நூல் அறிமுகம்: சந்தியூர் கோவிந்தனின் ’தாத்தாவின் ஞாபகம்’ – சித்தார்த்தன் சுந்தரம்

நூல் அறிமுகம்: சந்தியூர் கோவிந்தனின் ’தாத்தாவின் ஞாபகம்’ – சித்தார்த்தன் சுந்தரம்




ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே

கதவிடுக்கில்
நின்றுகொண்டு
இம்முறையும்
வருத்தப்பட்டாள்
இந்த வரன்
அமைந்து விடுமோ?
என்று
மனதில் காதலன்.

மழை பெய்து கொண்டிருக்கும் வேளையில் வந்த பேருந்தைப் பிடிப்பதற்காக அவசரகதியில் தன் டைரியை பேருந்து நிறுத்த நிழற்கூடத்தில் மறந்துவிட்டுச் சென்ற 30 வயது மதிக்கத்தக்க ஓர் இளைஞன் `பெண் பார்க்கும் படலம் அல்லது பெண் தேடல் படலம் என்பது ஓர் ஆணுக்கு எவ்வளவு ரணமான விஷயம்’ என்பது குறித்து எழுதியிருந்த பதிவு. இது சந்தியூர் கோவிந்தன் எழுதி சென்ற ஆண்டு வெளிவந்த `தாத்தாவின் ஞாபகம்’ என்கிற சிறுகதைத் தொகுப்பில் `அநாதையாய்க் கிடந்த டைரியிலிருந்து’ என்கிற கதையில் இடம் பெற்றிருக்கிறது. இதில் காலமாற்றத்தால் சிதைந்து வரும் விவசாயம் குறித்தும் ஒரு பதிவை அந்த யாரோ ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

இந்த சிறுகதைத் தொகுப்பில் நூலாசிரியர் பல்வேறு காலகட்டங்களில், பல பத்திரிகைகளில் எழுதி வெளியான 15 சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. இதிலிருக்கும் கதைகள் பெரும்பாலானவற்றின் கதைக் களம் சேலத்தை சுற்றி ஆசிரியருக்கு பரிட்சயமான கிராமங்களாகவே இருப்பதால் அப்பகுதியில் பேசப்படும் மொழிநடையிலேயே கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு கதை மாந்தருக்கும் ஓர் அடைமொழி இருப்பது போலவே ஒவ்வொரு வீட்டுக்கும் ஓர் அடைமொழி இருக்கிறது. அதுவே அவ்வீட்டார்களுக்கான அடையாளப் பெயர்களாகவும் மாறி விடுகின்றன.

பொதுவாக, இந்த மாதிரியான தொகுப்பு நூல்களில் நான் முதலில் வாசிப்பது நூலின் தலைப்புக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கதையைத்தான். அது போல இதிலும் முதலில் வாசித்தது `தாத்தாவின் ஞாபகம்’. தாத்தாவின் சொத்தை கையகப்படுத்த நினைக்கும் அத்தை, இதனால் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் அபத்தங்கள் பற்றி அறியாத தாத்தா, பாட்டி. அத்தையை எதிர்த்து கேள்வி கேட்கப்போன அம்மா, சித்தி. இவர்கள் அத்தையை எதிர்த்து கேள்வி கேட்டதை விரும்பாத தாத்தா, `ஏம் மருமகள் எங்கள அப்படி நடுத்தெருவுல விட்றமாட்டா, நீங்க வந்தீங்கன்னா… வந்தா வந்த வேலையைப் பார்த்துட்டுப் போங்க… இனிமேல் இங்க வந்து எங்கள தொல்லை பண்ற வேலையை வச்சீக்காதீங்க’ என்று காட்டமாய் திட்டித் தீர்த்துவிட்டு, நாங்க செத்தாக்கூட எழவுக்கு வராதீங்க எனவும் சொல்கிறார். ஒரு நாள் அதுவும் நடக்கிறது. தாத்தா இறந்துவிட, அதை வெட்டியான் வந்து அம்மாவிடம் சொல்ல, அம்மா தாத்தா ஏசியதைச் சொல்லி எழவுக்குப் போக மறுத்து தவசம் (தானியம்) கொடுத்து அனுப்பு விட்டுவிட்டு ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு மேய்ச்சல் காட்டிற்குப் போகிறாள். ஆனால் அவளை அறியாமல் அவள் முகத்தில் அழுகைப் பொங்கிக் கொண்டு வர, பெருங்குரலெடுத்து அழும் ஒப்பாரிச் சத்தமாகக் அது கேட்டது என கதையை முடித்திருக்கிறார். இதற்கிடையில், கதைசொல்லி தான் சிறுவனாக இருந்தபோது தாத்தா வீட்டிற்குச் சென்றதையும் தாத்தா காட்டிய அன்பையும் நினைவுகூர்கிறான்.

இந்நூலில் ஆங்காங்கே அந்தந்தப்பகுதியில் வழங்கப்படும் சொலவடைகளைக் குறிப்பிட்டிருப்பது கதைக்கு மேலும் மெருகூட்டுகிறது. சில கதைகளில் ஆங்காங்கே நகைச்சுவை இழையோடினாலும் `மோகினி ஆட்டம்’ என்கிற கதையை வாசிக்கும் போது வாய்விட்டு சிரிக்கும்படி இருந்தது. ரேவதிக்கு காத்து சோகை மாதிரி இருப்பதாக நினைத்துக் கொண்ட அத்தை அவளை பேயோட்டும் முனிசாமியிடம் கூட்டிச் செல்ல வேண்டும் என மாமாவிடம் கூறியது அவளது ஞாபகத்தில் வந்து போனது. அவள் அத்தையிடம் `எனக்கு எதுவுமில்லை, நான் நல்லாத்தான் இருக்கேன். நகரத்துல படிச்சவ. நல்லது கெட்டது தெரியும் டிவியிலே பேய்த் தொடர் பாக்கிறதாலே எனக்குப் பேய் பிடிச்சிருக்குன்னு தீர்மானிச்சுட்டிங்களா?” எனக் கேட்க அவர்களோ இதைக் கேட்டபாடில்லை. எனவே அத்தையும் மாமாவும் நினைத்தபடி அவளை பேயோட்டி முனுசாமியிடம் கூட்டிச் செல்ல இவள் பேய் பிடித்தவள் மாதிரி நடித்து பேயோட்டும் முனுசாமியையும் அவரின் பக்க பூசாரிகளையும் துண்டக் காணோம், துணியக் காணோம் என ஓடவிடுகிறாள்.

`பாட்டுச் சத்தம்’ கதையில் அமைந்திருப்பது போல சில கதைகளில் தற்செயலாகவே ஒரு புதிர்த்தன்மை அமைந்து விட அதுவே அந்தக் கதைகளுக்கு அழகு சேர்க்கிறது. `ஏழை சொல் அம்பலமேறாது’ என்பதை வெளிப்படுத்தும் கதை `சாபம்’. அன்றிலிருந்து ஆணவக் கொலைகள் நடக்கும் இன்றுவரை ஏழை சொல் அம்பலம் ஏறுவதில்லை. தன் மகளோடு பழகி அவளைத் தாயாக்கி விட்டு இளைஞன் ஒருவன் ஒதுங்கி விடுகிறான். பிரச்சனை பஞ்சாயத்துக்கு வருகிறது. பொருளாதார நிலையும் கூடவே வருகிறது. தவறு செய்த இளைஞன் உண்மையைச் சொல்லக் கூடாது என தந்தையால் மிரட்டப்படுகிறான். `எந்த மாதத்திலிருந்து முழுகாம இருக்க?” என பஞ்சாயத்தில் கேட்க அதற்குப் பதில் சொல்லத் தெரியாமல் முழித்து நிற்கிறாள் தாயாக்கப்பட்ட பெண். அதையே சாதகமாக எடுத்துக் கொண்டு அவள் வேறுயாரிடமோ பழகி தாய்மடைந்துவிட்டு செல்வந்தன் என்பதற்காக இவன் மீது குற்றம் சாட்டுகிறாள் எனச் சொல்லி வழக்கை முடித்து வைக்கிறது பஞ்சாயத்து. இதைப் பொறுக்காத பெண்ணின் தாய், `ஏம்புள்ளய கெடுத்து அவ வாழ்க்கைய சீரழிச்சவனோட குடும்பம் நாசமாப் போவனும்; அவுங்க குடும்பத்துல யாருக்குமே கன்னி கழியக்கூடாது’ என சாபமிடுகிறாள். இது போல எத்தனையோ பெண்கள் ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்படுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. `பணம் பத்தும் செய்யும்’ என சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்.

இப்படியாக ஒவ்வொரு கதையும் – அம்மாசி சொன்ன கதை, வண்டிக்காரன், வானம்பாடி, வேட்டை நாய், மழை முடிந்த பிறகான பொழுது, சாமி என்ற சாமிநாதனின் வாழ்க்கைக் குறிப்புகள், விடியற்காலை, கொடப்பான், பலி – நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பது போல அவரது பால்யகால நினைவுச் சித்திரங்களின் தொகுப்பாகவே இருக்கும் என தோன்றுகிறது. தம்மைச் சுற்றி நிகழும் சம்பவங்களின் பின்னணியிலேயே இச்சிறுகதைகள் எழுதப்பட்டிருக்கின்றன என்பது இதை வாசிக்கும் போது தெரிய வருகிறது. நூலாசிரியரின் முதல் சிறுகதைத் தொகுப்பு மிகவும் செறிவாக அவர் சார்ந்த பகுதியின் மொழியில் எழுதப்பட்டு வாசகர்களுக்கு ஒரு புது அனுபவத்தைக் கொடுக்கிறது என்றால் அது மிகையில்லை.

– சித்தார்த்தன் சுந்தரம் 

நூல் : தாத்தாவின் ஞாபகம் (சிறுகதைகள் தொகுப்பு)
ஆசிரியர் : சந்தியூர் கோவிந்தன்
விலை : ரூ.₹150/-
பக்கங்கள் : 162.
வெளியீடு : தூறல் பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

கோவை ஆனந்தனின் கவிதைகள்

கோவை ஆனந்தனின் கவிதைகள்




பறவை
**********

வானைத் தொடுமளவு நெடிதுயர்ந்த விருட்சங்கள் நிறைந்த வனத்தின்
நடுவே பச்சைநிறப்பாசிகள் போர்த்திய பாறைகளின்
சுனையிலிருந்து ஊறும் தெளிந்த நீரினைப்போல

மனதிலிருந்து வடியும்
உணர்வுகளும் ஏக்கங்களும்
வார்த்தைகளாய் வடிந்தோட

நதியின் இருகரையில்
வளர்ந்திருந்த செடிகொடிகளில் மலர்ந்த மலர்களில்
தேனீக்கள் ரீங்காரமிட்டு
தேனெடுக்கும் வேளையில்
விரிந்த மொட்டுக்களிலிருந்து வெளிப்படும் நறுமணத்தில்
சிலநிமிடம் இளைப்பாறி

பல்லுயிர்க்கும் பசிபோக்கும்
கனியொன்று மலையிலிருந்து சீறிப் பாய்ந்தோடும் நதியில்
விழுந்து மிதக்க

ஓடும்நதியின் போக்கில் பயணித்த கனி
கையருகே வந்தடைய
சிறுஅலகால் கொத்தி சுவைத்ததும் வியந்துபோனது

நாவில்படும் துண்டுகள் ஒவ்வொரு முறையும்
வெவ்வேறு சுவையில் இனிக்கும் ஒற்றைக் கனியினை
அடுத்தவேளைப்பசிக்கல்லாது கூடுகளில்
பசியோடு காத்திருக்கும்
சிறகுகள் முளைக்காத சிறுகுஞ்சுகளுக்காக
சுமந்துபோய்
வெயிலும் நிழலுமென
மாறிமாறி வந்துபோகும் மரக்கிளையில் அமர்ந்து
இரையோடு வந்திருப்பதாய்
சிறுஅலகில் ஒலியெழுப்பியது அந்தப்பறவை.

தாத்தா
*********
நாலுமணி சிற்றுந்தில் வந்திறங்கும் வானம்பாடிகளைக்
கைப்பிடித்து அழைத்துச்செல்லும் நேரங்களில்
காலையில் விடுபட்ட கதைகள் மீண்டும்
வசப்படுத்திவிடுகின்றன பிஞ்சுஇதயங்களை

ஆள் நடமாட்டமேயில்லாத வீதியில்
வெளிச்சம்தெரியும் தூரம்வரைத் தேடுகிறது –
ஏதாவது அசைவுகளிருக்கின்றனவாவென்று
நடமாட்டம் எதுவுமில்லையென உறுதிப்படுத்தியவுடன்
பிஞ்சு நடைகளுடன் தளர்ந்த நடையும் தள்ளாடி
பூட்டியவாசல் திறந்து
ஒய்யாரமாய்ப் போய்
வர்ணங்கள்பூசிய சுவற்றினோரம் கிடந்த மரநாற்காலியில் அமர்கிறது
காலையிலிருந்து தனிமைச்சிறையில் அடைபட்ட முதிர்ந்ததேகம்

சீருடைகள் களைந்து மாற்று உடையணிந்த வானம்பாடிகள்
சிறகுகளசைத்து காற்றில்மிதந்து
பெருமரக்கிளையில் அமர்வதைப் போல்
தாத்தா என ஓடிவந்து கட்டிப்பிடிக்கும் பேரக்குழந்தைகளுடன்
-தன் இலையுதிர்கால நினைவுகளையும்
சின்னஞ்சிறு கதைகள்பேசியும்
இறுதியில் மழலைகளின் ஒப்பனையில்
மீண்டுமொருமுறை இளமைக்குத் திரும்பி பேரின்பத்தைக் கொண்டாடுகிறது

தாத்தாவின் மனதும் ஒரு குழந்தையாய்.

நிலைக்கண்ணாடி
**********************
நீ நின்று ரசித்த
உன்னழகை
உன்அறை நிலைக்கண்ணாடியும்
அதைவிட்டு நீ நகர்ந்தபின்
சிலநிமிடங்கள்
கதவுகளோடு கண்ணை
மூடி ரசிக்கிறது…

அவசரமாய் கேசத்தை
சரிசெய்து முகப்பசைகளைப்பூசி
ஒப்பனைகள் செய்து கடந்துசெல்லும் யாரும்
உன்னிப்பாய்க் கவனிக்கவில்லை
இதுவும் உன்நினைவில் இருப்பதை…

பாதரசங்கள் பூசிய கண்ணாடியின் மீது
இதுவரை ஒட்டவேயில்லை-
உன் அட்டைப் பொட்டுகளும்
விரல் தாரைகளையும் தவிர
உன்னைப்போன்றொரு உருவம்…

எதிரில் நின்றவரின் உருவத்தை மிகைப்படுத்தாமலும் –
மீதம் வைக்காமலும் காட்சிப் படுத்திய கண்ணாடி
ஏமாற்றத்துடன்-நீ
விட்டுச்சென்ற உன்னழகின்
சாயலில் இன்னொரு பிம்பத்தைப் பதிவுசெய்ய

இன்னும் உறங்காமல் விழித்தே கிடக்கிறது…

கோவைஆனந்தன்
[email protected]
+919003677002
3/177,குமாரபாளையம்
கிணத்துக்கடவு
கோவை-தமிழ்நாடு 642109

பூவாத்தா சிறுகதை – இரா.கலையரசி

பூவாத்தா சிறுகதை – இரா.கலையரசி




“நல்லா கரைச்சு வச்ச நீச தண்ணீயில கைய விட்டு வெளாவுறா பூவாத்தா.
தொண்டைய நனச்சுகிட்டு அவளுக்கு ஆறுதலா இலையில தடவுன தேனு” கெனக்கா வழுக்கிட்டு போகுது.

கறுப்பு நெறத்த கரைச்சு ஊத்துன மாதிரி கண்ண உருட்டிக்கு நிக்குது அவள உறிச்சு எடுத்த பூனை ஒண்ணு.

வச்சு இருந்த பாலை ஆசையா ஊத்தி அழகு பார்க்கறா பூவாத்தா.
“இந்தாடி பூவு, செங்ககட்டி வேணுமின்ட அந்த கட்டட வேல செய்யிற இடத்துல இருந்து எடுத்தாந்தேன்.”

எதுவும் எலி கிலி பேத்து விட்ருச்சா? அடைக்க. கேட்டியா? நல்லா செவ செவ னு இருந்த செங்ககட்டிய வாங்கிகிட்டா.

பள்ளங்கள் வாயை பொளந்து கதை கேட்டபடி இருக்கு. சின்ன சின்ன ஓட்டைகள் குட்டி பாம்பு வந்து போக வாட்டமா இருக்கு.

அந்த சின்ன குடிசை அழகா இருக்கு. பல நெறத்துல பொருள் வாங்கி வச்சு இருக்கா. செவப்பு, மஞ்சள் ஊதா னு அம்புட்டு அழகா இருக்கு.

“என் மகளுக்கு எல்லாமே
நல்லா தான் எடுக்கும்.” அப்பா பெரியகருப்பன் பேசுனது காதுக்குள்ளயே கேகக்குது.

பூவாத்தா நெனப்பு அவள் அப்பன் காலத்துக்கு செறகு விரிக்க ஆரம்பிச்சிருச்சு.

“ஏப்பா பெரியகருப்பா? மண்ணும் நீயும் ஒண்ணு கெனக்கா இருக்கீகளேப்பா.”
செம்மண்ண எடுத்து மேலுல பூசி விட்டாரு கருத்தக்கண்ணன்.

“செவத்த ஒடம்புக்கும் அதுக்கும் ஒண்ணு சொன்னாப்ல இருந்துச்சு. நம்ம வம்சத்துல இம்புட்டு நெறமா யாரும் இருந்ததில்லபா “பேசிய கருத்தக்கண்ணன நிறுத்துனாரு செம்பட்ட.

“ இல்லபா அவங்க பாட்டன்
பரசு நல்லா செவத்தவரு மிடுக்கா மீசையை முறுக்கி நிப்பாரு பாரு அசந்து போகனும் ஆளுக.
நெறத்துல என்னா மாமா இருக்கு?”

” பொழைக்கிற பொழப்பு தான் பேரு சொல்லனும். நம்ம கையும் காலும் தான் மாமா வேலை செய்யனும். அது தான் அழகு.”

“ஒன்னய கெனக்கா உன் பேச்சும் அழகு தான் போ. மெச்சு போனாரு செம்பட்ட.”

செம்மண்ணு பூசுன. ஒடம்ப சிலிப்பிகிட்டு எழுந்த பெரியகருப்பன் “யானை ஒண்ணு திமிறிகிட்டு வந்தா மாதிரி இருந்துச்சு.!”

“ஊருல இருக்கிற பொண்ணுங்க எல்லாமே எளந்தாரி பெரியகருப்பன் மேல தான் கண்ணு. எடக்கு பேசுற பொண்ணுங்க கண்ணுல சாடையும் பேசுவாங்க.”

ஆருக்கும் ஆப்டது இல்ல இந்த வெலாங்கு மீனு.
மெல்ல உடம்புல இருந்த மண்ண ஒதறி பாயுற சிங்கமா பக்கத்துல கிணத்துல பாய்ஞ்சாரு.

அமைதியா கெடந்த தண்ணீ செவப்பு சாந்த பூசிகிருச்சு.
“நீந்தி பழகுன மீனா” லாவகமா நீந்துராரு. கைய அடிச்சு நீந்த கையோட பின்னி பெனஞ்சு பூங்கொத்தா வந்து சிக்கியது ஒரு பெண் பூவு.

“அமாவாசை இரவ இறுக்கி பிழிஞ்சி சாறு எடுத்த நெறத்துல நனைஞ்ச காளானா ஊறி இருந்த பொண்ண கையில ஏந்தி இருந்த பெரியகருப்பன் தெணறி போனாப்புல”.

இப்புடி ஒரு கருப்பு நெறத்த கண்டதே இல்ல. எக்கி வெலகி போனவள் ,“ “கூறு கெட்ட மனுசா? னு பறி கையில இருந்து பறந்து போன பட்டாம் பூச்சி யா பதறி வெலகுறா கருத்தம்மா”

கருவண்டு ஒண்ணு பதறி ஓடி ஒளிஞ்சா மாதிரி படக்குனு கண்ண சிமிட்டி முறைச்சா.

கருப்பட்டியில ஊருன எறும்பா மொகமெல்லாம் இனிப்பு பரவி திக்குமுக்காடி போயி இருந்தாரு பெரியகருப்பன்.

இம்புட்டு கருப்பா ஓரு புள்ளைய அவரு பார்த்ததே இல்ல. சிலைய பார்த்த மாதிரி கெறங்கி போனாரு.

“ஆளு குளிக்கிறது தெரியாமல் இப்புடியா நடந்துக்கறது? சீறி பாய்ந்த கருநாகமா வெசத்த கக்குறா கருத்தம்மா. மழையில நனைஞ்ச. கோழியா நடுங்க ஆரம்பிச்சுட்டா.

“கிணத்துல முங்கி எந்திரிச்சி பார்த்தா கறுப்பு முத்து கெடைக்குமுன்னு
யாரு கண்டா?”

சிரிச்சுகிட்டு பேசுனவர பார்த்து “இந்தா என்னா கறுப்புங்கற? “ஒன்னய மாதிரி செவத்த. குரங்க நானும் பார்த்தது இல்ல.”

ஒரே தவ்வா தவ்வி ஓடுன புள்ளிமானா மறஞ்சுட்டா. கருத்தழகி.
கண்ண விட்டு அகலாத அந்த முகம் இரவ பகலா மாத்தி புலம்ப விட்டிருச்சு.

கட்டுனா கருப்பழகி தான்னு முடிவுல இருந்தாரு. கையோட பரிசம் போட அவங்க ஆத்தாவ ஆள தெரட்டி கூட்டிக்கு போயிட்டாரு. ராசா மாதிரியே இருந்தாரு மாப்புள்ள.

எந்த மகாராணிக்கு வாய்ச்சு இருக்கோ? கிழவிக கண்ணழகு பார்த்துச்சுக.
“கீழ எறக்கின ஓல வீட்ல தட்டு முட்டு சாமான ஒதுக்கி வச்சு செம செஞ்சு வச்சிருந்தாங்க.”

சரி பொண்ண கூப்டுங்க. பருசத்த போட்ருவோம். உள்ள இருந்து வந்தா கருத்தம்மா.

“கிளி பச்சை நெறத்துல கட்டி இருந்த சேலையில
மல்லிகை பூவ சரம் சரமா
தொங்க விட்டிருந்தா.”

ஆத்தி இது என்னாடி இப்புடி
ஒரு கறுப்பு. அடுப்பு கரி தோத்துரும் போ! கேலி பேசி சிரிக்காத ஆள் இல்ல.

வச்ச கண்ண எடுக்காமல் பார்த்த ஒரே ஆளு பெரியகருப்பன் மட்டும்தான். அஞ்சு பவுனு நகை பரிசமா போட்டாங்க.

முழுக்க முழுக்க. பெரியகருப்பன் சிறுக சிறுக சம்பாதிச்சுது.ஆசையா போட்டு அழகு பார்த்தாரு.

ஊரே மெச்சுற அளவுக்கு கல்யாணம் நடந்தது. இவளுக்கு கிடைச்ச வாழ்க்கை யாருக்கும் வராது. போறாமை பட்டுச்சு ஊருசனம்.

அள்ளி பூசற கருப்பை ஆசையா வர்ணிச்சாரு.
“கரும்பு தட்டயே என் கருப்பட்டி பாகேனு கொஞ்சுவாரு.”

ஒரு தடவ கருத்தம்மா
கேட்டா “நெசமா தானா என்னைய புடிச்சு இருக்கு. “இம்புட்டு ஆசையா இருக்கீங்க. ஒன்னய ரொம்ப புடிச்சதால தான் கட்டிகிட்டேன்.”சாகற வரையும் எள் அன்பு குறையாது புள்ள.”

மதில புடிச்சு தொத்திக்கு இருந்த பல்லி “உங்” கொட்டுது.வாசல விரட்டி வந்த காத்து இவங்க பேசறத கேட்டு அமைதியா போயிருச்சு.

புள்ள உண்டான சேதி கேட்டு மெச்சு போனாரு.வீட்ல ஒரு வேல செய்ய விடல. நெற மாச பொண்டாட்டிய தாங்கி தடுக்குனாரு.

அக்கம் பக்கத்து ஆளுக எல்லாம் புள்ள எந்த நெறத்துல பொறக்குங்கற பேச்சு தான் ஓடிக்கு இருக்கு

வலி வந்து புள்ள பிறக்கிற வரைக்கும் உசுரே இல்ல அவருக்கு. “வதங்கின மிளகாய் செடி ஒரு வாய் தண்ணீர் கேட்டு இருக்கற மாதிரி முகத்த வச்சுக்கு இருந்தாரு.”

“கருகருனு பன்னீர் திராட்சையா மூக்கு முழியுமா பொறந்துட்டா
பூவாத்தா.”

செவத்த பெரியகருப்பன் கருத்த புள்ளைய ஆத்துல போற தண்ணீயா அள்ளி உச்சி முகர்ந்தார்.

உருக்கி எடுத்த கருப்பு வைரமா தகதகனு மின்னுறா பூவாத்தா.புள்ள பெறந்த செத்த நேரத்துல வலிப்பு வந்து துடிச்ச கருத்தம்மா உசுரயும் விட்டுட்டா.

ஊர் பய மக்கள் வாயில விழுந்தே நாசமா போயிருச்சு பொழப்பு. கட்டி தூக்கி அழுது துடிதுடிச்சு போனாரு.

விரிஞ்சு பார்த்த சூரியகாந்தி பூவா இருந்த மகளுக்கு “ பூவாத்தா”னு பேரு வச்சாரு.

அக்கம் பக்கம் எல்லாம் நெறைய பொண்ண கொண்டாந்து நிறுத்துனாங்க. திரும்பி பார்க்கல மனுசன்.

வளர்ந்த கதிரா நிக்கிறா, பூவா வளர்ந்த பூவாத்தா. அன்னைக்கு அப்டி தான் வெளைச்சல சந்தைக்கு கொண்டு போக வண்டிகட்டி கிளம்பினாரு.

“போற வழியில அச்சாணி கழன்டு தரையில இருந்த கூரான கல்லுல. தலை குத்தி ரத்த வெள்ளத்துல சரிஞ்சாரு பெரியகருப்பன்.”

வாழ்க்க அடிக்கிற அடியில
உசுர காவு வாங்கற விதிய நொந்து என்ன பலன்?

“யப்பே யப்பே என்னைய விட்டுட்டு போறியா கடமைய முடிச்சுட்டோமுனு நெனச்சி விட்டுட்டு போறியா”னு கதறுனா மவள்.

மரத்துல இருந்த ஒத்த குருவி அவளுக்காக சேர்ந்து அழுகுது. தீ பிடிச்ச சோளக்காடா பத்தி எரியுது மனசு.

செங்ககட்டி கையில கனத்திருச்சு அவள் மனசு கெனக்கா. செங்ககட்டிய. உடைச்சு தேய்ச்சா செவந்திரலாமுன்னு சொன்னத கேட்டு செஞ்சிக்கு இருக்கா கிறுக்கி.

நாளு நாளா பரமன் மேல ஒரு ஆசை வந்திருக்கு அவளுக்கு. காடு கரையில பார்க்கறத அவளும் பார்க்குறா

இன்னைக்கு நேரா அவன் கிட்ட கேட்டே புடனும்னு நெனச்சா.

விடிகாலை விடிய, சூரியன எழுப்புற வேலைய பார்க்க ஆரம்பிச்சுட்டா. அப்பன் செத்ததுக்கு அப்புறம் தனியா தெகிரியமா பொழப்ப பார்த்தா பூவாத்தா.

கறுப்பா இருக்கான்டு ஊரே ஏடாசி பேசுது. அதுக்கு தான் என்னென்னமோ செய்யிறா பாவம். காச சேர்த்து வச்சி “கிரீம் “அது இதுனு வாங்கி போடுறா.

பொறந்தது தான் பொறந்தேன் எங்கள் அப்பன் கெனக்கா சிவீன்டு பொறந்திருக்க கூடாது. அடிக்கடி சலிச்சுகிட்டா.

வாசல எட்டி பார்த்துச்சு கறுப்பு பூனை. அழகு எதுனு தெரியாத மனுச மனசு தான் கண்ண வச்சு தான் எடை போடுது.

விடிஞ்ச காலையா பொலபொலனு அவள் மனசும் விடியுது. கிடுகுல இருந்த சீப்ப எடுத்து” அருவியா வளைஞ்சு நெளிஞ்சு” போன முடியை சடையா மாத்திகிட்டா.

“கறுத்த முகத்துல செவத்த பொட்ட இட்டுகிட்டா. குழைஞ்ச சோறா அவள் நடை கொழையுது வழியுது.”

இந்தா வந்துட்டா காட்டுக்கு. மழையில ஒதுங்குன செத்தையா கால் மேல போகாமல் தயங்கியே நிக்குது.

தூரத்துல நின்னுக்கு இருந்தவன கண்ணு அளக்க மெல்ல முன்னேறி போனா.

அங்க நின்னு பேசிக்கு இருந்ததை காது கேட்க அங்கனயே நின்னுட்டா. “என்னாடா அந்தக் கருவண்டு ஒன்னயே சுத்திகிட்டு வருது?

“எல்லாம் தெரியும்டா. இன்னைக்கு என் முன்னாடி இளிச்சுகிட்டு வந்து நிப்பா பாரு “அப்ப அவள் மூக்க ஒடைக்கிறேன் பாரு”னு சொல்லி சிரிச்சான்.

வெட்கம் புடுங்கி தின்னிருச்சு. கண்ணு தேங்கிய குளமா நெஞ்சு வெடிச்சு விம்மல் வருது. அழுதற கூடாது னு
அடக்கிகிட்டா.

பார்த்து சிரிச்சவன திரும்பியும் பார்க்கல. “இந்தா வந்துர்ரேன்”னு வெரசா வீட்ட பார்த்து நடந்தா.

கறுப்பு பூனை அவளுக்காக காத்து இருந்தது. கையில கெடச்ச கல்ல எடுத்து விட்டெரிஞ்சா “மியா..யா.”னு கத்திகிட்டே போயிருச்சு பாவம்.

“யப்பா ஒன்னய மாதிரி மனுசன் இங்க யாரும் இல்ல. இந்த இருட்டு உலகத்துல என்னைய ஒத்தையில விட்டுட்டு போயிட்டியே பா” னு கதறி அழுகுறா பூவாத்தா.

அந்தக் கறுப்பு பூனை மட்டும் எட்டி பார்த்துச்சு. அதுக்கு இவள் சோகம் நல்லா புரிஞ்சிருக்கு குயில் கூட இவள் சோகத்துக்கு எசையா பாட ஆம்பிச்சிருச்சு.

– இரா.கலையரசி.

கோடுகள் கவிதை – ச.சக்தி

கோடுகள் கவிதை – ச.சக்தி




இறந்த
உடல்களை
வேக வைத்துக்கொண்டிருக்கும்
தாத்தாவின்
வயிற்றில்
நெருப்பாக எரிகிறது
நெளியும் புழுவாகிய பசி,

கிழிந்த
செருப்புகளைத்
தைத்துக் கொண்டிருக்கும்
அப்பாவின் கைகளில்
நெளிய ஆரம்பிக்கிறது பலரது பாதங்களுக்கான
பாதைகள்,

தேநீர்க் கடையில்
யாரோ குடித்து
வைத்த தேநீர்க் குவளையைக்
கழுவ முற்படும்
சிறுவனின்
கண்களில்
வழிய ஆரம்பிக்கிறது
குடும்பத்தின் வறுமை,

வேகமாக சென்று
கொண்டிருந்த
இருசக்கர வாகனத்தில்
அடிப்பட்டு
இறந்து போன
அணில் குஞ்சின்

தலையில்
வரையப் பட்டிருக்கிறது
நில்,கவனி,செல் என்ற
மூன்று மந்திர கோடுகள்,

கவிஞர் ச.சக்தி ,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,
9791742986,

Italian Telephone Stories (Kaithadi race) Webseries 4 Written Gianni Rodari in tamil Translated by Ayesha Natarasan தொடர் 4: ஜானி ரொடாரியின் இத்தாலிய தொலைப்பேசிக் கதைகள் கைத்தடி ரேஸ் - தமிழில்: ஆயிஷா. இரா. நடராசன்

தொடர் 4: ஜானி ரொடாரியின் இத்தாலிய தொலைப்பேசிக் கதைகள் (கைத்தடி ரேஸ்) – தமிழில்: ஆயிஷா. இரா. நடராசன்



கைத்தடி ரேஸ்

அந்த சிறுவனின் பெயர் கிளாடியோ. அவனுக்கு உங்கள் வயதே இருக்கும். ஆனால் பெரும்பாலும் தனியாகத்தான் விளையாடுவான். கையில் கிடைக்கும் எல்லா பொருட்களும் அவனது நண்பர்கள் ஆகிவிடும். சில சமயம் வெறும் கைகளே அவனோடு விளையாடும்.

கொஞ்சம் சூரியஒளி…. அப்புறம் அவனது கை. அதுவே மான், நாய், பருந்து, வாத்து என நிழல் விளையாட்டு மிக அற்புதமாக இருக்கும்.

ஆனால் இப்போது அவனிடம் ஒரு விளையாட்டு பொருள் உண்டு. கைத்தடி அது மேலே வளைந்து கொக்கி வடிவில் இருந்த மூங்கில் தடி. அதை அவனும் ஆரம்பத்தில் சாதாரணமாகத்தான் நினைத்தான்.

இன்று காலையில்தான் அது அவன் கைக்குக் கிடைத்தது. எப்படி தெரியுமா.

அவன் வீட்டு வாசலில் ஒரு புன்னை மரம் உண்டு அதனடியில் நிழலாக இருக்கும் அங்கே அணில்கள் உண்டு. அவன் அவற்றின் ஓட்டங்களை கண்டு அவற்றை விரட்டி விளையாடினான்.

அப்போது வீதிவழியே ஒரு தாத்தா நடந்து போனார். கிளாடியோ அவரைப் பார்த்ததே கிடையாது. அவர் உயரமாக இருந்தார். பனித்தொப்பி அணிந்து இருந்தார். தோல் ஷீ அணிந்திருந்தார். அவர் கையில் தான் அந்த கைத்தடி இருந்தது. சிவப்புநிற கைத்தடி.

அவரை பார்த்து அவன் வணக்கம் என்றான். அவனிடம் அந்த நல்லப் பழக்கம் இருந்தது. வயதானவர்களைப் பார்த்தால் வணக்கம் தெரிவிப்பது.

தாத்தா பதிலுக்கு ‘வணக்கம்… தம்பி இன்றையநாள் உனக்கு சிறப்பாக அமையட்டும்’  என்று கூறி அந்த கைத்தடியை அவனிடம் கொடுத்தார். 

‘இந்தா… விளையாடிக் கொண்டிரு… நான் திரும்பி வரும் வரை விளையாடு’ என்று கூறினார்.

பிறகு அவர் நடந்து சென்றுவிட்டார்.

கிளாடியோ தன் கையில் இருந்த கைத்தடியை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டிருந்தான். 

முதலில் இப்படியும் அப்படியும் சுழற்றினான். வளைந்த மேல் முனையை கையில் பிடித்து அதை முழுவட்டமாக காற்றில் சுழல வைத்தபோது… பறக்கும் உணர்வு ஏற்பட்டது.. அந்தக் கைத்தடி ஒரு மாயக் கைத்தடியாக கிளாடியோவின் விளையாட்டு உலகில் மாற்றம் அடைந்தது இப்படித்தான்.

கைத்தடியை வளைந்த முனை முன்னே இருப்பது போல் பிடித்து அதன்மேல் உட்காருவது போல இருகால்களுக்கு நடுவே விட்டான்…என்ன அதிசயம் அது குதிரையாக மாறியது.

அவனை சுமந்து அது அந்தக்குதிரை கடக் கடக்…. கடக் கடக் என்று வட்டப்பாதையில் ஆரம்பத்தில் மித வேகத்திலும் பிறகு… அதிவேக குதிரையாகி மின்னல் வேகத்தையும் எட்டியது.. எத்தனையோ தொலைவு அவன் வந்துவிட்டிருந்தான்.

அவனது கால்கள் தரையை உணர்ந்தபோது ரொம்ப சாதுவாக பழையபடி கைத்தடியாகி இருந்தது.

இருமுறை காற்றில் முன்புபோல சுழற்றினான். பிறகு அதேபோல கால்களுக்கு நடுவே வைத்து பிடித்தான். என்ன அதிசயம். அது அவனது சைக்கிளாகி இருந்தது. கிளிங்… கிளிங்… அவன் மணி ஒலித்தபடியே அந்த சிவப்புநிற அழகு சைக்கிளில்  ஒய்யாரமாக வலம் வந்தான் கடைவீதி வரை சென்றான். பிறகு பள்ளிகேட் வரை போனான். அப்புறம் ஊரின் எல்லைவரை சென்று தொட்டுத்திரும்பினான். கிளி…. கிளிங்.. கிளி..கிளிங் சத்தம் அடுத்த பலமணிநேரங்கள் ஒலித்துக்கொண்டே இருந்தது.

கால்கள் தரையை உணர்ந்தபோது அது பழையபடி கைத்தடியாக மாறியது. இப்போது மூன்று முறை அதை காற்றில் வட்டமிட சுழற்றினான்.

இந்தமுறை அவனது கால்களுக்கு நடுவே அவன்பிடித்து அமர்ந்தபோது அவனுக்கு ஒரு ரேஸ்கார் கிடைத்தது. நீள்வட்டப்பாதையில் மற்ற ரேஸ்கார்களை முந்தியபடியே விர்… ரூம்… என்று கிளாடியோவின் சிவப்புநிற ரேஸ்கார் சென்றது.

விர்…. ரூம்…. விர் ரூம்… அவ்வளவுதான் அது முடிவுக்கோட்டை தொட்டு முதலிடம் பிடித்தது….. அரங்கமே  எழுந்து நின்று பலத்த கரவொலி மூலம்  ஆரவாரமிட்டு வாழ்த்தியது…. கிளாடியோ முகம் சிவக்க தலைதாழ்த்தி கோப்பையை ஏற்றான்.

அடுத்தமுறை அதே கைத்தடி என்னவாக மாறியது தெரியுமா… விண்வெளி ராக்கெட்டாக மாறியது. விர் ரூட்…. அவன் நொடியில் விண்வெளியில் இருந்தான். சூரியக் குடும்பத்தின் எல்லா கோள்களின் வழியாகவும் அவனது விண்வெளி ஊர்தி பயணித்தது.

சிவப்புக்கோளான செவ்வாய் கிரஹம். பிரமாண்ட கோளான வியாழன் கிரஹம், பளபளத்து மின்னும் வெள்ளி கிரஹம் பிறகு அந்த விண்வெளி ஊர்தி சனிக்கோளின் வளையம் வழியே வழுக்கியபடி ஓடியது.

கிளாடியோ வகுப்பில் கற்றதை எல்லாம் நேரில் அனுபவித்துக் களித்தான்.

கால் தரையை உணர்ந்த போது. அவன் எதிரே அந்த தாத்தா நின்று கொண்டிருந்தார்.

கைத்தடியை திரும்பப் பெற்றுக் கொள்ள வந்து விட்டார் என்று நினைத்தான் கிளாடியோ.

அவனுக்கு எரிச்சலும் ஏமாற்றமும் ஏற்பட்டது.

கைத்தடியை இறுகப் பற்றிக்கொண்டான்.

‘தரமுடியாது…’  என்பதுபோல அதை மார்போடு அணைத்தான்.

‘உனக்கு அதை பிடித்திருக்கிறதா’ அவர் கேட்டார்.

‘ரொம்ப… பிடித்திருக்கிறது’ பதட்டத்தோடு சொன்னான் கிளாடியோ.

‘நீயே … அதை வைத்துக்கொள்ளலாம்… எனக்கு அது இனிதேவை இல்லை’ என்றார் அந்த பனித்தொப்பி தாத்தா..

அவன் ஆச்சரியத்தோடு பார்த்து நிற்க அவர் நடந்து போய்விட்டார். தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அவன் உணர்ந்தான்.

ஆனால் எவர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார் என்பதை அவன் உணரவில்லை.

உலகிலேயே சந்தோஷமான முதியவர்கள் யார் தெரியுமா.. குழந்தைகளுக்கு ஏதாவது ஒன்றை பரிசாக அளித்து அவர்களின் முக மலர்ச்சியை கண்டு ரசிப்பவர்கள்தான்.

Italian Telephone Stories (Prif Prof Pruf) Webseries 3 Written Gianni Rodari in tamil Translated by Ayesha Natarasan தொடர் 3: ஜானி ரொடாரியின் இத்தாலிய தொலைப்பேசிக் கதைகள் பிரீஃப், பிராஃப், புரூஃப் - தமிழில்: ஆயிஷா. இரா. நடராசன்

தொடர் 3: ஜானி ரொடாரியின் இத்தாலிய தொலைப்பேசிக் கதைகள் (பிரீஃப், பிராஃப், புரூஃப்) – தமிழில்: ஆயிஷா. இரா. நடராசன்



பிரீஃப், பிராஃப், புரூஃப்

அவர்கள் விதவிதமாக விளையாடுவார்கள் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டு சிறார்கள் அவர்கள் அவன்பெயர் பெலூட்டி. ஆறு வயது  2 மாதம். அவள் பெயர் மெலன். எட்டுவயது 3 மாதம்.

ஒரு நாள் அவர்கள் புதிதாக ஒரு பொம்மையை செய்தார்கள். அதை பார்த்து அதுபோலவே இன்னொரு பொம்மையை செய்தார்கள்… அன்று முழுவதும் பொம்மை செய்யும் விளையாட்டு விளையாடினார்கள்.

பிறகு ஒரு நாள் கட்டம் வட்டம் என்று ஒரு புதிய விளையாட்டை கண்டுபிடித்தார்கள். குடியிருப்பு அடுக்குமாடிகள் படிக்கட்டுகள் பாதைகள் எங்கும் சாக்கு கட்டியால் கட்டம் – வட்டம் வரைந்து தள்ளினார்கள்.

பெலூட்டியிடம் ஒரு மூங்கில் கழி இருந்தது. மெலனிடம் நான்கு தேங்காய் மூடி சில்லுகள் இருந்தன… உருவானது கழிவண்டி.. இந்த வண்டி விளையாட்டு ஒருவாரம் ஓடியது.

அப்புறம் காற்றில் எழுதும் விளையாட்டு இரண்டுவாரம் தொடர்ந்தது. மெலன் ஏதாவது ஒரு சொல்லை தனது குட்டி ஆள்காட்டி விரலால் காற்றில் எழுதுவாள்…. பெலூட்டி அதை கண்டறிந்து சத்தமாக அறிவிப்பான் முதலில் வெறும் எழுத்துக்களாக தொடங்கிய விளையாட்டு அது. பெலூட்டி வாக்கியமே எழுதுவான். அதை மெலன் வாசித்து கண்டுபிடித்து அறிவிப்பாள்.

மூன்று வாரம் ஓடிய விளையாட்டு அதைவிட வினோதமானது. அதற்குப்பெயர் ‘ நண்பர்கள்‘ விளையாட்டு  நண்பர் விளையாட்டு  பற்றி குடியிருப்பில் கூட பேசிக் கொண்டார்கள். விலங்குகளின் ஒலியை அவர்கள் பரிமாறிக்கொண்டார்கள். பெலூட்டி  மாடுமாதிரி கத்துவான். மெலன் ஆடு போன்று கத்துவாள் . அவை ஒன்றை ஒன்று எதுவும் செய்யாது. மயில்…. குயில் …. காக்கை ….. குருவி. எலி , அணில் இப்படி ஒன்றை ஒன்று கொன்று சாப்பிடாதவைதான் ‘நண்பர்கள்‘ மான்போல ஒருத்தர் கத்திட நீங்கள் புலிபோல கத்திவிட்டால் அவுட்.!  அணில் போல கீரிச்சிட்டு மற்றவர் காக்காபோல கத்தினாலும் அவுட். மூன்று வாரம்…. இருவரில் ஒருவரும் அவுட் ஆகாத நிலையில் ஆட்டம் சலித்தது.

அப்புறம் ஒருநாள், ஒரு மாதமும் கடந்து ஓடிய ஒரு விளையாட்டை அவர்கள் கண்டுபிடித்தார்கள். அந்த விளையாட்டு இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. அது ஒரு கற்பனை விளையாட்டு.

அந்த குடியிருப்பு கட்டிட வீடுகளில் மாடிகள் உண்டு எதிர்எதிர் மாடிகளில் வயதான இருவர் வசித்தனர். கே பிளாக் மாடியின் வெளி-மாடத்தில்  ஒரு மூதாட்டி எப்போதும் உட்கார்ந்திருப்பார். அவர் குளிர்கால கோட்-ஸ்வெட்டர் பின்னியபடியே இருப்பார். ஆனால் அவர்கள் விளையாடுவதை நிறைந்த புன்னகையோடு வேடிக்கை கபார்த்ததபடியே இருப்பார்.

அதற்கு நேர் எதிரே எஸ் –பிளாக் – வெளிமாடத்தில் ஒரு தாத்தா எப்போதும் உட்கார்ந்திருப்பார். ஒரு தடி புத்தகத்தை படித்தப்படியே இருப்பார். அவரும் அவர்கள் விளையாடுவதை கவனித்த படி இருந்தார்.

அவர்களது புதுவிளையாட்டு இருவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அவர்கள் ஒரு புதிய மொழியை கண்டுபிடித்து இருந்தார்கள்.

‘பிரீஃப்… பிராஃப்’ என்றாள் மெலன்

‘புரூஃப்… புரூஃப்’ என்றான் பெலூட்டி

பிறகு இருவருமாக சேர்ந்து கலகலவென்று சிரித்தார்கள்.

தாத்தா எரிச்சல் அடைந்தார்.

பாட்டி .. புன்னகைத்தார்.

‘என்ன விளையாட்டோ… ஒரே கூச்சல்’ என்று முகம் சுழித்தார் தாத்தா.

‘இது…கூட புரியவில்லையா… என்ன அழகான விளையாட்டு’ என்றார் பாட்டி.

‘அவர்கள் உளறியது… ஏதாவது புரிந்ததா’ தாத்தா குரல் உயர்ந்தது… ‘ஹீம்…’ 

’ஏன் புரியாமல்?’ – இது பாட்டி

‘என்ன புரிந்தது’? – தாத்தா விடவில்லை.

‘மெலன் சொன்னது பிரீஃப் பிராஃப்… ஆகா என்ன அழகான நாள்…. என்று அர்த்தம்.. அதற்கு புரூஃப்.. புரூஃப் என்று பெலூட்டி பதில் அளித்தது… நாளையும் இனியைமான நாளாகவே இருக்கும் என்று அர்த்தம்’ என்றார் பாட்டி. 

தாத்தா அதற்கும் முகம் சுழித்தார். அதற்குள் குழந்தைகள் ஆடுத்த பதத்திற்கு தாவின.

இம்முறை பெலூட்டி

‘பிராஸ்கி …. பிப்ரிமாஸ்கி’ என்றான் அதற்கு மெலன்

’புரூஃப்.. புராஃப்’ என்று பதில் அளித்தாள்.

இருவருமே மனம் விட்டு சிரித்தார்கள்.

தாத்தா …. கடுப்பானார்…. பாட்டியை பார்த்து ‘இதுவும் புரிந்தது என்று உளறப் போகிறாயா’ என்றார்.

‘ஏன் புரியாமல்’ என்றார் பாட்டி பிறகு தனக்கு புரிந்ததை சொல்லத்தொடங்கினார்.

‘பெலூட்டி சொன்னது பிராஸ்கி… பிப்ரிமாஸ்கி அப்படியென்றால்… இந்த உலகில் வாழ எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது என்று அர்த்தம்.

‘ஓ …. என்றார் தாத்தா கேலியாக 

‘அதற்கு மெலன் ’புரூஃப்.. புராஃப்’ என்று பதில் சொன்னாள்.  அதற்கு இந்த உலகம் மிக அழகானது என்று அர்த்தம்..’ 

‘இந்த உலகம் அழகானதா…’ என்று அப்போதும் நம்பிக்கை அற்று கேட்டார் தாத்தா.

தன் குளிர்கோட்டு பின்னலை தொடர்ந்தபடி பாட்டி பதில் சொன்னாள் ’புரூஃப்.. புராஃப்’