கள்ளப் புன்னகை கவிதை  – வளவ. துரையன்

கள்ளப் புன்னகை கவிதை – வளவ. துரையன்




உன் கேள்வியின் பொருள்
எனக்குப் புரிந்து விட்டது.

விடையையும் சொன்னேன்.
உனக்கு விளங்கவில்லை.

தேர்வறையில் அங்குமிங்கும்
பார்த்துத் திகைப்பவனாக இருக்கிறாய்.

கூட்டத்தைவிட்டுப் பிரிந்த
ஒற்றைக் கருப்பு வாத்து போல
அலைகிறாய் மனத்துள்ளே.

இங்கே போட மாட்டார்கள்
எனத் தெரிந்தும் யாசிக்கும்
இரவலனா நீ?

ஒரு கல்லைக் குளத்தில் எறிந்தால்
உருவாகும் நூறு வட்டஙக்ள் போல
நீ உருவாக்கிக் கொள்கிறாய்.

தெளிவான ஓடையினடியில்
தெரியும் கூழாங்கல் போல
என் பதில் தெரிந்தும்
கள்ளப்புன்னகை புரிகிறாய்.

எத்தனை நாள்கள் நடிப்பாய்?

காலம் கண்களை மூடிக்கொண்டு
கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.

– வளவ. துரையன்