Itrupothal Poem by Era Thamizharasi. இரா. தமிழரசியின் இற்றுப்போதல் கவிதை

இற்றுப்போதல் கவிதை – இரா. தமிழரசி




வழுக்கு நிலத்தில்
பற்றிய கரத்தைப்
பட்டென உதறிப்பிரிதல்..
உணர்வுப் பெருக்கில்
இதயம் பகிர்கையில்
அலைபேசி இணைப்பைச்
சட்டெனத் துண்டித்தல்…
‘சாப்டியா’ எனும் கேள்விக்கு
நாகரீகம் கருதியேனும்
எதிர்வினா வினவாதிருத்தல்… பொருட்களை நேசித்து
மனித மனங்களை
கசக்கித் தலைசுற்றி
தண்டவாளத்தில் எறிதல்…. வாழ்க்கைக்கான அர்த்தமென
இறுமாந்து இருப்போர்க்கு
சில மணித்துளிகளைக்கூட
கொடையளிக்காது மௌனித்தல்…
சுவர்களை இணைக்கும்
அறைக்கதவுகளை
அறைந்தறைந்து சாத்தி
இதயக்கதவை
இற்றுப்போக விடுதல்..
அன்றாடம் புகைவதைவிட
அக்கினியில் மூழ்கி
அடர்வனத்தின்
அமைதி தழுவ நிற்கலாம்
நிராதரவாக….!