Let us take the All India Strike Struggle to a new height - 2022 Article By Com Tapan Sen in tamil translated By S. Veeramani. 2022 மார்ச் 22 - அகில இந்திய வேலை நிறுத்தம் போராட்டத்தை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்வோம் - தபன் சென் | தமிழில்: ச.வீரமணி

அகில இந்திய வேலை நிறுத்தம் போராட்டத்தை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்வோம் – தபன் சென்




வீரஞ்செறிந்த விவசாயிகள் போராட்டம் தொழிலாளர் வர்க்கத்தின் உறுதியான, செயலூக்கமுள்ள ஒருமைப்பாட்டு நடவடிக்கைகளுடன் சேர்ந்து, வரலாறு படைத்து, ஓராண்டு நிறைவடைந்த பின்னர், பிடிவாதமாக இருந்து வந்த ஆர்எஸ்எஸ்/பாஜக ஆட்சியை படுபிற்போக்குத்தனமான வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வைத்துள்ள பின்னணியில், இப்போது மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடையும், சுயேச்சையான துறைவாரி சங்கங்களின் கூட்டமைப்புகளும் இணைந்து, மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, நாசகரமான தேச விரோத கொள்கைகளுக்கு எதிராக, “மக்களைக் காப்பாற்றுவோம், நாட்டைக் காப்பாற்றுவோம்” என்ற முழக்கத்துடன் அனைத்து மக்களுக்கும் மார்ச் 28-29 – இரு நாள் அகில இந்தய வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள அறைகூவல் விடுத்திருக்கின்றன.

விவசாயிகள் போராட்டத்தின் தொடர்ச்சியாக, தொழிலாளர் வர்க்கம், விவசாய வர்க்கம் ஆகிய நாட்டின் பிரதான இரு உற்பத்தி வர்க்கங்களும் இணைந்து, இவ்வாறு அகில இந்திய பொது வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறது. இவ்வேலை நிறுத்தத்தின் நோக்கம், நாட்டை ஆட்சி செய்துவரும் மிகவும் காட்டுமிராண்டித்தனமான எதேச்சாதிகார சக்திகள் நாட்டின் பொருளாதாரத்தையே விரல்விட்டு எண்ணக்கூடிய அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு ஏலம் விடும் நாசகர, தேச விரோதக் கொள்கைக்கு எதிராகவும், ஆட்சியாளர்களே, நாட்டின் கஜானாவையும் மக்களின் சொத்துக்களையும் கொள்ளையடித்துக்கொண்டிருப்பதற்கு எதிராகவும் இவ்வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறது. இவர்களின் ஆட்சியில் உழைக்கும் மக்களின் பெரும்பகுதியினர் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டு, அல்லாடிக்கொண்டிருக்கின்றனர். இதற்கு எதிராகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைத்திடவும் இந்த வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது.

விரிவடைந்து கொண்டிருக்கும் ஒன்றுபட்ட மேடை
இப்போது நடைபெறவிருக்கும் அகில இந்திய வேலைநிறுத்தமானது, நாட்டில், படுபிற்போக்கான நவீன தாராளமயக் கொள்கை 1991இல் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டபின், இக்கொள்கைக்கு எதிராக நடைபெறும் 21ஆவது வேலை நிறுத்தமாகும்.

கடந்த முப்பதாண்டுகளாக நடைபெற்றுவந்த போராட்டங்களின்போது, ஒவ்வொரு வேலை நிறுத்தத்தின்போதும் ஸ்தாபனரீதியாக அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களும், அவ்வாறு அணிதிரட்டப்படாத முறைசாராத் தொழிலாளர்களும் முந்தைய வேலைநிறுத்தத்தைவிட அடுத்த வேலைநிறுத்தத்தில் கூடுதலாகப் பங்கேற்று வருகின்றனர். மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை விரிவடைந்து, வலுப்பட்டு, இறுதியாக அனைத்து பெரிய மத்தியத் தொழிற்சங்கங்களையும் 2009இல் ஒரே மேடையின்கீழ் கொண்டு வந்திருக்கிறது. ஒன்றிய அரசாங்கத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்பு, அதன் அங்கமாக இருந்துவந்த தொழிற்சங்கமான பிஎம்எஸ், மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடையிலிருந்து விலகிக் கொண்ட போதிலும், அது எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்திடவில்லை. மாறாக, பாதுகாப்புத்துறை (Defence Sector) போன்று துறைவாரி சங்கங்களின் ஒன்றுபட்ட நடவடிக்கைகளின்போது,. அவற்றில் அங்கம் வகித்திடும் பிஎம்எஸ் சங்கங்களும் பங்கேற்பது தொடர்கிறது.

மத்தியத் தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட மேடை விரிவடைந்துகொண்டிருப்பது மற்றுமொரு முக்கிய அம்சத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறது. மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை என்பது மத்தியத் தொழிற்சங்கங்களை மட்டும் உள்ளடக்கியில்லை. மாறாக அது மேலும் மேலும் அநேகமாக அகில இந்திய அளவில் சுயேச்சையாக செயல்பட்டு வரும் நிறுவனங்களான அகில இந்திய அரசு ஊழியர்களின் சம்மேளனங்கள், கூட்டமைப்புகள், சங்கங்களையும் தழுவிக் கொண்டுள்ளது. ஒன்றிய அரசு ஊழியர்கள், அனைத்து மாநில அரசு ஊழியர்கள், வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், டெலிகாம், பாதுகாப்பு முதலான அனைத்துத்தரப்பு ஊழியர்களும் இச்சங்கங்களில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை விரிவடைந்துகொண்டிருப்பது தொடர்கிற அதே சமயத்தில், ஒவ்வொரு துறையிலும் மற்றும் பணிபுரியும் மட்டத்தில் இயங்கும் சங்கங்களுக்கிடையேயும் ஒன்றுபட்ட மேடைகள் உருவாகி, நடவடிக்கைகளில் இறங்குவது என்பதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இவற்றில் இதுநாள்வரை எந்த சங்கத்திலும் இணையாத தொழிலாளர்களும் பெரிய அளவில் பங்கேற்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு தொழிலாளர் வர்க்க இயக்கம் அடித்தட்டு உழைக்கும் மக்களையும் விரிவாகவும் ஆழமாகவும் ஒன்றுபடுத்தி, தலைமை தாங்கிக் கொண்டிருக்கிறது.

தொழிலாளர்களின் உணர்வுமட்டம் உயர்ந்துகொண்டிருக்கிறது, இயக்கம் விரிவடைந்து கொண்டிருக்கிறது
இன்றைய வரலாற்றுப் பின்னணியில், மற்றுமொரு பிரச்சனையையும் ஆழமானமுறையில் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். நாட்டில் நவீன தாராளமயக் கொள்கைகளை ஆட்சியாளர்கள் பின்பற்றத் தொடங்கியதிலிருந்தே அதற்கு எதிரான போராட்டங்களை, குறிப்பாக, செங்கொடியின்கீழ் இயங்கிடும் இயக்கங்கள் வேலை நிறுத்தம் உட்பட பல்வேறு கிளர்ச்சி நடவடிக்கைகளிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தன. நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக ஆவேசத்துடன் தொழிலாளர்கள் பங்கேற்பது என்பதும் அதிக அளவில் இருந்தது. செங்கொடி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், படுபிற்போக்கான நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவுகளையும் அதன் அரசியலையும் தொழிலாளர்கள் மத்தியில் விளக்கி வந்தபோதிலும், ஆரம்ப காலங்களில் தொழிலாளர்களின் எதிர்ப்பு என்பது இதனை அமல்படுத்திடும் ஆட்சியாளர்களுக்கு எதிராகத் திருப்புவதில் தொழிற்சங்க இயக்கம் அவ்வளவாக முன்னேறியதாகக் கூறுவதற்கில்லை. தொழிலாளர்கள் தற்போது அவதிக்குள்ளாகி இருப்பதற்கான மூலகாரணமே இந்நவீன தாராளமயக் கொள்கைதான் என்பதைத் தொழிலாளர்கள் மத்தியில் புரிய வைப்பதில் பெரிய அளவிற்கு முன்னேற்றம் ஏற்படவில்லை.

ஆனால், கடந்த முப்பதாண்டு காலமாகத் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்தி வந்தபின்பு, துறைவாரியாகவும், தேசிய அளவிலும் எண்ணற்றக் கூட்டுப் போராட்டங்களை நடத்தி வந்தபின்பு, இவற்றின் விளைவுகள் வீண் போகவில்லை என்பது இப்போது நிரூபணமாகி இருக்கிறது. ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு எதிராகவும், இத்தகைய அரசியலைப் பின்பற்றும் கயவர்களுக்கு எதிராகவும் தொழிலாளர்களின் உணர்வு மட்டத்தை உயர்த்துவது என்பது ஒரு தொடர் நடவடிக்கையாகும்.

முதலாளித்துவம் நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில், அதன் கடும் பாதிப்புகள் உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவினரின் வாழ்க்கையையும், அவர்களின் வாழ்வாதாரங்களையும் கடுமையாகப் பாதித்துள்ள பின்னணியில், தொழிலாளர் வர்க்கத்தின் உறுதியான தலையீடுகள் படிப்படியாக சமூகத்தின் இதர பிரிவினரையும் போராட்டப் பாதைக்கு இழுத்து வர உதவியிருக்கிறது, அவர்களும் தங்கள் குரலை உயர்த்தி, ஒன்றுபட்ட போராட்ட நடவடிக்கைகளுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

விவசாய நெருக்கடி கடுமையான நிலைக்குச் சென்ற பின்னணியில் விவசாயிகள் போராட்டங்களும் தொடங்கி, அவை படிப்படியாக அனைத்து விவசாய சங்கங்களையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவந்து, அதன்மூலம் அவை நவீன தாராளமயத்திற்கு எதிரான போராட்டமாகவும் படிப்படியாக உயர்ந்தது. இந்த செயல்முறை, மக்களின் அனைத்துத் துன்ப துயரங்களுக்கும் ஆட்சியாளர்கள் பின்பற்றும் நவீன தாராளமயக் கொள்கைகளும், அதனை நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளும்தான் என்பதை அடையாளம் காட்டுவதற்கான தலத்தைத் தொழிலாளர் வர்க்கத்திற்குத் தயாரித்துத் தந்துள்ளது.

ஏற்பட்டுள்ள முன்னேற்றம்
இந்த நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டு தொடங்குகையில், குறிப்பாக, இரண்டு தனித்துவமான அம்சங்கள், வெளியே தெரியத் தொடங்கி இருக்கின்றன. ஒரு பக்கத்தில், நவீன தாராளமய முதலாளித்துவத்தின் நெருக்கடி அதன் திவால்தன்மையை வெளிச்சத்திற்குக் கொண்டுவரத் தொடங்கியது. மறுபக்கத்தில், முதலாளித்துவ வர்க்கம் மக்களைப் பெரிய அளவில் துன்ப துயரங்களுக்குள் தள்ளுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தி, அதன் கொடூரமான காட்டுமிராண்டித்தனமான குணத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது. ஒன்றியத்தில் பாஜக ஆட்சி வந்தபின்னர், குறிப்பாக அதன் இரண்டாவது ஆட்சிக் காலத்தில், மக்கள் மீதான கொடூரத் தாக்குதல்கள் உச்சத்திற்கே சென்றுள்ளது.

நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் இப்போது அதன் கொள்கைக்கும் அதனை உந்தித்தள்ளும் ஆட்சியாளர்களுக்கும் இடையேயுள்ள நச்சுப் பிணைப்பின் கோர முகத்தை மக்கள் நன்கு புரிந்துகொண்டிருக்கிற அளவுக்கு முன்பு தெரிந்து கொள்ளவில்லை.

நாடு தற்போது மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களின் மீது எதேச்சாதிகாரத்தின் மிகவும் மோசமான தாக்குதல்கள் ஏவப்பட்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுக் காலம் ஆள்வோரின் மனிதாபிமானமற்ற குரூர முகத்தை அதன் அனைத்துக் கோரப் பற்களுடனும் நகங்களுடனும் பார்த்துக்கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட துன்ப துயரங்களையும், கையறு நிலையையும் பயன்படுத்திக்கொண்டும், தங்களுடைய பொருளாதாரக் கொள்கையின் மோசமான அம்சங்களை மறைக்க வேண்டுமென்று முயற்சிக்கக்கூட எண்ணாமல், மிகவும் வெட்கமற்ற முறையில், எதேச்சாதிகார முறையில் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றனர். படுபிற்போக்குத்தனமான வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வை ஒழித்துக்கட்டிவிட்டு, அந்த இடத்தில் கார்ப்பரேட் வர்க்கத்தின் லாப வெறியின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் விவசாயத்தைக் கொண்டுவருவதற்காகக் கொண்டுவரப்பட்டது. வேளாண் சட்டங்கள் நிறைவேறியிருந்தால் அவை உணவுப் பாதுகாப்புக்கு மேலும் ஆபத்தைக் கொண்டுவந்து, ஏற்கனவே பசி-பட்டினிக்கு ஆளாகியிருக்கும் மக்களையும் நாட்டின தற்சார்பையும் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கும்.

தொழிலாளர் சட்டங்கள் (Labour Codes) என்ற பெயரில், நாட்டிலிருந்த தொழிலாளர் நலச்சட்டங்களை அனைத்தையும் ரத்து செய்துவிட்டு, நான்கே நான்கு சட்டங்கள் மூலமாக தொழிலாளர் விரோதச் சட்டங்களாக, முதலாளிகள் நலச் சட்டங்களாகக் கொண்டு வந்திருக்கின்றனர். இவை தொழிலாளர் வர்க்கத்தை அடிமை நிலைக்குத் தள்ளக்கூடிய நிபந்தனைகளைத் திணித்திருக்கின்றன. முதலாளித்துவ வர்க்கத்தின் எப்போதுமே திருப்தியடையாத லாபப் பசிக்குத் தீனி போடுவதற்காக தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் சலுகைகளைக் குறைத்திட இப்புதிய சட்டங்களில் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடி தொடர்ந்து இருந்து வரும் நிலையில் வேலையின்மை மிகவும் மோசமாக அதிகரித்துள்ள நிலையில், மக்கள் வருமான இழப்புக்கு ஆளாகியுள்ள நிலையில், வேலை வாய்ப்பு உறவுகளும் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளன. நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்ந்து இருள் சூழ்ந்ததாக இருக்கிறது. பணவீக்கம், மக்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான உணவுப் பண்டங்கள், எரிபொருள், மின்சாரம், மருந்துகள் மற்றும் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளையும் உச்சத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது. சாமானிய மக்களின் சராசரி வருமானம் பாதாளத்திற்குச் சென்றுள்ளது.

அத்தியாவசிப் பொருள்களின் விலைகள் தாமாக ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை. கார்ப்பரேட்டுகளும் பெரும் வர்த்தகப் புள்ளிகளும் சூறையாடி, மக்களைக் கசக்கிப்பிழிவதற்கு உதவும் விதத்திலேயே இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது.

வேலையில்லாத் திண்டாட்டம் மிக மோசமான நிலைக்குச் சென்றிருக்கிறது. வேலையிழப்புகளும், கல்வித்தகுதிக்கேற்ற வேலை கிடைக்காதிருப்பதும், கிடைத்தாலும் அற்ப ஊதியம் அளிக்கப்படுவதும் தொடர்கின்றன. இவை பெரிய அளவில் வறுமை, ஆதரவின்மை மற்றும் பசி-பட்டினிக் கொடுமைக்கு இட்டுச்சென்றுள்ளன. இத்தகைய திமிர்பிடித்த கொள்கைத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்பதைத்தான் 2022-23 பட்ஜெட் வெளிப்படுத்தி இருக்கிறது.

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் என்பது ஒட்டுமொத்த நவீன தாராளமயக் கொள்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளாகவே இதற்கான மார்க்கங்களைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கடைசியில், தேசிய பணமாக்கல் திட்டத்தின் (National Monetisation Pipeline) மூலம் அநேகமாக புதிய கூட்டுக்களவாணி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கார்ப்பரேட்டுகளிடம் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை ஒப்படைக்க வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் இவ்வாறு பொதுத்துறை நிறுவனங்களைக் கபளீகரம் செய்வதற்கு, முதலீடு எதுவும் போடத் தேவையில்லை, அநேகமாக இனாமாகவே தரக்கூடிய விதத்தில் நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகளும், துன்ப துயரங்களும் விரிவாகிக் கொண்டே இருக்கின்றன
ஆட்சியாளர்கள், இந்தியாவில் “வர்த்தகத்தை எளிமைப்படுத்துகிறோம்” (“ease of doing business”) என்ற பெயரில் கார்ப்பரேட்டுகள் நாட்டு மக்களையும் நாட்டின் சொத்துக்களையும் சூறையாடுவதற்கு வசதி செய்து கொடுத்தனர். இதன் காரணமாக உலக பசி-பட்டினி அட்டவணையில் இந்தியா படுபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரமும் சீர்குலைந்துவிட்டது. நாகரிக சமுதாயம் எதிலும் அனுமதிக்கமுடியாத அளவிற்கு மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் மிக அசிங்கமான அளவிற்கு அதிகரித்திருக்கிறது. “இந்தியாவில் உயர் 1 சதவீதத்தினர், நாட்டின் செல்வத்தில் மூன்றில் ஒரு பங்கை சொந்தமாக்கிக்கொண்டுள்ள அதே சமயத்தில், மக்கள் தொகையில் பாதியளவிற்கு உள்ள ஏழைகள் 6 சதவீதத்திற்கும் குறைவாகவே பெற்றிருக்கின்றனர். 2020 வாக்கில் நாட்டின் உயர் 10 சதவீதத்தினரின் வருமானப் பங்கு என்பது, 57 சதவீதத்தை எட்டியிருக்கிற அதே சமயத்தில், கீழ்நிலையில் உள்ள பாதி மக்களின் நிலை 13 சதவீத அளவிற்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது. உயர் 1 சதவீதத்தினர் மட்டும் நாட்டின் வருமானத்தில் 22 சதவீதத்தைப் பறித்துக்கொண்டுள்ளனர்,” என்று அதிகாரபூர்வமான ஆய்வுகள் பல தெரிவித்துள்ளன.

இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), எதிர்மறை வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது. இதன் பொருள், பொருளாதாரத்தின் செல்வத்தை உற்பத்தி செய்வதற்கான மதிப்பு முற்றிலுமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது என்பதாகும். கார்ப்பரேட் வர்க்கத்திலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய உயர் பில்லியனர்கள் (ஒரு பில்லியனர் என்றால் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வைத்திருப்பவர்), சராசரியாக 40 சதவீதத்திற்கும் அதிகமான செல்வத்தை அதிகரிக்க முடிந்திருக்கிறது. இதர கார்ப்பரேட்டுகளும் எட்டு முதல் பத்து மடங்கு அதிகரித்துக் கொண்டுள்ளனர். செல்வ வளத்தில் இவ்வாறு இவர்கள் விண்ணை எட்டும் அளவிற்கு அதிகரித்துக் கொண்டிருப்பதென்பது, உண்மையில் நாட்டின் செல்வத்தைப் பெருக்கியோ அதன் மதிப்பை அதிகப்படுத்தியோ, அதனால் தங்களை வளப்படுத்திக்கொள்ளவில்லை. மாறாக, அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களின் மூலமாக நாட்டு மக்களைச் சூறையாடியும், நாட்டின் கஜானாவைச் சூறையாடியும் நாட்டின் சொத்துக்களைச் சூறையாடியுமே தங்களை இவ்வாறு வளப்படுத்திக் கொண்டுள்ளனர். கூட்டுக்களவாணி முதலாளித்துவம் என்பது, மோடியின் ஆட்சியின் கீழ் நாட்டையும், நாட்டு மக்களையும் எல்லையில்லா அளவிற்குச் சூறையாடிக் கொண்டிருக்கிறது.

போராட்டங்களும் எழுச்சியடைந்து கொண்டிருக்கின்றன, விரிவடைந்துகொண்டிருக்கின்றன.
ஒரு பக்கம் ஆட்சியாளர்கள் இவ்வாறு கூட்டுக்களவாணி கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டையும் நாட்டு மக்களையும் சூறையாட வழியேற்படுத்திக்கொண்டிருக்கக்கூடிய அதே சமயத்தில், இதற்கு எதிராக அனைத்துப் பிரிவு மக்களின் போராட்டங்களும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு எழுச்சியுடன் விரிவடைந்து கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. இந்தக் காலகட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தால் மிகப் பெரிய அளவிற்கு 20ஆவது அகில இந்திய வேலை நிறுத்தம் நாடு தழுவிய அளவில் நடந்துள்ளது. 1991க்குப்பின்னர் நடைபெற்ற வேலைநிறுத்தங்களிலேயே 2020 நவம்பர் 20 அன்று நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்தம் மிகவும் பிரம்மாண்டமானதாகும். 2020 மார்ச்சின் இறுதியிலிருந்து கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவும், அதனையொட்டி சமூக முடக்கம் பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் நாட்டின் அனைத்து இயக்கங்களும் முழுமையாக ஸ்தம்பித்து நின்றதைப் பார்த்தோம். பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் மேல் ஏவப்பட்ட அனைத்துவிதமான தடைகளையும் தகர்த்தெறிந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஸ்தாபனரீதியாகத் திரட்டப்பட்ட ஊழியர்கள் மட்டுமல்லாது முறைசாராத் தொழிலாளர்களும் பெருமளவில் இவ்வேலைநிறுத்தத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். காலம் தங்களுக்கு அளித்துள்ள சவாலை உணர்வுபூர்வமாக எதிர்கொண்டு, வேலைநிறுத்தத்தை வெற்றியாக்கினர்.

வேலை நிறுத்தம் தொடங்கிய நாளிலிருந்தே, வரலாறு படைத்திட்ட ஓராண்டு காலம் நடந்த விவசாயிகள் போராட்டமும் படுபிற்போக்குத்தனமான வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாட்டின் தலைநகர் எல்லையில் தொடங்கியது. இந்தப் போராட்டமும் தொடங்கிய நாளன்று இருந்த அதே உணர்வுடன் தொடர்ந்தது. அதுமட்டுமல்லாமல் நாடு முழுதும் விரிவடைந்தது. விவசாயிகளின் போராட்டத்திற்கு தொழிலாளர் வர்க்கமும், அனைத்துத் தொழிற்சங்கங்களும் நேரடியாகக் களத்திற்கே வந்து ஒருமைப்பாட்டைத் தெரிவித்தனர். தலைநகரின் எல்லையில் மட்டுமல்லாமல் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் போராட்டங்கள் நடைபெற்றதைப் பார்த்தோம்.

விவசாயிகள் போராட்டத்திற்கு நாடு முழுதும் மத்தியத் தொழிற்சங்கங்கள் அளித்திட்ட ஒருமைப்பாட்டு நடவடிக்கைகள், அதனை சம்யுக்த கிசான் மோர்ச்சாவுடன் ஒரு கெட்டியான பாலத்தை ஏற்படுத்தவும் வளர்த்தெடுத்தது. அனைத்து ஒன்றுபட்ட மேடைகளும் பரஸ்பரம் ஒருவர் கோரிக்கையை மற்றவர்கள் மனமுவந்து ஆதரிக்கும் நிலைக்கு உயர்த்தியது. இறுதியாக இவை, கார்ப்பரேட்டுகள் மற்றும் காட்டுமிராண்டித்தனமான ஆட்சியாளர்களின் கள்ளப்பிணைப்பு மக்களைச் சூறையாடுவதற்கு எதிராகத் தீர்மானகரமான முறையில் எதிர்த்திட வேண்டும் என்ற கவனத்திற்கு இட்டுச் சென்றது. தொழிலாளர் வர்க்கம் மற்றும் விவசாயிகளின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு இவ்வாறு செயல்பாடுகளினூடே வளர்ந்திருப்பது ஒரு புதிய பரிமாணத்திற்குச் சென்றிருக்கிறது. அதாவது, படுபிற்போக்குத்தனமான கொள்கைகளைக் கடைப்பிடித்துக்கொண்டிருக்கும் ஆட்சியால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பாதிப்புகளுக்கு எதிரான போராட்டங்களும், ஆட்சியில் உள்ளவர்களுக்கு எதிரான போராட்டமாகவும் வியத்தகு விதத்தில் படிப்படியாக வளர்ந்திருக்கிறது.

ஒருங்கிணைந்த போராட்டங்கன் உச்சம்
இவ்வாறு, தொழிலாளர் வர்க்கம் மற்றும் விவசாயிகளின் ஆதரவுடன் அவரவர் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்காக ஒர பொதுவான புள்ளியில் ஒருங்கிணைந்த போராட்டமாக நடைபெறவிருக்கும் அகில இந்திய வேலை நிறுத்தம் உச்சத்தை எட்டியுள்ளது. பெரும் கார்ப்பரேட்டுகள் தலைமையிலான ஆட்சி தங்கள் மீது ஏவிய தாக்குதல்களை, தங்கள் பொது எதிரியை, தொழிலாளர் வர்க்கமும் விவசாயிகளும் அடையாளம் கண்டுகொண்டுவிட்டனர். அவர்களின் ஒன்றுபட்ட நடவடிக்கைதான், தொழிலாளர்களுக்கு எதிராக, மக்களுக்கு எதிராக, தேச விரோத நாசகரக் கொள்கைகளுடன் ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு எதிரான போராட்டமாக, 2022 மார்ச் 28-29 தேதிகளில் நடைபெறவுள்ள நாடு தழுவிய அகில இந்திய வேலை நிறுத்தம் அமைந்துள்ளது.

இதன் போர்க்குரல், நாட்டின் சொத்துக்களையும், மக்களின் வாழ்வாதாரங்களையும், உரிமைகளையும் கொள்ளையடித்திடும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரானதாக இருக்கிறது. தொழிலாளர் வர்க்கத்தின் வேலை நிறுத்த நடவடிக்கை, “மக்களைக் காப்போம், நாட்டைக் காப்போம்” என்கிற அரசியல் கவனத்துடன் அமைந்துள்ளது. இவ்வேலை நிறுத்தப் போராட்டமானது மக்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களுக்கானது மட்டுமல்ல, நாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக, நாட்டைக் காத்திடுவதற்காகவும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

நடைபெறவிருக்கும் 2022 மார்ச் 28-29 அகில இந்திய வேலை நிறுத்தத்தை, “மக்களைக் காப்போம், நாட்டைக் காப்போம்” என்னும் முழக்கத்துடன், எதேச்சாதிகார மற்றும் நாசகர ஆட்சிக்கு எதிராக, குணாம்சரீதியாக புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்வோம்.

(தமிழில்: ச.வீரமணி)

The story of the lying man (பொய் மனிதனின் கதை 13) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

பொய் மனிதனின் கதை அத்தியாயம் 13 – ஜா. மாதவராஜ்



“ஒரு தேசம் பொய்யர்களுக்கு பழக்கப்பட்டு விட்டால்
உண்மையை மீட்டெடுக்க பல தலைமுறைகளாகும்”
                                                                                                       – கோர் விடால்

உத்திரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் ஒரு கோவில் பூசாரி கிருஷ்ணர் சிலையை குளிப்பாட்டியபோது அவரின் கை தவறி கீழே விழுந்து கிருஷ்ணரின் கை உடைந்து போய்விட்டது. கிருஷ்ணரின் சிலையை நோயாளியாகப் பாவித்து உடைந்த கைக்குக் கட்டுப் போட்டு மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு பூசாரி சென்றார். டாக்டர்கள் முதலில் மறுத்தார்கள். பூசாரியும் கூட வந்த காவிச் சங்கிகளும் கடுமையாகப் வற்புறுத்த வேறு வழி தெரியாமல் டாக்டர்கள் அந்த கிருஷ்ணர் சிலையோடு கையை சேர்த்து வைத்து கட்டுப் போட்டார்கள். சென்ற நவம்பர் மாதம் 20ம் தேதி பத்திரிகை செய்தி இது.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 13) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies Historyஉண்மையில் டாக்டர் என்ன செய்திருக்க வேண்டும். உடைந்த கிருஷ்ணர் சிலையை விட்டு விட்டு அந்த பூசாரிக்குத்தான் சிகிச்சை அளித்திருக்க வேண்டும். டாக்டர் அப்படி அறிவு பூர்வமாக செயல்பட்டிருந்தால் அவருக்கு சிகிச்சையளிக்கும் நிலை வந்திருக்கும். சமகால சமூகத்தின் ஒரு பகுதி மக்கள் அப்படி வெறிகொண்ட மனநிலைக்கு ஆட்பட்டிருக்கிறார்கள்.

இங்குதான் ராமர் பிறந்தார் என இந்துத்துவா சக்திகள் தொடர்ந்து தேசம் முழுவதும் ரதயாத்திரை செய்தார்கள். நானூறு ஆண்டு கால மசூதியை இடித்தார்கள். வரலாறு, ஆதாரங்கள் இல்லாமல் நம்பிக்கைகளை வைத்து நாட்டின் உச்சநீதி மன்றமே தீர்ப்பு எழுதிவிட்டது. பாவம் அந்த டாக்டர் வேறென்ன செய்வார்?

இந்த நாட்டின் பிரதமரே விநாயகருக்கு நடந்த அறுவை சிகிச்சை பற்றி பேசும்போது, அந்த கிருஷ்ணர் கோவில் பூசாரிதான் என்ன செய்வார்?
The story of the lying man (பொய் மனிதனின் கதை 13) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History“கணேஷ் என்னும் கடவுளை நாம் எல்லோரும் வணங்குகிறோம். யானையின் தலையும் மனிதனின் உடலும் கொண்ட அந்தக் கடவுள் மூலம் நம் முன்னோர்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே அறுவை சிகிச்சை தெரிந்தவர்களாய் இருந்திருக்கிறார்கள்.”

2014 அக்டோபர் 25ம் தேதி மும்பையில் ரிலையன்ஸ் ஆஸ்பத்திரியில் நடந்த முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பேசியதுதான் இது. தேசத்தின் முக்கிய மருத்துவர்கள், அத்துறை சார்ந்த விஞ்ஞானிகள், அமிதாப்பச்சன், கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் போன்ற பிரபலங்கள் எல்லாம் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். பல்வேறு மதங்களும், நம்பிக்கைகளும் நிறைந்த 130 கோடி மக்களின் பிரதமராக மோடி பதவியேற்று அப்போது சில மாதங்களே ஆகி இருந்தன.

அத்தோடு மோடி நிற்கவில்லை. மேலும் தொடர்ந்தார். “மகாபாரதத்தில் கர்ணனை அவனது தாய் கர்ப்பம் தரித்து பெற்றெடுக்கவில்லை. இன்றைய மரபணு ஆராய்ச்சிகளை அன்றே நம் மூதாதையர்கள் அறிந்திருந்தார்கள்.”

“இன்றைய ஆகாய விமானம், ராக்கெட் எல்லாவற்றுக்கும் நம் நாடுதான் முன்னோடி. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவை நம் நாட்டில் புழக்கத்திலிருந்தன.”

புராணங்கள் எல்லாவற்றையும் உண்மை போலும் சித்தரித்து மோடி பேசினார். மக்களை முட்டாள்களாக பாவிப்பதும், முட்டாள்களாக தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்பதும் அவரது நோக்கமாக இருக்கிறது. இந்துத்துவாவையும், மதவெறியையும் தீவிரமாக பரப்பும் அமைப்பைச் சேர்ந்தவர் மோடி என்னும் கண்ணோட்டத்தில் பார்த்தால் தெளிவாகப் புரியும். அவரது வார்த்தைகளில் ஏவிவிடப்படும் ஆபத்துக்கள் தெரிய வரும்.

அன்றைக்கு அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட இந்தியாவின் புகழ்பெற்ற டாக்டர்களும் விஞ்ஞானிகளும் கிருஷ்ணர் சிலைக்கு சிகிச்சை அளித்த அந்த டாக்டர் போல வேறு வழியில்லாமல் அமைதியாக இருந்தனர். மோடியின் பேச்சு குறித்த பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளின் மீதும் மேலோட்டமான விவாதங்களே எழுந்தன. பிஜேபியின் தகவல் தொடர்பு குழுவைச் சேர்ந்தவர்களே மிக வேகமாக களத்தில் இறங்கி இருந்தார்கள்.

இயேசு கடலின் மீது நடந்தார் என்றால் நம்புவார்கள். மோடி சொன்னதை ஏன் நம்பக் கூடாது” என்றார் ஒருவர்.

யார் நம்பினார்கள்? அப்படி நம்புவதை யார் சரி என்று சொன்னார்கள்? அறிவியலுக்கு முரணான கருத்துக்களை எந்த மதமும், அமைப்பும், மனிதரும் பேசினாலும், பரப்பினாலும் அதை தவறு என சுட்டிக்காட்டி சரிசெய்ய வேண்டியது ஒரு அரசின் கடமை. இங்கு ஒரு அரசே அந்த தவறை அப்பட்டமாக செய்கிறது.

“இன்றைய கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் முந்திய விஞ்ஞானிகளாய் நமது ஆன்மீகவாதிகளும், ஞானிகளும் வாழ்ந்த நாடு இது. இப்படிப் பேசுவதற்கு மோடி போல ஒரு பிரதமர் வேண்டியிருக்கிறது” என பெருமிதம் கொண்டார் இன்னொருவர்.

ஆன்மீகத் தலைவர்களையும் ஞானிகளையும் ஏற்றுக் கொண்டவர்கள் அவர்களை மதிப்பது வேறு. அறிவியலுக்குப் புறம்பான அவர்களது கருத்துக்களை ஒட்டுமொத்த சமூகத்தையும் ஏற்றுக்கொள்ள திணிப்பது வேறு. அதிகாரத்தின் பேரில் புராணங்களில் வரும் கற்பனைகளையும், கட்டுக்கதைளையும் உண்மைகள் என சித்தரிப்பது பெரிய மோசடி.

மோடியே அப்படியெல்லாம் பேசியதும், தலைவன் எவ்வழியோ அவ்வழி தம் வழியென பிஜேபியினரும், இந்துத்துவா அறிவு ஜீவிகளும் வரிசை கட்டி பொய்களை அவிழ்த்துவிட்டார்கள்.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 13) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies Historyஒன்றிய அரசின் அமைச்சர் பியூஸ் கோயல் ஜி.டி.பி ((GDP) குறித்து விவரிக்கும்போது, “கணக்குகள், புள்ளிவிபரங்களின் அடிப்படையில் ஜி.டி.பியை அணுகாதீர்கள். புவியீர்ப்பு விசை குறித்து கண்டறிவதற்கு ஐன்ஸ்டீனுக்கு அவர் படித்த கணிதம் எல்லாம் உதவவில்லை. ஏற்கனவே இருக்கும் விதிகள் மூலம் அணுகினால் புதியவை எதையும் கண்டுபிடிக்க முடியாது.” என்று தன் அறிவை வெளிப்படுத்தினார். புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தவர் நியூட்டன் என ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் அறிவான். பேரை தவறுதலாகச் சொன்னதைக் கூட விட்டு விடலாம்.

ஏற்கனவே இருக்கும் ஒன்றிலிருந்துதான் இன்னொன்று உருவாக முடியும். வெற்றிடத்திலிருந்து எதுவும் உருவாக முடியாது. இதுதான் விஞ்ஞானம். அதுபோல கற்ற கல்வியிலிருந்துதான், பெற்ற அறிவிலிருந்துதான் புதியன கண்டுபிடிக்க முடியும். அப்படி இல்லை என்று மறுப்பது விஞ்ஞானம், கல்வி மீது காட்டும் அலட்சியமே. இத்தனைக்கும் பியூஸ் கோயல் ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டட். படிப்பில் அகில இந்திய அளவில் இரண்டாவது ரேங்க் பெற்றவர். யேல், ஆக்ஸ்போர்டு போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தலைமைப் பண்பு குறித்து வகுப்பு எடுத்தவர். இந்திய கல்வி முறை மீதே ஐயம் ஏற்படுத்தும் விதமாக அவரது கருத்துகள் இருந்தன.

ஒன்றிய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், “அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் குறித்து முதன் முதலாக கண்டறிந்தவர் பிரணவ் என்னும் ரிஷி” என்ற அறிவியல் உலகம் அறியாத தகவலைச் சொன்னார். அவர் ஒரு எம்.ஏ பட்டதாரி. கவிதையெல்லாம் எழுதி இருந்தார். கொஞ்சநாள் ‘டாக்டர்’ என்றும் கூட பேருக்கு முன்னால் போட்டு இருந்தார்.

“மகாபாரதம் காலத்திலேயே இண்டர்நெட் வசதிகள் இருந்தன. கண் தெரியாத திருதராஷ்டிரனுக்கு போர்க்களக் காட்சிகளை சஞ்சயன் அதன் மூலம்தான் விவரித்தான்” என்றார் திரிபுரா முதலமைச்சர்.

இராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர், “பசுக்கள் மிகவும் புனிதமானவை. ஆக்ஸிஜனை உள்ளிழுத்து ஆகிஸிஜனையே வெளியிடும் ஒரே உயிரினம் பூமியில் பசுதான்” என்றார்.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 13) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies Historyஇந்திய அறிவியல் கழகத்தின் 102 வது மாநாட்டில் விமானம் ஓட்ட பயிற்சியளிக்கும் அகாதமியைச் சேர்ந்த கேப்டன் ஆனந்த் போடாஸ் என்பவர், “பூமியில் மட்டுமல்ல, கிரகங்களுக்கு இடையேயும் பறந்த விமானங்கள் எல்லாம் ஏழாயிரம் வருடங்களுக்கு முன்பே இந்தியாவில் இருந்தன” என்று ஒரே போடாக போட்டார்.

இந்திய அறிவியல் கழகத்தின் 105வது மாநாட்டில் ஒன்றிய அரசின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், “ஐன்ஸ்டீனின் சார்பு கோட்பாட்டு விதியை (Theory of relativity) தோற்கடிக்கும் விதியொன்று வேதங்களில் இருப்பதாக விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் சொல்கிறார்” என்று வாய்க்கு வந்தபடி பேசினார்.

இந்திய அறிவியல் கழகத்தின் 106வது மாநாட்டில் உரையாற்றிய ஆந்திரா பலகலைக்கழக துணைவேந்தர் நாகேஸ்வரராவ், “கௌரவர்கள் 100 பேரும் ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்கள். அப்போதே சோதனைக் குழாய் மூலம் கர்ப்பம் தரிக்கும் மருத்துவமுறை இருந்திருக்கிறது” என்றார். மேலும் “எதிரிகளை தாக்கி அழித்துவிட்டு மீண்டும் நம்மிடமே வந்து சேரும் ஆயுதங்கள் இருந்திருக்கின்றன. விஷ்ணு சக்கரம் அப்படியானதுதான்” என்று குறிப்பிட்டார்.

அதே அறிவியல் கழகத்தின் மாநாட்டில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் அஷ்னு கோஷ்லே என்பவர், “டைனசர்களை பூமியில் பிரம்மனே படைத்தார். டார்வின் தியரி எல்லாம் கட்டுக்கதை” என்று அளந்து விட்டார்.

மாலேகான் குண்டு வெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவரும், எம்.பியுமான பிரக்யா சிங் தாக்கூர், “பசுவின் மூத்திரத்தில் பெண்களின் மார்பகப் புற்று நோயை குணப்படுத்தும் மருந்து உள்ளது” என்றார்.

இராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர ஷர்மா, ஆண்மயில் வாழ்நாள் ழுவதும் பிரம்மச்சாரி என்றும் ஆண்மயிலின் கண்ணீரை உட்கொண்டு பெண் மயில்கள் கர்ப்பம் தரிக்கின்றன” என தன் மேதாவிலாசத்தை காட்டினார்.

“யோகா மூலம் சுற்றுப்புற சூழலைக் கட்டுப்படுத்த முடியும்” என மோடியும் அவரது பொய்களை அவிழ்த்து விட்டுக்கொண்டே இருந்தார்.

கடந்த ஐந்தாறு வருடங்களில் மோடியின் தலைமையில், அவரது சகாக்களும், சங்கீகளும் விஞ்ஞானத்தின் மீது ஒரு தொடர் யுத்தமே நிகழ்த்தி உள்ளார்கள்.

இவைகளை வெறும் ஜோக்குகளாகவும், இப்படி பேசுகிறவர்களை முட்டாள்களாகவும் சாதாரணமாக கடந்து விட முடியாது. இந்து மதத்தை விஞ்ஞானமாக்குவதும், விஞ்ஞானத்தையே இந்து மதமாக்குவதும் மோடியின் – அவரது இந்துத்துவா சித்தாந்தத்தின் நோக்கம். அதைத்தான் தொடர்ந்து செய்து வருகின்றனர். அதுதான் அந்த பூசாரியை, உடைந்த கிருஷ்ணர் சிலையைத் தூக்கிக் கொண்டு டாக்டரிடம் கொண்டு செல்ல வைத்திருக்கிறது. அறிவியல் உண்மையை பேசவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்த அந்த டாக்டரின் இயலாமை ஒட்டு மொத்த சமூகத்துக்கும் நேர்ந்து கொண்டிருக்கிறது.

பள்ளியில் நியூட்டனை, ஐன்ஸ்டினை, அறிவியல் கண்டுபிடிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் நிலைமை என்னவாக இருக்கும். புதுமை குறித்த அவர்களது புரிதல்கள் என்னவாக இருக்கும். ஒரு குழப்பமான மனநிலையில் சிக்கிக் கொள்வார்கள். நவீனத்தை நோக்கி நகர முடியாமல் ஒரு தலைமுறையை மெல்ல மெல்ல முடக்கிப் போடும்.

கடந்த கால மகிமைகளையும், வீண் பெருமைகளையும் பேசிப் பேசி இருட்டுக்குள் மக்களைத் தள்ளுகிறார்கள். நிகழ்காலம், எதிர்காலம் குறித்த சிந்தனைகள் அற்ற வெளியில் குருட்டுப் பூனைகளாக்குகிறார்கள். தங்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிலிருந்து அரசுக்கும் அதிகாரத்துக்கும் எதிரான மனநிலை மக்களுக்கு உருவாகாமல் கவனத்தை திசை திருப்புகிறார்கள்.

அன்றைக்கு அந்த பூசாரி கிருஷ்ணர் சிலைக்கு மருத்துவ சிகிச்சை மட்டும் பெற்று செல்லவில்லை. சிகிச்சை அளிக்கப்பட்டதற்கான ரசீதையும் பெற்றுச் சென்றிருக்கிறார். அதில் சிகிச்சை அளிக்கப்பட்டவரின் பெயர் ஸ்ரீ கிருஷ்ணர் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஸ்ரீகிருஷ்ணரின் நோய் காலியாக விடப்பட்டு இருக்கிறது. அந்த நோய் என்னவென்று எழுதுவதில்தான் இந்தியாவின் எதிர்காலம் இருக்கிறது.

முந்தைய தொடரை வாசிக்க:
பொய் மனிதனின் கதை அத்தியாயம் 12 – ஜா. மாதவராஜ்