வாழ்வா சாவா.. கவிதை – கவிஞர் மகேதா

வாழ்வா சாவா.. கவிதை – கவிஞர் மகேதா




அடர்வனத்தில் சிக்குண்ட நான் கண்ட என் வாழ்வின்
அழகிய குடில் நீயே..
உன் கரம் கோர்த்து
காதல் ஊற்றுகளில் நீந்தியெழுந்து
மகிழ்ச்சியெனும் சிகரத்தில்
உடல் வியர்த்து மலையேறும்
சுமையும் சுகமே…
களைப்பில் பருக அளவில்லா மலைத்தேன்..
இணையில்லா இதழ்த்தேன்..
எனினும் தாகம்.. இன்னும் தாகம் ..
சிகரம் தொட்டேன் என்றெண்ணிய அடுத்த கணமே –
என்னை வாழ்நாள் சிறையடைத்தாய்
உன் பாதாளச் சிறையில்..
உன்னுயிருள் சென்று மரணித்து
பின் கண் விழிக்கும் வரமும் நீயே தந்தாய்..
வாதாட வழியின்றி வாயடைத்து நின்ற எனக்கு –
இதுவே உனது தீர்ப்பாயின்
நிதமும் வேண்டும் வாழ்நாள் முழுதும்,
உன் (இதயச்) சிறையில் தங்கும்
இந்த விடுதலையற்ற தண்டனை..

கவிஞர் மகேதா (Mahetha) – தோஹா (Doha)

கவிதா பிருத்வியின் – கவிதைகள்

கவிதா பிருத்வியின் – கவிதைகள்




போரற்ற உலகம்
********************
சமாதானமாக மனம் சொல்கிறது ..
போரற்ற உலகம்
நாட்டின் பெருமை
அணு சோதனைகள் நடத்தும்ம
நாடுகளில்..
யுத்தத்தின் சத்தங்கள்
காதில் ஒலிக்கத் துவங்கிவிட்டன..
குண்டுகளின் சப்தத்தில்
கண்விழிக்கும்
கனவுகள் சிதறுகின்றன.
உலகம் உருண்டை தானே!
அன்பில் விடிந்தால்..
பகைமை விலகும்.
அன்பை விதைத்தால்..
மானுடம் விடியும்.

மானுட உன்னதம்
********************

கரு உரு பெற்று
பிறந்த குழந்தை கற்றுத் தருகிறது
மானுட உண்மையை…
மழலையுடன் பழகிப் பாருங்கள்
மகிழ்ச்சியில் மனம் திளைக்கும்…
இந்த நொடி வாழ்க்கையை
வாழ்ந்து உணர்த்துகிறது பிஞ்சுகள்..
இயற்கையிடம் சரணாகதியாகும்
மனதில் அன்பு உதிக்கிறது..
அன்பின் வழி நடக்கிறபோது
மானுட உன்னதம் மலர்கிறது.

– கவிதா பிருத்வி

கார்கவியின் கவிதைகள்

கார்கவியின் கவிதைகள்




சித்திரைப் பெருவிழா
***************************
வருடா வருடம் வந்து செல்கிறது
பலர் திறந்த கதவுகளில்
சந்தோசமும் இந்நாளும்……
வந்தவர் போனவரெல்லாம்
பார்த்துக் குதுகலிக்கும் வண்ணத்தில்
வடிவமைக்கப் பட்டிருந்தாள் அந்த அம்மன்
யாருக்கு என்ன வேண்டுதலோ
எல்லாம் வரிசையாக அர்ச்சகரிடம்
பரிந்துரைக்கப்பட்ட நிலையில்
பத்து ருபாயும் நூறு ருபாயுமாய்
வைத்துச் சொல்லப்படுகிறது.
பலநூறு கிலோமீட்டரில்
இருந்து வந்தவரின் கோரிக்கைகள்
இடுப்பில் பிள்ளை வைத்து
இராட்டினம் பார்த்தவளுக்கு
பக்கத்தில் கையேந்தும்
பிள்ளையின் உருவம் தெரியவில்லை
அந்த திருவிழா பெருவெளியில்
கரகாட்டம் ஒருபக்கம்
ஒயிலாட்டம் மறுபக்கம்
சிலம்பாட்டம் ஆரவாரம்
அந்த தெய்வீகப் பொங்கலுக்காக
வறுமை ஆடிய ஆட்டத்தை
அந்தத் திருவிழாவின் பொழுது
காணாதது வருத்தம் தான்……
கூடியிருந்த திருவிழாக் கூட்டத்தில்
தள்ளுவண்டி பலூன்காரனிடம்
நிரம்பி இருந்தன
நல்லமனம் கொண்ட
காற்று நிரம்பிய பலூன்கள்….
பட்டை தீட்டிய கத்திகளில்
பளீரெனத் தெரிகிறது இருப்பவரின்
பணமும் இல்லாதவனின் குணமும்……
இனிப்புகள் எல்லாம் விலைபோனால்
இனிதாகிவிடும் அவர்களின் அந்நாள்.
எங்கோ பிறந்தவன்
வேறெங்கோ வாக்கப்பட்டு
சென்றவள் என அனைவரும்
கூடும் நேரத்தில்
வந்து வளைந்து நிற்கின்றன
போன வருட பழிக்குப்பழி பாவங்கள்……..
இத்தனையும்
நிறைந்து வழியும் திருவிழாவில்
எல்லாம் நல்லது என நினைத்தவனிடம்
ஒளியூட்டி அமைதி வழங்குகிறது
அருளுடன் சேர்ந்த அந்த சிறு தீப ஒளி………
*******************************************

ஒரு மாட்டிற்கு ஒரு சூடு என்பர்..
மனிதனாகிப் போனதால்
கண்டுக்கொள்ள தயங்குகிறோம் நாம்……

அப்பாவின் பேச்சுகளில் எல்லாம்
சலிப்பூட்டும் மகனுக்கு
இறுதிச்சடங்கில் மயிரே போனாலும்
சரி என்ற எண்ணம் தானாக பிறக்கிறது
அவரின் இறுதி ஊர்வலத்தில்……

வெற்றியை நீ பெற
திறமையை கொடுப்பதற்கு முன்
நேரத்தைக் கொடு
வெற்றி உன்னிடமே….

ஒரு தேயிலை கோப்பையில்
வாய் வைத்த நிலைக்கு
நகர்ந்து அமரும் மனிதர்கள் மத்தியில்
நகராமல் தாங்கி நிற்கிறது
வேற்றுமை பார்த்தவர்களையும் சேர்த்து
அந்த புனித மரம்….

கவிஞர் சே. கார்கவி

Thirai enum Thinai Book by Eerodu Kathir Bookreview By VijiRavi நூல் அறிமுகம்: ஈரோடு கதிரின் திரை எனும் திணை - விஜிரவி

நூல் அறிமுகம்: ஈரோடு கதிரின் திரை எனும் திணை – விஜிரவி




ஈரோடு கதிர் அவர்கள் எழுத்தாளர், பேச்சாளர், மனிதவள மேம்பாட்டாளர், பயிற்சியாளர் என பன்முகம் கொண்ட ஒரு படைப்பாளர். இதுவரை மொத்தம் ஐந்து புத்தகங்கள் எழுதியுள்ளார். இவரது மூன்றாவது புத்தகமான ‘உறவெனும் திரைக்கதை’ பல்வேறு மொழித் திரைப்படங்களைப் பற்றி இருபத்தைந்து கட்டுரைகளில் பேசுகிறது.

‘திரை எனும் திணை’ நூல் அவரின் ஐந்தாவது புத்தகம். மொத்தம் 20 கட்டுரைகளை கொண்டது. தமிழ் தவிர்த்து மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் இந்தி போன்ற பல்வேறு மொழித் திரைப்படங்களை அலசி ஆராய்ந்து, உற்றுநோக்கி, ஆழ்ந்து ரசித்து, அழகிய நடையில் அதன் சாராம்சத்தை தந்திருக்கிறார். அதனோடு கூட பொருத்தமான வாழ்வியல் சம்பவங்களை இணைத்திருப்பது பெரும் சிறப்பு. இந்தப் புத்தகம் உளவியல் சிக்கல்களை பற்றி பேசுகிறது. பிரச்சனைகளை அலசுகிறது. தீர்வுகளையும் சேர்த்தே முன்வைக்கிறது

திரைப்படங்கள் பார்ப்பது கதிருக்கு மிகப் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு. தன் தேடலுக்கான புதையலாய், உடன் பயணிக்கும் ஜீவனாய், ஆசுவாசமாய் ஒதுங்கும் கதகதப்பான தாய்மடியாய் நினைப்பது திரைப்படங்களைத் தான். திரைச்சாளரத்தின் வழியே யார் ஒருவரும் உலகின் எந்த ஒரு மூலைக்கும் செல்லலாம் என்கிறார். பூவின் மடி, முள்ளின் நுனி, நம்பிக்கையின் வேர், அன்பின் ஈரம், துரோகத்தின் வலியை உணரலாம் என்கிறார். இந்தப் புத்தகத்தை வாசிக்கும் வாசகரும் இந்த அனுபவங்களை உணர வைப்பது இதன் சிறப்பு.

மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளை தெள்ளத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நூல். கோபம் என்ற உணர்ச்சி ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கிறது? அது தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் சேர்த்து எப்படி துன்பப்படுத்துகிறது என விளக்குகிறார் ஒரு கட்டுரையில்.

கோபத்தின் பிறப்பிடம் எங்கே…..?

‘‘காலம் காலமாய் சேகரம் ஆனது சிதறித் தெரிக்கிறதா…? இல்லை நொடிப்பொழுதில் முளைத்துக் கிளைத்து வெடித்துப் பிளந்து வந்து வீழ்த்தி மாய்க்கிறதா..?’’ என்று ஒரு கேள்வி எழுப்புகிறார் ஆசிரியர்.

கோபமான ஒரு சொல், உணர்வு, செயல், தொடுகை, பார்வை போதும் ஒரு மனிதனை மிருகமாக்க…. கோபம் என்ற உணர்ச்சி வடிந்த பின் எதை சேகரிக்கப் போகிறீர்கள் அந்த போர்க்களத்தில்…..? இறந்துபோய் கிடக்கின்ற உடல்களையா…? உறைந்து கிடக்கும் ரத்தக் குளத்தையா? இல்லை துடிக்கும் உயிர்களையா…?’ என்ற அவரின் கேள்வி அதிர்ச்சியளிக்கிறது.

கோபத்தை அவர் தீராப்பசி கொண்ட ஒரு மிருகமாக உருவகம் செய்கிறார். பசி கொண்ட ஒரு மிருகம் அதன் இரை கண்ணில் பட்டால், அடித்துத் தின்றுவிட்டு, பசி அடங்கிய பின் படுத்து ஓய்வெடுக்கும். ஆனால் கோபம் என்ற உணர்ச்சி கொண்ட மிருகத்தின் பசி என்றும் அடங்கப் போவதில்லை என்று சொல்கிறார்.

சமூக வலைதளங்களில் பொறுப்பில்லாமல் பகிரப்படும் காணொளிகளை கண்டிக்கிறார். அது சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய துன்பத்தை சேர்க்கும் என்ற அடிப்படை அறிவும், யோசனையும் இல்லாமல் பகிரும் நெட்டிசன்களுக்கு ஒரு குட்டு வைக்கிறார். அதிலும் எதிர்மறையான கருத்துக்களைப் பகிரும் காணொளிகள் ‘ ஏழு தலைமுறைக்கான எதிர்மறை’ என்கிறார் அழுத்தம் திருத்தமாக.

இந்தப் புத்தகத்தில் பெண்களின் நுண்ணிய மன உணர்வுகளை, வேதனைகளை, காலம் காலமாய் அவர்கள் அனுபவித்து வரும் அடக்குமுறையையும் மிக சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கிறார். பெண் எழுத்தாளர்கள் மட்டுமே எழுதத் துணிந்த மாதவிலக்கு பிரச்சனை பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். எத்தனை ஆண்கள் ஒரு பெண் உபயோகப்படுத்தும் நாப்கினை கையால் தொட்டுப் பார்த்திருக்கிறார்கள்? ஏன் எப்போதும் பெண்களின் மாதவிலக்கும், அது குறித்த விஷயங்களும் ஆண்களுக்கு அன்னியமாகவும் இரகசியமாகவும் வைக்கப்படுகிறது என்று கேட்கிறார். ஒரு பெண் தனக்கு இன்று மாதவிலக்கு. அதனால் இன்று லீவு தேவை என தன் ஆசிரியரிடமோ, மேல் அதிகாரியிடமோ சொல்லத் தயங்குவது ஏன்..?

பெண் குறித்த தவறான கோட்பாடுகளையும் கொள்கைகளையும் வைத்திருக்கும் சமூகத்தை சாடுகிறார் ஒரு பெண் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வரையறுக்கும் அதிகாரத்தை சமூகத்திற்கு யார் கொடுத்தது?

தன் துணையை இழந்த ஆணோ அல்லது பெண்ணோ தன் முதுமைக் காலத்தில் தன்னுடன் இருக்க துணை தேடும் போது அதனை இந்த சமூகமும், உறவுகளும், நட்புகளும் எதிர்ப்பது ஏன்…? பரஸ்பர புரிதலுடன் கூடிய துணை எவ்வளவு அவசியம் என்பதை அழகாகச் சுட்டிக் காட்டுகிறார்.

வாழ்க்கைப் பற்றிய இவரின் கண்ணோட்டம் மிக அழகானது. முழுக்க முழுக்க நேர்மறைகளையோ அல்லது முழுவதும் எதிர்மறைகளையோ கொண்டதல்ல வாழ்க்கை. ஒவ்வொருவருக்கும் வாழ்வு என்ன தருகிறதோ அதை அப்படியே எதிர்கொள்ளுவது தான் அழகு. வாழ்ந்து பார்த்து விடவேண்டும் இந்த வாழ்க்கையை என்ற சொற்கள் மிகப் பெரும் உத்வேகம் தருகிறது.

‘‘ வாழ்வை ரசிப்பவர்களை, கொண்டாடுபவர்களை அந்த வாழ்க்கைக்குள் அவர்கள் கண்டடையும் ஏதோவொன்று பிரயமுடன் ஒட்டியணைத்து, அவர்கள் விரும்பும் வண்ணம் இயக்கி நகர்த்துகிறது’’
‘வாழ்வு என்பது மரணத்திற்கு எதிரான நிலை’ என்ற கட்டுரையின் இறுதி வரிகளாக மேற்கண்ட வரிகள் அமைந்து பெறும் நம்பிக்கையை வழங்குகின்றன.

கட்டுரைத் தலைப்புகள் கவித்துவமாகவும் பொருத்தமாகவும் அமைந்திருப்பது சிறப்பு. சமூகத்திற்கு மிகவும் தேவையான கருத்துக்களை உள்ளடக்கிய இந்த புத்தகம் ஒரு கருத்து பெட்டகம் என்பதில் ஐயமே இல்லை. மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் அருமையான நூல் இது.

நூல் : திரை எனும் திணை
ஆசிரியர் : ஈரோடு கதிர்
பதிப்பகம் : வாசல் படைப்பகம்
விலை: 150
விஜி ரவி.

Kalapuvan Kavithai கலாபுவன் கவிதை

கலாபுவன் கவிதை

என் ஏகாந்தத்தின் தோழன் கவிதையே
தனிமையில் எழுதும் கவிதை தான் பலருக்கு பிடிக்கிறது
கவிதையே கதையின் சுருக்கம்
நானூறு உணர்ச்சிகளை நாலு வரிகளில் சொல்வது கவிதை
பாநூறு எழுதினாலும் படிப்பதற்கு ஆளில்லை
ஆகவே தான் சில வரிகளில் சிற்பமென செதுக்குகிறேன் கவிதைகளை
ஆராய்ந்து எழுதுகிறேன்
அடுக்கு மொழியில்லை ஆனாலும் நிஜங்களே அவை
தேனூற்று வார்த்தைகளை தேடி எழுதவில்லை
தேடி வருவோர்க்கு தெவிட்டாமல் எழுதுகிறேன்
சீரான வரிகள் இவை
சிந்தனையைத் தூண்டுபவை

கடைசி மனிதனுக்கும் கற்பனை வடிவதில்லை
சோகமோ சுகமோ சொல்லிவிட்டால் ஒரு நிம்மதி தான்
வானிலவு இருக்கும் வரை வாழ்கையில் கவிதையுண்டு
தேனிலவு முடிந்தாலும் திகட்டிடுமோ வாழ்க்கையிங்கு…..

Karkavi's Poems 5 கார்கவியின் கவிதைகள் 5

கார்கவியின் கவிதைகள்

தேநீர் இடைவேளை
***********************
கூடி அமர்ந்த குழுக்கள்
பரப்பரப்பாக சிலர்
பதட்டத்துடன் சிலர்…

நாளை என்ன நடக்கும் எனும் எண்ணத்தில் பலர்
இன்றைய நிலையில் எந்த மாற்றமும் வேண்டாமென
மற்றும் பலர்…!

ஆற்றங்கரை ஓரங்களில் அணிதிரண்டனர் பலர்..
ஆண்டு அனுபவித்தவர்கள் பலர்…!

அந்த சாலையோரத்தில் எல்லைக்கல்லில் குளிர்…
வந்த வண்டிகளும்
போன வண்டிகளும்
நின்று இளைப்பாறிச் செல்கின்றன..!

இன்றொடு முடியும்
இந்த மாலையில்
எத்தனையோ யோசனை
எத்தனையோ கவலைகள்..!

அத்தனையும்
நிரம்பி வழியும்
இந்த இனியதோர் தேநீர் இடைவேளையில்
கொஞ்சம் செய்திகளும்
கொஞ்சம் இனிப்பும்
நினைவுகளோடும்
வர்ணிப்புகளொடும்
அமைதியாகக் கடந்து செல்கின்றன….

கவிஞர் கார்கவி✍🏻
நாகப்பட்டினம்

இசையும் இதயமும்
***********************
நிலவாக நீ வர இயல் கொண்டு நா மலர்ந்தேன்…!
நினைவாக நீ மலர மலராக தினம் மலர்ந்தேன்…!
ஊடுபனி காதணைக்க கரம் நீட்டி உனையணைத்தேன்..!
வண்டாக ரீங்காரமிட்டு இதயம் நுழைய நான் விழைந்தேன்…!

மாரி போல நீ பொழிவாய்..!
ஒவ்வொரு சொட்டிலும் இசை பொழிவாய்…!
மின்னல் போல கண்ணில் படு..!
வெளிச்சம் இல்லை விருந்தாக செவிக்கு கொடு…!

இயற்கையே இசையாய்-என்
இதயமே இசையாய்…!
உலகமே நீயாய்- நின்
இதயத்தில் சிறு துளியாய்…!
தூண்டிலாடும் மனத்தே- நீ
சிறு வீணை கொண்டாயேயடி..!
இதயமே
என் இளம் வீணை ரகசியமே…!

இதோ
என் இதயராகங்களிலிருந்து வழங்குகிறேன்
இந்த
அடர்ந்த இருள்
கானகத்தில்
அள்ளிப்பருகிட
இசையாய் வழியும்
என் காதல்.

மகிழ்வின் பின் யாரோ
***************************
நான்
மகிழ்வாகத்தான்
இருக்கிறேன்
என் நானை
கூர்ந்து பார்க்கும்
உன்
கண்களுக்கு…!

யாராலும்
அறிய இயலாத
பூதக் கண்ணாடிகளை
கொண்டு பிறந்த
உமக்கு மட்டும்
எப்படி
தெரியவருகிறது…!

என்
கவலைகளின்
கானல் கடலில்
கவிழும்
காகிதக் கப்பலில்
மொத்த மன எடைகளை
நிரப்பிய
தருணங்கள் மட்டும்…!

சைட்_ஆஃப்_சனீஸ்வர்
***************************
புல்லி க்ரௌடு
நோ டவுட்
தட் இஸ் கோயில்
சைட் ஆஃப் சனீஸ்வரா….

ஆம்
இருக்குற ஏழரை இயர்ஸ்
தாண்டி கரணம் போடுற
எனக்கு. மறுபடியும்
இஸடார்ட்டிங் ஏழ்ரைஐஐ…..

வாரவாரம் அம்மா தேய்க்காத
ஜின்ஜெல்லி மிச்சத்துல
மொத்த ஏழரையும்
தீர்ந்துபோச்…….

கார்த்திகா சியாக்கா
இப்போ கனகா சியக்கா
ஆனதுதான் கொஞ்சம் வருத்தம்…

கருப்புத்துணி கலரா இருந்தா
துண்டு கட்டாம குளிக்கிற அப்பாக்கு கோவனமாவாது
இருந்திருக்கும்….

வாசலுல முப்பது
வாசல் தாண்டுனா அம்பது
சூடம் பத்தி அம்பது
சுட சுட இட்லி அம்பது
இட்டிலி போல மல்லிப்பூ அம்பது

மொத்த துணிய
உருவிப்போட்ட
அப்பாக்கு கோவனத்த
கலட்டி போன மணமல்ல
நேத்துதா வாங்குனாதால….

பொட்டிக்குள்ள போடச்சொன்ன
துணியெல்லாம்
படியோரம் பல்லிழிக்கு
வாய் திறந்து கெடக்குது பெட்டி….

ஒரு சொட்டு எண்ணெயில
ஆரம்பிச்ச பரிகாரம்
இப்ப சிந்தால்,மெடிமிக்ஸ் ல
நுரை நுரையா முடிஞ்சு போகுது…..

துணிமாத்த அறை அறிய இடங்கோடுத்த
பெரியகுளத்துக்கு
ஆம்பளைக்கும் மானம் இருக்குறத தண்ணில எழுதி விட்டுருச்சி போல…..

துணிமாத்தி புருசனும் புள்ளையும் நடுக்கல்ல
இப்பதான் ஐபுரோவும்,லிப்ஸ்டிக் தேடுது அந்தாண்ட ஒரு அக்கா….

வேண்டிறது சனி
தொப்பையனுக்கு எதுக்குயா
தேங்கா…சோடி வேற அம்பது……

அன்னதானம் அந்தபக்கம்
ராசிக்கொரு கேட்டலாக்குல
என்ராசிக்கு விரையமாம்
இருபது சாப்பாடு தரணுமாம்…..

எதுக்கினே தெரியும்
விளக்கும் எண்ணையும்
துணையோடு போறதால
வாங்கிக்கிட்டா எண்ணெயும்….

செருப்பு போட இலவசம்
பேக் வைக்க இலவசம்
சிரிச்சிக்கிட்டே
மொத்தத்தையும்
அர்ச்சனைல லாக் பன்னிட்டாப்டி…….

இந்தபக்கம் டோக்கன்
அந்த பக்கம் டோக்கன்
சாமிக்கே வியர்த்துடன்
இந்த வட்டத்த சொன்னா….

அறியாத சாமி
அரை நொடி பாக்க
அந்தப்பக்கம் அம்பது டோக்கனு
இந்தபக்கம் நூறு டோக்கனு…
அந்த அரைக்குள்ள
ஏழரைய சரிபன்ன
கட்டம்பாக்குற
அந்த மனுசனுக்கு தெரியாதது
வருத்தம்தா…..

எப்படியும் ஏழரை கன்ஃபார்ம்
என்னவோ
இன்னைக்கே முடியுறமாறி
முழுசா முழுவிட்டு வான்
வீட்லேந்து போனுவேர….

கும்பிடாத நின்னுனு
சொல்லியனுப்புன
அம்மாகு தெரியாது
கும்புடலனா இன்னும் ஒரு  ஏழ்ரைய சேத்துவிட்டா என்ன செய்யனு…..

வருசா வருசம்
ராசிவிட்டு ராசி மாற்ற
ஈஸ்வரா
காலம்புல்லா
கூட வரமாறி லேடீஸ்வரனா
மாடிஃபை ஆகிட்டியேயா……

சாதகத்த
மாத்திடுற
கொஞ்சம் பாத்து
பன்னி விடுமய்யா….

ஏற்கனவே ஏழரை பல சீரொக்கல பின்னடி தாங்கி நிக்கிது
இப்ப நீ வர கன்பார்ம் பன்னிபுட்ட

என்னத்த சொல்ல
ஏற்கனவே விரையத்த
அனுபவிச்சவனுக்கு
வேர என்ன விரையம்
கொடுப்ப நீ
நீ கொடுத்தாலும் விரையம்
ஆக ஒன்னுமில பிகாஸ்
இரிந்தாதானே விரையம் பன்ன..
சோ….
இத்தோட நீ முடிச்சிக்கிர
இந்த கும்பராசிக்கு…

இயர் ஆஃப்டர் வில் மீட்
அவர் சைட் ஆஃப் சனீஸ்வரா……..

Ellaiyilla Inbam Poem By Adhith Sakthivel எல்லையில்லா இன்பம் கவிதை - ஆதித் சக்திவேல்

எல்லையில்லா இன்பம் கவிதை – ஆதித் சக்திவேல்

நாடுகளின் எல்லைகளில்
போராய் வெடிக்கின்றது
எல்லை மீறிய பனிப் போர்
எல்லையோர கிராமங்களில்

எட்டி நிற்க எச்சரிக்கும் மின் வேலி
முட்டி நிற்கும் இரு நாட்டுத் துப்பாக்கிகள்
தினம் தினம்
தீபாவளி கொண்டாடும் வானம்

வெடிச்சத்தத் தாலாட்டுகள்
அன்னையரின் தாலாட்டுக்குப் போட்டியாய்
வேறுபாடு ஏதுமில்லா
பகல் இரவுகள்
சூரிய ஒளி ஒன்றைத் தவிர

வெடிகுண்டுச் சத்தங்களை
விழுங்கிய இரவுகள் விடியும்
சீறிப் பாயும் போர் விமானங்களின்
பேரிரைச்சலுடன்

ராணுவ வண்டிகளால்
புழுதியான சாலைகள்
ஓடி ஒளிந்து உயிர் காக்க
பதுங்குக் குழிகளான காடுகள்
நாற்புறமும் திறந்திருக்கும்
பதுங்கு குழிகள்- அவற்றில்

ஒளியக் கற்றுக் கொண்ட குழந்தைகள்
அக்குழிகளின் இடுக்குகளில்
ஒளிந்து கொண்ட அவரது கல்வி

ஆழப் புதைந்த
தோட்டாவைத் தோண்டி எடுக்கையில்
பீறிட்ட குருதி உறைந்து கிடக்கும்
அக்குழிகளில் தரை எங்கும்

குண்டு துளைத்த காயங்களில்
ரத்தத்துடன் கசியும்
எல்லையோரக் கனவுகள்

வேடிக்கையாய்
பலூன்களைப் பறக்க விட்டு
ஓடி ஆட வேண்டிய குழந்தைகள்
வெடித்த வெடிகுண்டுகளின் மீதங்களை
வீசிப் பிடித்து விளையாடுகின்றன
மரணத்தின் வாசனை நிறைந்த வீதிகளில்

கருவிலிருந்தே வெடிச் சத்தத் தாலாட்டுக்கு
உறங்கி வளர்ந்த குழந்தைகள்
உறங்க மறுத்து அழுகின்றன
அச்சத்தம் கேட்கா இரவுகளில்

பொம்மைகளுடன் விளையாடும் குழந்தைகள்
பொம்மைகள் ஆகின்றன
எச்சரிக்கைச் சங்கொலிகள்
எல்லையில் ஒலிக்கும் நேரங்களில்
இலக்குத் தவறிப் (?)பாய்ந்த எறிகணைகளால்
கருகி நிற்கும்
ஆலயங்கள்
வீடுகள்
பள்ளிகள்
பிள்ளைகளின் புத்தகங்கள்

வெடிச் சத்தம் கேட்கா நாட்களில் கேட்கும்
பள்ளிகளில் மணிச் சத்தம்
மலைக் குன்றுகளில் ஓடி ஒளிந்து விளையாடும்
மேகங்களின் இடையே
ஓடி ஒளியும் துப்பாக்கி ஏந்திய உருவங்கள்

அணி வகுத்த
ராணுவ வாகன வரிசை கண்டு
மலர பயந்த பூக்கள்
பேசப் பயந்த கிளிகள்
பாடப் பயந்த குயில்கள்
வெளியெங்கும்

பூத்துக் குலுங்கிய பள்ளத்தாக்குகளில்
மலரும் ஓரிரண்டு பூக்களும்
கருகி உதிர்ந்திடும்
வீசும் கந்தகக் காற்றில்

மன்னராட்சி மறைந்தும்
மண்ணாசை மறவா
மக்களாட்சி மன்னர்கள்
அம்மன்னரின் ஆணைக்கு
எல்லையில் போரிடக் காத்திருக்கும்
அவரது படைகள்

கடந்த போர் நிறுத்தத்தில்
பறக்கவிடப்பட்ட அமைதியின் சின்னங்கள்
பிரார்த்திக்கின்றன அமைதி வேண்டி
தூரத்தில்
வான்நோக்கி வளர்ந்த
பைன் மரக் கிளைகளில் அமர்ந்து

அமரவும் முடியாது
பறக்கவும் முடியாது
அந்தரத்தில் மிதக்கும் கிளைகளில்
தொங்கும் பறவைகளாய்
அச்சத்தின் ரேகை நிரம்பிய நாட்களில்
காலமெல்லாம் மக்கள்

எண்ணிப் பார்த்தேன்
இரு நாட்டு எல்லை – வெறும்
நிர்வாக எல்லையானால்……
எல்லை தாண்டியது என் மகிழ்ச்சி

அடையாளம் இழக்கும்
இரு நாட்டு தேசிய நாணயங்கள்
எல்லையோரக் கடைகளில்
இந்நாட்டோர்
அந்நாடு சென்றிடுவர்
தேநீர் அருந்திவர

அந்நாட்டோர்
இந்நாடு வந்திடுவர்
காய்கறி வாங்கிச் செல்ல

அங்காங்கே பூங்காக்கள்
எல்லை நெடுக
இருநாட்டு குழந்தைகள்
சறுக்கி விளையாடிட

பெண் எடுக்கவும் கொடுக்கவும்
தடை இல்லா எல்லையில்
திருமண ஊர்வலங்கள்
இரு திசைகளிலும்

இரு நாட்டுக் கொடிகளும்
அடுத்தடுத்த கம்பங்களில்
ஒருவர் மாற்றி ஒருவர்
ஏற்றி இறக்குவர்

கம்பி வேலி இல்லா எல்லை
துப்பாக்கிக்கு
வேலை இல்லா எல்லை

இன்றோ
ஒவ்வொரு நாட்டிலும்
பாதி நிதி – நிதிநிலை அறிக்கையில்
பாதி நிதி எல்லைக்கும் – அங்கே
அண்டை நாடுகள் தந்திடும் தொல்லைக்கும்
பாராளுமன்றம் பேசும்
பாதி நேரம் எல்லையைப் பற்றியே

இந்நிலை மாறி
என் ஆசை நிறைவேறிடின்
எல்லைகள் இல்லா நாடுகள்
எப்போதும் மகிழுமே
எல்லை இல்லா இன்பத்தில்………

Kavithai thamizha's Poems கவிதை தமிழனின் கவிதைகள்

கவிதை தமிழனின் கவிதைகள்




உழைப்பின் உயர்வை
உலகிற்கு உணர்த்தும்
உன்னதப் பேரினமே….!

உலகே வியந்து
உமக்காய் தந்தது,
இன்றைய மே தினமே….!

வியர்வை துளிகளின்
விலையை அறிந்தோர்
உமைபோல் எவருமில்லை…!

நேரம், நேர்மை
இரண்டையும் உணர்ந்தோர்
நீயின்றி எவருமில்லை…!

உடலை வருத்தி
ஓய்வை மறந்து
இயங்கும் உயர்பிறப்பே…!

உலகம் சுழல
உறவுகள் மகிழ
உழைக்கும் எம்மக்களே…!

உழையுங்கள் உயருங்கள்
உறவோடு மகிழுங்கள்….!
மேன்மைமிக்க உங்களுக்கு
மே தின வாழ்த்துக்கள்…!

**********************************************************
கல்லூரி வாழ்கைபோல இருந்ததில்லை எங்கும்…..!
கரையாத நினைவுகள் நெஞ்சின் ஓரமாய் தங்கும்….!
அரட்டைகள் அடித்துவிட்டு
நள்ளிரவே தூங்கும்….!
தருணங்கள் மீண்டும்வருமா என்றுமனம் ஏங்கும்….!

அதுபோல ஓர்நாளை
எதிர்நோக்கி காத்திருந்தேன்….!
ஆனாலும் இதுவரையில்
ஈடேற மறுக்கிறதே…..!
எங்கெங்கோ பிறந்திருந்தோம்,
நாமங்கே இணைந்திருந்தோம்…..!
நட்பென்ற ஓர்மொழியால்,
நகம்சதைபோல் பிணைந்திருந்தோம்…..!

அந்தநான்கு வருடங்கள்,
நினைவில்நீங்கா நிமிடங்கள்….!
இடையிடையே திருப்பங்கள்,
ஈடில்லா சொந்தங்கள்….!
எதிர்பாலின ஈர்ப்பியலால்,
மலர்ந்திருந்த காதல்கள்…..!
எதிர்கால இலக்கறியாது
கடந்துவிட்ட காலங்கள்…..!

எதிர்கால சிந்தனையில்லை,.
எதைப்பற்றியும் கவலையுமில்லை….!
குடும்பச்சுமை முதுகில்இல்லை,
கொடுத்துவைத்த வாழ்க்கையிதுவோ…!

பையில்பெரும் பணமுமில்லை,
எம்தலையில் கணமுமில்லை…..!
எதிர்கொண்ட இன்பமதற்கோ,
எல்லையும் இல்லவே இல்லை….!

************************************
மெய்போல பொய்யையும்
பாரெங்கும் பரப்பும்…!
ஒருபடத்தை பலகுழுவில்
பதிவிட்டு வருத்தும்…!
இவனாலே இளம்விழிகள்
இரவெங்கும் விழிக்கும்…!
நேரத்தின் மாண்பினையும்
நேர்த்தியாக அழிக்கும்…!

அப்டேட் செய்யச்சொல்லி
அவ்வப்போது வதைக்கும்…!
ஆண்ட்ராய்டு போன்களின்
ஆயுளையும் குறைக்கும்…!
நாம்தொலைத்த உறவுகளை
எளிதாக இணைக்கும்…!
நாள்முழுக்க நம்மோடு
பயணிக்க துடிக்கும்…!

காலத்தை விரயமாக்கும்
சதிகாரன் கண்டுபிடிப்பு…!
நண்பர்கள் கைகோர்க்கும்
அறிவியலின் அன்பளிப்பு…!
ஆயிரமாயிரம் தகவல்களின்
ஒட்டுமொத்த அணிவகுப்பு…!
அவ்வப்போது சலசலப்பு
அளவற்ற கலகலப்பு – அட
அதுதாங்க நம்ம வாட்ஸ்அப்பு…!

***************************************
ஆண்டவன் நேரில் வந்திட மாட்டான்…!
அதனால் அன்னையை அனுப்பிவைத்தான்.!
ஆனால் அவளோ,கடவுளை விஞ்சி
அன்பை பகிர்ந்தே, உயர்ந்து நின்றாள்..!

கேட்டது யாவையும், எம்மத இறைவனும்
உடனடியாகத் தருவதும் இல்லை..!
கேட்காமலே தந்திடுவாளே அவள் போல்
உலகில் எவருமே இல்லை…!

பிள்ளையின் சிறு வெற்றியைக்கூட,
சாதனை போலவள் மெச்சிடுவாளே….!
உதட்டில் நாளும் உச்சரித்தே
ஊரார் முன்பவள் உளமகிழ்வாளே…!

பிழையாய் அவளை ஒதுக்கி வைத்தாலும்
பிள்ளைகள் நம்மை வெறுத்திட மாட்டாள்…!
அன்பை நாமும் தர மறுத்தாலும்
அன்னை அவளோ, ஒதுங்கிட மாட்டாள்…!

கள்ளங் கபடம், இல்லா அன்பை
கடவுளர் கூட காட்டுவதில்லை..!
காசு கொடுத்த மாந்தருக்கே
கருவறை வரையில் தரிசனம் தருவார்…!

முந்நூறு நாட்கள் நம்மை சுமந்து
கருவறை தன்னில் இடமும் தந்து
வாழ்கிற வரையில், நம்மை நினைந்து
வீழ்கிற உயிரை, மறந்திடலாமா…!

அவள்செய்த தியாகத்திற்கு தந்திட ஈடாய்
அவனி முழுவதும் போதாது, உணர்வாய்..!
குருதியை பாலாய், கொடுத்தவள் அறிவாய்…!
தாயென்னும் இறைவியை நித்தம் தொழுவாய்…!

*****************************************************
எளியோர்க்கும் புரியும்படி
எழுதி வைப்பது
எளியநடையில் தமிழ்ச்சொற்களை
தொகுத்து அமைப்பது

வந்துவிழும் வார்த்தைகளை
அடுக்கி வைப்பது….!
வரிமுழுதும் எதுகை,மோனை
அமைத்து வைப்பது…!

கனவுகளை நடுநடுவே
திணித்து வைப்பது…!
கற்பனைகளை கண்முன்னே
விரிய வைப்பது…!

கவிதைபற்றி இதற்குமேலே
என்ன சொல்வது..?
மொத்தத்தில் அதன்பணியோ
மனதை வெல்வது…!

*****************************
அண்ணா…
நாடாளும் மன்றத்தினை
நாவாலே வென்றவனே…! தமிழ்நாடென பெயர்சூட்டிய
தன்மானத் தமிழ்மகனே…!
விந்திய மலைதாண்டி
இந்திக்கு வேலையில்லை…!
திராவிட இனம்போல
திராணிகொண்டோர் எவருமில்லை…!

கலப்புத் திருமணத்தை
கலங்காமல் ஆதரித்தாய்….!
சட்டத்தை கொண்டுவந்து
சரித்திரத்தில் இடம்பிடித்தாய்…!

சமூக நீதிகாக்க
சளைக்காமல் நீ உழைத்தாய்…!
சாதியத்தை வேரறுக்க
சட்டங்கள் இயற்றிவைத்தாய்…!

பெரியாரியம் பேசிவந்த
பெருமைமிகு தலைமகனே….!
மகத்தான ஆட்சியினை
மறவாது தமிழினமே…!

*******************************
நம்மாழ்வார் நம்மை ஆள்வார்…!
இவரை யாரென்றறியா தமிழினம்-இங்கு
இருப்பதால் வலிக்கிறது என்மனம்…!
தன்னலம் அறியா இவர்குணம்-இவர்
தமிழ்நில இயற்கையின் நூலகம்…!

இயற்கை வேளாண்மை இவர்மூச்சு-நம்மை
இழுத்து கிறங்கடிக்கும் இவர்ப்பேச்சு…!
சற்றும் ஓய்வறியா இளைஞரிவர்- சூழலில்
சர்வமும் கற்றறிந்த கலைஞரிவர்…!

ஒருபோதும் அழிவில்லா ஒருதலைவர்-இவர்
ஒருவரே வேளாண்மைத் தமிழ்த்தலைவர்…!
இன்றென் வரிபோற்றும் நம்மாழ்வார்…!
என்றும் நல்வழியில் நமை ஆள்வார்…!

*******************************************
வ.உ.சி வரலாற்றை
வாசித்து முடிப்பதற்குள்,
கண்கள் குளமாகி,
கசிந்துருகிப் போகுமையா…!

அமுதத் தமிழ் மொழியில்
ஆழ்ந்த அறிவு மிக்கார்…!
வறுமையில் உழல்வோர்க்கு
வழக்காடும் குணம் உடையார்…!

அந்நிய நாட்டுப் பொருட்களை
அவர்கள் முன்னே தீயிட்டார்…!
பாரதியுடன் நட்பு கொண்டு,
பட்டாளிக்காய், பாடு பட்டார்…!

சுப்பிர மணிய சிவாவோடு,
சுதந்திரப் போரில் ஈடுபட்டார்…!
விடுதலை வீர வரலாற்றில்
விபரீத தீர்ப்பைப் பெற்றார்…!

சணல் நூற்கப் பணிக்கப்பட்டு
சகிக்க முடியா இன்னலுற்றார்…!
சிறப்பு மிக்க வழக்கறிஞன்
சிறை பட்டு செக்கிழுத்தார் …!

மண்ணுக்காய் மக்களுக்காய்
பொன்பொருளை இழந்திருந்தார்…!
சிறை முடிந்து திரும்புகையில்
மறுபடியும், மனம் நொந்தார்…!

வரவேற்க எவரும் இல்லை
வந்து தங்க வீடுமில்லை
வாங்கி மேவிய கப்பலில்லை
ஏங்கி தவித்தான் குறைவாழ்வில்…!

தென்னாட்டுத் திலகரின்,
தியாகப் பெரு வாழ்வை,
இந்நாட்டில் வாழுகிற
மக்கள் நாம் மறவலாமா…!

அவர்தம் தியாகம்,
அறியாத் தலைமுறை
இருப்பது வன்றோ
இழி நிலைமை…!

அவர்தம் நூற்றாண்டை
அழகுற நடத்துதல்
அரசின் இன்றைய
முதல் கடமை…!

Freedom to slave Poem By Henry Louis Vivian Derozio in tamil Translated By Era Ramanan மொழிபெயர்ப்பு கவிதை - அடிமைக்கு விடுதலை - ஹென்றி லூயிஸ் விவியன் டெரோசியோ | தமிழில்: இரா இரமணன்

மொழிபெயர்ப்பு கவிதை – அடிமைக்கு விடுதலை – ஹென்றி லூயிஸ் விவியன் டெரோசியோ | தமிழில்: இரா இரமணன்




‘நீ இனி அடிமை இல்லை’
என்றொரு அறிவிப்பு
காதில் விழுந்தபோது
அவன் அப்படி பரவசப்பட்டான்!
சுதந்திரமானவன் என்ற
முதன்முதலாய் அறிந்தபோது
அவன் இதயம்
பெருமையால் அப்படி துடித்தது!

சட்டென்று
ஆத்மாவின் மேன்மை உணர்வுகள்
சுடர் விடத் தொடங்கியது.
இனி மண்டியிட வேண்டாம்.
சிந்தனைகள் உயரத் தொடங்கின.
தான் ஒரு மனிதன் என்று
தனக்குள்ளே உணர்ந்தான்.

மேலே நோக்க
சுவர்க்கத்தின் சுவாசக் காற்று
புதிதாய் அவனை சூழ்ந்தது.
காட்டுப் பறவைகள் பறப்பது கண்டு
அவன் முகம்
மகிழ்ச்சிப் புன்னகை பூத்தது..
காலடியில் ஓடை நோக்க
அது சுழித்தோடியது.
காற்றும் பறவையும் வெள்ளமும் போல்
‘நானும் சுதந்திரமானவன்’
என்று கூக்குரலிட்டான்.

‘ஓ விடுதலையே!
உன் பெயரில் கூட
ஏதோ பிரியம் இருக்கிறது.
அது
ஆத்மாவின் அகல் விளக்கை
அணையா சுடராய் ஏற்றுகிறது.

உனக்காய்
உறையிலிருந்து உருவும்
தேசபக்தனின் கத்திக்கு
வெற்றி சேவகம் செய்கிறது.
விடுதலை வேண்டி
உன்னத குருதி சிந்தும்
மார்புகள் வாழ்க!
சர்வாதிகாரி பிணித்த
அடிமை சங்கிலியை உடைத்தெறியும்
வலிய கரங்கள் வாழ்க!
சீரழிக்கப்பட்ட மனிதனுக்காய்
சிந்தித்தால்
அது அடிமைக்கும் சுதந்திரம்
அளித்திடுமே!

பிப்ரவரி 1827
ஹென்றி லூயிஸ் விவியன் டெரோசியோ 1809ஆம் ஆண்டு கல்கத்தாவில் பிறந்தவர். இவரது தந்தை போர்த்துகீசியர். தாய் இந்தியர். 19ஆம் நூறாண்டின் ஐரோப்பிய ஆசிய ஆளுமைகளில் ஒருவர். கல்லூரிப் பேராசிரியராகப் பணி புரிந்தார்.காலரா நோயினால் தனது 22ஆம் வயதிலேயே காலமானார். போயம்ஸ்(1827), தி ஃபக்கீர் ஆப் ஜுங்கீரா, தி பொயடிக்கல் ஒர்க்ஸ் ஆஃப் ஹென்றி லூயிஸ் விவியன் டெரோசியோ ஆகிய நூல்கள் எழுதியுள்ளார். அந்த கால கவிஞர்களைப்போல சுதந்திரம்,தேச பக்தி,நவீன சிந்தனைகள் ஆகியவை இவர் எழுத்துகளில் காணப்படுகிறது. தன்னுடைய மாணவர்களையும் காப்பிய நூல்களைப் படிக்க வைத்து புதிய சிந்தனைகளை ஊக்குவித்தார். இவரது புரட்சிகரமான கொள்கைகளினால் பேராசிரியர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அவரது ‘freedom to slave’ என்கிற பாடலை மொழியாக்கம் செய்துள்ளேன்.

இந்தப் பாடலில் கூறப்படும் விடுதலை மூன்று நிலைகளில் எடுத்துக் கொள்ளலாம். ஒன்று; ஒரு மனிதனின் பிற்போக்கான சிந்தனைகளிலிருந்து அவனது ஆத்மா விடுதலை அடைவது; இரண்டு ஆப்பிரிக்க, அமெரிக்க மற்றும் இந்திய கண்டத்தில் அடிமைப்படுத்தப்பட்டவர்களின் விடுதலை; மூன்றாவது அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்தியா போன்ற நாடுகளின் விடுதலை. மேலும் இறுதி வரிகள் அடிமைப்பட்டுக் கிடப்பவர்கள் பால் சிந்தனை செலுத்துபவர்களே சுதந்திரமானவர்கள் என்பது ‘அடிமைப்பட்டுக் கிடக்கும் நாட்டின் தொழிலாளி வர்க்கம் விடுதலை அடைய உதவாமல் அடிமைப்படுத்திய நாட்டின் தொழிலாளி வர்க்கம் விடுதலை அடைய முடியாது’ என்கிற மார்கீசிய கண்ணோட்டத்தோடும் ‘தன்னுடைய அடிமை சங்கிலியை கழற்றி எறிவது மட்டுமே சுதந்திரமாகாது. மற்றவர்களுடைய சுதந்திரத்தை மதித்தும் மேன்மைப்படுத்தியும் வாழும் வாழ்வே சுதந்திரமாகும்’ என்கிற நெல்சன் மண்டேலாவின் கூற்றோடும் ஒப்பிடத்தக்கது.

உசாத் துணைகள்:
1.Indian Writing In English – ஆங்கிலத் துறை- டெல்லிப் பல்கலைக்கழகம்
2.litreary yog – https://literaryyog.com/freedom-to-the-slave-by-derozio-summary)