காதலர் தினப்பரிசு சிறுகதை – ஹேமலதா
ராஜு விஜி இருவருடைய அப்பாக்களும் ஒரே இடத்தில் வேலை பார்ப்பவர்கள். வெவ்வேறு சாதி. நல்ல நண்பர்கள். ஒரே தெருவில் வீடு கட்டிக் கொண்டு இவர்கள் குழந்தைகளாக இருந்தபோதே வந்தவர்கள். குடும்ப நண்பர்கள். பிள்ளைகளின் பழக்கம் காதலாக மாறியது. பெற்றோர் களுக்கு சற்று தாமதமாகத்தான் தெறிந்தது.
விஜி மூத்தவள். தங்கை இரண்டு வயது இளையவள். ராஜு ஒரே பிள்ளை. செல்லமாக வேறு வளர்த்து விட்டனர். இவர்கள் காதலின் குறுக்கே ஜாதி.
பெற்றவர்கள் பாடு திண்டாட்டமாகி விட்டது. அக்கம் பக்கத்தார் அரசல் புரசலாக பேசியவர்கள் காது பட பேசத் தொடங்கினர்.
ஏனோ ஜாதி மாறி சம்மந்தம் செய்ய யாரும் விரும்புவதில்லை. நண்பர்களால் முன் போல இயல்பாய் இருக்க முடிய வில்லை.
விஜியின் பெற்றோர் தடை போட ஆரம்பித்தனர். தங்கையின் வாழ்வைச் சொல்லி விஜியைக் கட்டுப் படுத்தினர்.
விஜி நல்ல பெண். தனக்காக தன் தங்கையின் வாழ்வைக் கெடுக்க விரும்பவில்லை. ராஜு விடம் பேசி சந்திப்பை நிறுத்தி விட்டாள்.
ஆனால் காதல் நெஞ்சில் இருந்து வளர்ந்தது. காலம் கனிய காத்திருந்தனர்.
நல்ல வேளையாக ராஜுவிற்கு வெளியூரில் வேலை கிடைத்தது. போய் விட்டான்.
விஜி வேறு யாரையும் மணக்க மாட்டேன் என உறுதியாக கூறி விட்டாள். சின்னவள் அக்காவிற்கு பின்தான் என்றாள். அக்கா விஷயம் வெளியே தெரிந்தால் உனக்கு பிரச்சனை என்றார்கள். அவளை விட்டு எனக்கு கல்யாணம் செய்கையில் என்ன காரணம் சொல்வீர்கள்.
தவிர எனக்கு மணம் ஆனபின் அக்கா காதல் திருமணம் செய்து கொண்டால் அவர்களை ஏமாற்றி விட்டோம் என நினைக்க மாட்டார்களா. அப்படி செய்யக் கூடாது எனச் சொல்கிறாள். அவள் சொல்வதும் ஞாயம் தானே
அலுவலகத்தில் திடீர் என ராஜுவின் அப்பாவிற்கு நெஞ்சு வலி வர நேரே ஹாஸ்ப்பிடல் போய் விட்டனர். விஜியின் அப்பா சேகர் தான் அருகில் இருந்து பார்த்துக் கொண்டார். ராஜு தகவல் அறிந்து வர மூன்று நாட்கள் ஆயிற்று. அவன் அப்பா வீட்டிற்கு வந்ததும் சேகரும் அவர் மனைவியும் பார்க்கச் சென்றனர்.
ராஜுவின் அம்மா சீக்கிரம் ராஜு விஜி கல்யாணம் முடிக்க வேண்டும். எனக்கு ஆபத்து சமயத்தில் வந்து உதவி செய்த நல்ல நண்பரை விட ஜாதி பெறி தில்லை. தவிர ஜாதிக் காரர்கள் யாரும் உதவ முன் வர வில்லை என்பதே உண்மை என்றார் பிறகென்ன. உண்மைக் காதல் வென்றது.
விஜி கோவிலில் இருப்பாள் என ராஜு அவளைத் தேடிச் சென்றான் அவளுக்கு பிடித்த மலர்களோடு.
அந்த மலர்களை விட சிவந்து மலர்ந்த அவள் முகத்தை தைரியமாகக் கைகளில் ஏந்திக் கொண்டான்.
பெற்றோர்கள் அளித்த காதலர் தினப் பரிசை அனுபவிக்க தேன் நிலவை தாஜ்மகாலை பார்த்துக் கொண்டே கொண்டாட திட்டம் போட்டனர் இந்தக் காதலர்கள்
ஒரே சொந்தம் சிறுகதை – ஹேமலதா
இரண்டு நாளாக வீட்டை சுத்தமா பெருக்கி துடைச்சு ஒருவழி ஆச்சு. அஞ்சாறு வருஷமாச்சி. பூட்டியே கிடந்துச்சு. அப்பப்ப இவக தூரத்து சொந்தங்க கோவில் திருவிழாவுக்கு அக்கம் பக்கம் ஊர்களுலேந்து வந்தா போனா தங்கிப்பாக.
நாட்டமேகார ஐயாகிட்டே தான் சாவி கிடக்கும். பெரிய்ய சொத்து பத்து எதுவும் பூட்டி கிடைக்கலே. பெரியவங்க வாழ்ந்து வந்த வீடு பூர்வீகம்.
எங்களுக்கு ஒண்ணே ஒண்ணு பையன். அவனே இதோ இந்த வீட்டுலே தான் கண்ணு போலே பொத்தி பொத்தி வளர்த்தோம்.
அவனும் நல்ல படிச்சி பட்டணத்துக்கு வேலக்கி போய்ட்டான். இவரு உத்யோகத்துலே இருந்து ஓய்வுபெற்ற பிறகு நாங்களும் அவன் கூட போயிட்டோம்.
அவன் ஆசப்பட்டான்னு அங்கேயே வீடு வாங்க இவர் காசு எல்லாம் குடுத்தார். அவன் ஆசைப்படியே அவனோட வேலே பாக்கற பொண்ணே கட்டிக்கிட்டான்.
அவனுக்கு சமமா படிச்ச பொண்ணு. அதுவும் அவ்வளவு அவனைப் போலவே சம்பாதிக்குது. வீட்டிலேயும் அவனைப் போலவே கால் நீட்டி வக்காந்த எடத்துலேயே எல்லாம் கேக்குது.
நானும்தான் நமக்கு பொண்ணு இல்லேயேன்னு அதை பொண்ணு மாதிரி தான் நெனச்சேன். ஆனாலும் அதுக்கு நாங்க அங்கே இருக்கறது பிடிக்கலே. ஏதோ சொல்லிட்டே இருக்கும்.
நான் எதையும் பெருசு படுத்தலை. என்ன சொல்லுமோ எப்படி சொல்லுமோ அவனும் நாங்க செய்யறது தான் தப்பு மாதிரி நெனச்சான். என்னை என்ன சொன்னாலும் பரவாயில்லே.
இவர அவனோ அவளோ மரியாதை குறைவா பேசறது எனக்கு தாங்கலே. ஒருநாள் அவங்களை நேரில் கேட்டுப்புட்டேன். அது அவன் எதிர் பார்க்கவில்லை.
அம்மாவும் அப்பாவும் நம்பளே நம்பி இருக்காங்க. என்ன செஞ்சாலும் சகிச்சுத்தான் ஆகணும்னு நினச்சிட்டான் போல.
இவருக்கு நான் இங்கே வந்தா கிராம வாழ்க்கை வசதிக் குறைவு கஷ்ட்டம்னு நினைச்சிட்டார். எங்கே இருந்தாலும் புருஷனோட மான மரியாதையா வாழரதுதான் சுகம் என சொல்லி திடீர்ன்னு பொட்டியே தூக்கிட்டோம்.
என்ன அங்கேயே நின்னுட்டீங்க. கிணத்துக்கு வாளி மாட்டுங்க இல்லே இங்கே தானே நீ ராஜாவை குளிப்பாட்டுவே ?
ஆமா நீங்க தான் அத பாத்து மாஞ்சு மாஞ்சு போவீங்க. உங்க புள்ளைக்கு நான் சூடா தண்ணி ஊத்திடுவேனோன்னு தொட்டு தொட்டு பாப்பீங்க.. சீயக்கா கண்ணுலே போகுதுன்னு என்னேய எசுவீங்க. இப்போ என்ன
நாம எதையும் மறக்கலே. அவன் எப்படி நம்பளே வேணான்னு நெனக்கிறான் ?
அதுதாங்க இயர்க்கை. நம்ப வீட்டுலே மாத்திரம் இல்லே இது. வீட்டுக்கு வீடு இதுதான். தண்ணி மேட்டிலேருந்து தான் பள்ளத்துக்கு பாயும். பாசமும் அப்படித்தான்.
நம்ம பிள்ளே. அதுக்கு எப்பப்ப என்ன வேணுமோ பெத்தவங்க தான் செய்யணும். சின்ன வயசுலே குளிப்பாட்டினோம். அப்புறம் படிக்க வச்சோம். இப்போ குடும்பம் அமைச்சு குடுத்திட்டோம். அவன் நல்லா இருந்தா சரி.
நீ சுலபமா சொல்லிட்டே. எனக்கு முடியலே
நாங்க பொம்பளேங்க. கல்யாணம் ஆகர வரே ஒரு வீடு. அப்புறம் கட்டை வேகர வரை புருஷன் வீடுன்னு எல்லாம் மாத்திப்போம். கடைசி வரை எங்களுக்கு இது தான் ஒரே சொந்தம்.
நல்ல வேளை. நான் வச்ச தென்னம் பிள்ளைகள் நல்லா வளர்ந்து காச்சிக்கிட்டிருக்கு.
அது மட்டுமில்லீங்க. நம்ப சூர்யா குட்டி. எப்படி பெருசா வளர்ந்திருக்கு பாருங்க. நம்மை நல்ல நினைவு வச்சிருக்குங்க. எங்கேயோ இருந்தது. நாம வந்ததுலே இருந்து இங்கே அங்கே நகரலேயே.
இவ்வளுவுக்கு நாம அத பாத்து பாத்தா வளர்த்தோம். ஏதோ மிச்ச மீதியே போட்டோம். அது நம்பளே சொந்த அம்மா அப்பாவா நினைக்குது போல.
இனி அதை விடக்கூடாது. இனிமே நமக்கு அது துணையா இருக்கும். நாம் போர வழிக்கு புண்ணியம் கிடைக்கட்டும்
கடை திறப்பு விழா – ஹேமலதா
சிறுகதை: ஒரு கட்டு பீடி – ஹேமலதா
“இந்தா தாத்தா, புடி, அம்மாகிட்டே சொல்லாதே மீதி காசு இந்தா!”
“நீயே வச்சிக்க என் ராஜா“
பேரன் வாங்கி வந்த பீடிக்கட்டை வாசனை பார்த்தார் பெரியவர்.
‘என்ன வாசனை… இதைப்போய்த் தொடாதே என்கிறார்களே‘ என்றவாறு அக்கம்பக்கம் பார்த்து தலைகாணிக்கடியில் ஒளித்து வைத்தார். அதற்குள் மருமகள் வந்து விட்டாள்.
“ராஜா, தாத்தாகிட்டே என்ன குடுத்தே ?”
“தேன் மிட்டாய். அவர் அதை வாயில் போட்டுகொண்டார், இல்லையா தாத்தா?”
“பொய் சொல்லாதே, பீடி தானே வாங்கியாந்து கொடுத்தே? ஏங்க மாமா, இது நல்லா இருக்கா நேத்தி தானே டாக்ட்டர் படிச்சி படிச்சி சொன்னாரு சும்மா பீடி குடிக்கிறது அப்பறம் ரவைக்கு இருமிண்டே இருக்கறது உள்ளே வந்து படுன்னு சொன்னாலும் கேக்கறதில்லே…. என்னங்க, இனி என்னால முடியாது, உங்க அப்பன் தான் நான் சொன்னா கேக்கறது இல்லை இப்போ மவனும் சேந்துக்கிட்டான்“
“அப்பா, ஏம்ம்பா சொல் பேச்சு கேக்கறது இல்ல, டாக்டர் எங்களை ஏசுறாங்க…. உங்களைக் கொண்டு போய் எங்கனாச்சும் உட்டுட்டு வரப் போறேன் எப்போ பாத்தாலும் வீட்டுக்கு வந்தா இந்த ரவுசு!”
“அது தான் சரி, இந்த கட்ட போகணும்னு பாத்தா முடியலே“
“என்னங்க, நான் அவரக் கண்டிக்கத் தான் சொன்னேன். வீட்ட விட்டு தொரத்த சொல்லலே இது அவர் வீடு நெனப்பு இருக்கட்டும்“
“நீ அப்படியும் பேசுறே இப்படியும் பேசுறே… உங்க நல்லதுக்கு தானப்பா சொல்றோம்“
“அட போடா, அப்படி என்னடா இந்த உசிரு பெருசு“
“சரி சரி, நாளைக்கு படையல் போடணும் சாமான் வாங்கி வந்தீங்களா?.. என்னங்க, வாழைப்பழம் ஒரு சீப்புத்தான் கொண்டாந்திருக்கீங்க. பெரியவரு பழம் மட்டும் தான் சாப்பிடுறாரு, கூட வாங்கிருக்கலாமில்ல?”
“கருத்திடும் அப்பாலே வாங்கிக்கலாம். என்ன நீ பொறப்பட்டியா? நம்ப போகுங்குள்ளாற சினிமா ஆரம்பிச்சுடும் நான் போய் ருக்குவே கூப்பிடுறன்”
“இந்தாங்க மாமா, உங்களுக்கு கஞ்சி, தொட்டுக்க பக்கோடா ஒடச்சி வச்சிருக்கேன். நாங்க வர முச்சும் காத்திருக்க வேணாம், வெள்ளனே சாப்பிட்டுட்டு படுங்க காத்தடிக்குது உள்ளே போய் படுங்க, கதவ வெறுமனே சாத்தி வச்சிருக்கேன்“

‘இன்னிக்கு என்னமோ தெரியல விடிஞ்சதுலேந்து கிழவி நெனப்பு. நாளைக்கு அவள போன தினம். மகனும் மகளும் படையல் போடறாங்களாம்…. இன்னிக்கு நடந்தாப்போலே இருக்கு. அவளே மொத மொத இந்த வீட்டுக்குக் கூட்டியாண்டது. மவராசி ம்முனு முனகியது கிடையாது. மகன் பொறந்து மக பொறந்து அவங்கள கட்டி கொடுத்தது, வீட்டிலே ஆயிரம் நல்லது கெட்டது நடந்துடுச்சி, அவளும் சீக்குன்னு படுக்காம பொட்டுன்னு போயிட்டா! இந்த உசுரு தான் கிடந்து அலையுது. ஊருக்கே நான்தான் மூத்ததாம்… எங்க போனாலும் மருவாதி எல்லாம் சரி தான் இன்னும் எத்தனை நாள் போட்டிருக்கோ…. எல்லாம் விட்டுடேன் இந்த பீடிய உட முடியலே! பொழுது சாஞ்சிடுச்சு கஞ்சிய குடிப்போம். மருமக வந்து பாத்தா அதுக்கு ஒரு தரம் கச்சேரி நடக்கும். தங்கமான பொண்ணு என் மச்சான் மவ தான். என் நல்லதுக்குத்தான் சொல்லுறா.. மகராசிக்குக் கஷ்டம் தராம அவ மாமியா மாதிரி நானும் போய்டணும்‘
ரோட்டோர வயல் மாடசாமி வந்தான். அவன் கேணில தூரு வாரலாமா, போர் இருக்கு என்ன செய்யலாம்னு கேக்கறதுக்கா(க) வந்தான்
அவன் கேணி தண்ணி கற்கண்டா இனிக்கும். செலவு பாக்காம தூரு வாரச் சொன்னார் பெரியவர். ‘ஊரு சனம் குடிக்க மொண்டு போகுங்க சரி‘ன்னு சொல்லிட்டு அவன் போகவும், இவக வாரவும் சரியாக இருந்திச்சி.
“தாத்தா ரஜினி படம் டக்கரு“
“அதென்னடா டக்கரு?”
“இது தெரியாதா அப்படின்னா சூப்பர் ஜோரா இருக்குன்னு அர்த்தம்! நீ தான் வர மாட்டேன்னு சொல்லிட்டே“
“அட போடா, நான் பாக்காத பயாஸ்கோப்பா எங்க காலத்துலே? பக்கத்து டவுன்ல தான் டூரிங் கோட்டையில் படம் வரும். வாத்தியாரு, ஜிவாசி ஆக்டு குடுத்தா இன்னிக்கெல்லாம் பாக்கலாம். என்ன கருத்து, பாட்டு, குடும்பக் கதை
“இப்ப டிவிலே பாக்கறோமே. பாட்டெல்லாம் தமிழ்ல தான பாடுறாங்க, ஒரே எறைச்சல் …. அவங்க ஆட்டமும் அலங்காரமும்! இதை காசு கொடுத்து கொட்டாயிலே வேறே பாக்கணுமா?”
“போ, தாத்தா உனக்கு ஒண்ணும் தெரியாது… பக்கத்து டவுனுக்கு எப்படி போவீங்க, பஸ்ஸிலியா“?”
“பஸ்ஸா, அதல்லா பகல்ல எப்போவோ வரும்… நாங்க நடந்தே காலேலே சந்தைக்குப் போய் சாமான் எல்லாம் வாங்கி, அப்பாலே சாயந்திரமா மொத காட்சி பாத்துட்டு ரவைக்கித் திரும்புவோம். உன் அப்பன் இருக்கானே அவன் என் தோள்மேல ஏறி குந்திப்பான்.. உன் தம்பி மாதிரி இருக்கும் உன் அத்தே‘
“ருக்கு அத்தே யா?”
“ஆமா, அவள ஆத்தாக்காரி தூக்கிப்பா… தலைல கூடை! சில சமயம் நம்ப ஊர் வண்டிங்க வரும், அப்போ உன் ஆயாவை ஏத்தி அனுப்பிடுவேன்.. நாங்க சினிமா கதை எப்படி இருந்திச்சி, பாட்டு எப்படி இருந்திச்சின்னு.. எல்லாக் கதையும் பேசிக்கிட்டே ஊர் வந்து சேர்ந்திடுவோம். இப்பல்லாம் நம்ம ஊர் கடைக்குப் போகவே உங்கப்பன் வண்டிலே போறான்! சைக்கிள் கூட வீடுகள்லே இல்லை.. பொம்பளை புள்ளைங்களே சர் புர்னு வண்டி ஓட்டுதுங்க இப்போ“
“நானுந் தான் அப்பா வண்டி ஓட்டுவேன்“
“ராஜா, உள்ளாற வா. பேசியது போதும்.. நாளைக்கு வெள்ளனே எழும்பணும். வேலை கெடக்கு. தாத்தா கொஞ்சம் நேரம் படுக்கட்டும். மாமா, சாப்டீங்களா, எதுனா வேணுமா” தண்ணி தல மாட்டுலே வக்கிறேன்”
“அம்மாடி, எனக்கு ஒண்ணும் வாணாம். இந்தக் குடும்பத்த, புள்ளங்கள நீ தான் நல்ல பாக்கோணும் மகராசியா இருப்பே“
“சரிசரி படுங்க நா என்ன பாக்குறது, தெய்வமா இருக்கற அத்தை பாத்துக்கும்”
கதவை வெறுமனே சாத்தி விட்டு வந்து படுத்தாள்.
இருமல் சத்தம் கேட்டது.
“இதுக்குத் தான் ராஜா, தாத்தாக்கு பீடி வாங்கித் தராதேன்னு சொல்லுறன், நீ புரிஞ்சிக்கவே மாட்டேங்கிற. இந்த ஊரிலேயே உங்க தாத்தா தான்டா மூத்த தலைமுறை ஆளு அவர ஜாக்கிரதையா பாத்துக்கணும்“
“இல்லம்மா.. இனி வாங்கித் தர மாட்டேன்“
அவனுக்குத் தெரியாது. அது தான் அவன் தாத்தாவுக்கு வாங்கி வந்து கொடுத்த கடைசி பீடிக்கட்டு என்று.
சற்று நேரத்தில் இருமல் அடங்கியது..
********





