தினேஷ் பாரதியின் கவிதைகள்

தினேஷ் பாரதியின் கவிதைகள்




கொடுத்தால் வாங்க மாட்டாயோ
என்ற தயக்கத்தில் நானும்
கடைசிப் பூவை
விற்றுவிட வேண்டுமென
பூக்காரியும்
ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொள்கிறோம்
காதலர் தின முன்னிரவில்…

=======================

உலகத்தில் உள்ள
அத்தனைப் பூக்களும்
உதிர்ந்திடும் பட்சத்தில்
உனக்கென
என் உயிர்ப்பூ
பூத்திருக்கும்
உன் கற்றைக் கூந்தலில்
மலர்ந்திட..

=========================

உன் கண்கள்
அதி அற்புதமானது
உலகின் தலை சிறந்த
பூக்களினும் தலையாயது..

===========================

எல்லாருக்குள்ளும்

எல்லா ஆண்களுக்குள்ளும்.
ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது
ஒரு பெண்ணின் குரல்.

எல்லா பெண்களுக்குள்ளும்
ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது
அப்பாக்களிடம் சொல்லப்படாத காதலொன்று.

எல்லா அண்ணன்களுக்குள்ளும்
உறைந்து கொண்டுதான் இருக்கிறது
ஒரு தங்கையின் கண்ணீர்.

எல்லா தம்பிகளுக்குள்ளும்
முதிர்ந்து கொண்டுதான் இருக்கிறது
வயது முற்றிய அக்காக்களின் கவலை.

எல்லா அம்மாக்களிடமும்
நிரம்பியே இருக்கிறது
மகன், மகள், கணவன் முதலான
குடும்பத்துக்கான ஒட்டு மொத்தக் கண்ணீரும்…
=====================
-தினேஷ் பாரதி
செல்:9952212701

கனவின் நீரோடை கவிதை – ஆதித் சக்திவேல்

கனவின் நீரோடை கவிதை – ஆதித் சக்திவேல்




அது
என் கனவில் ஓடிய
அதே நீரோடை தான்
ஒவ்வொரு துளியிலும்

மணல் மேல் கூழாங்கற்கள்
அதன் மேல் கண்ணாடி நீர்
அடி வரை இருந்தவற்றை
தெளிவாய்க் காட்டி
சாத்திய வளைவு நெளிவுகளுடன்
மனதிலிருந்து நழுவி
எங்கோ ஓடியது ஓடை
ஜீவ நதியாய்

நாளின் முதல் சூரியக் கதிர்களில்
ஒளிரும் பிரதிபலிப்புகள்
தங்க மணலின் நகர்வாய்
மீண்டும் மீண்டும் அதன் அடியில்
அதன் வழியெங்கும்

கரைகளைத் தொட்டுத் தொட்டு
தன்னை வடிவமைத்த அது
துள்ளிக் குதித்து ஆரவாரம் செய்தது
ஓரிரண்டு இடங்களில்

ஓர் ஓடையின் சத்திய இலக்கணங்கள்
ஒவ்வொரு அசைவிலும் நகர்விலும்
பின்னியபடி நெளிந்தோடின

சொர்க்கத்தின் குளிருடன்
மேடு பள்ளங்களில் ஏறி இறங்கிய
அதன் இசைத் துண்டுகளில்
வழிந்தோடியது மகிழ்ச்சி கலந்த மயக்கம்

முணுமுணுப்பற்ற சுழல்களின்
சூத்திர முடிச்சுகள்
ஓடையின் ஆழம் நோக்கிப் பயணித்தன
அவிழ்த்து விடை அறிந்து கொள்ள

கனவுகள் போல தாவரங்கள்
கரையின் இரு பக்கங்களிலும்
ரகசியக் குறிப்புகளோடு
தவமிருந்த மரங்களை இறுகப் பற்றியபடி

பெயர் தெரியாப் பூக்களே ஏராளம்
அப்பூக்களின் மணம் கரைந்த நீர்
வழிந்தது வழியெங்கும்
வாசனைத் திரவமாய்

தன் பரப்பில் விழுந்த
வனப் பறவைகளின் ஒலிகளில்
அன்று விரும்பிய ஒன்றை
அவ்வெளி எங்கும் எதிரொலித்தது இயற்கை
ஆதி மண்ணின் தேவ கானமாய் மாற்றி

இலைகளும் பூக்களும்
துடுப்பற்ற ஓடமென
எதிர்ப்பும் இலக்கும் இன்றி
ஓடின ஓடையின் வேகத்தில்

குளிர்காலக் காலையினால்
அந்த நீரோடையே
நிறம்பி வழிந்து கொண்டிருந்தது

அணுவின் அமைதியுடன்
ஒரு பூனைக் குட்டியைப் போல்
அடி வைத்து நகர்ந்து கொண்டிருந்தது பிரபஞ்சம்
ஓர் ஓடையாய்ச் சுருங்கி

கால் நனைத்தேன்
கபாலம் வரை ஏதேதோ பரவியது
அதில் குளிரும் இருந்தது

ஆனாலும்
ஓடையின்
ஏதோ ஒரு பரிமாணத்தில் ஒளிந்திருந்த
அதன் அந்தரங்க வரிகளை
என்னால் வாசிக்கவே முடியவில்லை
இன்று வரை

ஆதித் சக்திவேல்

அமீபாவின் கவிதைகள்

அமீபாவின் கவிதைகள்




1
செய்த தவறுகளைக் கூட
நியாயமாக்க முடிகிறது
என்னால்
எனது நியாயங்களை எல்லாம்
தவறுகள் என தூக்கிப் போட முடிகிறது உங்களால்

கைவிடப்பட்ட மனநோயாளி போல நினைவெங்கும்
அலைந்து கொண்டிருக்கிறது
அச் செயல்கள்.

2
அந்தப் பூவை
அப்படியே வரைந்து விடுவது தான்
என் திட்டம்
அதே அழகாய்
அதே வடிவத்தில்
அதே நுட்பத்துடன்
அழித்து அழித்து
வரைந்து கொண்டு இருந்தேன்
திருப்தியடையாமல்

வாடத் துவங்கி இருந்தது
அந்தப் பூ.

3
எத்தனையோ முறை
எதிர்கொண்டு விட்டேன்
இக்கேள்வியை
“இப்போது என்ன செய்கிறீர்கள்.”

நான் செய்யும் செயல்களில்
சிலது
அவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது சிலது
அவர்களுக்குத் தேவையே இல்லாதது
சிலது
நான் சொல்ல விரும்பாதது

அவர்கள் விரும்பியதை
சொல்லி இளிக்க
நான் அவர்களின் அடிமை இல்லை
அவர்கள் வெறுப்பதை
சொல்லி எரிச்சலூட்ட
நான் அவர்களின் எதிரி இல்லை

செய்வதைச் சொன்னால்
என்ன செய்யப் போகிறார்கள்
செய்வதைச் சொல்வதால்

வேறென்ன செய்து விடப் போகிறேன்

இந்த மௌனத்தில்
இடம்பெயர்வார்கள்
“ஏதேனும் செய்யுங்கள்” எனச் சொல்லி.

– அமீபா.

பாங்கைத் தமிழனின் கவிதைகள்

பாங்கைத் தமிழனின் கவிதைகள்




‘பிரிவு’
*********
பொய்யான கோபம்
பிரிந்திருந்த காலம்
உள்ளமெலாம் உருகி
உருவான கவிதை!

கோபமதை மறந்து
குலவ வந்த நேரம்
கொடுத்தேன் அந்தக் கவிதை
குளிர்ந்ததவள் மனது!

சென்றவளைக் காணோம்
சிந்தனையில் மனது;

தூது வந்த கடிதம்;

துயர் துடைக்குமென்று
பறந்ததெந்தன் மனது
பார்த்துக் கடிதம் இடியாய்,

நற்கவிஞனோடு
நானிருந்தால் உலகம்
நல்ல கவிதை இழக்கும்!
நன்றி சொன்னதெனக்கு!

உந்தன் பிரிவு ஊற்றாய்
உயர்ந்த கவிதை வந்தால்
உலகம் உய்யக் கொடுப்பேன்
உனது நினைவில் வாழ்வேன்!

க(வி)தை வந்தக் கதை

*******************************
உடலுணர்ந்து உள்ளுணர்ந்து
உண்மைகளைத் தாமுணர்ந்து
உவமைதனை ஊறுகாயாய்
உடனிணைத்துக் கவி படைத்தார்
உலகினிலே முதலினத்தார்
உயர்ந்த குலத் தமிழினத்தார்!

வெய்யிலிலே காய்ந்ததினால்
வெப்பமானக் கவிபடைத்தார்;
மழையினிலே நனைந்தப்பின்னே
மழையானக் கவிகொடுத்தார்!

கானகத்தில் கவியெடுத்தார்
கழனியிலே கவியெடுத்தார்;
சேற்றினிலே கவிதைகளை
செழுமையுடன் கண்டெடுத்தார்!

நீரோடை நிலைகளிலும்
நெடிதுயர்ந்த மலைகளிலும்
அன்றலர்ந்த மலர்களிலும்
அலைதுடிக்கும் கடலினிலும்;

அயராது உழைத்தவரின்
அயர்வுகளை வியர்வைகளை
அவர் வளர்த்தக்கன்றுகளை
அவர் வளர்த்தக்காளைகளை;

அவர் செய்தக் களவிகளை
அதிலிருந்த மென்மைகளை
பெயர் சுட்டிப் பேசாமல்
பெருமைமிக்கக் கவிகொடுத்தார்!

புழுப்பூச்சி உயிரினத்தை
புலத்தோடு தாமுணர்ந்து
அதன் வாழ்க்கை முறைகளையே
அணுவணுவாய் கவிபடைத்தார்!

பறவையினக் காதலதை
பாட்டினிலே நயம் படைத்தார்;
பார் வேந்தர் பாடுகளை
பங்கெடுத்துப் புகழ் படைத்தார்!

உடலுணர்ந்து உள்ளுணர்ந்து
உண்மைகளைத் தாமுணர்ந்து
உறுதிமிக்கக் கவிபடைத்தால்
உயிர்வாழும் எந்நாளும்;
உணர்வீரே கவிஞர்களே!

‘இவர்களும் குழந்தைகளே’

*******************************
கையேந்திப் பிழைக்கும்
செல்லங்களே….

நீங்களும்
இந்த தேசத்தின்
குழந்தைகள்தான்
செல்லங்களே!

உங்கள்
கையேந்தல்….
மழையைப் பிடித்தல் அல்ல
மனதைப் பிசைதல்!

சத்தியமாய்
என் முன்னோர்களோ
நானோ
காரணமல்ல…
உங்களின்
இந்த நிலைக்கு!

இதற்கும்
சனாதனந்தான் காரணம்
என்போரை
காரித்துப்புகிறார்
கருணையற்ற
கர்வம் கொண்டக் கூட்டம்!

வளர்ந்து கொண்டு வருகிறதாம்…..
தேசம்!
நீங்களும்தானே
வளர்ந்து கொண்டு வருகின்றீர்?
வறுமையுடன்!

இந்த தேசம்
பண்பாட்டில் உயர்ந்ததாம்;

நாகரீகத்தின்
உச்சம்தானே பண்பாடு?

நாகரீகமே இல்லாத நாட்டில்
பண்பாடு எப்படி
பந்தியில் பருப்பு பரிமாறுகிறது?

உங்களுக்கு
ஒரு இட ஒதுக்கீடு
வேண்டுமென….
போராடத் தலைவன்
இல்லாதது;
உங்கள் தலையெழுத்து
என்கிறது….
புதியதாக
ஒதுக்கீடு பெற்றுள்ள
குபேரர்களின் வாரிசுக்கூட்டம்!

சில்லறைகளைக்கூட
சில பேர்தான் தருவார்கள்;
பெரும்பாலோரிடம்
நோட்டுத்தான் இருக்கிறது
மனது இல்லை!

‘குழந்தைகள் தினத்தை’த்தானே
கொண்டாடினர்?
குழந்தைகளைக்
கொண்டாடியதாதத் தெரியவில்லையே!

குழந்தைகளைக்
கொண்டாடுவோர்
இருந்திருப்பின்…
உங்களைக் கொண்டாட
வந்திருப்பர்!

நானும்
வெட்கப்படுகிறேன்
செல்லங்களே!

உங்களுக்கு
வாழ்த்துகள் சொல்வது
நீங்கள்
இப்படியே வாழவேண்டும்
என்பதாக…..
அர்த்தப்பட்டு விடும் என்பதால்
வாழ்த்த மனம் வரவில்லை!

கையாளாகாதவர்களால்
கண்ணீர்த் துளிகளைத்தான்
உங்களுக்குத் தர இயலும்;
நானுந்தான்.

சுற்றமும்
நட்பும் சூழ்ந்தாலும்… 
*************************************
எப்போதும் வரலாம்;
எனக்கான மரணம்!
அகால மரணமாக
அவஸ்தை மரணமாக
அகவை முதிர் மரணமாக!

சுற்றமும் நட்பும்
சொந்தம் கொண்டாடும்;
மரணத்தில் வந்து
மார்தட்டிக் கூத்தாடும்!

என்னவெல்லாம்
நடக்குமென
எனக்குத் தெரியும்!

நடக்க வேண்டியதை
உயிர் சாசனமாக
ஒரு சில வரிகளில்….

நான்
நட்டு வளர்த்த
பூஞ்செடிகள் தரும்
பூக்களால்…..
போர்த்துங்கள்
என்
பூத உடலை!

நான் வளர்த்த தென்னை மரத்தின்
தென்னை ஓலைகளை
தென்னங் காய்களை…
என் தேகம் செல்ல
பயனாக்குங்கள்!

என்னை
உளமாற நேசிப்போர்
என் மெய்யின் மேல்
ஒரு துளி கண்ணீர்
சிந்துங்கள்!

நான்
படித்தும், படிக்காமலும்
வைத்துள்ள புத்தகங்களை
குழந்தைகளுக்குக்
கொடுங்கள்!

நான்
பயன்படுத்திய
அனைத்து ஆடைகளையும்
என்னுடனே
அனுப்பி விடுங்கள்!

என்
உழைப்பில் சம்பாதித்த
ஒரு ரூபாய் நாணயத்தை
நெற்றியில் வையுங்கள்!

இரத்த உறவுகள்
என் இறப்புக்காக
வீணான செலவுகளை
செய்யாதீர்கள்!

கதை முடிந்த அன்றுடன்
அவரவர் பணிகளைப்
பாருங்கள்!

என் அன்பு மகனே…..
என் நினைவாக
ஒரு மரக்கன்றினை நட்டு. ..
பாதுகாத்து…
வளர்த்துக் கொடு!

அது….
பறவைகளுக்கும்,
பலருக்கும்
பயன் படட்டும்!

‘பாசாங்கு… ‘
***************
பள்ளிக்குச் செல்வதில்
ஏதோ…..
கசப்பு உணர்ந்தபோது
கண்டுபிடித்த
சுயமான வித்தை;
முதல் ஏமாளி
அம்மா!
” அம்மா…. வயிறு
வலிக்குதே”!

படிப்படியாக
ஆசிரியர்களிடம்..!

வீட்டில் பள்ளியைப்பற்றி
பள்ளியில் வீட்டைப் பற்றி
பாசாங்கு காட்டியே…
படிப்பும் முடிந்தது!

பாசாங்கு காட்டாத
மனிதன் நான் எனச்
சொல்பவன். …
பாசாங்கு காட்டுகிறான்
என்று பொருள்!

பாசாங்கு….
நடிப்பின் உச்சம்!

பாசாங்கு என்பது ஒரு கலை!

அது
பறப்பன… ஊர்வன
உட்பட
அனைத்து உயிரினங்களும்
அறிந்து வைத்துள்ள
ஒப்பற்ற உடல் மொழி!

பாசாங்கு பற்றிய
எளிய குறிப்பு

இதோ…..
‘மனைவியிடம் குடிகாரக் கணவன்’
‘கணவனை ஏமாற்றும்
மனைவி’

கற்பனைக் குதிரையைத்
தட்டி விட்டுப் பாருங்கள்,

குடிகாரர்…
மற்றும்
ஏமாற்றும் பெண்கள்!
மிக அற்புதமாக
நடிப்பார்கள்!
ஆம்;
அதுதான் பாசாங்கு!

எவராலும்
உண்மை எது
பாசாங்கு எது
என்று
கண்டு பிடிக்கவே முடியாத
நடிக இமயம்;
‘திருடன்!

அவன்
வேறு யாருமல்ல
நான், நீ, அவன்!

– பாங்கைத் தமிழன்…

கோவை ஆனந்தனின் கவிதைகள்

கோவை ஆனந்தனின் கவிதைகள்




பறவை
**********

வானைத் தொடுமளவு நெடிதுயர்ந்த விருட்சங்கள் நிறைந்த வனத்தின்
நடுவே பச்சைநிறப்பாசிகள் போர்த்திய பாறைகளின்
சுனையிலிருந்து ஊறும் தெளிந்த நீரினைப்போல

மனதிலிருந்து வடியும்
உணர்வுகளும் ஏக்கங்களும்
வார்த்தைகளாய் வடிந்தோட

நதியின் இருகரையில்
வளர்ந்திருந்த செடிகொடிகளில் மலர்ந்த மலர்களில்
தேனீக்கள் ரீங்காரமிட்டு
தேனெடுக்கும் வேளையில்
விரிந்த மொட்டுக்களிலிருந்து வெளிப்படும் நறுமணத்தில்
சிலநிமிடம் இளைப்பாறி

பல்லுயிர்க்கும் பசிபோக்கும்
கனியொன்று மலையிலிருந்து சீறிப் பாய்ந்தோடும் நதியில்
விழுந்து மிதக்க

ஓடும்நதியின் போக்கில் பயணித்த கனி
கையருகே வந்தடைய
சிறுஅலகால் கொத்தி சுவைத்ததும் வியந்துபோனது

நாவில்படும் துண்டுகள் ஒவ்வொரு முறையும்
வெவ்வேறு சுவையில் இனிக்கும் ஒற்றைக் கனியினை
அடுத்தவேளைப்பசிக்கல்லாது கூடுகளில்
பசியோடு காத்திருக்கும்
சிறகுகள் முளைக்காத சிறுகுஞ்சுகளுக்காக
சுமந்துபோய்
வெயிலும் நிழலுமென
மாறிமாறி வந்துபோகும் மரக்கிளையில் அமர்ந்து
இரையோடு வந்திருப்பதாய்
சிறுஅலகில் ஒலியெழுப்பியது அந்தப்பறவை.

தாத்தா
*********
நாலுமணி சிற்றுந்தில் வந்திறங்கும் வானம்பாடிகளைக்
கைப்பிடித்து அழைத்துச்செல்லும் நேரங்களில்
காலையில் விடுபட்ட கதைகள் மீண்டும்
வசப்படுத்திவிடுகின்றன பிஞ்சுஇதயங்களை

ஆள் நடமாட்டமேயில்லாத வீதியில்
வெளிச்சம்தெரியும் தூரம்வரைத் தேடுகிறது –
ஏதாவது அசைவுகளிருக்கின்றனவாவென்று
நடமாட்டம் எதுவுமில்லையென உறுதிப்படுத்தியவுடன்
பிஞ்சு நடைகளுடன் தளர்ந்த நடையும் தள்ளாடி
பூட்டியவாசல் திறந்து
ஒய்யாரமாய்ப் போய்
வர்ணங்கள்பூசிய சுவற்றினோரம் கிடந்த மரநாற்காலியில் அமர்கிறது
காலையிலிருந்து தனிமைச்சிறையில் அடைபட்ட முதிர்ந்ததேகம்

சீருடைகள் களைந்து மாற்று உடையணிந்த வானம்பாடிகள்
சிறகுகளசைத்து காற்றில்மிதந்து
பெருமரக்கிளையில் அமர்வதைப் போல்
தாத்தா என ஓடிவந்து கட்டிப்பிடிக்கும் பேரக்குழந்தைகளுடன்
-தன் இலையுதிர்கால நினைவுகளையும்
சின்னஞ்சிறு கதைகள்பேசியும்
இறுதியில் மழலைகளின் ஒப்பனையில்
மீண்டுமொருமுறை இளமைக்குத் திரும்பி பேரின்பத்தைக் கொண்டாடுகிறது

தாத்தாவின் மனதும் ஒரு குழந்தையாய்.

நிலைக்கண்ணாடி
**********************
நீ நின்று ரசித்த
உன்னழகை
உன்அறை நிலைக்கண்ணாடியும்
அதைவிட்டு நீ நகர்ந்தபின்
சிலநிமிடங்கள்
கதவுகளோடு கண்ணை
மூடி ரசிக்கிறது…

அவசரமாய் கேசத்தை
சரிசெய்து முகப்பசைகளைப்பூசி
ஒப்பனைகள் செய்து கடந்துசெல்லும் யாரும்
உன்னிப்பாய்க் கவனிக்கவில்லை
இதுவும் உன்நினைவில் இருப்பதை…

பாதரசங்கள் பூசிய கண்ணாடியின் மீது
இதுவரை ஒட்டவேயில்லை-
உன் அட்டைப் பொட்டுகளும்
விரல் தாரைகளையும் தவிர
உன்னைப்போன்றொரு உருவம்…

எதிரில் நின்றவரின் உருவத்தை மிகைப்படுத்தாமலும் –
மீதம் வைக்காமலும் காட்சிப் படுத்திய கண்ணாடி
ஏமாற்றத்துடன்-நீ
விட்டுச்சென்ற உன்னழகின்
சாயலில் இன்னொரு பிம்பத்தைப் பதிவுசெய்ய

இன்னும் உறங்காமல் விழித்தே கிடக்கிறது…

கோவைஆனந்தன்
kovaianandan79@gmail.com
+919003677002
3/177,குமாரபாளையம்
கிணத்துக்கடவு
கோவை-தமிழ்நாடு 642109

நந்தகுமாரின் கவிதைகள்

நந்தகுமாரின் கவிதைகள்




சாலை  ஓரப்  பூக்கள்
************************
புலரும் காலை
புது வெயிலில்
சாலை ஓரம் பூக்கும் பூக்களே!
யாரும் காணா
நேரத்தில் இமை போல்
இதழ்களை விரிக்கிறாய்!
மகரந்தம் வீசி, மனதைக்
கொள்ளை கொள்கிறாய்.
தென்னையில் அமர்ந்து
இசைக்கும், கரு வண்ண
குயிலின் கூவலுக்கு,
தென்றலோடு அசைந்து
ஆடிடும் வண்ணப் பூக்களே!
கரங்கள் தீண்டும்,
பேய் காற்று தீண்டும்,
வண்டினங்கள் கூடும்,
மழைத்துளிகள் படரும்,
ஆனாலும், ஏனோ!
உந்தன் வாசம் போகாது
ஏன் பிறந்தாயோ?
அதுவும், இங்கு
ஏன் மலர்ந்தாயோ?
சாலையில் விழுந்து
சக்கரங்களில் மடிந்தாய்!
ஓ…..சாலை ஓரப் பூக்களே!
மகரந்த மாலை வேளையில்,
உன் நிறத்தைக் கதிரவன்
பிரகாசிக்கும் செவ்வானமாய்.

மாலை வேளைக்  காட்சி
****************************
வான் உயர்ந்த தென்னை மரங்கள்
வளைவு நெளிவு இல்லாமல் ஒரு சீராய்.
தென்றல் காற்றில் தென்னங் கீற்றுகள்
தெம்மாங்கு பாட்டிசைக்கும் அசைந்தாடி,
மாலை வெயில் மறையும் காட்சி கண்டு
மாய விழிகள் மயக்கம் கொள்ளும்.
கருங்காக்கை இரை கொண்டு வந்தபின்,
காக்கைக் குஞ்சுகளின் அறைகூவல் அடங்கும்.
சிவப்பு வண்ணம் பூசிய செவ்வானமாய்,
சுடரொளி பரப்பி, கதிரவன் புறத்தே சாயும்.
வெண்ணிற புறாக்களின் படைக் கூட்டம்
களைப்பால், தென்னங் கீற்றில் அமர,
மாலை நேர மன்னவனின் செவ்வொளி
மாடப் புறாக்களில் பரவியதைக் கண்டு,
தென்னை தீப்பற்றியதோவென அஞ்சி கரைந்து,
தங்கக் குஞ்சுகளைக் காக்க விரைந்ததுவோ!
ஒரு தீயணைப்பு வீரன் போல்……

– ந. நந்தகுமார்
9360395196

என்ன செய்து தொலைத்தாய்? கவிதை – புதியமாதவி

என்ன செய்து தொலைத்தாய்? கவிதை – புதியமாதவி




எரித்தாயா புதைத்தாயா
என்ன செய்து என்னைத் தொலைத்தாய்?
எரிக்கும்போது
தீயின் நாக்குகளில்
பட்டுத்தெறித்த முத்தங்களை
என்ன செய்தாய்?
புதைத்த மண்ணில்
பூத்த பூக்களை விட்டுவிடு.
அந்த வாசனையில்
வாழட்டும்
தீண்டாமையின் காமம்.
என்ன செய்தாய் என்னை?
நீச்சல் பழகிய ஆற்றுவெள்ளத்தில்
மூச்சுத்திணறிய விடுதலை.
இறுகப்பற்றிய விரல்களின்
தீராத பசி.
பார்த்துக்கொண்டிருந்த
ஆற்றங்கரைப் படிக்கட்டுகளில்
இப்போதும்
ஒட்டிக்கொண்டிருக்கிறது
பச்சை மஞ்சளின் நிறம்.
ஹே சென்னிமல்லிகார்ஜூனா..
என்ன செய்தாய் ?
என்ன செய்து
என்னைத் தொலைத்தாய்!

– புதியமாதவி

கவிஞனா நீ ? கவிதை – பாங்கைத் தமிழன்

கவிஞனா நீ ? கவிதை – பாங்கைத் தமிழன்




நிலவே,
சிறிது நாட்கள்
வெளியில் வராதே!

காற்றே
சிறிது காலம்
தென்றலை அனுப்பாதே!

பனியே,
சிறிது காலம்
தண்மையாய் இராதே!

மலர்களே,
சிறிது காலம்
மலர்வதை மறந்து விடுங்கள்!

குளிரோடையே,
சிறிது காலம்
சூடாக ஓடு!

பெண்களே,
சிறிது காலம்
சிரிக்காமல் இருங்கள்!

இப்படியாக
இருப்பீர்களானால்,

அழுகைக் குரலும்
அவல வாழ்வும்
எவர் செவிகளில் விழுமோ
அவரே கவிஞர்.
அவர்தான் கவிஞர்!

– பாங்கைத் தமிழன்

மௌனத்தின் வார்த்தைகள் கவிதை – ரா.சிவக்குமார்

மௌனத்தின் வார்த்தைகள் கவிதை – ரா.சிவக்குமார்




நீள் மௌனங்களை
உடைக்கும் முதல் சொல்
நீள் வாதங்களை
உடைக்கும் முதல் மௌனம்
இதற்கு நிகர் உண்டோ?

நீண்ட மௌனங்களும்,
நீண்ட வாதங்களும்,
வீரியமற்றதே!

மௌனம் சில நேரம்
வெல்கிறது!
மௌனம் சில நேரம்
கொல்கிறது!

உலகின் மாபெரும்
திறந்தவெளி சிறை
மெளனம்!.

மௌனத்தை உடைத்தே
பூக்களும் புரட்சியும்
மலர்கின்றன!.

வாயைக் கட்டியதும்
சப்தங்கள் நின்று போயின
மனதின் கூச்சல் மட்டும்
இன்னும் அடங்கவில்லை!.

வார்த்தைகளை விற்றுவிட்டு
மௌனத்தை வாங்கி வையுங்கள்
மௌனத்தின் செலவு அவசியம் தேவை!.

மெளனங்களாலயே
பட்டை தீட்டப்படுகின்றது
மனம்!

அவளது கண்கள்
என் இதயத்தை களவாடி
மெளனத்தால் பேசுகின்றது!

அருகினில் அமர்ந்திருந்தும்
மௌனத்தின் பெருவெளியை
கடக்க முடியவில்லை!

கருவறைக்கும், கல்லறைக்கும் இடையே
மௌனம் வார்த்தைகளால்
வெட்டி வீழ்த்தப்படுகின்றது!

மெளனத்தைக் கலைக்க
சப்தங்கள் தேவையில்லை
இளந்தென்றலின் தீண்டல்
போதும்!

மனதின்
மெளனமே ஞானம்!.

ரா.சிவக்குமார்
சென்னை
9884824086