறர் சாப்பிட்ட எச்சிற் தட்டுகள், குவளைகளைக்கழுவித் தன் வயிற்றைக் கழுவினார். அப்படியே அருகிலிருந்த நீக்ரோ தியேட்டரில் நாடகங்களில் நடித்தார். பிறகு திரைப்படங்களில் நடிக்கலானார். நாற்பதுக்கும் அதிகமான படங்களில் நடித்தார்.

Blackboard Jungle Movie - Bioscope Karan 16th Web Article Series by Vittal Rao. This Series About Black And White Classic Movies. Sidney Poitier, Dubbed Movies. கருப்பும் வெளுப்பும் – விட்டல்ராவ்

1955-ல் ரிச்சர்டு புரூக்  இயக்கிய Blackboard Jungle என்ற படத்தில்  அடங்காத கருப்பின மாணவர்களைக் கொண்ட ஒரு வகுப்புக்கு வெள்ளைக்கார ஆசிரியராக GLEN FORD நடிப்பார். படாதபாடுபடுவார். முக்கியமாக உயரமான நீக்ரோ மாணவன் ஒருவன் இவரை ஆட்டிவைப்பான். அந்த மாணவனாக நடித்தவர் சிட்னி பாய்ஸர். இந்தக் கதையை உள்ட்டா செய்தாற்போல 1967ல் கருப்பின மேல் வகுப்பு ஆசிரியராக ரவுடித்தனமும் முரட்டு குணமும் பல்வேறு தீய பழக்கங்களும் நிறைந்த வெள்ளைக்கார மாணவர்களின் வகுப்பாசிரியராக சிட்னிபாய்ஷர் “TO SIR, WITH LOVE”, என்ற அற்புதமான படத்தில் நடித்தார்.

சிட்னி பாய்ஷர் ஹாலிவுட் வட்டாரத்தின் மிகவும் மரியாதைக்குரிய ஆஃப்ரிக்க – அமெரிக்க நடிகராக விளங்கி வருபவர். சர்வதேச உயர்ந்த விருதை 1958 வெனிஸ் திரைப்பட விழாவில் “SOMETHING OF VALUE”, என்ற படத்தில் நடித்தமைக்காகப் பெற்ற முதல் கருப்பு நடிகர் எனும் பெருமைக்குரியவர் சிட்னி பாய்ஷர். டெஃபியண்ட் ஒன்ஸ் படத்துக்கு அவரது நடிப்புக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் கருப்பு நடிகரும் பாய்ஷரே ஆவார். 1963-ம் ஆண்டின் சிறந்த படமான, “THE LILLES OF THE FIELD”ல் நடித்த சிட்னி பாய்ஷரே சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்ற முதல் கருப்பு நடிகர். தென்னாப்பிரிக்க விடுதலை வீரர் நெல்சன் மண்டேலாவையும், கடைசி வெள்ளை அதிபர் டி கிளார்க் வாழ்க்கையையும் வைத்து தயாரித்து ஒளிபரப்பான “MANDELA AND DE KLERK” தொடரில் பாய்ஷர் மண்டேலாவாகவும், மைகேல் கேய்ன் டி கிளார்க்காகவும் செய்தனர்.

Lilies of the Field - Bioscope Karan 16th Web Article Series by Vittal Rao. This Series About Black And White Classic Movies. Sidney Poitier, Dubbed Movies. கருப்பும் வெளுப்பும் – விட்டல்ராவ்

சென்னை மினர்வா திரையரங்கில் சிட்னி பாய்ஷர் ஆனி பேங்கிராஃப்டோடு நடித்த “தி ஸ்லெண்டர் த்ரெட்” [THE SLENDER THREAD]  எனும் படம் விசேஷமானது. மருத்துவக் கல்லூரி கருப்பின மாணவன் ஒருவனுக்கு பெண்ணொருத்தியிடமிருந்து தொலைப்பேசியழைப்பு வருகிறது. யாரென்றோ, இன்ன தொலைப்பேசி எண்ணிலிருந்து பேசுவதாகவென்றோ, இன்ன இடமென்றோ தெரிவிக்காதவளாக அந்தப் பெண் தன்னைக் குறித்துப் பேசுகிறாள்:

‘நண்பனே, நான் இப்போது இறந்து கொண்டிருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாய் இறந்து கொண்டிருக்கிறேன்.”

கருப்பின இளைஞன் பொறுமையாக அவள் பேசுவதைக் கவனிக்கிறான். அவள் தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பவள். தன் தற்கொலைக்குப்பின் புலமாயிருக்கும் அபரிதமான மனவழுத்தத்தையும் அதற்கான குடும்பச் சூழலையும் கூறத்தொடங்குகிறாள். அவளைப் பேசவிட்டக் கொண்டே இன்னொரு தொலைப்பேசி மூலம் இளைஞன் போலீசுக்கு தகவல் தந்து விட்டு தொலைப்பேசி எக்ஸ்சேஞ்சுக்கும் சொல்லி தன் உரையாடலை கவனித்து தன்னுடன் உரையாடிக்கொண்டிருக்கும் தொலைபேசியின் மறுமுனை எண்ணையும் அது இருக்கும் முகவரியையும் தேடிப் பிடித்துத் தரும்படி சொல்லுகிறான். படம் இந்த செயல்பாடுகளைக் கொண்டு மாறி மாறி காட்சிப்படுத்தப்படுகிறது.

அவளை எப்படியும் காப்பாற்றி விடுவதில் கருப்பு இளைஞனுக்கு விடாது முயற்சி மேலிட்ட துடிப்பு. படத்தில் அன்றைய தொலைத்தொடர்பு முறை – டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சின் சுவிட்சுகள் இயங்கும் முறையெல்லாம் சுவாரசியமாயும் விருவிருப்போடும் மிக நுணுக்கமாக படமாக்கப்பட்டுள்ளன. கடைசியில் டெலிபோன் எக்ஸ்சேஞ்சு ஊழியர்களின் முயற்சியில் செத்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண் பேசும் தொலைப்பேசி எண், விலாசம் என்பவை கண்டுபிடிக்கப்படும் கடைசி நேரம், அவள் மயங்கி விழுந்து விடுகிறாள். சமயத்தில் அவர்களை அங்கு சென்று அவளை மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றியதோடு கருப்பின இளைஞனின் மனிதாபமானமும் போற்றப்படுகிறது. தன் அவசர முடிவுக்கு வருந்தும் அப்பெண் இளைஞனுக்கு நன்றி கூறுகிறாள். இளைஞனாக சிட்னி பாய்ஷரும், அந்தப் பெண்ணாக ஆனி பாங்கிராஃப்டும் [ANNEY NAMNKROFT] சிறப்பாக நடித்த இப்படத்தை SIDNEY POLLOCK சிறப்பாக  இயக்கியிருக்கிறார். இப்படம் தமிழின் ஒரு பிரபலமான தேசிய விருது பெற்ற எல்லாரும் கொண்டாடும் தமிழ் இயக்குனர் ஒருவரால் கச்சிதமாய் காப்பியடிக்கப்பட்டுள்ளது. [தாமரை நெஞ்சமா?]

1965-ல் கை கிரீன் [GUEY GREENE] என்பவர் பிரமாதமாக இயக்கிய படம் A PATCH OF BLUE, முதலில் ஆனந்த் திரையரங்கில் கருப்பு வெள்ளையில் 1965ல் திரையிடப்பட்டு பின்னர் தொலைக்காட்சியில் 90-களில் வண்ணப்படமாக ஒளிபரப்பானது. கருப்பு வெள்ளைப் பதிப்பில் இருந்த அழுத்தமும் ஆழமும் பதிப்போவியத் தன்மையும் [GRAPHIC EFFECT] வண்ணப் பதிப்பில் தெரியவில்லை.

அந்த குருட்டு ஏழை வெள்ளைக்கார இளம்பெண் குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பு போன்ற சேரியிலிருந்து பரந்த பூங்கா ஒன்றுக்கு ஒருவர் துணையோடு தினமும் காலையில் வந்து மரத்தடியில் அமர்ந்து மணிகளைக் கோர்த்த மாலையாக்குவாள். மாலை நேரம் அவளைக் கூட்டி வந்தவர் வந்து அழைத்துப் போவார். கோர்த்த மாலைகளை கடையொன்றில் விற்றுவிட்டு கிடைக்கும் பணத்தில் மணிகள் வாங்கிக்கொண்டு மீதிக் காசைதான் தங்கியிருக்கும் உறவுக்காரியிடம் தருவாள். சிற்றன்னை உறவில் இருக்கும் அந்தம்மாள் விபச்சாரத் தொழில் செய்து வருபவள். குருட்டுப் பெண்ணையும் அத்தொழிலில் ஈடுபட முயற்சித்து வருபவள்.

Bioscope Karan 16th Web Article Series by Vittal Rao. This Series About Black And White Classic Movies. Sidney Poitier, Dubbed Movies. கருப்பும் வெளுப்பும் – விட்டல்ராவ் |A Patch of Blue (1965)

ஒருநாள் மரத்தடியில் மணி கோர்க்கையில் பூச்சியொன்று அப்பெண்ணின் கௌணுக்குள் புகுந்துவிட, அவள் அலறிக் குதிக்கவும் மணிகள் யாவும் சிதறிவிட, உதவிக்கு கூவுகிறாள்.

என்னாயிற்று? நான் ஏதாவது உதவவா? என்ற அமைதியான அடக்கமும் அன்பும் நிறைந்த ஆண் குரல் மிக அருகிலிருந்து வருகிறது. அவள் தடவித்தடவி மணிகளைத் தேடுவதைக் கொண்டு அவள் பார்வையற்றவள் என்பதை அறிகிறான். அந்தக் குரலுக்குரிய கருப்பு இன இளைஞன் சிதறிய மணிகளைப் பொறுக்கித் தந்துவிட்டு அவளுக்கு ஐஸ்கிரீம்  கொண்டு வந்து தருகிறான். இந்தப் படத்தில் முடிவு வரை தான் ஒரு நீக்ரோ என்பதை அந்த பார்வையற்ற வெள்ளைக்காரிக்கு சொல்லவே மாட்டான். அவள் தன்னைப் பற்றி அவனுக்கு கூறுகிறாள். அவளைத் தினமும் பூங்காவில் சந்தித்துப் பேசும் இளைஞனின் பழக்கத்தை காதல் என்றே குருட்டுப் பெண் நினைக்கிறாள். அவன் அவளுக்கு டெலிபோன் பூத்தில் காசுபோட்டு டெலிபோன் செய்யக் கற்று கொடுத்துவிட்டு தன் தொலைப்பேசி எண்ணைச் சொல்லி மனப்பாடம் செய்ய வைக்கிறான். அவளை வீட்டிலிருந்து சாலையைத் தனியே கடந்து டெலிபோன் பூத்தை அடையவும் சொல்லிப் பழக்குகிறான்.

ஒருநாள் பூங்காவில் அந்தப் பெண்ணோடு அவனிருக்கையில் அவளது சிற்றன்னை பார்த்துவிட பெரிய கச்சேரியே வைத்து விடுகிறாள். ஆனால் அங்கு வந்து சூழும் ஜனங்கள் நீக்ரோ இளைஞனுக்கு சார்பாக பேசி, அந்த விபச்சாரியை துரத்தி விடுகிறார்கள். இதனிடையில் அந்த கருப்பின இளைஞன் அந்தப் பார்வையற்ற வெள்ளையினப் பெண்ணுக்கு கௌரவம் மிக்க நல்வாழ்வளிக்க திட்டமிடுகிறான். அந்தப் பெண்ணை  அதற்கான தங்கும் வசதிக்கொண்ட பள்ளியில் சேர்த்து சகல உதவிகளும் படிப்பும் கிடைக்குமாறு ஏற்பாடு செய்கிறான். பார்வையற்ற அந்த அபலைப் பெண் தன் உள்ளத்தை அவனுக்குத் திறப்பதோடு அவன் தன் மீது காட்டும் அன்பை காதல் என்பதாகவே தான் கருதுவதாகக் கூறுகிறாள். அவன் அவளைத் தேற்றி, உலகில் “லவ்” காதல் என்பதற்கு ஆண், பெண் உறவு மட்டும் பொருளல்லவென்றும் வெவ்வேறு உள்ளார்த்தங்களையும் உள்ளிட்டதென்றும் அவற்றில் உயர்ந்த ஒன்றையே தான் அவளிடம் இதுவரைக் காட்டி வந்ததாய்க் கூறுகிறான். படித்து முன்னேறினால் எல்லாம் விளங்கும் என்று ஆறுதல் கூறி விடுதியின் வண்டியில் ஏற்றியனுப்புகிறான். ஒன்றை மறந்துவிட்டான். அவளுக்குத்தான் தந்த சிறு பரிசை. சிறு பெட்டியைத் திறந்தால் ஒரு இனிய பியானோ இசை கேட்கும். ஓடிப் போய் அதை எடுத்து வருவதற்குள் வண்டி புறப்பட்டுப் போய்விடும். குருட்டுப் பெண்ணாக எலிஸபெத் ஹார்ட்மனும் [ELIZABETH HEARTMAN] கருப்பின இளைஞனாக சிட்னி பாய்ஷரும் மிக அற்புதமாக நடித்திருக்கும் இதில் ஷெல்லி விண்டர்ஸ் [SHELLY WINTERS] கொடுமைக்கார சிற்றன்னையாக வருகிறார். இச்சிறந்தபடத்தை இயக்கியவர் GUEY GREENE.

1963 சிட்னி பாய்ஷர் LILIES OF THE FIELD எனும் படத்தில் நடித்தமைக்காக அவ்வாண்டின் தலைசிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்றார்.

இவ்வுயரிய திரைப்படம் சென்னை குளோப் தியேட்டரில் 1964-ல் திரையிடப்பட்டது. குளோப் தியேட்டர் நியூ குளோப் என்றிலிருந்து குளோப் என மாறி இறுதியில் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டு முகப்பு மாற்றி கட்டப்பட்டு அலங்கார் என பெயர் மாற்றப்பட்டு இடித்து கடைகளாக மாறியது.

Bioscope Karan 16th Web Article Series by Vittal Rao. This Series About Black And White Classic Movies. Sidney Poitier, Dubbed Movies. கருப்பும் வெளுப்பும் – விட்டல்ராவ் - Lilies of the Field

நிலையான வேலையற்ற கருப்பினக் கட்டிட தொழிலாளி ஹோமர் ஸ்மித் [HOMER SMITH] தனது பெரிய காரில் பாலைவனம் போன்ற வறண்ட பிரதேசம் ஒன்றில் வந்தவன் கார் ரேடியேட்டர் சூடேறியதால் தண்ணீர் தேடிப் பார்க்கிறான். தொழிலில் நன்றாகவே சம்பாதிக்கும் அவனுக்கு தட்டப்பாடு அவ்வளவாயில்லை. தூரத்தில் மரங்களிடையே தெரிந்த வீட்டை நோக்கி காரை செலுத்துகிறான். அது சிறிய பண்ணை. அதைப் பராமரித்து வரும் கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரீகளும் அவர்களின் மகா கண்டிப்புகாரரான கன்னிமார்த்தலைவி [MOTHER SUPERIOR]  மரியாவும் ஹோமர் ஸ்மித் தண்ணீர் எடுப்பதைக் கவனிக்கின்றனர். அறிமுகமேற்படுகிறது. ஸ்மித் ஒரு கட்டிடத் தொழிலாளியென்பதை அறிய வரும் மதர் மரியா, அவனிடம் ஒரு பேருதவி வேண்டுகிறான். அங்கு ஒரு தேவாலயம் கட்டித்தரவேண்டும். அந்தப் பகுதியில் எங்கும் தேவாலயம் கிடையாது. ஞாயிற்றுக்கிழமைகளில் மதர் மரியாவும் நான்கு கன்னியாஸ்திரீகளும் மைல் கணக்கில் நடந்து அவ்வூரின் கடை, பெட்ரோல் நிலையமருகிலிருக்கும் சிறு மைதானத்தில் கூட வேண்டும். பாதிரியார் ஒருவர் வசதி மிக்க பெரிய வாகனத்தில் வந்து பிரார்த்தனை முடிப்பார்.

தேவாலயத்தைக் கட்டி முடித்துத் தரும்படி ஹோமர் ஸ்மித்தை ஆண்டவனே தங்களிடம் அனுப்பி வைத்திருப்பதாக உறுதியாக நம்புகிறாள் மதர் மரியா. கன்னியா ஸ்திரீகள் நால்வருக்கும் ஆங்கிலம் வராது. உள்ளூர் புழக்கத்துக்கென ஆங்கிலம் பேசக் கற்றுத்தரும் கிராம ஃபோன் பெட்டியும் பாட போதனைப் பதிவாக்கிய தட்டுகளையும் ஸ்மித்துக்குக் காட்டுகிறார்கள். அவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசக் கற்றுத்தருகிறான் ஸ்மித். சொல்லுவதையெல்லாம் திருப்பிச் சொல்லும்படி கூறுகிறான். இந்தக் காட்சி படத்தில்  மிகவும் சுவாரசியமானது.

“கிராமஃபோன் பெட்டி கருப்பு நிறம்” என்கிறான் அவர்கள், “கருப்பு நிறம், என்கிறார்கள்.

அவன் தன் கையைத் தொட்டுக்காட்டி, “நான் கருப்பு என்கிறான். அப்படியே திருப்பிச் சொல்ல வேண்டிய ஜெர்மானிய கன்னியாஸ்திரீகளும், தங்களைத் தொட்டுக்காட்டி, “நான் கருப்பு”, என்பார்கள்.

உடனே அவன் திருத்துவான்,

“நீங்கள் வெள்ளை, நான் கருப்பு”, இவ்விதமாய் உட்காரவும் எழுந்திருக்கவும் ஒருமை பன்மைகளில் பேச கற்றுத் தருகிறான். பிறகு பைபிள் வாசகம் கூறி முடிக்கையில் அவர்கள், “ஆமென்”, என்கின்றனர். ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் “ஆமென்”, என்பதை  அமெரிக்க கிறித்தவர்கள், “ஏமென்”, என்பார்கள். ஹோமர் ஸ்மித் அமெரிக்கனாகையால், “ஆமென் அல்ல ஏமென்” என்கிறான். நான்கு கன்னிமாரும் அதை ஏற்றுக் கொண்டு “ஏமென்” என்பார்கள்.

மதர் மரியா விவரித்த வரைபடத்துக்கு ஏற்ப சிறிய தேவாலயம் ஒன்றைக் கட்டி முடித்துவிட்ட புறப்படத் தயாராகிறான் ஸ்மித். கட்ட வேலை நடக்கும் காட்சிகள் அபாரம். இடையிடையே அவனுக்கும் மரியாவுக்கும் பிணக்கு, மோதல், சமாதானம் ஏற்படுகிறது. ஊராரின் ஒத்துழைப்பு வரும் கட்டமும் நெகிழ்வைத் தருகிறது.

ஸ்மித் விடைபெறும் காட்சி நெகிழ்ச்சிமிக்கது. எல்லோரையும் பாடவிட்டு, “ஏமென்… ஏமென்”, என முடிக்கச் சொல்லிவிட்டு அவர்கள் அப்படி சொல்லிக் கொண்டிருக்கும்போதே மெதுவாக  நழுவி காரைக் கிளப்பிப் புறப்பட்டு போய்விடுகிறான். முடிவு என்பதை “END”, என்று காட்டுவதற்குப் பதிலாக, “AMEN”, என்று காட்டி படம் முடிகிறது. மதர் மரியாவாக LILIA SKALA  என்பவரோடு படத்தில் எல்லோருமே நன்கு நடித்திருக்கிறார்கள். ஹோமர் ஸ்மித்தாக நடிக்கும் சிட்னி பாய்ஷர் அருமை. நடிப்பின் சிகரத்தை எட்டுகிறார். இப்படத்தின் கதை WILLIAM E.BARRETT என்பவரின் நாவலை அடிப்படையாய்க் கொண்டது. ERNEST HALLER-ன் சிறந்த காமிரா ஒளிப்பதிவில் RALPH NELSON-ன் மிகச் சிறந்த இயக்கத்தில் மூன்று விருதுகள் பெற்ற படம்.

1962-ல் E.R.BRAITHWAITE என்பவர் எழுதிய தன் வரலாற்று நூல், “TO SIR, WITH LOVE” ஓர் ஆஃப்ரிக்க அமெரிக்க இளம் பள்ளியாசிரியன், பிற்பட்ட சேரிவாழ் உழைக்கும் வர்க்க வெள்ளைக்காரர்களின் ரவுடித்தனம், பாலியல் வக்கிரம் உள்ளிட்ட சகல மோசமான பழக்க வழக்கங்கள் கொண்ட வெள்ளைக்கார ஆண்-பெண் பிள்ளைகள் படிக்கும் சாதாரண உயர் வகுப்புப் பள்ளியில் வெற்றி பெறுவது படம். இந்நாவலை TO SIR, WITH LOVE- திரைப்படத்துக்கு ஏற்றமுறையில் திரைக் கதையாக்கி தயாரித்து அதி உயரிய முறையில் இயக்கியவர் ஜேம்ஸ் க்ளேவெல் [JAMES CLAVELL].

மார்க் தாக்கரே [MARK THACKERAY] எஞ்சினீரிங் படித்து வேலை கிடைக்காததால் மேற்சொன்ன பள்ளியில் ஆசிரியராக பணியில் சேரும் கருப்பின இளைஞன். மாணவர்கள் நிறவெறி, காமம், ரவுடித்தனம், அடிதடி எல்லாம் கொண்ட சேரியிலிருந்து வருபவர்கள். தாக்கரேயை தாக்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.

To Sir with Love, Bioscope Karan 16th Web Article Series by Vittal Rao. This Series About Black And White Classic Movies. Sidney Poitier, Dubbed Movies. கருப்பும் வெளுப்பும் – விட்டல்ராவ்

வளர்ந்த பருவ வயதினரின் மனம்-செயல் இயல்பு, நிறவுணர்வு – பேதம் மலிந்த சமூகத்தில் சிறுபான்மைக் கருப்பின பள்ளியாசிரியரின் மனோ நிலையையும், பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பச் சூழலிலிருந்து  வரும் வெள்ளைக்கார பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் தனித்து விடப்படும் கருப்பின ஆசிரியரின் தவிப்பு நிலை என்பன போன்ற பல்வேறு முக்கிய சமூக பொருளாதார கேள்விகளை எதிர்கொள்ளும் விதமாயுள்ளது இப்படம்.

பணியில் சேர்ந்த முதல் நாள் முதலாகவே தாக்கரேயின் உற்சாகத்தை, மனோ திட்டத்தையெல்லாம் தூள் தூளாக்கும் விதமாக நடந்து கொள்ளுகிறார்கள் மாணவர்கள். ஆனால் எதிர்ப்பு, பகைமை, சவால்களை ஏற்கெனவே சந்தித்திருக்கும் தாக்கரே அதையெல்லாம் சமாளிக்கிறார். புது வழியில் இறங்குகிறார் பாடப் புத்தகங்களை மூடிப்பையில் வைக்கச் சொல்லிவிட்டு, “நீங்களெல்லாம் சிறுவர், சிறுமியரல்ல. வளர்ந்த யுவன், யுவதிகள். ஒருவரையொருவர் அந்த ரீதியில் அழைக்க வேண்டாம். வழக்கமான பாடங்களுக்குப் பதிலாக இனி நாம் வாழ்க்கையை, லவ், செக்ஸ், கல்யாணம் என்பனவற்றையெல்லாம் கற்கப் போகிறோம்”, என்று பேசுகிறார் தாக்கரே.

மாணவர்கள் அதிர்ந்து போகிறார்கள். இதுவரை பல ஆசிரியர்களை அவர்கள் விரட்டி வேலையிலிருந்து ஓட விட்டது பழங்கதையாகிறது. மாணவ, மாணவிகள் சமையல் கற்பது அவசியம் என்பது சொல்லி சமையல் சொல்லித் தரும் தாக்கரே மாணவர்களை அப்பள்ளியின் சரித்திரத்திலேயே நடந்திராத வழக்கமாய் பஸ்ஸிலேற்றி விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்துக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டி விளக்குகிறார். வயதில் சற்று மூத்த ஒரு மாணவனைத் தவிர மற்றவர்களெல்லாம் புதிய ஆசிரியரை மரியாதையுடன் நடத்தி அன்பு காட்டுகின்றனர். மாணவ, மாணவிகள் சகஜமாக ஜோடி சேர்வதும் காதலிப்பதும் அங்கே நடக்கிறது. வயதில் மூத்த பையன் முரடன் என்பதோடு ஒரு மன மகிழ் நிகழ்ச்சியின்போது தாக்கரேயை வம்புக்கிழுத்த தன்னோடு குத்துச் சண்டைக்கு வருமாறு அழைக்கிறான். அக்கலையில் தேர்ச்சி பெற்றிருக்கும் அவர் அந்தப் பையனை ஒரேயடியில் வீழ்த்துவது அந்தப் பையனின் குண இயல்பையே மாற்றுகிறது. படிப்பு முடிந்ததும் பையனை முறையாக குத்துச் சண்டை கற்கதான் உதவி புரிவதாய்க் கூறி அவனது நட்பையும் பெறுகிறார். தாக்கரேவுக்கு அமெரிக்க கம்பெனியொன்றில் இன்ஜினியர் வேலைக்கு தேர்வாகி வேலையில் சேர உத்தரவு வருகிறது. மாணவ, மாணவிகள் அவருக்கு ஒரு பிரிவு உபசார பார்ட்டி வைத்து சிறு பரிசையும் தருகிறார்கள். லூலு எனும் மாணவி தான் கட்டிய, ஒரு பாட்டை இனிமையாகப் பாடுகிறாள். “பென்சில் பேனா புத்தகம் இல்லை. வாழ்க்கையைப் பாடம் கற்பித்தவரே, உள்ளம் கொள்ளை கொண்டவரே, டு சார், வித் லவ்”, என முடியும் சிட்னி பாய்ஷர் தாக்கரேவாக மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். லுலுவாக பார்பாரா துடிப்பாக நடித்திருக்கிறார்.

Who's Afraid of Virginia Woolf,Bioscope Karan 16th Web Article Series by Vittal Rao. This Series About Black And White Classic Movies. Sidney Poitier, Dubbed Movies. கருப்பும் வெளுப்பும் – விட்டல்ராவ்

கண்கள் காமிரா வழியே பார்த்து திரைப்படத்துக்கான சட்டகங்களைத் தீர்மானிக்கின்றன. காமிரா கலைஞரான ஒளிப்பதிவாளர் திரைப்பட உருவாக்கலில் முதுகெலும்பு போன்றவர். தலை சிறந்த காமிரா ஒளிப்பதிவாளர்களில் ஹாஸ்கெல் வெக்ஸ்லெர் ஒருவர் [HASKELL WEXLER] “இது ஒளிப்பதிவாளர் படம்” என்று குறிப்பிடும் அளவுக்கு அந்தப் படத்தில் அவரது கலையாளுமை கொண்ட சாமர்த்தியம் விரவிக் கிடக்கும். 1966-ல் “WHO IS AFRAID OF VIRGINIA WOOLF?” என்ற அரிய கருப்பு வெள்ளைப் படம் மைக் நிக்கோல்ஸின் இயக்கத்தில் ரிச்சர்டு பர்டன், எலிசபெத் டேலர் நடிப்பில் வெளிவந்து ஐந்து ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது. EDWARD ALBEE என்பாரது நவீன நாடகத்தை, நாடக இயக்குனராயிருந்து ஹாலிவுட் சினிமாவுக்கு வந்த மைக் நிக்கோல்ஸ், ஆல்பீயின் நாடகத்தை அற்புதமாக திரைப்பட வடிவமாக்கினார். இப்படத்தின் ஐந்து ஆஸ்கர் விருதுகளில் ஒன்று, இதன் பிரமிப்பூட்டும் கருப்பு வெள்ளை காமிரா ஒளிப்பதிவுக்கானது. அந்த காமிரா கலைஞர் ஹாஸ்கெல் வெக்ஸ்லெர். இவரது மற்றொரு உயரிய வண்ண ஒளிப்பதிவில் உருவாகி அடுத்த வருடம் வெளிவந்த [1967] நான்கு ஆஸ்கர் விருதுகள் பெற்ற படம் “இன் தி ஹீட் ஆஃப் தி நைட்” [IN THE HEAT OF THE NIGHT]. இத்தலைப்பு சேர்ந்து வருமாறு இயற்றப்பட்ட பாடலை படத்தின் தொடக்கத்தில் [QUINCY JONES-ன் பாப் இசையமைப்பு] வெக்ஸ்லெரியின் ஒளிப்பதிவில் கலந்தளிப்பது திணற வைக்கும் ஒன்று JOHN BALL – என்பவரின் நாவலைக் கொண்ட படம். நிறவுணர்வின் கொடுமையை இப்படத்தில் இயக்குநர் நார்மன் ஜயூசன் [NORMAN JEWISON] மிக நேர்த்தியாகச் சொல்லுகிறார். ஒரு சிலிர்க்க வைக்கும் சமூகக் கொலை நிகழ்வு கருப்பின மக்கள் நிறைந்த பகுதியில் வெள்ளைக்கார தொழிலதிபரின் படுகொலையால் கதிகலக்குகிறது. முக்கிய இடங்களில் தேடல் இறுக்குகிறது. அது மிசிசிப்பி பகுதியிலுள்ள ஸ்பார்டா எனும் சிற்றூர். அவ்வூர் ரெயில்வே ஸ்டேஷனில் இரவு ரயிலுக்காகக் காத்திருக்கும் கருப்பின  இளைஞன் கைது செய்யப்பட்டு அங்கேயே சோதிக்கப்படுகையில் அவனிடமுள்ள பணம் அவன் மீது சந்தேகத்தைக் கூட்டுகிறது. அவ்வூர் சிறிய போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்படுகிறான். சாதாரண மார்ஷல் பதவியிலிருக்கும் கிண்டலும் நிறத் திமிரும் கொண்ட மார்ஷல் கருப்பு இளைஞனை விசாரிக்கையில், “ஏன் கொன்றாய்?”, என்று தெனாவெட்டாக ஆரம்பிக்கிறான்.

அதற்குப் பற்களைக் கடித்துக் கொண்டு சொல்லுகிறான். நீக்ரோ இளைஞன், “நான் ஒரு போலீஸ் அதிகாரி”, அதைக் கேட்டு கொஞ்சம் திகைப்பும் கொஞ்சம் ஏளனமுமாய் சுவிங்கத்தை  மென்று கொண்டே வெள்ளை மார்ஷல் பார்க்க, இளைஞன் தன் உத்தியோக ஐ.டி.யை எடுத்து காட்டுகிறான். விர்ஜில் டிப்ஸ் [VIRGIL TIBBS] பிலடெல்பியாவிலிருந்து இந்தூருக்கு சொந்த வேலையாக வந்துவிட்டு ஊர்த்திரும்ப இரவு ரயிலுக்குக் காத்திருந்த “ஹோமிசைடல் எக்ஸ்பெர்ட்” எனும் குற்றவியல் மற்றும் தடயவியல் நிபுணரான உயர்ந்த போலீஸ் அதிகாரி. கருப்பர் குடியிருப்பில் வெள்ளை தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதால் கொலையை ஒரு கருப்பர் புரிந்திருக்க வேண்டும் என்ற கண்மூடித்தனமான எண்ணத்தில் கைதான முதல் நபர் கருப்பின போலீஸ் அதிகாரியான டிப்ஸ்.

“ஹாய், டிப்ஸ்”, என்பான் மார்ஷல்.

“என்னை மிஸ்டர் டிப்ஸ் என்று அழைப்பார்கள்,” என்று கோபமாக திருத்துவான் டிப்ஸ். அங்குள்ள டெலிஃபோனை வாங்கித் தன் உயரதிகாரியோடு பேசிவிட்டு மார்ஷலிடமும் பேச வைக்கிறான் டிப்ஸ். உயர் அதிகாரியுடன் பேசிய பின் அவன் முகம் மாறுகிறது. ஆனால் டிப்ஸை விட மனமில்லை. அந்தக் கொலையைக் கண்டு பிடிப்பதில் தனக்கு உதவும்படி வேண்டுகிறான். அந்த நிலையில் நிற வெறி அமுங்கியடங்க இருவரும் சேர்ந்து உண்மைக் குற்றவாளியான வெள்ளையனையும் அவனது சகாக்களையும் பிடிக்கிறார்கள். டிப்ஸ் ஊருக்கு ரயிலேறுகையில் கொண்டுவிடவரும் மார்ஷல் டிப்ஸின் பயணப் பெட்டியைத் தூக்கி வந்து கை குலுக்கி வண்டியேற்றுகிறான். சதா சுவிங்கம் மென்றுகொண்டே அடக்கி நடிக்கும் மார்ஷல் பாத்திரத்தில் அருமையாகச் செய்த ராட் ஸ்டீகர் [ROD STEIGER] சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்றார்.

Bioscope Karan 16th Web Article Series by Vittal Rao. This Series About Black And White Classic Movies. Sidney Poitier, Dubbed Movies. கருப்பும் வெளுப்பும் – விட்டல்ராவ் GUESS WHO'S COMING TO DINNER - CRITERION CHANNEL

மீண்டும் ஒருமுறை சிட்னி, பாய்ஷர், ஸ்டான்லி க்ராமர் இயக்கத்தில் ஆஸ்கர் விருதுகள் இரண்டைப் பெற்ற “GUESS WHO IS COMING TO DINNER”என்று புகழ்பெற்ற வண்ணத்திரைப்படத்தில் பழம்பெறும் நடிகர்கள் SPENCER TRACY, KATHARINE HEPBURNகளுடன் 1967-ல்  நடித்தார். காத்தரீன் ஹெப்பர்ன் சிறந்த நடிப்புக்கான ஆஸ்கர் விருதை இந்தப் படத்துக்கு பெற்றார். மாத்யூ டிரேய்டன் நன்கறியப்பட்ட  பதிப்பாளர் [MATHEW DRAYTON] அவரது மனைவி கிறிஸ்டினா. இவர்களது அழகிய ஒரே மகள் ஜோவன்னா தன் காதலன் ஜான் பிரெண்டைஸுடன் [JOHN PRENTICE] பெற்றோர்களிடம் வருகிறாள். “இவரைத்தான்நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்”, என்று கூறி பெற்றோர்களுக்கு தன் காதலனை அறிமுகம் செய்து வைக்கிறாள். பெற்றோர்கள் தம் வருங்கால மருமகனைக் கண்டு அதிர்ச்சியுறுகின்றனர். அந்த அழகிய வாலிபன் – புகழ் பெற்ற மருத்தவன் – டாக்டர் ஜான், ஒரு கருப்பின ஆஃப்ரிக்க அமெரிக்கன். ஜோவன்னாவின் அம்மா கிறிஸ்டினாவுக்கு தன் மகள் ஒரு கருப்பின டாக்டரை. கணவனாகத் தேர்ந்தெடுத்ததில்  பெருமகிழ்ச்சியே. ஆனால் அப்பா, மாத்யூ பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிறார். டாக்டர் ஜான் தன் பெற்றோர்களையும் அழைக்க, ஊரிலிருந்து வரும் அவர்களோடு அவனும் ஓட்டலில் தங்குகிறான். அவர்களுக்கும் தங்கள் மகன் ஒரு வெள்ளைக்காரியைத் திருமணம் முடிப்பதில் ஒப்புதலேயில்லை. அவர்களிடையே நீண்ட விவாதம் நிகழ்கிறது. ஒருவாறு இரு தரப்பினரும் எதிரெதிரே நேராக அமர்ந்து அவரவர்களின் சகியாதன்மையின் அளவு மட்டத்தை கண்டுணரும் விதமாய் ஒருவருக்கொருவர் சோதிப்பதாய் செய்த ஒப்புதலை ஏற்றுக்கொண்டு அவர்களுள் சமரசமும் ஏற்பும் ஏற்பட அன்றிரவுச் சாப்பாடு [DINNER] ஏற்பாடாகிறது. ஸ்பென் ட்ரேசியும்> கேத்தரின் ஹெப்பர்னும், சிட்னிபாய்ஷரும் மிக அற்புதமாய் நடித்த “கெஸ் ஹு இஸ் கமிங் டு டின்னர்”, படத்தை ஸ்டான்லி க்ராமர் அற்புதமாக இயக்கியிருக்கிறார்.

“நீ என்னை ஒரு மனிதனாகப் பார்க்கவில்லை. கருப்பு நிறமானவனாகத்தான் பார்க்கிறாய்”, என்று தந்தையிடம் சூடாக சிட்னி பாய்ஷர் விவாதிக்கும் கட்டம் மிகச் சிறப்பானது. திறவுணர்வு, நிறவெறி பற்றிய வேறு மொழி படங்களும், ஆஃப்ரிக்க படங்களுமிரு க்கின்றன. பார்ப்போம்.

(தொடரும்)

முந்தைய தொடர்களை படிக்க கிளிக் செய்க: 



புதிய தொடர்: பயாஸ்கோப்காரன் (முன்னுரை) – விட்டல்ராவ்

தொடர் 2: பயாஸ்கோப்காரன் (கபிலர் மலையும் அரிச்சந்திரனும்) – விட்டல்ராவ்

தொடர் 3: பயாஸ்கோப்காரன் (போரும் சினிமாவும்)– விட்டல்ராவ்

தொடர் 4: பயாஸ்கோப்காரன் (மினி பயாஸ் கோப்) – விட்டல்ராவ்

தொடர் 5: பயாஸ்கோப்காரன் (சில தெலுங்குப் படங்கள்) – விட்டல்ராவ்



தொடர் 6: பயாஸ்கோப்காரன் (ரிபப்ளிக் சீரியல் படங்களும், தமிழ் சண்டைப் படங்களும்) – விட்டல்ராவ்

தொடர் 7: பயாஸ்கோப்காரன் (கூடார வகை தியேட்டர்கள்) – விட்டல்ராவ்

தொடர் 8: பயாஸ்கோப்காரன் (கூடார தியேட்டர்கள்) – விட்டல்ராவ்

தொடர் 9: பயாஸ்கோப்காரன் (கந்தர் ஃபிலிம்சும், மாடர்ன் தியேட்டர்ஸும்) – விட்டல்ராவ்

தொடர் 10: பயாஸ்கோப்காரன் (சினிமா சுவரொட்டித் திருட்டு) – விட்டல்ராவ்



தொடர் 11: பயாஸ்கோப்காரன் (ஹாலிவுட் ஒரு மகா களவுலகு) – விட்டல்ராவ்

தொடர் 12: பயாஸ்கோப்காரன் (சினிமா பார்க்க சீசன் டிக்கட்) – விட்டல்ராவ்

தொடர் 13: பயாஸ்கோப்காரன் (ஆங்கிலப் படங்களுக்கு தமிழ் தலைப்புகள்) – விட்டல்ராவ்

தொடர் 14: பயாஸ்கோப்காரன் (தழுவல், காப்பி, மொழிமாற்றத் திரைப்படங்கள்)– விட்டல்ராவ்

தொடர் 15: பயாஸ்கோப்காரன் (ஜான் ஃபோர்டு (John Ford) – விட்டல்ராவ்