பொமன் இரானி (Boman Irani) எழுதி இயக்கி நடித்துள்ள மேத்தா பிள்ளைகள் (The Mehta Boys) - திரைப்பட விமர்சனம் | Parents And Children Relationship - https://bookday.in/

மேத்தா பிள்ளைகள் (The Mehta Boys) – திரைப்பட விமர்சனம்

மேத்தா பிள்ளைகள் (The Mehta Boys) - திரைப்பட விமர்சனம்   பிப்ரவரி 2025 இல் வெளிவதுள்ள இந்தி திரைப்படம். 100 படங்களுக்கு மேல் நடித்து பல விருதுகள் வாங்கியுள்ள பொமன் இரானி (Boman Irani) எழுதி இயக்கி நடித்துள்ளார். அவருடன்…
Father -Poem | அப்பா - கவிதை

ச.சக்தி கவிதைகள்

வரைதல்  யானையையும் காட்டையும் ஒருசேர  வரைந்து பார்க்கிறேன் வரைவதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகியே  நிற்கிறது காட்டையும் தன் தாயையும் ‌ இழந்த அந்த குட்டி யானை , நிறம் மரத்தடி நிழலில் படரும் வெயிலின் நிழலை வரைந்து வரைந்து அழிக்கிறேன் தொடர்ந்து கொண்டே…
சங்கீதா கந்தநின் கவிதைகள்

சங்கீதா கந்தநின் கவிதைகள்

1. அம்மா என் சிந்தனையை மூழ்கடித்து விட்டாய் உன்னைப் பற்றிய சிந்தனையால்... சிறகடிக்கக் கற்றுக்கொடுத்தாய் என் சிறகாய் நீயே இருக்கிறாய் நீயின்றி வானில் நான் பறக்க இயலாது...   2. அப்பா பாதை முடிந்ததென்று பயணத்தை நிறுத்திக் கொண்டார்... உருண்டோடும் இந்த…
சிறுகதை: அப்பாவும் தொலைபேசியும் – ரேகா குமரன்

சிறுகதை: அப்பாவும் தொலைபேசியும் – ரேகா குமரன்

      மதியழகியின் கண்கள் பள்ளியின் கடிகார முள் எப்போது மணி நான்கை தொடும் என இதோடு பத்தாவது முறையாவது பார்த்து விட்டது. இன்று பார்த்து முள் ஆமை வேகத்தில் நகர்கிறதே என்று சலித்துக் கொண்டாள் மதியழகி.அவள் மட்டுமல்ல அவளின்…
appa

அப்பா…!!! | கவிஞர் ச சக்தி கவிதைகள்

அப்பா....!!!! தன்னுடைய கைக்குக் கிடைத்த யார் யாரோ குடித்துவிட்டு வைத்த ஒவ்வொரு தேநீர்க் குவளையையும் கண்ணீரால் கழுவிக்கொண்டிருக்கும் தன் அப்பாவின் உழைப்பால் நிரம்பி வழியும் ஒரு தேநீர்க் கோப்பையில் தன் மகனின் கைகளில் மிளிர்கிறது வியர்வையால் அகப்பட்ட‌ புத்தகப்பையொன்று , கவிஞர்…
jayasree balajee kavithaikal ஜெயஸ்ரீ பாலாஜி கவிதைகள்

ஜெயஸ்ரீ பாலாஜி கவிதைகள்

புலம் பெயர் தேசம் ஐம்புலன்களும் ஒடுக்கி வைத்து தான் பயணம் வந்தோம்.. குளிரோ வெயிலோ பிழைப்பு இது தான் என்றே அறிந்தோம்.. நாடு விட்டு நாடு வந்தோம் உயிரும் கூடு விட்டு கூடு பாய்வது உணர்ந்தோம்.. இட்லி கறிக்குழம்பு ஞாயிறு மீன்குழம்பு…
சக்தி ராணியின் கவிதைகள்

சக்தி ராணியின் கவிதைகள்




‘நானெனும் பொய்’ 
***********************
பிரபஞ்சம் முழுதும்…
எனக்கானதென்றே உணர்ந்தேன்…
என் செயல் அனைத்தும்
வண்ணமடித்தே…பிறர் கண்ணில்
பதிய வைத்தேன்…

எனக்கான வலி பொறுக்காது…
கதறிய அழுகையில்…அன்பைத் தேடி சுழன்றேனே…
சுழன்ற சுழற்சியில்…
பேரன்பின் வடிவங்கள்…
பின்னலாய் என் வாழ்வை
பிணைந்திருக்க செய்தேன்…

பொருள் தேடி அலைகின்றேன்…
புகழ் தேடி அலைகின்றேன்…
புதிதாய் வாங்கிய…
புத்தகப்பையில்…புது சொந்தம்
படரப் பார்க்கிறேன்…

காலத்தின் அருமையாய்…அற்புத செயல்கள் பல செய்த பின்னும்
சில அற்பமான செய்கையில்
என் குற்றம் உணர்கின்றேன்…

வருங்காலம் பெரிதாய் எண்ணி
நிகழ்காலம் மறக்கச் செய்கின்றேன்…
நின்ற பொழுதின் நிழலாய்…
நிஜங்களின் துறவை அறிகின்றேன்…

பிறர் செய்யும் குற்றங்கள்…
என் புன்னகையிலேயே கடக்கிறேன்…

புதிய குற்றச்சாட்டை…
தூக்கிச் சுமக்கும் கூன் முதுகை நானும் இங்கே தவிர்க்கின்றேன்…

தோழனாய் தோள் கொடுக்கும்
உறவின் உண்மை அறிய மறைமுக சோதனை நடத்துகிறேன்…

காலக்கடிகாரம் கையில்
கிடைத்த போதும்…
எக்காலம் பெரிதென குழம்புகிறேன்…

என் குழப்பத்தீர்வை…குயவனின்
மண்பானையாக ஆக்குகிறேன்…
அப்பானையில் குளிர்ந்த நீர் ஊற்றிப்பருக ஆசை நானும் கொள்கிறேன்…

குளிர்ந்த நீரும் சுடுநீர் ஆகி சுடுகிறதே…
அச்சூட்டில் என் சுயநலம்…
எண்ணெய் போல் மிதக்கச் செய்கிறதே…
மிதந்த கனவில்…என்னைத் தேடி
அலைகின்றேன்…

நான் சேர்த்த சொத்தும்…பணமும்
யாரோ அனுபவிக்கப் பார்க்கின்றேன்…
கந்தலாடையில் ஒதுக்கப்பட்ட
வாழ்க்கை போல உணர்கின்றேன்…

என்ன வாழ்க்கை இதுவென்றே…
ஓடி ஓடி…உழைத்தேனோ…
என் ஓய்வின் தனிமை…
என்னைத் தின்ன…நானே
விருந்தைப் படைப்பித்தேன்…

இல்லா…கடவுளை இருப்பதாய்
எண்ணி…இறைவா உன்னை
சரணடைந்தேன்…
என் வேண்டுதல் உணர்ந்த
கடவுளும் இங்கே…காலதூதனை
அனுப்பிவிட்டான்…

உயிராய்…உறவாய் இருந்தவர்
எல்லாம் ஓரமாய் நின்று
பார்த்திடவே…என் உயிரை
அழைத்திட்ட சங்கு சத்தமும்
என் உயிரை கொஞ்சம் எழுப்பிடுதே…

காலன் வென்ற செய்தியை…
வேதனையாய் எண்ணிய மனம்
காலன் கைப்பிடித்துக் கிளம்பியதே…
அப்போது உணர்ந்த நொடி…
எல்லாமும் இங்கே…பொய் தானோ…!!!
நானும் இங்கே பொய்தானோ…!!!
என் மெய்யும் இங்கே பொய்தானோ…!!!

‘மனிதம்’
**********
எனக்கான உறவொன்றும்
என் நலன் விரும்பவில்லை…
நரைத்த முடியில்…நரைக்காத தெம்பில் நானும் இங்க வாழுறேன்…

ஆசையா பேச…மனசெல்லாம்
வார்த்தைகள் அடங்கிக் கிடந்தாலும்…
என் மனம் கேட்க ஒருத்தருக்கும்…
மனசில்லை…

போற வழியெல்லாம்…போக்கிடமில்லாம
சுத்துறேன்…போற போக்கில்
என் கதையெல்லாம் உங்கிட்ட நானும்
பொலம்புறேன்…

மடி மீது தூக்கியணைக்க…
உறவு இங்க இல்ல…உறவில்லா
உறவா…உன் அன்பை நானும் நாடுறேன்…

என் மொழி புரிய…உனக்கிங்கே…
உணர்விருப்பதாலே…உன் விரல் இங்கே
என் கண்ணம் உரசி கிடக்குதே…

உணர்வால உறவான நாம…இனி
உயிராய் ஓர் உறவாய் கொஞ்சம்
அன்பை சொல்லி வாழ்ந்து தான் பார்ப்போமே…

மனுசனுக்கும்…விலங்குக்கும்
அன்பு ஒன்று தானு உணர்த்துவோமே…

ஆறுதலாய்
***************
ஏமாற்றத்தின் உச்சம்…
யாரையும் பார்க்க விருப்பமில்லை…
எனக்குள் நானே…தொலைகிறேன்…
என் முகம் புதைத்தே…என்னுள்
என்னைக் காண்கிறேன்…

எத்தனை… எத்தனை…
முகங்கள் பார்த்த பின்னும்…
ஏமாற்றத்தின் வலிக்கு மட்டும்
இங்கே குறைச்சலில்லை…
வலியல்ல இது வடு…என்றே

வந்தமர்ந்து அறிவுரை கூறுபவர்களுக்கு
ஒன்றும் புரிவதில்லை…இது
புதிதும் அல்ல அவர்களுக்கு…

யாரோ ஒருவரின் சாயலில்
என் வலிக்கு ஆறுதல் தேட
விரும்பவில்லை…என்னுள் தேடுகிறேன்
எனக்கான ஆறுதலை…

‘வலிமை’
***********
வீடு தாண்டி வெளியே
வரும் ஓர் இடம்…
என் வலிமையெலாம்
சோதிக்க…பிடித்த இடம்…

நான் வரும் போதே…அவளும்
வெத்துக்குடத்தை…வேகமா
தூக்கிட்டு ஓடி வந்துடுவா…

மனசெல்லாம்…வார்த்தையாக்கும்
இந்த இடம்…மனம் விட்டு பேசிய
பின்னும்…நாளைக்கு சந்திக்கும்
நேரத்தை வந்தவுடன் சொல்லிடுவா…

தண்ணீரால நிரப்பிய குடமும்…
கண்ணீரால் நிரம்பிய விழிகளும்…
பேசிய மொழியை நாள் பூரா சிந்தித்தாலும்…மௌன மொழியில்
வீட்டுக்குள்ள சுமக்கும் நேரம்…

விடிவு காலம் வராதோனு…
ஏக்கப்பார்வையில் பார்க்கும் போதே…

மறுநாளும் விடிஞ்சிருச்சி…தண்ணீர்
பிடிக்க போகலையானு…குரலொன்று
செவி கேட்க…இதோ கிளம்பிட்டேனு
போய் வாரேன்…என் வலிமையை
கொஞ்சம் சோதிச்சுப்பார்க்க…

‘அப்பா…’
************
உறவுகள் ஆயிரம்… இருந்தாலும்
அப்பப்பா…அப்பா உன் முகம் பார்க்க
என் விழி இரண்டும் காத்துக்கிடக்குமே…

ராத்திரி வேலை முடிஞ்சு லேட்டா நீ வந்தாலும்
தூங்கிய என் விழிகள் இரசிக்கும் உன் முகம்
காரணமின்றி… என் இரசனை விரும்பிக்கிடக்குமே…

எனக்கான தேவைகள் நிறைவேற்றியே…
நின் வாழ்க்கை சக்கரம் சுழலுதே…
அதில் நம் காலமும் விரும்பி நகருதே…

பசிக்கு…ருசியும்…
ருசிக்கு…பசியும்…நீ உண்டு பார்த்ததில்லை…
அப்பப்போ நீ நிற்கும் டீக்கடை வாசலில்
நின் சொர்க்கம் டீயில் முடியுதானு நினைச்சேன்…

நான் உயர ஏணியா இருந்து ஏத்தி விட்டு இரசிச்ச…
பல சறுக்கல்களையும்…சருகா மிதிச்சு
கடந்து போக பாதையா வழிகாட்டி என்னோடு நடந்த…

நான் நடக்கும் பாதையில பட்டுக்கம்பளம் விரிச்ச…
ஆனா உன் பாதத்திற்கு செருப்பு கூட
இல்லாமலே நடந்த…

மனம் விட்டு நீங்கள் பேசி நான் பார்த்ததில்லை…
ஆனா உன் மனசுக்குள்ள உள்ள வார்த்தை
மௌன மொழியின் செயலாவே
நான் பார்த்து வளர்ந்தேன்…

சாப்பிட்டியானு தொடங்கும் உரையாடலுக்காக…
கைபேசியும் காத்து தினமும் கெடக்கும்…
இந்த காத்திருப்பின் இரகசியத்தை…ஒருநாளும் நாம
தவறவிட்டதில்லை…

உன் அன்பை சொல்ல வார்த்தை இங்க இல்ல…
எப்போதும் நீ மட்டுமே…போதும் என்பதில்
என் அன்பை சொல்லி வைப்பேன்…
நின் உறவோடு என் வாழ்வை புதைத்து
நானும் வாழ்வேன்…

– சக்தி ராணி

’தாய்மை’ சிறுகதை – ச.லிங்கராசு

’தாய்மை’ சிறுகதை – ச.லிங்கராசு




வைகறையின் வனப்பை ஜன்னல் வழி ரசித்தப்படி, குளிக்க தயாரானாள் செல்வி. நேற்றைய உழைப்பு, அம்மா பூங்காவனத்தை அயர்ந்து தூங்க வைத்துக் கொண்டிருந்தது. செல்வி அம்மாவைப் பார்த்தவள் மனம் வெதும்பினள்.

‘இன்னும் எத்தனை நாள் நீ உழைத்து உழைத்து உருக்குலைய போகிறாய் அம்மா?’

‘நான் உன்னை வீட்டில் இருக்கவைத்து எப்போதும்மா பாத்துக்கொள்வது? அப்பாவின் நம்பிக்கை துரோகம் உன்னை இப்படி ஆக்கி வைத்திருக்கிறதே?’

சற்று நேரத்திற் கெல்லாம் காலை சிற்றுண்டியை தயார் செய்த செல்வி, அம்மாவை எழுப்பத் தொடங்கினாள். பள்ளிக்கு செல்ல இன்னும் நேரமிருந்தது. அம்மா வேலைக்கும் சென்று, பின்னர் வீட்டிலும் வந்து எல்லா வேலைக
ளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதை விரும்பாத செல்வி, வீட்டு வேலைகளை கற்றுக் கொண்டு செய்ய ஆரம்பித்திருந்தாள். பூங்காவனத்திற்கு இது ஒத்தாசையாக இருந்தாலும், மகள் சிரமம் படுவதை அவள் விரும்பவில்லை. இதை கூடவேலை செய்யும் தன் தோழி ஒருத்தியிடம் சொல்லி இருக்கிறாள்.

” என்னடி பேசுற நீ? போற எடத்திலே இதெல்லாம் செய்யவேணாம்? செய்யட்டும் செய்யட்டும் விடுவியா?” என்று அவள் கூறியதிலும் நியாயம் இருப்பதாக பூங்காவனம் நினைத்தாள்.

” என்னடா இன்னிக்கி சாப்பிட பண்ணி இருக்க?” பூங்காவனம் வேலைக்கு புறப்பட்டுக்கொண்டே செல்வியிடம் கேட்டாள்.

” தோசைத்தான் ஊத்திஇருக்கேன் சட்னியும் ரெடி நீ முதல்ல சாப்பிடுமா?” செல்வி தட்டில் வைத்து நீட்டினாள்.

” நீ சாப்பிடலே?”

” நீ சாப்பிடுமா எனக்கு ஸ்கூல் போக இன்னும் டைம் இருக்கு நான் சாப்பிட்டுக்கிறேன்” பூங்காவனம் தோசையை சாப்பிட ஆரம்பித்ததும் கண்களில் நீர் கசிய தொடங்கியது…….

” பாவி பாவி என்னையும் என் கொழந்தையையும் இப்புடி அனாதையா விட்டுட்டு, வேற பொண்டாட்டியே கட்டிட்டு ஓடிட்டியே நீ நல்லா இருப்பியா?”

அரட்டும் அம்மாவிற்கு ஆறுதல் சொல்ல முடியாமல் செல்வி கலங்கி நின்றாள்.

பூங்காவனம் மாரிமுத்து தம்பதிக்கு திருமணமாகி, இருபது வருடங்கள் குழந்தை பேறுகிட்ட வில்லை. போகாத கோயிலில்லை பார்க்காத வைத்தியமில்லை இருவரும் ஊரிலுள்ள பண்ணையில் தான் விவசாயத் தொழிலாளர்களாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். மாரி முத்துவுக்கு பண்ணைக்கு வேலைக்குப் போவது மனதிற்குப் பிடிக்காமல், வெளி மாநிலத்திற்கு வேலைக்குப் போவதில் ஆர்வமாக இருந்தான்.

வெளிமாநிலத்தில் கட்டிட வேலைக்கு அதிக கூலி கிடைப்பதாக நண்பர்கள் மூலம் அறிந்திருந்தான். இதை பூங்காவனத்திடம் சொல்ல அவள் தான் சொந்த ஊரை விட்டு வரமுடியாது என்று தீர்மானமாகச் சொல்லி விட்டாள். தான் மட்டும் சென்று வேலை செய்து மாதம் பணம் அனுப்புவதாக மாரிமுத்து வாக்களித்தான்.

இதற்கிடையில் பூங்காவனம் கருவுற்றாள். இது மாரிமுத்தையும் பூங்காவனத்தை மும் பெரும் மகிழ்ச்சியிலாழ்த்தியது. இத்தனை வருடங்கள் கழித்து குழந்தைப் பேறு, இயற்கையின் விளையாட்டு எப்படியெல்லாம் மனிதர்களை ஆட்டுவிக்கிறது?

நாற்பது வயதில் தாய்மை பெண்களுக்கு வரமா? சாபமா? மருத்துவர் பரிசோதித்து விட்டு, பிரசவம் சற்று சிரமம் என்றும் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டு அறிவுரைப் படி நடந்தால் எதுவும் சாத்தியமே என்று நம்பிக்கையூட்டினார். மாரிமுத்து வெளிமாநிலம் செல்ல, பூங்காவனம் தனியே இருக்க ஆரம்பித்தாள். மாதம் ஒரு முறை வரும் மாரிமுத்து பூங்காவனத்தை மருத்துவரிடம் தவறாமல் காண்பித்து விட்டுத்தான் திரும்புவான்.

இப்படி ஒரு பொறுப்பான கணவராய் நடந்து கொண்ட மாரிமுத்து பின்னால் நடந்து கொண்ட விதம்……………..?.

காலம் யாருக்காகவும் காத்திருக்க வில்லை. பத்து மாதங்களுக்கு பின்னர் பூங்காவனம் அழகான ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். குடுபத்தில் குதூகலம் பொங்கியது. சிறிது காலம் வீட்டிலிருந்த பூங்காவனம் பண்ணைக்கு மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தாள். தன் கணவனின் வருமானம் மாத்திரம் பெண் குழந்தையை வளர்த்து ஆளாக்க போதுமானதாக இருக்காது என்பதையும் உணர்ந்து இருந்தாள்.

தான் வேலைக்குச் சென்று விட்டால் குழந்தையை கவனித்துக் கொள்ள ஆள் வேண்டுமே! பூங்காவனம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தாள். தன் கடைசி தங்கை கமலத்தை இங்கு கூட்டி வந்து வைதத்துக் கொண்டால் குழந்தை செல்வியை கவனித்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். இதை கணவன் மாரிமுத்து விடம் சொன்னதும், அவனும் மறுப்பேதும் சொல்ல வில்லை

பூங்காவனம் தான் குடும்பத்தில் மூத்தவள். அவளுக்கு கீழ் இரண்டு பெண் குழந்தைகள். அப்பா அம்மா உயிரோடு இருக்கும் போதே இரண்டு பெண்களுக்கும் எப்படியோ திருமணத்தை நடத்திமுடித்து விட்டவர்கள் கடைசிப் பெண் கமலத்தை கரை சேர்க்க முடியா கவலையோடு போய் சேர்ந்து விட்டார்கள்.

கமலம் இரண்டாவது அக்கா பாதுகாப்பில் தான் இப்போதும் இருக்கிறாள். இரண்டாவது அக்கா தங்கம் சற்று வசதியான குடும்ப பின்னணியில் இருந்ததால் கமல்த்தை ஒரு குழந்தைப் போல் பார்த்குக் கொண்டாள். வரனும் பார்த்துக்கொண்டுதான் இருந்தாள்.

பெரியக்கா பூங்காவனம் வீட்டுக்கு வந்த கமலம், குழந்தை செல்வியை கண்ணாக கவனித்துக் கொண்டாள். மாரிமுத்து வெளி மாநிலத்தில் வேலை செய்வதால் மாதம் ஒரு முறைதான் ஊருக்கு வந்து கொண்டிருந்தவன், இப்
போதெல்லாம் அடிக்கடி வர ஆரம்பித்தான். குழந்தைப் பாசம் அவனை இருக்க விடவில்லையோ? பூங்காவனம் பெருமையாக நினைத்தாள். ஆனால் நடந்தது……?

எப்போதும் போலவே அன்றும் விடிந்தது ஆனால் பூங்காவனம் வாழ்வு விடியாது போயிற்று! மாரிமுத்துவையும் கமலத்தையும் காணவில்லை. இரண்டு பாய்கள்மட்டும் சாட்சியாக சுருட்டி வைக்கப்பட்டிருந்தன.

தன் தலையில் கல்லை தூக்கிப் போட்டு விட்டுப் போன அந்த இருவரையும் வசைபாடியும், சாபம் விட்டும் தன் ஆத்திரத்தை தணிக்கும் நிலைக்கு பூங்காவனம்
தள்ளப்பட்டாள. தணிந்ததா ஆத்திரமும் ஏமாற்றமும்?

ஊரே பூங்காவனத்தின் நிலை கண்டு பரிதவித்தது. எவ்வளவு பெரிய துரோகம் இது?அதன் பின்னர் குழந்தை செல்வியை வைத்துக் கொண்டு பூங்காவனம் பட்ட துயரங்கள், கஷ்டங்கள் எத்தனை? எப்படியோ அவளை
வளர்த்து, பன்னிரண்டாம் வகுப்பும் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறாள்.

அந்தி சாயும் நேரத்தில் அந்த துயர செய்தி பூங்காவனத் தின் காதுகளில் விழுந்தது. கணவன் மாரிமுத்து வின் இறப்பு செய்தி தான் அது. ஊரிலுள்ள மாரிமுத்து வின் நண்பன் கண்ணுச்சாமிக்கு கைபேசி வழியாக வந்தது. கண்ணுச்சாமி சிறிது காலம் மாரிமுத்து வோடு வெளிமாநிலத்தில் வேலை செய்தவன்தான்.

பூங்காவனத்தின் இதயம் ஒரு கணம் துடித்து அடங்கியது. விபரம் தெரிவதற்குள் விட்டுப்பிரிந்த அப்பாவின் முகத்தை கற்பனை செய்த செல்வி, சலனமற்று நின்று கொண்டிருந்தாள்.மாரிமுத்து வின் எந்த அடையாளத்தை பூங்காவனம் விட்டு வைக்க வில்லையே! துக்கம் விசாரிக்க அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.

” என்ன பூங்காவனம் நீ சாவுக்கு போய் ஆகணுமில்லே”
கூட்டத்தில் ஒரு வயதானப் பெண்மணி மெதுவாக கேட்டார்.

” நான் போனா மட்டும் போன உயிர் திரும்பி வந்துருமாக்கும்? போன உயிரு போனதுதான். ஆனா இரண்டு கொழந்தைகளோட அனாதயா நிற்கிறாளே நான் தூக்கிவளர்த்த தங்கச்சி ! சாகும் போது அப்பாவும் அம்மாவும் அவளை என் கையிலே புடிச்சி கொடுத்து பார்த்துக்க சொன்னாங்களே! நான் என் சுகத்தை மட்டுந்தானே பார்த்தேன்”
பூங்காவனம் உடைந்து அழுதாள்.

“இப்புடி ரெண்டு பேரு வாழ்க்கையையும் நாசமாக்கிட்டு நிம்மதியா அந்த ஆளு சேர்ந்துட்டாரு. ஒரு பெண்ணும் பையனும் பொறந்தப் பொறகாவது குடியை விட்டிருக்க வேணாம்? நல்லவனா இங்க வேஷம் போட்டவரு போன
எடத்துலே இப்புடி ஆட்டம் போட்டு குடும்பத்தை நடுத்தெருவிலே விட்டுட்டான் பாவி மனுசன்” பூங்காவனம் குமிறினாள்.

” போகட்டும் நீ அங்கே போயிட்டு சடங்கு, மத்த காரியமெல்லாம் பார்க்கணுமில்லே ” அந்தவயதான பெண்மணி ஆதரவாய் தோள்களை தொட்டாள்.

“கமலம், தான் ரெண்டாவது பெஞ்சாதியினு காட்டிகாமித்தான் அந்த ஊருலே வாழ்ந்திருக்கா. இப்போ நான் அங்க போனா அக்கா வாழ்க்கையே தட்டி பறிச்சவனு பேரு அவளுக்கு வர நான் சம்மதிக்க மாட்டேனக்கா” பூங்காவனம்
உணர்ச் சிப்பிரவாகத்தில் திணறினாள்.

” சரி, அப்போ அவளை அப்புடியே விட்டுறப் போறியா?”

” அவ இந்த அக்காவ தேடி எப்ப வேண்ணா வரட்டும் நான் காத்திருக்கேன்” பூங்காவனம் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். காலமெல்லாம் தன் கணவனையும் தங்கையையும் திட்டிக்கொண்டு சாபமெல்லாம் விட்ட பூங்காவனமா இது? வந்தவர்கள் திகைத்தார்கள். செல்விக்கு ஒரே குழப்பமாகவே இருந்தது.

– ச.லிங்கராசு

இறுக்கம் கவிதை – இரா.கலையரசி

இறுக்கம் கவிதை – இரா.கலையரசி




கரகரத்த குரலெடுத்து
கக்கத்தில் துண்டை இடுக்கி
கசங்கிய முண்டாசின்
சுருக்கங்களை சரி செய்தபடி
“ஆத்துல போறத
அள்ளி தான் குடிக்கனும்”
கொரித்த கொய்யாபழத்தை
விட்டு ஓடிய அணிலை
பார்த்தபடி உதிர்ந்தன வார்த்தைகள்.!

ட்ரங்கு பெட்டி அதிராமல்
இலசா எடுத்த சீலை
அங்கம்மாவ இறுக்கமா கட்டிக்கிறுச்சு.
அப்பன் பேச்சு காலை கட்ட,
கருஞ்சாந்து இருட்டு கண்ணடிக்க,
களவாணி மனசு
சீக்கு வந்த கோழியா
சிக்கித் தவிக்குது.

தண்டால தள்ளிகிட்டு
தவதாயபட்டு வெளியேறி
தருசு காட்டுக்குள்ள
தனியா ஓடி களைக்கிறா!
செவத்த கெண்ட காலு
மண்ண மிதிச்சு சத்தமிட
திரும்பியவள இறுக்கிடுச்சு
தேக்கு மரக் கைகள்.

ஓங்கிய அரிவாள்
கருப்பசாமிய நெனவுபடுத்த,
செவந்த கண்ணுல
வழிஞ்சு ஓடுது ரத்தக்கோடுகள்
!ஓடுகாலி கால வெட்டுணே!
ஓங்கி ஒலிக்குது
உளவு பார்த்தவன் குரல்.

தூக்கின கைகளை
அழுத்தி பிடிச்சவள்
“அப்பா கொன்றுப்பா “ங்க
மவள மொதல்ல
தூக்கின நாள நெனச்சு
மண்ணுல சாஞ்சாரு விருமன்
“பொணமா”

– இரா.கலையரசி