இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 10 பி.வி.நரசிம்ம ராவின் பொருளாதாரச் சீர்திருத்தங்களும் – வேளாண்மையும், பாகம் – 2 பேரா.பு.அன்பழகன்
நரசிம்ம ராவ் பிரதம மந்திரியாக இருந்தபோது எட்டாவது ஐந்தாண்டு திட்டம் (1992-93 முதல் 1996-97) நடைமுறைப்படுத்தப்பட்டது. வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யவும், உற்பத்தித் திறன் அனைத்துப் பகுதிகளிலும் சமமாக அதிகரிக்கவும், பசுமைப் புரட்சி இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளிலும் தீவிரமாக நடைமுறைப்படுத்தவும், வறண்ட நிலப் பரப்பில் வேளாண்மைச் சாகுபடியினைச் செய்யவும், எண்ணெய்வித்துக்கள் அதிகமாக உற்பத்தி செய்யவும் உத்திகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. கிராமப்புற வறுமைக்கான முக்கியக் காரணம் விவசாயிகளிடையே நிலமற்றத் தன்மையாகும் என்றும் எனவே நிலச் சீர்திருத்தத்தை வேகப்படுத்த அரசு முயற்சிகள் மேற்கொண்டது. கிராமப்புறங்களில் நிலவும் வலுவற்ற உள்கட்டமைப்பே அவற்றின் பின்தங்கிய நிலைக்கான காரணமாகக் கருதப்பட்டு அவற்றை மேம்படுத்த 1995-96ல் தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியானது (RIDF) கிராமப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியை (NABARD) உருவாக்கியது. இதன்படி கிராமப்புறக் கட்டமைப்பினை மேம்படுத்த முன்னுரிமை அடிப்படையில் வேளாண்மைத் துறைக்குக் கடன் வழங்கியது (Chnandra Shekhar Prasad 2009).
நரசிம்ம ராவின் பொருளாதாரச் சீர்திருத்த உத்தியில் ஒன்றானதாக வேளாண் உற்பத்தி பொருட்களின் கொள்முதல் விலையினை உயர்த்தியதாகும். இது உழவர்கள் வேளாண் விளைபொருட்களின் உற்பத்தியினை அதிகரிக்க ஊக்கப்படுத்தியது. வேளாண் உற்பத்தி பொருட்கள் தங்கு தடையின்றி வணிகப் போக்கிற்கு வழிவகைச் செய்யப்பட்டது. ஏற்றுமதிக்கான ஒதுக்கீட்டில் தளர்வு செய்யப்பட்டது.
விவசாயக் கடன்களை திரும்பப் பெறுவதற்காக விவசாயிகளின் வருமானம் அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இவற்றின் விளைவால் பெரிய விவசாயிகள் அதிக அளவிற்கு பயனடைந்து லாபம் ஈட்டினர். 1991-92ல் வேளாண் வளர்ச்சி எதிர்மறையாக 2 விழுக்காடு இருந்தது 1993-94ல் 4.9 விழுக்காடாக அதிகரித்தது. வேளாண் பொருட்கள் ஏற்றுமதியானது ரூ.700 கோடியாக 1990-91ல் இருந்தது ரூ.10840 கோடியாக 1993-94ஆக அதிகரித்தது. அதேசமயம் வேளாண்மையின் மீதான முதலீட்டில் தேக்க நிலை காணப்பட்டது.
முதல் கட்டப் பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்டபோது அப்போதைய பிரதமரான இந்திரா காந்தி கிராமங்களை நோக்கிய உத்திகளை நடைமுறைப்படுத்தினார். இதன்படி வேளாண் இடுபொருட்களான மின்சாரம், உரம் போன்றவற்றுக்கு மானியம் வழங்கப்பட்டது. 1991-92ல் இம்மூன்று இடுபொருட்களின் மானியமானது ரூ. 122.6 பில்லியன் ஆகும் (இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.22 விழுக்காடு) இது 1995-96ல் ரூ.279.4 பில்லியனாக அதிகரித்தது (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.62 விழுக்காடு ஆகும்). இம்மூன்றுக்கு வழங்கப்பட்ட மானியத்தில் பாதி அளவிற்கு மின்சாரத்திற்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1970ல் நாட்டில் 35 விழுக்காடு கிராமங்களும், 1990ல் 90 விழுக்காடு கிராமங்களும் மின்சார வசதியினைப் பெற்றது (தற்போது 100 விழுக்காடு கிராமங்கள் மின்சார இணைப்பு பெற்றுள்ளது). இதன் விளைவு வேளாண்மையில் மின்சாரப் பம்ப் செட்டுகள் பயன்பாடு; அதிகரித்தது. அதுவரை பயன்பாட்டிலிருந்த கால்வாய் பாசனம், குழாய் நீர்ப் பாசன முறைக்கு மாற்றமடைந்தது. இதனால் விவசாயத்தில் விரிவாக்கம் அதிகமாக நடைபெற்றது. அதேசமயம் மின்சார பம்ப் செட்டுகளின் அதிக பயன்பாட்டால் நிலத்தடி நீர் வெகுவாக உறிஞ்சப்பட்டு நீர்ப்பாசன பற்றாக்குறை ஏற்பட்டது. பீகார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இரண்டாம் கட்ட பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்டபோது நெல் பயிர் செய்யும் பகுதிகள் பயன்பெற்று உற்பத்தி பெருகியது. வேளாண் உற்பத்தி உயர்ந்ததால் இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் 1970களுக்கும் 1990களுக்கும் இடையில் 2லிருந்து 4 விழுக்காடு வளர்ச்சியினை கண்டது. இதனால் பஞ்ச காலங்களில் உணவு இறக்குமதி தவிர்க்கப்பட்டது. பசுமைப் புரட்சியின் விளைவால் 1980களில் வறுமை குறைய தொடங்கியது. குறிப்பாக 1990களில் வறுமை பெருமளவிற்கானதாகக் குறைந்தது. வேளாண் இடுபொருட்களின் விலைகளும் (குறிப்பாக ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, விதை) கடுமையாக உயர்ந்தது. இதனால் விவசாயிகளின் வருமான இழப்பையும், கடன் அதிகரிப்பையும் எதிர் கொண்டனர். குறு, சிறு விவசாயிகள் இடுபொருட்களின் விலை ஏற்றத்தால் சாகுபடி செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டதால் பெருமளவிற்கு வேளாண் பணிகளைத் தவிற்று வேளாண் சாராத் தொழில்களை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினர். இதன் விளைவு பெரிய முதலாளிகள், மனை வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள், அரசியல்வாதிகளின் கைகளில் விளைநிலங்கள் மாறின. விளைநிலங்கள் பெருமளவிற்குச் சாகுபடியற்ற நிலங்களாக மாறத் தொடங்கியது. நிகர விளைநிலங்களின் பரப்பு குறையத் தொடங்கியது.
அரசு பஞ்ச காலங்களில் புதிய உத்தியினைக் கையாண்டு உணவு தானிய ஏற்றுமதிக்குத் தடை விதித்தது. பன்னாட்டு அளவில் வேளாண் விளைபொருட்கள் விற்பனை செய்வதால் அதிக லாபம் பெற இயலும். அவ்வப்போது உணவு தானிய ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்படும் போது உள்;ர் விலைக்கு விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை விற்பனைச் செய்வதால் பெரும் இழப்பினைச் சந்திக்க வேண்டியுள்ளது. உலக வர்த்தக மையத்தின் உருகுவே சுற்றின்படி விவசாய பொருட்களின் சுங்க வரியினைக் குறைத்ததால் வெளிநாடுகளுடன் காய்கறி, பழம், அதிக இறக்குமதி செய்யப்பட்டு சந்தைகளில் வரத்து அதிகமாகி உள்;ர் வேளாண் விளைபொருட்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கியது. இதனால் இந்திய விவசாயிகள் அதிக பாதிப்பினை அன்மைக் காலமாக எதிர்கொண்டு வருகின்றனர். பன்னாட்டு அளவில் அதிக தேவையினை உடைய பாசுமதி அரசி, சோயபீன்ஸ், மலர்கள், பழங்கள் போன்றவை சாகுபடி செய்தால் நல்ல லாபம் கிடைப்பதால் பல விவசாயிகள் பரம்பரைச் சாகுபடி பயிர்களிலிருந்து புதிய வகை பயிர்களுக்கு மாற்றினர் (Tirthankar Roy 2020).
நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது வேளாண்மையின் முக்கியப் பிரச்சனையாக நீர்ப்பாசன பற்றாக்குறை, அதிக அளவில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தியதால் தண்ணீர் உவப்பு தன்மையினை அடைந்தது. இந்தியாவில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கும் நிலையும் இருந்தது. இவற்றால் 6 முதல் 13 மில்லியன் ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டிருந்தது. விவசாயிகளின் கடன் தேவையினை அரசு முழு அளவிற்கு நிவர்த்தி செய்யும் நிலையினை அடையவில்லை. கடனுக்கான மானியம் அதிக அளவிலிருந்தது இதனால் ஆண்டுக்கு ரூ.3000 கோடி ஒதுக்கப்பட்டது. அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் வேளாண்மையின் மீது திணிக்கப்பட்டது (India Today 1995).
புதிய பொருளாதார சீர்திருத்தங்களினால் முதலீடு, தொழில், வேளாண்மை, பணித் துறைகள் ஆகியவற்றில் நேர்மறை வளர்ச்சியினைக் காண முடிந்தது. வேளாண்மையின் வளர்ச்சியானது 1991-92 மற்றும் 1996-97 ஆண்டுகளுக்கிடையே சராசரியாக ஆண்டுக்கு 3 விழுக்காட்டுக்கு மேல் வளர்ச்சியடைந்தது ஆனால் இது தொழில் மற்றும் பணித்துறையினை ஒப்பிடும்போது குறைவான அளவிற்கே இருந்தது. 1991-1996ஆம் ஆண்டுகளுக்கிடையே அந்நிய நேரடி முதலீடு 100 விழுக்காடு அதிகரித்தது. ஆனால் கிராமப்புற வறுமை 1992-93ல் அதிகமாக இருந்தது. இதற்கு முக்கியக் காரணம் இக்காலத்தில் ஏற்பட்ட பஞ்சமாகும். 1993-1998க்கும் இடைப்பட்ட காலகட்டங்களில் சமூகச்செலவு மற்றும் கிராமப்புற வளர்ச்சி செலவானது 10 விழுக்காடு அளவிற்கு அதிகரித்தது. இதனால் வேளாண் கூலி 1992-93 மற்றும் 1993-94ஆம் ஆண்டுகளுக்கிடையே 5 விழுக்காடு அதிகரித்தது. இதே ஆண்டில் 6.3 மில்லியன் மக்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரித்திருந்தது. பணவீக்கம் 1991ல் 17 விழுக்காடாக இருந்தது 1996ல் 5 விழுக்காடாக்க குறைந்தது. உணவு தானிய மானியமானது 1991-92ல் ரூ.28.5 பில்லியனாக இருந்தது 1996-97ல் ரூ.61.4 பில்லியனாக அதிகரித்தது. உர மானியம் 1989-90ல் ரூ.45.42 பில்லியனாக இருந்தது 1995-96ல் ரூ.62.35 பில்லியனாக அதிகரித்தது. 1992ல் 7.3 மில்லியன் ஏக்கர் விளைநிலங்கள் உபரியானது என அறிவிக்கப்பட்டது. இதில் 5 மில்லியன் ஏக்கர் ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனால் 4.7 மில்லியன் விவசாயிகள் பயன் அடைந்தனர். வேளாண் சார்ந்த முக்கியத் தொழிலான கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு வருமானத்தை ஈட்டித் தருவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 1995ல் இந்தியாவில் 69875 கிராமப்புற பால் கூட்டுறவு செயல்பட்டதில் 8.9 மில்லியன் விவசாயிகள் ஈடுபட்டுவந்தனர். இதில் 60 விழுக்காடு விவசாயிகள் குறு, சிறு விவசாயிகள் ஆவார்கள். ‘வெண்மைப் புரட்சி’ என்ற பால் உற்பத்தியினை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கையினை மேற்கொண்டது. இத் திட்டமானது கிராமப்புற வறுமை ஒழிப்பிற்காக நடைமுறைப்படுத்தப்பட்டது (Bipan Chandra et al 2008). வறுமையை ஒழிக்க 1997ல் தகுதியுடையவர்களுக்கான பொது விநியோக முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் வேளாண்மை விளைபொருட்களின் கொள்முதல் அதிகரித்தது.
அட்டவணை: இந்திய வேளாண்மையின் போக்கு
| வேளாண்மை தரவுகளின் விவரங்கள் | 1990-91 | 1995-96 |
| இந்தியாவின் மொத்த மதிப்புக் கூட்டலில் வேளாண்மையினை மொத்த மதிப்புக் கூட்டல் (விழுக்காடு) | 35.13 | 30.61 |
| நிகரச் சாகுபடி பரப்பு (மில்லியன் ஹேக்டேர்) | 143.00 | 142.20 |
| மொத்த சாகுபடி பரப்பு (மில்லியன் ஹேக்டேர்) | 185.74 | 187.47 |
| உணவு தானிய உற்பத்தி (மில்லியன் ஹேக்டேர்) | 68.83 | 64.55 |
| எண்ணெய் வித்துக்கள் (மில்லியன் ஹேக்டேர்) | 13.00 | 13.85 |
| பருப்பு வகைகள் உற்பத்தி (மில்லியன் ஹேக்டேர்) | 13.28 | 11.88 |
| உணவு தானிய ஏற்றுமதி (ஆயிரம் டன்னில்) | 666.60 | 5636.29 |
Source: Akina Venkateswarlu (2021): “Polititical Economy of Agricultural Development in India: Policies, Achievements and Concerns,” Aakar Books, Delhi.
அட்டவணை: வேளாண் சாகுபடியின் பரப்பளவு, உற்பத்தி, உற்பத்திறனின் போக்கு (விழுக்காட்டில் ஆண்டுக்கான வளர்ச்சி😉
| விளைபொருட்கள் | பரப்பளவு | உற்பத்தி | உற்பத்தித் திறன் | |||
| 1980
களில் |
1990
களில் |
1980
களில் |
1990
களில் |
1980
களில் |
1990
களில் |
|
| அனைத்துப் பயிர்களும் | 0.1 | 0.4 | 3.2 | 2.2 | 2.6 | 1.4 |
| உணவு தானியங்கள் | -0.2 | -0.1 | 2.9 | 1.8 | 2.7 | 1.4 |
| உணவல்லா பயிர்கள் | 1.1 | 1.5 | 3.8 | 3.3 | 2.3 | 1.4 |
| நெல் | 0.3 | 0.5 | 3.6 | 1.9 | 3.2 | 1.3 |
| கோதுமை | 0.5 | 1.7 | 3.6 | 3.1 | 3.1 | 1.6 |
| சிறு தானியங்கள் | -1.4 | -1.8 | 0.4 | 0.2 | 1.7 | 2.0 |
| பருப்பு வகைகள் | -0.1 | -0.2 | 1.5 | 1.0 | 1.6 | 1.7 |
| எண்ணெய் வித்துக்கள் | 2.4 | 0.8 | 5.5 | 3.4 | 2.9 | 2.6 |
| கரும்பு | 1.5 | 1.8 | 2.7 | 2.5 | 1.2 | 0.7 |
| பருத்தி | -1.3 | 3.3 | 2.8 | 1.7 | 4.1 | -2.0 |
ource: Uma Kapila et al (2003): “Indian Economy Since Independance,”Academic Foundation, New Delhi.
1950-51 மற்றும் 1994-95ஆம் ஆண்டுகளுக்கிடையே மொத்த சாகுபடி பரப்பானது 132 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 188 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்தது. மேம்படுத்தப்பட்ட விதையானது 1950-51ல் மிகவும் குறைவான அளவில் பயன்படுத்தப்பட்டிருந்தது 1996-97ல் 70 லட்சம் குவிண்டாலாக அதிகரித்தது. உரப் பயன்பாடு இக்கால கட்டத்தில் மிகக் குறைவாக 6900 டன்னிலிருந்து இது 14 மில்லியன் டன்னாக அதிகரித்தது. உரம் ஒரு ஏக்கருக்கு 1950-51ல் மிகவும் குறைந்த அளவில் பயன்படுத்தப்பட்டது 1996-97ல் 77 கிலோவாக அதிகரித்தது. பூச்சிக் கொல்லியானது 2400 டன்னாக இருந்தது 59000 டன்னாக இதே காலகட்டங்களில் அதிகரித்தது. வேளாண்மைக்கான மின்சாரப் பயன்பாடானது 1980-81ல் 15200 மில்லியன் கிலோ வாட்டாக இருந்தது 1995-96ல் 85736 மில்லியன் கிலோ வாட்டாக அதிகரித்தது. 1990-91ல் மொத்த வேளாண்மையின் உள்நாட்டு உற்பத்தியில் அதன் ஏற்றுமதிப் பங்கானது 4.5 விழுக்காடாக இருந்தது 1995-96ல் 8 விழுக்காடாக அதிகரித்தது (Rao et al 2003).
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படாமல் இருந்ததை நரசிம்ம ராவ் பிரதம மந்திரியாக இருந்தபோது உள்ளாட்சி அமைப்புகள் அதிகராம் பெறும் 73 (ஏப்ரல் 24, 1993ல்) மற்றும் 74வது சட்டம் (ஜூன் 1, 1993ல்) கொண்டுவரப்பட்டது. இதன்வழியாக கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தங்களின் தேவைகளை நிறைவுசெய்து கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டது. நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், சாலை போன்ற உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டது. 1988ல் தொடங்கப்பட்ட வேளாண் சூழலியல் வட்டாரத் திட்டமானது முன்னுரிமை நோக்கில் உள்கட்டமைப்பிற்கான முதலீடுகளைச் செய்தது.
நரசிம்ம ராவ் ஆட்சிக்காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது 5.2 விழுக்காடாக இருந்தது இது ராஜீவ் காந்தி (5.7 விழுக்காடு) மற்றும் இந்திரா காந்தி (1980-84 கால கட்டத்தில் 5.5 விழுக்காடு) ஆட்சிக் காலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவானதாக இருந்தது (Montek S Ahluwalia 2018). 1990களில் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்ததால் வறுமையின் அளவு குறைந்தது. அதே சமயம் ஏழைகள் கிராமங்களில் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்துவந்தனர். பொருளாதாரச் சீர்திருத்தங்களின் விளைவு பெருமளவிற்கு நகர்ப்புறங்களுக்குச் சாதகமாக இருந்தது. 1990களில் வேளாண்மை வளர்ச்சியானது மிகவும் குறைவான அளவிற்கே இருந்தது. வேளாண் பயிர் சாகுபடியில் பெரும் மாற்றத்தைக் கண்டது. ஏற்றுமதி வழியாக அதிக லாபம் பெரும் நோக்கில் பழ வகைகள், காய்கறி, பூக்கள் பயிர் செய்ய விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டினர். மற்ற பயிர் வகைகளின் சந்தைப் படுத்துதலின் கட்டமைப்பானது (குறிப்பாக மின்சாரம், சேமிப்பு கிடங்கு, சாலை போன்றவை) வலுவாக இல்லாததால் குறிப்பிடத்தக்க வெற்றியினை பெற இயலவில்லை.
உணவு ஆதாரம் அரசின் கையிருப்பில் (Buffer stock) 40 முதல் 50 மில்லியன் டன் இருப்பிலிருந்தது. இது மக்களுக்கு வழங்க போதுமானதாக இல்லை. பொதுவிநியோக முறையில் கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் இது எளிதாகச் சென்றடைந்தது. பொது விநியோக முறையில் நடைமுறைப்படுத்துதலில் ஊழல் தலைவிரித்தாடியது. கள்ள வாணிபம் வழியாகப் பொதுவிநியோக உணவு தானியங்கள் விற்கப்பட்டன. 20 விழுக்காடு உணவு தானியம் தகுதியான நபர்களுக்குச் சென்றடையவில்லை. பசியும், குறை ஊட்டச்சத்தும் இந்தியாவின் பல பகுதிகளிலும் தீவிரமாகவே இருந்தது. மழைபொழிவு இல்லாததால் பஞ்சம் ஏற்பட்டு இறந்தவர்கள் பற்றிய தகவல்கள் காணப்பட்டது.
நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது இந்தியாவின் ஒரு முக்கிய நிகழ்வாக அப்போதைய வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி உலக வர்த்தக அமைப்பில் கையெழுத்திட்டுத் துவக்க (1995 முதல்) உறுப்பினராக்கியது. இதன்படி வேளாண் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது (இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த காப்பு வரி மற்றும் வணிகம் பற்றிய பொது ஒப்பந்தத்தில் வேளாண்மை இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது). இதன்படி உலக வர்த்தக அமைப்பின் கீழ் உள்ள உறுப்பு நாடுகள் வேளாண்மைக்கு அளித்துவந்த மானியத்தை 10 விழுக்காட்டுக்குக் கீழ் குறைக்க வேண்டும், ஒவ்வொரு நாடும் 3லிருந்து 5 விழுக்காடு நாட்டின் மொத்த வேளாண் பொருட்களின் நுகர்ச்சியின் அளவில் இறக்குமதி செய்ய வேண்டும், பொது விநியோக முறையில் கட்டுப்பாடுகள் விதித்து உண்மையாக வறுமையினால் பாதிக்கப்பட்டோர்களுக்கு உணவு தானியம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியது. வேளாண் ஒப்பந்தத்தில் பசுமைப் பெட்டி (Green Box) மற்றும் நீலப் பெட்டி (Blue Box) என்பதைச் சேர்த்துக்கொண்டது. பசுமைப் பெட்டி என்பது ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுக் கொள்கைகள் ஆகும். நீலப் பெட்டி என்பது வருமான ஆதரவு மற்றும் கால்நடைகள் வரையறுக்கப்பட்ட அளவில் பயன்படுத்தும் திட்டங்கள் ஆகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளின் பொருட்களின் மீது கட்டப்பாடுகளை விதித்தது. இவையனைத்தும் ஜனநாயக முறையில் இல்லாமல் உலக வர்த்தக அமைப்பு கடைப்பிடித்தவையாகும்.
உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தின் வழியாக வேளாண்மையினைப் பொருத்த அளவில் சறுக்கலைச் சந்திக்க வேண்டியிருந்தது. வளரும் நாடுகளில் வேளாண்மையின் முன்னேற்றத்திற்கு பல செயல்பாடுகளைச் செய்து வந்த நிலையில் உலக வர்த்தக அமைப்பில் இணைந்ததால் அதன் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தப்பட்டதால் வேளாண்மை செயல்பாடுகள் குறையத் தொடங்கியது. வேளாண்மைக்கான நிலம் மற்றும் நீர் தவிற்று, விதை, உரம், பூச்சிக்கொல்லி போன்றவற்றுக்கு உலக வர்த்தக அமைப்பின் விதிப்படி காப்புரிமை பெறப்பட்டது. இதனால் காப்புரிமை வைத்திருந்த நிறுவனங்கள் இதன் விலைகளைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் பன்னாட்டு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியது. பல வளரும் நாடுகளின் வேளாண் பொருட்கள் பன்னாட்டு நிறுவனத்தினால் காப்புரிமை பெறப்பட்டது. இவற்றைச் சாதாரண விவசாயிகள் (சிறு, குறு விவசாயிகள்) பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இயல்பாகவே இந்திய விவசாயிகள்; அறுவடையில் பெறப்படும் விளைச்சலின் ஒரு பகுதி தானியத்தை தங்களின் அடுத்த போக சாகுபடிக்காக விதையினை எடுத்தும் பயன்படுத்தும் முறை புழக்கத்திலிருந்து வந்தது. மரபணு மாற்றப்பட்ட விதைகளை விவசாயிகள் தங்களின் விருப்பப்படி பயன்படுத்த இயலாது. குறிப்பிட்ட காப்புரிமை பெறப்பட்ட நிறுவனங்களில் இருந்து விதைகளைப் பெற்றுத்தான் பயன்படுத்த முடியும். புதிதாக உருவாக்கப்பட்ட காப்புரிமையும், சந்தைப்படுத்தும் முறையினால் விவசாயிகள் பெரும் பாதிப்பிற்குள்ளானார்கள். இந்தியா உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தப்படி மூன்று முக்கியச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து. அதன்படி 1) சந்தை அணுகல்: அளவுக் கட்டுப்பாட்டு முறையில் பயன்படுத்தப்படும் சுங்கக் கட்டணத்தை குறைப்பது. 2) உள்நாட்டு ஆதரவு: குறிப்பிட்ட சில உற்பத்தி பொருட்களுக்கு மற்றும் உற்பத்தி சாராத பொருட்களுக்கும் மானியத்தை அடுத்த 10 ஆண்டுகளில் 13.3 விழுக்காடு குறைத்தல். 3) ஏற்றுமதி மானியம்: 2005க்குள் மதிப்பின் அடிப்படையில் 24 விழுக்காடு மானியத்தை குறைத்தல் மற்றும் 14 விழுக்காடு பொருட்கள் அளவின் அடிப்படையில் குறைத்தல் ஆகும். பன்னாட்டு அளவில் இந்திய வேளாண்மைக்கு பெரும் வாய்ப்புகள் உண்டாகும் என எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் பசுமை பெட்டி மற்றும் நீலப் பெட்டி என்ற காரணிகளைப் பயன்படுத்தி சில நிபந்தனைகளை வளரும் நாடுகள் மீது விதித்தது. இதனால் இந்திய வேளாண்மையானது அதிக அளவில் பாதிக்கப்பட்டது. சந்தைப் பொருளாதாரத்தைப் பின்பற்றி கட்டுப்பாடற்ற வர்த்தக நடைமுறையினால் வேளாண் பொருட்களின் விலை குறைந்தது (பன்னாட்டுச் சந்தையில்). இதன் விளைவு இந்தியாவில் பன்னாட்டு வேளாண் விளைபொருட்கள் இந்திய வேளாண் பொருட்களின் விலையினைவிடக் குறைவாகச் சந்தையில் கிடைத்தது. பன்னாட்டுச் சந்தையில் அதிக லாபம் பெற வாய்ப்புள்ள பொருட்களை இந்திய விவசாயிகள் பயிரிட அதிக கவனம் செலுத்தினர். இவர்கள் பெரும்பாலும் பெரிய மற்றும் நடுத்தர விவசாயிகளாக இருந்தனர். ஆனால் குறு மற்றும் சிறு விவசாயிகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். உலக வர்த்தக அமைப்பின் வேளாண்மை ஒப்பந்தத்தால் மொத்த அளவில் விவசாயிகள் அதிக இழப்பினைச் சந்தித்தனர். இதனால் வேளாண்மையிலிருந்து சிறு, குறு, நிலமற்ற விவசாயிகள் பெருமளவிற்கு வெளியேறத் தொடங்கினர்.
1991-92ஆம் ஆண்டைப் பொருத்த அளவில் 1990-91ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் காணப்பட்டது. எனவே அரசு இவற்றைச் சரிசெய்யும் முயற்சியிலிருந்தது. பொருளாதார வளர்ச்சி இவ்வாண்டில் கணிசமாகக் குறைந்தது. இதற்கு அடிப்படையாகப் பகுதி அளவில் வேளாண்மையில் ஏற்பட்ட தோல்வியும், தொழில் வளர்ச்சி குறைந்ததுமாகும். மூன்றில்–ஒருபங்கு மக்கள் வேளாண்மையினைச் சார்ந்து வாழ்ந்தும், அதன் பங்களிப்பானது மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மூன்றில்–ஒருபங்கினை மட்டுமே அளித்தது. வேளாண்மை வளர்ச்சிக்கு முதலீடு, குத்தகைச் சீர்திருத்தம், விவசாய கடன் அளிப்பை அதிகரித்தல், சரியான வேளாண் விலைக் கொள்கை, புதிய தொழில்நுட்பங்களை வேளாண்மையில் புகுத்துதல் போன்றவை கட்டாயத் தேவைகளாக இருந்தது. விவசாய இடுபொருட்களுக்கு வழங்கப்பட்ட மானியக் குறைப்பு நடவடிக்கையினால் இடுபொருட்களின் விலை அதிகரித்தது. அதே சமயம் விவசாயிகளுக்குக் கடன் வழங்கும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் வட்டார வளர்ச்சி வங்கிகள் பெரும் இழப்பில் இயங்கிக் கொண்டிருந்ததால் விவசாயிகளுக்கு போதுமான கடன் வழங்கவில்லை. இதனால் விவசாயிகள் முறைசாரா நிதி அமைப்புகளிடமிருந்து அதிக வட்டிக்குக் கடனை பெற்றதால் கடன் சுமை அதிகரித்தது. அதே சமயம் அரசு 1992-93 வேளாண் விளைபொருட்களுக்குக் கணிசமான அளவிற்கு ஆதார விலையினை அறிவித்தது. 1993-94ல் தடையற்ற வர்த்தக நடைமுறையின் விளைவு வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கத் தொடங்கியது, வேளாண் சார் தொழில்கள் பெருகத் தொடங்கியது. 1993-94ல் வேலைவாய்ப்பு உறுதி திட்டமும் பிரதமர் வேலைவாய்ப்பு திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. 1994-95ல் பருவமழை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கிடைத்ததால் வேளாண் உற்பத்தி அதிகரித்தது குறிப்பாக உணவு உற்பத்தியானது 185 மில்லியன் டன்னை எட்டியது. 1995-96ல் வேளாண்மை உற்பத்தி கணிசமான அளவில் அதிகரித்தது. அரசு பொதுவிநியோக முறையின் வழியாக உணவு தானியங்கள் வழங்க அதிகமாகக் கொள்முதல் செய்ய தொடங்கியதால் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கிடைத்து வேளாண்மையில் லாபம் பார்க்க தொடங்கினர். இது வேளாண் சாகுபடியினை அதிகரிக்க உதவியது. ஆனால் இது நாட்டின் அனைத்துப் பகுதி விவசாயிகளையும் சென்றடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் கடந்த நிலையிலும் 40 விழுக்காடு பயிரிடும் நிலப்பரப்பு மட்டுமே நீர்ப்பாசன வசதியினைப் பெற்றிருந்தது. பெரும்பாலான விவசாயிகள் மழைப் பொழிவினைச் சார்ந்திருந்தனர். நகர்ப்புறங்களில் தண்ணீர் பயன்பாடு பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்பட்டதால் விவசாய நீர் ஆதாரங்கள் பறிபோனது. வறட்சி, பஞ்சம், இடுபொருட்களின் விலை அதிகரிப்பு, கடன் பொறியில் வீழ்ந்தது போன்ற நிலைகளினால் விவசாய தற்கொலைகள் அதிகரித்தது. 1995-2005ஆம் ஆண்டுகளுக்கிடையே 10000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பசுமைப் புரட்சிக்குப்பின் வேளாண்மையில் அதிக அளவிற்கு இயந்திரங்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது, இதனால் வேளாண் தொழிலாளர்கள் வேலை இழப்பினைச் சந்தித்தனர், எனவே இவர்கள் கிராமங்களைத் தாண்டி நகரங்களுக்கு வேலைவாய்ப்பிற்கும், அதிக கூலி பெறவும் புலம் பெயர்ந்தனர். இதனால் குறு, சிறு விவசாயிகளின் நிலங்கள் தரிசு நிலங்களாக மாறியது. வேளாண் சாராத் தொழில்கள் கிராமங்களிலும் அதிகரிக்கத் தொடங்கியது, இதனால் வேளாண் சாரா வருமானம் கிராமப்புறக் குடும்பங்களில் முக்கியப் பங்கினை எடுத்துக்கொண்டது. 1991ஆம் ஆண்டு பொருளாதாரச் சீர்திருத்தினால் இந்தியாவின் ஏற்றுமதி அதிகமாக உருவாகும் என்ற எதிர்பார்த்த நிலையில், இந்திய வேளாண் பொருட்கள் மொத்த ஏற்றுமதியில் 14 விழுக்காடு அளவிற்கே இருந்தது. வேளாண் சாரா பொருட்களின் மீதான தாராளமய நிலையும், வேளாண்மை பொருட்களின் மீது குறைந்த நிலையிலும் உத்திகள் நடைமுறைப்படுத்தப்பட்டதால் வேளாண்மை அதிக அளவிற்குப் பாதிக்கப்பட்டது. இந்திய இறக்குமதிக்கு அதிக மதிப்புடைய பொருட்களின் மீது அதிக சுங்க வரி விதிக்கப்பட்டது. இதனால் உள்நாட்டு உற்பத்திப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டது. 1980களிலும், 1990களிலும் இந்திய வேளாண்மைக்கான ஏற்றுமதி சார்ந்த நிலை காணப்படவில்லை. இக் காலகட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் வேளாண் பொருட்களின் மீது விதிக்கப்பட்டது. வேளாண் ஏற்றுமதிக் கொள்கையால் 1994 முதல் தொடர்ந்து வேளாண் ஏற்றுமதி அதிகரித்தது. இக் கொள்கையால் பல சீர்திருத்தங்கள் (பொருட்களின் வர்த்தகத்துக்கு ஏற்ப எண்ணிக்கையை குறைத்தல், ஏற்றுமதி கட்டுப்பாட்டைத் தளர்வு செய்தல், குறைந்தபட்ச ஏற்றுமதி விலையினை ஒழித்தல் மற்றும் ஏற்றுமதிக் கடன் இருப்பை அதிகரித்தல்) நடைமுறைப்படுத்தப்பட்டது. உலக வர்த்தக அமைப்பின் சட்ட திட்டங்களை வளர்ந்த நாடுகள் வகுத்தது இதனால் இது வளர்ந்த நாடுகளுக்குச் சாதகமாகவும், வளரும் நாடுகளுக்குப் பாதகமாகவும் அமைந்தது. இந்திய வேளாண்மையின் மீதான மானியத்தை குறைந்தது என்பது வளர்ந்த நாடுகளுக்குச் சாதகமான நிலையினை உருவாக்கித் தந்தது. வேளாண்மை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டுப்பாடுகளை நீக்கியது, இதனால் வேளாண்மை ஆராய்ச்சி கிராமப்புற உள்கட்டமைப்பு மீதான அரசின் ஆதரவு நிலைப்பாடு விளக்கிக் கொள்ளப்பட்டது. இதன் விளைவு மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வேளாண்மையின் பங்களிப்பு குறையத் தொடங்கியது. வேளாண் தொழிலாளர்கள் பங்கேற்பு குறைந்தது, வேளாண்மையில் லாபம் பார்க்கும் பயிர் வகைகள் (பழம், காய்கறி, பூக்கள்) பயிரிட தொடங்கினர். இதனால் தனியார் முதலீடு வேளாண்மையில்அதிகரிக்கத் தொடங்கியது. வேளாண்மையில் பொதுத் துறை முதலீடு மற்றும் மானியம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1986-90ல் 7.92 விழுக்காடாக இருந்தது 1991-95ல் 7.26 விழுக்காடாகக் குறைந்தது (Narasimha Reddy et al 2009). வேளாண்மையில் அரசின் முதலீடுகள் குறையத் தொடங்கியது, வேளாண்மையின் நிலைமையினை பெரும் சிக்கலான நிலைக்குக் கொண்டு சென்றது.
– பேரா.பு.அன்பழகன்
இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75: தொடர் – 7 ராஜீவ் காந்தியும் மஞ்சள் புரட்சியும் – பேரா.பு.அன்பழகன்
இந்தியாவின் பொருளாதாரச் சீர்திருத்தத்திற்கு அடித்தளம் அமைத்தவர் ராஜீவ் காந்தி ஆவார். அக்டோபர் 31, 1984ல் இந்திரா காந்தி இறந்ததை அடுத்து பிரதமராகப் பொறுப்பேற்றார். ராஜீவ் காந்தி அமெரிக்கக் காங்கிரஸ் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் போது “நான் இளைஞன், எனக்கு ஒரு கனவு உண்டு, அது இந்தியாவை வலுவான, சுதந்திரமான தன்னம்பிக்கை அடிப்படையில் வளர்ந்து உலக நாடுகளில் முன்வரிசைக்குக் கொண்டு செல்வதற்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாகும்” என்றார். ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியினை அடைய அனைத்து துறைகளின் மேம்பாட்டின் அவசியம், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உண்டாக்கவேண்டும் என்றார். ராஜீவ் காந்திக்கு முன்பாக 35 ஆண்டுகளாக இந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எந்த பெரிய மாற்றமும் அடையவில்லை. எனவே மக்களின் அடிப்படைத் தேவைகளை அளிக்கத் தொழில்நுட்ப மாற்றங்கள் வழியாக இவற்றை அளிக்க முற்பட்டார். தகவல் தொழில்நுட்பம் இவற்றிற்கான அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் இதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
ராஜீவ் காந்தி, தகவல் தொழில்நுட்பம், கணினி மற்றும் மென்பொருள், அணுக்கரு வளர்ச்சி, பாதுகாப்பு, ஆயுத ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, பயங்கர வாதத்தை ஒழிப்பது, ஏழை-பணக்காரர் பேதத்தை அகற்றுதல், அமைதியான வாழ்வினை உறுதி செய்தல், கல்வி மேம்பாடு, சுகாதாரம், அறிவியல் தொழில்நுட்பம், வேளாண் வளர்ச்சி, தொழில் மேம்பாடு, சுயச்சார்பு இந்தியாவினை உருவாக்குதல், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு, நீதி, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, உள்ளாட்சி அமைப்பு போன்றவற்றின் மீது கவனம் செலுத்தினார். இதற்காக பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. நாட்டின் இறையாண்மையையும் நல்லிணக்கத்தையும் காக்கக் கல்வி அவசியம் என்று உணர்ந்த ராஜீவ் காந்தி புதிய கல்வி முறையினைக் கட்டமைத்தார். இனம், ஜாதி, பிறப்பு வருணம், பாலினம், செல்வம், போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு நிகழும் ஏற்றத்தாழ்வுகளைப் போக்கி சமூக நீதியினை நிலைநாட்ட ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தைப் பற்றி பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது, ‘நம்முடைய முதன்மைக் குறிக்கோள் வறுமையினை ஒழிப்பது, சமூக நீதி மற்றும் சுயச்சார்பினை தோற்றுவிப்பதாகும்”. என்றார். பட்டியல் இனத்தவர், பழங்குடியினரின் வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுத்து பெண்களுக்கான அதிகாரம் அளிக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது (Shasi Skumar shingh 2021).
ராஜீவ் காந்தி பிரதம மந்திரியானதும் வி.பி.சிங்கை நிதி அமைச்சராக்கினார். மார்சு 1985ல் தாக்கல்செய்யப்பட்ட நிதி அறிக்கையில் இந்தியப் பொருளாதாரத்தின் மீதிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை நீக்கினார், வர்த்தகத்தில் இறக்குமதியின் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது, ஏற்றுமதி ஊக்குவிக்கப்பட்டது, இயந்திரத் தளவாடங்கள் உற்பத்தி, நூற்பாலைகள், கணினி உற்பத்தி, மருந்து உற்பத்தி போன்றவற்றை பெருக்க எளிமையான உரிம முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. தனிநபர் வரி, நிறுவன வரி குறைக்கப்பட்டது. இம்முயற்சியினால் நாட்டின் உற்பத்தி பெருகியது. நடுத்தர மக்களும், வணிகர்களும் இதனால் அதிகம் பயனடைந்தனர். ஆனால் இடதுசாரி இயக்கங்கள் அரசின் முயற்சிகள் பணக்காரர்களுக்குச் சாதகமானது என்று குறிப்பிட்டது. அரசின் புதிய முயற்சியினால் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவில் நுகர்வுப் பொருட்கள் அதிக அளவில் விற்பனையானது. தொழில் துறை மற்றும் நடுத்தர மக்கள் அதிக அளவில் ராஜீவ் காந்தி ஆட்சியில் பயனடைந்தனர். வறுமை பெருமளவிற்குக் குறைந்தது. அதேசமயம் நாட்டின் சில பகுதிகளில் மழை பொய்த்ததன் காரணமாக வேளாண்மை தோல்வியைக் கண்டு பட்டினி சாவுகள் காணப்பட்டது. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நாட்டின் முக்கிய விவசாயத் தொழிற்சங்கங்களான ஷேத்காரி சங்கதனா (மகாராஷ்டிரா மாநிலம்), இந்திய விவசாயச் சங்கம் (பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள்) துவக்கப்பட்டது (Ramachandra Guha 2017).
கணினி தொழில்நுட்ப வளர்ச்சியினை ஏற்படுத்த அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளுடன் கூட்டு அடிப்படையில் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். கிராமப்புறங்களில் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டைச் சென்றடையச் செய்தார். 1984ல் கணினி கொள்கை அறிவிக்கப்பட்டது. இதன்படி, மென்பொருள் ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதன் மீதான முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கியது. 1986ல் கணினி மென்பொருள் ஏற்றுமதி, வளர்ச்சி மற்றும் பயிற்சி கொள்கை அறிவிக்கப்பட்டது. இதன் விளைவு இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதியானது ரூ.100 கோடியாக 1988ல் அதிகரித்தது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மென்பொருளின் பங்களிப்பு அதிகரித்தது. 1990களில் தகவல் தொழில்நுட்பம் இந்தியா முழுவதும் பரந்து வளர்ந்தது. ராஜீவ் காந்தி இதனால் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தந்தையாகக் கருதப்படுகிறார்.
நடுத்தர மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டார். இந்தியா இதற்கு முன்பு மகாலநோபிசின் உத்திகளை அடிப்படையகாகக் கொண்டு மூலதனப் பொருட்களை உற்பத்தி செய்யும் நோக்கிலே இருந்தது. நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி செய்வதற்கு எந்தவிதத்திலும் ஊக்கமளிக்கவில்லை. இதனை நிவர்த்தி செய்யத் தனியார் துறை சிறந்ததாக இருக்கும் என்ற அடிப்படையில் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டது. தனியார் முதலீடுகள் கொண்டுவர அதற்கான சூழலை உருவாக்கினார். இதற்காக வரிகள் குறைக்கப்பட்டது, முதல் முயற்சியாக இடுபொருட்களின் மீதான மறைமுக வரியும் குறைக்கப்பட்டது. தொழில் தொடங்க உரிமம் பெறும் முறை ரத்து செய்யப்பட்டது. 1987ல் இந்தியப் பத்திரங்கள் மற்றும் மாற்றுக் கழகம் உருவாக்கப்பட்டது. பங்குச் சந்தை முறைப்படுத்தப்பட்டது. தகவல் தொடர்பு அனைவருக்கும் குறிப்பாகக் கிராமப்புறங்களிலும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. இதற்காகத் தனியார்த் துறை முதலீடுகள் ஊக்குவிக்கப்பட்டது. இதனால் வேளாண்மைத் துறை பயன் அடைந்தது.
இந்தியாவை 21ஆம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது அவருடைய நோக்கமாக இருந்தது. இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு அன்னிய முதலீடு தேவையின் அவசியத்தை உணர்ந்தவர், இறக்குமதி மீதான காட்டுப்பாட்டை விலக்கிக்கொண்டார். இந்தியாவின் முக்கியத் துறையான வேளாண்மையினை வேகமாகவும் சீராகவும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகப் பசுமைப் புரட்சியினை மழைமறைவுப் பகுதிகளில் விரிவாக்கம் செய்தார். இதற்காக எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியினை மேம்படுத்தத் தொழில்நுட்ப இயக்கம், பருப்பு வகைகளை உற்பத்தி செய்யத் தேசிய திட்டத்தை முன்னெடுத்தார்.
ராஜீவ் காந்தி காலத்தின் முக்கியமாக வறுமை, பசியின்மை, ஆகியவற்றினை போக்க மாநிலங்களுக்கு இலக்குகளை நிர்ணயித்துச் செயல்பட வலியுறுத்தப்பட்டது. வறுமையில் வாழ்பவர்களுக்குக் குடியிருக்க வீடு கட்டும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. சமூகத்தில் பொருளாதார அளவில் நலிவுற்றவர்களுக்கு வீடுகட்டித்தருதல், குடிநீர் இணைப்பு வழங்குதல், கழிவு நீர் வெளியேற்றம், குளியல் அறை, கழிப்பறை, சாலை விளக்குகள், போன்ற வசதிகள் செய்து தரப்பட்டது (Prabhaakaran 2008). இதற்கு அடித்தளமாகத் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு வங்கிக் கடன், இறக்குமதித் தீர்வையை குறைத்தல், மென்பொருள் ஏற்றுமதி, தொழில் தொடங்க அனுமதி ரத்து, அயல் நாட்டு நிறுவனங்களைத் தொழில் தொடங்க அனுமதி அளிப்பது, கணினி ஏற்றுமதிக்குச் சிறப்பு மண்டலங்களை அமைப்பது போன்றவற்றை முன்னெடுத்தார்.
ராஜீவ் காந்தி இந்திய அரசின் அதிகாரிகள் சாமானிய மக்களுக்கு எதிராகவும் பணக்கார விவசாயிகள், தொழிலதிபர்கள் போன்றவர்களுக்குச் சாதகமான நிலைப்பாட்டை உடையவர்கள் என்றும் எனவே இவர்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது என்ற கருத்திலிருந்தார். இந்த நிலையினைப் போக்க அதிகாரத்தைப் பரவலாக்கக் குறிப்பாகக் கிராமப்புறங்கள் மேம்பாடு அடைய உள்ளாட்சி அமைப்புகளான பஞ்சாயத்து மற்றும் முனிசிபல் உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் அளிக்கும் முயற்சிகளை மேற்கொண்டார்.
வேளாண்மையின் வளர்ச்சிக்கும் வறுமைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. 1980களில் முதன் முதலாக இந்தியாவில் வறுமை குறையத் தொடங்கியது. இதற்கு முக்கியக் காரணம் வேளாண்மையில் அடைந்த உயர் வளர்ச்சியாகும். 1991க்கு பிறகு பொருளாதாரச் சீர்திருத்தங்கள் வர்த்தகம், தொழில், நிதி துறைகளில் மேற்கொள்ளப்பட்டது. இவை மூன்றும் நகர்ப்புறங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். இதனால் 1991க்கு பிறகு நகர்ப்புற வறுமை குறையத் தொடங்கியது. கிராமப்புறங்களில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு (வேளாண் விளைபொருட்கள் உட்பட) நர்புறங்களில் இதற்கான தேவையை அதிகரித்தது இது கிராமப்புற மக்களின் வருவாயினை உயர்த்தி வறுமையின் தீவிரத் தன்மையினைக் குறைந்ததது. 2004-05 மற்றும் 2009-10ஆம் ஆண்டுகளுக்கிடையே கிராமப்புற வறுமை 15 விழுக்காடு குறைந்தது இது நகர்ப்புறங்களில் 5 விழுக்காடாகக் காணப்பட்டது (Pulapare Balakrishna 2022). இதற்கான அடித்தளத்தை ராஜீவ் காந்தியால் வித்திடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அட்டவணை: வேளாண் உற்பத்தி வளர்ச்சி
| வேளாண் பயிர் | 1950-60 | 1960-70 | 1970-80 | 1980-90 |
| நெல் | 4.53 | 2.12 | 1.73 | 4.08 |
|
கோதுமை |
5.79 | 7.73 | 4.15 | 4.29 |
| சோளம் | 7.84 | 3.90 | 0.64 | 3.20 |
| பருப்பு | 3.80 | -0.47 | -1.18 | 2.45 |
| மொத்த உணவு தானியங்கள் | 4.35 | 2.63 | 1.76 | 3.31 |
| எண்ணெய் வித்துகள் | 3.05 | 2.41 | 1.34 | 6.01 |
| கரும்பு | 5.62 | 2.54 | 2.27 | 4.38 |
| பருத்தி | 4.54 | 2.03 | 2.69 | 3.23 |
| சணல் | 5.60 | 0.32 | 2.13 | 1.28 |
Source: GoI (2004): “Agricultural Statistics at a Glance,” Government of India.
1980களில் வேளாண் துறையில் அனைத்து பகுதிகளிலும் வேளாண் உற்பத்தியின் வளர்ச்சி சாதகமாகக் காணப்பட்டது. தென்னிந்திய மற்றும் கிழக்கிந்தியப் பகுதிகளில் பிரதான உணவான அரிசியானது 1980களில் தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. இதற்கு முக்கியமாகத் தொழில்நுட்ப மேம்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு தனியார் துறை நிறுவனங்கள் குறைவான விலையில் தண்ணீர் குழாய்கள் உற்பத்தி செய்யப்பட்டது. இதனால், ஆழ்துளைக் கிணறுகள், குழாய் நீர்ப் பாசனம் பெருமளவிற்குப் பயன் பாட்டிற்கு வந்தது, விவசாயிகள் பாரம்பரிய ரகங்களிலிருந்து நவீன ரகங்கள் பயிர்செய்யத் தொடங்கியது, ஒன்றுக்கு மேற்பட்ட சாகுபடி போகங்கள் செய்யப்பட்டது போன்றவை உணவு உற்பத்தியினை 1980களில் அதிகரிக்க முக்கியக் காரணமாக விளங்கியது. இதன் விளைவு கிராமப்புறங்களில் விவசாயக் கூலி அதிகரித்து கிராமப்புற வறுமை குறையத் தொடங்கியது. இது இந்திய வரலாற்றில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது (Koichi FUJITA ue.org/files/events/Fujita_green_rev_in_india.pdf).
பசுமைப் புரட்சியின் விளைவால் நெல், கோதுமை உற்பத்தி பெருமளவிற்கு அதிகரித்தது ஆனால், சமையல் எண்ணெய்யின் தேவை அதிகரித்த அளவிற்கு எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி அதிகரிக்கவில்லை. ஆண்டுக்குச் சராசரியாக 125 லட்சம் டன் சமையல் எண்ணெய் தேவை இருந்தது ஆனால் இந்தியாவில் 75 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. இதனால் இந்தியா அர்ஜெண்டினா, மலேசியா, பிரேசில், இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்தது. சமையல் எண்ணெய்க்காகச் சூரியகாந்தி, கடுகு, நிலக்கடலை, ஆமணக்கு, நைஜர், ஆளிவிதை போன்ற பயிர்களிலிருந்து சமையலுக்கான எண்ணெய் பெறப்பட்டது. இவ்விளைச்சலை அதிகரிப்பதன் மூலம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய் குறையும். எனவே ராஜீவ் காந்தி மஞ்சள் புரட்சிக்கான அடித்தளத்தினை அமைத்தார். இதன் முக்கிய நோக்கம் புதிய வகை எண்ணெய் வித்து ரகங்களைப் பயன்படுத்தி எண்ணெய் உற்பத்தியினை அதிகரிப்பதாகும். எண்ணெய் வித்து தொழில்நுட்ப இயக்கம் 1986ல் துவக்கப்பட்டது. இதனால் 1985-86ல் 10.8 மில்லியன் டன் சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது 1998-99ல் 24.7 மில்லியன் டன்னாக அதிகரித்தது. 1985ல் எண்ணெய் வித்து சாகுபடி பரப்பு 19.0 மில்லியன் ஹெக்டேராக இருந்தது 1996ல் 26.0 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்தது. இதன்படி 36 விழுக்காடு சாகுபடி பரப்பும், 125 விழுக்காடு உற்பத்தியும் இக்கால கட்டத்தில் அதிகரித்தது. அதிக விளைச்சல் தரும் உயர் ரக விதைகள், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் பொன்ற அடிப்படையில் சாகுபடி செய்ததால் இக்கால கட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு 570 கிலோவாக இருந்தது 926 கிலோவாக அதிகரித்துக் காணப்பட்டது. இத்துடன் 200 மேற்பட்ட விதை ரகங்கள் பயிரிடப்பட்டது. இதனால் இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதியானது 1985ல் ரூ.700 கோடி மதிப்பிற்குச் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது 1995-96ல் ரூ.300 கோடியாகக் குறைந்தது (ICAR 2022). எண்ணெய் வித்து தொழில்நுட்ப இயக்கம் துவக்கப்பட்ட 10 ஆண்டுகளுக்குள் இந்தியா அதிக சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இருந்தது 1993-94ல் சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவினை அடைந்த நாடாக மாற்றமடைந்தது. 1993-94ல் இந்தியா தனக்குத் தேவையான சமையில் எண்ணெய்யில் 97 விழுக்காடு இந்தியாவிலேயே உற்பத்தி செய்துகொண்டது, 3 விழுக்காடு மட்டுமே இறக்குமதி செய்தது. எண்ணெய் வித்துக்களின் வளர்ச்சியானது 1980களில் மற்ற உணவு உற்பத்தியினை விட அதிக அளவிற்குப் பதிவாகியுள்ளது.
ராஜீவ் காந்தி ஆட்சியில் வேளாண் வளர்ச்சிக்காக 1985ல் ஒருங்கிணைந்த பயிர் காப்பீட்டுத் திட்டம் கொண்டுவரப்பட்டது, 1988ல் SAFAL என்கிற அமைப்பு பழம் மற்றும் காய்கறிகள் சில்லறை விலையில் விற்பனை செய்யத் துவக்கப்பட்டது. 1990ல் தேசிய வேளாண்மை அறிவியல் கழகம் தொடங்கப்பட்டது. 1989ல் ஐ.ஆர் 64 என்ற நெல் ரகம் அறிமுகப்படுத்தப்பட்டது, இதுபோல் பாசுமதி நெல் ரகமான புசா பாசுமதி-1 அறிமுகப்படுத்தப்பட்டது.
அட்டவணை: இந்தியப் பொருளாதார வளர்ச்சி (விழுக்காடு – ஆண்டிற்கு)
| பொருளாதாரம் | 1950-1964 | 1965-1979 | 1980-1990 |
| ஓட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி | 3.7 | 2.9 | 5.8 |
| தொழில துறை | 7.4 | 3.8 | 6.5 |
| வேளாண் துறை | 3.1 | 2.3 | 3.9 |
| மொத்த முதலீடுஃஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி | 13.0 | 18.0 | 22.8 |
Source: https://www.princeton.edu/~kohli/docs/PEGI_PartI.pdf
– பேரா.பு.அன்பழகன்
இந்தியாவின் வேளாண் பொருளாதாரம் @75 : தொடர் – 5 இந்திரா காந்தியும் பசுமைப் புரட்சியும் (1966-1977 மற்றும் 1980-1984) பேரா.பு.அன்பழகன்
இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி மறைவிற்கு பிறகு இந்தியாவின் பிரதமராக 1966ல் பொறுப்பினை ஏற்றார். இந்திரா காந்தி பதவி ஏற்பதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் தொடர் பஞ்சம், உணவு கையிருப்பு குறைந்திருந்தது, அதிக அளவிற்கு உணவு இறக்குமதி, அந்நியச் செலாவணி கையிருப்பு வற்றிப்போனது, அதிக அளவில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, விலை உயர்வு போன்றவை காணப்பட்டது. இதனால் சாஸ்திரியால் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகள் கைவிடப்பட்டு பல்வேறு புதிய சீர்திருத்தங்களை இந்திரா காந்தி முன்னெடுத்தார்.
இதன்படி வேளாண் உற்பத்தியினை அதிகரிக்க நீர்ப்பாசன நிலப்பரப்பினை அதிகரித்தல், அதிக அளவிற்கான இடுபொருட்களைப் பயன்படுத்துதல், விவசாய கடன் வசதியினைச் செய்து தருதல், விவசாயிகளுக்குக் கட்டுபடியாகும் விலையினை அளிப்பது, சந்தை படுத்துதலுடன் தொடர்புடையச் சேமிப்பு கிடங்கினை உருவாக்குதல், போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தித் தருதல் போன்றவை ஆகும். நுகர்வோருக்கான உணவு கிடைப்பதற்கு உறுதிசெய்யப் போதுமான அளவிற்குக் காப்பு இருப்பினை (Buffer Stock) ஏற்படுத்துதல், பொதுவிநியோக முறையினை விரிவுபடுத்துதல், சரியான சேமிப்புக் கிடங்குகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் நாடு முழுமைக்கும் பின்பற்றப்பட்டன. வேளாண் உற்பத்திப் பொருட்களுக்குக்கா குறைந்த பட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டது. வேளாண்மையில் புதிய தொழில்நுட்பம், உயர் விளைச்சல் தரும் விதை ரகங்களை மக்கள் இயக்கமாகக் கொண்டு செல்லப்பட்டது. பசுமைப் புரட்சி அரசின் தலையாய முன்னுரிமையாக இருந்தது. எனவே உயர் ரக விதைகள், அரசு மானியங்கள், மின்சார வசதி, நீர் மேலாண்மை, உரம், கடன் போன்றவற்றைப் பெற வசதி செய்து தரப்பட்டது.
அட்டவணை: இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மேற்கொண்ட நடவடிக்கைகள்.
| ஆண்டு | செயல்பாடுகள் |
| 1967 | நாகார்ஜூன சாகர் அணை தெலுங்கானாவில் கட்டப்பட்டது |
| 1968 | இந்தியாவின் முதல் உள்நாட்டு உயர் நெல் விதை ஜெயா அறிமுகப்படுத்தப்பட்டது |
| 1969 | 14 முதன்மை வணிக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாடு கருத்து உருவாக்கப்பட்டது |
| 1970 | காப்புரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. |
| 1971, 1972 | புதிய மாம்பழ வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டது |
| 1980 | 6 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது |
| 1982 | தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி துவக்கப்பட்டது |
| 1984 | தேசிய தோட்டக்கலைக்கு கழகம் தோற்றுவிக்கப்பட்டது |
ஆதாரம்: ICAR, 2022.
இந்தியப் பொருளாதாரம் 1960களின் இடையில் பெரிய பொருளாதார நெருக்கடியினைச் சந்தித்தது. 1965, 1966 ஆகிய இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பருவமழையானது பொய்த்துப் போனது எனவே வேளாண்மையில் தோல்வி ஏற்பட்டிருந்தது. இதனால், தேக்க நிலை காணப்பட்டது. மொத்த வேளாண் உற்பத்தி 17 விழுக்காடும், உணவு தானிய உற்பத்தி 20 விழுக்காடும் குறைந்தது. இதனால் பணவீக்கம் 1965-1968களுக்கிடையே 12 விழுக்காடாக அதிகரித்தது (1963ல் 2 விழுக்காடு மட்டுமே பணவீக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது). இதில் உணவுப் பொருட்களின் விலையானது ஆண்டிற்கு 20 விழுக்காடு அதிகரித்தது. பணவீக்கம், வறட்சி, 1962ல் சீனாவுடன் போர் மற்றும் 1965ல் பாக்கிஸ்தானுடன் போர் போன்றவற்றால் செலவு அதிகரித்தது. அரசின் பற்றாக்குறை உச்ச அளவாக ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.3 விழுக்காடாக 1966-67ல் காணப்பட்டது.
செலுத்து நிலை இருப்பு நிலையானது 1956-57லிருந்து சாதகமற்ற நிலை (வருமானம் குறைவாகவும் செலுத்துதல் அதிகமாகவும் இருப்பது) தொடர்ந்து அதிகரித்து வந்தது. அந்நியச் செலாவணி இருப்பானது 1964-65 மற்றும் 1966-67ல் 340 மில்லியன் அமெரிக்க டாலர் இருப்பாக இருந்தது. இது அடுத்து இரண்டு மாதங்களுக்கு இறக்குமதியினை எதிர்கொள்ளும் அளவிற்கே இருந்தது. இதுபோல் வெளிநாட்டு உதவி முதல் மூன்று ஐந்தாண்டு திட்ட காலங்களில் மட்டுமே அதிகரித்திருந்தது. 1960களில் கடைசிக் காலங்களில் உணவு பற்றாக்குறையினை எதிர்கொள்ள அதிக இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுச் செலுத்து நிலை இருப்பில் பலவீனம் அடைந்தது. 1951-52ல் வெளிநாட்டு நிதி உதவியானது தேசிய வருமானத்தில் 0.86 விழுக்காடாக இருந்தது 1956-57ல் 1.05 விழுக்காடாகவும், 1957-58ல் 2.37 விழுக்காடாகவும், 1960-61ல் 2.86 விழுக்காடாகவும், 1965-66ல் 3.8 விழுக்காடாகவும் அதிகரித்திருந்தது. ஏற்றுமதி-கடனுக்கான ரொக்கம் திரும்பச் செலுத்துதல் மற்றும் வட்டிக்கான விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வந்தது (முதல் ஐந்தாண்டு திட்டத்தில் 0.8 ஆக இருந்தது, இரண்டாவது திட்டத்தில் 3.9 ஆகவும் மூன்றாவது திட்டத்தில் 14.3 ஆகவும், 1966-67ல் 20.6 ஆகவும், 1966-67ல் 27.8ஆகவும் அதிகரித்தது). இதனால் 1966-1969ஆண்டுகளுக்கிடையே ஆண்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதிக அளவிற்கான பணவீக்கம் (விலை உயர்வு), குறைவான அந்நியச் செலாவணி இருப்பு, குறைவான உணவு கையிருப்பு, அதிக இறக்குமதி காணப்பட்டது. அமெரிக்கா, இந்திய-பாக்கிஸ்தான் போரை அடிப்படையாகவும், இந்தியாவானது அமெரிக்க-வியட்நாம் போரில் வியட்நாமிற்கு சாதகமான நிலைப்பாட்டிலிருந்ததால் பி.எல்.480 ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க மறுத்துவிட்டது போன்ற நிலைகள் இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவினைக் கண்டது. அமெரிக்கா, உலக வங்கி, பன்னாட்டு பணநிதியம் போன்றவை வர்த்தக, தொழில் கட்டுப்பாட்டில் சீர்திருத்தம், பண மறுமதிப்பீடு செய்வது, புதிய வேளாண்மை அணுகுமுறை தேவை என வலியுறுத்தியது. எனவே வேளாண்மையில் புதிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டது, பண மறுமதிப்பீடு (36.5 விழுக்காடு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைக்கப்பட்டது), வர்த்தகத்தில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இவை எதுவும் எதிர்பார்த்த அளவிற்கு நிலைமையினை சரிசெய்ய இயலவில்லை. இச்சீர்திருத்தங்கள் நீண்ட காலத்திற்கே பயனளிப்பதாக இருந்து. எனவே அரசு தலையிடும் கொள்கையினை கடைப்பிடித்தது. இதனால் அந்நியச் செலாவணி இருப்பு அதிகரித்தது. வேளாண் உற்பத்தி அதிகரித்ததைத் தொடர்ந்து உணவு கையிருப்பு அதிகரித்து உணவு இறக்குமதியினைச் சார்ந்த நிலை குறையத் தொடங்கியது. அரசு வரியினை அதிகரிப்பதற்குப் பதில் அரசு செலவுகளைக் கட்டுப்படுத்தியது குறிப்பாக மூலதனச் செலவு 1966-67 மற்றும் 1970-71ல் 50 விழுக்காடு குறைத்தது. இதனால் தொழில் வளர்ச்சி சரியத் தொடங்கியது. இது 1970களின் மத்தியில் வரைத் தொடர்ந்தது. 1951 மற்றும் 1966ஆம் ஆண்டுகளுக்கிடையே ஆண்டுக்கு 7.8 விழுக்காடு தொழில் வளர்ச்சி இருந்தது, 1966-1974ஆண்டுகளுக்கிடையே 4.99 விழுக்காடாகக் குறைந்தது.
தொடர்ந்து மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில் பாக்கிஸ்தானுடன் போர் (1965), தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் (1965-66 முதல் 1966-67முடிய) கடும் வறட்சி, 1966ல் ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராகக் குறைந்தது மற்றும் பணவீக்கம் அதிகரித்தது போன்ற காரணங்களால் 1966-67 முதல் 1968-69முடிய ஆண்டு திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டது. 1967-69ல் காங்கிரஸில் உட்கட்சி பிரச்சனையினால் இந்திரா காந்தி வலதுசாரி இயக்கத்தின் உதவியுடன் ஆட்சியினைத் தக்கவைத்துக் கொண்டார். நான்காவது ஐந்தாண்டு திட்டத்தில் (1969-1974) வேளாண்மையில் பல்வேறு சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1971ல் பாராளுமன்ற தேர்தலில் ‘வறுமையை ஒழிப்போம்’ என்ற முழக்கத்தை இந்திரா காந்தி முன்வைத்தார். இத்துடன் பொதுத் துறை வளர்ச்சி, கிராமப்புற நில உச்சவரம்பு, வருமானம் மற்றும் வேலைவாய்ப்புகளில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வினை களைவது, சமஸ்தானங்களின் சிறப்புச் சலுகைகளை ரத்து செய்தல் போன்றவற்றை முன்னிறுத்தித் தேர்தல் பிரச்சாரம் செய்தார். இத் தேர்தலில் இந்திரா காந்தி அமோக வெற்றியினைப் பெற்றார். இதன்பின் நீண்டகால நோக்கில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. 21 ஜூலை 1969ல் 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன, இதே ஆண்டில் முற்றுரிமை கட்டுப்பாட்டு வர்த்தக பயன்பாட்டுச் சட்டம் கொண்டு வந்தது. இதனால் முற்றுரிமை நிறுவனங்கள் கட்டுப்படுத்தப்பட்டது. இதே ஆண்டில் இந்தியச் சமஸ்தானங்களுக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்த்தை விலக்கிக்கொண்டார். 1972ல் காப்பீடு தேசியமயமாக்கப்பட்டது, 1973ல் நிலக்கரி தொழில் தேசியமயமாக்கப்பட்டது. இதே ஆண்டு கோதுமை மொத்த விலை நிலையினை தேசிய அளவில் பின்பற்றப்பட்டது. 1973ல் அன்னியச் செலாவணி மாற்று முறைப்படுத்தல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அயல்நாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டது. அதேசமயம் நலிவுற்ற தொழிற்சாலைகள் அரசு ஏற்று நடத்தக் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. நிலச் சீர்திருத்தத்தையும், நில உச்சவரம்பையும் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தினார். இந்த நடவடிக்கைகளால் பொதுமக்களிடமும் குறிப்பாக ஏழை, நடுத்தர கிராமப்புற, நகர்ப்புற மக்களிடையேயும், இடதுசாரிகளிடமும் நன்மதிப்பினை பெறமுடிந்தது. ஐந்தாவது ஐந்தாண்டு திட்டமானது (1974-1979) உணவு உற்பத்தி மற்றும் எரிசக்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் காரணமாக (ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது) இந்த திட்டம் ஓராண்டுக்கு முன்பே முடித்து வைக்கப்பட்டது.
எல்.கே.ஜா தலைமையில் பொருளாதார, நிருவாக நடவடிக்கைகளை ஆராயவும், ஆபித் உசைன் தலைமையில் வர்த்தகத்தை ஆயவிடவும் குழு அமைத்தால். இதன் பலன் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலமான 1960களின் மத்தியிலிருந்து 1980களின் இறுதி முடிய இந்தியப் பொருளாதாரம் பெருமளவிற்குச் சாதனைகளைக் கண்டது. 1960களின் மத்தியில் கிழக்கு பாக்கிஸ்தான் (தற்போதைய பங்களாதேஷ்) பிரிவினை காரணமாக இனப்படுகொலைகள் நடந்தேறியது. இதனால் 10 மில்லியன் மக்கள் அகதிகளாக இந்தியாவிற்கு வந்தடைந்தனர். 1971ல் பாக்கிஸ்தானுடன் போர், 1972 மற்றும் 1974ல் இரண்டு பஞ்சங்கள், 1973ல் பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது இதனால் இறக்குமதி செலவு அதிகரிக்க தொடங்கியது, பெட்ரோல் விலை இரண்டு மடங்காக அதிகரித்தது, இதனைத் தொடர்ந்து பொருட்களின் விலை உயர்வு, 1978-79ல் சுதந்திரத்திற்குப்பின் கடுமையான பஞ்சம் போன்றவை நிகழ்ந்தது.
இந்திரா காந்தி இந்த அறைகூவல்களை கையாள்வதற்கு பல்வேறு உத்திகளைக் கடைப்பிடித்தார். குறிப்பாக உணவு தட்டுப்பாடு அடிக்கடி ஏற்பட்டு மக்களையும் பொருளாதாரத்தையும் வெகுவாகப் பாதித்தது. எனவே நீண்டகால நோக்கில் பசுமைப் புரட்சியினை 1966ல் நடைமுறைப்படுத்தினார். இதன்படி அதிக விளைச்சல் தரக்கூடிய உயர் ரக விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், இயந்திரங்களை பயன்படுத்துதல் போன்றவை தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. துவக்கத்தில் கோதுமைக்கான புதிய மெக்சிகன் விதைகள் (சோனால 64 மற்றும் லர்மா ரோஜே 64) குறுகிய காலப் பயிர் செய்வது அறிமுகப்படுத்தப்பட்டது பின்னால் இந்தியாவில் புதிய வகை விதைகள் பயன்படுத்தப்பட்டது. இதுபோல் நெல்லுக்கு புதிய உயர் விளைச்சல் தரும் ரகமான ஐ.ஆர் 8, அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விளைவு உற்பத்தி அதிக அளவிற்கு உயர்ந்தது (ICAR 2022). இதன் மூலம் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது, வறுமை ஒழிப்பில் முன்னேற்றம் கண்டது. இந்திரா காந்தி உணவு உற்பத்திக்கு மிக முக்கியத்துவம் கொடுத்த முதல் அரசியல் தலைவராகும். வேளாண்மை மாநில அரசுகளின் பட்டியலில் உள்ளது. அப்போது பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்ததால் பல்வேறு வேளாண்மை சீர்திருத்தங்களை எளிதில் நடைமுறைப்படுத்த முடிந்தது. இதனால் 1967-68 மற்றும் 1970-71ஆம் ஆண்டுகளுக்கிடையே உணவு உற்பத்தி 35 விழுக்காடு அதிகரித்தது. உணவு இறக்குமதியானது 10.3 மில்லியன் டன்னிலிருந்து 3.6 மில்லியன் டன்னாகக் குறைந்தது. உணவு கையிருப்பானது 73.5 மில்லியன் டன்னிலிருந்து 89.5 மில்லியன் டன்னாக இவ்வாண்டுகளில் அதிகரித்தது. இது 1978ல் 110.25 மில்லியன் டன்னாகவும், 1984ல் 128.8 மில்லியன் டன்னாகவும் அதிகரித்தது. இதனால் இந்தியா உணவிற்காக அயல் நாடுகளிடமிருந்து கையேந்தும் நிலைமை மாறி உணவு பாதுகாப்பினை உறுதி செய்தது. உணவுப் பஞ்சம் ஏற்படும் காலங்களில் அவற்றை எதிர்கொள்ளும் துணிவும் உருவானது (Bipan Chandra et al 2008). அதேசமயம் விவசாயிகளிடையே ஏற்றத் தாழ்வு அதிகரித்துக் காணப்பட்டது. இதற்கு முக்கியக் கரணம் பசுமைப் புரட்சியானது வளமான பகுதியான பஞ்சாப் மற்றும் மேற்கு உத்திரப் பிரதேசத்தில் கோதுமையும், ஆந்திரப் பிரதேசம் (பிரகாசம் மாவட்டம்) மற்றும் தமிழ்நாட்டில் (தஞ்சாவூர் மாவட்டம்) பகுதிகளில் புதியவகை நெல் விதை ரகங்கள் மற்றும் செயற்கை உரங்கள் பயன்படுத்தி வேளாண் சாகுபடி செய்தனர். இதன் விளைவு அதிக அளவிற்கு உணவு உற்பத்தி அதிகரித்தது. இதனால் விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் நெல், கோதுமை விலை வீழ்ச்சி அடைந்தது. எனவே விவசாயப் பணிகள் துவக்கும் போது குறைந்த பட்ச ஆதார விலை அறவிக்கப்பட்டது. இக் குறைந்த பட்ச ஆதார விலையானது அதன் செலவுகளை அடிப்படையாகக் கொண்டு அறிவிக்கப்பட்டது. இதைத் தவிர அரசு பொது விநியோகத்திற்காக நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் மையங்கள் வழியாக நெல், கோதுமையினைக் கொள்முதல் செய்தது. இக் கொள்முதல் விலையானது குறைந்த பட்ச ஆதார விலையினை விட அதிகமாக இருந்ததது. விவசாய இடுபொருட்கள் வாங்குவதற்கு வங்கிகள் கடன்களைத் தாராளமாக வழங்கியது. இதனால் விவசாயிகள் லாபம் பார்க்கத் தொடங்கினர். வேளாண்சாரப் பொருட்களின் தேவை அதிகரித்தது, வேலைவாய்ப்பு பெருகியது, வறுமை பெருமளவிற்குக் குறைந்தது. கிராமப்புற மேம்பாடு அடையத் தொடங்கியது. அதே சமயம் வேளாண் இடுபொருட்களில் ஒன்றான தொழிலாளர் கூலி அதிகரித்தது.
பசுமைப் புரட்சியின் ஒரு முக்கிய விளைவு சிறு விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களையும், மேம்படுத்தப்பட்ட விதைகள், இதர இடுபொருட்களை பயன்படுத்தத் தொடங்கியதால் விளைச்சல் பெருகி வருமானம் அதிகரித்தது. இதன் விளைவு நிலமற்ற விவசாயிகள் அதிகரிப்பு அதிக அளவில் குறைந்தது. வேளாண்மையில் வருமானம் அதிகரித்ததால் விவசாயத்தில் அதிக அளவில் ஈடுபடுத் தொடங்கினர். வேளாண் நிலத்தின் தேவை அதிகரித்ததை தொடர்ந்து குத்தகையும் அதிகரிக்கத் தொடங்கியது. அதே சமயம் தொழிலாளர் கூலி அதிகரித்தது, வேளாண்மையில் தொழில்நுட்பங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதால் அதனைச் சார்ந்த தொழில்கள் பெருகியது (டிரக்டர் உற்பத்தி, உரம் மற்றும் பூச்சிக் கொல்லி உற்பத்தி, மோட்டர் பம்பு உற்பத்தி, போக்குவரத்து வாகன உற்பத்தி, வாகன பழுது பார்த்தல்). பசுமைப் புரட்சி குறிப்பிட்ட மாநிலங்களில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதால் விவசாயத் தொழிலாளர்களின் தேவை அதிகரித்தது புலம்பெயரும் விவசாயத் தொழிலாளர்கள் பெருகினர். இதனால் கிராமப்புற வருமானம் பெருகத் தொடங்கியது, வேளாண் சாரா தொழில்களை நோக்கி கிராமப்புறத் தொழிலாளர்கள் நகரத் தொடங்கினர். அதே சமயம் அளவிற்கு அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டது, அதிக அளவிற்கு ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டதால் நிலத்தின் தன்மை குறைந்தது, சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்பட்டது.
இந்திரா காந்தியின் முதல் ஆட்சி காலகட்டத்தில், இந்தியா சுதந்திரம் பெற்று 20 ஆண்டுகள் கழிந்தும் வறுமையின் தாக்கம் குறையவில்லை. 1960களின் மத்தியில் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் கடும் வறட்சி நிலவியது, உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. 1962ல் சீனாவுடன் போர், 1965ல் பாக்கிஸ்தானுடன் போர் இதன் காரணமாகப் பாதுகாப்பு செலவு அதிகரித்தது. இதனால் மேற்கத்திய நாடுகளின் உதவியினைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வறுமையினை போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையில் சுணக்கம் ஏற்பட்டது. இத்துடன் 1960களில் எப்போதும் இல்லாத நிலையில் மக்கள் தொகை அபரீதமாக வளர்ச்சியடைந்தது (1971ல் 548.2 மில்லியன் மக்களில் 80 விழுக்காட்டினர் கிராமங்களிலிருந்தனர். இவர்களில் 68.3 விழுக்காடு வேளாண்மையினைச் சார்ந்து வாழ்ந்தனர், வேளாண்மை தொழிலாளர்கள் 37.8 விழுக்காடாக அதிகரித்திருந்தது). பெரும்பான்மையான தொழிலாளர்கள் பங்கேற்பானது வேளாண்மையினைச் சார்ந்திருந்தது. இவர்கள் அதிக அளவில் வறுமையிலிருந்தனர். இந்திரா காந்தி பிரதம மந்திரியாகப் பதவி ஏற்றவுடன் வறுமையினை குறைப்பதற்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டினார். வறுமை நகர்ப்புறங்களைவிடக் கிராமப்புறங்களில் அதிக அளவிலிருந்தது. இதற்கு முக்கியக் காரணம் கிராமப்புறங்களில் நான்கில் மூன்று பங்கு மக்கள் வேளாண்மையினையும் அதனைச் சார்ந்த தொழிலையும் சார்ந்து வாழ்ந்ததாகும். எனவே வறுமையினை ஒழிக்க ‘கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம்’, ‘சிறு விவசாயிகள் வளர்ச்சி முகவர்கள் திட்டம்’, ‘குறு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் திட்டம்’, ‘கிராமப்புற வேலைவாய்ப்பினை உருவாக்கும் திட்டம்’, ‘வேலைவாய்ப்பு உறுதி திட்டம்’ போன்றவை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டது. சிறு, குறு விவசாயிகளுக்கு முறையே 25 விழுக்காடு மற்றும் 33.3 விழுக்காடு மானியங்கள் வழங்கப்பட்டது. இதனால் விவசாயிகள் பெருமளவிற்கு முறைசார் கடன்களைப் பெற்றனர். இதனால் விவசாயிகளின் வருமானம் பெருகி வறுமை குறைந்தது. வேளாண்மையில் புகுத்தப்பட்ட சீர்திருத்தங்களினாலும், வறுமை ஒழிப்பு திட்டங்களைத் தீவிரமாக நடைமுறைப் படுத்தியதாலும் வறுமையின் தீவிரம் குறைந்தது (Balakrishnan 2022). 1965-66ல் கிராமப்புற வறுமை 53.9 விழுக்காடாக இருந்தது 1977-78ல் 39.1 விழுக்காடகக் குறைந்தது. (Montek Ahluwalia 1985).
ஒட்டுமொத்த பார்வையில் இந்திரா காந்தி தன்னுடைய முதல் காலகட்டத்தில் வேளாண்மை நில உடமையின் மீதான உச்ச வரம்பு குறைக்கப்பட்டது, கண்டறியப்பட்ட உபரி நிலங்களை நிலமற்ற விவசாயக் கூலிகளுக்கும் குறு விவசாயிகளுக்கும் வழங்கும் சட்டத்தைப் பல மாநில அரசுகள் நிறைவேற்ற நிர்ப்பந்திக்கப்பட்டது, சமுதாயத்தில் பொருளாதார நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் குறைந்த விலையில் உணவு தானியம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தியது, சிறுதொழில், விவசாயம், சாலை போக்குவரத்து இயக்குபவர்கள் மற்றும் சுயமாக வேலை செய்பவர்களுக்குக் கடன் கிடைக்க வழிசெய்யும்பொருட்டு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது, இதனால் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் வங்கிக் கிளைகள் தொடங்கப்பட்டது, இதன் விளைவு 1951ல் நிறுவனம் சாரா கடனின் பங்கானது 92.7 விழுக்காடாக இருந்தது 1971ல் 68.3 விழுக்காடாகக் குறைந்தது மாறாக நிறுவனம் சார் கடனின் பங்கானது 7.3 விழுக்காடாக இருந்தது 32.7 விழுக்காடாக இவ் ஆண்டுகளில் அதிகரித்தது (ICAR 2022). 1966-67ல் விவசாயிகள் வங்கிகளிடம் 2.2 விழுக்காடு மட்டுமே கடன் பெற்றிருந்தனர் இது அடுத்த பத்தாண்டுகளுக்குப் பிறகு 9.1 விழுக்காடாக அதிகரித்திருந்தது (Abheek Barman 2016). ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கான கடன் அளவு 1967ல் 8.5 விழுக்காடாக இருந்தது 1984ல் 18.6 விழுக்காடாக அதிகரித்தது (Tadit Kundhu 2016). திட்டக்குழுவினைச் சிறப்பாகக் கட்டமைத்துத் திட்டமிடலைச் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டது என பல்வேறு நடவடிக்கையினை மேற்கொண்டார்.
இந்திரா காந்திக்கு எதிராக ஜெயபிரகாஷ் நாராயண தலைமையில் தேசிய அளவில் ஊழல், தவறான நிர்வாகம் ஆகியவற்றிற்கு எதிராகப் பிரச்சாரமும் போராட்டமும் தீவிரமாக நடைபெற்றது. இப்பிரச்சனையினைக் கையாள இந்திரா காந்தி ஜூன் 25, 1975ல் நெருக்கடி நிலை பிரகடனம் செய்தார். இதனை நியாயப்படுத்த இந்திரா காந்தி சமுதாயத்தில் அடிமட்டத்தில் இருப்பவர்களும், வறுமையில் வாழ்பவர்களையும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல தொடர் பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தவும், உள்நாட்டு நலனையும், பிற நாடுகளின் தலையீட்டைக் கட்டுப்படுத்தவும் நெருக்கடி நிலையினை அறிவிப்பதாகக் குறிப்பிட்டார். இதன் விளைவு தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். பதுக்கல் காரர்கள், வரி ஏய்பவர்கள் இச்சட்டத்தின்படி சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் நாட்டின் பொருளாதார நிலை சீரடையத் தொடங்கியது. உணவு கையிருப்பு அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து கிராமப்புற ஏழைகளை மேம்படுத்த ஜூலை 1, 1975ல் 20அம்ச திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு கடன் அளித்தல், சிறு விவசாயிகளுக்கும், கிராமப்புற கைவினைஞர்களுக்கும் மாற்றுக் கடன் அளித்தல், கொத்தடிமைத் தொழிலாளர்களை ஒழித்தல், நடப்பில் உள்ள நில உச்சவரம்பை நடைமுறைப்படுத்துதல், கையகப்படுத்தப்பட்ட உபரி நிலங்களை நிலமற்ற விவசாயக் கூலிகளுக்கு வழங்குதல், நலிவடைந்த நிலமற்ற கூலித் தொழிலாளர்களுக்கு வீடுகளைக் கட்டித் தருதல், விவசாயத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச கூலியினை வழங்குதல், கைத்தறி துறைக்குச் சிறப்பு உதவி, பொது விலையினைக் குறைத்தல், வரி ஏய்ப்பு மற்றும் கடத்தல்களைத் தடுத்தல், உற்பத்தியினை அதிகரித்தல், பொருட்களின் பகிர்வினை முறைப்படுத்துதல், வருமான வரியின் உச்ச வரம்பை அதிகரித்தல், முதலீட்டில் தாராள நடைமுறையினைப் பின்பற்றுதல் போன்ற வேளாண் சார் அம்சங்கள் இடம் பெற்றிருந்தது. இதனால் உடனடியாக விளைவுகள் பொருளாதாரத்தில் ஏற்படத் தொடங்கியது.
20அம்ச திட்டத்தினால் உணவுப் பொருட்கள் விலை குறைந்தது, இன்றியமையாத பொருட்களின் இருப்பு தாராளமாக இருந்தது. வரி ஏய்ப்பு, பதுக்கல், கடத்தல் போன்றவை குறைந்தது. ஒட்டுமொத்த குறிக்கோளகக் கிராமப்புற ஏழைகளை மேம்படுத்துவது என்பதாகும். இது ஓரளவிற்கு பயனளித்ததது. 3 மில்லியன் வீடுகள் நிலமற்ற விவசாயிகளுக்கும், பட்டியல் இனத்தவருக்கும் வழங்கப்பட்டது. 1.1 மில்லியன் ஏக்கர் உபரி நிலங்கள் நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இது உபரி நில இருப்பில் 10.1 விழுக்காடு மட்டுமே. விவசாயக் கடன் வசூல் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டது. குறிப்பாக நிலமற்ற விவசாயக் கூலிகள் மற்றும் சிறு விவசாயிகளிடம் இது பின்பற்றப்பட்டது. கூட்டுறவு நிதி நிறுவனங்கள், தேசிய வங்கிகள் மூலம் விவசாயிகளுக்குக் கடன் வழங்கப்பட்டது. குறைந்தபட்ச கூலியினை விவசாயத் தொழிலாளர்களுக்குக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. ஆனால் 20அம்ச திட்டம் லஞ்சம், திறமையற்ற நிருவாக நடவடிக்கைகள், அரசியல் தலையீடு போன்றவற்றால் பெரும் வெறியுடன் அமையவில்லை. நீதியரசர் ஷ அவர்களின் தலைமையில் அமைந்த கமிஷன் அவசரக்கால பிரகடனத்தில் நடந்தவற்றைப் பற்றி ஆராய்ந்தபோது முறைகேடுகள், விதிமீறல்கள், தவறான நடைமுறைகள், அட்டூழியங்கள், பழிவாங்கல் போன்றவை நடைபெற்றதாக்கக் குறிப்பிட்டது.
இந்திரா காந்தி 1980ல் நடந்த தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று பிரதம மந்திரி ஆனார். இரண்டாம் கட்ட ஆட்சிக் காலத்தில் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார உத்தியின் மாற்றங்களால் இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்கத்தை உணர்ந்து தாராளமயப் பொருளாதார கொள்கைகளை அரைமனதுடன் நடைமுறைப்படுத்தினார். இந்திரா காந்தி பன்னாட்டு நிறுவனங்களின் பங்கினால் இந்தியாவின் சுயச்சார்பு பாதிக்கப்படும் என்று கருதினார். இந்தியாவின் 6 வங்கிகளை தேசியமயமாக்கினார். இக்காலகட்டத்தில் ஆண்டுக்கு 4 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்தது. ஆறாவது ஐந்தாண்டு திட்டம் (1980-1985) வறுமையை ஒழிப்பது, வேளாண்மையில் சுயச்சார்பினை அடைவதைக் குறிக்கோளாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் விளைவு வேளாண்மை உற்பத்தி அதிமாக உயர்ந்தது. இதனால் விலை உயர்வானது (பணவீக்கம்) 1984ல் 7 விழுக்காடாகக் குறைந்தது. இந்த நிலையில் அக்டோபர் 31, 1984ல் இந்திரா காந்தி சுட்டுக்கொள்ளப்பட்டார்.
அட்டவணை: இந்திரா காந்தி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி (விழுக்காடு)
| பொருளாதாரம் | 1952-1966
(இந்திரா காந்தி ஆட்சிக்கு முன்பு) |
1967-1984
(இந்திரா காந்தி ஆட்சி) |
| மொத்த உள்நாட்டு உற்பத்தி | 3.57 | 3.96 |
| வேளாண்மைத் துறை | 1.98 | 3.31 |
| தொழில் துறை | 6.45 | 4.29 |
| சேவைத் துறை | 4.46 | 4.63 |
Source: Tadit Kundu (2016): “How India fared Under Indira Gandhi,” Mint, 30.11.2016.
இந்திரா காந்தி 20 ஆண்டுகள் ஆட்சியிலிருந்தார். இந்தியாவின் வளர்ச்சிக்கு அவரின் பங்கு அளப்பரியது. அரசியல் ரீதியாக 1969ல் காங்கிரஸ் உடைந்தது, 1971ல் பங்களாதேஷ் பிரச்சனை, இதன் தொடர்பாக அமெரிக்காவின் நெருக்குதல், 1966ல் பஞ்சாப் சபா உருவானது. 1975ல் நெருக்கடிக்கால பிரகடனம், இதன் மீதான விசாரணைக் கமிஷன் போன்றவை அரசியல் ரீதியான சவால்களாக இருந்தது. 1960களின் பிற்பகுதியில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை, 1970களில் ஏற்பட்ட எண்ணெய் (குருடாயில்) நெருக்கடி, போன்றவற்றால் விலை உயர்ந்தது. உணவுப் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வாகப் பசுமைப் புரட்சியைக் கொண்டுவந்து உணவு உற்பத்தியில் சுயச்சார்பு அடைய செய்தது. உணவு பாதுகாப்பிற்கு வழிவகுத்தது. பொதுத்துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து நேருவின் வழியினையே பின்பற்றினார். கிராமப்புற, நகர்ப்புறங்களில் வாழும் ஏழை, நடுத்தர மக்கள், சிறுபான்மையினர், மகளீர் பாதுகாப்பு உறுதி செய்யவும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் கொண்டுவந்தார். அதே சமயம் நிர்வாக தோல்வி, அரசியல் பழிவாங்கல் போன்ற நடவடிக்கை அதிகமாக இவர் காலத்தில் காணப்பட்டது.
1980களில் இந்திய வேளாண்மை சீர்திருத்தினால் உணவு உற்பத்தி பெருகி இருந்தாலும், பசுமைப் புரட்சியின் விளைவுகள், பெருமளவிற்கு வட்டார ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியிருந்தது மேலும் இது இந்தியாவின் கிராமப்புற மாவட்டங்களில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே செயல்பாட்டில் இருந்தது. பெரும்பான்மையான மழை மறைவு விளைநிலங்களில் பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தவில்லை. தண்டேக்கர் மற்றும் ராத் அவர்களின் ஆய்வின்படி 40 விழுக்காடு கிராமப்புற மக்களும் 50 விழுக்காடு நகர்ப்புற மக்களும் வறுமையிலும் அடிப்படை வாழ்க்கை மட்டத்தினை பெறமுடியாமலும் இருந்தனர். இந்தியாவின் கிராமப்புற ஏழைகள் தங்கள் வருவாயில் 80 விழுக்காடு உணவிற்காகச் செலவிட்டனர். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் வேளாண் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டது. இதனால் ஏழை, விளிம்பு நிலையில் வாழும் மக்களின் வாழ்நிலைக்கான நம்பிக்கையினை உருவாக்கித்தந்தது.
– பேரா.பு.அன்பழகன்
வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையினை அரசு அளிக்கிறதா? – பேரா.பு.அன்பழகன்
பசுமைப் புரட்சியின் முதன்மையான நோக்கம், தொழில்நுட்ப மற்றும் நிறுவன ரீதியான மாற்றங்கள் வழியாக உணவு உற்பத்தியில் தன்னிறைவினை அடைதல் மற்றும் வேளாண்மை வளர்ச்சியினை எட்டுதல் ஆகும். எனவே, 1960களில் வேளாண் சார்புக் கொள்கைகளும், திட்டங்களும் வகுக்கப்பட்டன. இந்த அடிப்படையில், விவசாயிகளின் நலனை மேம்படுத்தவும், வேளாண் உற்பத்திப் பொருட்களின் விலை வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்கவும் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்பட்டு வருகிறது. வேளாண் பொருட்களின் உற்பத்தி அதிக அளவில் காணப்படும்போது அதற்கான சந்தை விலை குறைந்துவிடுகிறது, இதனால் விவசாயிகள் பெரும் இழப்பினைச் சந்திக்கின்றனர். எனவே, அரசே தன்னுடைய காப்பு இருப்புக்கு (Buffer Stock) தேவையானதை நேரடியாகக் கொள்முதல் மையங்களைத் திறந்து இடைத்தரகர்களின் தலையீடு இன்றி கொள்முதல் செய்கிறது. அப்போது அரசு அறிவிக்கின்ற குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு வேளாண் விளைபொருட்களை விவசாயிகளிடமிருந்து வாங்குகின்றனர். ஆனால், இந்த குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது சட்டப்பூர்வமானதல்ல. அரசின் முறைப்படுத்தப்பட்ட மண்டிகள், தனியார் மண்டிகளில் இது கட்டாய நடைமுறையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ் அரசு கொள்முதல் மையங்கள் நிலையாக ஆண்டு முழுவதும் செயல்படாது, அறுவடைக் காலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் இம் மையங்கள் செயல்படும். இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளும் இவ் ஆதரவு விலையினால் பயன்பெற முடியாது. பொதுவாக விவசாயிகள் தங்களின் வேளாண் விளைபொருட்களைத் தனியார் மண்டிகள், வேளாண் விளைபொருட்களுக்கு இடுபொருட்களை அளிப்பவர்கள், தரகு முகவர்கள், அரசு அல்லது கூட்டுறவு போன்றவர்களிடம் விற்பனை செய்கின்றனர். இந்தியாவைப் பொருத்தமட்டில் வேளாண் உற்பத்தி பொருட்கள் சந்தை படுத்துதலில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இந்திய விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைப் பெருமளவிற்குத் தனியார்களிடம் விற்பனை செய்கின்றனர் (நெல் விற்பனையில் உத்திரப் பிரதேசம் 81.35 விழுக்காடும், மேற்கு வங்காளம் 87.58 விழுக்காடும், கர்நாடகா 95.45 விழுக்காடும், இது போன்று கோதுமை விற்பனையில் உத்திரப் பிரதேசம் 85.38 விழுக்காடும், குஜராத் 80.71 விழுக்காடும், ராஜஸ்தான் 76.17 விழுக்காடும் தனியார்களிடம் விற்கின்றனர்). தனியார்கள் வேளாண் உற்பத்தி பொருட்களைக் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிடக் குறைவான விலைக்கே வாங்குகின்றனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் மட்டுமே அதிக அளவாகக் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசு வேளாண் விளைபொருட்களை நேரடியாக இந்திய உணவுக் கழகத்திற்குக் கொள்முதல் செய்கிறது. இதற்கு முக்கியக் காரணம் இந்த மாநிலங்களில் நீர்ப்பாசன வசதி, அதிக உற்பத்தி திரன், நெல், கோதுமை அதிக அளவில் உற்பத்தி, சிறந்த சந்தைக் கட்டமைப்பு, அரசுக் கொள்முதல் மையங்கள் அதிக அளவில் செயல்படுவது போன்றவற்றைச் சுட்டிக்காட்டலாம். 2019-20ல் மொத்த நெல் உற்பத்தியில் 43.86 விழுக்காடும், கோதுமை உற்பத்தியில் 31.72 விழுக்காடும் தேசிய அளவில் அரசு கொள்முதல் செய்கிறது. பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, உத்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய நான்கு மாநிலங்களில் அதிக அளவில் அரசு நேரடி நெல் கொள்முதலைச் செய்கிறது. இதுபோல் ஹரியானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசத்தில் அதிகமாகக் கோதுமையை அரசு நேரடியாகக் கொள்முதல் செய்கிறது (Gopi Sankar Gopikuttan et al 2022).
குறைந்தபட்ச ஆதரவு விலை
குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு அளிக்கப்படும் உத்தேசமான விலையாகும். இதில் விவசாயிகள் ஆதாயம் பெரும் வகையில் விலை தீர்மானிக்கப்பட்டிருக்கும். குறைந்தபட்ச ஆதரவு விலையானது பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தப்படும்போது விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான செலவு மற்றும் விலைக்கான வேளாண்மைக் குழுவின் (Commission for Agricultural Costs and Prices – CACP) பரிந்துரையின் அடிப்படையில் ஒன்றிய அரசு அறிவிக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையினை CACP, கணக்கிடும்போது, வேளாண் பொருட்களின் தேவை மற்றும் அளிப்பு, உற்பத்திச் செலவு, உள்நாட்டு வெளிநாட்டுச் சந்தையில் விலையின் போக்கு, விளைபொருட்களுக்கிடையே உள்ள விலையின் ஒப்புமை, வேளாண் மற்றும் வேளாண் சாரா வர்த்தக நிலை, உற்பத்தி செலவினை விடக் குறைந்தபட்சம் 50 விழுக்காடு விளிம்புநிலை, குறைந்தபட்ச ஆதரவு விலையினால் நுகர்வோருக்கு ஏற்படும் விளைவுகள் போன்றவை அடிப்படையாகக் கொள்கிறது. இவ்விலை வேளாண் பொருட்கள் கொள்முதல் செய்யும் போது கட்டாயம் அனைத்து கொள்முதல் செய்பவர்களும் பின்பற்றவேண்டியதில்லை. விவசாயிகளும் தங்களின் உரிமை என இவ்விலையினைக் கோரவும் முடியாது. அதாவது குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது சட்டப்பூர்வமானது அல்ல. 1966-67ல் முதன் முதலில் கோதுமைக்கு இவ்விலை (ஒரு குவிண்டாலுக்கு ரூ.54 நிர்ணயிக்கப்பட்டது) அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து டி.எல்.தந்த்வாலா குழுவின் பரிந்துரைப்படி நெல்லிற்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கப்பட்டது. தற்போது 23 வகையான வேளாண் விளைபொருட்கள் (7 தானிய வகை, 5 பருப்பு வகை, 7 எண்ணெய் வித்துகள், 4 வாணிப விளைபொருட்கள்) குறைந்தபட்ச ஆதரவு விலைகள் அறிவிக்கப்படுகிறது (Udit Misra 2022). இவ்விலையினால் அதிக அளவிற்கு நெல், கோதுமை விளைபொருட்கள் பயன் அடைகின்றன. இவ் விளைபொருட்களுக்கு ஆண்டிற்குச் சம்பா (காரீப்), குறுவை (ரபி) ஆகிய பருவ காலங்களுக்கு விலை (நெல்லைப் பொருத்தமட்டில் சன்னரகம், சாதாரண ரகம் என தனித்தனியே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது) என பிரித்து ஒன்றிய அரசு அறிவிக்கிறது.
குறைந்தபட்ச ஆதரவு விலையினைத் தீர்மானிப்பதில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டுக் காரணிகளின் தாக்கமும் உள்ளடங்கியுள்ளது. பன்னாட்டுக் காரணிகளில் முக்கியமானது உலக வர்த்தக அமைப்பு ஆகும். இந்த அமைப்பின்படி மொத்த வேளாண் உற்பத்தி (2004ல்) மதிப்பில் 10 விழுக்காட்டுக்குமேல் மானியங்கள் வேளாண் விளைபொருட்களுக்கு அளிக்கக் கூடாது என்கிறது. இந்த அடிப்படையில் இந்தியா மீது பலநாடுகள் மானியம் அதிகமாக அளிப்பதாகத் தொடர்ந்து உலக வர்த்தக அமைப்பிடம் புகார் அளித்து வருகின்றன. ஆனால் உண்மையில் பல வளர்ந்த, வளரும் நாடுகளைவிட இந்தியா குறைவான அளவிலேயே மானியம் வழங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது (Nitya Nanda 2021). இந்தியாவில் 86 விழுக்காடு குறு, சிறு விவசாயிகள் ஆவார்கள், இவர்களுக்கு வேளாண் இடுபொருட்களான இரசாயன உரம், பூச்சிக்கொல்லி, விதை மற்றும் நீர்ப்பாசனத்திற்கு அரசின் மானியம் தேவையாக உள்ளது. மானியம் அளிக்கவில்லை என்றால் இவ்விவசாயிகள் பெரும் இழப்பினை எதிர்கொண்டு விவசாயத்தைவிட்டு அதிகமாக வெளியேறும் நிலை ஏற்படும், விவசாயத் தற்கொலைகளும் அதிகரிக்கும். மேலும் இந்தியா உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான ஏழைகளைக் கொண்டுள்ள நாடாகும். இதனைக் குறைக்க அனைவருக்கும் உணவு பாதுகாப்பு அளிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, வேளாண் விளைபொருட்களுக்கு மானியங்கள் வழங்கி உற்பத்தியினை பெருக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. பன்னாட்டுத் தொடர் அழுத்தத்தின் காரணமாக 2020ல் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் (1.வேளாண்மை உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வணிபச் சட்டம், 2) வேளாண் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்தச் சட்டம், 3) அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்) அடிப்படையில் அரசு மானியங்களைக் குறைப்பதற்காகக் கொண்டுவரப்பட்டது. இச்சட்டங்களால் விவசாயிகள், வேளண்சார் முகவர்கள், அரசு மண்டிகள் பெருமளவிற்குப் பாதிப்படையும். குறைந்தபட்ச ஆதரவு விலையும் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும், பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் விவசாயம் சென்றடையும் என்பதால் விவசாயிகள் பெரும் இழப்பினை எதிர்கொள்ள நேரிடும். எனவே, விவசாயிகளின் கடும் போராட்டங்களை முன்னெடுத்தனர். விவசாயிகளின் கடும் எதிர்ப்பினால் ஒன்றிய அரசு இச்சட்டங்களை 2021ல் விலக்கிக்கொண்டது. மேலும் பன்னாட்டு அளவில் கோதுமை, அரிசி விலைகள் நிலையற்ற போக்கினைக் காணமுடிகிறது. இதனால் இந்திய விவசாயிகள் கடும் இழப்பினை அவ்வப்போது சந்திக்கவேண்டியுள்ளது எனவே குறைந்தபட்ச ஆதரவு விலையினை நிர்ணயிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. உள்நாட்டு அளவில் அரசியல், நிதிப்பற்றாக்குறை, காப்பு இருப்பு போன்ற முக்கியக் காரணிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையினை தீர்மானிப்பதாக உள்ளது. நாட்டின் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் முன்பு ஆளும் அரசியல் கட்சிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையினை அதிகமாக உயர்த்துவார்கள் அதன் பின் குறைவாக உயர்த்துவார்கள். நிதி பற்றாக்குறையினைக் காரணம் காட்டி குறைந்தபட்ச ஆதரவு விலையின் உயர்வினை மட்டுப்படுத்தப்படுகிறது. இதேபோல் காப்பு இருப்பின் அடிப்படையினையும் கருத்தில்கொண்டு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு தீர்மானிக்கப்படுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையின் வழியாக அரசு கொள்முதல் செய்யப்படும் உணவு தானியங்கள் நாட்டின் ஏழை எளிய விளிம்பு நிலையில் மக்களுக்கு உணவளிப்பதற்குப் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்தபட்ச ஆதரவு விலை கணக்கிடுதல்
எல்.கே.ஜா குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வேளாண் விளைபொருட்களின் செலவுகள் கணக்கிடுவதற்கு 1965ல் வேளாண் விளைபொருள் விலைக் குழு நடைமுறைக்கு வந்தது. இதனைத்தான் வேளாண் செலவு மற்றும் விலைக் குழு (Commission for Agricultural Costs and Prices – CACP) என 1985முதல் அறியப்பட்டது (Kadasiddappa Malamasuri et al 2013). ஜா குழுவின் கணக்கிடும் முறை கடினமாகவும், எளிமையாகப் புரிந்துகொள்ள இயலாமல் இருந்தது, எனவே எஸ் ஆர் சென் தலைமையில் 1979ல் ஒரு குழு அமைக்கப்பட்டு வேளாண் விளைபொருட்களின் செலவுகளைக் கணக்கிட சில சீர்திருத்தங்களை முன்மொழிந்தது. 1990ல் சி.எச்.அனுமந்தப்பா தலைமையிலான குழு, மேலாண்மை செலவு, சொந்த நிலத்திற்கான வாடகை மதிப்பு, போக்குவரத்து செலவு பொன்றவை வேளாண் விளைபொருட்களின் செலவில் கணக்கிடப் பரிந்துரைத்தது. 2003ல் ஒய்.கே.அலக் தலைமையிலான குழு குறைந்தபட்ச ஆதரவு விலையினைத் தீர்மானிக்க பல்வேறு பரிந்துரைகளை அளித்தது.
2004ல் எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையில் தேசிய விவசாயிகள் குழு அமைக்கப்பட்டது. இக்குழு 2004 – 2006ஆம் ஆண்டுக்குள் ஐந்து பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. இக்குழுவின் பரிந்துரையின்படி வேளாண் விளைபொருட்களுக்கான செலவுகளுடன் அச்செலவில் 50 விழுக்காட்டையும் கூட்டி குறைந்தபட்ச ஆதரவு விலையினை நிர்ணயிக்கவேண்டும் என்றது. இதன்படி 2018ல் (A2 + FL) + 50% என்ற அடிப்படையில் கணக்கிட்டு (A2 என்பது செலவு, FL என்பது சொந்த குடும்ப உறுப்பினர்களின் உழைப்பின் மதிப்பு) குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்படுகிறது. ஒன்றிய அரசு எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையினை நிறைவேற்றியுள்ளதாக பிரகடனப்படுத்துகிறது. ஆனால் இக்குழுவின் பரிந்துரையினை ஒன்றிய அரசு பின்பற்றவில்லை என்பது தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். உண்மையில் சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தது C2 + 50% என்பதாகும்.
செலவு A1 என்பது நில உரிமையாளர்களின் வேளாண் விலைபொருட்களின் உற்பத்திக்காக ரொக்கமாகவும், கருணையாக அளிக்கக்கூடிய (kind) செலவுகள் அடங்கியதாகும் இச் செலவுகள் கூலிக்காக வேலைசெய்யும் தொழிலாளர்களின் உழைப்பின் மதிப்பு, சொந்த இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான வாடகை மதிப்பு, இயந்திரங்களுக்கு அளிக்கப்படும் வாடகைத் தொகை, பயன்படுத்தும் விதைகளின் (சொந்த மற்றும் வாங்கப்படும்) மதிப்பு, பூச்சிக்கொல்லிக்குச் செலவிடும் மதிப்பு, இயற்கை உரம் (சொந்த மற்றும் வாங்கப்படும்) பயன்படுத்தப்பட்டதின் மதிப்பு, உரத்தின் மதிப்பு, நீர்ப்பாசன செலவுகள், பயிர்செய்வதற்குப் பயன்படுத்தும் பொருட்களின் தேய்மானம், நிலத்தின் வருமானம், நடைமுறை மூலதனச் செலவின் மீதான வட்டி மற்றும் பிற வகைச் செலவுகள் ஆகும்.
செலவு A2 என்பது செலவு A1 உடன் குத்தகைக்கு விடப்பட்ட நிலத்திற்கான வாடகையையும் சேர்த்தது.
செலவு B1 என்பது செலவு A1 உடன் நிலம் தவிற பிற சொந்த மூலதனச் சொத்தின் மதிப்பிற்கான வட்டி.
செலவு B2 என்பது செலவு B1 உடன் சொந்த நிலத்திற்கான குத்தகை மதிப்பு மற்றும் குத்தகைக்குப் பயிரிடும் நிலத்திற்குச் செலுத்தப்படும் குத்தகை மதிப்பு.
செலவு C1 என்பது செலவு B1 உடன் சொந்த குடும்ப நபர்கள் நல்கிய உழைப்பின் மதிப்பு.
செலவு C2 என்பது செலவு B2 உடன் சொந்த குடும்ப நபர்கள் நல்கிய உழைப்பின் மதிப்பு.
தற்போது ஒன்றிய அரசு இதில் செலவு A2 உடன் சொந்த குடும்ப நபர்கள் நல்கிய உழைப்பின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு அத்துடன் 50 விழுக்காடு சேர்த்து குறைந்தபட்ச ஆதரவு விலையினை அறிவித்துவருகிறது. ஆனால் ஒன்றிய அரசு வசதியாகச் செலவு C2 யைக் கணக்கிடாமல் தவிர்த்துள்ளது. எனவே சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையினை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது. இவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டதால் எவ்வளவு வேறுபாடு உள்ளது என்பதை கீழ்கண்ட அட்டவணையில் விளக்கப்பட்டுள்ளது.
அட்டவணை : தற்போதைய குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும், செலவு C2யின் அடிப்படையில் கணக்கிடுவதற்குமான உள்ள வேறுபாடு
| பயிர் | A2 + FL | C2 | குறைநத்தபட்ச ஆதரவு விலை | A2 + FL வைவிட அதிகரித்த விளிம்பு அளவு (%) | C2 வைவிட அதிகரித்த விளிம்பு அளவு (%) |
| (1) | (2) | (3) | (3) / (1) | (3) / (2) | |
| நெல் | 1245 | 1667 | 1868 | 50.04 | 12.06 |
| கோதுமை | 923 | 1429 | 1925 | 108.56 | 35.08 |
குறிப்பு : 2020-21ஆம் ஆண்டு செலவின் அடிப்படையில் கணிக்கிடப்பட்ட விவரங்கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : Sukhpal Singh et al 2021.
இந்த அட்டவணையில் சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையான செலவு C2 உடன் 50 விழுக்காட்டினை கணக்கிட்டு குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டால் விவசாயப் பொருட்களின் விலை தற்போது அளிக்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட அதிகமாக உள்ளது. எனவே செலவு C2 வின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலையானது விவசாயிகளுக்கு நன்மை தருவதாக இருக்கும்.
2015ல் ரமேஷ்சந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின்படி சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையான செலவு C2 உடன் கூடுதலாகச் சில செலவுகளையும் சேர்க்கவேண்டும் என்றது. அதன்படி வேளாண்மையில் ஈடுபடும் குடும்பத் தலைவரின் உழைப்பினை திறனுடைய உழைப்பாளர் என கருதி கணக்கிடவேண்டும், நடைமுறை மூலதனத்தின் மீதான வட்டி முழு சாகுபடி காலத்திற்குக் கணக்கில் கொள்ள வேண்டும், எந்த வரையறையின்றி நிலத்தின் உண்மையான வாடகையை கணக்கில் கொள்ளுதல், அறுவடைக்குப்பிந்தைய நிலையில் வயல்களை சுத்தம் செய்தல், தரப்படுத்துதல், உலரவைத்தல், கட்டிடுதல், சந்தைப்படுத்துதல், போக்குவரத்து செலவு போனவற்றைக் கணக்கில் கொள்ளவேண்டும் என்கிறது. மேலும் இக்குழு செலவு C2 உடன் 10 விழுக்காட்டிற்கு விவசாயிகளின் இடர்களை எதிர்கொள்வதற்கும், மேலாண்மை செய்வதற்கும் என்ற அடிப்படையில் அதிகரிக்க வேண்டும் என்கிறது. இவ்வாறு ரமேஷ்சந்த் குழுவின் பரிந்துரையானது அடிப்படையில் பார்த்தால் செலவு C2 ஆனது கோதுமைக்கு 30.38 விழுக்காடும், நெல்லுக்கு 24.61 விழுக்காடும் அதிகரிக்கும் என கணக்கிடப்படுகிறது. மொத்த செலவு அளவில் கூடுதலாக 50 விழுக்காடு (C2 + 50%) அதிகரித்தால் நெல்லுக்கு தற்போது உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையினை விட 66.80 விழுக்காடு அதிகமாகவும், கோதுமைக்கு 44.77 விழுக்காடு அதிகமாகவும் கிடைக்கும். அதாவது 2020-21 விலையின் அடிப்படையில் நெல்லுக்கு ரூ.1868 என்பதற்கு பதில் ரூ.3116 என்றும், கோதுமைக்கு ரூ.1925க்கு பதில் ரூ.2787 என்றும் கிடைக்கும். எனவே ரமேஷ்சந்த் குழுவின் பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஆதரவு விலையினை தீர்மானிப்பது என்பது விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதாக உள்ளது (Sukhapl Singh et al 2021). தற்போது 2021-22ல் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.1940 (2010-11ல் ரூ.1000), கோதுமைக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.2015 (2010-11ல் ரூ.1120) (https://farmer.gov.in/) ஆக உள்ளது. இந்திய அளவில் 6 விழுக்காடு விவசாயிகள் மட்டுமே இக்குறைந்தபட்ச ஆதரவு விலையினைப் பெற்று பயன் அடைகின்றனர் குறிப்பாகப் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் அதிக அளவில் பயன்பெறுகின்றனர். மேலும் இந்த பயனை பெரிய மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்ற விவசாயிகளைவிட அதிக அளவில் பயன் பெறுகின்றனர். தனியார் சந்தைகளில் பெருமளவிற்கான விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை விற்பதால் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிடக் குறைவாக விற்று இழப்பினைச் சந்திக்கின்றனர். எனவே வேளாண்மை செய்வது சாத்தியமில்லா தொழிலாக மாறுவதால் அதிக அளவில் விவசாயிகள் பயிர் தொழிலை விட்டு வெளியேறுகின்றனர். எனவே குறைந்தபட்ச ஆதரவு விலையினை அனைத்து விவசாயிகளும் பெரும் நிலையினை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலையினை ஏன் சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற குரல் தற்போது ஓங்கி ஒலிக்கிறது என்பதற்கு பல பின்புலங்களைச் சுட்டிக்காட்டலாம். 77வது தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி (NSS) 2018-19ல் கிராமப்புறங்களில் வசிக்கும் மொத்த குடும்பங்களில் 55 விழுக்காடு வேளாண்மையினைச் சார்ந்து வாழ்கின்றனர் இதில் 80 விழுகாட்டினர் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளனர். 86 விழுக்காடு விவசாயிகள் 2 ஹெக்டேருக்கு கீழ் நிலம் வைத்திருக்கிறார்கள், மொத்த வேளாண்மையில் ஈடுபடுபவர்களில் 55 விழுக்காடு வேளாண் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். 50.2 விழுக்காடு விவசாய குடும்பங்கள் கடனாளிகளாக உள்ளனர் (சராசரி குடும்ப கடன் அளவு ரூ.74121), இக்கடனில் மூன்றில் ஒரு பங்கு நிறுவனமல்லாக் கடனாக உள்ளது. கிராமப்புற விவசாயிகளின் குடும்ப சராசரி வருமானத்தில் 92.3 விழுக்காடு வருமானம் வேளாண்மை வழியாகப் பெறப்படுகிறது. உலகில் உள்ள குறை-ஊட்டச்சத்து உடையவர்கள் அதிகமாக (28 விழுக்காடு மக்கள்) இந்தியாவில் வாழ்கின்றனர், இந்தியாவில் நான்கில் மூன்று பங்கு மக்கள் ஊட்டமான உணவினைப் பெறமுடியாத நிலையில் உள்ளனர், 6.2 கோடி மக்கள் உணவு பாதுகாப்பின்றி வாழ்கின்றனர் (ORF 2021). மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வேளாண்மைத் துறையின் பங்களிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது, வேளாண் துறையின் வளர்ச்சி குறைவாக கடந்த 70 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 2-3 விழுக்காடு மட்டுமே அதிகரிக்கிறது. வேளாண் துறையிலிருந்து அதிக அளவில் விவசாயிகள் வெளியேறி வேளாண் சாராத் தொழிலுக்குச் செல்வது அதிகரித்துள்ளது (2004-05 மற்றும் 2017-18ஆம் ஆண்டுகளுக்கிடையே 64 மில்லியன் விவசாயிகள் வெளியேறியுள்ளனர்) மற்றும் வேளாண் துறையில் வேலைவாய்ப்பு பெருக்கம் குறைந்துள்ளது. இத்துடன் ஒன்றிய அரசினால் அசோக் தல்வாய் குழுவானது விவசாயக் குடும்பங்களின் வருமானத்தை 2015-16ல் மாதத்திற்கு ரூ.8059 ஆக இருந்ததை 2022-23ல் ரூ.16118 என இருமடங்காக (பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டு, உண்மை நிலையில்) அதிகரிக்கவேண்டும் என்ற திட்டத்தை செப்டம்பர் 2018ல் முன்வைத்தது. ஆனால் இந்த இலக்கினை அடையமுடியவில்லை. இவற்றை அடைய வேளாண் துறை ஆண்டுக்கு 10.4 விழுக்காடு வளர்ச்சியினை அடைய வேண்டும் (Ashok Gulati et al 2020). எனவே இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு குறைந்தபட்ச ஆதரவு விலையினைச் சட்டப்பூர்வமாக்க வேண்டும். வேளாண் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையினை அனைத்து விவசாயிகளுக்கும், அனைத்து வேளாண் உற்பத்திக்கும் அளித்து உள்ளடக்கிய பொருளாதார வளர்சியனை அடைய முற்படவேண்டும். அரசு இதற்கான பொது சந்தைக் கட்டமைப்பை வலுப்படுத்துவது, வேளாண் உற்பத்தி செலவினைக் குறைப்பது, திரனுடைய சந்தையினை உருவாக்குதல், கிராமப்புற பொது நலனை உறுதிப்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.
References:
Ashok Gulti, Devesh Kapoor and Marshall M Bouton (2020): “Reforming Indian Agriculture,” Economic and Political Weekly, Vol 55 (11), pp 35-42.
Biswajit Dhar and Roshan Kishore (2021): “Indian Agriculture Needs a Holistic Policy Framework< Not Pro-market Reforms,” Economic Political Weekly, Vol 56 (16), pp 27-35.
Gopi Sankar Gopikuttan and Gopal Naik (2022): “Markets for Farmers- Revisiting the Role of Mandis in the Context of Farm Law’s Repeal,” Economic and Political Weekly, Vol 57 (8), pp 33-38.
Kadasiddappa Malamasuri, Soumya B, Prasanth P and Sachin Himmatrao Malve (2013):”A Historical Perspective for Minimum Support Price of A griculture Crops,” Kisan World , Vol40 (12) pp 46-48.
National Sample Organization (2022): “Situation Assessment of Agricultural Households and Land and Holdings of Households in Rural India, 2019,” Ministry of Statistics and Programme Implementation, Government of India.
NITI Aayog (2018): “Doubling Farmer’s Income,”| National Institution for Transforming India, Government of India.
Nitya Nanda (2021): “Agricultural Reforms in India- Need for a Unique Model,” Economic and Political Weekly, Vol 56 (8), pp 25-29.
ORF (2021): “Global Nutrition Report 2021 – India’s Nutrition Profile and How to meet Global Nutrition Target,” Observer Research Foundarion, 2.12.2021.
Sukhpal Singh and Shruti Bhogal (2021): “MSP in a Changing Agricultural Policy Environment,” Economic and Political Weekly, Vol 56 (3), pp 12-15.
Udit Misra (2022): “Explained: What are MSPs, and how are they decided?,” The Indian Express, 03.03.2022.




