நூல் அறிமுகம்: சந்தியூர் கோவிந்தனின் ’தாத்தாவின் ஞாபகம்’ – சித்தார்த்தன் சுந்தரம்
ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே
கதவிடுக்கில்
நின்றுகொண்டு
இம்முறையும்
வருத்தப்பட்டாள்
இந்த வரன்
அமைந்து விடுமோ?
என்று
மனதில் காதலன்.
மழை பெய்து கொண்டிருக்கும் வேளையில் வந்த பேருந்தைப் பிடிப்பதற்காக அவசரகதியில் தன் டைரியை பேருந்து நிறுத்த நிழற்கூடத்தில் மறந்துவிட்டுச் சென்ற 30 வயது மதிக்கத்தக்க ஓர் இளைஞன் `பெண் பார்க்கும் படலம் அல்லது பெண் தேடல் படலம் என்பது ஓர் ஆணுக்கு எவ்வளவு ரணமான விஷயம்’ என்பது குறித்து எழுதியிருந்த பதிவு. இது சந்தியூர் கோவிந்தன் எழுதி சென்ற ஆண்டு வெளிவந்த `தாத்தாவின் ஞாபகம்’ என்கிற சிறுகதைத் தொகுப்பில் `அநாதையாய்க் கிடந்த டைரியிலிருந்து’ என்கிற கதையில் இடம் பெற்றிருக்கிறது. இதில் காலமாற்றத்தால் சிதைந்து வரும் விவசாயம் குறித்தும் ஒரு பதிவை அந்த யாரோ ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.
இந்த சிறுகதைத் தொகுப்பில் நூலாசிரியர் பல்வேறு காலகட்டங்களில், பல பத்திரிகைகளில் எழுதி வெளியான 15 சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. இதிலிருக்கும் கதைகள் பெரும்பாலானவற்றின் கதைக் களம் சேலத்தை சுற்றி ஆசிரியருக்கு பரிட்சயமான கிராமங்களாகவே இருப்பதால் அப்பகுதியில் பேசப்படும் மொழிநடையிலேயே கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு கதை மாந்தருக்கும் ஓர் அடைமொழி இருப்பது போலவே ஒவ்வொரு வீட்டுக்கும் ஓர் அடைமொழி இருக்கிறது. அதுவே அவ்வீட்டார்களுக்கான அடையாளப் பெயர்களாகவும் மாறி விடுகின்றன.
பொதுவாக, இந்த மாதிரியான தொகுப்பு நூல்களில் நான் முதலில் வாசிப்பது நூலின் தலைப்புக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கதையைத்தான். அது போல இதிலும் முதலில் வாசித்தது `தாத்தாவின் ஞாபகம்’. தாத்தாவின் சொத்தை கையகப்படுத்த நினைக்கும் அத்தை, இதனால் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் அபத்தங்கள் பற்றி அறியாத தாத்தா, பாட்டி. அத்தையை எதிர்த்து கேள்வி கேட்கப்போன அம்மா, சித்தி. இவர்கள் அத்தையை எதிர்த்து கேள்வி கேட்டதை விரும்பாத தாத்தா, `ஏம் மருமகள் எங்கள அப்படி நடுத்தெருவுல விட்றமாட்டா, நீங்க வந்தீங்கன்னா… வந்தா வந்த வேலையைப் பார்த்துட்டுப் போங்க… இனிமேல் இங்க வந்து எங்கள தொல்லை பண்ற வேலையை வச்சீக்காதீங்க’ என்று காட்டமாய் திட்டித் தீர்த்துவிட்டு, நாங்க செத்தாக்கூட எழவுக்கு வராதீங்க எனவும் சொல்கிறார். ஒரு நாள் அதுவும் நடக்கிறது. தாத்தா இறந்துவிட, அதை வெட்டியான் வந்து அம்மாவிடம் சொல்ல, அம்மா தாத்தா ஏசியதைச் சொல்லி எழவுக்குப் போக மறுத்து தவசம் (தானியம்) கொடுத்து அனுப்பு விட்டுவிட்டு ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு மேய்ச்சல் காட்டிற்குப் போகிறாள். ஆனால் அவளை அறியாமல் அவள் முகத்தில் அழுகைப் பொங்கிக் கொண்டு வர, பெருங்குரலெடுத்து அழும் ஒப்பாரிச் சத்தமாகக் அது கேட்டது என கதையை முடித்திருக்கிறார். இதற்கிடையில், கதைசொல்லி தான் சிறுவனாக இருந்தபோது தாத்தா வீட்டிற்குச் சென்றதையும் தாத்தா காட்டிய அன்பையும் நினைவுகூர்கிறான்.
இந்நூலில் ஆங்காங்கே அந்தந்தப்பகுதியில் வழங்கப்படும் சொலவடைகளைக் குறிப்பிட்டிருப்பது கதைக்கு மேலும் மெருகூட்டுகிறது. சில கதைகளில் ஆங்காங்கே நகைச்சுவை இழையோடினாலும் `மோகினி ஆட்டம்’ என்கிற கதையை வாசிக்கும் போது வாய்விட்டு சிரிக்கும்படி இருந்தது. ரேவதிக்கு காத்து சோகை மாதிரி இருப்பதாக நினைத்துக் கொண்ட அத்தை அவளை பேயோட்டும் முனிசாமியிடம் கூட்டிச் செல்ல வேண்டும் என மாமாவிடம் கூறியது அவளது ஞாபகத்தில் வந்து போனது. அவள் அத்தையிடம் `எனக்கு எதுவுமில்லை, நான் நல்லாத்தான் இருக்கேன். நகரத்துல படிச்சவ. நல்லது கெட்டது தெரியும் டிவியிலே பேய்த் தொடர் பாக்கிறதாலே எனக்குப் பேய் பிடிச்சிருக்குன்னு தீர்மானிச்சுட்டிங்களா?” எனக் கேட்க அவர்களோ இதைக் கேட்டபாடில்லை. எனவே அத்தையும் மாமாவும் நினைத்தபடி அவளை பேயோட்டி முனுசாமியிடம் கூட்டிச் செல்ல இவள் பேய் பிடித்தவள் மாதிரி நடித்து பேயோட்டும் முனுசாமியையும் அவரின் பக்க பூசாரிகளையும் துண்டக் காணோம், துணியக் காணோம் என ஓடவிடுகிறாள்.
`பாட்டுச் சத்தம்’ கதையில் அமைந்திருப்பது போல சில கதைகளில் தற்செயலாகவே ஒரு புதிர்த்தன்மை அமைந்து விட அதுவே அந்தக் கதைகளுக்கு அழகு சேர்க்கிறது. `ஏழை சொல் அம்பலமேறாது’ என்பதை வெளிப்படுத்தும் கதை `சாபம்’. அன்றிலிருந்து ஆணவக் கொலைகள் நடக்கும் இன்றுவரை ஏழை சொல் அம்பலம் ஏறுவதில்லை. தன் மகளோடு பழகி அவளைத் தாயாக்கி விட்டு இளைஞன் ஒருவன் ஒதுங்கி விடுகிறான். பிரச்சனை பஞ்சாயத்துக்கு வருகிறது. பொருளாதார நிலையும் கூடவே வருகிறது. தவறு செய்த இளைஞன் உண்மையைச் சொல்லக் கூடாது என தந்தையால் மிரட்டப்படுகிறான். `எந்த மாதத்திலிருந்து முழுகாம இருக்க?” என பஞ்சாயத்தில் கேட்க அதற்குப் பதில் சொல்லத் தெரியாமல் முழித்து நிற்கிறாள் தாயாக்கப்பட்ட பெண். அதையே சாதகமாக எடுத்துக் கொண்டு அவள் வேறுயாரிடமோ பழகி தாய்மடைந்துவிட்டு செல்வந்தன் என்பதற்காக இவன் மீது குற்றம் சாட்டுகிறாள் எனச் சொல்லி வழக்கை முடித்து வைக்கிறது பஞ்சாயத்து. இதைப் பொறுக்காத பெண்ணின் தாய், `ஏம்புள்ளய கெடுத்து அவ வாழ்க்கைய சீரழிச்சவனோட குடும்பம் நாசமாப் போவனும்; அவுங்க குடும்பத்துல யாருக்குமே கன்னி கழியக்கூடாது’ என சாபமிடுகிறாள். இது போல எத்தனையோ பெண்கள் ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்படுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. `பணம் பத்தும் செய்யும்’ என சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்.
இப்படியாக ஒவ்வொரு கதையும் – அம்மாசி சொன்ன கதை, வண்டிக்காரன், வானம்பாடி, வேட்டை நாய், மழை முடிந்த பிறகான பொழுது, சாமி என்ற சாமிநாதனின் வாழ்க்கைக் குறிப்புகள், விடியற்காலை, கொடப்பான், பலி – நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பது போல அவரது பால்யகால நினைவுச் சித்திரங்களின் தொகுப்பாகவே இருக்கும் என தோன்றுகிறது. தம்மைச் சுற்றி நிகழும் சம்பவங்களின் பின்னணியிலேயே இச்சிறுகதைகள் எழுதப்பட்டிருக்கின்றன என்பது இதை வாசிக்கும் போது தெரிய வருகிறது. நூலாசிரியரின் முதல் சிறுகதைத் தொகுப்பு மிகவும் செறிவாக அவர் சார்ந்த பகுதியின் மொழியில் எழுதப்பட்டு வாசகர்களுக்கு ஒரு புது அனுபவத்தைக் கொடுக்கிறது என்றால் அது மிகையில்லை.
– சித்தார்த்தன் சுந்தரம்
நூல் : தாத்தாவின் ஞாபகம் (சிறுகதைகள் தொகுப்பு)
ஆசிரியர் : சந்தியூர் கோவிந்தன்
விலை : ரூ.₹150/-
பக்கங்கள் : 162.
வெளியீடு : தூறல் பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]