கள்ளப் புன்னகை கவிதை – வளவ. துரையன்
உன் கேள்வியின் பொருள்
எனக்குப் புரிந்து விட்டது.
விடையையும் சொன்னேன்.
உனக்கு விளங்கவில்லை.
தேர்வறையில் அங்குமிங்கும்
பார்த்துத் திகைப்பவனாக இருக்கிறாய்.
கூட்டத்தைவிட்டுப் பிரிந்த
ஒற்றைக் கருப்பு வாத்து போல
அலைகிறாய் மனத்துள்ளே.
இங்கே போட மாட்டார்கள்
எனத் தெரிந்தும் யாசிக்கும்
இரவலனா நீ?
ஒரு கல்லைக் குளத்தில் எறிந்தால்
உருவாகும் நூறு வட்டஙக்ள் போல
நீ உருவாக்கிக் கொள்கிறாய்.
தெளிவான ஓடையினடியில்
தெரியும் கூழாங்கல் போல
என் பதில் தெரிந்தும்
கள்ளப்புன்னகை புரிகிறாய்.
எத்தனை நாள்கள் நடிப்பாய்?
காலம் கண்களை மூடிக்கொண்டு
கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.
– வளவ. துரையன்
வசந்ததீபன் கவிதைகள்
உவந்தளித்த பயணம்
**************************
விழிகளில் நிறைந்தாய்
இதயத்தில் கலந்தாய்
உயிரில் உறைந்தாய்என்னைத் தின்ன வா
என்னைச் சுவைக்க வா
என்னை ருசிக்க வா
என் இதயம் வெடித்திடுமோ என்றிருக்கிறது
என் உடல் உருகிடுமோ என்றிருக்கிறது
என் உயிர் காற்றில் கலந்திடுமோ என்றிருக்கிறது
கனவுகளில் உன்னைக் கட்டி அணைக்கிறேன்
கனவுகளில் உன்னை முத்தமிடுகிறேன்
கனவுகளில் உன்னுள் மூழ்கித் திணறுகிறேன்
இவ்வளவு அழகா ?
இவ்வளவு இனிப்பா ?
இவ்வளவு இம்ஸையா ?
இதயம் வெடிச்ச கதை
இளம் பூ சிதைந்த வதை
காம மிருகங்களை ஏற்றணும் சிதை
வேர்வையால் வரைந்தான் வேடிக்கை பார்த்தார்கள்
கண்ணீரால் ஓவியமாக்கினான் பரிதாபப்பட்டார்கள்
ரத்தத்தால் தீற்றினான் பாவமென்று சொல்லிப் போனார்கள்
இலக்கியம் எழுதி பிழைத்தவனில்லை
விற்று வாழ்பவர் ஆயிரம்
தமிழால் கண்டமானோர் கணக்கில்லை
நீதிமான்கள் தொலைந்து போனார்கள்
அழுகையும் ஒப்பாரியும் நின்றபாடில்லை
நீதியும் தர்மமும் தெருவில் திரிகின்றன
அவன் இறந்து விட்டான்
நீங்கள் உயிர்ப்போடு வாசிக்கிறீர்கள்
கவிதை யோசிக்கிறது.
உறுவலியில் இடறி விழுகிறேன்
***************************************
உறங்கிப் போகிறேன்
உலகம் மறந்து போனது
கனவுகள் நடமாடத் தொடங்கின
பம்பரம் சுழல்கிறது
அந்தரத்தில் ஒரு விளையாட்டு
ஆட்டுவிப்பவர் ஆடும் ஆட்டம்
ஒரு கோபம் குறுக்கிட்டது
இன்னொரு கோபம் கொந்தளித்தது
கோபங்கள் மூர்ச்சையாகி விழுந்தன
அவளைப்பற்றி அவனுக்கும்
அவனைப்பற்றி அவளுக்கும்
குடப்பாலில் துளி நஞ்சாய் சந்தேகம்
சொல்லில் விஷம்
புன்னகையில் கத்தி
துரோகிகளின் ஆயுதங்கள் இரக்கமற்றவை
சொல்லைக் கொத்திச் செல்கின்றன.
நெல்லென்றால் பசி தீர்க்கும்
பாவம் சிட்டுக்குருவி
பிடிக்கப்பட்டார்கள் அவர்கள்
அவன் விடுவிக்கப்பட்டான்
அவள் மட்டுமே தண்டிக்கப்பட்டாள்.
திணிக்க முற்படாதீர்கள்
பலவந்தப்படுத்த முனையாதீர்கள
பூவும் மொழியும்
ஒன்றென புரிந்து கொள்ளுங்கள்
பிச்சையெடுக்கிறார்கள் மன்னர்கள்
அதிகாரங்களில் பலியாகிறார்கள் ஏதுமற்றவர்கள்
பெண்ணை சொத்துக்காக கொன்றார்கள்
எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை
பழிவாங்க பேய்வரும்
என்கின்றன கதைகள்
தூரத்தில் மலைநகரம்
மஞ்சள் வெண்மை விளக்குகளால் புன்னகைத்து அழைக்கிறது
தினம் மனசுக்குள்
நகரத்தை தரிசிக்கப் போய்வருகிறேன்.
வசந்ததீபன்
ஹைக்கூ கவிதைகள் – கார்கவி
எட்டிப்பார்க்கும் குழந்தை
எட்டுக்கட்டையை மிஞ்சுகிறது
தாலாட்டு.
கட்டிய புடவையில்
கையசைக்கும்
இளம் புல்லாங்குழல்
உயர்ந்த பனைமரங்கள்
இறக்கியும் தீரவில்லை
ஒற்றயடி பயணபோதை.
நீளமான நடைபாதை
உச்சி வெயிலில் உடன்வரும்
கூன் விழுந்த நிழல்.
புத்தன் பேரனின்
புதிய துண்டிலில் சிக்கியது
நிலா.
திரைக்குள் படர்ந்த இருள்
வேகமாக ஒளியூட்டுகிறது
மின்னிமினிப்பூச்சி.
ஆளில்லாத வாகனம்
அடைக்கப்பட்ட நெகிழியில்
ஐந்தறிவின் தாகம்.
தனிமையில் பறவை
பொழுது சாயும் நேரத்தில்
நிழலோடு உறவாடும் இருள்.
எடுத்தெறிந்த கல்லில்
எத்தனை காயங்கள்
குளத்தில் அலைகள்.
மௌனம்
மொத்தமாக சொல்லிவிடுகிறது
கண்கள்
தேடும் கண்கள் சிறுகதை – சுதா
தியாகராய நகர் ரங்கநாதன் தெரு
தெரு முழுவதும் கூட்டம் நிரம்பி வழிகிறது.விசாகன் தன் மனைவி மித்ரா உடன் தி நகர் ரங்கநாதன் தெருவை அடைந்ததும் விசாகனின் முகம் ஏனோ சரியில்லை.
விசாகனுக்கு தன் பால்ய கால நினைவுகள் அங்கங்கே அசைபோட்டுக் கொண்டிருந்தது.இந்த எண்ணத்தை மித்ரா எப்படியோ கணித்து விட்டாள்.என்னாச்சு விசா ஏதோ போல இருக்க உடம்பு சரி இல்லயா?நாமவேன்னா வீட்டுக்கு போய்யிடலாமா?
இந்தக் கேள்வியை விசாகனுக்கு அதிர்ச்சியாயிருந்தது. தன் மனதை எப்படி இவள் படித்தாள்.என நினைத்துக்கொண்டே அப்படி எல்லாம் ஒன்னும் இல்லப்பா ஊரிலிருந்து வந்த சோர்வு வேற ஒன்னும் இல்ல வா கடைவீதிக்கு போவோம்.என்று மணிக்கட்டைப் பிடித்து நடந்தான்.
அப்போது மித்ரா நினைத்துக்கொண்டாள். இரவோடு இரவாக நானும் இவரோடு தான் ஜப்பானில் இருந்து வந்தேன்.எனக்கு மட்டும் சோர்வே இல்லையே ஒருவேளை இப்பெண்களுக்கு கடைவீதிக்கு போவதென்றால் சோர்வு இருக்காதோ என்னவோ என்று நினைத்து தனக்குள்ளே சிரித்து கொண்டாள்.
விசாகனோடு மித்ராவும் கடைவீதிக்கு கூட்டத்தில் நடந்தாள். என்று சொல்வதைவிட நகர்ந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்.ரங்கநாதன் தெருவில் மட்டும் எப்படித்தான் இத்தனை கூட்டம் வருகிறது.சும்மா நின்றால் போதும் அவர்களை நம்மை நகர்த்தி நகர்த்தி தேவையான கடையின் முன்பு நிற்க வைத்து விடுவார்கள் போலும்.
இப்போதும் மித்ரா கவனிக்கத் தவறவில்லை விசாகனின் கண்கள் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டே இருந்தது.என்னவாக இருக்கும் விசா இப்படி நடந்து கொள்பவன் இல்லையே.ஏன் இவன் என்னிடம் எதையோ மறைக்கிறான்.குழப்பத்தோடு கடைக்குள் நுழைந்தாள்.
கடைக்குள் சிறு புன்னகை
கடைக்குள் சென்றதும் மித்ரா தனக்கான பொருட்களைத் தேட ஆரம்பித்தாள்.இதை வாங்கலாமா அதை வாங்கலாமா என்று விசாகன் இடத்தில் அப்பப்போ கேட்டுக் கொண்டாள்.மாமியார் மாமனார் தன் பிள்ளைகள் நாத்தனார் பிள்ளைகள் மித்ராவின் அம்மா அப்பா என்று எல்லோருக்கும் தேவையானதை அலசி ஆராய்ந்து வாங்கிக் கொண்டிருந்தாள்.
என்னதான் மித்ரா பொருட்களும் துணிமணிகளும் வாங்குவதே கவனமாக இருந்தாலும் ஒருகண் விசாகனை கவனித்துக் கொண்டுதான் இருந்தது.இவன் ஏதோ ஒன்றைக் கட்டாயம் மறைக்கிறான் என்பது மட்டும் அவளுக்கு உறுதியாகிவிட்டது.
கடைக்குள் யாரையோ பார்த்து விட்டது போல் கொஞ்சம் நில்லு மித்ரா நான் இதோ வருகிறேன்.என்று ஓட்டமும் நடையுமாய் போன விசாகனைப் பார்த்து சரி போய்ட்டு வாங்க என்று கண்ணசைப்பதற்குள் ஓடி விட்டான்.நீண்ட நாள் தேடிக்கொண்டிருந்த ஒரு பெண்ணை திடீரென்று பார்த்தது போல் ஆர்வமாய் போய் அந்தப் பெண்ணின் முன்பு நின்றான் ஆனால் அப்போதுதான் அவனுக்குத் தெரிந்தது அவன் தேடி வந்த பெண் அவள் இல்லை என்று.அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டு விட்டு விசாகன் திரும்புவதற்குள் அத்தனை பொருட்களும் எடுத்தாகி விட்டது.பில் போடுவதற்காக மித்ரா காத்திருந்தாள்.
என்னங்க அவ்வளவு வேகமா போனீங்க எங்க போனீங்க யாரை பார்த்தீங்க உங்க பிரண்டா என்று கேட்ட மித்ராவிற்கு இல்லை பா ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்தேன் என்ற பதில் போதுமானதாக இல்லை.இவன் நடந்துகொள்வது இவளுக்கு பெரும் புதிராக இருந்தது. ஒருவழியாக வாங்க வேண்டியதை வாங்கி முடித்துவிட்டு வீடு வந்தனர். மித்ரா விற்கு என்ன விஷயம் என்று தெரிந்து கொண்டே ஆக வேண்டும் போல் இருந்தது.
விசாகனின் அம்மாவும் மித்ராவும்
இவர்கள் வீட்டிற்கு போகவும் விசாகனின் அம்மா சாப்பாடு பரி மாறவும் சரியாக இருந்தது.நல்ல வேலை அம்மா நீங்க சமைச்சீங்க எனக்கு பயங்கரமான பசி என்று மித்ரா தட்டில் சப்பாத்தியை போட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.விசாகன் சாப்பாட்டில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை இருந்தாலும் பெயருக்கு சாப்பிட்டான்.
எல்லோரும் சாப்பிட்டு முடித்து கொஞ்ச நேரம் மொட்டைமாடியில் உலாவலாம் உட்கார்ந்து பேசலாம் என்று மாடிக்குப் போனார்கள் ஆனால் விசாகன் மட்டும் தலை வலிக்கிறது என்று தனது ரூமுக்கு போய் விட்டான்.இது மித்ராவுக்கு ரொம்ப வித்தியாசமான அனுபவமாக இருந்தது.எப்போதும் விசாகன் தான் எல்லோருடனும் சேர்ந்து சாப்பிட வேண்டும் பேச வேண்டும் என்று விரும்புவான்.ஆனால் இன்று நாள் முழுவதும் விசாகனின் நடவடிக்கை சரியானதாக இல்லை என்றே தோன்றியது மித்ராவுக்கு.
இதை எப்படியாவது அம்மாவிடம் கேட்டுவிட வேண்டும் என்று எண்ணி மொட்டைமாடியில் எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது மித்ரா மட்டும் தனியே இருந்தாள்.எப்படியாவது கேட்டுவிட வேண்டும் என்று நினைத்தவளுக்கு சந்தர்ப்பம் வாய்க்கவில்லை சரி நாளை இதுபற்றி கட்டாயம் அம்மாவிடம் பேச வேண்டும் என்ற முடிவோடு இவளும் படுக்கைக்கு சென்று விட்டாள்.
மறுநாள் காலை
மித்ரா காலை எழுந்ததும் விசாகன் உறங்கிக் கொண்டிருந்தான் இன்று எப்படியாவது அம்மாவின் காதில் இதை போட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு மாறவில்லை.விசாகன் தூங்கிக்கொண்டிருந்தான்.
மொட்டைமாடியில் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த விசாகனின் அம்மாவைத் தேடி மொட்டை மாடிக்கு வந்து விட்டாள் மித்ரா.அம்மா என்ன செஞ்சிட்டு இருக்கீங்க என்று கேட்டவாறே இவளும் கோப்பையில் தண்ணீர் எடுத்து செடிக்கு ஊற்றிக் கொண்டே பேச்சு கொடுத்தாள்.ஆமாம் மித்ரா எழுந்ததும் முதல் வேலையாக செடிக்கு தண்ணி விட்டுட்டா வெயில் வரதுக்குள்ள கீழே போய் சமையல் வேலையை ஆரம்பிச்சுடலாம் என்ற விசாகனின் அம்மாவின் வார்த்தைகள் மித்ராவிற்கு கவனத்தை ஈர்க்கவில்லை.
என்ன மித்ரா ஏன் ஒரு மாதிரியா இருக்க நேத்துல இருந்து நீ சரி இல்லையே.. அம்மா உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்.சொல்லுமா என்று மாடி தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த கோதை வாலியைக் கீழே வைத்துவிட்டு முந்தானையை கைகளை துடைத்த படி கேட்டாள்.
அம்மா விசாகனின் நடவடிக்கை ஒன்றும் சரியில்லையே எதையோ இழந்ததை போலவே இருக்கான் உங்களுக்கு ஏதாவது தெரியுமா.நேற்று கடைக்கு சென்ற போதும் அவன் சரியாக என்னோடு பேசவில்லை எதையோ தொலைத்து அதைப்போலவே இருக்கிறான். நேற்று மொட்டைமாடியில் எல்லோரும் இருந்தோம் அவன் கலந்து கொள்ளவில்லை.நீங்கள் கவனிச்சீங்களா?
நானும் கவனித்தேன் மித்திரா காலையில சுரேஷ் வந்தான்ல யார் என்பது போல் பார்த்த மித்ரா.நினைவு வந்தவளாய் பிரண்டு தான மா ஆமாம் மித்ரா அதுக்கப்புறம் தான் அவன் சரியில்லை.என்னவோ போங்க மா உங்க பிள்ளைய என்னன்னு கேளுங்க என்று சொல்லிக்கொண்டே இருவரும் அடுப்படி நோக்கி நடந்தார்கள்.
அன்று சமையல் செய்யும்போது விசாகனும் சேர்ந்து கொண்டான் சப்பாத்திக்கு மாவு பிசையும் போது திரட்டவும் பேச்சு சிரிப்பு எனவே இயல்பாகவே கிடந்தது.விசாகனின் மாற்றத்தை எல்லோரும் மறந்தும் போனார்கள். மறு நாள் எல்லோரும் மகாபலிபுரம் போகலாம் என முடிவு செய்ததோடு அன்றைய நாளும் முடிந்தது.
மகாபலிபுரத்தில் ஒரு நாள்
மகாபலிபுரம் காலையில் எட்டு மணிக்கு போவதாக முடிவானது எல்லோரும் அதற்கான ஆயத்தங்கள் செய்துகொண்டிருந்தார்கள் விசாகனின் அம்மா கோதை காலையில் சாப்பிட டிபன் செய்து கொண்டிருந்தாள்.மித்ராவும் அப்பப்போ ஒத்தாசை செய்து கொண்டிருந்தாள்.
கடையில போய் சாப்பிட்டுக்கலாம்னு சொன்னா கேக்குறீங்களா மா என்று செல்லமாக கோபித்துக் கொண்டான் விசாகன்.விசாகனுக்கு கடை சாப்பிட பிடிக்காது தன் அம்மா கையில் சமைத்து சாப்பிடுவது தான் அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.மகனுக்கு பிடிக்கும் என்பதற்காக எவ்வளவு வேலை இருந்தாலும் சலிக்காமல் செய்வாள் கோதை ஆனால் வீட்டை விட்டு வெளியேறியதும் விசாகனின் கண்கள் எதையோ தேடத் துவங்கியது.
விசாகனும் விசாகனின் மகன் யத்திக்கும் போட்டி போட்டுக் கொண்டு கிளம்பினார்கள்.வீடே அல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது.எல்லாவற்றையும் எடுத்து காரில் வைத்து எல்லோரும் கிளம்பினார்கள்.விசாகன் அம்மா அப்பா மனைவி மகன் யதிக் என காரில் அடைத்துக்கொண்டு கிளம்பினார்கள்.பாட்டு பேச்சு என குதூகலமான பயணம் துவங்கியது. ஆனால் வீட்டை விட்டு வெளியேறியதும் விசாகன் என் கண்கள் எதையோ தேடத் துவங்கியது தேடிக்கொண்டே இருந்தது.
மகாபலிபுரம் அடைந்ததும் கடற்கரையில் கால் நனைத்து லைட்ஹவுஸ் மேலே ஏறி கடலை ரசிக்க விசாவுக்கு மித்ராவுக்கு நீண்டநாள் ஆசை.இன்று எப்படியாவது லைட்ஹவுஸ் மேலே ஏறி விட வேண்டும் என்பதே இருவரின் ஆசையும்.விசாகனின் அம்மாவும் அப்பாவும் யத்திக்கும் நான் வரவில்லை நீங்கள் போங்கள் என்று கூறிவிட விசாகனும் மித்ராவும் இளம் ஜோடிகளை போல இரு கை கோர்த்து கைகள் வீசி பாட்டுப் பாடிக் கொண்டே லைட்ஹவுஸ்சை நோக்கி நகர சில்லென்ற காற்று முகம் முழுவதும் பட்டு இன்னும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
லைட் ஹவுஸ் மேலே ஏற டிக்கெட் வாங்க வரிசையில் நின்றார்கள் இவர்கள் பின்னால் நின்ற இரு ஆண்கள் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.அவர்கள் பேசிய வார்த்தைகள் மட்டும் காதில் மரண அடியாய் விழுந்தது விசாகனுக்கு.
அவர்கள் இதைத்தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.அந்தப் பிள்ளை நல்லா தான் பா படிச்சது ஆனா அவளோட அப்பனுக்கும் அம்மாவுக்கும் தன் பிள்ளை யாரையாவது காதலித்து கூட்டிகிட்டு ஓடிப் போய்விடுவாளோனு பயம். அந்தப் பிள்ளை அப்படிப்பட்ட பிள்ளை இல்ல அப்படினாலும்.சில பெத்தவங்களோட நெனப்பு இப்படிதான இருக்கு.
அதுக்கு ஏத்த மாதிரி அவ கூட படிச்ச பையன் புக்கு கொடுக்கிறேன்னு வீட்டுக்கு வந்து இருக்கான் அத பார்த்தா அவளோட அப்பனும் அம்மையும் சந்தேகம் அதிகமாகி அவளை படிக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க அன்னிக்கு அந்த பிள்ளை படிச்சிருந்தா வாழ்க்கை இவ்வளவு கஷ்டமா இருக்காது.
இவங்க பேசுவதைக் கேட்டுக்கொண்டே லைட் ஹவுசுக்கு மேலே ஏறிய விசாகனுக்கு மித்ராவின் பேச்சு எதுவும் காதில் விழவில்லை தலை சுற்றுவது போல் இருந்தது நாக்கு வரண்டு நடுங்கி படியே உட்கார்ந்து அப்படியே என்னாச்சுடா என்று மித்ரா துடித்துவிட்டாள்.அப்போதும் அவன் கண்கள் அந்த இருவரையும் தேடி அலைந்தது.
மித்ராவிற்கு ஒன்றும் புரியவில்லை ஏன் விசாகன் இப்படி மாறிப் போய் இருக்கிறான்.என் பயப்படுகிறான்.அவன் கண்களில் எப்படி இவ்வளவு பயம் வந்தது.இந்தக் கேள்விகளை தனக்குள்ளே கேட்டவாறு மௌனமாய் லைட் ஹவுஸின் உச்சியை அடைந்தனர் இருவரும்.
மித்ரா எதுவும் பேசவில்லை கடலை ரசிக்கவும் இல்லை இவள் எதையோ யோசிக்கிறாள் என்று மட்டும் விசாகனுக்குத் தோன்றியது.
மித்ரா தான் பேச்சை துவங்கினார் என விசா என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரியா இருக்க என்ன பிராப்ளம் விசா.உன்னோட ஸ்கூல் மேட் வந்து உன்னை பார்த்ததுல இருந்தே நீ சரி இல்லை அப்படி என்னதான் உன்னோட ஃப்ரண்ட் சொன்னார்.ஏன் இப்படி மாறி போயிட்ட விசா என்று தழுதழுக்க தொடங்கினாள் மித்ரா.
சொல்லு விசா எதுவும் தப்பு பண்ணிட்டியா.இதுவரைக்கும் உன்னோட கண்களில் நான் இவ்வளவு பயத்தை பார்த்ததே இல்லை.எதுக்காக பயப்படுற விசா என்ன செஞ்ச சொல்லு.நீ சொல்லலைன்னா சுரேஷ் கிட்ட தான் கேக்கணும்.என்று மிரட்டுவது போல் பேசிய மித்ராவை தன் தாயின் சாயலை பார்த்தான் விசாகன்.
நீ நினைக்கிற அளவுக்கு ஒன்னும் பெரிய விஷயம் இல்ல மித்ரா நான் எந்த தப்பும் பண்ணல.அதோட சுரேஷுக்கும் ஒன்னும் தெரியாது.இது என் மனசுக்கு மட்டுமே தெரிஞ்ச எனக்குள் நாம் விளங்கிக் கொள்ளும் மனப்புழுக்கம்.
அன்னைக்கு சுரேஷ் வந்தான் இல்லை என்று சொல்லும்போது மித்ராவின் கைகளைத் தன் கைகளை கோர்த்து கொண்டு சுவரில் சாய்ந்து பேசத் துவங்கினான்.எங்களின் பால்ய சினேகிதி சினேகிதன் பற்றி பேசிக் கொண்டிருந்தோம் அப்போது தான் அவன் தியாவை பற்றி சொன்னான் நான் அன்றோடு அரைமனிதானாகிப்போனேன் மித்ரா.என்று கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.ஒருவேளை காதல் தோல்வியை இருக்குமோ என நினைத்த மித்ராவுக்கு யாரந்த பெண் என்று விசாகனின் தோளில் கை வைத்து பற்றாய்க் கேட்டாள்.
துள்ளல் காலம்
நானும் தியாவும் ஒரே வகுப்பு அவளுக்கும் எனக்கும் எப்போதும் போட்டியாக தான் இருக்கும் என்னைவிட ஒரு மார்க் அதிகம் வாங்கினாலும் அவளுக்கு அப்படி ஒரு ஆனந்தம் எனக்கு அத்தனை வருத்தமாகவும் இருக்கும்.
தியா எனக்கு போட்டியாக இருப்பதை நான் விரும்பவில்லை அவள் வீட்டில் அவளை பொத்தி பொத்தி வளர்க்கிறார்கள்.என எனக்கு நன்றாகவே தெரியும் தேர்வுக்கு முதல் நாள் நான் புத்தகம் கொடுப்பதுபோல் அவள் வீட்டுக்கு போனேன்.அவளும் இது என்னுடைய புத்தகம் இல்லை என சொல்லி அனுப்பி விட்டால் அதுதான் நான் அவளை இறுதியாய் பார்த்தது. அதன்பிறகு அவள் பள்ளிக்கு வரவில்லை ஒரு வாரம் கழித்து தான் தெரியவந்தது என்னையும் தியாவையுசம்பந்தப்படுத்தி அவள் வீட்டில் அடித்தார்கள் என்று.
இது தெரிந்ததும் நான் துடித்துப் போனேன் விளையாட்டாய் செய்த காரியம் வினையாய் கண்முன்னே பள்ளி முடிந்து அவள் வீடு தேடி ஓடினேன்.அவளும் அவள் அம்மாவும் முற்றத்தில் ஒழுங்குபடுத்தி எப்படி இருந்தார்கள் என்னை பார்த்ததும் கையிலிருந்த கிடைப்பதோடு நெருங்கி வந்தாள் அவள் அம்மா.
ஆன்ட்டி தியாவை ஸ்கூலுக்கு அனுப்புங்க என்னால் தொல்லை ஏதும் வராது என சொல்லி முடிப்பதற்குள் கத்தி ஊரையே கூட்டி விட்டாள் இந்தியாவின் அம்மா ஆன்ட்டி அப்படின்னு சொல்ற நீ இந்தப்பக்கம் உன்னபார்த்த நடக்குறதே வேற என்று சண்டைக்காரி போல் கத்தினாள்.அவர் பின்னால் தியா அழுது கொண்டே நின்றாள்.
எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை எப்படி மன்னிப்பு கேட்பது என்று தெரியவில்லை கண்ணீரோடு வந்துவிட்டேன் எத்தனையோ முறை அவளை பார்த்து பேச முயன்றேன் முடியவில்லை.
நான் ஒவ்வொரு முறையும் கடைவீதிக்கு செல்லும் போது அவளை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் அவளின் இன்றைய நிலையை அறிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவேன் ஆனால் இதுவரை நான் அவளை பார்க்கவே இல்லை.அதன் பிறகு நான் அதை மறந்தும் போனேன்.
சுரேஷ் வந்தபோது பள்ளி காலத்தில் எடுத்த குரூப் ஃபோட்டோ கொண்டுவந்தான் அதை பார்த்த பின் தியாவின் நினைவுகள் என்னை உறங்க விடவில்லை நான் செய்த தவறு அவள் வாழ்வை எப்படிப் புரட்டிப் போட்டு இருக்கும்.இப்போது அவள் எப்படி இருப்பாள்.என்ற எண்ணம் என்னை தூங்க விடவில்லை இதுதான் என்னுடைய தேடலுக்கும் காரணம்.மித்ரா
என்று விசாகன் சொல்லும்போதே அவன் விரல்கள் மித்ராவின் விரல்களை இறுகப் பற்றிக் கொண்டது.எப்படியாவது அவளை பார்க்க வேண்டும் அவள் இப்போது எப்படி இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டால் கூட போதும் மித்ரா என்று கடலைப் பார்த்து சொல்லியவாறே இருந்த விசாகன் கண்கள் ததும்பி கண்ணீர் ஓடியது.
கண்ணீரை துடைத்துக்கொண்டே லைட் ஹவுஸ் இல் இருந்து இருவரும் மௌனத்தின் துணையோடு கீழே இறங்கி வந்தனர்.
இப்போது விசாகனுக்கு பாரம் முழுவதும் இறங்கியது போலிருந்தது.மித்ராவின் கண்களும் தியாவை தேடத் துவங்கின. வெட்ட வெளியில் தேடுவதை விடுத்து முகநூலிலும் இன்னபிற சமூக வலைதளங்களிலும் தேட ஆரம்பித்தாள் மீண்டும் ஊருக்கு திரும்புவதற்குள் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு திருப்பரங்குன்றம் கோவில் நோக்கி விசாகனின் கார் பறந்தது.
இரா. கலையரசியின் கவிதைகள்
மீன் கூடை
**************
கடல் கை விட்ட பிறகு
கண்ணீரில் மூழ்கிய மீன்கள்…
வலைகளின் வஞ்சனைகளில் சிக்கி
உயிரை இழந்து கரையைத் தொட்டன
கதம்ப மீன்கள்.
உப்புக் காற்றில் ஊர் கூடி
செத்த உடம்பை ஏலமிட
ரத்தம் ஊறிய செதிள்கள்
துடிதுடித்து இறந்து
நெய்தலில் காத்து கிடக்கின்றன.
ரகம் வாரியாகப் பிரிக்கப்பட்டவை
பெருமுதலாளிகள் பிடித்துச் செல்ல
மிச்சம் மீதி வந்து சேர்ந்தன
மிச்சம் இல்லாத வாழ்க்கைப் பாட்டில்
மீதியைக் கழித்துக் கொண்டிருக்கும்
கிழவி கஞ்சம்மாளிடம்.
முந்திக்கு பத்தாத சேலை
முகத்தின் சுருக்கங்களை மூடிட
கால்கள் களைத்துப் பின்ன
கூனாகி சாய்ந்த முதுகு
கழுத்தை நிமிர விடாமல் பிடித்தது.
கழித்து விடப்பட்ட மீன்கள்
கிழவியிள் கூடைக்கு மாறுதல்
கேட்காமலே மாறி இருந்தன.
இறந்த பிறகு நாறும் மனிதனே
மூக்கைப் பிடித்துக் கொள்கிறான்.
தட்டுத் தாடுமாறி வண்டியில்
தவழாத குறையாய் ஏற
மூக்கை அடைத்து கொண்டோர்
வாயையும் விட்டு வைக்கவில்லை.
கிழவியைத் தடுத்த தடித்த வார்த்தை
இரக்கமின்றி இறங்கச் சொன்னது.
வாயைப் பிளந்து கண்கள் திறந்து
வியந்து பார்த்தன
இறந்த மீன்கள்
கஞ்சம்மாளின் தேய்ந்த செருப்பு
சாலையில் காதல் பரப்பி
வர மறுத்து வம்பு செய்கிறது.
தலையில் அமர்ந்தபடி கண்களை
மூடி இறந்திருந்த மீன்கள்
வழியில் கண்ணில் பட்ட
மச்ச அவதாரத்தில் இருந்த
கடவுளைப் பார்த்து எதையோ
கேட்க நினைத்தது போலும்.?
சாவு
******
கண்கள் வழிந்த கண்ணீரின்
ஈரம் கிடைமட்டமாக சரிய
வானத்தை பார்த்த கண்கள்
மெல்ல தானே மூடிக் கொண்டது.
அழுகுரல்கள் அங்குமிங்கும் சிதறி
அசைவற்ற உடலை பயமுறுத்த
நீண்ட கால்களின் விரல்களை
தொட்டு பார்த்தது பட்டாம்பூச்சி.
தட்டுமுட்டு சாமான்களை ஒதுக்கி
குளியலைத் தொடங்கி விட்டனர்.
அழுத்து சலித்து வாழ்ந்த உடல்
துவண்டு விழுகவே விரும்பியது.
சாவுக்கு காத்திருந்த மனிதர்கள்
அழகாக அலங்கரித்தனர்.
பட்டு சேலை ஒன்று படர
பார்த்து பார்த்து கட்டினர்.
சவப்பெட்டிக்குள் கிடத்தபட்ட உடல்
சத்தமின்றி அமைதியாய் இருக்க
மாலைகளின் இடுக்குகளில்
முகத்தை எட்டி பார்த்தனர் சிலர்.
தாரை தப்பட்டைகள் வரிசைகட்ட
ஆளுக்கொரு மாலை அணிவித்து
பெருமை சேர்த்தனர் உடலுக்கு.
வீடு,வாசல் எல்லாம் பிரிச்சு
உயிலும் எழுதி முடிச்சாச்சு
சண்டை சச்சரவு இல்லாமல்
வராத கண்ணீர வழிச்சு
வழிச்சு போட்டாங்க புள்ளைங்க!
பூக்கார முனியம்மா நெஞ்சுல
அடித்து அழுது மாஞ்சிட்டா!
வடக்குதெரு வண்ணமயிலு
வழக்கமான சேலையில வந்திருந்தா!
பக்கத்து அக்கத்து வீட்டுக்காரங்க
வாயில துணிய வச்சு
அழுவோமா? வேண்டாமா?னு
யோசிச்சுகிட்டே இருக்காங்க.
பூக்கள் மட்டும் வாசமா இருக்க
மணத்த முகர தான் முடியல.
அழுத கண்ண தொடச்சுகிட்டு
அலாக்கா தூக்கிட்டாங்க என்னைய!
வீடு, வாசல் ஊரக் கடந்து
சுடுகாட்டுக்கு வந்து சேர்ந்தாச்சு.
நல்லா தோண்டுன குழி காத்திருக்க
மண்ணக் கட்டிக்கிட இறங்கினேன்
பிடி மண்ண பூத்தூவலா தூவ
முகத்த தொட்டு பார்த்த ஆசையில
அப்படியே மேல தங்கிருச்சு.
முழுசா மூடின குழிமேட்டுல
மனுச பொழப்பு அவ்வளனுதான்னு
சொல்லிகிட்டே போன சத்தம்
கொஞ்சம் கொஞ்சமா
என்னை விட்டு போய்கிட்டே இருக்கு.
தங்கேஸ் கவிதைகள்
கவிதை 1
கண்களை மூடிக்கொள்கிறேன்
இன்னொரு முறை விழிகளுக்குள் பறந்து போ பறவையே!
அந்த இளவேனிற் காலம் திரும்பி வரும்போது
ரேடியோப் பூக்கள் பூத்த மலைச்சரிவுகளில்
நாம் பசுந்தளிர்களிடம் உரையாடியபடி நடந்து கொண்டிருப்போம் !
பால்கொடிகள் என் மேனியெங்கும் பற்றிப் படர
மெய்சிலிர்ப்பில் நான் மீண்டும் பனிச்சிலையாகி விடுவேன்.
தெளிந்த வானமும்
அதன் மீது நிலவும்
அரைவட்டமடித்துப் போகும்
வெண்நாரைக்கூட்டங்களும்
மீண்டும் தோன்றும் போது
கடைக்கண்ணோரம் துளிர்க்கும்
ஒரு துளி கடலில்
நீ படைத்த அத்தனை உயிரினங்களும் உன் முன்னால்
இரகசியமாய் நீந்தி மறைந்து விடும் கண நேரத்தில்
கவிதை 2
கடவுள் புன்னகைக்க வந்து விடுவார்
காற்றில் மிதந்து வரும் வார்த்தைகளென
தாழப்பறக்கின்றன
அதிகாலையின் முதல் பதிவை எழுதும்
வண்ணத்துப்பூச்சிகள்
காலைப்பறவைகள்
பனித்துளிகளில் தேங்கியிருக்கும்
ஈரக்காற்றை இறக்கைகளால் கிழிக்காமல்
கவனமாக நீந்திப்போகின்றன
மரங்கள் தியானித்துக்கொண்டிருக்கின்றன
இன்னும் கண் திறக்காமல்
செங்கல் பொடியையும் சாம்பலையும்
வரிகளாய் உடம்பில் தெளித்திருக்கும்
சங்குப்பூனையும்
உறுத்தும் மியாவிற்குப் பயந்து
நீட்டி சோம்பல் முறிக்கும்
அருக்கம் புல் புதரிலிருந்து
தெருநாய்கள் அடையாளம் தொலைந்து
சண்டையிடாமல் இருக்கும்
சற்று வெயிலேறும் வரைக்கும்
நசுக்கப்பட்ட சிவப்புத்தக்காளியாய்
தோற்றம் கொள்ளக் காத்திருக்கிறது
இன்றைய அதிகாலைச்சூரியன்
இன்னொரு தென்னங்கீற்றாய்
தலைகீழாகத் தொங்கி கிடக்கிறது
பச்சை அரவம் ஒன்று
கடைசி இரவும்
சொட்டிக்கொண்டிருக்கிறது
இருள் நதியாய்
அதன்மீது
தாயின் வெப்பச் சிறகுகளுக்குள் பதுங்கியிருக்கும்
காக்கைக் குஞ்சுகளுக்கும்
தாய்ப் புறாவின் வெது வெதுப்பில்
கண்ணயர்ந்திருக்கும் புறா குஞ்சுகளுக்கும்
இந்த நாள்
இன்னும் ஒரு காணாத
கனவென
இருக்கக்கூடும்
டப் டப் டப்டப் டப் டப்
இன்றைய அதிகாலையின் முதல் பதிவு
பூமியின் தோலை கிழித்துப்பறக்கின்றன
நான்கு கால்கள் இரண்டு கால்கள்
பெட்ரோலைக் குடித்துப்
புகையைத் துப்பி
சற்றதிர்ந்து விழித்த
அதிகாலையின் முகத்தில்
கரியைப் பூசி
விரைகின்ற ஒரு காரியமாய்
தென்னையில் அமர்ந்திருந்த
குரங்கொன்று அதிர்ந்து
பட படத்து
கிளைக்குக் கிளை தாவ
காக்கைகள் பட படத்து
ஓலமிட்டு அலற
காயை காலை நீட்டி
கதை கதையாய்க் கதைத்து
நடக்கிறார்கள்
அஷ்ட கோணலாய்
கும்பல் கும்பலாய் நின்று
செய்கிறார்கள் சிரிப்பு வைத்தியம்
அணில் பிள்ளைகள்
தலை தெறிக்க ஓடுகின்றன
மறு கூடு தேடி
மது வாசனையும்
சிகரெட் புகையும்
ஊது வத்தி வாசனையும்
பரவ ஆரம்பிக்கிறது
தெருக்களில்
குப்பைத் தொட்டிக் கருகில்
குவிந்து கிடக்கின்றன
காலி மதுப்புட்டிகளும்
சுருட்டி மடக்கப்பட்ட
பேப்பர் பொட்டலங்களும்
தண்ணீர் பைகளும்
குரல் உயர்த்தாத தெருநாய்களும்
மற்றும் நைந்த துணிகளுக்குள்
நைந்த உடல்களும்
சற்று நேரத்திற்கெல்லாம்
கடவுள் வந்து விடுவார்
ஒரு உக்கிரக புன்னகையோடு
மங்கையின் கண்கள் மணற்கேணி கவிதை – நவகவி
நீர்ஊற்றை ஒளித்து வைக்கும்- அந்த
மணற்கேணி- உன்
நேத்திரங்கள் ஆனதுவோ- என்
மகாராணி?
உன்- விழியின் ஓரமே
பார்- கசியும் ஈரமே!
கண்ணீர் அல்ல…. காதல் கசியுது மெல்ல
கண்ணே கண்ணே…. மறுப்பதேன் அதைச் சொல்ல?
(நீரூற்றை)
இமை இரண்டும்- விரல்- என ஆகி
மனதை மீட்டுமே!
எண்ணங்களை -உன்- வண்ணங்களை
எழுதிக் காட்டுமே!
இனியாவது கனிவாய்திற பேசடி!
ரதமாகநீ வடமாக நான் பாரடி!
மனது வையடி
மௌன தேச பிரஜையாக
மாறினாயடி!
(நீரூற்றை)
கூம்புகிற- பூ- இதழ்களுமே
வீசும் வாசமே!
மூடுகிற- உன்- உதடுகளும்
பேசும் பேசுமே!
கன்னக்குழி முத்தப் புயல் மையமோ?
அன்னக்கிளி உனக்குப்பணி செய்யுமோ?
சொல்வாய் சம்மதம்.
செவ்வாய் திறந்து சிரித்தால் செவ்வாய்
கிரகம் என்வசம்!
(நீரூற்றை)
உன்- கால் சுவடு -ஒரு- ஏடாக
கவிதை வடிக்கிறேன்!
நேர் வகிடு -சொர்க்க- வழி ஆக
நிலவில் நடக்கிறேன்!
மௌனம் உடை தயக்கம் உடை கண்மணி!
காதல் வினா தொடுத்தேன் விடை சொல்க நீ!
கனிவாய் பேசடி
கனிவாய் முத்தம் தருவாய் கண்ணே
இனிதாய் பேசடி!
(நீரூற்றை)
காற்றில் பயணிக்கும் உதிர்இலை கவிதை – வசந்ததீபன்
காற்றில் பயணிக்கும் உதிர்இலை
****************************************
(1)
என் பாதையில் போகிறேன்
உன் இதயத்தைச் சுமந்து
மலைச் சரிவுகளில்
நெல்லிக்காய் மூடைகளை
ஏற்றிய கழுதையாய்…
சறுக்கிச் சறுக்கி நகருகிறேன்
கிணற்றில் தவறி விழுந்த
தங்க நாணயமாய் கிடக்கிறது
உன் வாலிபம்
என் தேடலுக்கு சிக்காமல்…
கூழாங்கற்கள் பாடும் பாடல்களில்
நதியின் மரணம் குறித்த
அவலச்சுவை நிரம்பிய ஏக்கங்கள்..
நத்தை ஓடுகளை உருட்டி உருட்டி
பசியைப் போக்க
முயல்கிறது சிறகு கிழிந்த காக்கை..
வளையல் சத்தம் போல
தென்னஞ் சோகைகள்
காற்றில் மோதி ஒலிக்கின்றன..
உலர்ந்த உயிரை
எந் நொடி வரை
பொடியாமல் பாதுகாத்து வைப்பேன்
நானும் காலத்திடமிருந்து ?
(2)
உன் விழிக் கணைகளால்
தாக்குண்டு
வீழ்ந்து கிடக்கிறேன்
என் திரேகம்
தீயூட்டப்பட்ட சுள்ளியாய்
சடசடக்கிறது
என் மனம்
புதைசேறில் சிக்குண்டதாய்
பரிதவிக்கிறது
துளிக் காதலை
என் இதழ்க் காட்டில்
தெளித்து விடு
வாழ்வின் குளிர்மையின் நாவுகள்
என்னைத் தீண்டட்டும்
மெளனமாய் ராகத்தை மீட்டாதே
என் ஆன்மாவின் தந்திகள்
படபடவென்று அதிர்கின்றன
நிழல் தா
நிகழ் கரைகின்றது.
(3)
குறுவாளின் நுனியில்
துளிர்க்கும் உதிரம் சொட்ட
ஊராரின் பரிகசிப்பின் சொற்கள்
எள்ளலோடு அலைகின்றன
நிர்வாணியைப் போல
என்னை நிராதரவாய்ப் பார்க்க..
கண்ணீரின் ஊற்றண்டையில்
தாகமாய் அமரும்
அந்தப் பறவையின் பெயர்
ஒருவரும் அறியமாட்டார்கள்
அதற்கு மனித முகமிருக்கிறது
அம் முகம் என் முகமென
நீ அறிவாயா ?
இறக்கைகள் வெட்டப்பட்டிருக்கின்றன
பலியாட்டின் கண்களைப்போல
மெளனமாய் உறைந்திருக்கும்
என் கணம்
அறுந்து நொடியிழையில்
தொடுக்கிக் கொண்டிருக்கிற
குடை ராட்டினமாய் நானும்!
நீயோ பாராது போகிறாயே ?