ஆடுகளை அமைதி படுத்துதல்: பிரச்சாரம் எப்படி செயல்படுகிறது – தமிழில் க.ஆனந்தன்

ஆடுகளை அமைதி படுத்துதல்: பிரச்சாரம் எப்படி செயல்படுகிறது – தமிழில் க.ஆனந்தன்




1970களில், நான் ஹிட்லருக்கு முன்னணி பிரச்சாரம் செய்தவர்களில் ஒருவரான ரேனி ரீபென்ஸ்தால் அவர்களை சந்தித்தேன், அவரின் காவியமான படங்கள் நாஜிக்களை மகோன்னதமானவர்களாக சித்தரித்திருக்கும். நாங்கள் இருவரும் கீன்யாவில் ஒரே தங்கும் விடுதியில் தங்கியிருக்க வேண்டியிருந்தது, அங்கு அந்த பெண்மணி ஒரு புகைப்படம் எடுக்கும் பணிக்காக வந்திருந்தார், அவர் ஹிட்லரின் இதர நண்பர்களுக்கு ஏற்பட்ட கதியிலிருந்து தப்பி வந்திருந்தார். அந்தப் பெண்மணி என்னிடம் தெரிவித்தது, அவருடைய படங்களில் ‘நாட்டுபற்று செய்திகள்’ இடம்பெற்றதிற்கு ‘மேலிடத்திலிருந்து வந்த ஆணைகள்’ காரணம் அல்ல, மாறாக, அவை ஜெர்மன் பொதுஜனத்தின் “அடிபணியும் வெற்றிடம்” (ஆட்டுமந்தை போல் என்கிறார்மொர்) பொறுத்தே இருந்தது என்றார்.

“அவர்களில், தாராளவாதிகளும், படித்த பூர்ஷுவாக்களும் இருந்தார்களா” என நான் வினவியதற்கு, “ஆம், குறிப்பாக அவர்கள்” என்றார் அவர்.

நான் சுற்றி பார்க்கும் போது தற்போது மேற்கத்திய சமூகங்களை பிரச்சாரங்கள் விழுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நான் இதைப் பற்றி நினைக்கிறேன்.

நிச்சயமாக நாம் 1930 களின் ஜெர்மனியிலிருந்து மிகவும் வேறுபட்டிருக்கிறோம். நாம் வாழ்வது தகவல்களின் சமூகங்களில், நாம் சர்வதேசிய வாதிகள். நாம் எந்த காலத்திலும் இவ்வுளவு அறிந்திருக்கவில்லை, இவ்வுளவு அதிகமாக தொடர்பு இருந்ததில்லை, இதைவிட சிறந்த வகையில் தொடர்பில் இருந்ததில்லை.

நாம் அப்படித்தானா? அல்லது நாம் ஊடக சமூகத்தில் வாழ்கிறோமா, அங்கு மூளை சலவை நயவஞ்சகமாகவும், இடைவிடாமலும், நடைபெறுகிறதா? உணர்வுகள் நாட்டின் தேவை களுக்கும் பொய்களுக்கும் அல்லது கார்ப்பரேட் சக்திகளுக்கு ஏற்ப வடிகட்டப்படுகிறதா?

ஐக்கிய அமெரிக்கா மேற்கத்திய ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது. மேற்குலகின் 10 முதன்மையான ஊடகங்களில் 9 நிறுவனங்கள் வட அமெரிக்க கண்டத்தில் உள்ளன. இண்டர்நெட் மற்றும் சமூக ஊடகங்கள் -கூகுள், முகநூல், டுவிட்டர்-ஆகியவை பெரும்பாலும் அமெரிக்கர்களுக்கு சொந்தமானவை, அமெரிக்கர்களால் கட்டுபடுத்தப்படுபவை.

என்னுடைய வாழ்நாளில், அமெரிக்கா தூக்கி எறிந்தது அல்லது தூக்கி எறிய முயன்றது 50க்கு மேற்பட்ட அரசுகளை, அவைகள் பெரும்பாலும் ஜனநாயக பூர்வமாக தேர்தெடுக்கப்பட்டவை. அது 30க்கு மேற்பட்ட நாடுகளில் தேர்தல்களில் தலையிட்டுள்ளது. அது 30 நாடுகளின் மக்கள் மீது குண்டுகளை வீசியுள்ளது, அந்த நாடுகள் பெரும்பாலும் ஏழை நாடுகள், இதற்கெதிரான பாதுகாப்பு இல்லாதவர்கள், 50 நாடுகளின் தலைவர்களை கொலை செய்ய முயன்றுள்ளது. 20 நாடுகளில் அது விடுதலை இயக்கங்களை அடக்க போர் நடத்தியுள்ளது.

இத்தகைய படுகொலைகளின் அளவும், அவற்றின் பரந்துபட்ட தன்மையும் பெரும்பாலும் சொல்லப்படவில்லை, கவனத்தில் கொள்ளவில்லை மேலும் அதற்கு காரணமானவர்கள் இன்னமும் ஆங்கில-அமெரிக்க அரசியல் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

காதாசிரியர் ஹரால்டு பிண்டர் இறப்பதற்கு முன் ஆண்டுகளுக்கு முன் 2008ல் இரண்டு அசாதாரணமான உரைகளை நிகழ்த்தினார், அது அமைதியை உடைத்தது :

“யு. எஸ். வெளியுறவுக் கொள்கையை சிறப்பாக கீழ்கண்டவாறு விளக்கலாம் . நீ எனது கு.யை முத்தமிடு அல்லது நான் உனது தலையில் காலால் உதைப்பேன். அது அந்தளவுக்கு எளிமையானது அந்தளவுக்கு முரட்டுதனமானது. அதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அது நம்பமுடியாத அளவிற்கு வெற்றிகரமாக இருந்தது. அது தவறான தகவல்களை அளிக்க அமைப்புகளை கொண்டிருந்தது, அது வெறிக்கூச்சலை பயன்படுத்தும், மொழியை திரிக்கும், அது ஏற்றுக் கொள்ள வைக்க முயல்வது போல் காட்டும், ஆனால் அவையனைத்தும் உண்மையில் பொய்மூட்டைகள். அது ஒரு வெற்றிகரமான பிரச்சாரம். அவர்களிடம் பணம் உள்ளது, அவர்களிடம் தொழிற்நுட்பம் உள்ளது, அவர்களிடம் அவர்கள் செய்த செயல்களிலிருந்து தப்பிவிட சகல வழிகளும் உள்ளது, ஆகவே அதை அவர்கள் செய்கிறார்கள்.

பிண்டர் நோபல் பரிசை ஏற்றுக் கொண்டு பேசிய போது இதைத் தெரிவித்தார் : அமெரிக்காவின் குற்றங்கள் அமைப்புரீதியிலானவை, மாறாதவை, கொடூரமானவை, வருத்தப்படாதவை, ஆனால் உண்மையில் மிகச் சில மக்கள் மட்டுமே அதைப் பற்றி பேசியுள்ளனர். நீங்கள் இதனை அமெரிக்காவிடம் கொடுத்திருக்க வேண்டும். அது உலகம் முழுவதும் துல்லியமாக அதிகாரத்தை பயன்படுத்துவதில் நன்கு பயிற்சி பெற்றிருக்கிறது, ஆகவே அது உலகம் முழுவதற்குமான நன்மை செய்பவர்கள் போல முகமூடி அணிந்து சுற்றிவருகிறது. அது மிகவும் புத்திசாலித்தனமான, சிலசமயம் நகைப்பாகவும், மிகவும் வெற்றிகரமாக ஹிப்னாசிஸ் செய்கிறது.

பிண்டர் எனது நண்பர் மற்றும் கடைசியான சிறந்த அரசியல் துறவி-அதாவது மறுதலிக்கும் அரசியல் பண்படுத்துவதற்கு முன், நான் அவரிடம் “ஹிப்னாசிஸ்” என்பது ரேனி ரீபென்ஸ்தால் சொல்லும் “அடிபணியும் வெற்றிடமா” என்று வினவினேன். அதற்கு அவர் “ஆம் ” என்றார்.

நமது அமைப்புகளான கார்ப்பரேட் ஜனநாயகத்தில், போர் என்பது பொருளாதார அவசியம், அது, பொதுத்துறை மான்யத்திற்கும் தனியார் துறை லாபத்திற்குமான பொருத்தமான திருமண பந்தம், முதலாளிகளுக்கு சோசலிசம், ஏழைகளுக்கு முதலாளித்துவம், 9/11க்குப் பிறகு யுத்த தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் விண்ணில் பறந்தன. மேலும் இரத்தம் சிந்தப்பட இருக்கிறது, அது தொழிலுக்கு மிகவும் உகந்தது.

இன்று மிகவும் லாபகரமான போர்களில் ஒவ்வொன்றுக்கும் அவைக்கென பிரத்யோக பிராண்ட் உள்ளது. அந்த யுத்தங்கள் “என்றென்றைக்குமான யுத்தங்கள்” என்றழைக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம், ஈராக், ஏமன், தற்போது உக்ரைன். இவையனைத்துமே பொய் மூட்டைகளை அடிப்படையாகக் கொண்டவை.

ஈராக் மிகவும் இழிவான உதாரணம், அதனுடைய பேரழிவு ஆயுதங்களுக்காக யுத்தம், அது கடைசிவரை இல்லவே இல்லை. நேட்டோ 2011ல் லிபியாவை அழித்ததிற்கு பெங்காசியில் நடைபெற்ற கொன்றுகுவிப்பு காரணம் என நியாயப்படுத்தப்பட்டது, ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை , ஆப்கனிஸ்தான் 9/11க்கு வசதியான பழிவாங்கல் நடவடிக்கை எனப்பட்டது, ஆப்கான் மக்களுக்கும் அந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

இன்று, ஆப்கானிஸ்தான் பற்றிய செய்திகளென்றால் -தாலிபான்கள் எந்தளவுக்கு கொடூரனமானவர்கள் என்பதே-ஜோ பைடன் ஆப்கான் வங்கிகளின் ரிசர்வ் நிதியான 7 பில்லியன் டாலர்களை திருடிக் கொண்டதும், அதனால் ஆப்கான் மக்கள் பரந்து பட்ட அளவில் துயரங்கள் சந்திப்பதும் செய்திகள் கிடையாது. சமீபத்தில் வாஷிங்டனிலிருந்து செயல்படும் தேசிய பொது வானொலி இரண்டு மணி நேரம் ஆப்கனிஸ்தான் பற்றிய நிகழ்ச்சியை ஒலிபரப்பியது, அதில் அங்கு பட்டினியால் வாடும் மக்களைப் பற்றி 30 விநாடிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஜூன்மாதம் நடைபெற்ற நேட்டோ வின் உச்சிமாநாட்டில், இந்த அமைப்பு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது, ஒரு யுத்த உத்தி ஆவணத்தை நிறைவேற்றியுள்ளது, அந்த ஆவணத்தின்படி ஐரோப்பாவை மேலும் இராணுவ மயமாக்கி, இரஷ்யா மற்றும் சீனாவுடனான போர்களுக்கான வாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும் என்கிறது. அது தனது சக அணு ஆயுத போட்டியாளர்களுடன் பலதளங்களில் போர் புரிதல் பற்றி பரிந்துரைக்கிறது. இதை வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அது அணு ஆயுத யுத்தம் பற்றி பேசுகிறது.

“நேட்டோவின் விரிவாக்கம் வரலாற்று வெற்றியாக உள்ளது” என அந்த ஆவணம் தெரிவிக்கிறது.

நான் அவற்றை நம்பமுடியாமல் படித்தேன்.

“அந்த வரலாற்று வெற்றியின்” அளவுகோல்தான் உக்ரைனில் நடைபெறும் போர், அது பெரும்பாலும் செய்தியல்ல, ஆனால், ஒருதலை பட்சமான, துதிபாடும் தேசிய வெறிக்கூச்சல், திரித்து கூறுதல், சில தகவல்களை வேண்டுமென்றே விட்டுவிடுவது ஆகியனவே.

கடந்த எட்டு வருடங்களாக உக்ரைனில், இரஷ்யாவின் எல்லைக்கு அருகில் டான்பாஸ் பகுதியில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் கொல்லப்பட்டதிற்கும், அவர்களின் இருப்பிடங்கள் கிரிமினல்தனமாக அழிக்கப்பட்டதிற்கும் எதிர்வினையாக பிப்ரவரியில் இரஷ்யா உக்ரைன் உள்ளே நுழைந்தது.

2014ஆம் ஆண்டில் அமெரிக்கா, உக்ரைனில் ஒரு ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டு அந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஜனநாயக ரீதியில் தேர்தெடுக்கப்பட்ட, ரஷ்யாவுடன் நட்பு பாராட்டுபவரை வெளியேற்றிவிட்டு, அவருக்கு பதிலாக தங்கள் நபர் ஒருவரை அதிகாரத்தில் நிருத்தி வைத்தனர்.

சமீப காலத்தில் அமெரிக்காவின் “டிபன்டர் ஏவுகனைகளை” கிழக்கு ஐரோப்பாவில், போலந்து ஸ்லோவேனியா, செக் குடியரசு, நிச்சமயாக ரஷ்யாவை குறிவைத்தே நிறுத்தப்பட்டு, அதே சமயம் அதற்கு இணையாக, பொய்யான வாக்குறுதிகளை பல காலமாக, 1990ல் ஜேம்ஸ் பேக்கர் கர்ப்பசேவ் விடம் நேட்டோவை ஜெர்மனிக்கு அப்பால் விரிவு படுத்த மாட்டோம் என்பது தொடங்கி வழங்கி வருகிறது.

உக்ரைன் போரின் முகப்பு களம். நேட்டோ திறமையாக அந்த எல்லை நாட்டை வந்தடைந்துவிட்டது, அந்த நாட்டின் வழியே ஹிட்லிரின் படைகள் சூறாவளித் தாக்குதலை 1941ல் மேற்கொண்டன, அந்த போரில் சோவியத் யூனியனில் 23 லட்சம் பேர்கள் உயிரிழந்தனர்,

கடந்த டிசம்பரில் இரஷ்யா தொலைநோக்க பார்வையுடன் ஐரோப்பாவின் பாதுகாப்பு திட்டம் ஒன்றை முன்மொழிந்தது, மேற்கத்திய ஊடகங்களில் இது நிராகரிக்கப்பட்டது, கேலி செய்யப்பட்டது, மூடிமறைக்கப்பட்டது. அந்த ஆலோசனையை வரிக்கு வரி படித்தது யார்? பிப்ரவரி 24 தேதியன்று உக்ரைன் ஜனாதிபதி விளாதிமிர் ஜெலின்ஸ்க்கி அமெரிக்கா உக்ரைனுக்க ஆயுதங்களை வழங்கி பாதுகாப்பு வழங்காவிடில் அணு ஆயுதங்களை உருவாக்கப் போவதாக, மிரட்டல் விடுத்தார். இதுவே அமைதி குலைவதற்கு முன் கடைசி ஆத்திரமூட்டல்.

அதே நாளில் இரஷ்யா படைகள் உக்ரைனுக்குள் சென்றது- மேற்கத்திய ஊடகங்கள் இதனை ஆத்திரமூட்டலற்ற பிறவிக்குணத்தால் அவப்பெயர் என்று வர்ணித்தன, வரலாறு, பொய்கள், அமைதி ஆலோசனைகள், மின்ஸ்க் நகரில் டான்பாஸ் பகுதிக்காக ஏற்படுத்தப்பட்ட புனிதமான ஒப்பந்தகள் இவையனைத்தும் கணக்கில் கொள்ளப்படமாட்டாது.

ஏப்ரல் 25ஆம் தேதி அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லாயிட் ஆஸ்டின்,” கியவ்” (உக்ரைன் தலைநகர்- மொர்) நகருக்கு பறந்து சென்றார், அங்கு அவர் அமெரிக்காவின் நோக்கம் இரஷ்ய பெடரேஷனை அழிப்பது என்றார், அதற்கு அவர் பயன்படுத்தி வார்த்தை ‘பலவீனப்படுத்துவது’. அமெரிக்கா விரும்பிய போர் அதற்கு கிடைத்துவிட்டது, அந்த யுத்தத்தை நடத்துபவர், அமெரிக்காவால் நிதி அளிக்கப்பட்டவர், ஆயுதந்தரித்த போலி மற்றும் எப்படியும் பயன்படுத்திக் கொள்ளும் சிப்பாய்.

இவை எதுவுமே மேற்கத்திய வாசகர்களுக்கு விளக்கப்படவில்லை.

இரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தது வேண்டுமென்றே மேற்கொண்டது, மன்னிக்க முடியாதது, ஒரு சுயாதிபத்திய நாட்டின் மீது படையெடுப்பது குற்ற செயலாகும். இதற்கு எந்த “ஆனாலும்” கிடையாது- ஒன்றே ஒன்றைத் தவிர,

உக்ரைன் யுத்தம் எப்போது ஆரம்பித்தது அதனை ஆரம்பித்தது யார்? ஐக்கிய நாடுகள் சபையின்படி, 2014 முதல் இந்த ஆண்டு வரை 14,000 மக்கள் கியவ் அரசு நடத்திய சிவில் யுத்தத்தில் டான்பாஸ் பகுதியில் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலான தாக்குதல்கள் நவீன நாஜிகளால் மேற்கொள்ளப்பட்டது.

2014 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஐடிவி தொலைகாட்சியின் ஒரு செய்தி தொகுப்பை, ஜேம்ஸ் மாட்டீஸ் என்ற புகழ்பெற்ற நிருபர் வழங்கியதை பாருங்கள், மரியபோல் நகரின் சிவிலியன்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவரும் காயமடைந்தார், அந்த தாக்குதலை நடத்தியது உக்ரைனின் அசவ் பட்டாலியன் (நவீன நாஜிக்கள்).

அதே மாதத்தில் டஜன் கணக்கான இரஷ்ய மொழி பேசுபவர்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர் அல்லது எரியூட்டப்பட்ட புகையில் மூச்சு திணறி இறந்தனர், ஒடீசா நகரில், அவர்கள் இருந்த தொழிற்சங்க கட்டிடத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியது, பாசிச அடியாட்கள், நாஜிக்களுடன் இணைந்து செயல்பட்டவரும், பண்டைய மொழி பேசுபவர்களின் எதிரியான வெறிபிடித்த ஸ்டீபன் பண்டேராவின் அடியாட்கள் அவர்கள். நியூயார்க் டைம்ஸ் பண்டாராவின் இந்த அடியாட்களை தேசியவாதிகள்’ என்றழைத்தது.

“இந்த நெருக்கடிக்கு கால கட்டத்தில் நமது நாட்டின் வரலாற்றுப் பணி ” என்ற அந்திரேய் பைல்ட்ஸ்கி இவர் அசவ் பட்டாலியன் நிறுவனர், “உலகத்தின் வெள்ளை இனங்கள் அவர்களின் இருத்தலுக்கான கடைசி சிலுவைப் போரில் தலைமை ஏற்று செமிடிக் இனங்களால் தலைமை தாங்கப்படும் மனிதர்களை விட கீழான பிறவிகளை எதிர்க்க வேண்டும்”.

பிப்ரவரி மாதத்திலிருந்து தங்களை தாங்களே ‘செய்தி கண்காணிப்பாளர்கள்’ என நியமித்துக் கொண்டவர்கள் தூக்கி நிறுத்த முயலுவது, (இவர்கள் பெரும்பாலும் அமெரிக்க மற்றும் பிரிட்டன் அரசுகளிடம் நிதியுதவி பெறுபவர்கள்) உக்ரைனில் நவீன நாஜிக்கள் இல்லை என்ற அபத்தத்தை.

“ஏர் பிரஷிங்” என்ற பதம் ஒரு காலத்தில் ஸ்டாலின் தனக்கு வேண்டாதவர்களை வெளியேற்றும் போது பயன்படுத்தப்பட்டது, தற்போது அதுவே முக்கிய செய்தி நிறுவனங்களின் கருவியாகிவிட்டது.

ஒரு பத்தாண்டிற்குள் ‘நல்ல சீனா’ “ஏர் பிரஷ்” செய்யப்பட்டு ‘மோசமான சீனா’ அதற்கு பதிலாக வந்துவிட்டது. அது உலகத்தின் தொழிற்கூடம் என்பதிலிருந்து புதிதாக மொட்டவிழும் சாத்தான் என்ற நிலைக்கு மாற்றப்பட்டுவிட்டது.

இதற்கு எதிரான ஏராளமான பிரச்சாரங்கள் அமெரிக்காவிலிருந்துதான் தொடங்குகிறது, அது அதன் பிறகு அமெரிக்காவின் போலிகளாலும், “சிந்தனை குளங்கள்” மூலமாகவும் பரப்பப்படுகிறதுஇழிவான ஆஸ்திரேலியாவின் “ஸ்டேரேடஜிக் பாலிசி இன்ஸ்டிடியுட்” போன்றவைகள், இவை யுத்த தளவாட உற்பத்தி நிறுவனங்களின் குரலாக ஒலிப்பவை, மேலும் பேராசை பிடித்த பத்திரிக்கையாளர் பீட்டர் ஹார்ட்சர், இவர் சண்டெ மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கையின் நிருபர் சீனாவிற்கு ஆதரவாக பேசுபவர்களை, எலிகள், ஈக்கள், கொசு மற்றும் குருவி என்றழைப்பார், இந்த “பூச்சிகள்” அழிக்கப்பட வேண்டும் என கூறுவார்.

மேற்கு உலகில் சீனாவைப் பற்றிய செய்திகள் அனைத்துமே பீஜிங் அச்சுறுத்தல் பற்றி மட்டும்தான். “ஏர் பிரஷ்” செய்யப்பட்டிருப்பது சீனாவைச் சுற்றிலும் 400 அமெரிக்க இராணுவ தளங்கள் உள்ளன என்பதை, அது ஆயுதங்களால் ஆன நெக்லஸ் போன்று ஆஸ்திரேலியாவிலிருந்து தொடங்கி பசுபிக், தென்கிழக்கு ஆசியா, கொரியா, ஜப்பான் வரை நீள்கிறது, ஜப்பானியத் தீவான ஒகினவானா மற்றும் கொரிய தீவான ஜெஜூ ஆகியன மருந்து கெட்டிக்கப்பட்ட பீரங்கி போல சீனாவின் முக்கிய தொழிற்நகரத்தை மிக மிக அருகிலிருந்து குறிவைத்துள்ளன. பெண்டகான் அதிகாரி ஒருவர் இதைப் பற்றி குறிப்பிடும் போது சீனாவிற்கான தூக்கு கயிறு என்று வர்ணித்தார்,

பாலஸ்தீனம் எனக்கு நினைவுக்கு தெரிந்த நாள் முதலாய் தவறாகவே சித்தரிக்கப்படுகிறது. பிபிசி யைப் பொறுத்தவரை அது இரண்டு முரண்பட்ட கருத்துகளால் ஏற்பட்ட மோதல் அவ்வுளவே. நவீன காலத்தில் மிக நீண்ட காலத்திற்கு, மிகவும் மிருகத்தனமான, சட்டவிரோதமான இராணுவ ஆக்கிரமிப்பு பற்றி தனது செய்திகளில் குறிப்பிடுவதே இல்லை.

தாக்கப்படும் ஏமன் மக்கள் செய்திகளில் இடம் பிடிப்பதே இயலாத காரியம். அவர்கள் ஊடகத்திற்கு மக்களல்ல, சவுதி அமெரிக்காவின் கொத்து குண்டுகள் மூலம் குண்டு மழை பொழிய வைக்கும் போது, குறி வைக்கும் சவுதி இராணுவ அதிகாரிகளின் அருகில் பிரிட்டனின் இராணுவ ஆலோசகர்கள் இருந்து குறிவைப்பது குறித்து யோசனைகளை பகிர்ந்து கொள்ளும்போது, ஏமனில் 5 லட்சம் குழந்தைகள் உணவின்றி வாடுகின்றன.

இவ்வாறு சில செய்திகளை தவிர்ப்பது மூலம் மூளைச் சலவை செய்வது நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. முதல் உலகப் போரில் மனிதர்களை(பிரிட்டன்) கசாப்பு செய்த செய்திகளை அமுக்கிய நிருபர்களுக்கு ”சர்” பட்டம் வழங்கப்பட்டது, அதன் பிறகு அவர்கள் அதனை தங்களது நினைவுக் குறிப்புகளில் பதிவு செய்தனர். 1917ஆம் ஆண்டு மான்செஸ்டர் கார்டியன் பத்திரிக்கையின் ஆசிரியர் சி. பி. ஸ்காட் அன்றைய பிரிட்டன் பிரதமர் லாயிட் ஜார்ஜ் அவர்களிடம் “மக்கள் (உண்மையை) தெரிந்து கொண்டால், நாளையே போரை நிறுத்திவிடுவார்கள், ஆனால் அவர்களுக்கு தெரியாது, அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை” என்றார்.

மக்களையும் நிகழ்வுகளையும் இதர நாடுகளிலுள்ளவர்கள் இவர்களைப் பார்ப்பது போல் இவர்கள் அவர்களைப் பார்க்க மறுப்பது மேற்குலகின் ஊடக வைரஸ், இது கோவிட் போலவே அவ்வுளவு அழிவு சக்தி கொண்டது. இது உலகை நாம் ஒரு வழியாகக் காட்டும் ஆடி வழியே பார்ப்பது போன்றது, அந்த ஆடியில் “நாம்” என்றால் “ஒழுக்கம், தீமையற்றவர்கள்” அதே சமயம் “அவர்கள் அவ்வாறில்லை “. இது ஆழமாக ஏகாதிபத்திய பார்வை.

சீனாவிலும் இரஷ்யாவிலும் ஒரு வாழும் வரலாறு உண்டு என்பது அரிதாகக்கூட சொல்வதில்லை, அரிதாகக்கூட புரிந்து கொள்ளவும் முயல்வதில்லை. விளாதிமீர் புடின் என்றால் அடல்ப் இட்லர்,

ஜீ ஜிங் என்றால் பின்பு மான் சூ. காலத்தால் அழிக்க முடியாத சாதனைகளான, அருவருக்கத்தக்க ஏழ்மையை ஒழித்த சாதனையை யாருக்கும் தெரியாது. இது விபரீதமானது இழிநிலையானது.

நாம் எப்போது புரிந்து கொள்ள நம்மை அனுமதிக்கப் போகிறோம்? பத்திரிக்கையாளர்களை தொழிற்சாலை போன்று பயிற்றுவிப்பது இதற்கு தீர்வல்ல. டிஜிட்டல் கருவிகள் இதற்கான மந்திரக் கோலும் அல்ல. அது ஒரு வழிதானேத் தவிர அதுவே முடிவல்ல, அது டைப்ரைட்டரில் ஒரு விரலால் அடிப்பது போன்றது,

சமீப காலங்களில் சில மிகச் சிறந்த பத்திரிக்கையாளர்கள் முக்கிய பத்திரிக்கை நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். அதற்கு “டிபன்ஸ்டேரேட்டட்” (Defenstated) என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஒரு காலத்தில் சில ‘கிறுக்கு பிடித்த’ பத்திரிக்கையாளர், அரசுக்கு எதிரான பத்திரிக்கையாளர், உண்மை விளம்பிகள் என இவர்களுக்குகூட இடமிருந்தது இன்று இடமில்லை.

ஜூலியன் அசாஞ் வழக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியது. ஜூலியனும் விக்கிலீக்ஸ்ம் கார்டியன் பத்திரிக்கைக்கு பரிசுகளையும் வாசகர்களையும் அளித்த போது “நியூயார்க் டைம்ஸ்” மற்றும் இதர சுயமுக்கிய ஆவண நாளிதழ்களில் அவர் கொண்டாடப்பட்டார்.

நிழல் அரசு(சிஐஏ போன்ற அமைப்புகள்- மொர்) இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது, அவருடைய கனிணி ஹார்டு டிஸ்க் அழிக்கப்பட வேண்டும் என்று மிரட்டிய போது, அவரது பெயருக்கு களங்கம் விளைவித்த போது, ஜூலியன் மக்களின் எதிரியாக்கப்பட்டார். (அன்றைய) உதவி ஜனாதிபதி பைடன் அவரை “அதிநவீன தொழிற்நுட்ப பயங்கரவாதி” என்றழைத்தார். ஹில்லாரி கிளிண்டன், “நாம் இந்த மனிதரை டிரோன்கள் மூலம் அழிக்க முடியாதா?” என்று கேட்டார்.

தொடர்ந்து கொண்டிருக்கும் ஜூலியன் அசான்ஜ்க்கு எதிரான துஷ்ப்பிரயோகம் மற்றும் அவதூறுகள் -ஐ. நா. வின் சித்திரவதைக்கு எதிரான சிறப்பு தூதர் இதனை “மாப்பிங்” என்றழைக்கிறார்- இது சுதந்திரமான பத்திரிக்கைகள் தரந்தாழ்ந்து இருப்பதை காட்டுகிறது. நமக்கு அவர்கள் யார் என தெரியும். நான் அவர்களை இவர்களோடு கூட்டணியில் இருப்பவர்கள் என்பேன்.

பத்திரிக்கையாளர்கள் இதற்கு எதிராக எப்போது நிமிர்ந்து நிற்கப் போகிறார்கள்? இதற்கெதிரான உண்மையை உரத்து பேசும் பல பத்திரிக்கைகள் தற்போதே வலைத்தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. சிறந்த பத்திரிக்கையாளர் ராபர்ட் பேரியால் நிறுவப்பட்ட கன்சார்சியம் நியூஸ், மாக்ஸ் ப்ளுமென்தால் நடத்தும் கிரேசோன், மிண்ட் பிரஸ் நியூஸ், மீடியா லென்ஸ், டிகிளாசிபைடு யூகே, அலபோராடா, எலக்ட்ரானிக் இன்டிபிடா இன்னும் பலர் உள்ளனர் விடுபட்ட பெயருக்குரியவர்கள் என்னை மன்னித்துவிடட்டும்.

என்று எழுத்தாளர்கள் எழுந்து நிற்பார்கள், அவர்கள் 1930 களில் பாசிசம் தலைதூக்கிய போது அதற்கு எதிராக நின்றதைப் போல்? என்று சினிமா எடுப்பவர்கள் நிமிர்ந்து நிற்பார்கள், அவர்கள் 1940 களில் பனிப்போருக்கு எதிராக நின்றதைப் போல்? என்று நையாண்டி செய்பவர்கள் நிமிர்ந்து நிற்பார்கள் அவர்கள் சென்ற தலைமுறையில் நின்றதைப் போல்?

கடந்த 82 வருடங்களாக சரியானது என்ற நினைப்பில் ஊறிப் போனவர்களுக்கு, அதாவது கடைசி உலகப் போர் குறித்த அதிகாரப்பூர்வ பதிப்பை ஏற்றுக் கொண்டவர்களுக்கு, ரெக்கார்டுகளை நேர்படுத்திட இது சரியான தருணமில்லையா, அவர்கள் தங்களது சுதந்திரத்தை பிரகடனப்படுத்தி, பிரச்சாரத்தை கட்டுடைக்க வேண்டாமா? அதற்கான அவசரம் முன்னெப்போதையும்விட இப்போது அதிகம்.

தமிழாக்கம் க, ஆனந்தன். Translation of article from Counter Punch September 8, 2022.

நீட்சே எதிரும் புதிரும் கட்டுரை – சா. தேவதாஸ்

நீட்சே எதிரும் புதிரும் கட்டுரை – சா. தேவதாஸ்




என்னைப் பற்றி நன்றாகவே அறிவேன். ஒரு நாள் எனது பெயர், அசுரத்தனமான ஒன்றின் ஞாபகத்துடன் பிணைக்கப்பட்டிருக்கும் பூமியில் இருந்திராத நெருக்கடியுடன், மிக மிக ஆழ்ந்த மனசாட்சியின் மோதலுடன், அதுவதை நம்பியும் கோரியும் புனிதமாக வைக்கப்பட்டிருந்த ஒவ்வொன்றிற்கும் எதிராக எழுப்பப்பட்ட தீர்ப்புடன் பிணைக்கப்பட்டிருக்கும். நான் மனிதனில்லை, வெடி மருந்து.
– நீட்ஸே ECCE HOMO- 1888.

ஒரு புறம் கதே என்னும் மகத்தான ஆளுமை வாக்னர் என்னும் இசைக் கலைஞன், ஹோல்டரின் என்னும் கவிஞன் எழுந்திருப்பதும் மறுபுறம் ஹிட்லர் என்னும் குரூர அதிகார உருவம் பிரம்மாண்டம் கொண்டிருப்பதுமான ஜெர்மானிய மண்ணில், அதிரடியான சலனங்களை மதத்தில் தத்துவத்தில் ஏற்படுத்திய நீட்ஸே (1900- 1844) உருக்கொண்டார். அவ்வளவு ஆச்சரியத்திற்கும் அருவருப்புக்கும் உரியவராயிருந்தார். இம்முரண் நிலைகளெல்லாம் அவ்வாளுமையில் படிந்திருந்ததா? அல்லது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்ததா? கடவுள் இறந்துவிட்டார் என்னும் பிரகடனத்தால் அவதூறுக்கு உள்ளாக்கப்பட்டாரா? பரிசீலிக்கலாம்.

நீட்ஸே ஒரு பாதிரியாரின் மகன். மொழியியல் பயின்றவர். 24 வயதிலேயே பேராசிரியவர். அவருக்கு 4 வயதாயிருந்தபோதே அவரது தந்தை மனநிலை பாதிப்புற்று ஓராண்டிலேயே இறந்துபோனார். இதனால் மத நம்பிக்கை கொண்டிருந்த குடும்பப் போக்கிற்கு எதிரான நிலையில், துயரத்தை எதிர்கொண்டு நல்லவனாயிருப்பது எப்படி என்னும் எண்ணம் உலுக்கி எடுக்கிறது. வெறி கொண்டு சிந்தித்து எழுதி, தெய்வீக கட்டளைகளுக்கு, அதிகாரத்திற்கு எதிராக தன்னை நிறுத்திக் கொண்டவர். அவர் மீண்டும் மீண்டும் நேசித்த உளவியல் சிகிச்சையாளர் சலோமி அவரை நிராகரித்து விடுகிறார். 1881இல் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்று, ஸ்விட்ஜர்லாந்தில் தங்கி ஆல்ப்ஸ் மலைகளில் மணிக் கணக்கில் சதா ஏறி இறங்கி, சிந்தனையின் உச்சத்தில் எழுதிக் கொண்டிருப்பவராக இருந்து, ஒரு கட்டத்தில் அவரும் மனநிலை பிசகியவராக, தனது அபிமானத்துக்குரிய கிரேக்க நாயகன் டயோனிஸஸ் பெயரில் கையொப்பமிடுபவராகி, படுத்த படுக்கையாகி, புலம்பியபடி இறந்து போகிறார்.

நரம்பு மண்டலம், இருதய இயக்கம் இரண்டையும் பாதித்த Cadasil என்னும் மரபணு சிக்கலால் நீட்ஸே இறந்தார் என்கின்றனர் பெல்ஜிய – ஸ்விட்ஜர்லாந்து நரம்பியலாளர்கள். நடுத்தர வயதிலேயே மனச் சிதைவுக்கு உள்ளாகிய அவருக்கு தற்கொலை எண்ணங்களும் இருந்துள்ளன. அவரது இச்சிக்கலுக்கு பரம்பரையாக வந்துள்ள போக்கும் காரணம் எனப்படுகிறது. அவரது தந்தை இறப்பதற்கு ஒரு வருடம் இருந்தபோது பார்வையும் இழந்து முடமாகிவிட்டவர். நீட்ஸே 1889இல் மனநிலை பிசகி 11 ஆண்டுகளாக மலைகளில் ஏறியும் இறங்குவதுமாயிருந்தார். முதலில் தாயின் அரவணைப்பிலும், அடுத்து சகோதரியின் கவனிப்பிலும் உயிர் வாழ்ந்திருந்தார். தன்னை குடும்பத்தை நிலை நிறுத்தல் உலகியல் முன்னேற்றம் பெறுதல் பேரும் புகழும் மிக்க ஆளுமையாக கொண்டாடப்படல் என்னும் எண்ணங்கள் அறவே இல்லாமல், சிந்தனைப் பிழம்பாக ஒளிர்ந்தார்.

அவர் ஒரு கவிஞரும் இசைக்கலைஞரும் கூட.

ரிச்சர்ட் வாக்னர் என்னும் இசைக் கலைஞருடனான அவரது நட்பும் கலந்து உறவாடலும் அவ்வளவு நெருக்கமும் தீவிரமும் கொண்டது. அவ்வளவு பகைமையுடன் பிரியவும் செய்தது. ஆளுமைச் சிக்கலால் நேர்ந்ததா, சிந்தனை முரணால் நேர்ந்ததா என்று கூற முடியாதபடி இருந்தது.

ஷோபன்ஹோவரிடம் அபிமானம் கொண்டு, சிந்தனைப் பயணத்தைத் தொடங்கும் அவர், சீக்கிரமே அந்த அவநம்பிக்கை தத்துவாசிரியரிடமிருந்து விலகி விடுகிறார். ஷோபன்ஹோவரின் சீடனாக தன்னை அறிவித்துக் கொண்டவருக்கு எங்கும் நிரம்பிய துயரத்தை எதிர்கொள்ள, ஷோபன்ஹோவரின் சிந்தனை போதாமையாக இருந்தது தெரியவருகிறது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் ஜெர்மனியில் நிலவிய கழிவரக்கத்திற்கும் அதீத புனைவியல் தன்மைக்கும் அதுவே காரணம் என்று பழிக்கவும் செய்கிறார்.

சிற்பி ரோடினும் இலக்கிய கர்த்தா தாஸ்தோயெவ்ஸ்கியும் அவரை ஈர்த்து, வெட்டி விலக்கி விடுகின்றனர். டான் க்விஜோட் அவரை முழுமையாக ஆக்கிரமிக்கும் பாத்திரமாகிறது. குரூரமும் வன்முறையும் மண்டிய உலகில், குறிக்கோளுடன் வாழ்ந்த, ஆற்றில்மிகு பாத்திரமாகிறது. அது நன்னம்பிக்கை அளித்த பாத்திரமா? இல்லை, வாழ்வின் சவால்களுக்கு சரியான அணுகுமுறையைக் கொண்டிருந்ததால், இன்பியல் நாடகமாகப் பார்த்து சிரித்ததால், மடியும் வரை சிரித்துக் கொண்டிருந்ததால்.
இப்படி ஆழமும் பொறுப்புணர்வும் கொண்டு சிந்தித்து வந்த அவர், இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிவுஜீவிகளாக விளங்கிய ஃபூக்கோ, தெரிதா, டெலூஸ் போன்றோரிடம் பெரும் செல்வர்க்கு செலுத்தக்கூடியவராநார். அதே வேளையில் ஜனநாயகம், சமத்துவவாதம், தேசியவாதம் என்பன அவருக்கு உவப்பில்லாதவை. அதீத தன்னம்பிக்கை மிக்கவர். துயரிலிருந்து மிகப் பெரும் வெகுமதி கிட்டும் என நம்பினார். பெரும் பயங்கரத்திலிருந்து, தனிமையுணர்விலிருந்து மாபெரும் கலை உருக்கொள்ளும் என்றார்.
அனுபவமின்றி மாபெரும் கலைப் படைப்பை ஒருவரால் உருவாக்க இயலாது. உடனடியாக உலகளாவிய பெருமையைப் பெறவும் முடியாது, முதல் முயற்சியிலேயே பெரும் காதலனாகிட இயலாது, ஆரம்ப கட்டத் தோல்விக்கும் பிந்தைய வெற்றிக்குமிடையே, ஒரு நாள் என்னவாகப் போகிறோம் என்பதற்கும் தற்போது என்னவாக இருக்கிறோம் என்பதற்குமிடைப்பட்ட இடைவேளையில், வேதனையும் பதற்றமும் பொறாமையும் அவமானமும் வந்தே தீரும். நிறைவேற்றலின் உட்கூறுகளை தன்னெழுச்சியாக கையாள முடியாததால் நாம் வருந்துகிறோம்.

ஒரு புறம் அதிரடி வாசகங்கள் அவரிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பைத்தியக்கார விடுதியில் சாதாரணமாக நடந்து போனால், இறை நம்பிக்கை எதனையும் நிரூபணம் செய்யவில்லை என்று எடுத்துக் காட்டும்.

மதம் சார்ந்த நபரை சந்தித்த பிறகு என் கைகளை கழுவவேண்டும் என எப்போதும் உணர்கிறேன். பெண்களைச் சந்திக்கப் போகும்போது சவுக்குடன் செல்ல வேண்டும்.

தன் சட்டையை உரித்துக் கொள்ள இயலாத பாம்பு மடியும். அப்படியே தம் அபிப்பிராயங்களை மாற்றிக் கொள்ள இயலாதவர்கள் மனிதர்களாக இருக்க இயலாது.

மறுபுறம் ஆச்சரியகரமான கூற்றுகள் புறப்படும். மனிதன் இனியும் கலைஞனாக இல்லை, கலைப்படைப்பாகி இருக்கிறான்.
பனிக்கட்டி மீது தன் எண்ணங்களை வைக்க இயலாதவன், பிரச்சனை (ஆட்சேபனை)யின் வெம்மைக்குள் நுழையக் கூடாது. விழிப்புணர்வு கொண்டுவிட்டால் அப்படியே நித்தியமாக விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டும். விளக்கவுரையில் மறைந்துள்ளது பிரதி. உன்னத ஆன்மா தன்னைப் போற்றும்.

சிந்தனையாளராக, தத்துவாசிரியராக அவரது பங்களிப்பு என்ன?

நாடகம், உள்ளுணர்வு, ஒழுங்கீனம், சீர்குலைவு, போதை (எதிர்கருத்துநிலை) ஆகியவற்றின் கடவுள் டயோனிஸஸ் தான் நீட்ஸேக்கு ஆதர்சம். மனநிலை பிறழ்ந்த நிலையிலும் மறக்க இயலாத படிமம் டயோனிஸாகத் தன்னைக் கருதிக் கொண்டு, அப்படியே கையொப்பமிட்டவர். டயோனிஸஸின் இறுதிச் சீடராகவும் திரும்பத் திரும்ப நிகழ்தலின் Eternal recurrence) ஆசிரியராகவும் தன்னை பிரகடனம் செய்து கொண்டவர்.

டயோனிஸஸ் வெறித்தனத்தின் கடவுளும் கூட ஒன்று அது சுய அழிவுக்கு இட்டுச் செல்லும் அல்லது தீர்க்க தரிசன வடிவமாகும் என்று நீட்ஸே தொடர்பாக இதனை விளக்குவார் ராபர்டோ கவாஸ்ஸோ.

டயோனிஸஸ் அசாதாரணமான ஆளுமை. ஜீயஸின் தொடையிலிருந்து பிறந்தவராக, இரு தாய்களைக் கொண்டவராக குறிப்பிடப்படுகிறார். அவரது …..இசையும் பரவசமிகு நடனமும் சுய பிரக்ஞையிலிருந்தும் சமூகத்தளைகளிலிருந்தும் மனிதனை விடுவிப்பவை எனப்படும்.

நீண்ட தாடியுடன், மிருகம்போல வடிக்கப்பட்ட டயோனிஸஸ், நீட்ஸேக்கு சரியான முன்மாதிரிதான், முன்னோடிதான்.

மனிதன் மூன்று கட்டங்களைத் தாண்டி வந்து, அதிமனிதன் (Super man) ஆக முடியும் என இவ்வாறு பேசினார் ஜராதுஸ்டிரா நூலில் கூறுவார். ஒட்டகம், சிங்கம், குழந்தை என்பன அம்மூன்று கட்டங்கள்.

ஒட்டகம், நம்மைவிடப் பெரியது, சற்று தியாகம் செய்யத் தயங்காதது, சுய ஒழுக்கமும் வசதிகளைக் கைவிடும் துணிவும் வேண்டுவது. சிங்கம், எதிர்த்துப் போராடும், கலகம் புரியும், சுதந்திரத்தை நாடும். குழந்தை, புதுப்படைப்பு என்ற வகையில், தன் பெருமதிகளை உருவாக்கிக் கொள்ளும் அதிமானுடனுக்கு வழிவிட்டு நிற்கும். புழுவிலிருந்து மனிதனாகியும் இன்னும் உன்னில் பெரும்பகுதி புழுவாய் உள்ளது. ஒரு காலத்தில் மனிதக் குரங்குகளாய் இருந்தாய், இப்போதும் மனிதன், குரங்கை விடவும் குரங்காய் இருக்கிறான்… அதி மனிதனே பூமியின் அர்த்தம்.

இன்னொரு கன்னத்தைக் காட்டி அடிமையாக நிற்கும் நிலைக்குப் பதிலாக, எஜமானனின் ஒழுக்க நிலையை வற்புறுத்தினார். அது மற்றவர்களை ஒடுக்கி வைக்காமல், வாழ்வின் புதுப்பாதைகளையும் பெறுமதிகளையும் உருவாக்க வேண்டும் என்றார்.

நீட்ஸேயுடன் தொடர்புபடுத்தப்பட்டு வருவது இன்மைவாதம். ஆனால், இன்மைவாதத்தை அவர் வற்புறுத்தவில்லை, வாழ்க்கையை ஏற்குமாறே வாதிட்டார் எனப்படுகிறது. இன்மைவாதம் தவிர்க்க முடியாததாக இடம் பெறவே செய்யும். நாம் அதனூடே போராடிச் செல்ல வேண்டும், சமாளிக்க வேண்டும் என்றார் எனப்படுகிறது.

“நான் விவரிப்பது அடுத்த இருநூற்றாண்டுகளின் வரலாறே. வந்து கொண்டிருப்பதை, வேறுவிதமாக வர இயலாததை விவரிக்கின்றேன். அது இன்மைவாதத்தின் வருகை… நமது ஒட்டுமொத்த அய்ரோப்பியப் பண்பாடும் இப்போது சிறிதுகாலமாக நாசத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது… என்பதுதான் நிடிஸேயின் கூற்று.

நீட்ஸேயின் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள கருத்தமை அதிகாரத்தின் மீதான பற்றுறுதி (Will to power) தனது சூழலை எதிர்த்த போராட்டமாயும் வாழ்வதற்கான காரணமாயும் மனிதனுக்கு இருப்பது அதிகாரப்பற்றுறுதியே தவிர இனப் பெருக்கமோ சந்தோஷமோ அல்ல. அவரது நித்திய நிகழ்வு மற்றும் …..தத்துவத்தின் ஆதாரமே அதிகாரப் பற்றுறுதி தான். அது தடைகளை எதிர்கொள்கையில், தொடர்ந்து போராடுகையில் உருக் கொள்வதில் இடம் பெறும். அதிகாரத்தை, படைப்பாற்றலை தீவிரப்படுத்துவதை நோக்கியது.

வாக்னருக்கும் இது உடன்பாடுதான். இக்கருத்தமைவுதான் நாஜிகளை ஈர்த்தது, அதிகார வெறி கொள்ள வைத்தது, யூதர்களை அழிக்கமுற்பட்டது. ஆனால் இந்தத் தொனியில் நீட்ஸே பேச வில்லை, will to power நூலை நீட்ஸேயின் மறைவுக்குப் பிறகு பதிப்பித்த அவரது சகோதரியின் இடைச் செலுகல் என இப்போது வாதிடுகிறார் வால்டர் காஃபிமன் நீட்ஸேயின் நம்பகமான மொழி பெயர்ப்பாளராகக் கருதப்படுபவர். அச்சகோதரி நாஜி சார்பு கொண்டிருந்தவர்.

நித்திய நிகழ்வு (eternal recurrence) என்பது இன்னொரு கருத்தமைவு. ஒரே தன்மைத்தான சம்பவங்கள், ஒரே தன்மைத்தான அனுபவங்கள் நிரந்தரமாக நிகழ்ந்து கொண்டே இருப்பது, பெரும் பாரமாகிவிடும். ஆனால் அதுவே அறுதியாக வாழ்வை உறுதிப்படுத்தல், இன்மைவாதத்தின் வெறுமையை நிரப்புவது, அதனைப் புரிந்துகொண்டு தழுவிக் கொள்ள வேண்டும் விதியை நேசிக்க வேண்டும், வாழ்வை ஏற்று திடப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தெய்விக ஒழுங்கின்றி உள்ள நிலையிலும், இன்மைவாதத்தைத் தவிர்க்கவும் அனைத்துப் பெறுமதிகளையும் மறுமதிப்பீடு செய்ய வேண்டும். பயின்ற சிந்தனையாளர்களில் ஒருவரான ஆரம்ப கட்டத்தில் நீட்ஸே விரும்பி எமர்ஸனின் Oversoul என்னும் கருத்தாக்கத்திலிருந்து, Overman, superman என்பது தோன்றியிருக்க வேண்டும். கிருத்தலிலிருந்து மிகப் பெரும் நன்மையினையும் மிகப் பெரும் ஆனந்தசத்தையும் அறுவடை செய்தலின் ரகசியம், அபாயகரமாக வாழ்தலில் உள்ளது. அபாயகரமாக வாழ்தல், கயிற்றின்மேல் நடப்பது போன்றது. மனிதனிடம் படைப்பாளியும் படைப்பும், மனிதனும் அதிமனிதனும் சேர்ந்தே உள்ளனர் என்பார்.

நாவல் வடிவில் நீட்ஸே புனைந்து புதிய தத்துவம் பேசுகிறார் thys spake Zarathustra நூலில். 10 ஆண்டுகாலம் குகையில் தனித்துவாழும் தீர்க்க தரிசி ஜராதுஸ்ட்ரா, அலுத்துப் போய், மானுட சமுதாயத்திடம் தான் அறிந்திருப்பதை தெரியப்படுத்துகிறார். நன்மை தீமை என்னும் நெறிமுறையை முதலில் நிறுவியவர் ஜராதுஸ்ட்ரர். அதனின்றும் உருக்கொண்டவை யூத கிறித்தவ நெறிகள். இதனை உடைத்து நொறுக்க புதிய ஜராதுஸ்ட்ரரைப் படைத்துக் கொள்கிறார் நீட்ஸே.

33வது வயதில் குமட்டலாலும் தலைவலியாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நீட்ஸே, ஏறக்குறைய ஒரு கண் பார்வையுடன், நாள்தோறும் ஆறிலிருந்து எட்டுமணி நேரம் வரை நடைப் பயிற்சி மேற்கொண்டார். அப்போது உருக்கொண்ட எண்ணங்களை குறித்து வைத்தார். ஓரிடத்தில் எழுதுகிறார். எனது நீண்ட நடைப் பயிற்சிகளின்போது நிறைய அழுதேன், அது உணர்ச்சிவயப்பட்ட கண்ணீரல்ல, மகிழ்ச்சி, பாடுதல், ஆடுதலின் கண்ணீர்- அது இன்றைய மனிதரைப் பார்த்து நான் கொண்ட புதுப் பார்வையால் வந்தது.

இசையால் கிட்டும் பரவசம் நடைப் பயிற்சியிலும் கிட்டும் என்பது அவரது பார்வை. A philosophy of walking என்னும் தலைப்பில் நூலும் எழுதியுள்ளார்.

நீட்ஸேயின் இந்த ஈடுபாட்டை ஃபிரெடரிக் கிராஸ் இப்படி விளக்குகிறார்.

பாதையின் திருப்பத்தை அடைந்திட நீண்ட வழியில் நடந்து வந்திருப்பவருக்கு, எதிர்பார்த்திருந்த பார்வைக் கோணம் வாய்க்கிறது, நிலவியலின் அதிர்வு எப்போதும் நிலவுகிறது. நடப்பவரது உடலில் அது திரும்பத் திரும்ப நிகழ்கிறது. ஒன்று மற்றதின் அதிர்வை ஈர்த்துக் கொள்வதாக உள்ள இரு தந்திகளைப் போல, இரு பிரசன்னங்களின் ஒத்திசைவு, முடிவற்ற மறுதொடக்கமாகிறது. நித்திய நிகழ்வு என்பது, இவ்விரு உறுதிப்பாடுகளின் தொடர்ச்சியான மறுநிகழ்வின் சுழற்சி பிரசன்னங்களின் அதிர்வின் சுழற்சியான உருமாற்றம்.

வால்டர் காஃப்மனைப் பொறுத்தமட்டில், நீட்ஸேவுக்கு சிரிப்பு, உலகை நோக்கிய வாழ்வை நோக்கிய ஓர் அணுகுமுறையை பிரதிநிதித்துவப்படுத்தும். பெறுமதிகள், நிகழ்வுகள், நிறுவனங்கள் மற்றும் போற்றப்படக்கூடியவர்கள் குறித்த தெளிவான வினாக்களுக்கு சிரிப்பு அவசியம். தான் நேசிப்பவற்றிடமிருந்து சிறிது தொலைவில் தன்னை நிறுத்திட அது தேவை. உண்மையான மதிப்பை அடைந்திடுவதற்கான பாரபட்சமற்ற மதிப்பீட்டிற்கு அது வழிவகை செய்யும். இன்னும் ஆழமாயும் தீவிரமாயும் சிரிப்பை விளக்கக்கூடியவர் நீட்ஸே.

தத்துவாசிரியர்களை அவர்களது சிரிப்பக்கேற்ப வகைப்படுத்துவேன்- பொன்னான சிரிப்பு வரை சிரிக்கக் கூடியவர்கள் வரை. தத்துவத்தை செயல்படுத்தும் கடவுளரும் அதிமானுட- புனிதமான சடங்குகளின்போதுகூட அவர்களால் சிரிப்பதை நிறுத்த இயலாது என்று தோன்றுகிறது.

நீட்ஸேயிடமிருந்து எழுச்சிமிக்கதும் ஊக்கமளிப்பதுமான பார்வைகள் கிடைக்கும் என்பதற்கு இன்னும் நிறையவே சாட்சியங்கள் உண்டு. ஒன்றைச் சொல்லலாம்.

நமது படைப்பாற்றலின் பற்றுறுதிகளை கடவுளிடமிருந்து மீட்டுவிட்டால், மீண்டும் நம் கதைகளின் நாயகர்களாகிவிடுவோம். கலைப் படைப்புகளைப் போல் நம் வாழ்வை நடத்திட அவர் ஊக்குவிக்கின்றார். ஒருவன் உன்னத நிலையை அடைவது படிப்படியான முயற்சிகளாலேயே சாத்தியம். சமூக நெறிகளை பின்பற்றினாலே அடையலாம். மரபை மதித்தாலே பிரகாசிக்கலாம்- என்பதில் அவருக்கு உடன்பாடில்லை.

அதுவரையிலான போக்கை நிராகரிக்க வேண்டும். தீரத்துடன் எழுச்சி கொள்ள வேண்டும்- மின்சார அதிர்ச்சிகூட அவசியமாகலாம் என்பது தான் நீட்ஸே நிலைப்பாடு. ஆன்மாவுக்கு மின் அதிர்ச்சி அளித்தால், தத்துவம் சிகிச்சையாகும்.

தத்துவத்தின் தொடக்கப் பு்ள்ளியாக தீரமிகு தத்துவவாதியாக சாக்ரடீஸைக் கருதும் நீட்ஸே, தன்னை இரண்டாவது சாக்ரடீஸாக எண்ணிக் கொள்வார். சாக்ரடீஸுடன் மோதி முரண்பட்டு விமர்சிப்பார். பிளேட்டோவை விடவும் சாக்ரடீஸுக்குத் தான் முக்கியத்துவம் தருவார். சாக்ரடீஸின் சொல்லாடல்களைப் பதிவு செய்தவர்தான் பிளேட்டோ என்பதால் ஒவ்வோர் உண்மையினையும் விசாரணைக்கு உட்படுத்திய சாக்ரடீஸின் மாபெரும் பங்களிப்பு.

இப்பின்புலத்தில், அப்பாவைத் தத்துவத்திற்கு எதிர் நிலையில் மானுடர் குறித்த இயற்கையான பார்வை மிக்கவராகிறார் நீட்ஸே. மூல உளவியலாளர் ஆகிறார். பல கருத்துகள் புறவிய உலகைப் பற்றி அல்லாமல், மனிதரைக் குறித்தே பெரிதும் வெளியிடுகின்றன என்பார்.

நமக்கு மிக மதிப்புமிக்கனவாக உள்ளவை பகுத்தறிய முடியாதவை என்பார். ஒவ்வொன்றையும் விசாரணைக்கு உட்படுத்துகையில் நமக்குப் பிரியமானவையும் நெருக்கமானவையும் நரகத்தில் முடியும் என சாக்ரடீஸை விமர்சிக்கவும் செய்கிறார்.

சாக்ரடீஸ் செய்தவை, சொன்னவை மற்றும் சொல்லாதவை என அனைத்திலும் அவரின் தீரத்தை, ஞானத்தை பாராட்டுகிறேன் என்று கொண்டாடவும் செய்கிறார்.

நீட்ஸேயின் தனித்துவம், மானுட உந்துதல்களுக்கு உறவியல் கோட்பாடுகளைக் கண்டறியவதில் உள்ளது. முந்தைய தத்துவவாதிகளிடம் வாழ்க்கை, சிந்தனைக்கும் அறிவுக்கும் சேவை புரிந்திட, சாக்ரடீஸிடம் சிந்தனை வாழ்க்கைக்கு சேவை புரிந்தது அவரின் தனித்துவம். சாக்ரடீஸின் தீவிரம், வேடிக்கை கலந்தது. வேடிக்கை நிறைந்த ஞானம்மானுட ஆன்மாவின் உயரிய நிலையைக் கட்டமைப்பது என்பார் நீட்ஸே. இதை ஒட்டியே, உண்மையின் ஒரு பகுதியை உணரும்போதெ்ல்லாம் ஒருவரின் இருதயத்தில் நர்த்தனம் நிகழ்கிறது என்றார். பாவம் பற்றிய குற்றவுணர்வுகள் மனிதனுக்குப் பெரும், சுமையாக மாறி வாழ்வை கசப்பாக்கி விடுவதால், அவனது ஆன்மாவுக்கு அதிர்ச்சி தருவதுடன், வேடிக்கை- சிரிப்பை ஊட்டி, அசலான வாழ்வின் பக்கம் அவனைத் திருப்புவதைத் தன் பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தார் எனலாம்.

நீட்ஸேயின் காதலை நிராகரித்துவிட்டாலும் அவர் மீது மதிப்பு வைத்துச் சரியாகப் புரிந்து கொண்டிருந்த சலோமி குறிப்பிடுகிறார். “நீட்ஸேயிடம் மிகவும் முடியாதபடியும் ஆற்றல் மிகு மனநிலைகளுக்கு இட்டுச் சென்றுவிடும்.

நீட்ஸேயின் புதிரும் இதுதான். அது ஒரு படைப்பாற்றலின் இயக்கம். ஒரு கருத்தமைவு, கொள்கை, தத்துவம், நம்பிக்கை்க் கேற்ப வாழ்க்கையை அணுகுவதை விட்டு, வாழ்க்கையுடன் அவற்றைப் பொருத்தப் பார்ப்பவர் அல்லது வாழ்க்கையிலிருந்து அவற்றைத் தருவிக்க முயல்பவர். அவரது வாழ்வு போன்றே அவரது தத்துவமும் முரண்கள், பிரச்சனைகள் நிறைந்தது. சர்ச்சைகள் அவரது வாழ்வால், கருத்துகளால் எழுந்தன என்பதை விடவும், தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால் காலத்தின் நிர்ப்பந்தத்தால் சூழல் காரணமாக ஏற்பட்டன என்று சொல்ல முடியும். கிறித்துவத்தை நிராகரித்ததால் பழிசுமத்தப்பட்டார் என்று வாதிட முடியும்.

நிறுவனம் சார்ந்து இயங்காமல், அதிகாரத்திற்கு துணைபோகாமல் குடும்பம் என எந்த நிறுவனத்தையும் நிறுவிக் கொள்ளாமல், நடைப் பயிற்சியைக்கூட சிந்தனைத் தளமாக ஆக்கிக் கொண்டு, தீவிரம் கொண்ட பயணத்தில் பைத்தியமாகி, தனிமையில் ஆழ்ந்துபோன ஓர் ஆன்மாவே நீட்ஸே. விக்டர்ஃபிராங்கல்் போன்ற அறிவுஜீவிகள் அவரை முற்றிலும் நன்னம்பிக்கைவாதியாக எழுச்சியூட்டும் ஆளுமையாக அறிவுத்தணவாக முன்வைப்பதில் நியாயம் இருக்கவே செய்கிறது.

கடுமையும் கிடுகிடுப்புமிக்க முரட்டு ஆளுமையாக அவர் உருவானது ஏன் என்பதை ஸ்டீபன்ஸ்வேய்க் விளக்குகிறார். “நீட்ஸேயின் தனிமை உலகினைப் போல் அவ்வளவு பரந்தது. அவரது ஆயுளின் இறுதி மட்டும் விரிந்து கிடந்தது. 15 ஆண்டு காலத் தனிமை, அவரது இருதயத்தைச் சுற்றியிருந்த மேலோட்டை இறுக்கமாக்கிவிடவே, இணக்கமாயும் கலகலப்பாயும் சமூகத்துடன் உறவாட இயலவில்லை.
தன் உண்மையான உருவம் என்னவென்று நீட்ஸேயே சித்தரித்துக் காட்டுகிறார், அதுவும் ஒரு கவிதையில்

பிழம்பென நிறைவு கொள்ளாது
எப்போது பாய்ந்தெழுவேன் என்றறிவேன்
பிரகாசித்து என்னையே விழுங்கிவிடுகிறேன்,
நான் தொடுவதெல்லாம் கனவாகத் தகிக்கின்றது.
விட்டுச் செல்வதெல்லாம் கருகிய எச்சமே
இயற்கையில் இப்படி நானொரு பிழம்பு

ஆதாரங்கள்:

1. Emperor of vehemency- book Rrview: Fredric Nietzsche, Curtis cate william T. Vollmann- Deccan chronicle ……2005
2. Th c/s spake Zarathustra/Freidrich Nietzsche
3. Nietzsche Versys soerates/KJL Kjeldsen
4. How to live better,According to Nietzsche/Becca Rothfeld/ theatlantic.com
5.Nietzsche on walking and creativity /Maria popova enternalisedofficial.com
6. Nietzsch/Joshua Hehe/Joshuashaunmichaelhehe medium. com
7 Nietzsches Enternal return Alex Ross Annals of Philosophy
8. Schopenhaur us Nietzsch: The Meaning of Suffering/ iai.tu
9. Why a Fulfilling life Requires Embracing Rather than Running from Difficulty/ Maria popova/ brainpickings.org.
10. The struggle with Daemon Holderlin, kleist& Nietzsche/ Stefan zweigh.

நூல் அறிமுகம் : ஆதி வள்ளியப்பனின் இளையோருக்கு மார்க்ஸ் கதை – பூங்கொடி கதைசொல்லி

நூல் அறிமுகம் : ஆதி வள்ளியப்பனின் இளையோருக்கு மார்க்ஸ் கதை – பூங்கொடி கதைசொல்லி




நூல் : இளையோருக்கு மார்க்ஸ் கதை
ஆசிரியர் : ஆதி வள்ளியப்பன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 96
விலை : ₹80.00
தொடர்பு எண் ; 044 24332924
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும் : thamizhbooks.com

உலகின் எந்த மூலையிலும் மக்களுக்கான உரிமைகளுக்கு குரல் கொடுத்தால், அரசுக்கு எதிராகப் போராடினால், முதலாளிகளின் கொள்ளையை வெளிப்படுத்தினால் , எந்தவொரு சுரண்டலுக்கும் எதிரான குரலுக்கும், கம்யூனிஸ்ட் என்ற முத்திரை குத்தப்படுவதை எங்கும் நாம் காணலாம். அனைத்து வேறுபாடுகளும் களையப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்களும், தொழிலாளர்களும் சம உரிமை பெற்று அனைவரும் சமமாக வாழவேண்டும் என்பதைத்தான், மார்க்ஸ் முன்வைத்த கம்யூனிசக் கொள்கை வலியுறுத்துகிறது.

மனிதகுல வரலாற்றில் மிக முக்கிய மைல் கல்லான, மூலதனம் என்று ஈடுஇணையற்ற நூலைத் தந்த, மார்க்ஸை பற்றி, அவர் வாழ்வைப் பற்றி, இளைய தலைமுறையினர் புரிந்துகொள்ளக்கூடிய வகையில், மிக சிறப்பான வகையில் ஆசிரியர் ஆதி வள்ளியப்பன் அவர்கள் வடிவமைத்துள்ளார்.

கார்ல் மார்க்ஸின் தாய்நாடு பிரஷ்யா ( இன்றைய ஜெர்மனியின் ஒரு பகுதி). அவருடைய தந்தை வழக்குறைஞர் ஹென்ரிக் மார்க்ஸ். தாய் ஹென்ரிட்டா.. சிறு வயதில் படிப்பில் சுமாரான மாணவனாக இருந்தாலும், கவிதை படைக்கும் ஆற்றலும், ஜெர்மன், பிரெஞ்சு, இலத்தீன், கிரேக்கம் போன்ற மொழிகளையும் கற்றுக்கொண்டார். பல மொழிகளை கற்றுக் கொள்ளும் ஆற்றல் அவருக்கு இளவயதிலேயே இருந்திருக்கிறது. மூலதனம் நூலை எழுதும் பொழுது, இரண்டாவது பாகத்தை எழுதும்போது அவர் ரஷ்ய மொழியை கற்க வேண்டியிருந்தது. அவரின் 55 வயதில் ஆறு மாதங்களுக்குள் ரஷ்ய மொழியை கற்றுக் கொண்டதோடு இல்லாமல் அதன் நாவல்களைப் படிக்கும் அளவிற்கு அந்த மொழியில் தேர்ச்சி பெற்று விட்டார். அவரது அயராத உழைப்பும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் தான் முக்கிய காரணம்.

பள்ளியில் அவர் பயின்ற காலத்தில், ஒரு இளைஞன் ஒரு தொழிலில் ஈடுபட தொடங்குவதற்கு முன்னால் அவன் மனதில் உருவாகும் எண்ணங்கள் குறித்து, கட்டுரை எழுதுமாறு பணிக்க பட்டிருந்தது.

” சமூகத்துக்கு அதிக நன்மை தரக்கூடிய தொழிலை நாம் தேர்ந்தெடுத்தால், வாழ்க்கை நமக்கு பிரச்சனையாக இருக்காது. ஏனென்றால் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் உலக நன்மைக்காக நாம் செய்யும் தியாகமாக மாறிவிடும். உலக மக்களில் பலருக்கும் மகிழ்ச்சியை உருவாக் குபவரே மகிழ்ச்சி அடைகிறார் என்பது பட்டறிவு. அதேநேரம் ஒரு நபர் தனக்காக மட்டும் பாடுபட்டால் அறிவாளி ஆகலாம்; ஞானி ஆகலாம்; கவிஞராக கூட ஆகலாம்.ஆனால் குறைவற்ற உண்மையான மகத்தான மனிதனாக மாற முடியாது” அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். அந்த இளம் வயதிலேயே, மனித சமூகத்திற்கு உழைப்பதுதான் அவருடைய வாழ்க்கையின் மிக முக்கியமான சாராம்சமாக இருந்திருக்கிறது.

வால்டேர், ரூசோ போன்ற பிரெஞ்சு தத்துவ சிந்தனையாளர்களின் கருத்துக்களை, தன் தந்தையின் வழியாகவும், சோசலிசம் எனப்படும் சமதர்மக் கொள்கை தொடர்பான ஆர்வத்தை, அவரது காதல் மனைவியான ஜென்னியின் தகப்பனார் வெஸ்ட் பாலன் அவர்கள் மூலமும் வளர்த்துக்கொண்டார்.

தன்னைவிட 4 வயது மூத்த ஜென்னியிடம் இருந்த நட்பு இளவயதில் காதலாக மாறியது. அவரது பதினெட்டாவது வயதில் சொந்தக்காலில் நின்ற பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்று ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அவர் பெர்லின் பல்கலைக் கழகத்தில் படித்த ஏழு ஆண்டு காலமும் ஜென்னி அவருக்காக காத்திருந்தார்.

அங்கு அவர் தத்துவ சிந்தனை, சட்டம், வரலாறு, புவியியல், இலக்கியம் என்று பல்வேறு துறைகளைப் பற்றி படித்தார். சட்டத் துறையில் கவனம் செலுத்துமாறு அவருடைய தந்தையின் அறிவுரையாக இருந்தாலும், அவருக்கு தத்துவ சிந்தனைகளில் தான் மனம் விரும்பி சென்றது.

பிரெடரிக் ஹெகல் என்ற தத்துவ சிந்தனையாளர் கருத்துக்கள் ஈர்க்கப்பட்டு, அவர் முன்வைத்த இயக்கவியல் கொள்கையை, மார்க்ஸ் வாசித்தார். பெர்லின் பல்கலைக் கழகத்தில் அவரின் பேராசிரியராக இருந்த, லு த்விக் பாயர்பாகின் பொருள்முதல்வாத கோட்பாட்டை வாசித்து தெரிந்து கொண்டார். இந்த இரண்டு கோட்பாடுகளையும் இணைத்து, தன்னுடைய கோட்பாடுகளுக்கு அடித்தளமாக பயன்படுத்தி விளக்கினார்.

அவருடைய இருபத்தி மூன்றாவது வயதில் முனைவர் பட்டத்தை பெற்றார். அந்தப் பட்டத்தை எந்த காலத்திலும் அவர் பயன்படுத்தியதில்லை. அதேபோல சட்டம் பயின்று இருந்த அவர் வழக்குரைஞராக இந்த நீதிமன்றத்திலும் வாதாடியது இல்லை.

பேராசிரியர் வேலை கிடைக்காததால், ரைன்லாந்து கெஸட் என்ற இதழில் எழுத ஆரம்பித்தார். இது தான் அவருடைய முதல் பணி. அவருடைய எழுத்துகளில் மக்களுக்காகத்தான் அரசை தவிர அரசுக்காக மக்கள் அல்ல..என்ற சாராம்சத்தில் அடிப்படையிலேயே கட்டுரைகள் எழுதிவந்தார்.

அரசுக்கு எதிராக தொடர்ந்து எழுதியதால், அரசின் நெருக்கடிகள் அவருக்கு தொடர்ந்தது. அந்த நேரத்தில் 1843 ஜூன் 13ஆம் தேதி ஏழு வருடங்கள் தனக்காக காத்திருந்த ஜென்னியை மணம் செய்து கொண்டார். தொடர்ந்து அங்கு வசிக்க முடியாத சூழல் பாரிசில் குடியேறினார். அங்கும் நெருக்கடி, பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு குடியேறி சென்றார். பின்னர் தன்னுடைய இறுதிக் காலத்தில் லண்டனில் வாழ்ந்தார். பல நாடுகளில் வசித்த போதும் எந்த நாட்டிலும் அவர் குடியுரிமையை பெறவில்லை. நான் இந்த உலகத்தின் குடிமகன் என்று தன்னைக் கூறிக் கொண்டார்.

வேறு யாரையும் விட எங்கெல்ஸ்யை விடவும் மார்க்கை அதிகமாக புரிந்து கொண்டவர் ஜென்னி. தன் கடைசி காலம் வரை மார்க்சுக்கு அனைத்து வகையிலும் உற்ற துணையாக இருந்தவர். ஜென்னியின் மேல் கொண்ட காதலால், தன் மூன்று மகள்களின் பெயரிலும் ஜென்னி என்ற பெயர் வருமாறு பெயர் வைத்தார். ஜென்னி கரோலின், ஜென்னி லாரா, ஜென்னி எலினார்…

மார்க்ஸ் கிறுக்கல் கையெழுத்தில் எழுதுவதைப் பார்த்து, அழகாக படி எடுத்துக் கொடுக்கும் வேலையை ஜென்னி செய்ய ஆரம்பித்தார். அந்த நாட்களில் என் வாழ்க்கையின் மகிழ்ச்சிகரமான நாட்கள் என்று ஜென்னி குறிப்பிட்டுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையை தன்னுடைய 29 ஆவது வயதில், உருவாக்கினார். சர்வதேச தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்..என்ற அந்த அறைகூவல் தான் உலக அரசியல் வரலாற்றில் தாக்கத்தை இன்றும் கூட ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கம்யூனிச தத்துவம் இப்படித்தான் உலகிலே வேர் பிடிக்க ஆரம்பித்தது.

ஜெர்மனி பிரான்ஸ் பெல்ஜியம் ஆகிய மூன்று நாடுகளுக்கும் குடி பெயர்ந்து கொண்டே ஒரு வசதி குறைவான அகதி வாழ்க்கையை தான் மார்க்ஸ் வாழ்ந்தார். ஒரு செய்தித்தாளுக்கு எழுதிய போது கிடைத்த சொற்ப வருவாய் தான், அவருக்கு கிடைத்த சம்பளம்.

அவர்கள் லண்டனில் இருக்கும் பொழுது, ஏழைகள் அதிகம் வசிக்கின்ற பகுதியில் தான், இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் தான் வசித்து வந்தார். லண்டனில் தங்கள் குடும்பத்தின் ஒருநாள் வாழ்க்கை குறித்து ஜென்னி, தன்னுடைய நண்பர் யோசிப் வெய்டமையர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மாஸ் வறுமையின் நம்பிக்கை தளராது, எப்படி ஒரு லட்சிய வாழ்க்கையை வாழ்ந்தார் என்பதை காட்டும் கண்ணாடியாக இந்த கடிதம் கருதப்படுகிறது.

ஒருமுறை கைச்செலவுக்கு காசில்லாமல், மேல்கோட்டை அடகு வைத்தார். நல்ல உடைகள் இல்லாததால் அவருடைய மகள்கள் பள்ளிக்கு பல நாட்கள் செல்ல முடியாத அவஸ்தைகளும் நிகழ்ந்த காலங்களும் உண்டு.

வேறு ஒரு ஆளாக இருந்தால் தன்மானத்தை விட்டுக் எதைப்பற்றியும் கவலைப்படாமல், கிடைத்த வேலையில் ஒட்டிக் கொண்டு இருந்திருப்பார்கள். ஆனால் அவரால் அப்படி எல்லாம் வாழ முடியவில்லை. தன்னுடைய ஏழ்மை நிலையிலும் கூட, ஏழைத் தொழிலாளர்களுக்கு மக்களுக்கும் எதிராக நடைபெறும், சுரண்டலைப் பற்றி மட்டுமே அவரது இதயமும் மூளையும் சிந்தித்துக் கொண்டிருந்தது.

மார்க்ஸ் சிறந்த தலைவராக இருந்தார். அவரின் சிறந்த தோழராக ஏங்கல்ஸ் இருந்தார். ஏங்கல்ஸ் இல்லாவிட்டால் பொதுவுடமைக் கொள்கையை நடைமுறைக்கு சாத்தியமான கோட்பாடாக மார்க்ஸால் உருவாக்கியிருக்க முடியாது. மார்க்சின் பெருமளவு பொருளாதார தேவைகளை, பூர்த்தி செய்தவர் ஏங்கல்ஸ்.

மூலதனம் என்ற நூலுக்காக, அவர் 1500க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாசித்திருக்கிறார். தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை இந்த நூலை உருவாக்குவதற்கு அர்ப்பணித்து விட்டார். மூலதனத்தின் முதல் பாகம் முடிவடைந்ததும் தன் நண்பன் ஏங்கல்ஸ் க் தன்னுடைய நன்றி கடிதத்தை முதலில் எழுதினார்.
மூலதனத்தின் முதல் பாகம் வெளியாகி 6 ஆண்டுகள் ஆகியிருந்த நிலையில், அவரது மனைவி ஜென்னி உடல்நலம் குன்றி, காலமானார். மிகவும் நேசித்த அதனுடைய மூத்த மகள் ஜெனினி லாங்குவி அவரும் இறந்துவிட, அப்படின்னு துயரம் பன்மடங்காகப் பெருகி அதற்குப் பிறகு நீண்ட காலம் அவர் உயிர் வாழவில்லை.

அவரது மறைவிற்குப் பிறகு அவரது நண்பர் ஏங்கல்ஸ் மற்றும் இரு மகள்கள் துணையுடன் இரண்டாம் மூன்றாம் பாகத்தை அச்சில் கொண்டு வந்தார்கள்.
மார்க்சின் இளவயது வாழ்க்கை, காதல் வாழ்க்கை, வறுமையிலும் தளராத அவரது உழைப்பு, அவருக்கு உதவிய நண்பர்கள் , அவரது போராட்டங்கள் என்று அனைத்தும் இந்த நூலில் மிக அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

உலகம் முன்பை விட மேம்பட்டதாக இருப்பதற்கு மார்க்ஸ் முன்வைத்த கொள்கைகள் காரணமாக இருந்திருக்கிறது. பொருளாதாரம், வரலாறு, கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், அரசு எதிர்ப்பு, சமூக மாற்றங்கள், மக்கள் புரட்சிகள், மக்களுக்காக இதழியல், கூட்டாக போராடும் உரிமை.. என பல்வேறு துறைகளிலும் மார்க்ஸ் தாக்கம் செலுத்தியிருக்கிறார்.

” மனித குலத்தின் நன்மைக்குப் பாடுபடும் வகையில் நம்முடைய வேலையை தேர்ந்தெடுத்து விட்டால் அதன் சுமை நமக்கு பெரிய நெருக்கடிகளை தராது..” என்று பள்ளி காலத்தில் அவர் எழுதியிருந்தது போலவே.. அவருடைய வரிகளுக்கு மிகச் உதாரணமாக அவரே வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
தன்னுடைய அர்ப்பணிப்பு உணர்வாலும் சிந்தனைகளாலும், எப்படி உலகின் மகத்தான மனிதராக மார்க்ஸ் ஆனார் என்பதை இப்புத்தகம் மிக அழகாக சொல்கிறது. அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு அருமையான நூல்.

– பூங்கொடி கதைசொல்லி