அத்தியாயம் 14: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
மகளிர் தின சிறப்பிதழ்: இந்திய பெண்கள் இயக்கம் சவால்களை சந்திக்கும்! கட்டுரை – உ.வாசுகி
உ.வாசுகி,
அகில இந்தியத் துணைத் தலைவர்,
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்
முற்போக்கு இயக்கங்களும் குழுக்களும் கடும் சவால்களை சந்திக்கும் காலகட்டமாக இன்றைய காலகட்டம் உள்ளது. சாதி, வர்க்கம், பாலினம் என்று அனைத்து மட்டங்களிலும் ஒடுக்கு முறைகளை சந்திக்கும் பெண்களின் சமத்துவத்திற்காக பாடுபடும் பெண்கள் இயக்கங்கள் இதற்கு விதிவிலக்கு அல்ல.
பல்வேறு வகைப்பட்ட பெண்கள் அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் உள்ளன. பெண்கள் சந்திக்கும் ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்காக மட்டும் செயல்படும் அமைப்புகளும் உண்டு. நாங்கள் அரசியல் அமைப்பு அல்ல என்று அறிவித்து, பெண்களின் பிரச்சனைகளை அரசியலுக்கு அப்பாற்பட்டதாக பார்க்கும் அமைப்புகளும் உண்டு. பெண்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைக்கு ஆணாதிக்கம் மட்டுமே காரணம் என வாதிடும் அமைப்புகள் உண்டு. மத அடிப்படைவாத அமைப்புகள், சாதி அமைப்புகள், மதவெறி அமைப்புகள் நடத்தும் பெண்கள் அமைப்புகள் உண்டு. பல்வேறு அரசியல் கட்சிகளின் மகளிர் அமைப்புகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
பெண்கள் மீதான ஒடுக்கு முறைக்கு பின்னே ஆணாதிக்கம், நில உடைமை கண்ணோட்டம், முதலாளித்துவம் உள்ளிட்ட முறைமைகளும், அவற்றின் கருத்தியலும் உள்ளன என்பதை பெரும்பாலும் இடதுசாரி பெண்கள் அமைப்புகளே முன்வைக்கின்றன. பெண் உரிமைக்கான போராட்டம் சமூக மாற்றத்திற்கான போராட்டத்தோடு இணைந்தது. சமூக மாற்றத்திற்காக போராடும் பல்வேறு அமைப்புகளோடு பெண்கள் இயக்கங்கள் இணைந்து கூட்டாக குரல் கொடுக்க வேண்டும். அரசியல் பொருளாதாரம், சமூகம் பண்பாடு என அனைத்து தளங்களிலும் பெண் சமத்துவத்திற்கான போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கிறது. பெண் அடிமைத்தனம் உருவான வரலாற்றை எங்கல்ஸ் அவர்கள் “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலில் விளக்குகிறார். வர்க்க சமூகமும் பெண் அடிமைத்தனமும் ஒத்திசைந்து உருவானதாக அவர் முன் வைக்கிறார். எனவே அரசியல் பொருளாதார பண்பாட்டுச் சூழலில் இருந்து பெண்கள் பிரச்சனைகளையும், ஒடுக்குமுறையையும் விலக்கி வைத்து பார்க்க முடியாது.
பாலின சமத்துவம் குறித்த கண்ணோட்டம்
பெண் சமத்துவத்தை நிலை நிறுத்த மனமாற்றங்கள் தேவை என்றாலும் கூட, அந்த மன மாற்றத்தை உருவாக்கவே திட்டவட்டமான சமூக, பொருளாதார சூழல் தேவைப்படுகிறது. சோசலிச சமூக முறைமையில் தான் அதற்கேற்ற சமூக சூழல் (material condition) உருவாகிறது. ஆனால் அங்கும் சோஷலிச அரசு உருவான உடனேயே எல்லா மாற்றங்களும் வந்துவிடும் என எதிர்பார்க்க முடியாது. உறுதியான ஒரு கருத்தியல் போராட்டத்தை சோஷலிச அரசுகள் கடந்த காலத்தில் நடத்தியதன் விளைவாகத்தான் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கியூப குடும்ப கோட்பாட்டு சட்டம் இதற்கோர் உதாரணம். பாலின சமத்துவத்துவத்தை உறுதிசெய்கிற கியூப குடும்ப கோட்பாட்டு சட்டம், கியூப மக்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு உருவாக்கப்பட்டது; இறுதி வரைவு வாக்கெடுப்பு மூலம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகே சட்டமாக்கப்பட்டது.
பெண்கள் உரிமைகள் குறித்த மாறுபட்ட கண்ணோட்டங்களும் போக்குகளும் சர்வதேச அளவிலும் நிலவுகின்றன. 1980களில் கனடா நாட்டின் மான்ட்ரியால் நகரத்தில் நடந்த பெண்கள் மாநாட்டுக்கு இந்தியாவில் இருந்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பிரதிநிதியாக செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மாநாட்டில் முதல் கட்டமாக சுற்றுக்கு விடப்பட்ட குறிப்பில் வன்முறை எதிர்ப்பு அம்சங்கள் மட்டுமே இடம்பெற்று இருந்தன. பொருளாதார பிரச்னைகள் அதிகம் இடம் பெறவில்லை. நான் உட்பட மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதிகள் முதல் அமர்விலேயே, வறுமையே ஒரு வன்முறை என சுட்டிக்காட்டிய பிறகுதான், பொருளாதார அம்சங்கள் இணைக்கப்பட்டன. குடும்ப அமைப்பு ஜனநாயக படுத்தப்பட வேண்டும், ஊடகங்களில் பெண்கள் சித்தரிப்பு முறைப்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஜனநாயக மாதர் சங்க சார்பாக முன்வைக்கப்பட்டு மாநாட்டு தலைமை குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது புதிய அனுபவமாக இருந்தது. பெண்கள் மீதான வன்முறையை தடுக்கும் சர்வதேச உடன்படிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத நாடுகளின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என மாநாட்டு தலைமை குழு குறிப்பிட்டது. எந்தப் பெண்களின் நலனுக்காக இதை நீங்கள் முன் வைக்கிறீர்களோ, அந்த பெண்களுக்கே பொருளாதார தடையின் காரணமாக பிரச்சனைகள் வரும், எனவே அந்த வரியை நீக்க வேண்டும் என கடைசி வரை போராடி, முடியாத பட்சத்தில் ஆட்சேபணையை பதிவு செய்தோம். தன்பாலின உணர்வாளர்கள் அமைப்புகள் கணிசமாக வந்திருந்தன. அவர்களது கோரிக்கைகள் இணைக்கப்பட வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்ட போது இந்தியா போன்ற நாடுகள் அதனை நியாயம் எனக் கூறினாலும், இசுலாமிய நாடுகளில் இருந்து வந்த பெண்கள் அமைப்புகள் அதில் கையெழுத்திட மறுத்தன. எனவே இதர கோரிக்கைகளை பட்டியலிட்டு அதன் கீழே கையெழுத்திடலாம், தன்பாலின உணர்வாளர்களின் கோரிக்கைகளை அடுத்து பட்டியலிட்டு அதை ஏற்பவர்கள் தனியாக கையெழுத்திடலாம் எனவும் சமரசம் செய்ய வேண்டி வந்தது. தற்போது தன்பாலின உணர்வாளர்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு லத்தீன் அமெரிக்க நாடுகளில் இது சட்டமாக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் கியூபாவில் நிறைவேற்றப்பட்ட குடும்ப கோட்பாட்டு சட்டமும் தன்பாலின உணர்வாளர்களின் சமத்துவ வாழ்க்கையை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளது.
எந்தப் பாதையில் பயணிக்கிறது இந்தியா?
நவீன தாராளமய பொருளாதார பாதையைத்தான் அண்மைக்கால அரசாங்கங்கள் இந்தியாவில் பின்பற்றி வருகின்றன. தற்போதுள்ள பாஜக அரசாங்கம் அந்தப் பாதையில் தீவிரமாக இறங்கி உள்ளது. இது பெண்களின் வாழ்வாதாரம் வேலைவாய்ப்பு உள்ளிட்ட சமத்துவத்திற்கான அடித்தளத்தையே நசுக்குகிறது. முழு வீச்சிலான எதேச்சாதிகார நடவடிக்கைகளில் இந்த அரசு இறங்கி வருகிறது. விமர்சிக்கவும் வேறுபட்ட கருத்துக்களை சொல்வதற்குமான வெளி சுருங்கிக் கொண்டே வருவது, பெண் செயல்பாட்டாளர்களையும் பாதிக்கிறது. உள்ளூர் பிரச்சனைகளுக்கான இயக்கம், இந்த வலதுசாரி அரசியலை எதிர்ப்பதன் ஒரு பகுதியாக பார்க்கப்பட வேண்டும்.
முதலாளித்துவ சமூக அமைப்பில் அனைத்தும் வணிகமயம்தான். கர்ப்பப் பை, சினை முட்டை உட்பட. வாடகை தாய் முறையை வணிகமாக்க கூடாது என சட்டம் இருந்தாலும், நடைமுறை வேறுமாதிரி தான் உள்ளது. சினை முட்டை விற்பனையை ஒழுங்குபடுத்த சட்டம் இன்னும் வரவில்லை. இது போன்ற பிரச்சினைகளில் ஏழை பெண்களே பாதிக்கப்படுகிறார்கள்.
அரசு வங்கிகள் தரப்பில் இருந்து முறையான கடன் வசதிகள் எளிதாக கிடைப்பது இல்லை. எனவே நுண்நிதி நிறுவனங்களையே கடனுக்காக பெண்கள் சார்ந்து இருக்கிறார்கள். ஏற்கனவே அதீதமான வட்டி விகிதம் இருந்த நிலையில், அண்மையில் ரிசர்வ் வங்கி வட்டிக்கான உச்சவரம்பை நீக்கிவிட்டது. பெரும் கடன் வலையில் பெண்கள் தள்ளப்படுகிறார்கள். கடன் மற்றும் வட்டி தவணையை பெறுவதற்காக இந்நிறுவனங்களின் முகவர்கள் அத்துமீறல்களில் ஈடுபடுவதும் நடக்கிறது. இதனால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட பெண்களும் உண்டு.
குடும்பக் கட்டமைப்பு புனிதமானது, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்கிற வலதுசாரி கருத்தியல் மிக ஆழமாக பரவிக் கிடக்கிறது. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை கூட பலராலும் பயன்படுத்த முடிவதில்லை. குடும்பக் கட்டமைப்பை ஜனநாயகப்படுத்துவது என்கிற விவாதம் கூட பெரிதாக முன்னுக்கு வருவது கிடையாது.
ஒருபுறம் சாதி மறுப்பு காதல்/ திருமணம் செய்தால் சாதி ஆணவ கொலையும், மறுபுறம் காதலை நிராகரித்தால் கொல்லப்படுவதும் சமகாலத்தில் நடந்து வருகிறது. சாதிப் பெருமிதமும், பெண் தன் உடமை என்ற ஆணாதிக்க கண்ணோட்டமும் இதற்குப் பின்புலமாக அமைகின்றன.
இணையதள குற்றம் இக்கால கட்டத்தின் முக்கிய சவாலாகும். பெண்கள் சுயமாக துணிச்சலாக தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் முன் வைப்பது நசுக்கப்படுகிறது. மோசடி செய்து வன்கொடுமையில் ஈடுபடுத்தப்படுவதற்கும் இது களம் அமைத்துக் கொடுக்கிறது.
பாலியல் துன்புறுத்தல் மற்றும் வல்லுறவு பெண்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பெரும் தடையாக விளங்குகிறது. குடி மற்றும் போதைப் பழக்கம் பாலியல் வன்முறையை, குறிப்பாக கும்பல் பாலியல் வன்முறையை ஊக்கப்படுத்துகிறது. மீ டூ இயக்கம், நடந்த பாலியல் துன்புறுத்தலைக் கூட உடனடியாக வெளியே சொல்ல முடியாத சமூகச் சூழலைத் தான் பிரதிபலித்தது. பள்ளிகள் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற இடங்களாக மாறி வருகின்றன. பாதுகாப்பு விடுதிகள் பலவும் அனுமதி பெறாமல், ஆளும் கட்சி பிரமுகர்கள் அதிகார வர்க்கம் காவல்துறையின் உதவியோடு, அங்கு தங்குபவர்களை பாலியல் பண்டமாக பயன்படுத்துவதும், அவர்களது உறுப்புகளை விற்பதுமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தற்போதைய ஆட்சியில் தலித் பெண்கள் மீதான வன்முறையும் சிறுபான்மை பெண்கள் மீதான வன்முறையும் அதிகரித்து வருகிறது. கருத்தியல் ரீதியாக ஆணாதிக்க சிந்தனைகள் வலுப்பெற்று வருகின்றன. மனுவாத கருத்துக்கள் வலிந்து திணிக்கப்படுகின்றன. வட இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் சாதி பஞ்சாயத்துகளே தீர்மானிக்கும் சக்தியாக இயங்குகின்றன. சாதியமும் மதவெறியும் பெண்களையும் கூறு போடுகின்றன. பெண்கள் ஒற்றுமை இதில் சிதைக்கப்படுகிறது.
பயணிக்க வேண்டிய பாதை
இவற்றையெல்லாம் தாண்டித்தான் தனிப்பட்ட முறையிலும், இயக்க ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெண்களுக்கான குரல்கள் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அமைப்பு ரீதியாக ஒன்று திரள்வது மிக அடிப்படையான தேவை. களத்தில் மட்டுமல்ல, கருத்தியல் ரீதியான போராட்டத்தை கூர்மைப்படுத்துவது இன்றைய காலகட்டத்தில் அவசியமாகிறது. பெண்கள் அமைப்புகளுடன் ஒருபுறமும், வர்க்க வெகு ஜன அமைப்புகளோடு மறுபுறமும் கூட்டு மேடைகளை உருவாக்கி மிக அழுத்தமாக பெண்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டியிருக்கிறது. பெண்கள் பிரச்சினைகளும் அரசியல் பிரச்சனைகள் தான், பெண்ணுரிமையும் மனித உரிமையே என்பதை சமூகத்திற்கு உணர்த்த வேண்டியிருக்கிறது. அரசு, கல்வி நிலையங்கள், மத நிறுவனங்கள், ஜனநாயக அமைப்புகள், குடும்பம் என அனைத்து மட்டங்களிலும் பெண் சமத்துவத்தை நிலை நாட்ட வேண்டி உள்ளது.
வரலாற்றின் வழிநெடுகிலும் பெண்கள் போராளிகளாக செயல்பட்ட விவரங்கள் உள்ளன. தேச விடுதலை போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானவர்களில் ஆறில் ஒருவர் பெண்ணாக இருந்திருக்கிறார்கள். சாராய எதிர்ப்பு இயக்கம், சிப்கோ இயக்கம், விவசாய தொழிலாளிகளின் போராட்டம், தொழிற்சங்க இயக்கங்கள் என்று பல மட்டங்களில் பெண்கள் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார்கள்.
எத்தனையோ சவால்களை சந்தித்து முன்னேறி உள்ள இந்தியப் பெண்கள் இயக்கம், இப்போது வருகிற சவால்களையும் நிச்சயம் எதிர்கொள்ளும்.
திரைவிமர்சனம்: அயலி..வெப் சீரியஸ் – கருப்பு அன்பரசன்
“உங்க அறிவுக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்யுங்கள்”
இந்த தொடரில் இருக்கக்கூடிய கதாபாத்திரங்களுக்குள் ஏதேனும் ஒன்றில்
நீங்களாகும் நானாகவும்
குடும்பத்தில் இருக்கக்கூடிய
எவராக ஒருவராகவும் இருப்போம்.. இருக்கிறோம்..
அதுதான் உண்மை.!
பெண் ஒருவருக்கு எதிர்பாராத
திடீர் மரணம் சம்பவித்தால்..
அல்லது தற்கொலை செய்து கொண்டால்..
அல்லது காணாமல் போய்
அவரது எங்கேயாவது கண்டு எடுக்கப்பட்டால்..
அதிலும் அவர் இளம் பெண் என்றால்
அவரின் உடலை
சட்டத்துக்கு உட்பட்டு
உடற்கூறு ஆய்வு செய்வதோடு அல்லாமல்
அறிவுக்கு புறம்பாக
பலர் பேசும் பேச்சுக்களும்
அவர் வாழ்ந்த முறையினை
விதவிதமாக.. இஷ்டத்துக்கும்
சொற்களின் கத்திகளால் குத்திட்டிகள் கொண்டு
குத்திக் கிழித்து ஆய்வு செய்யும்
நம் பெருமைக்குரிய ஆணாதிக்க சமூகம்..
ஆணாதிக்கம் என்பதனை
பெண்களுக்குள்ளேயும் வலுவாக கட்டமைத்து வைத்திருக்கும்
நம்முடைய மதிப்பிற்குரிய சமூகம்..
பெண் பித்தன் ராமனை கொண்டாடிய சமூகம்
தீயில் தள்ளி விடப்பட்ட சீதையையும் கொண்டாடியது.. கொண்டாடிக் கொண்டும் இருக்கிறது.
ஐந்து ஆண்களோடு
பெண் ஒருத்தி பட்ட பாட்டை பேச வக்கில்லாத சமூகம்
பஞ்ச பாண்டவர்களைத்தான் கொண்டாடியது..
பெருநோய் பிடித்த ஆண் விருப்பப்பட்டால்
சீழ் வடியும் ஆண் குறியையும்
தலையில் தூக்கி சுமக்க வேண்டும் என்று
நளாயினியின் வலியை பேசாமல்
அவன் அழுக்கேறிய விந்துக்கு பாராட்டு பத்திரம் வாசித்தது நம் சமூகம்..
தன் காதலை விருப்பத்தை
தைரியமாக சுதந்திரமாக சொல்லியதால்
மூக்கை அறுத்து அரக்கி என்று பட்டம் சூட்டி அறிமுகப்படுத்தியது நம் சமூகம்..
அவ்வளவு ஏன்
காதலித்து மனம் புரிந்த ஆண் பெண் இருவருக்குள்
மனமாச்சரியங்கள் நிகழ்ந்துவிடும் பொழுதில்
ஆண் தன் இணையை ஒதுக்கிவிட்டு
வேறு ஒரு பெண்ணோடு இணைந்து வாழ்தலை ஏற்றுக்கொள்கிறோம்
அதே பெண்
தன் எண்ணங்களை சுய மரியாதைக்கு
இழுக்கு ஏற்படும் செயலை காதலித்து மனம் புரிந்தவன் செய்ய முற்படும்பொழுது எதிர்த்து வெளியே வந்து
என்னோடு “நீ இணைந்து வாழ தகுதியற்றவன்” என்று கூறி வேறு ஒரு ஆணோடு இணைந்து வாழ விரும்புவதை
இழிவாகப் பேசும் இந்தச் சமூகத்தில்
இருந்து தான்
சிறு நெருப்பாக
புறப்பட்டு வந்திருக்கிறாள்
கருத்தாயிதம்தனை சொற்களில் ஏந்தி
ஆணாதிக்கச் சிந்தனைக்குள்
பெரும் சமர் புரிய..
அயலி..
அவளோடு இணைவோம்.
தமிழ் திரைப்பட உலகமும்..
தொலைக்காட்சிகளில் ஓ டி டி தளங்களும்
பெண்கள் சந்தித்திடும் பிரச்சனைகளை மேலோட்டமாகவும் ஆழமாகவும்
பேசி வந்ததை தொடர்ந்து
பெண்கள் தங்களின்
வாழ்வியல் சார்ந்த பிரச்சினைகளை!
நேர் எதிர் கொண்டு போராடத் தயாராக வேண்டியதின் அவசியத்தையும்
திரை மொழி நுட்பத்தோடு
காத்திரமான உரையாடல்களின் வழியாக
பரவலாக தற்போது பேசத் தொடங்கி இருப்பது
மெச்சத்தகுந்ததாகும்.
பகுத்தறியும் எண்ணம், ஆண் பெண் சமத்துவம், பாலின பேதம் குறித்து நல்லதொரு புரிதலோடு பேசியும் விவாதித்துக் கொண்டும் இருக்கக்கூடிய பல புதிய இளம் இயக்குனர்கள் கதாசிரியர்கள் ஒளிப்பதிவாளர்கள் திரைக்கதை எழுதக் கூடியவர்கள் திரைப்பட தொழில்நுட்ப பணிகளை அறிந்தவர்கள்
இப்படி பலரின் வரவால் பாராட்டுக்குரிய நல்ல அம்சங்களை உள்ளடக்கியதாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது நம்முடைய காட்சித் துறை என்பது
மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.
பெண்கள்
தனிநபரின் தனி ஆண்களின் குடும்பத்தின் சொத்தாக பொருளாக தொடர்ந்திட வேண்டும் என்பதற்காகவே
ஆண்கள்
அதற்கான தெய்வங்களைப் படைத்தார்கள்
பெண் தெய்வங்களின் பெயரால்
பெண்களின் உழைப்பை உடலை
தன் வசப்படுத்தி, விடாதுதொடர வேண்டும் என்பதை கவனப்படுத்தி மனித மனங்களை கட்டமைத்து வந்தார்கள்.
பெண் உடலை எப்படி பார்க்க வேண்டும் பாதுகாக்கப்பட வேண்டும் புனிதமாக பூஜிக்கப்பட வேண்டும்
என்பதை பெண்களை வைத்தே
பெண்களுக்கு எதிராக பேசிடும்
வஞ்சகத்தையும் நிதம் தொடர்ந்தார்கள் இன்றும் அதைத் தொடர்கிறார்கள்.
தியாகத்தின் புனிதத்தின் அடையாளமே பெண்கள் என்று பேசி
கௌரவம் என்கிற ஒற்றை வார்த்தைக்குள் அவர்களை முழுவதுமாக சிறை படுத்தினார்கள்.
எப்போதாவது சிறகு விரிக்க நினைக்கும்
எண்ணத்தின் கடைசி வேர் வரை
அமிலக் கரைசலை ஊற்றி தங்களுக்கு
சிறிய இழப்பு ஏதும் நிகழாமல் கவனமாக பார்த்துக் கொண்டார்கள் ஆண்கள்.
இயற்கையின் வசந்தம் எல்லாருக்கும் என்றாலும்
பெண்களுக்கு மட்டும் இங்கே வெக்கையாகவும் வியர்வையாகவும்
நகக்குறியின் கீறலில் இருந்து வெளியேறும் பச்சை ரத்தத்தின் பிசுபிசுக்கு மட்டுமே நற்கொடையெனவும்
கொடுப்பினையாகவும், விதியாகவும்
கடவுளின் பெயரால் வரமாக அளிக்கப்பட்டதுவென கண்ணுக்குத் தெரியாத மாயவலை ஒன்றினை சூது எண்ணம் கொண்டு
விரித்து வைத்திருக்கிறார்கள். அந்த மாய வலையை அறுத்து எறிய முற்படும் பொழுதெல்லாம் சக பறவைகளே அம்பு வீசி கொள்வதுதான் தர்மம், நீதி, வழக்கம் என்றும் காலம் காலமாக போதிக்கப்பட்டும் வளர்த்தெடுக்கப்பட்டும் வந்திருக்கிறார்கள் ஆண்களால்.
பெண்களின் முன்னேற்றத்திற்கு எதிராகவும் அவர்களின் சுய மரியாதையினை அவமதிப்பிற்கு உள்ளாக்குபவைகளாகவும்
சுயமான அறிவார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு தடையாகவும்
ஆண்களால் பொதுச் சமூகத்தில் கட்டமைக்கப்பட்ட,உருவாக்கப்பட்ட, புனிதமாக்கப்பட்ட, கடமைகளாக்கப்பட்ட, பொறுப்புகளாக முடிவு செய்யப்பட்ட பண்பாடு, பழக்க வழக்கம், கலாச்சாரம், சடங்கு, சம்பிரதாயம் என அனைத்தையும்
நம்முடைய சிந்திக்கும் திறனால் உண்மைகளை
பகுத்தறிந்து ஆராய்ந்திட வேண்டும் என்கிற மெய்யான நிஜத்தை
அயலி தமிழரசி
தமிழரசி
தனி ஒரு பெண்ணாக இருந்து சாகசம் நிகழ்த்தாமல், எதிராளி அமைத்து வைத்திருக்கும் பழக்க வழக்கங்களுக்குள் புகுந்து, அந்த வழியில் நின்றே அவர்களின் பொய் முகத்திரையை, வீரபண்ணை கிராமத்து பெண்கள் அனைவரையும் நியாயத்தின்
மெய்யான உண்மையில் பக்கம் நிற்க வைத்து கிழித்து தொங்கவிட்டு இருக்கிறார் ..
“உன் அறிவு என்ன சொல்கிறதோ அதன்படி பேசு”
உனக்கான சுயமரியாதை மிகுந்த வழிகளை தேர்ந்தெடுத்துக் கொள் என்று முடிக்கிறார்.
“அயலி என்கிற பெண் தெய்வத்தை மட்டும் பற்றி இங்கு பேசுகிறோமே அப்படி ஒரு தெய்வம் உருவாக காரணமாக இருந்த ஆண் குறித்து எப்பொழுதாவது யோசித்திருக்கிறோமா பேசி இருக்கிறோமா.? அவன் எங்கே போனான்..? என்னவானான்.. அப்படி ஒருவன் இருந்தானா”
என்கிற அறிவார்ந்த கேள்வியை
கயல் எழுப்புவது மறு வாசிப்பின்
அட்டகாசம்.
எல்லாவிதமான மாற்றங்களும் தனி ஒருவரின் ஆராயும்.. பகுத்தறியும் எண்ணத்திலிருந்தும் சக்தியிலிருந்தும் தொடங்கினாலும், அங்கிருந்து வெளிப்படும் கேள்வியில், இருக்கக்கூடிய நியாயத்தை, நிஜத்தை பெருவெளியில் இருக்கக்கூடிய எல்லோரையும் உணர வைத்து.. அது சக்தி மிகுந்த இயக்கமாக மாற்றப்படும் பொழுதே மாற்றங்கள் இங்கே சாத்தியமாகும் என்பதை தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் #முத்துக்குமார்.
வெகு மக்களின் சக்தியை உணர வேண்டும், அவர்களுக்கு அதை உணர்த்த வேண்டும் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார் இயக்குனர் அவர்கள்.
விடுதலையும் சுதந்திரமும் சமூகத்தில் இருப்பவர்களால் கொடுப்பது பெறுவது என்பது கிடையாது, அதை நோக்கி நடை போடுவது. அதற்கான வழிமுறைகளை திட்டமிடுவது. எண்ணிக்கைகளின் குணம்சத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது என்பதுதான். அதனை தன் அக்கா படிக்க வேண்டும் என்று தன் அப்பாவிடம் கேட்கும் ஆண் குழந்தையிலிருந்து தொடங்கி இருக்கிறார் இயக்குனர்.
குடும்ப கவுரமும்,சுய கௌரவம்
தன்மனதில் இருக்கக்கூடிய அன்பினை குடும்பத்தில் மீது இருக்கும் காதலை
கொலை செய்யும் ஆத்திரத்தோடு எடுக்கப்பட்ட வெட்டறிவாளை கீழே வீசி வீசி எறியும் தவசியில் இருந்து தொடங்கி இருக்கிறார் மாற்றத்தை இயக்குனர். “வீட்டில் சும்மா தானே இருக்கிறாய்” என்று கணவன் கேட்கும் பொழுது “உனக்கு முன்னால் எழுந்து நீ தூங்கியே பின்னால் தூங்கப்போகும் நான் சும்மா இருக்கிறேனா..? என்று பதில் கேள்வி எழுப்பி அன்றாட வேலைகளை பட்டியலிடும் அந்த மனைவியிடம் இருந்து தொடங்கி இருக்கிறார் எதிர் கேள்வியின் வழியாக மாற்றத்தை இயக்குனர். இப்படியான மாற்றங்கள் இரு பக்கமும் நடக்கும் பொழுதே மெய்யான விடுதலை என்பதும் சமத்துவம் என்பதும் வளர்ந்தோங்கும் என்பதை இயக்குனர் மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார்.
கல்வி அறிவுதான், பகுத்தறிவுதான் எல்லாவிதமான விடுதலைக்கும் தொடக்கப் புள்ளியாக அமையும் என்பதை இயக்குனர் சரியாகவே புரிந்து படத்தை ஆரம்பம் முதலில் கடைசிவரை
தொய்வேதும் இன்றி அமர்க்களமாக கொடுத்திருக்கிறார்.
தமிழரசியாகவும்.. குருவம்மாவாகவும்
நடித்திருப்பவர்கள் நடிப்பினில்
நிறைய சாகசங்களை படம் முழுவதும் நிகழ்த்திக் கொண்டே இருப்பார்கள்..
குழந்தை அம்மாவாக பல நேரங்களிலும்..
அம்மா குழந்தையாக பல நேரங்களிலும்தான்
இருவரும் நடிப்பில் பின்னி பெடல் எடுத்து இருப்பார்கள். சபாஷ் மக்களே.
பிரதான பெண் கதாபாத்திரங்கள் அனைத்துமே மிகச் சரியான அளவில் கதாப்பாத்திரங்களாக வாழ்ந்து நடித்து முடித்து இருக்கிறார்கள்.
படத்தில் நடித்திருக்கும் அத்தனை பெண்களும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
படத்தில் பங்கேற்ற திரைக் கலைஞர்கள் நாடக நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருமே
பெருமைப்படுத்த வேண்டியவர்கள் பொதுச் சமூகத்தால்.
அயலி
நம்மை அறிவு பூர்வமாக சிந்திக்க சொல்லி இருக்கிறாள்.
நிஜங்களை வாய் திறந்து பேச சொல்லி இருக்கிறார்.
– கருப்பு அன்பரசன்
மண்டியிடாதே! கவிதை – பாங்கைத் தமிழன்
ஹிந்தி எனும் தொந்தரவு
எம்மைவிட்டு நீங்கும் வரை
ஊனுமில்லை உறக்க மில்லை
ஓய்வு கொள்ளப் போவதில்லை!
தந்தை தாயின் முன்னோர்கள்
தந்தத் தமிழ்ச் செல்வமதை
எவனழிப்பான் பார்த்திடுவோம்
எழுந்திடடா தமிழ்ப் புலியே!
மானங்கெட்டு மதியிழந்து
மண்டியிட்டு வாழ்வதென்ன
தமிழ்க்குடியின் பரம்பரையோ?
தரணியிலே முதல் இனமே!
மொழியழிந்தால் வாழ்வழியும்
வாழ்வழிந்தால் இனம் அழியும்
வஞ்சகரின் சூழ்ச்சிதனை
புரிந்து கொண்டால் நாம் உயர்வோம்!
சாதியெனும் சாக்கடைக்குள்
சந்தனந்தான் மணந்திடுமோ?
சாதி விட்டு எழுந்திடடா
சாதிக்கலாம் தமிழ்ப்புலியே!
ஆபத்தடா தமிழ் மொழிக்கு
அறிந்திடாயோ? வரிப்புலியே!
சாபம்விட்ட ஹிந்தியினால் நம்
சரித்திரத்தை அழிப்பாரோ?
கெடும் கெடும் நம்வாழ்வு
கேடுகள் சூழ்ந்தால் பெருந்தாழ்வு
வட குடிகள் வாழ்வதற்காம்
தமிழ்க்குடிகள் சாவதற்கா?
சாதி என்பது வியாதியடா
சமத்துவம் மானுட நீதியடா
தமிழன் என்றால் ஒருசாதி
தயக்கம் என்ன நீ சாதி.
– பாங்கைத் தமிழன்
பாங்கைத்தமிழன் கவிதைகள்
‘நோய்களுக்கு மருந்து நீ’
******************************
உலகின் ஒப்பற்ற தேசம்!
அகிலத்தின் அழகு தேசம்
மூத்த இனமும் மொழியும்
தோன்றிய முதன்மை தேசம்!
வற்றா நதிகளும்
வளமார் மண்ணும்
குன்றா வளமும்
குறைவிலா செல்வமும்
மாண்பமை மக்களும்
இயற்கையின் செல்ல தேசம்!
இந்திய தேசம்!
வார்த்தை ஜாலத்திற்காக
வர்ணனை செய்யவில்லை!
இந்த தேசத்தின்
பூர்வக் குடியின்…
இந்த தேசத்தை
சுவாசிக்கும் வார்த்தை
வடிவங்கள்!
இன்று….
முடங்கிக் கிடக்கும் தேசமாக
முட்டுக்கட்டை களைப்
போட்டது யார்?
சுய நலத்திற்காக
உழைக்கும் மக்களை
உடைத்தது யார்?
ஒன்றாகப் பிறந்து
ஒன்றாக உழைத்து
ஒன்றாக உண்டு
ஓர் உணவை உண்டு
ஓரிடத்தில் உறங்கி
ஒரே உறவுகளாய் வாழ்ந்தோமே…. !
இது பொய்யென்றால்
நீ சொன்னாலும்
நான் சொன்னாலும்
இந்த மண்ணின்
பூர்வக்குடிகள் இல்லை நாம்!
மதங்கள் நம்மை அண்டின
சாதிகள் நம்மை தொற்றின
நோய்கள்… நோய்கள்…!
நோய்களை விரட்டுவோம்
‘நோயற்ற வாழ்வுதானே
குறைவற்ற செல்வம்’
இந்த தேசத்திற்கு!
சொர்க்கத்தில்
இருக்கும்
என் பெற்றோர்
என்னிடம் பேசினர்!
கனவின் வழி!!
மீண்டும்
மண்ணுலகில் பிறப்பு
வேண்டுமெனில்
அருளுகின்றேனென
ஆண்டவன்
அனுமதித்துள்ளார் !
மகனே…..
பிறவியெடுத்து
வருவதற்கு…
பேராசைதான்!
இந்தியாவில்
சாதிகளின் பேயாட்டம்
மதம்பிடித்தோர் வெறியாட்டம்
ஏய்ப்போரின் வெறியாட்டம்
அரசியல் வாதிகளின்
கொள்ளைக்கூட்டம்
அழிந்திருந்தால்
சொல் மகனே….
உனக்கே
பிள்ளைகளாகப்
பிறக்கிறோமென்றனர்
என்னத்தச்சொல்ல?
*********************************
ஏமாற்றும்
வித்தைகள்
பல விதம்!
வீதி ஓரங்களில்
வித்தைக் காட்டுபவனின்
வித்தை
வயிற்றுப் பாட்டுக்கானது!
திரைக்காக…
நடிகர் மட்டுமல்ல
திரைப்படம் உருவாக
உழைக்கிறோம் என்போர்
அனைவரின் வித்தை
ஆசைக்கானது!
அலப்பறை செய்து
கொள்ளையே கொள்கை
என்னும்..
அரசியல் பேய்களின்
வித்தை….
அநாகரிகமானது!
மயிர் வளர்ப்பு
அம்மணத் திறப்பு
அங்க வஸ்திர அணிவிப்பு
அருவருப்பான
வேஷ கோஷம்
கூச்சல்… குடைச்சல்
எல்லாமும்
மனநோயின் வித்தை;
மக்களை மயக்கும்
மதிகெட்ட வித்தை!
வித்தைக் காட்டுபவரே
வித்தகனானான்!
விதை போட்டு
வியர்வைசிந்துவோன்
வேடிக்கைப் பொருளானான்!
விந்தை உலகமடா….
இல்லை… இல்லை….
வித்தை உலகமடா!
**************************************
மனிதன்
என்னென்னவோ வேடமிட்டு
பிழைப்பை நடத்திக்
கொண்டிருக்கிறான்!
உலகம் ஒரு நாடகமேடை
நாமெல்லாம் நடிகர்
என்ற
அறிஞனின்
ஆழமான சிந்தனை
எவ்வளவு நிதர்சனம்!
வயிற்றுப் பிழைப்பிற்காக
கடவுள் போன்று
வேடமிட்டு….
பிச்சையெடுக்கின்றார் சிலர்;
ஓ…..
கடவுள் இப்படித்தான் இருப்பாரோ?
வேடமிட்டவனுக்கு எப்படித் தெரியும்?
இந்த
உருவத்தை உருவாக்கியவனுக்குத்தான் தெரியும்!
கடவுளின் உருவம்.
கடவுள் உருவத்தில்
கையேந்தி வருபவருக்கு
ஏன் கற்பூரம் ஏற்றவில்லை?
கடவுள் உருவத்தை
கற்பனையில் உண்டாக்கியவர்!
அவர்களுக்கு
நன்றாகத் தெரியும்
கடவுளுக்கு உருவமில்லை என்பது!
வயிற்றுப் பசிக்காக
கடவுள் வேடமிட்டு
கையேந்தி வந்தாலும்
பிச்சைப் பாத்திரம்
நிரம்புவதில்லை….
பிச்சைப் போடுபவனுக்கும் தெரியும்!
பிச்சையெடுப்பவன்
கடவுள் இல்லையென்பது!
பிச்சையெடுப்பவன்தான்
நம்புகின்றான்…..
பாவம்;கடவுளை!
கற்பனை செய்தவர்களும் உண்மையை சொன்னவர்களும் – ஜி.ராமகிருஷ்ணன்
‘கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும்’ என்ற ஏங்கெல்ஸ் எழுதிய கட்டுரை ‘டூரிங்கிற்கு மறுப்பு’ எனும் புத்தகத்தில் 3 அத்தியாயங்களாக இடம் பெற்றுள்ளன. மார்க்ஸ், ஏங்கெல்ஸ் வாழ்ந்த காலத்திலேயே மார்க்சிய கொள்கைகளையோ, தத்துவத்தையோ அவ தூறு செய்தவர்களுக்கு தகுந்த சாட்டையடி கொடுத் துள்ளனர். மார்க்சிய தத்துவம் குறித்து தோழர் லெனின் தன்னுடைய மார்க்க்சியத்தின் மூன்று தோற்று வாய்களும், மூலக்கூறுகளும் என விவரிக்கிறார். தத்துவம், பொருளாதாரம், சோசலிசம் -இதுவே அடிப்படை.

மார்க்சுக்கு முந்தைய முன்னோடிகளின் முயற்சி களை பகுப்பாய்வு செய்து ஏங்கெல்ஸ் தன்னுடைய ‘கற்ப னாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும்’ என்கிற புத்தகத்தை எழுதியுள்ளார். பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு முதலாளித்துவ வளர்ச்சியில் தொழிலாளர்களின் வறுமை, ஏழ்மை, அவர்கள் ஒடுக்கப்படுவது, 18 மணிநேரம் வேலை வாங்கப்படுவது ஆகியவற்றை கண்டு சோசலி சத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற மூன்று சமூக சீர்த்திருத்தவாதிகளின் முயற்சியின் அனுபவம், தோல்வி ஆகியவற்றை தொகுத்து ஏங்கெல்ஸ் தன்னு டைய புத்தகத்தை எழுதினார்.
முதல் மூவர்
செயிண்ட் சைமன் (1760-1825)ஃபுயுரியர், ராபர்ட் ஓவன் உள்ளிட்டோர் மனிதநேயத்துடன் பிரான்ஸ் நாட்டில் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளை எவ்வாறு களைய வேண்டும் என்ற நோக்கத்துடன் சோசலிசம் என்னும் கருத்தையும், அதற்கான நட வடிக்கையையும் மேற்கொண்டனர். இவர்களை தனது நூலில் ஏங்கெல்ஸ் ‘சமூக சீர்திருத்தவாதிகள்’ எனக் குறிப்பிடுகிறார். முதலாளித்துவ வளர்ச்சி முழுமை பெறாத நிலையிலும், தொழிலாளர் வர்க்கத்தின் உரு வாக்கமும் முழுமை பெறவில்லை என்கிற சுழ லிலும் இம்மூவரும் சோசலிசம் எனும் கருத்தை முன் வைத்திருக்கிறார்கள்.
தோல்வியில் முடிந்த சைமனின் முயற்சி
பிரான்ஸ் நாட்டில் பிரெஞ்சு புரட்சிக்குப் பிறகு (1789) தொழில் வளர்ச்சியில் தொழிலாளர்கள் மத்தி யில் நிலவிய வறுமை, ஏழ்மை, ஒடுக்குமுறை, பொருளாதார ஏற்றத்தாழ்வு, கொடுமை ஆகியவற்றைக் களைய அறிவியல்பூர்வமாக பகுத்தாய்வுடன் இந்த சிக்கல்களை அணுகவேண்டும் என செயிண்ட் சைமன் வலியுறுத்தினார். வறுமையை போக்க முடியும், ஏழ்மையைப் போக்க, அவலங்களைப் போக்க சோச லிசத்தைக் கொண்டுவரவேண்டும் எனத் தெரிவித்த சைமன் பிரசாரத்தின் மூலமும், பரிசோதனையின் மூலமும், சிலரின் முன்மாதிரியான செயல்பாடுகளின் மூலமும் பிரான்சில் புதிய சமத்துவ சோசலிச சமூகத்தை அமைக்க முடியும் எனத் தெரிவித்தார். முதலாளித்துவ வளர்ச்சி முழுமை பெறாத நிலையில் முதிர்ச்சியடையாத கருத்தை இம்மூவரும் முன்வைப்பதாக ஏங்கெல்ஸ் விமர்சித்தார்.
![]()
1789ல் நடந்த பிரெஞ்சு புரட்சியின் போது செயிண்ட் சைமன் 30 வயதுக்குட்பட்ட இளைஞராகவே இருந்தார். அந்த எழுச்சியைக் கண்ட சைமன் அதனால் உந்தப்பட்டு பிரான்சில் சமத்துவத்தை ஏற்படுத்த ஆர்வத்துடன் முயற்சியை மேற்கொண்டார். அப்போது பிரான்சில் முதலாளிகள், தொழிலாளிகள், வணிகர்கள் என பலரும் இருந்த சமூக அமைப்பு நிலவி வந்தது. சோசலிசம் மற்றும் சமத்துவத்தை உரு வாக்குவதற்கு அவர் முன்வைத்த கருத்துகளில் ஒன்று முதலாளிகள் அவர்களின் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காகவும், சமூகத்திற்காகவும் தங்களை அறங்காவலர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
தொழிலாளர்களின் நலன்விரும்பும் வகையில் முதலாளிகள் செயல்பட வேண்டும். இரண்டாவதாக முதலாளிகள் பொதுநிர்வாகிகளாக இருக்க வேண்டும், மூன்றாவதாக முதலாளிகளுக்கு கடன்வழங்கும் வங்கிகள், வங்கி உரிமையாளர்கள் முதலாளிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் பொதுவானவர்களாக, நடுநிலைமையாக ஒரு ஒழுங்குமுறையான அமைப்பு முறையை உரு வாக்கக் கூடிய எல்லோருக்கும் பொதுவான பாரபட்சமற்ற அணுகுமுறையை வங்கி உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இது மனிதாபிமானத்துடன், நல்ல நோக்கத்துடன் செயிண்ட் சைமன் மேற்கொண்ட முயற்சி.

ஆனால், தொழில்வளர்ச்சி ஏற்படக்கூடிய அந்தக் காலகட்டத்தில்தான் முதலாளிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே முரண்பாடுகள், மோதல்கள், வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. முதலாளிகள் ஆளும் வர்க்கம் என்ற முறையில் தொழிலாளர்களு டன் முரண்பட்டே இருந்தனர். இதனால் செயிண்ட் சைமனின் முயற்சி தோல்வியடைந்தது. அவரால் வெற்றி பெற முடியவில்லை.
புயுரியர் சொன்னது என்ன?
1772ல் பிறந்து 1837ல் மறைந்த ஃபுயுரியர் பிரெஞ்சு புரட்சியின்போது இளைஞராக இருந்தார். ஃபுயுரியர் முதலாளித்துவ சுரண்டல்கள் குறித்து கடுமையாக விமர்சித்தும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் வாதாடினார். அன்றைக்கு இருந்த ஏற்றத்தாழ்வுகளை கடுமையாக சாடினார். முதலாளித்துவத்தையும், முத லாளிகளையும் கடுமையாக விமர்சித்தார். ஃபுயுரியர், செயிண்ட் சைமன் மாதிரியான பலரும் சமத்துவத்தை உருவாக்க வேண்டும், இணக்கமாக இருக்க வேண்டும் என முதலாளித்துவத்தை விமர்சித்துக் கொண்டே சமா தானப்பூர்வமாக இப்படிப்பட்ட முறையில் சோசலி சத்தை கொண்டுவர வேண்டும் என பிரச்சாரம் செய்த னர். பிரசாரத்தின்மூலமும், வேண்டுகோள் விடுப்ப தன்மூலமும் தொழிலாளர்கள் சந்தித்த பிரச்சனை களுக்கு தீர்வை கொண்டு வரமுடியாது, சமத்து வத்தைக் ஏற்படுத்த முடியாது. இதனால் ஃபுயுரியர் வாத மும் தோல்வியடைந்தது.
‘குழந்தை மனது’ ராபர்ட் ஓவன்
மூன்றாவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் ஓவன் 1771ல் பிறந்து 1858ல் மறைந்தார். இவரும் மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் ஆகியோருக்கு முன்னோடி. பிரெஞ்சு புரட்சிக்குப் பிறகு பிரெஞ்சு நாட்டைக் காட்டிலும் இங்கிலாந்தில் தொழிற்வளர்ச்சி வேகமாக ஏற்பட்டது. இதற்கு முக்கியமான காரணம் உலகின் பல நாடுகளும் இங்கிலாந்தின் காலனி நாடுகளாக இருந்ததால் அந்நாடுகளை சுரண்டி இங்கிலாந்தில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. இதன் பின்னணியில் சமூக சீர்திருத்தவாதியான ராபர்ட் ஓவன் நல்ல நோக்கத்துடன் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டார். ராபர்ட் ஓவன் குறித்து குறிப்பிடும் ஏங்கெல்ஸ் அவரை குழந்தை மனதுக்காரர் எனக் குறிப்பிடுகிறார். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றிய தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக மனிதநேயத்துடன் நடந்து கொள்பவராக இருந்தார். ஒருகட்டத்தில் பஞ்சாலை ஒன்றில் கூட்டாளியாக நிர்வாகப் பொறுப்புகளை கவனித்து வந்தார். பஞ்சாலை முதலாளி எனும் அடிப்படையில் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடனும் கூடிய 2,500 பேர் வசிக்கக் கூடிய குடியிருப்புகளை ஓவன் அமைத்துக் கொடுத்தார். மேலும் அவர்களுக்கு ஆதரவாக அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கக்கூடிய வகையில் செயல்பட்டார். இது புதுமாதிரியான சமூக அமைப்பாக தெரிகிறது. இப்படி இந்த குடியிருப்புகளை பல ஆண்டுகள் நடத்திவந்தார். இந்த முயற்சி குடியிருப்பு வசதிகள் கொண்ட குழந்தைகளுக்கு இரண்டு வய திலேயே பள்ளிக்கூடம் தொடங்கி நடத்தி வந்தார். குழந்தைகள் பள்ளிக்கூடம் வந்தால் வீட்டிற்கு திரும்பிபோக மனமில்லாத அளவிற்கு பள்ளிகளை நடத்தினார். மற்ற தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் 12 மணி நேரம், 13 மணி நேரம், 14 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். ராபார்ட் ஒவனை பொருத்தவரையில் அவருடைய தொழிற்சாலையில் 10.30 மணி நேர வேலை மட்டுமே. அந்த கால கட்டத்தில் அதுவே மனிதாபிமானமாக கருதப்பட்டது. ஏனெனில் அவர் மனிதாபிமானியாக இருந்தார்.
அடுத்ததாக பருத்தி பற்றாக்குறையினால் 4 மாதம் பஞ்சாலை இயங்காமல் பூட்டிக்கிடந்தது. சாதாரணமாக பஞ்சாலை இயங்காமல் போனால் கூலி கொடுக்க மாட்டார்கள். ஆனால் இங்கு நான்கு மாதம் ஆலை இயங்கவில்லை என்றாலும் தொழிலாளர்களுக்கு முழு சம்பளமும் வழங்கப்பட்டது. அப்படிப்பட்ட சோசலிச முறையில் தொழிற்சாலை இயக்கப்பட்டது. இதுபோன்று அனைத்து முதலாளிகளும் தொழிலாளர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்கினால், வேலை நேரத்தை குறைத்தால் சோசலிச சமூகத்தை உருவாக்கமுடியும் என நம்பினார். அதற்கேற்ற வேலைகளை ராபர்ட் ஓவன் செய்தார். இப்படிப்பட்ட கொள்கையை இங்கிலாந்தில் ராபார்ட் ஓவன் முன்வைத்தார்.
ஆனால் அவர் எதிர்ப்பார்த்தபடி அவர் முன்வைத்த திட்டத்திற்கு வரவேற்பில்லை. முதலாளிகளும், மதகுருமார்களும் எதிர்த்தனர். எதிர்பாராத விதமாக பத்திரிக்கைகளும் கேளி கிண்டல் செய்து அவருடைய கருத்தை எதிர்த்தனர். அவரின் முயற்சியை யாரும் ஆதரிக்கவில்லை என மிகவும் வருத்தப்பட்டார். ஒருகட்டத்தில் தொழில் நலிவடைந்து அமெரிக்காவிற்கு சென்று பிரச்சாரம் செய்தார். ஒரு கட்டத்தில் அனைத்து மூலதனத்தையும் இழந்து பஞ்சாலையை விட்டு வெளியேறி கடைசியில் தொழி லாளிகளோடு தொழிலாளியாக சேர்ந்தார். இவ்வாறு 30 ஆண்டுகள் தொழிலாளியாகவே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
அதன்பின் தொழிலாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தொழிற்சங்கத்தை தொடங்குகிறார்கள் அதற்கு தலைவராக பொறுப்பேற்றார். ஆக முதலாளியாக இருக்கும் ராபார்ட் ஓவன் தொழிலாளிகள் மத்தியில் சமத்துவநிலை ஏற்பட வேண்டும் என செயல்பட்டார். ஆனால் அவரை தவிர மற்ற முதலாளிகளும், பத்திரிக்கைகளும் இவரது கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து இதுபோன்ற சமத்துவத்துக்கான வேலையில் ஈடுபட்டுகொண்டே தொழிற்சாலையை நடத்த முடியவில்லை, அவர் செல்வத்தை இழந்தார்.வரு மானம் இல்லை கடைசியில் அவரும் தொழிலாளியாக மாறும் நிலை ஏற்படுகிறது. இதுபற்றி ஏங்கெல்ஸின் அந்த நூலில் விரிவாக விளக்கியிருக்கிறார்.
ஏங்கெல்சின் ஆய்வு
இங்கிலாந்தை சேர்ந்த ராபார்ட் ஓவன், பிரான்ஸை சேர்ந்த செயின்ட் சைமன் மற்றும ஃபுயுரியர் மூன்று பேரும் சோசலித்தை முன்வைத்தனர். ஆனால் அவர்களால் அதை நடைமுறையில் சாத்தியப்படுத்த முடியவில்லை, அவர்கள் தோல்வியுற்றனர் என்பதை ஏங்கெல்ஸ் பரிசீலனை செய்து விரிவாக இந்த புத்த கத்தில் மூன்று கட்டுரையில் எழுதியிருக்கிறார். 1848ல் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்டது. 1878 ஆம் ஆண்டு ஏங்கெல்ஸ் இந்த நூலை எழுதுகிறார். 1871 ஆம்ஆண்டு பிரெஞ்சு தலைநகரமான பாரீசை தொழிலாளி வர்க்கம் புரட்சியின் மூலம் கைப்பற்றி யது.

பாரீஸ் கம்யூன் என்று சொல்லக்கூடிய இப்புரட்சியினால் அதிகாரத்தை 71 நாட்கள் மட்டும தக்க வைக்க முடிந்தது. பாரீஸ் கம்யூன் அனுபவத்தையும் கணக்கில் கொண்டுதான் 1878ல் கற்பனாவாத சோசலிசமா? விஞ்ஞான சோசலிசமா? என்ற கட்டுரையை ஏங்கெல்ஸ் எழுதினார். அந்நூலில் இந்த மூன்று பேரின் அனுபவம் மட்டும் அல்லாமல் பொதுவாக தத்துவம், சோசலிசம், அரசியல் பொருளாதாரம் என மூன்று அம்சங்களையும் குறிப்பிட்டுள்ளார். மேற்கண்ட மூன்று சீர்திருத்தவாதிகளும் சமத்துவத்தை கொண்டு வரவேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு முயற்சிசெய்தாலும் அவர்களால் அதை எட்ட முடிய வில்லை.
![]()
கற்பனாவாத சோசலிசமா? விஞ்ஞான சோசலிசமா? எனப் பார்க்கும்போது மார்க்சிய தத்துவத்தை முன்வைத்த பொருள் முதல்வாத கண்ணோட்டத்தை கருத்தில் கொண்டு இந்த பிரச்சனையை பரிசீலிக்கவேண்டும் என பரிந்துரைக்கிறார். அப்படி என்றால் ஜெர்மானிய தத்துவத்தை கருத்தில் கொண்டு செயல்படுகிறார் அதாவது இயக்கவியல் பொருள்முதல்வாதம், வரலாற்றியல் பொருள்முதல்வாதம் இந்த தத்துவத்தின் அடிப்படையில் சோசலிசத்தை பற்றி பரிசீலிக்க வேண்டும் என ஏங்கெல்ஸ் வலியுறுத்துகிறார். இந்த தத்துவத்தை எதிர்ப்பவர்கள் இயக்கவியல் கண்ணோட்டத்தில் இந்த பிரச்சனையை அணுகவில்லை என குறிப்பிடுகிறார். பிரெஞ்ச் புரட்சியில் முதலாளிகள், கைவினை ஞர்கள் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக அந்த புரட்சியில் கலந்து கொள்கின்றனர். மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவ அழிவுக் குவியலின்மீது உருவாகிறது என்றனர்.
முற்போக்கும்… சுரண்டலும்…
பிரெஞ்சு புரட்சி மற்றும் இங்கிலாந்தில் புரட்சி நடந்த காலத்தில் முதலாளிகள் நிலப்பிரபுத்துவத்தை அழிக்கிற பாத்திரத்தை வகித்த காரணத்தால் அன்றைக்கு அவர்கள் முற்போக்காளர்கள். ஒரு காலத்தில் முற்போக்கு சக்தியாக இருந்த முதலாளிகள் தொழில்வளர்ச்சி ஏற்படும் காலத்தில் சுரண்டு பவர்களாக, முற்போக்கு தன்மை இழந்தவர்களாக மாறுகின்றனர். இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் ஒருகட்டத்தில் மாற்றம் ஏற்படும் என பார்க்க வேண்டியுள்ளது. பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் முதலாளித்துவம் வளர்கின்றபோது முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் இடையே வர்க்கப் போராட்டம் நடைபெறுகிறது. இப்படிப்பட்ட சூழலில் முதலாளிகள் உருவாக்கிய அரசியலமைப்பும், நீதிமன்றமும், நாடாளுமன்றமும் முதலாளிகளுக்கு ஆதரவாக நிற்கிறது. மூலதனமும், உழைப்பும் ஒருமித்த நலனைக் கொண்டது என்பது கற்பனாவாத சோசலிஸ்டுகள் உருவாக்கிய கருத்து. முதலாளிகள் உருவாக்கிய அரசமைப்பும், நீதிமன்றமும் தொழிலாளர்களுக்கு எதிராக முதலாளிகளுக்கு ஆதரவாக நிற்கும் போது எப்படி உபதேசத்தின் மூலம் சோசலிசத்தைக் கொண்டுவர முடியும்?எப்படி கற்பனையில் சமத்துவத்தைக் கொண்டு வர முடியும்?
முதலாளித்துவத்திற்கும், தொழிலாளிகளுக்கும் இடையே நடைபெறும் வர்க்கப் போராட்டத்தின் விளைவுதான் சோசலிசம். முதலாளித்துவத்தின் வீழ்ச்சியும், தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சியும் வரலாற்றின் தவிர்க்க முடியாத நிகழ்வு என மார்க்சும், ஏங்கெல்சும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் தெரிவிக்கின்றனர். எனவே ராபர்ட் ஓவன், செயிண்ட் சைமன், ஃபுயுரியர் ஆகியோர் தெரிவித்த கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது. முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்கமுடியாது. முதலாளிகளின் நலன் வேறு, தொழிலாளிகளின் நலன் வேறு. ஊதியம் கொடுக்கப் படாத உழைப்பே உபரி மதிப்பு. வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்து, உபரி மதிப்பு மூலமாக முதலாளித்துவ முறை பற்றிய ரகசியத்தை கண்டறிந்தது மார்க்ஸ் என்பதானால் நாம் என்றென்றும் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறோம்.
வர்க்கப் போராட்டம் என்பது தவிர்க்க முடியாதது என ஏங்கெல்ஸ் தெரிவிக்கிறார். இத்தகைய கருத்தை முதலாளிகள், தொழிலாளிகள், இரு வர்க்கங்களுக்கிடையேயான மோதல், முதலாளிகள் உரு வாக்கிய அரசு அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் எனவும், தொழிலாளர்கள் அதிகாரத்திற்கு வந்த பிறகு நிர்மாணிக்கப்படும் சோசலிசம் குறித்தும் விளக்கியுள்ளார். நிறைவாக இத்தகைய தொழிலாளர்களுக்கு பாட்டாளி வர்க்க கருத்தை கொண்டு செல்லவேண்டும். மார்க்சும் ஏங்கெல்சும் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே மார்க்சிய தத்துவத்திற்கு எதிராக எழுந்த கருத்துகளுக்கு மறுப்புகளையும், பதில்களையும் வழங்கியுள்ளனர். எனவே கற்பனைவாத சோசலிசத்தையும், விஞ்ஞான சோசலிசத்தையும் புரிந்து கொள்ள இந்த நூலை படிப்பதற்கு இந்த உரை உதவியாக இருக்கும்.
இன்று சர்வதேச சிவப்பு புத்தக தினம்
இப்புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com அல்லது 24332424 (அ) 24332924 என்கிற எண்களை தொடர்பு கொள்ளவும்.
நன்றி: தீக்கதிர் நாளிதழ்
நமது நிருபர் பிப்ரவரி 20, 2022
முஸ்லீம் மாணவிகளின் கல்வி உரிமை மறுக்கப்படுதல் – தமிழில்: ச.வீரமணி
கர்நாடகாவில் பாஜக-வினரும் இந்துத்துவாவாதிகளும் முஸ்லீம் எதிர்ப்பு, பிளவுவாத நடவடிக்கைகளில் இறங்கி, முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணியும் பழக்கத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.

உடுப்பியில் உள்ள அரசு புதுமுக வகுப்பு கல்லூரி (government pre-university college) ஒன்று தங்கள் கல்லூரி மாணவிகளில் ஆறு பேரை ஹிஜாப் அணிந்துவர வலியுறுத்தியதை, பாஜக-வின் ஏ.பி.வி.பி. என்னும் அகில் பாரதிய வித்யார்த்தி பரிசத் மாணவர் அமைப்பும், இந்து ஜகரன் வேதிகா என்னும் அமைப்பும் பயன்படுத்திக்கொண்டு, தங்கள் மாணவர்களும் காவி நிற ஹிஜாப் அணிந்து வருவார்கள் என்று கூறி கல்லூரியின் வாயிலில் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். இது சென்ற ஆண்டு டிசம்பர் 29 நடந்த சம்பவமாகும். அதன் பின்னர் இதே மாவட்டத்தில் குண்டாபூரில் மேலும் இரு கல்லூரிகளில், சில இந்து மாணவர்கள் காவி வண்ணத்தில் ஹிஜாப் அணிந்துவர அனுமதியளிக்க வேண்டும் எனக் கோருவதாகவும், எனவே முஸ்லீம் மாணவிகளும் ஹிஜாப் அணிந்துவரக் கூடாது எனக்கூறித் தடை விதித்திருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து ஏபிவிபி மற்றும் இதர இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் காவித் துண்டுகளை அணிந்துகொண்டு, “ஜெய் ஸ்ரீராம்” எனக் கோஷமிட்டுக்கொண்டு, கல்லூரிக்குள் நுழைய முயன்ற முஸ்லீம் மாணவிகளிடம் மோதுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தக் கல்லூரியில் அம்மாணவிகள் முன்னதாக ஹிஜாப் அணிந்து வர அனுமதிக்கப் பட்டிருந்தவர்கள்தான். அரசாங்க புதுமுக வகுப்புக் கல்லூரிகளில், எங்கெல்லாம் சீருடைகள் அணிய வேண்டும் என்று விதிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் முஸ்லீம் மாணவிகள் அணியும் ஹிஜாப் துணிக்கும் வண்ணம் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், காவிக் கும்பல் ரகளையில் ஈடுபட்டபின்னர் இவை அனைத்தும் மாறிவிட்டது.
ஹிஜாப் அணிந்துவந்த முஸ்லீம் மாணவிகள் கல்லூரி வளாகங்களுக்குள் நுழையும்போது அவர்களைத் தடுத்து நிறுத்திடும் காட்சிகள் கல்வி கற்க விரும்பும் முஸ்லீம் பெண்களைக் கற்க விடாமல் தடுத்திடும் அப்பட்டமான அநீதியாகும். இந்துத்துவா கும்பலைச் சேர்ந்த இளைஞர்கள், காவித் துண்டுகளை அணிந்துகொண்டு, கல்லூரிகளுக்குள் நுழையும் ஹிஜாப் அணிந்த முஸ்லீம் பெண்களிடம் மோதல் போக்கைக் கடைப்பிடித்தது, பல இடங்களில் மோதல்களாக வெடித்துள்ளன. இதன் விளைவாக கர்நாடக அரசாங்கம் மூன்று நாட்களுக்கு பள்ளிகளையும், கல்லூரிகளையும் மூடிவிட உத்தரவிட்டிருக்கிறது.
பிப்ரவரி 5 அன்று, அரசுக் கல்வித் துறையானது அரசு நடத்திடும் அனைத்துக் கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் சீருடைகளை நிர்ணயித்து ஓர் ஆணையை அனுப்பியிருக்கிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் சொந்த சீருடைகளைப் பின்பற்றிட வேண்டும். அரசாணையில் “சமத்துவம், ஒருமைப்பாடு மற்றும் பொது ஒழுங்கைப்” (“equality, integrity and public order) பாதித்திடாத விதத்தில் சீருடைகள் அணிந்துவரப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது.
இவ்வாறு, பாஜக அரசாங்கம் ஹிஜாப் அணிந்துவரும் பெண்களை அரசாங்கத்தின் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அனுமதித்திடக்கூடாது என்கிற இந்துத்துவா அமைப்புகளின் கோரிக்கைக்கு, இணங்கியிருக்கிறது.
இது, பாஜக மாநில அரசாங்கத்தின் சிறுபான்மையினருக்கு எதிரான சமீபத்திய நடவடிக்கை யாகும். மாணவர்களின் உடையில் மத அடையாளங்கள் எதையும் அனுமதிக்க மாட்டோம் என்ற பெயரில், முஸ்லீம் பெண்களின் கல்வி கற்கும் உரிமைகள் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியிட்டுக்கொண்டிருக்கும் அறிக்கைகளிலிருந்து, முஸ்லீம்கள் அவர்களின் மதஞ்சார்ந்த அடையாளங்களுக்காகக் குறிவைத்துத் தாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதும், இரண்டாம்தர பிரஜைகளாகக் கருதப்படுவதும், அரசமைப்புச்சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள சம உரிமைகள் மறுக்கப்படுவதும் தெளிவாகத் தெரிகிறது. மைசூர்-குடகு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பிரதாப் சிம்கா என்பவர் வெட்கமேதுமின்றி, “நீங்கள் ஹிஜாப், பர்தா அணியமுடியும் என்றால், மதராசாக்களுக்குப் படிக்கச் செல்லுங்கள்” என்று கூறியிருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஒட்டுமொத்தமாகப் பார்க்காமல், ஹிஜாப் பிரச்சனையை மட்டும் தனித்துப் பார்த்திடக்கூடாது. 2019இல் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணியைக் கவிழ்த்துவிட்டு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, மாநிலத்தில் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலைத் திணித்திட விடாது முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. 2020இல் அனைத்து வகையான கால்நடைகளையும் வெட்டுவதற்கு எதிராகக் கடுமையான சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. இந்தச்சட்டம் அடிப்படையில் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிரான ஒன்று. ஏனெனில் அவர்களில் பெரும்பாலானவர்கள் இறைச்சி வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறவர்கள்.

இதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு மதச் சுதந்திரத்திற்கான உரிமைப் பாதுகாப்பு (Protection of Right to Freedom of Religion Bill 2021) என்னும் ஒரு சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டது. இது, கட்டாய மத மாற்றத்திற்கு எதிரான ஒன்று என்ற பெயரில், கிறித்தவ சமூகத்தினரையும், மதக் கலப்புத் திருமணங்களையும் குறிவைத்துத் தாக்கும் விதத்தில் கொண்டுவரப்பட்டதாகும். பல இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பல்வேறு அமைப்புகள் உருவாக்கியுள்ள கண்காணிப்புக்குழுக்கள் பல்வேறு மதங்களைச் சார்ந்த இளைஞர்களும், இளைஞிகளும் கலந்து நட்புறவுடன் பழகுவதைத் தாக்குவது என்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கடற்கரை மாவட்டங்களில் இது வெட்கக்கேடான முறையில் அதிகரித்திருக்கிறது.
இதில் வேடிக்கை விநோதம் என்னவென்றால், இவ்வாறு கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று ஆணை பிறப்பித்துள்ள இதே கல்வித் துறைதான், மாநிலம் முழுதும் அனைத்துக் கல்லூரிகளிலும் சுதந்திர தினத்தின் 75ஆவது ஆண்டைக் கொண்டாடும் விதத்தில் சூர்ய நமஸ்காரம் நிகழ்ச்சியை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்திருக்கிறது.
கர்நாடக அரசாங்கம், முஸ்லீம் பெண்கள் கல்வி கற்பதற்கான அடிப்படை உரிமைக்கு எதிராக நடந்துகொண்டிருக்கிறது. ஒரு கல்வி நிறுவனத்தில் ஒருவர் தன் மதஞ்சார்ந்த அடையாளத்தை உடையின்மூலம் காட்டக்கூடாது என்றால், பின் சீக்கிய மாணவர்கள் பள்ளிகளில் தலையில் தலைப்பாகை (turbans) அணிவதை அனுமதிக்க முடியாது அல்லவா? முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிவதும், சீக்கிய மாணவன் தலைப்பாகை அணிவதும் அவரவர் மத நடவடிக்கைகளின் முக்கியமான அம்சமாகும்.
கல்வி கற்கவரும் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணியக்கூடாது என்னும் நடவடிக்கைக்குப் பின்னால், முஸ்லீம்களை இரண்டாம் தர பிரஜைகளாக்குவதற்கான முயற்சி ஒளிந்திருக்கிறது. இது குடிமக்களில் ஒரு பிரிவினரின் அரசமைப்புச்சட்ட உரிமைகள் சம்பந்தப்பட்ட அடிப்படை அம்சமாகும். பாதிப்புக்கு உள்ளான மாணவிகளில் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு, விசாரணையில் இருந்து வருகிறது. இதன்மீது உயர்நீதிமன்றத்தின் விரிவான அமர்வு தீர்மானித்திட இருக்கிறது. அரசமைப்புச்சட்டத்தின்கீழ் சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள உத்தரவாதங்களின்படி, கர்நாடக அரசாங்கத்தின் பாகுபாடான ஆணை ரத்து செய்யப்பட வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
(பிப்ரவரி 9, 2022)
நன்றி:-பீப்பிள்ஸ் டெமாக்ரசி
தைரியம் மிக்க சிறுபான்மைப் பெண்களை மிரட்டும் ‘புல்லி பாய்’ செயலி – மரியம் தவாலே | தமிழில்: தா.சந்திரகுரு
‘சுல்லி டீல்ஸ்’ செயலிக்குப் பிறகு இப்போது மிகவும் இழிவான ‘புல்லி பாய்’ செயலி முஸ்லீம் பெண்களைக் குறிவைத்து சமூக ஊடகங்களுக்குள் நுழைந்துள்ளது. குற்றவாளிகள் மீது ஆறு மாதங்களுக்கு முன்பாக முதல் சம்பவத்தின் போதே கடுமையான நடவடிக்கைகளை காவல்துறை எடுத்திருந்தால், இப்போது சமீபத்தில் நடந்தேறியுள்ள இந்த நிகழ்வு நடந்திருக்காது என்று பெண் ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஐந்து பெண்கள் அமைப்புகள் இந்தப் பிரச்சனையில் உடனடியாகத் தலையிடுமாறு கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மனு அளித்துள்ளன. அதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் (AIDWA) பொதுச் செயலாளரான மரியம் தவாலே டெக்கான் ஹெரால்டின் ஷெமின் ஜாயிடம் உரையாடினார்.
பெண்களைப் பொறுத்தவரை மிகவும் கசப்பான செய்தியுடன் இந்தப் புத்தாண்டு தொடங்கியிருக்கிறது. இப்போது ‘புல்லி பாய்’ என்ற செயலியை நாம் காண்கிறோம். இந்தச் செயலி ‘சுல்லி டீல்ஸ்’ பிரச்சனை ஓய்ந்த சில மாதங்களிலேயே வந்திருக்கிறது. இப்படிப்பட்ட சம்பவங்களை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
அநீதிக்கு எதிராக, தங்களுக்கு இழைக்கப்படும் அட்டூழியங்களுக்கு எதிராகக் குரலை உயர்த்தி வருகின்ற துணிச்சலான சிறுபான்மைப் பெண்களை அச்சுறுத்துவதாக, கலவரப்படுத்துவதாகவே அது இருக்கின்றது. ஆட்சியில் இருக்கும் பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணியால் இந்த வகையான அரசியல் சூழ்நிலையில் பயன்படுத்தப்படுகின்ற தந்திரங்களாக அவை இருக்கின்றன. சிறுபான்மையினரைக் குறிவைத்து தாக்குதல் நடத்துபவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையுமே எடுக்கப்படவில்லை என்பதைக் காண முடிவது இதுபோன்ற குண்டர்களை மேலும் ஊக்குவிக்கிறது.
‘சுல்லி டீல்ஸ்’ வந்த போது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதாக இல்லை என்று நினைக்கிறீர்களா? அதுவே ‘புல்லி பாய்’ செயலிக்குப் பின்னால் இருப்பவர்களுக்கு உத்வேகத்தை அளித்ததா?
முற்றிலும் சரி. முதல் தகவல் அறிக்கை பதிவானதும் இணையதளம் அல்லது செயலி முடக்கப்பட்டது என்பதே அமைச்சர் கூறிய முதல் விஷயமாக இருந்தது. அவர்கள் மீது தண்டனை அளிக்கின்ற வகையிலான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. துரதிஷ்டவசமாக இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்களைச் செய்பவர்களைத் தொட்டு விடாத சூழல் ஏற்பட்டுள்ளது. சிறுபான்மையினரைக் கொல்வதற்கான வெளிப்படையான அழைப்பை விடுத்த தர்ம சன்சத் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு எதுவும் நடக்கவில்லை. மனுவாதிகளின் கருத்துப்படி அவர்கள் தேச விரோதிகள் கிடையாது. ஆனால் அதே சமயத்தில் அநீதிக்கும், கொடுமைகளுக்கும் எதிராக குரலை உயர்த்துபவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன. இத்தகைய போக்கிற்கு எதிராகத்தான் நாம் இப்போது போராட வேண்டியுள்ளது.
அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?
இந்திய மாதர் தேசிய சம்மேளனம், இந்திய ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம், பிரகதிஷீல் மகிளா சங்கதன், அகில இந்திய மகிளா சன்ஸ்கிருதிக் சங்கதன் (NFIW, AIDWA, AIPWA, PMS, AIMSS) ஆகிய ஐந்து பெண்கள் அமைப்புகள் தலையிடுமாறு கோரி குடியரசுத் தலைவருக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளோம். துரதிர்ஷ்டவசமாக ஓராண்டிற்குள்ளாக இரண்டாவது முறையாக பெண்கள் வெறுப்பு குறித்து உருவாகியுள்ள வெட்கக்கேடான காட்சியை நாம் கண்டு கொண்டிருக்கிறோம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம்.
அநீதிக்கும் ஊழலுக்கும் எதிராக எழுதி வருகின்ற, போராடுகின்ற துணிச்சலான முஸ்லீம் பெண்களை அவமானப்படுத்தவும், பயமுறுத்தவுமே இதுபோன்று செய்யப்படுகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது உத்தரப் பிரதேசம், தில்லியில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்றாலும் துரதிர்ஷ்டவசமாக அதன் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு எதிராக இழைக்கப்படும் குற்றச் செயல்கள் குறித்து அரசு நிர்வாகத்தின் பிரிவுகள், நீதித்துறை ஆகியவற்றின் செயலற்ற தன்மை அவை வெறுமனே பார்வையாளர்களாக இருந்து வருகின்ற போக்கின் ஒரு பகுதியாகவே உள்ளது என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹிந்து மதத் தலைவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் தண்டனை எதுவுமின்றி இனப்படுகொலைத் தாக்குதல்களுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த அட்டூழியம் நடைபெற்றுள்ளது என்பதையும் நாங்கள் அந்தக் கடிதத்தில் குடியரசுத் தலைவருக்கு நினைவுபடுத்திக் காட்டியுள்ளோம்.
சமீபத்திய நிகழ்வை சமூகத்தில் உள்ள மதச்சார்பற்ற பிரிவினரை மேலும் ஓரம் கட்டுகின்ற வலதுசாரிகளின் திட்டம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ஆமாம். மதச்சார்பற்ற வெளியை மட்டுமல்லாது, முற்போக்கான, ஜனநாயக, மதச்சார்பற்ற விழுமியங்களை முன்னிறுத்தி நம் நாட்டில் குரல் எழுப்ப முயன்று கொண்டிருக்கும் அனைவரையும் முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்ற திட்டமாகவே அது உள்ளது. நமது அரசியலமைப்பை தங்களுடைய ‘மனுவாதி’ முறைக்கு மாற்ற இந்த பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணி விரும்புகிறது.
அவர்களைப் பொறுத்தவரை அதிகாரம் பெற்ற பெண்கள் ஒரு பிரச்சனையாகவே இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா?
ஆம். அவர்களைப் பொறுத்தவரை பெண்கள் அடிபணிந்து செல்ல வேண்டும், அடக்கமாக இருக்க வேண்டும், எதிராக குரல் உயர்த்தக் கூடாது.
பெண்களின் திருமண வயதை பதினெட்டு ஆண்டுகள் என்பதிலிருந்து இருபத்தியோரு ஆண்டுகளாக அதிகரிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ள இந்த நேரத்தில் இத்தகைய தாக்குதல்கள் வந்துள்ளன. அது ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை நோக்கிய முயற்சியாக இருக்கலாம் என்று நினைக்கிறீர்களா?
அது ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை நோக்கி இருப்பதாக நான் கூற மாட்டேன். உண்மையில் அது ‘மனுவாதி’ கலாச்சார அமைப்பை நாட்டின் மீது திணிக்கும் பாதையை நோக்கியதாக இருக்கின்றது. ஒரே மாதிரியான குடிமைச் சட்டம் என்றிருக்க முடியாது என்றாலும் அது பாலினம் சார்ந்த சட்டமாக இருக்கலாம் என்று நாங்கள் கூறியுள்ளோம்.
பெண்களின் திருமண வயது அதிகரிக்கப்படுவதை ஏன் எதிர்க்கிறீர்கள்?
அந்த திருத்தத்தில் பல சிக்கல்கள் உள்ளன. கல்வி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு என்பதே அரசாங்கம் முன்வைக்கின்ற வாதங்களாக இருக்கின்றன. அந்த இரண்டு வாதங்களும் பொய்யாகவே இருக்கின்றன. சிறுமிகள், பெண்களுடைய வாழ்நாள் முழுவதற்கும் அவர்களுக்கான ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவது, அதே நேரத்தில் அவர்களின் சுதந்திரத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவது – குறிப்பாக குடும்பம், சமூகம், கண்காணிப்பு அமைப்புகள் அல்லது அரசாங்கத்தால் வற்புறுத்தப்படாமலும், கட்டாயப்படுத்தாமலும் திருமணம், தாய்மை குறித்து முடிவெடுக்கும் உரிமைகளை வயதுவந்த பெண்களுக்கு வழங்குவதன் மூலம் தாய், குழந்தை ஆரோக்கியம் குறித்து இருந்து வருகின்ற பிரச்சனைகளைத் திறம்பட தீர்த்துக் கொள்ள முடியும் என்றே நாங்கள் நம்புகிறோம்.
மேலும் அந்த திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால், வயது வந்தவர்களுக்கிடையில் நடைபெறுவதாக இருக்கின்ற இருவரும் ஒருமித்து செய்து கொள்ளும் திருமணம் குற்றச்செயலாகி விடும் என்பதால், வயது வந்த பெண்களின் சுதந்திரம் மேலும் பாதிக்கப்படும். அதுமட்டுமல்லாது திருமண வயதை உயர்த்தி, ஒருமித்த உறவை குற்றப்படுத்திய செயலுக்காக ஒரு பையனை சிறையில் அடைப்பதற்கு நாம் எப்படி சம்மதிப்பது?
2000ஆம் ஆண்டிலிருந்து பதின்ம வயது திருமணங்கள் 51 சதவிகிதம் குறைந்திருப்பதாக பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2019ஆம் ஆண்டில் வெளியான அரசு அறிக்கை, திருமணம் செய்து கொள்கின்ற சராசரி வயது 22.1 ஆண்டுகள் என்று அதிகரித்துள்ளதாகக் கூறுகிறது. சிறுமிகளோ அல்லது சிறுவர்களோ முன்கூட்டியே திருமணம் செய்து கொள்வதை விரும்பவில்லை என்பதே அதன் பொருள் ஆகும்.
அப்படியென்றால் அவ்வாறான திருமணங்கள் எங்கே நடந்து கொண்டிருக்கின்றன? அவ்வாறு திருமணம் செய்து கொள்பவர்கள் அடிப்படையில் வாழ்வாதாரம் மற்றும் கல்விக்கு வழி இல்லாது மிகவும் ஏழ்மையில் உழல்கின்ற மக்களாகவே இருக்கின்றார்கள். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க நிதி சுதந்திரம் அடிப்படைத் தேவையாக உள்ளது. அதேசமயம் சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் பெண்களிடையே அதிக அளவிலே வேலையின்மை நிலைமையை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. இந்த அரசால் அதற்கெல்லாம் தீர்வு காண முடியவில்லை. அந்தக் காரணிகள் எதையும் தீர்த்து வைக்காமல், இந்திய மக்களைத் தவறாக வழிநடத்துகின்ற இந்த முடிவை அரசு கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது.
https://www.deccanherald.com/national/bulli-bai-app-to-intimidate-the-courageous-minority-women-says-mariam-dhawale-1067727.html
நன்றி: டெக்கான் ஹெரால்டு
தமிழில்: தா.சந்திரகுரு








