ஹைக்கூ கவிதைகள் – இரா.கலையரசி
1)
ஒடித்த பறவை இறகு
இதமாய் இறங்குகிறது
காதுகளில்
2)
இரட்டை விரல்களின் நடுவே
சிம்மாசனம் போட்டது
சிகரெட்
3)
உலுக்கிய கைகளில்
முத்தமிட்டு அமர்ந்தன
சரக்கொன்றை மலர்கள்
4)
அழுத்தியதும் வெடித்தது
ஏழைகளின் பட்டாசு
எருக்கம்மொட்டு
5)
வரிகள் இருந்தும்
கவிதை இல்லை
உதடுகள்.
ஹைக்கூ கவிதைகள் – ஜெயஸ்ரீ
#1
முன்னாள் காதல்
இன்னும் வாழ்கிறது
குழந்தையின் பெயரில்
#2
கட்டை விரலால் நசுக்கி
கொல்லப்பட்டது காதல்
குறுஞ்செய்தி
#3
இருசக்கர விபத்து
சாட்சியாய்
ஒற்றைச் செருப்பு
#4
இல்லாமல் இருப்பதில்லை
இருந்தாலும் நிலைப்பதில்லை
கவலைகள்
#5
வியாபாரக் களம் கண்டது
வெந்து குப்பைக்குச் செல்கிறது
அரிசி
#6
சிவலோகம் சென்றாலும்
வசூல் செய்யப்படும்
தனியார் வங்கிக் கடன்
#7
உப்புமா இனிதாக பேசி
பதவி உயர்வு கண்டது
கேசரி
#8
குறிப்பெடுத்துப் படித்தாலும்
புரிந்த பாடில்லை
வாழ்க்கைப் பாடங்கள்
#9
ஆலயத்தில் நிசப்தம்
கடவுள் குரல் கேட்கிறது
அழும் குழந்தை
#10
ராணிக்கு
முழு சுதந்திரம்
சதுரங்கம்


