சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 7 – முனைவர். பா. ராம் மனோகர்

சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 7 – முனைவர். பா. ராம் மனோகர்



 உணவுப் பழக்கங்களும்,
உலக வெப்பநிலை உயர்வும்!
முனைவர். பா. ராம் மனோகர்.

இருபது ஆண்டுகள் முன்பு நம் மக்களிடையே இருந்து வந்த உணவு முறை தற்போது இல்லை அல்லவா!? ஒவ்வொரு சிறு நகரங்களில் கூட வட இந்தியா, வெளிநாட்டு உணவு அங்காடிகள்! அங்கு சென்று உண்ணுகையில், ஒரு போலி நாகரீகம், கவுரவம், ஆனால் நம் உடல் ஆரோக்கியம், உணவு

கழிவு மாசு பற்றியும் சிந்தித்து பார்ப்பதில்லை!

மேலும் நாம் மேற்கொள்ளும் தினசரி உணவு பழக்கம் பற்றிய அக்கறை, நம்மில் பலருக்கும் இல்லை. நவீன உணவுகளுக்கு நாம் பலரும் அடிமையாகி விட்டோம். நகைச்சுவை நடிகர் வடிவேல் திரைப் படக்காட்சி ஒன்றில் கூறுவது, போல், இட்லி, தோசை போன்றவை ஆதிகாலத்து, நாகரீகம் அற்ற உணவுகளாக இளைய தலைமுறை எண்ணி, புதிய பெயர் புரியாத , எவற்றால் சமைக்கபட்ட உணவு என்பது அறியாமல் போதை போல் தொடர்ந்து சில குறிப்பிட்ட மேலை நாட்டு உணவுகள் உண்டு, ஆரோக்கியம் பாதிக்கச் செய்வது ஒரு புறம் இருப்பினும், இந்த உணவு வகை உற்பத்தி , உலக வெப்ப நிலை உயர்வுக்கும் ஒரு காரணி ஆக விளங்குகிறது.

நம் அனைத்து நாடுகளிலும் உருவாகிய உணவு பழக்கம், ஓரளவு, புவி வெப்ப நிலை உயர காரணம் என 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்று விளக்குகிறது. ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP), பன்னாட்டு இயற்கை வள நிதியம் (WWF ), மற்றும் EAT & climate forest அறிக்கையில், புவி வெப்பம் உயர்வுக்கு காரணமாக உள்ள பசுமை குடில் வாயுக்கள் அதிகரிக்க உலகில் உள்ள 7.8. பில்லியன் மக்கள் (21.37%) செய்யும் உணவு உற்பத்தி முக்கியம் என்று கூறப்பட்டுள்ளது. பயிர் உற்பத்தியால், உணவு பழக்கத்தால்,, வளர்த்தல், அறுவடை, பதப்படுத்துதல், எடுத்து செல்லும் போக்குவரத்து,சேமிப்பு, சந்தைப்படுத்துதல், பயன்பாடு, கழிவு வெளியேற்றம் என பல்வேறு செயல்பாடுகள், இந்த நிலைக்கு காரணம் ஆகும்.

உலகில் ஒரு புறம் கிட்டத் தட்ட, 800 மில்லியன் மக்கள் உணவு தட்டுப்பாடு, பற்றாக்குறை, தரமற்ற உணவு ஆகியவற்றால் பாதிக்கப்படும் நிலை இருக்கும் போது இப்படி ஒரு வினா எழுந்துள்ளது, வியப்பு அல்லவா! உணவு அனைவரும் உண்ணவே கூடாதா? என சிந்தித்து பார்த்தால், உண்மையில் நம் அறிவியல் அறிஞர்கள் சிலர் உணவு முறைகள், பருவ கால மாற்றம், நோய்கள் எனவும் தொடர்பு ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். உணவு பழக்கங்கள் மேலை நாடுகளுக்கும், பல கீழை நாடுகளுக்கும் இடையில் வேறுபடுகின்றன.

159 நாடுகளில்744 வெவ்வேறு வகை உணவு உண்ணப்படுகின்றன. சாதாரணமாக ஐக்கிய அமெரிக்கா வில் ஒரு நாள் உணவு செலவு 28.4 டாலர் ஆகும். இதில் பழங்கள், காய்கறி 31.5%, வேர் முடிச்சு /விதை ,19%, மாமிசம் 15%, அடங்கியுள்ளது எனினும் வருவாய் குறைவான நாடுகளில் ஏழை மக்கள் இந்த அளவிற்கு செலவு செய்யும் நிலையில் இல்லை. டேனிஷ் நாட்டில் ஒரு வாரத்தில் கட்டாயம் 2

நாட்கள் தாவர உணவுகள் மட்டும் விற்கவும், மாமிச உணவினை ஒரு நாள் மட்டும் தான் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆனால் உணவு, உலக வெப்ப மயமாக்கல் ஏற்படுத்துவதில் விவசாயம் தவிர அது தொடர்பான பல்வேறு செயல்பாடுகள் பங்கு வகிக்கின்றன. மாற்று முறை உணவு, போலி மாமிசம், முட்டை, பால் பொருட்கள் போன்ற தொழில் நுட்ப முறை உற்பத்தி வர வாய்ப்பு உள்ளது. விலை குறைவு காரணத்தால் மக்கள் வாங்க வாய்ப்புள்ளது. ஆனால் உணவு தொழில் மென்மேலும் இயந்திரமயமாகினால், சூழல் மாசு, ஆற்றல் பிரச்சினை, போக்குவரத்து, பாக்கெஜிங், புவி வெப்பம் கூட ஏதுவாக கரிம காலடித்தடம் (CARBON FOOT PRINT )அதிகரிக்க கூடும்.

ஸ்காட்லாந்து நாட்டில் கிளாஸ்கோ நகரில், நவம்பர் 2021ல் நடந்த ஐக்கிய நாடுகள் கால நிலை மாற்றம் மாநாட்டில், விவசாயம் மூலம் புவி வெப்ப மயமாதல் அதிகரிக்கும் நிலை குறைக்க நடவடிக்கை ஏற்படுத்த தீர்மானம் உருவாக்கப்பட்டது.

மேலும், இத்தகைய உணவு பிரச்சினை உலக அளவில் இருப்பினும், உணவு வீணாதல், நவீன வெளிநாட்டு மாற்று உணவுகள், அதிக கொழுப்பு கலந்த உணவு பொருட்கள், சூழலுக்கு மிகுந்த பிரச்சனை ஆகியுள்ளது. பாரம்பரிய உணவுகள் மறக்கப் பட்ட நிலை, உள்ளூர் கரிம காய்கறி, மூலிகை, குறைபாடு, எனினும் உலக அளவில் உணவுண்ணும் பழக்கம் மாறுவது மிக கடின சவால் ஆகும். நம் நாட்டில் இளைய தலைமுறை, குழந்தைகள் மனங்களிலிருந்து, உணவு பழக்கம் செயல்பாடுகள், முறையில் உண்மைகள் உணர்வு பூர்வமாக அவர்களால் அறியப்படவேண்டும். உணவு பழக்கம் பற்றிய பாட திட்டம் பள்ளிகளில் தேவை ஆகும். ஊடகங்கள் மூலம் (youtube, FB, Telivision )பலரும் புதிய உணவு தயார் செய்யும் நிலை தனிமனித சுகாதார கேடு, சத்து குறைபாடு எனினும் உலக வெப்ப மயமாதல், உணவு மூலம் பெரும்பான்மை பங்கு அதிகம் ஆக வாய்ப்பில்லை. ஆனால் அது தொடர்பான தொழிற்சாலைகள் அதிகம் ஆகி அவற்றின் மூலம் பிரச்சினை கூடும் என்பது உண்மை.

தனி மனித ஆரோக்கியம் உணவு முறை மாற்றத்தினால் பாதிக்க பட்டு, அதன் தொடர் விளைவாக மருத்துவமனை,, மருந்து, கழிவு என்று ஒரு சங்கிலி போல் சூழல் பிரச்சனை ஒரு சவால் ஆகிவிடும்.

உணவு என்பது தனி மனித நுகர்வு என்றாலும், உற்பத்தி, சந்தைப்படுத்தும், அதற்குரிய தொடர் விளைவுகள் பற்றிய சிந்தனை நமக்கு தோன்றினால் .

விழிப்புணர்வு மேம்படும் வாய்ப்பு உள்ளது.

ஜேசு ஞானராஜின் கவிதைகள்

ஜேசு ஞானராஜின் கவிதைகள்




1
உணவு!
அந்தி மயங்கியது!
மேற்குத் தொடர்ச்சி மலை
மஞ்சளும் சிவப்புமாய் ஒளிரத் தொடங்கியது!
கழுத்தில் கட்டிய மணிகள் ஒலிக்க
மாடுகள் வீடு நோக்கி நடைபயின்றன!
ஆட்டுப் பட்டிக்குள்
ஏழு சுரங்களும்
ஏப்ரலின் அடுத்த மாதத்தைப்
பாடத் தொடங்கின!
ஓடையிலிருந்து வெளிவந்த
வாத்துக்கூட்டம்
வீட்டைப் பார்த்து விரைந்தன!
அம்பு வடிவில் பறக்கும் கொக்குகள்
கூடுநோக்கி போய்க்கொண்டிருந்தன!
வேப்பமர உச்சி
காக்கைக் கூட்டில் குஞ்சுகள்
கீச் கீச் சென
தாயைத் தேடிக் கொண்டிருந்தன!
வேகமாய் வீடு நோக்கி நடக்கும்
வேடனின் முகத்தில்
கொள்ளை சந்தோஷம்!

2
சுழற்சி!
சூரியனின் காந்தப் பார்வையில்
மோகம் கொண்டு மயங்கிய கடல்
கருமேகக் குழந்தை உருவாகிறது!
கடல் பால் கொண்ட
காதல் தோல்வியால்
கோபமான பெருங்காற்று
மழை மேகத்தை அலைக்கழிக்கிறது!
மிரண்டு போன கார்மேகம்
அழுது தீர்க்க நதி உருவாகிறது!
தன் குழந்தையை
உடனே கூப்பிட்டு
அடைக்கலம் கொடுக்கிறது கடல்!

3
கடன் கொடுத்த பணம்!
இரவு சாப்பாடு முடிந்து
முற்றத்திலிருந்த நார்க்கட்டிலில்
அமர்ந்திருந்தார் அப்பா!
வாசல் படியில் உட்கார்ந்து
வாகாக கால் நீட்டினாள் அம்மா!
வெற்றிலைப் பெட்டியைத் திறந்து
தோதான கொட்டைப்பாக்கை
அப்பாவுக்குத் தந்தாள்!
சுண்ணாம்பு பாக்கெட்டை
மெதுவாகப் பிதுக்கி
நுனி கிள்ளிய வெற்றிலையில்
வைத்து நீட்டினாள்!
பாக்கை கடித்துக் கொண்டே
விரித்த வெற்றிலையில்
சுண்ணாம்பைத் தடவி
வாயில் குதப்பினார் அப்பா!
திருவிழாவுக்கு வாங்கிய
தேன் குழல் மிட்டாய்
ஓலைப் பெட்டியில்
பாதி நிரப்பிய அடுப்பு குப்பை
துப்பட்டியாக மாறி இருந்தது!
கடைத்தெரு குப்புசாமி என்று
ஆரம்பித்தாள் அம்மா!
‘ம்’ கொட்ட ஆரம்பித்தார் அப்பா!
மேகத்துள் மறைந்திருந்த முழு நிலவு
அம்மாவின் கதையைக் கேட்க
மெதுவாக எட்டிப் பார்த்தது!
வானத்து நட்சத்திரத்தில் ஒன்று
கீழ்த்திசையில் ‘சர்ர்ர்’ரென்று இறங்கி மறைந்து போனது!
பக்கத்து கோவிலில்
மணி ஒன்பது அடித்தது!
இலங்கை வானொலியில்
ராக தீபம் முடிந்து
செய்தி பேசிக்கொண்டிருந்தது!
எதிர்வீட்டு ஆள் உயர மண் சுவரில்
வெள்ளை நிறப் பூனை யொன்று
பதுங்கிப் பாயத் தயாராகிக் கொண்டிருந்தது!
ஓட்டுக் கூரைக்குள்
ஒளிந்திருக்கும் சுண்டெலிக்கு
அதிர்ஷ்டம் இருந்தால்
பூனையின் பசியைத் தின்று
உடனடியாக கடவுளிடம்
பேச வாய்ப்பிருக்கிறது!
தெருவில் பால்காரரின் சத்தம்
தேய்ந்து மறைந்து போனது!
அம்மாவின் பேச்சில்
குப்புசாமி இறந்து போயிருந்தார்!
அப்பாவின் நாளைய சட்டையில்
ஆயிரம் ரூபாய்
காணாமல் போயிருந்தது!

4
இரவும் பகலும்!
இரவைத் தின்று கொண்டிருந்த
காலத்துக்கு அகோர பசி!
கதவைத் திறந்து
எட்டிப் பார்த்த சுக்கிரன்
பட்டென்று சாத்திக் கொண்டான்!
மீந்து போன இரவுகளை
கையில் எடுத்த நிலவன்
செய்வதறியாது திகைத்தான்!
நட்சத்திரங்களை ஊசியாக்கி
இரவைத் தைத்துக் கொடுத்தேன்!
என் கடவுள் நீதான்
என்ற சந்திரனை
மெதுவாகத் தின்று கொண்டிருந்தான் சூரியன்!
செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கிறேன் நான்!

5
கடவுளைக் காணும் ஆவலில் கடவுள்!
உலகம் முடியப் போகிறது!
கடவுள் வருகிறார்!
அந்த நபரின் குரல்
ஆகாயம் வரை கேட்டது!
உண்டியல்கள் வேகமாய் நிறைந்தன!
பண நோட்டுகளில்
காணிக்கைப் பெட்டிகள்
மூழ்கிக் கொண்டிருந்தன!
இதோ வந்து கொண்டிருக்கிறார்!
வந்தே விட்டார்!
குரலின் டெசிபல் கூடியது!
அனைவரும் வாசலைப் பார்த்தனர்!
கடவுளும் தான்!

6
தோட்டா சொன்ன ரகசியம்!
பட்ட்ட்ட்…………..
காது வரை வந்த ரகசியம்
அதோடு நின்று விட்டது!
எதுவும் புரியாது குழம்பிய மனம்
கண்களைப் படம் வரையச் சொன்னது!
கண்களின் கேள்விகளுக்கு
காது மௌனம் சாதித்தது!
நிலை அறியா மூளையோ
மதுவில் ஊறிய ஆப்பிள் காயாய்
கனத்துக் கிடந்தது!
சரக்…..சரக்…..சரக்!
வேகமாக நடக்கும் வேடுவனின்
தோள் பையில்
முயலின் சூடான ரத்தம்
இப்போது படம் வரைய ஆரம்பித்தது!

7
பால்!
நாற்காலியில் அமர்ந்து
பாட்டிலில் பால் குடித்தான் பேரன்!
பாட்டி படுக்கையில்
மேசைக்கரண்டியில் பால் குடித்தாள்!
முன்னது உள்ளே இறங்கியது!

8
தாரமும் தாசியும்!
தரையை மேயும் நிழலுக்கு
சூரியனும் விளக்கொளியும் ஒன்றுதான்
இருளைத் தொடும் வரை!

9
புதுக் கல்வி ஆண்டு!
எல்லா குழந்தைகளும்
தேர்ச்சி பெற்றனர்
கற்றுத் தந்த ஆசிரியரைத் தவிர!

10
நல்லாட்சி!
ஆணவப் படுகொலையை
ஆவணப் படுத்திய கடைசி தேதி
யாருக்கும் ஞாபகம் இல்லை!

11
மதம்!
அசோகரின் வாளால்
வெட்டுண்ட கிளியோபாட்ராவின் வீட்டில்
பௌத்தம் தூக்கிலிட்டுக் கொண்டது!

12
வாசலில் வாழைமரம் கட்டி
பந்தல் போட்டு மின்விளக்கு அலங்காரங்கள் செய்து
காய்கறிகள் வெட்டி
பதினாறு வகை
கூட்டுப் பொரியலுடன்
கறிசோறும் சாம்பார் ரசமும்
ரெடி பண்ணி
மாப்பிள்ளை பொண்ணுக்கான
மேடை அலங்காரமும் முடிச்சு
அரிசி பெட்டியுடன்
வாழைக்குலையும் ஏந்தி
மாமா மாமி சித்தப்பா சித்தி
பெரியம்மா பெரியப்பா
எல்லோரும் வந்திருக்க
செல்லக் குழந்தைகளின் உற்சாகத்துள்ளல்களில்
புத்தாடைகள் சரசரக்க
பாட்டியின் கைத்தடி மட்டும்
மூலையில் தனியாகக் கிடக்கிறது!

13
நிசப்தமான அந்த முன்னிரவில்
கொலுசு கட்டிய நீரோடை
சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது!
போட்டிக்கு மெட்டு கட்டிக்கொண்டிருந்தது
மாக்கிரி தவளை!
ஆயுள் முடியப் போகும்
தெருவோர ட்யூப் லைட் போல
விட்டு விட்டு
சத்தமிட்டுக் கொண்டிருந்தது
துள்ளிக் குதிக்கும்
கருப்பு நிற பாச்சான்!
விடாமல் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது
சீமை உடையில் குடியிருக்கும்
மிரியான் வண்டு!
இந்நிலையில்-
அமைதியான சத்தத்துடன்
ஓடைக் கரையில் அமர்ந்து
தண்ணீரில் நனைந்து விளையாடும்
நான்கு கால்களில்
இரண்டு மட்டும் என்னுடையது!

14
இரவைச் சுருட்டிக் கக்கத்தில் வைத்து
நடந்து கொண்டிருந்தேன்!
கோட்டானும் அரவமும்
உணவு தேட தோதான நேரமான
இரவைத் திரும்பத் தர சொன்னது!
கல்லறைக்குள்ளிருந்து
வெளிவந்த ரத்த காட்டாரி
மக்களை பயமுறுத்த
இரவு தான் சரியென கேட்டது!
எரிந்து கொண்டிருந்த பிணம்
எழும்பி வந்து
இரவில் தான் சரியாக எரிய
முடியுமென யாசித்தது!
தர முடியாதென வேகமாக நடந்தேன்!
இரவு இல்லையேல்
என் வருமானம் கிடையாதென
ஏக்கமாய் வந்து நின்றான்
இரவுக் காவலாளி!
கக்கத்தில் இருந்த இரவை எடுத்து
சந்தோஷமாய் அவனிடம் தந்தேன்!

15
எல்லோரையும் காப்பாற்ற
வேண்டுபவனின் கையில்
குளித்து மாலை சூடிய பெரிய ஆடு!
அரிவாளுடன் வந்து கொண்டிருக்கிறார் கடவுள்!

16
ஜாஸ் இசையில் மிதந்த வெள்ளைக்காரனை
தமிழ்ப் பாவால்
மிரட்டி வெளுத்த
கருப்பு மீசைக்காரன்!

17
கை நிறைய பணம் இருந்தும்
செலவழிக்க முடியவில்லை
வங்கியில் பணம்
பட்டுவாடா செய்பவர்!

18
விதை நெல்லை மட்டும்
விட்டு சென்ற அப்பாவுக்கு
வாய்க்கரிசி போடக் கூட வழி இல்லை!
– இப்படிக்கு
வங்கியால் வீடு பூட்டி
சீல் வைக்கப்பட்டு
நடுத்தெருவில் நிற்கும்
விவசாயி குடும்பம்!

29
பீடை யென
ஒதுக்கப்பட்டவளுக்கு
நடு வீட்டில்
தடபுடல் விருந்து!
அன்று பாட்டியின் நினைவு நாள்!

20
பத்தி புகையும்
அப்பாவின் புகைப்படத்தின் முன்
உணவு படைக்கப்பட்டது!
தினமும் விரட்டப்படும்
பிச்சைக்காரனுக்கு
இன்று சிவப்புக் கம்பள வரவேற்பு!

-ஜேசு ஞானராஜ்,
ஜெர்மனி

வறுமை கவிதை – வெ.நரேஷ்

வறுமை கவிதை – வெ.நரேஷ்




வா என் அருமை வறுமையோ வா
என்னைத் தீண்டிச் செல்ல வா

உன்ன உணவும்
உடுத்த உடையும் இல்லை வா
இருக்க இடமும் இல்லை
உன் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள வா

கல்வியும் இல்லை
கனவுகளும் இல்லை
என்னை மீண்டும் மீண்டும்
தீண்டிச் செல்ல வா

என் வருமையைப் பற்றி
வாய்விட்டுப் பேச வயசும் இல்லை
வளர்ந்தபின் கேட்டால் அதிகார தொல்லை வா

சாலை ஓரம் உறங்குகிறேன் விடிவதற்குள் வா
விழித்துக்கொண்டால் சந்திப்போம்…

-வெ.நேரேஷ்

அம்மாவின் பாசம் கவிதை – பேசும் பிரபாகரன்

அம்மாவின் பாசம் கவிதை – பேசும் பிரபாகரன்




இருக்கும் போது புரியாதது
இல்லாத போது புரிய வருவது
அம்மாவின் பாசம்

உன்னை அடகு வைத்து என்னைப் பெற்றாய்
ஆனால் நான்
உன்னை அடகு வைத்து ஒரு பெண்ணை உற்றேன்
அடகு போனது உன் பாசம் மட்டுமல்ல
என் சுவாசமும் தான்

பேசிக்கொள்ளாத இந்தப் பெண்களால்
ஊசிபோயின உறவும்
என் வாழ்க்கையும்

Mother's Affection Poem - Pesum Prabakaran அம்மாவின் பாசம் கவிதை - பேசும் பிரபாகரன்

நீர் அடித்து நீர் விலகியிருக்கிறது
பெண்மை பெண்மையையே
விலகியிருக்கிறது
ஒத்த துருவங்கள்
ஒன்றை ஒன்று விலக்கும் என்பது
காந்தத்தில் மட்டுமல்ல
என் கதையிலும் தான்

போட்டதைத் தின்பதும்
போட்டுத் தின்பதும்
என் போதாத காலமா?
இல்லை இனிப் போராடும் நேரமா ?
கார்பன்டை ஆக்ஸைடு சுவாசித்து வாழவேண்டுமென்று
சில ஆண்களுக்கு விதியிருக்கிறது
இது எல்லா வீதியிலும் இருக்கிறது

ஒருவரின் வெற்றிடம் மற்றொருவருக்குக் கொள்ளிடம்
ஒருவரின் அழுகை மற்றொருவரின் சிரிப்பு
எதிரி வெளியே இருந்தால் போராடலாம்
உள்ளே இருப்பதால் நான் வாதாடுகின்றேன்

என்னைச் சாப்பிட வைத்து அழகு பார்த்தாய்
இப்போது நான் சாப்பிடும் போது அழுது பார்க்கிறாய்
என்னைக் கூப்பிட வைத்துப் அழகு கேட்பாய்
இப்போது கூப்பாடு போட்டு அழுது கேட்கிறாய்
தனித் தனி உணவு
தன்மை இல்லாத உணர்வு
நாசமானது என் மனம்
இப்போது நான் நடமாடும் பிணம்

மரங்கள் தழைப்பதற்கு
அதன் கிளைகள் வேண்டுமானால் வெட்டப்படலாம்
ஆனால் வேர்கள் வெட்டப்பட வேண்டும்
என்ற தீர்ப்பு வேதனைக் கூறியது
அன்பைப் புரிந்து கொள்ளாத பெண்ணால்
அழியுமொரு குடும்பம்
ஒழிக்க முடியாதது
உண்மையில்
அம்மா என்னும் அற்புத உறவு.

– பேசும் பிரபாகரன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 8 வி.பி.சிங் – குழப்பமான அரசியல் நிலையும் வேளாண்மையும் – பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 8 வி.பி.சிங் – குழப்பமான அரசியல் நிலையும் வேளாண்மையும் – பேரா.பு.அன்பழகன்




ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் முன்பு எப்போதும் கண்டிராதப் பொருளாதார வளர்ச்சி (ஆண்டுக்கு 5.5 விழுக்காடு), வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு அதிக அளவில் செலவிட்டது. 1987ல் ஏற்பட்ட பஞ்சத்தை எவ்வித தோய்வின்றி கையாண்டது, சட்டப்பூர்வமற்ற அயல் நாட்டு பணப் பரிவர்த்தனையினை தடுத்தது என அனைத்து அம்சங்களிலும் சாதகமான நிலை நிலவினாலும் ஊழல் வெளிப்பாடு இருந்தது. இதனை எதிர்த்து வி.பி.சிங், தொழிற் சங்கங்கள், விவசாயிகள், சர்வோதைய மற்றும் காங்கிரஸில் மாற்று நிலைகொண்டவர்களின் ஒத்துழைப்புடன் போராடினார். அதிகார வர்க்கத்தினரின் ஊழல் கீழ்மட்டத்தில் பரவி இருந்தது. அன்றாடம் அனைத்துத் தரப்பினரையும் இது பாதித்திருந்தது. ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பரான ஆரிப் முகமது கான், உறவினர் அருண் நேரு, வி.சி.சுக்லா, சத்யபால் மாலிக் ஆகியோருடன் ஒன்றிணைந்து வி.பி.சிங் ஜனமோர்ச்சா என்ற இயக்கத்தை 2 அக்டோபர் 1987ல் துவக்கினார். 1988ல் நடந்த அலகாபாத் பாராளுமன்ற இடைத் தேர்தலில் வலதுசாரி இயக்கங்கள், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) ஆதரவுடன் வி.பி.சிங் வெற்றிபெற்றார். இதனைத் தொடர்ந்து பல முன்னணி தலைவர்களுடன் ஒன்றிணைந்து 11 அக்டோபர் 1988ல் ஜனதா தளம் துவக்கப்பட்டது அதில் வி.பி. சிங்கின் ஜனமோர்ச்சா இயக்கத்தை இணைத்துக்கொண்டார். 7 கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய முன்னணி என்ற அமைப்பினை 6 ஆகஸ்ட் 1988ல் ஏற்படுத்தி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் அதிக இடங்களில் தனிக் கட்சியாக வெற்றிபெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்கப் போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை. தேசிய முன்னணி 146 இடங்களிலும், பாஜக 86 இடங்களிலும், வலதுசாரிகள் 52 இடங்களிலும் வெற்றிபெற்றிருந்தது. இக்கட்சிகள் ஒன்றிணைந்து வி.பி.சிங் தலைமையில் 2.12.1989ல் ஆட்சி அமைக்கப்பட்டது. வி.பி.சிங் இந்தியாவின் காங்கிரஸ் அல்லாத தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது பிரதம மந்திரியாவார்.

7.8.1990ல் வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அரசு மற்றும் பொதுத்துறைகளில் வேலைவாய்ப்பினை அளிக்க 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அறிவித்தார். இதனால் பாஜக, வலதுசாரிகள், சில அமைச்சரவை சாகக்கள் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். பாஜகவானது வி.பி.சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக மிரட்டல் விடுத்தது. வட மாநிலங்களில் ஒரு சில இடங்களில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் போராட்டம் கடுமையாக இருந்தது. இப்போராட்டங்கள் மேல் ஜாதி வர்க்கத்தினரால் தூண்டிவிடப்பட்டது என அறியப்படுகிறது. பெரும்பாலான இப் பிற்பட்டமக்கள் நிலச் சீர்திருத்தம் மற்றும் பசுமைப் புரட்சியின் நன்மைகளைப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து 1.10.1990ல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு நடைமுறைப் படுத்துவதை உச்ச நீதி மன்றம் நிறுத்திவைத்தது. இதனிடையே பாஜகவின் தலைவரான எல்.கே.அத்வானி 25.9.1990ல் சோமநாத்திலிருந்து ரதயாத்திரையைத் தொடங்கினார். இது பீகார் மாநிலம் சமஸ்திபூர் சென்றடைந்தவுடன் அவர் கைது செய்யப்பட்டார் இதனைத் தொடர்ந்து பாஜகவானது வி.பி.சிங்கிற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டது. மேலும் ஜனதா தளத்தின் ஒரு பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகருக்கு ஆதரவாக மாறியதால் வி.பி.சிங் அரசு கவிழ்ந்தது. சந்திரசேகர் தலைமையில் காங்கிரஸ் ஆதரவுடன் 7.11.1990ல் ஆட்சி அமைக்கப்பட்டது. மிகக் குறுகிய காலமே நீடித்த சந்திரசேகர் அரசு 5.3.1991ல் காங்கிரஸ் அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்டதால் கவிழ்ந்தது.

இக்கால கட்டத்தில் அரசின் செலவுகள் பல மடங்கு அதிகரித்தது ஆனால் அரசு மற்றும் பொதுத்துறை சேமிப்பானது தொடர்ந்து குறைந்துவந்தது. இதன் விளைவு அரசின் நிதிப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்தது (1979-80ல் நிதிப் பற்றாக் குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.7 விழுக்காடாக இருந்தது 1991ல் 10.4 விழுக்காடாக அதிகரித்தது). இதனை எதிர்கொள்ள அரசு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளிலிருந்து கடன் வாங்கியது. இதனால் அரசின் முதலீட்டிற்கும் பொது சேமிப்பிற்குமான இடைவெளி அதிகமானது (1980-81ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.3 விழுக்காடாக இருந்தது 1989-90ல் 9 விழுக்காடாக அதிகரித்தது). நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பினால் செலுத்துநிலை இருப்பில் எதிர்மறை விளைவுகள் உண்டாகியது. செலுத்து நிலை இருப்பின் பற்றாக்குறையானது 3.5 பில்லியன் டாலராக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 1.8 விழுக்காடு) 1987-88ல் இருந்தது 1990-91ல் 9.9 பில்லியன் டாலராக அதிகரித்தது (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 3.5 விழுக்காட்டு). 1985-1990ஆம் ஆண்டுகளுக்கிடையே மொத்த பொருளாதாரத்தில் முதலீட்டுக்கும் சேமிப்பிற்கும் உள்ள இடைவெளியானது ஆண்டுக்கு சராசரியாக 2.5 விழுக்காடு அதிகரித்தது. 1985-1990ஆம் ஆண்டுகளுக்கிடையே இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ஆண்டுக்கு 5.5 விழுக்காடு வளர்ச்சியினைக் கண்டது. குறிப்பாக தொழில் துறையானது 7 விழுக்காடாக இருந்தது. ஆனால் சேமிப்பானது முதலீட்டை மேம்படுத்த உதவவில்லை இதனால் அதிகக் கடன் வாங்கி செலவிட செய்தனர். இதனால் நிதிநிலை மேலும் மோசமடைந்தது. செலுத்து நிலை இருப்பில் பாதக போக்கு காணப்பட்டது. 1980களின் இறுதியில் கடன் அளவு அதிகமாக்க காணப்பட்டது. உள்நாட்டுக் கடன் 1974-75ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 31.8 விழுக்காடாக இருந்தது 1984-85ல் 45.7 விழுக்காடாகவும், 1989-90ல் 54.6 விழுக்காடாகவும் அதிகரித்திருந்தது. வெளிநாட்டுக் கடன் 1980-81ல் 23.5 பில்லின் டாலராக இருந்தது 1985-86ல் 37.3 பில்லியன் டாலராகவும், 1990-91ல் 83.8 பில்லின் டாலராகவும் அதிகரித்தது. இதன் விளைவு இந்தியாவில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 1980-81ல் 5.85 பில்லியன் டாலராக இருந்தது 1989-90ல் 4.1 பில்லியன் டாலராகக் குறைந்தது. இது மேலும் 1990-91ல் 2.24 பில்லியன் டாலராகக் குறைந்தது. இந்தக் கையிருப்பானது அடுத்து வந்த ஒருமாதத்திற்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. இதற்கிடையே 1990ல் ஈராக்-குவைத் போரினால் பெட்ரோல் விலை அதிகரித்தது. இதனால் மேலும் அந்நியச் செலாவணிப் பற்றாக்குறை அதிகரித்திருந்தது. பன்னாட்டுக் கடன் தர மதிப்பீடு இந்தியாவின் மீதிருந்தது வேகமாகக் குறைந்தது இதனால் வெளிநாட்டுக் கடன் பெறுவதில் பெரும் சவால்கள் காணப்பட்டது. இதற்கிடையே அயல் நாடு வாழ் இந்தியர்கள் தங்களின் வைப்புகளைத் திரும்பப் பெறத்தொடங்கினர். இந்த நிலையினை எதிர்கொள்ள முடியாமல் இந்தியா 20 டன் தங்கத்தை சுவிட்சர்லாந்து யூனியன் வங்கியிடம் ஜூலை 1991ல் அடகு வைத்து அந்நியச் செலாவணியினை பெற்று நடப்பு நிலையினை சரிசெய்தது. இதனைத் தொடர்ந்து பன்னாட்டுப் பண நிதியத்திடம் இந்தியக் கடன் பெற்றது. இவ்வாறு இந்தியாவின் வெளிநாட்டு, உள்நாட்டு கடன்கள் அதிகரித்தது.

இந்தியாவின் பெரும் சவாலாக செலுத்துநிலை இருப்பில் ஏற்பட்ட பாதகமான நிலையினால் வெளிநாட்டுக் கடன் தொடர்ந்து அதிகரித்தால் (1980-81ல் 20.6 பில்லியன் டாலராக இருந்தது 1989-90ல் 64.4 பில்லியன் டாலராக அதிகரித்தது) இதற்குச் செலுத்தவேண்டிய வட்டி அதிகமானது. அரசின் வருவாய் இதற்காகத் திருப்பிவிடப்பட்டது எனவே நடப்பு கணக்கில் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து குறைந்துகொண்டு வந்தது. இதனைக் கட்டுப்படுத்த 1 ஏப்ரல் 1990ல் புதிய இறக்குமதி-ஏற்றுமதிக் கொள்கையினை அறிவித்தது. இதன்படி இந்திய ஏற்றுமதியினை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதேசமயம் கடந்த 5 ஆண்டுகளில் எண்ணெய் (எரிபொருள்) நுகர்ச்சியானது 8 விழுக்காடு அளவிற்கு அதிகரித்திருந்தது. இதனால் பெட்ரோல் இறக்குமதி அதிகரித்தது, அந்நியச் செலாவணி செலவு அதிகரித்தது.

வி.பி.சிங் பிரதமராகப் பதவியேற்றபோது விலைவாசி அதிக அளவில் காணப்பட்டது. எனவே இதனைக் கட்டுப்படுத்த முக்கிய நுகர்வுப் பொருட்களின் அளிப்பினை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உணவு தானிய விலையினை கட்டுப்படுத்த அரசு உணவு தானியக் கையிருப்பினைப் போதுமான அளவில் அதிகரிக்க உணவு கொள்முதலை மேற்கொள்ள முன்னுரிமை அளித்தது. இதனால் உணவு தானியக் கையிருப்பு (ஒன்றிய தொகுப்பு) 11.67 மில்லியன் டன்னாக அதிகரித்தது (கடந்த ஆண்டில் இது 8.34 மில்லியன் டன்னாக இருந்தது). அரசு, ஏழை மக்கள் விலை உயர்வினால் பாதிக்கப்படுவதை உணர்ந்து அவர்களைப் பாதுகாக்க பொது விநியோக முறை மூலமாக அடிப்படையாகத் தேவைப்படும் உணவுப் பொருட்களை வழங்கியது. இதுபோல் வெளிச்சந்தை நடவடிக்கையில் தலையிட்டு முக்கிய உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தியது.

1980களின் கடைசியில் ஏற்பட்ட பஞ்சத்தை இந்தியா எந்த நாடுகளின் உதவியுமின்றி எளிதாக எதிர்கொண்டது. காரணம் 1980களில் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவினை அடைந்தது மட்டுமல்லாமல் அரசின் உணவு தானிய இருப்பை அதிகரித்து கொண்டது. 1990களில் உணவு உற்பத்தி வளர்ச்சியானது (3 விழுக்காடு) மக்கள் தொகை வளர்சியினைவிட (2.1 விழுக்காடு) அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பசுமைப் புரட்சியின் விளைவாக 1967-68 மற்றும் 1989-90ஆம் ஆண்டுகளுக்கிடையே வேளாண் உற்பத்தியானது 80 விழுக்காடு அதிகரித்திருந்தது, உற்பத்தி திறனானது ஆண்டுக்கு 2.5 விழுக்காடு அதிகரித்தது. இதன் விளைவு உபரியான உணவு உற்பத்தியினைச் சந்தைப் படுத்துதல் அதிகரித்துக் காணப்பட்டது. பசுமைப் புரட்சியின் விளைவினால் பெருமளவிற்கு உணவு உற்பத்தி அதிகரித்திருந்தாலும் (உணவு தானிய சாகுடி பரப்பானது 1980-81க்கும் 1989-90க்கு மிடையே கடந்த பத்தாண்டுகளில் ஒப்பிடும்போது குறைந்திருந்தாலும் உணவு உற்பத்தியானது 2.81 விழுக்காடு அதிகரித்திருந்து), இது அனைத்து பகுதியிலும் சீரான நிலையில் இல்லை. சிறு, குறு விவசாயிகள், நிலமற்ற வேளாண் கூலிகள், அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் பசுமைப் புரட்சியானது சிவப்பு புரட்சியாக பல இடங்களில் உருவெடுத்தது. இந்தியாவின் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்ததன் விளைவு நிலம் துண்டாடப்பட்டு சராசரி நிலக் கைப்பற்று அளவானது குறைந்து வந்தது (1970-71ல் 2.28 ஹேக்டேராக இருந்தது 1990-91ல் 1.57 ஹேக்டேராகக் குறைந்தது). மேலும் மொத்த விவசாயிகளில் சிறு, குறு விவசாயிகளின் (இரண்டு ஹேக்டேருக்கு கீழ்) பங்கு அதிகரித்தது. இதன் அடிப்படையில் ஏழை விவசாயிகள் பயன்பெறத் திட்டங்கள் வகுக்கப்பட்டன. இந்த அடிப்படையில் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம், சிறு விவசாயிகள் வளர்ச்சி முகமை திட்டம், குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர் திட்டங்கள் தொடங்கப்பட்டன. இதன் விளைவு 1960களில் 20 மில்லியன் மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்ட நிலையில் 1988-89ல் 850 மனித வேலை நாட்கள் உருவாகியிருந்தது. தமிழ்நாடு – கர்நாடகா இடையே நீண்டகாலமாகக் காவிரி ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்வதில் சச்சரவு தொடர்ந்து வந்தது. 1990-91ல் இப் பிரச்சனை இரு மாநிலங்களுக்கிடையே பெரிய அளவில் சர்ச்சை உருவாகியது. இதனைத் தீர்க்க வி.பி.சிங் அரசானது காவிரி சர்ச்சை தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.

வி.பி.சிங்கின் அரசு வேலைவாய்ப்பிற்கு முக்கியத்துவம் அளித்தது. இந்தியப் பொருளாதாரம் 1980களில் சராசரியாக 5 விழுக்காடு வளர்த்திருந்தாலும் நீடித்த வேலையின்மை 1983ல் 8 மில்லியான இருந்தது 1987-88ல் 12 மில்லியனாக அதிகரித்தது. இத்துடன் குறை வேலையின்மை (under employment) அதிக அளவில் காணப்பட்டது. எனவே வி.பி.சிங் அரசானது மதிப்புடைய வேலைவாய்ப்பினை உருவாக்க ‘வேலைவாய்ப்பு உறுதி திட்டம்’ நடைமுறைப்படுத்தியது. இத்திட்டத்தை நாடு முழுக்க அனைத்துப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்த போதுமான நிதி இல்லாததால், வேலையின்மை அதிகமாக இருந்த கிராமப்புற வறட்சியினை எதிர்கொண்ட பகுதிகளில் முதல் கட்டமாக நடைமுறைப்படுத்தியது.

அட்டவணை: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சராசரி ஆண்டு வளர்ச்சி வீதம் 

துறைகள்   1967-68 முதல் 1980-81வரை 1981-82 முதல் 1990-91வரை
வேளாண்மைத் துறை 3.3 3.5
தொழில் துறை 4.1 7.1
பணித் துறை 4.3 6.8
மொத்த உள்நாட்டு உற்பத்தி 

(காரணிகளின் விலையில்)

3.8 5.6
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தலா வருமானம் 1.5 3.4

Source: Illa Patnaik (2006): “India: Ecnomic Growth, 1950-2000,” Indian Council for Research on International Relations, New Delhi. 

வேளாண்மையில் வேகமான வளர்ச்சியினை அடைய பல்வேறு உத்திகள் கையாளப்பட்டது. இந்தியாவில் நீர்ப்பாசன வசதியினைப் பெற்ற பகுதிகளில் ஈர்க்கத்தக்க அளவில் உற்பத்தித் திறன் அதிகரித்திருந்தது. ஆனால் மழைப்பொழிவினைச் சார்ந்தும், பகுதியான அளவில் வறண்ட விளைநில பரப்பில் குறைவான உற்பத்தித் திறன் காணப்பட்டது. எனவே இப்பகுதிகளில், உற்பத்தித் திறனை அதிகரிக்க நீர்ப்பாசன, நிலமேம்பாட்டு, மண் மற்றும் ஈரப்பதத்தை மாற்றியமைக்க அதிக அளவிற்கு முதலீடு செய்யப்பட்டது. இதன் மூலம் வேளாண் தொழிலாளர்களை அதிக அளவில் ஈடுபடுத்தத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்துடன் வேளாண்மையில் பன்முகத் தன்மையினை உருவாக்கவும், வேளாண் சார் தொழில்களை உருவாக்கவும் முனைந்தது. கிராமப்புற பொருளாதாரத்தை நகர்ப்புறங்களுடன் இணைத்துச் சிறப்பான சந்தைப் படுத்துதலை உறுதி செய்யத் திட்டம் வகுக்கப்பட்டது.

இந்தியத் தொழில் கொள்கை 1956 போல் வேளாண்மைக்கான சிறப்பான கொள்கையினை வகுக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வி.பி.சிங் அரசு வெளியிட்டது. வேளாண்மையினை மேம்படுத்த ‘வேளாண்மை கொள்கை நிருணயம்’ கொண்டுவரப்பட்டது. வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கு அரசின் நிதி ஆதாரங்களிலிருந்து 50 விழுக்காடு செலவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 1989-90வது திட்ட கால ஒதுக்கீடானது 44 விழுக்காடாக இருந்தது 1990-91வது திட்ட காலத்தில் 49 விழுக்காடாக அதிகரித்தது. ஏழை விவசாயிகள், கைவினைஞர்கள், நெசவாளர்கள் தொடர்ந்து கடனால் பாதிக்கப்பட்டும், அதனைத் திரும்பச் செலுத்த இயலாமலும், குறைவான வருவாயினை ஈட்டிக்கொண்டு இருந்ததாலும் காலம் காலமாக வறுமையின் பிடியில் சிக்கித் தவிர்ப்பதை உணர்ந்து 2, அக்டோபர் 1989ல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், வட்டார வளர்ச்சி வங்கிகளில் கடன் பெற்றவர்களின் கடனை ரூ.1000 கோடி மதிப்பில் தள்ளுபடி செய்தது. ஒன்றிய அரசு போலவே மாநில அரசுகளும் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்குக் கடன் தள்ளுபடி நடவடிக்கையை மேற்கொள்ள ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ரூ.4000 கோடி உர மானியம் அளிக்கப்பட்டது. நிலச்சீர்திருத்தினை தீவிரமாக நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

வேளாண் விளைபொருட்களின் விலையினைத் தீர்மானிக்க உற்பத்தி செலவினைக் கணக்கிடும் முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதன்படி வேளாண் தொழிலாளர் (குடும்ப உறுப்பினர்களின் உழைப்பு உட்பட) செலவு, குறைந்தபட்ச கூலி அல்லது பெயரளவுக் கூலி இதில் எது அதிகபட்சமோ அதனைக் கணக்கில் கொண்டது. விவசாயிகளின் வேளாண் சாகுபடி செய்தலின் மேலாண்மைக்கான மதிப்பீடு கணக்கில் கொள்ளப்பட்டது. வேளாண் விளைபொருட்கள் சந்தைக்கு வருவதற்கும் அரசு அறிவிக்கின்ற விலைக்கும் உள்ள செலவு வேறுபாட்டில் உள்ளீட்டுச் செலவின் உயர்வினைக் கொள்முதல் அல்லது குறைந்தபட்ச ஆதரவு விலையில் சரிசெய்து கொள்ளும் என்ற நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டைப் பாதுகாக்கக் கிராமப்புற மேம்பாட்டின் அவசியத்தை உறுதி செய்தது. இது போன்று இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்கள் சுயவேலைவாய்பினைப் பெருக்கத் திட்டம் வகுக்கப்பட்டது. தொழில் வளர்ச்சியினை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாகப் பின்தங்கிய பகுதிகளில் வேளாண் சார் தொழில்கள் ஊக்குவிக்கப்பட்டது. வேளாண்மையில் சரியான தொழில்நுட்ப மேம்பாட்டை ஏற்படுத்த முறைசாரா மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தத் திட்டங்கள் வகுக்கப்பட்டது.

இந்திய வேளாண்மை வளர்ச்சி 7வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ஆண்டுக்கு 4.1 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டது இது 6வது ஐந்தாண்டு திட்ட காலத்தைவிட (6 விழுக்காடு) குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. மழைபொழிவு சிறப்பாக இருந்தால் உணவு உற்பத்தியானது 1989-90ல் 171.04 மில்லியன் டன்னாக இருந்தது 1990-91ல் 176.39 மில்லியன் டன்னாக அதிகரித்தது. நெல், கோதுமை, பயறு வகைகளின் உற்பத்தியினை அதிகரிக்க திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டது. இந்தியாவின் கிழக்குப் பகுதியில் நெல் உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டது, சிறப்பு உணவு தானிய உற்பத்தி செய்யும் மாநிலங்களில் ஒன்றிய அரசின் தேசிய பயறு வளர்ச்சி திட்டம் 1990-91ல் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டது. அரசின் எண்ணெய் வித்துகள் தொழில்நுட்ப இயக்கம் (1986ல் தொடங்கப்பட்டது) தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டது ஆனால் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியானது 1988-90ல் 18 மில்லியன் டன்னாக இருந்தது 1989-90ல் 16.8 மில்லியன் டன்னாகக் குறைந்தது. 1990-91ல் நல்ல மழை பொழிவு இருந்ததால் உரப் பயன்பாடு 12.7 மில்லியன் டன்னாக அதிகரித்தது (1988-90ல் 11.7 மில்லியன் டன்னாக இருந்தது) இதுபோல் வேளாண் கடன் 1990-91ல் ரூ.13240 கோடியாக இருந்தது 1989-90ல் ரூ.13022 கோடியாக அதிகரித்தது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பினை உருவாக்க ஜவஹர் ரோஜ்கர் யோஜனா 1989ல் ராஜீவ் காந்தியால் தொடங்கப்பட்டது. இத்திட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. கிராமப்புறங்களில் வறட்சியினை எதிர்கொண்ட பகுதிகளில் வேலைவாய்ப்பு உறுதி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது (Chandra Shekhar Prasad 2009).

வி.பி.சிங் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்து போர. மது தண்டவதே 1990-91ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல் செய்யும் போது வேளாண்மைக்கான பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். உர மானியத்திற்கு ரூ.950 கோடியும், உணவு மானியத்திற்கு ரூ.276 கோடியும் ஒதுக்கப்பட்டது. இதுபோல் வறுமையை ஒழிக்க வரவு செலவு திட்டத்தில் 30 விழுக்காடு ஒதுக்கப்பட்டது (கடந்த ஆண்டு இது 23 விழுக்காடாக இருந்தது). வேளாண்மைத் துறைக்கு ரூ.950 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ரூ.3115 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வேளாண்மைக்கான முன்னுரிமைத் தருவதாக அறிவித்த அரசு பூச்சிக் கொள்ளி மருந்து இறக்குமதிக்கான வரியினைக் குறைத்தது.

1980களின் இடையில் இந்தியப் பொருளாதாரம் முதல் கட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியிருந்தது. இதன்படி புதிய தொழில்நுட்பங்கள் அனைத்து துறைகளிலும் புகுத்தப்பட்டது, வர்த்தக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. ஆனால் குழப்பமான அரசியல் நிலையினாலும், பொது விலைமட்ட உயர்வினாலும் இச்சீர்திருத்தங்கள் பெருமளவிற்குக் கைகொடுக்கவில்லை. மேலும் இச்சீர்திருத்தங்கள் தொழில் துறை சார்பானதாக இருந்ததால் வேளாண்மைக்கான முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கியது. இக்கால கட்டத்திலிருந்து இந்திய வேளாண்மைத் துறையானது பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இரண்டாம் கட்டமாகப் பொருளாதாரச் சீர்திருத்தமானது 1991ல் நடைமுறைப்படுத்தப்பட்டது இது இந்தியப் பொருளாதாரம் உயர் வளர்ச்சியில் பயணிப்பதற்கான அடித்தளத்தை உருவாக்கித் தந்தது. இந்தியப் பொருளாதாரம் மெதுவான வளர்ச்சி நிலையிலிருந்து சந்தை சார்ந்த தொடர் வளர்ச்சிக்கு மாற்றமடைந்தது. இதன் விளைவு மக்களின் வருமானம் அதிகரித்தது, வறுமை குறைந்தது, வட்டார ஏற்றத் தாழ்வுகள் உருவானது, கிராமப்புறங்களில் வேளாண்மை நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. கிராமப்புறங்களில் வேளாண் சாரா தொழில்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. வேளாண்மையினைச் சார்ந்திருந்தவர்கள் குறிப்பாக சுயமாகப் பயிர் செய்பவர்கள் குறைந்தனர், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் அதிகரித்தனர். வேளாண்மை சாத்தியமற்றதாக விவசாயிகள் கருதத் தொடங்கினர். இதனை அடுத்துத் தொடர்ந்து வேளாண்மை பெருமளவிற்குச் சரியும் போக்கு உருவானது.

– பேரா.பு. அன்பழகன்

“யாரையும் விட்டு விடாதீர்கள்.” கட்டுரை – அ.பாக்கியம்

“யாரையும் விட்டு விடாதீர்கள்.” கட்டுரை – அ.பாக்கியம்



Yaraiyum Vittu Vidathirkal Artikal By A Bakkiam "யாரையும் விட்டு விடாதீர்கள்." கட்டுரை - அ.பாக்கியம்

இந்த வருடம் அக்டோபர் 16-ம் தேதி உலக உணவு தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகளின் சபை உலக நாடுகளுக்கு அறிவித்த கருப்பொருள்தான் “யாரையும் விட்டு விடாதீர்கள்”.

பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்கும் முயற்சியில் உலகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று நோய், சர்வதேச உறவுகளில் ஏற்பட்டிருக்கிற மோதல்கள், தீவிர வானிலை மாற்றம், போன்ற காரணிகள் உலகின் உணவு பாதுகாப்பை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.

ஐநா சபை அறிக்கையின்படி உலக அளவில் பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2021-ல் 828 மில்லியனாக உயர்ந்து உள்ளது. இது உலக மக்கள் தொகையில் சுமார் 10% ஆகும்.

உலகப் பொருளாதாரம் மேம்பட்டிருந்தாலும் 2030-ம் வருடம் மேலும் 670 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொள்வார்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட காரணத்தினால் ஐக்கிய நாடுகள் சபை இந்த வருடத்தின் கருப்பொருளாக “யாரையும் விட்டு விடாதீர்கள்” என்பதை தேர்வு செய்துள்ளது.

உலகின் உழைப்பாளி மக்களை சூறையாடி பெறும் நிறுவனங்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் மோடி, பைடன், சுனாக் போன்றவர்கள் இதைப் பற்றி கவலைப்பட போவதில்லை.

மக்கள் சீனம் உணவு பாதுகாப்பை முக்கிய கொள்கையாக ஏற்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை ஆதரித்து எதிர்வினை ஆற்றியுள்ளது.

உணவு பாதுகாப்பு என்பது எல்லா மக்களுக்கும் எல்லா நேரங்களிலும் போதுமான பாதுகாப்பான சத்தான உணவுகள் கிடைப்பதற்கான சமூக மற்றும் பொருளாதார உத்தரவாதத்தை அளிக்க கூடியதாக இருக்க வேண்டும். அது மக்களின் உணவு விருப்பங்களையும் சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உணவு தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று மக்கள் சீனம் உணவு பாதுகாப்பு பற்றி தெரிவித்துள்ளது.

சீனாவின் ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளுக்கு 25 சதவீதம் தானியங்களை சார்ந்தே இருக்கிறது. உணவு பாதுகாப்பில் தானியங்கள் முக்கிய பங்கு வைக்கிறது.

சீனாவின் தானிய உற்பத்தி 2015 ஆம் ஆண்டு 650 மில்லியன் டன் களிலிருந்து 682. 85 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது.

சீனாவில் 140 கோடி மக்களும் ஒரு வருடம் முழுவதும் உண்ணக்கூடிய அளவிற்கு அரிசி மற்றும் கோதுமைகளை இருப்பு வைத்துள்ளது.

சீனா உலகின் மிகப்பெரிய தானிய உற்பத்தியாளர். மூன்றாவது மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளர். சோயா சோளம் மற்றும் பயிர் விதைகளை அதிகம் இறக்குமதி செய்யும் நாடு.

சீனா மக்களின் உணவு பாதுகாப்பை பற்றிய அதிக கவலை கொண்டுள்ளது எனவே உணவு பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு பயிரிடப்படும் நிலத்தின் பரப்பை விரிவாக்கம் செய்கிறது இயந்திர மயமாக்கலை மேம்படுத்தி வளர்ச்சியில் கூடுதல் முதலீடுகளை செய்கிறது. உணவு பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய நாடாக சீனா இருக்கிறது.

அதே நேரத்தில் சீனா உலக மக்களின் பசியை போக்குவதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்கிறது. இதற்கான உறுதியை அளித்துள்ளது. உணவு விநியோகத்தில் சர்வதேச ஒத்துழைப்பை சீனா தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இதற்காக உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் இணைந்து தெற்கு தெற்கு ஒத்துழைப்பு என்ற அறக்கட்டளை நிதியை நிறுவி நிதி உதவி செய்து வருகிறது.

சீனா மலரும் நாடுகளில் 25 விவசாய திட்டங்களை தொடங்கியுள்ளது அந்த திட்டப் பகுதிகளில் பயிர்களின் விளைச்சலை 30 முதல் 60% வரை உயர்த்தி உலக அளவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான சிறு விவசாயிகளுக்கு பலனை அளித்துள்ளது.

உலக அளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய தொழில்நுட்பங்களை ஊக்கிவிக்கும் உதவிகளை செய்துள்ளது.
140 க்கு மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களுடன் விவசாய பரிமாற்றங்களை நடத்தி வருகிறது.

சீனாவின் விவசாய வல்லுநர்கள் பல்வேறு நாடுகளின் துறைகளில் செயல்பட்டு உள்ளூர் விவசாயிகளின் சிறந்த வாழ்க்கையை உருவாக்க உதவி வருகிறார்கள்.

சீன நாட்டின் விவசாயத் துறை கண்டுபிடித்த கலப்பின அரிசி அறுபதுக்கு மேற்பட்ட நாடுகளில் 8 மில்லியன் ஹெடேர்களில் வளர்ந்து வருகிறது. சராசரி வருட மகசூல் உள்ளூர் அரிசியைவிட ஹெக்டேருக்கு 2 டன்கள் அதிகமாக மகசூல் செய்யப்படுகிறது.

வளரும் நாடுகளுக்கு 30 ஆயிரம் கண்களுக்கு அதிகமான அளவில் தானியங்களை அவசர மனிதாபிமான உதவியாக சீனா வழங்கியுள்ளது.

உள்ளூர் மக்களின் உணவு பாதுகாப்பையும் உலக மக்களின் பசியை போக்குவதற்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவின் முயற்சிகள் வெல்லட்டும்.

– அ.பாக்கியம்

உழவும் உழைப்பும்……!!!!! கவிதை – ச.சக்தி

உழவும் உழைப்பும்……!!!!! கவிதை – ச.சக்தி




“உழவுமாடுகளோடு
உதவாமலே
போன நிலங்களை
விளைநிலங்களாக
சமநிலைப் படுத்திக்கொண்டிருக்கிறார்
உணவுக் கடவுள் ”

“மாடுகள்
முன்னோக்கி
இழுத்துக்கொண்டு போக
பின்னோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்
பக்தன்
கைகளில்
கடவுளுக்கே
வழிகாட்டும்
மூக்கனாங்கயிற்றைப் பிடித்தவாறே ”

“பசியோடு
உலகத்தின்
உணவுகளையே
இழுத்துப் போகும்
மாடுகளின்
உணர்வுகளுக்காக
தானும்
பசியோடு நடக்கிறான்
பாய்மரப்
படகுகளைப்போல ”

“கொழ கொழச் சேற்றையெல்லாம்
புரதச் சத்து
உணவுகளாக
மாற்றிக்கொண்டிருக்கும்

உழுது வாழும்
மாடுகளும் உழவனும் ”

கவிஞர் ச.சக்தி,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75 : தொடர் – 4 லால் பகதூர் சாஸ்திரியும் உணவு பற்றாக்குறையும் (1964-66) – பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75 : தொடர் – 4 லால் பகதூர் சாஸ்திரியும் உணவு பற்றாக்குறையும் (1964-66) – பேரா.பு.அன்பழகன்




லால் பகதூர் சாஸ்திரி நேரு தலைமையிலான அமைச்சரவையில் 1951-1956ல் ரயில்வே அமைச்சராகவும், 1957முதல் நாட்டின் முதல் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராகவும் பின்பு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் இருந்தார். 1961ல் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். நேரு மறைந்த பிறகு லால் பகதூர் சாஸ்திரி 9.6.1964ல் இந்தியாவின் இரண்டாவது பிரதம மந்திரியானார். ஜனவரி 11, 1966வரை 19 மாதங்கள் இவர் ஆட்சியிலிருந்தார். இவரை மறைக்கப்பட்ட பிரமதர் என்று அழைப்பதுண்டு. சாஸ்திரி பிரதம அமைச்சராகப் பொறுப்பேற்றபோது, அரசியல் ரீதியாக இந்தி எதிர்ப்பு, பஞ்சாப் தனிமாநிலக் கோரிக்கை, கோவாவை மகாராஷ்டிரா மாநிலத்துடன் இணைப்பது போன்றவை அறைகூவல்களாக இருந்தது. பொருளாதார நிலையில், சில ஆண்டுகளாகப் பொருளாதாரத் தேக்க நிலை, தொழில் வளர்ச்சியில் சரிவு, செலுத்து நிலை இருப்பில் (Balance of Payment) மோசமான நிலை, கடுமையான உணவு பற்றாக்குறை போன்றவை முதன்மையான பிரச்சனைகளாக இருந்தது. பல மாநிலங்களில் வறட்சி நிலவியதால் உணவுப் பொருள் உற்பத்தி குறைந்தது. 1939-1952 காலகட்டங்களில் உணவு பற்றாக்குறை காணப்பட்டது. 1953-54 முதல் 1958-59வரையிலான காலகட்டங்களில் உணவுப் பொருட்களின் விளைச்சல் அதிகமாக இருந்ததால் நிலைமை சீராக இருந்தது. அதற்கடுத்த ஆண்டுகளில் தேக்கமான நிலையே நீடித்தது. 1962-63ல் சாதகமற்ற காலநிலையினாலும், வெள்ளத்தாலும் கோதுமை, அரிசி பற்றாக்குறை நிலவியது. இக்காலத்தில் கோதுமை உற்பத்தி 10.8 மில்லியன் டன்னாக இருந்தது (முந்தைய ஆண்டில் 12.0 மில்லியன் டன்னாக இருந்தது). செப்டம்பர் 1963க்கு பின்பு கோதுமை விளைச்சல் அதிகரித்ததாலும், உத்திரப் பிரதேசம், பஞ்சாப், பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் அதிக அளவிற்கு உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது. 1962-63ல் நெல் மற்றும் இதர தானியங்களின் விளைச்சல் 31.9 மில்லியன் டன்னாக இருந்தது (முந்தைய ஆண்டில் 34.8 மில்லியன் டன்னாக இருந்தது). இதனால் நியயாவிலைக் கடைகள் மூலமாக 1962ல் 1 மில்லியன் டன், 1963ல் 1.1 மில்லியன் டன், 1964ல் 1.3 மில்லியன் டன் உணவுப் பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அதே சமயம் 1962-63ல் பொதுச் சந்தையில் உணவுப் பொருட்களின் விலை 33 விழுக்காடு அதிகரித்திருந்தது. இதனிடையே இந்திய அரசு பாக்கிஸ்தான், கம்போடியா, தாய்லாந்து நாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்தது. சந்தையில் அரிசி விலை அதிகரித்திருந்தது பொருளாதார அளவில் மட்டுமல்ல அரசியல் மட்டத்திலும் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்தது. எனவே அரசு துரிதமாக உணவுப் பதுக்களைக் கடுமையாகக் கையாண்டு தடுத்தது. அதிக உணவு உற்பத்தி செய்ய அடுத்த போத்திற்கு (season) வழிவகை செய்தது. கோதுமையை, ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்ய அன்னிய செலாவணியை ஒதுக்கியது, விவசாயிகளை நேரடியாகச் சந்தித்தது அவர்களை ஊக்குவித்து ராபி போகத்திற்கு அதிக பயிர் செய்யும்படி செய்தது. இதற்கிடையே தென்னிந்திய மாநிலங்களில் அரிசி பற்றாக்குறை கடுமையாக இருந்தது. அந்நியச் செலாவணி கையிருப்பும் குறைந்திருந்தது. எனவே சில நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நெல் உற்பத்தியினைப் பெருக்கவும், அதற்கானச் செலாவணியினை குறிப்பிட்ட கால இடைவெளியில் செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டது. மேலும் இச்சிக்கலைப் போக்கக் கம்பு, கேழ்வரகு, சோளம், திணை போன்ற உணவுப் பொருட்கள் மாற்றாக வழங்கப்பட்டன. 1965ல் இந்த நிலைமையே நீடித்தது. 1966-67ல் பீகாரில் பஞ்சம் உருவெடுத்தது. இதனால் 60 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனைப் போக்க அமெரிக்காவிலிருந்து கோதுமை இறக்குமதி செய்து சமாளித்தது (Rakesh Ankit 2020). 1965-1966ல் இந்தியா, அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டன் கோதுமையினைப் பொதுக் கடன் திட்டம் (பி.எல்.480) மூலம் இறக்குமதி செய்தது. இதனால் 40 மில்லியன் மக்களின் பசி போக்கப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டதால் இந்தியா உணவு இறக்குமதி செய்தது இதனால் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்தது. இதன் எதிரொலியாக 1966ல் இந்தியாவின் பண மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக ஒரு டாலருக்கான பணமாற்று மதிப்பினை ரூ.4.76லிருந்து ரூ.7.50 ஆகக் மாற்றப்பட்டது. இதனால் கடும் எதிர்ப்புகளை அரசு எதிர்கொண்டது (Ramachandra Guha 2017).

உணவுப் பற்றாக்குறை கடுமையாக இருந்ததால் பொதுமக்களுக்கு உணவுத் தேவையினைக் குறைக்க வாரத்தில் ஒருநாள் உண்ணா நிலையில் இருக்க வேண்டும் என்று சாஸ்திரி வேண்டுகோள் வைத்தார். இதற்கான பலன் நாடுமுழுவதும் காணப்பட்டது. இதனை “சாஸ்திரி விரதம்” என்று அழைக்கப்பட்டது. தீவிர உணவு பற்றாக்குறையினைப் போக்கத் தினமும் ஒருவேளை உணவினை தவிர்க்கும்படியும் கோரிக்கை வைத்தார். இதனால் உணவின்றி தவித்த மக்களுக்கு உணவு அளிக்கப்பட்டது. வேளாண் உற்பத்தியினை அதிகரிக்கவும் இறக்குமதியினைக் குறைக்கவும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக “ஜெய் கிசான்-ஜெய் ஜவான்” என்ற முழுக்கதை முன்னெடுத்தார்.

உணவு பற்றாக்குறையினைப் போக்க அரசு உணவு கூட்டுறவுச் சட்டத்தை நிறைவேற்றியும், விவசாயிகளை அதிக அளவிற்கு உற்பத்தி செய்யவும் ஊக்குவித்தது. விவசாயக் கடன் வசதியினை உருவாக்கியும், ரசாயன உரம் பயன்படுத்தவும், நீர்ப்பாசன வசதி மற்றும் விவசாய ஆலோசனைகளையும் விவசாயிகளுக்கு அரசு வழங்கியது. விளைச்சல் உயர வாய்ப்பு இருந்த அதேசமயம் கட்ச் முதல் காஷ்மீர் வரை கோடைக்கால தாக்கத்தினால் 1965ல் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு விலைகள் அதிகரித்தது. ஒட்டுமொத்தமாகவே சாஸ்திரி பிரதம அமைச்சரான காலத்தில் உணவுப் பஞ்சம் பெருமளவிற்கு இருந்தது. இதற்காக நீண்டகால தீர்வாகப் பசுமைப் புரட்சி வித்திடப்பட்டது. நேருவால் கடைப்பிடிக்கப்பட்ட தொழில் சார்ந்த அணுகுமுறையில் மாற்றப்பட்டு சாஸ்திரி காலத்தில் வேளாண் சார் அணுகுமுறை பின்பற்றப்பட்டது. சாஸ்திரி வேளாண்மைக்காக கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் தன்னுடைய அமைச்சரவையினைச் சார்ந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி, நாடாளுமன்ற கம்யூனிஸ்ட் உறுப்பினர்களான ஹரின் முகர்ஜி மற்றும் பூபேஷ் ஆகியோரால் கடும் விமர்சனத்துக்கு ஆளானது.

பஞ்சத்தால் இந்தியாவின் உணவுத் தொகுப்பின் இருப்பு தீர்ந்திருந்தது. உணவு உற்பத்தியில் உபரியாக இருந்த சில மாநிலங்கள் இந்த நிலைமையினை தீர்க்க ஒத்துழைப்பை அளிக்கவில்லை. இத்துடன் இந்தியா-பாக்கிஸ்தான் போரைக் காரணம் காட்டி பி.எல் 480 ஒப்பந்தம் மூலம் அமெரிக்கா இந்தியாவிற்கு உணவுக்காக அளித்த அனைத்து மானியத்தையும் நிறுத்திவிட்டது. சாஸ்திரி அனைத்து மாநில முதல்வர்களுக்கும், இடைத்தரகர்களையும், உணவு பதுக்கலையும் கட்டுப்படுத்த ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று கடிதம் எழுதினார். எதிர் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, இது ஒரு தேசியப் பிரச்சனை என்றும் இதனை அரசியலாக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதன் அடிப்படையில் இரண்டு முக்கிய முடிவுகளை மேற்கொண்டார். 1) 1 மில்லின் மக்கள்தொகைக்கு அதிகமாக இருந்த 6 நகரங்களில் விகிதாச்சார உணவு விநியோகமும், முறைசாரா உணவு விநியோகத்தை 1 லட்சம் மக்கள்தொகைக்கு மேல் உள்ள 105 நகரங்களில் நடைமுறைப்படுத்தினார். 2) உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்ற வியாபாரிகள் மீது வழக்குத் தொடுத்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது (Ramachandra Guha 2017). அரசு வரையறுக்கப்பட்ட நிலையில் உணவு பகிர்மான முறையினை நடைமுறைப்படுத்தியது. இது இந்தியாவில் உள்ள 7 முக்கிய நகரங்களில் மட்டுமே சாத்தியப்பட்டது. 1965ல் மாநில உணவு வாணிபக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இதன்படி மாநில அரசு நேரடியாகவே வேளாண் உணவுப் பொருட்களை வெளிச் சந்தையில் கொள்முதல் செய்தது. ஆனால் இது போதுமான அளவிற்கு வெற்றியினை பெறவில்லை. எனவே நீண்டகால அடிப்படையில் உணவு உற்பத்தியைப் பெருக்கவும், சுயச்சார்பினை அடையவும் கொள்கைகள் வகுக்கப்பட்டு பசுமைப் புரட்சிக்கு வித்திடப்பட்டது. இதனை இந்திரா காந்தி பிரதம அமைச்சராக இருந்த காலத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார் (Bipan Chandra 2008).

சாஸ்திரி பிரதமராக இருந்தபோது மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் தோல்வியினை எதிர்கொண்டது. நாட்டின் தேசிய வருமானம் குறைவான அளவிற்கே வளர்ச்சியினை கண்டது. பொருட்களின் விலை அதிக அளவிற்கு உயர்ந்தது. உணவு தானியப் பற்றாக்குறை கடுமையாக நிலவியது. எனவே உணவு உற்பத்தியினை அதிகரிக்கப் பசுமைப் புரட்சிக்கு வழிவகுத்தார். நேருவின் ஜனநாயக சோசியலிசக் கொள்கையினை சாஸ்திரி பின்பற்றினாலும், நேருவினால் அமைக்கப்பட்ட திட்டக்குழுவினை மாற்றி அமைத்தார். இதன்படி திட்டக்குழுவின் உறுப்பினர்களின் காலம் வரையற்ற நிலையில் இருந்ததைக் குறிப்பிட்ட காலம்வரை பணியாற்ற வழிவகை செய்தார். மேலும் திட்டக்குழுவிற்கு இணையாக “தேசிய வளர்ச்சிக் குழு” 1964ல் பொருளாதார, அறிவியல் அறிஞர்களைக் கொண்டு உருவாக்கினார். சாஸ்திரி நேரு வழியில் பயணித்தாலும் கனரக தொழிலுக்கு முன்னுரிமை என்று இருந்ததை வேளாண்மைக்கான முன்னுரிமை என மாற்றி அமைத்தார்.

தன்னுடைய அமைச்சரவை சகாக்களையும், உயர் அதிகாரிகளையும் ‘கிராமங்களுக்குச் செல்லுங்கள், மக்களையும், விவசாயிகளையும் சந்தியுங்கள்” என்றார்.

நேருவினால் முன்னெடுக்கப்பட்ட கனரக தொழிலுக்கான வளர்ச்சியானது சாஸ்திரி காலகட்டத்தில் வேளாண்மையினை மேம்படுத்த முன்னுரிமை தரப்பட்டது. சாஸ்திரி பிரதம மந்திரி ஆனதும் முதல் பணியாக வேளாண்மைத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டினை அதிகரித்தார். மழை பொய்த்துப்போனதால் உணவு உற்பத்தி குறைந்து, பற்றாக்குறை நிலவியது. அரசின் உணவுக் கையிருப்பும் குறைந்துவிட்டது. இதனைப் பயன்படுத்தி கள்ளச் சந்தை நடவடிக்கைகள் பெருகியது என்பதை உணர்ந்து இதற்கு நீண்டகாலத் தீர்வினை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தன்னுடைய அமைச்சரவையில் உணவு மற்றும் வேளாண்மை அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் அவர்களிடம் இதற்கான பொறுப்பினை ஒப்படைத்தார். சுப்பிரமணியம் உடனடியாக வேளாண் விஞ்ஞானிகளை அங்கீகரித்து, அவர்களின் ஊதியத்தை உயர்த்தி, வேலைக்கான சூழ்நிலையினை மேம்படுத்தி அரசின் அதிகார வர்கம் தலையிடாமல் பார்த்துக்கொண்டார். வேளாண்மையில் தனியார் துறையினை ஊக்குவிப்பது, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், அன்னிய நேரடி முதலீடு போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தை புத்துயிர்பெறச் செய்தார், மாநிலங்கள் வேளாண் பல்கலைக்கழகங்கள் துவக்கவும், அதில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. வேளாண் சாகுபடியினை அதிகரிக்கப் பரிசோதனை பண்ணைகள், இந்திய விதைக் கழகம் போன்றவை உருவாக்கப்பட்டது. பி.சிவராமன், எம்.எஸ்.சாமிநாதன் போன்ற வல்லுநர்களின் ஆலோசனைகளின்படி மெக்சிகன் கோதுமை விதை வகையினை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1965ல் இந்திய-அமெரிக்க (சுப்பிரமணியம் – ஃபிரிமேன்) ஒப்பந்தத்தின்படி இந்தியா கணிசமான அளவிற்கு வேளாண்மை மீதான முதலீட்டை அதிகரிக்கவும், கிராமப்புறக் கடன் வழங்கச் சீர்திருத்தங்களை கொண்டுவரவும், ரசாயன உர உற்பத்தியினைப் பெருக்கி அதன் பயன்பாட்டை அதிகரிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது (Ramachandra Guha 2017). வேளாண்மை உற்பத்தியினை அதிகரிக்கச் சந்தை நோக்கு முறை பரிந்துரைக்கப்பட்டது.

எல்.கே.ஜா தலைமையில் குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரையின் அடிப்படையில் இந்திய உணவுக் கழகம் 1964ல் துவக்கப்பட்டது. இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவினை அடைய மூன்று முக்கிய பிரகடனங்கள் செய்யப்பட்டது (அதிக மகசூல் தரும் உயர் ரக விதைகள் பயன்படுத்துதல், உழவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், நீர்ப்பாசன விளைநிலங்களுக்கு மேம்படுத்தப்பட்ட இடுபொருட்களைப் பயன்படுத்துதல்). வலதுசாரி கட்சியினரும், எதிர்க் கட்சிகளும் வேளாண்மையில் முன்னெடுக்கப்பட்ட செயல்களால் முதலாளித்துவ விவசாயம் உருவாகும் என்றும் பெரிய விவசாயிகளுக்கு மட்டுமே பயன் உடையதாக இருக்கும் என விமர்சனம் செய்யப்பட்டது. ஆனால் 1966-67ஆம் ஆண்டு வேளாண்மையில் கடைப்பிடிக்கப்பட்ட புதிய முறையினால் கோதுமை உற்பத்தியானது 5.5 விழுக்காடு அதிகரித்தது. சாஸ்திரி இந்தியாவில் வேளாண்மையில் முதல் சீர்திருத்தத்தினை கொண்டுவந்தார் இதனால் இன்று உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவினை அடைந்தது மட்டுமல்ல உலகில் வேளாண்மை உற்பத்தியில் முன்னணி நாடாகவும் உள்ளது.

வேளாண்மை செலவு மற்றும் விலைக் குழு 1965ல் துவக்கப்பட்டது, இக்குழுவானது வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச விலையினைத் தீர்மானிப்பதற்கான பரிந்துரையினை வழங்குகிறது. முதன் முதலில் கோதுமைக்கான குறைந்த பட்ச ஆதார விலையினை இக்குழு பரிந்துரைத்தது. பழமையான நெல் ரகங்களின் பயிர்செய்யும் கால அளவு குறைந்தது 6 மாதங்களாக இருந்தது இதனைக் குறைக்கும் பொருட்டு குறுகிய கால நெல் ரகமான ஐ.ஆர்8 அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் ஆண்டுக்கு மூன்று போகம் பயிரிடும் நிலை உருவாக்கப்பட்டது. இதுபோன்றே கோதுமையில் புதிய ரக விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டது (ICAR 2022).). இவருடைய காலத்தில் உணவு பற்றாக்குறை அதிக அளவிலிருந்ததால் 1966-67ல் 10 மில்லியன் டன் உணவு தானியங்கள் இறக்குமதி செய்யப்பட்டது. அரசின் பல்வேறு நடவடிக்கையின் காரணமாக இது 1970ல் 3 மில்லியன் டன்னாகக் குறைந்தது.

சாஸ்திரி காலத்தில் வெண்மைப் புரட்சிக்கு அடிக்கோலப்பட்டது. பால் உற்பத்தியைப் பெருக்கி, அளிப்பினை அதிகரிக்கத் தேசிய பிரச்சார இயக்கத்தை உருவாக்கினார். குஜராத் மாநிலத்தில் உள்ள ஆனந்தில் 1965ல் குரியனால் தேசிய பால் வளர்ச்சி கழகமும், அமுல் பால் கூட்டுறவும் தொடங்கப்பட்டது. இதன் அடிப்படையில் பால் பற்றாக்குறையாக இருந்த இந்தியா தன்னிறைவினை அடைந்துள்ளது. இன்று உலக அளவில் அதிக பால் ஏற்றுமதி செய்யும் நாடாக மாற்றமடைந்துள்ளது.

சாஸ்திரி காலத்தில் 1964-65ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.8.96 லட்சம் கோடியாக இருந்தது 1965-66ல் ரூ.8.73 லட்சம் கோடியாகக் குறைந்தது அதாவது 2.63 விழுக்காடு குறைந்தது. தலா வருமானம் ரூ.16836 ஆக இருந்தது ரூ.16423ஆக குறைந்தது அதாவது 2.45 விழுக்காடு குறைந்தது. வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறையும் நாட்டின் நிகர தேசிய உற்பத்திக்கு 1965-66ல் ரூ.99.45 மில்லியன் பங்களிப்பினை வழங்கியது (1964-65ல் இது ரூ.102.14 மில்லியனாக இருந்தது) (Jagdish N Bhagwati and T.N.Srinivasan 1975).

அட்டவணை: சாஸ்திரி காலத்தில் இந்தியப் பொருளாதார மாற்றம் (2011-12 விலை அடிப்படையில்)

விவரங்கள்         1964-65 1965-66
வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறைகளின் வளர்ச்சி (விழுக்காடு) 8.7 -9.6
உற்பத்தி, கட்டுமானம், மின்சாரம், எரிவாயு, தண்ணீர் வழங்கல் துறைகள் (விழுக்காடு)  7.4 3.3
வர்த்தகம்உணவகம், போக்குவரத்து, தகவல் தொடர்பு (விழுக்காடு) 6.7 1.9
நிதி, மனைத் தொழில், தொழில்முறை சேவை (விழுக்காடு)    2.8 3.0
மொத்த உள்நாட்டு உற்பத்தி (ரூ.கோடியில்) 896221 872598
தலா வருமானம் (ரூ) (at NNP)   16836 16423

Source: GoI (2022): Economic Survey 2021-2022.” Ministry of Finance, Government of India.

ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறைகளும் 57 விழுக்காடு பங்களிப்பும், தொழில் துறை 28 விழுக்காடும், சேவைத் துறை 15 விழுக்காடு பங்களிப்பும் 1950-51ல் இருந்தது 49 விழுக்காடு, 31 விழுக்காடு, 21 விழுக்காடு என முறையே 1964-65 மாற்றமடைந்தது. சாஸ்திரி ஆட்சிக் காலத்தில் மூன்றாவது ஐந்தாண்டு திட்டமானது தோல்வியினைத் தழுவியது. அதிக மக்கள் தொகை பெருக்கம், விலைவாசி உயர்வு, உணவுப் பற்றாக்குறை போன்றவை நிலவியது (Sanjeet Kashyap 2019).

சாஸ்திரி பிரதம அமைச்சராக இருந்தபோது அரசியல் ரீதியாகக் கட்சிக்கு உள்ளேயும் வெளியிலும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். பல பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தினார் என்றும், காஷ்மீர் பிரச்சனை, பாக்கிஸ்தானுடனான போர், வியட்நாம் போர் மீதான நிலைப்பாடு போன்றவை  இந்தியப் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதித்தது. உஸ்பெகிஸ்தான் என்ற நாட்டில் உள்ள தாஷ்கண்ட் என்ற இடத்தில் இந்தியா-பாக்கிஸ்தான் ஒப்பந்தம் கையெழுத்தான 10.01.1966ல் திடீரென சாஸ்திரி காலமானர். சாஸ்திரி ஆட்சிக் காலத்தில் நவீன வேளாண் வளரச்சிக்கான அடித்தளத்தை உருவாக்கினார், தாரளமயக்கொள்கைக்கான முன்னெடுப்பும் இவர் காலத்தில்தான் தொடங்கப்பட்டது. இவரைப் பற்றி இந்திரா காந்தி குறிப்பிடுகையில் “அவர் இயல்பாக மிகவும் கண்ணியமானவர், அமைதியானவர் ஆனால் போரின் போது அவர் நமது மன உறுதியை வலுவாக ஊக்குவித்தார், நாட்டின் ஒற்றுமை மற்றும் வலிமைக்கு பங்களித்தது தேசத்திற்குத் தலைமையை ஏற்று வழிநடத்தினார்” என்றார்.

சாஸ்திரி 582 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்தாலும், இவருடைய காலத்தில் பல்வேறு பிரச்சனைகள் காணப்பட்டன அதனைத் திடமாகவும், நீக்குப்போக்குடன்  எதிர்கொண்டார். இவர் சிறந்த நிர்வாகியாகத் திகழ்ந்தார், சிக்கல்களைத் தீர்க்க கூட்டு முயற்சியினை மேற்கொண்டார். தன்னுடைய அமைச்சரவை முடிவுகள்  தீவிர ஆலோசனைக்குப் பிறகே மேற்கொண்டார் (Ramandeep Kaur 2019). வேளாண்மை வளரச்சிக்காக அவர் மேற்கொண்ட முயற்சியே இன்று இந்தியா உலக அளவில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

– பேரா.பு.அன்பழகன்

ச.சக்தியின் கவிதைகள்

ச.சக்தியின் கவிதைகள்




உணவுக் கடவுள்…..!!!!
அந்தக்
கடவுளைக்
காலையில் தான்
கண்ணாரக் கண்டேன்
கரடு முரடாகிப்போன
அரைகாணிநிலத்தை
உழுது கொண்டிருந்தான்
அரைஞாண்
கயிற்றுக் கோவணத்தோடு ,

கடவுளின்
கோவணம்
காற்றில்
பறந்து கொண்டிருந்தது
குருவிகளை
விரட்டும்
பச்சை வண்ணக்கொடி
அன்னக்கொடியாக ………!!!!!!!

மழை……!!!!
நீ
புள்ளி வைத்து
கோளம்
இடாத பொழுதெல்லாம்
வானம் தன்
கண்ணீரால்
புள்ளி வைத்து
கோளமிட்டு
கொண்டிருக்கிறது
அதிகாலை வேளையில் … ”

சிவப்பு இரத்தம்….!!!!
நீங்கள்
ரோஜாவை
வரையும் பொழுது
முட்கள் உங்கள் கைகளை
கிழிக்கவில்லையாயென்று கேட்கிறீர்கள்
முட்கள் கைகளை
கிழித்தனால் தான்
அவை
சிவப்பு சாயங்களை பூசிக்கொண்டிருக்கிறதென்று பதில் அளித்தவாறு
அங்கிருந்துநகருகிறேன்
சிவந்த முகத்தோடு….!!!!

கவிஞர் ச.சக்தி ,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,