தொடர்- 5 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு
நூல் அறிமுகம்: ஜி.ராமகிருஷ்ணனின் ’மகாத்மா மண்ணில் மதவெறி’ (நாம் யார் பக்கம்..?! – தேனி சுந்தர்
தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் நக்கீரன் இதழில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்நூல்..
ஜனவரி,30 மகாத்மா காந்தி நினைவு நாள் என்று சாதாரணமாகச் சொல்லி விடலாம். ஆனால் காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள்.. இந்துத்வ கும்பலின் சதித் திட்டத்தின் படி கோட்சே என்கிற இந்து மத வெறியன் மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற தினம் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டிய அவசியம் உள்ள காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..
கடந்த ஜனவரி 30 அன்று கோவையில் நடந்த நிகழ்வில் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டுள்ளார்.. மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பின் போது கோட்சே-வின் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று எதிர்ப்பு வருகிறது. எங்கிருந்து எதிர்ப்பு வருகிறது என்பது தான் அங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.. நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்துப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் ஆகியோர் தான் தடுக்கின்றனர்.. காந்தியைக் கொன்றவன் கோட்சே என்பது இதுவரை யாரும் சொல்லாத தகவலா..? உலகம் அறியாத உண்மையா? நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட ஒரு குற்றவாளியின் பெயரை ஏன் சொல்லக் கூடாது..? அந்த குற்றச்சாட்டின் பேரில் நாடு முழுக்க தடைவிதிக்கப்பட்ட அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்பதை எத்தனை ஆவணங்களிலிருந்து அழிக்க முடியும்..? திருத்த முடியும்..??
சூரியன் கிழக்கில் உதிக்கிறது என்கிற அளவுக்கு மறுக்க முடியாத ஒரு உண்மையைப் பேசுவதற்குக் கூட அனுமதிக்காத ஒரு காவல் துறை அதிகாரி.. அதுவும் தமிழ்நாட்டில்.. அதுவும் தேசிய கட்சியின் தேசிய அளவிலான பொறுப்பில் இருக்கும் ஒருவரை தடுக்கும் அந்த தைரியம் தான் நமக்கு அச்சமூட்டும் ஆச்சர்யம்..! அது தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பலம்..! சூட்சமம்..!!
அந்த சம்பவம் தான் வகுப்புவாத அபாயம் குறித்த தொடரை எழுத வேண்டும் என்கிற உத்வேகத்தை தோழர் ஜி.ஆர். அவர்களுக்கு அளித்திருக்கிறது..
சுதந்திர போராட்டத்திற்கு முன்பும் பின்பும் இந்துத்வ சக்திகள் எப்படி செயல்பட்டனர். தமிழகம் மட்டுமின்றி கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இவர்கள் எவ்வாறு செயல்பட்டனர். மக்கள் மத்தியில் பிரிவினையை, மத வெறி உணர்வைத் தூண்டி எவ்வாறு மோதல்களை அரங்கேற்றுகின்றனர் என்பதையெல்லாம் சொல்லிச் செல்கிறார்..
இந்துத்வா என்பது வேறு, இந்து மதம் என்பது வேறு.. இந்துத்வா என்பது ஒரு அரசியல் செயல்திட்டம்.. இந்த அரசியல் செயல்திட்டத்தை அமலாக்க இந்து மத உணர்வை அவர்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றனர்.. இறை பக்தி உள்ளவர்கள் மதப் பற்று உள்ளவர்களாக மாற்றப்படுவதும் மதப் பற்று உள்ள அப்பாவிகள் மதவெறி ஊட்டப்பட்டு மதக் கலவரங்களில் அடியாட்களாக பயன்படுத்தப்படுவதும் அவர்களின் வகுப்புவாத தந்திரம் என்பதை விளக்குகிறார்..
இந்துத்வா, வகுப்புவாத சிந்தனைகளின் வளர்ச்சி கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கே ஆபத்து ஆகும். இந்த ஆபத்து இன்று உருவானதில்லை.. இந்தியாவை இந்து ராஷ்டிரமாக உருவாக்க வேண்டும்.. நால்வருண அமைப்பையும் சாதிய பாகுபாடுகளையும் பெண்களை சக மனுஷியாக மதிக்காமல் இழிவுபடுத்தும் அம்சங்களை உள்ளடக்கிய மனுநீதி தான் நாட்டின் சட்டமாக இருக்க வேண்டும் என்று கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக சொல்லி வருபவர்கள்.. அதை நடைமுறைப்படுத்த அதிகாரம் வேண்டும். அதற்காகவே ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.. அதைத் தான் கொஞ்சம் கொஞ்சமாக செய்து கொண்டும் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறார் தோழர் ஜி.ஆர்.
இந்துத்வா அடிப்படைவாதிகள் மட்டுமல்ல. இஸ்லாமிய, கிறித்தவ மத அடிப்படைவாத அமைப்புகளும் ஆபத்தானவை தான் என்று சுட்டிக்காட்டுகிறார்.. சிறுமி என்றும் பாராமல் சுட்டுத் தள்ளப்பட்ட சிறுமி மலாலாவை எடுத்துக் காட்டி சொல்கிறார்.. சூரியன் தான் மையம், பூமி உள்ளிட்ட கோள்கள் சுற்றி வருகின்றன என்கிற உண்மையைச் சொன்னதற்காக கலிலியோவை வீட்டுச் சிறையில் வைத்த, புருனோவை நெருப்பிட்டுக் கொன்ற கிறித்தவ அடிப்படைவாத சம்பவங்களை எடுத்துக் காட்டி சொல்கிறார்..
மதம் வேறு அரசியல் வேறு என்று இருக்க வேண்டும்.. மதம் வேறு அரசு வேறு என்று இருக்க வேண்டும்.. இரண்டும் கலந்தால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணங்கள் தான் இவை..
ஆர்.எஸ் எஸ். கும்பலின் முன்னோடிகள் சாவர்க்கர், ஹெட்கேவர், முஞ்சே கோல்வால்கர்.. இவர்களின் முன்னோடிகள் ஹிட்லரும் முசோலினியும் தான்..
இனவெறி, மதவெறி தலை தூக்கினால், பரவினால் உலகம் என்னவாகும் என்பதற்கு இவர்களே சாட்சி.. உலகின் பல கோடி மக்களை தங்களின் வெறியால் பலிகொண்ட பாசிச, நாசிச சக்திகளின் வழித் தோன்றல்கள் நம் தேசத்தை என்ன செய்வார்கள்..? என்ன செய்யப் போகிறார்கள் என்ற அச்சம் இந்த நூலை வாசித்த ஒவ்வொருவருக்கும் எழும்..
அதே நேரத்தில் அன்றைய பாசிச சக்திகளுக்கு எதிராக கலை இலக்கிய பண்பாட்டு இயக்கங்கள் எவ்வாறு போராடினார்கள் என்கிற உதாரணங்களை எல்லாம் கூறி நீங்கள் யார் பக்கம் என்று கேட்டு கடைசி அத்தியாயத்தைத் தொடங்குகிறார்..
மதவெறிக்கு மாற்று மத நல்லிணக்கம்.. வெறுப்புக்கு மாற்று அன்பு.. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கே எதிராக ஒரு அபாயம் தலை தூக்கும் போது ஜனநாயகத்தை, சோசலிசத்தை, மதச்சார்பற்ற குடியரசு என்கிற அதன் மாண்பைக் காக்கிற கடமை இந்திய மக்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு..
இந்து மத வெறி கொண்ட ஆட்சி என்பதால் இந்துக்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளும் என்று கூட பலர் நினைக்கலாம்.. தொழிலாளர் சட்டங்கள், வேளாண் சட்டங்கள், பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயர்வு, புதிய கல்விக் கொள்கை என விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து வித மக்களுக்கும் எதிராகத் தான் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதையும் பல்வேறு உதாரணங்களுடன் சொல்லி இருக்கிறார்..
வேறு யாருக்காக தான் இந்த ஆட்சி நடைபெறுகிறது என்ற கேள்வி எழுவது இயல்பு தான். அதானி, அம்பானி போன்ற பெரும் கார்பரேட்டுகளின் நலன் ஒன்றையே பிரதானமாக கொண்டு செயல்படுகிறது. கொரனா பெருந்தொற்று காலத்தில் கூட மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் விதமாக ஒன்றும் செய்யாமல் பெரு முதலாளிகளுக்குச் சாதகமாகவே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.. விளைவாக உலகப் பணக் காரர்கள் வரிசையில் பிரதமரின் கூட்டாளிகள் வேகவேகமாக முன்னேறி வருகிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டி உள்ளார்..
இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்கிற பன்முக கலாச்சாரத்தைப் பாதுகாக்கிற, மக்கள் மத்தியில் ஒற்றுமையை, அறிவியல் மனப்பான்மையை உருவாக்குகிற பக்கமா? இல்லை அதற்கு எதிர்ப் பக்கமா? எந்தப் பக்கத்தில் நிற்கப் போகிறோம் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்..
இன்றைய சூழலில் மிக மிக அவசியம் வாசிக்க வேண்டிய நூலாக, நக்கீரன் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது மகாத்மா மண்ணில் மதவெறி..!
– தேனி சுந்தர்
நூல் : மகாத்மா மண்ணில் மதவெறி
ஆசிரியர் : ஜி.ராமகிருஷ்ணன்
விலை : ரூ: ₹125
வெளியீடு : நக்கீரன்
தொடர்புக்கு : 044 – 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
நூல் அறிமுகம் : பிரேமின் “நந்தன் நடந்த நான்காம் பாதை” – அன்புச்செல்வன்
நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசித்த கலகப் பிரதி. வறண்ட சொல்லாடலில் இல்லாமலும், கோணங்கி போல் சுருள் மொழியின்றியும், அதே சமயம் கவித்துவம் குன்றா சொற்செட்டுடனும் பிரதி கதையாடுகிறது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு அனுபவம், வெவ்வேறு தளம். பொன்னியின் செல்வனை ஆகச் சிறந்த தமிழ் இலக்கியப் பிரதிகளில் ஒன்றாகக் குறிப்பிட்டுக் கொண்டாடும் தன்மை குறித்த எள்ளல் விரவிக் கிடக்கும் கதை ‘பொன்னியின் செல்வம்’. முகலாய செம்மலருக்கும் கூடல் நகர் கயல்விழிக்கும் (மீனாட்சி) நடக்கும் ஒருபால் முயக்கத்தை அவரவர் வளர்க்கும் கிளிகள் வழி சொல்லிச் செல்வது ‘இரட்டைக் கிளிகள் எழுதிய காவியம்’.
கூட்டுப் புணர்வு, பால்திரிபுறும் நிலை முதலிய ‘சமூக அதிர்ச்சி’ சொல்லாடலைத் தமிழ் தொன்ம கதையாடல் வழி அற்புதமாகப் பேசிச் செல்கிறது “யோகினி கோட்டம்”. பெண்ணாக உணரும் ஆணை, ஆண் தன்மையை உணரச் செய்வதோடு அவரது பெண்மையையும் அங்கீகரித்து கடைசியில் சமூகம் அவருக்கு அளித்த கொடுந் தண்டனையிலிருந்து தப்பிக்க அவரையே கொலை செய்து விடுதலை அளித்த பெண் எழுத்தாளர்/நாடக நடிகை பற்றிய விவரிப்பு கதை “அல்குல் அடவி என்கிற காதல் கானகம்”. நக்சல்கள்/மாவோயிஸ்டுகள் என்று அடையாளப்படுத்தப்படுகிற பகுதியிலிருந்து வந்த பழங்குடி ஆய்வு மாணவி தனது அரசியல் தேர்வு எதுவாக இருக்கவேண்டும் என்று உணரும்போது அதிகாரம் அவரை என்ன செய்கிறது என்று முகத்தில் அறைகிறது “தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை”. தீவிர இடதுசாரியம், மாற்று அரசியல் பேசிய எழுத்தாளர்களின் பிற்கால கருத்தியல் சீரழிவு பற்றி உள்ளார்ந்த நகைச்சுவையுடன் கதையாடுகிறது “விருப்பக் குறிகள்” (‘இளநி வேதிகா’ என்று கதையில் வரும் எழுத்தாளர் சாரு நிவேதிதா இல்லைதானே பிரேம்).
“நந்தன் நடந்த நான்காம் பாதை” கதை தொகுப்பின் சிறந்த வெளிப்பாடாக நான் கருதுகிறேன். தற்போதைய இந்தியாவின் ஆபத்தான இந்துத்துவம், வைதீகம், சனாதனம் போன்றவற்றை ரோகித் வெமூலா தற்கொலை, கல்புர்கி, தபோல்கர், பன்சாரே கொலைகள், முஸாபர்நகர் இசுலாமியர் மீதான படுகொலை தாக்குதல்கள், தலைநகர் பல்கலைக்கழகத்தில் எழுந்து வரும் மாற்று அரசியல் போக்கினை அழிக்க முற்படும் ஆதிக்க சக்திகள், தலித்தாக உணரும் தருணம், அடையாளச் சிக்கல் போன்ற பல விசயங்களைப் பேசி கபாலி, உபாலி, நந்தன் வழி செல்கிறது பிரதி. சங்கமித்ரையின் மகன் இளையராஜா வைதீகத்தால் எரிக்கப்பட்ட நந்தனின் மறைக்கப்பட்ட இசை வல்லமை குறித்துப் படமெடுக்க முனைவது குறியீட்டின் உச்சம். பிரேமுக்கு அன்பு முத்தங்கள். LGBT, தலித்தியம், மதச்சார்பின்மை, தீவிர இடதுசாரியம், தமிழ் தேசியம், அமைப்பு சாரா உதிரி தொழிலாளர் வர்க்கம் என அனைத்து கதைகளும் ஒடுக்கப்பட்ட/விளிம்பு நிலை/சமூகப் புறக்கணிப்புக்களானவர்களைப் பேசும் பிரதி. தற்போதைய இந்தியச் சூழலில் புதிய வேகத்துடன் அனைத்துத் துறைகளிலும் கட்டமைக்கப்பட்டு வரும் நவ_இந்துத்துவம், வைதீக மறு உருவாக்கம், சாதீய பெருமிதம், பன்மைத்துவத்தை அழிக்க முனையும் ஒற்றை அடையாளம் போன்றவற்றுக்கு எதிரான மாற்று அரசியல் கலக இலக்கியப் பிரதியாக வாசிக்கிறேன் இக்கதைகளை.
– அன்புச்செல்வன்
நூல் :
ஆசிரியர் :
பதிப்பகம் : எதிர் வெளியீடு
விலை : ₹160.00
96, நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி
642 002.
தொடர்பு எண் : 99425 11302
சம்சுல் இஸ்லாமின் முகத்திரை அகற்றப்பட்ட சாவர்க்கர்
“வீர் (வீரம்) சாவர்க்கர்” என்னும் விநாயக் தாமோதர் சாவர்க்கர், தற்போது தேசத் தந்தை, மோகன்தாஸ் கரம் சந்த் காந்திக்கு இணையாக தூக்கிநிறுத்தப்பட்டு, இந்திய நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் அவருடைய படத்திற்கு எதிரே வைக்கப்பட்டிருக்கிறார். காந்தியைக் கொலை செய்ததில் சாவர்க்கருக்கு இருந்த பங்கு குறித்து, அன்றைய தினம் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் கூறியவற்றை அறிந்துகொள்வது இப்போது பொருத்தமாக இருக்கும். அவர், 1948 பிப்ரவரி 27 அன்று நேருவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், “இந்து மகா சபாவின் சாவர்க்கரின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கிய வெறித்தனமான பிரிவு, சதித்திட்டம் தீட்டி, இக்கொடுஞ்செயல் நடைபெறுவதைப் பார்த்தது.”
சாவர்க்கரின் உருவப்படம் காந்தியின் படத்திற்கு அருகே வைக்கப்பட்டிருப்பது இந்துத்துவாவை இன்றையதினம் பின்பற்றுவோரால் சாவர்க்கரைத் துதிபாடும் வெறித்தனமான கூட்டத்தாரின் பிரச்சாரத்தின் விளைவேயாகும். சாவர்க்கரைப் போற்றிப் புகழ்தல் சமீபத்திய நடவடிக்கைகளேயாகும். 1990களின் பிற்பகுதியில் அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே. அத்வானி ஆகிய ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள்/தொண்டர்கள் தலைமையின்கீழ் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம், ஆட்சிக்கு வந்தபின்னரே இவ்வாறு சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வது தொடங்கப்பட்டது. இந்திய விடுதலைப் போராட்டத்தின் சின்னமாக இந்துத்துவா சித்தாந்தத்தை முன்மொழிந்தவரை மாற்றியிருப்பது இந்து தேசத்தின் கொள்கையாக ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை சட்டபூர்வமாகக்குவதற்கான நடைமுறையின் ஒரு பகுதியேயாகும்.
சாவர்க்கர் 1966இல் இறந்தபோது பெரிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படவில்லை என்பது பலருக்குத் தெரியாது. 83 வயதாகி முதுமையில் அவர் இறந்த சமயத்தில் மிகக் குறைந்த அளவிற்குத்தான் அவர் அறியப்பட்டிருந்தார். அவருடைய வாழ்நாள் காலத்தில் மகாத்மாவின் உயிரைப் பறித்த சதித் திட்டத்தில் அவரும் ஓர் அங்கமாக இருந்தார் என்கிற வடுவை அவரால் அழிக்கவே முடியவில்லை. வீர் சங்வி என்னும் குறிப்பிடத்தக்க கட்டுரையாளர், 1990வரையிலும் அநேகமாக எவரும் அவரை அறிந்திருக்கவில்லை என்று சரியாகவே குறிப்பிட்டார். 1990களில்தான் “சாவர்க்கருக்கு மறுவாழ்வு அளிப்போம்” என்னும் இயக்கம்(‘Rehabilitate Savarkar’ movement), பாரதீய ஜனதா கட்சியால் அதிகாரபூர்வமாக எடுத்துக்கொள்ளப்பட்டபின்புதான், இந்துத்துவா என்னும் சொற்றொடரை உருவாக்கிய நபர் என நமக்கு சொல்லப்பட்ட நபர், இந்தியாவின் விடுதலைக்காக போராடிய நபர்களில் வீரமுதல்வனாக இருந்தார் என்றும் கூறப்பட்டார். அதன்பின்புதான் சாவர்க்கர் மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர்களுடனான பட்டியலில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் காங்கிரஸ் தலைமையில் ஒரு பிரிவும்கூட, “சாவர்க்கருக்கு மறுவாழ்வு அளிப்போம் இயக்கத்தில்” தன்னையும் சேர்த்துக்கொண்டது. 2004 ஆகஸ்ட் 4 அன்று புதுதில்லியில் மன்மோகன் சிங் பிரதமரானவுடன் நடத்திய முதல் பத்திரிகையாளர் கூட்டத்தின்போது, விநாயக் தாமோதர் சாவர்க்கரை, “தேச பக்தர்” என்றும் “விடுதலைப் போராட்ட வீரர்” என்றும் வர்ணித்தார். சாவர்க்கரின் “தேச பக்தர்” என்பதற்கான ஆதாரச் சான்றுகள் குறித்து பல்வேறு கேள்விகளை காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தலைவரும், பெட்ரோலியத் துறை அமைச்சராகவுமிருந்த மணி சங்கர் ஐயர் எழுப்பியபோது, பிரதமர் கூறியதாவது: “சாவர்க்கர் குறித்த சர்ச்சையைப் பொறுத்தவரை, இது ஐயரின் தனிப்பட்ட கருத்து. அது அரசாங்கத்தின் கருத்து அல்ல. அது ஒரு தேவையற்ற சர்ச்சை.”
சாவர்க்கருக்கு ஆதரவாகத் தன்னால் முடிந்த அளவிற்கு மன்மோகன் சிங் முயற்சித்திருக்கிறார். “வரலாறு பல வழிகளில் நடந்துள்ள நிகழ்வுகளை நமக்கு வியாக்கியானம் செய்திருந்தபோதிலும், இறந்தவரின் மோசமான விஷயங்கள் குறித்துப் பேசுவதால் எவ்விதமான நன்மையையும் பெற்றிட முடியும் என்று நான் நினைக்கவில்லை,” என்று அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் தரப்பிலிருந்து சாவர்க்கருக்கு ஆதரவாக ஒரு பிரதமர் இவ்வாறு முதன்முறையாக முன்வந்திருக்கிறார். இதேபோன்றே முன்னதாக மன்மோகன் சிங் அமைச்சரவையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத், ஐயரின் விமர்சனங்களை வெளிப்படையாக மறுதலித்து, சாவர்க்கர் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள் என்றும், அரசாங்கம் “அவருடன் ஒத்துப்போகவில்லை” என்றும் அறிவித்தார்.
சாவர்க்கர்வாதிகள் கூட்டத்துடன் இவ்வாறு காங்கிரசும் இணைந்தகொண்டிருப்பத துரதிர்ஷ்டவசமாகும். இன்றையதினம் உள்ள காங்கிரஸ் தலைமை, காந்தி, நேரு, வல்லபாய் பட்டேல் ஆகியோரின் தலைமையின்கீழ் செயல்பட்ட காங்கிரஸ் காரியக் கமிட்டியானது, 1934 ஜூனில் தன்னுடைய கட்சி உறுப்பினர்கள் முஸ்லீம் லீக்குடனோ, இந்து மகா சபாவுடனோ மற்றும் ஆர்எஸ்எஸ்-உடனோ எவ்விதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்ததை மறந்துவிட்டார்கள். காங்கிரஸ் கட்சி அன்று பிறப்பித்த அந்தக்கட்டளை இன்றைக்கும் செல்லத்தக்கதாகும். ஏனெனில் அந்தத்தீர்மானம் இதுவரையிலும் ரத்து செய்யப்படவில்லை.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கமாகத் திகழும் பாரதீய ஜனதா கட்சி 2014இல் தேசிய அளவில் ஆட்சிக்கு வந்தபின், சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வது மேலும் உத்வேகம் பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, “வீர சாவர்க்கர் இறப்பதற்கு அஞ்சாத ஒரு வீர புருஷர்” என்று வீர சாவர்க்கரைப் போற்றிப் புகழ்ந்து பேசும் அதே சமயத்தில், தான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஓர் உறுப்பினர் என்று வெளிப்படையாகவோ சொல்லிக்கொள்வதிலும் பெருமை கொண்டார். மோடி, சாவர்க்கர்தான் தன்னைப் பக்குவப்படுத்தி, செயல்பட வைத்த வழிகாட்டி என்று கூறும் அளவிற்குச் சென்றார்.
இந்துத்துவாவின் சின்னமாக விளங்கும் சாவர்க்கரின் 131ஆவது பிறந்த தின விழா நடைபெற்ற சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் அவருடைய அமைச்சரவை சகாக்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் நிறுவப்பட்டிருக்கும் சாவர்க்கரின் உருவப்படத்தின் முன் நின்று வணக்கம் செலுத்திக் கொண்டனர். சாவர்க்கரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்களில் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு அடுத்ததாக மோடி இரண்டாவது பிரதமராக மாறினார். விஷயம் இத்துடன் முடிந்துவிடவில்லை. பாஜக-வின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சாக்சி மகராஜ் என்பவர், மகாத்மா காந்தியைக் கொன்றதற்காக, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நாதுராம் கோட்சேயைப் புகழ்ந்து, அவரை காந்திக்கு இணையாக முன்னிறுத்தி அவர், “நான் நாதுராம் கோட்சேயையும் ஒரு தேசியவாதி என நம்புகிறேன், மகாத்மா காந்தியும் நாட்டிற்காக ஏராளமாகச் செய்துள்ளார். கோட்சே ஒரு பாதிக்கப்பட்ட நபராக இருந்தார். அவர் தவறாக ஏதேனும் செய்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு தேச விரோதி அல்ல. அவர் ஒரு தேசபக்தர்,” என்று கூறியிருக்கிறார்.
சுதந்திரம் பெற்று ஒரு ஜனநாயக மதச்சார்பற்ற இந்தியா உருவாகி சுமார் நூறாண்டுகளான பின்னரும்கூட, சாவர்க்கர்வாதிகள் வரலாற்றுக்குப் பேரழிவினை ஏற்படுத்தும் விதத்தில் விளையாடிக் கொண்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. சாவர்க்கரை ஒரு மாபெரும் புரட்சியாளர் என்றும், அசைக்கமுடியாத சுதந்திரப்போராட்ட வீரர் என்றும், மகத்தான பகுத்தறிவாளர் என்றும், ஏன், என்னதான் கூறாமல் விட்டிருக்கிறார்கள், அனைத்து வழிகளிலும் அவரைப் பாராட்டி, தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சாவர்க்கர் அவர் காலத்தில் அவர் கைப்பட எழுதிய எழுத்துக்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தாலே, அவர் குறித்துக் கூறும் அனைத்தும் தவறானவை என்பதை மெய்ப்பித்திட முடியும். அதை இந்தப் புத்தகம் செய்திருக்கிறது.
இந்திய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை வரலாற்று உண்மைகளுடன் வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்கிற நேர்மையான தூண்டுதலின் விளைவே இந்தப் புத்தகமாகும். சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் இருந்த உண்மையான சாவர்க்கரை அறிந்து கொள்வதற்காக, இந்த நூலின் ஆசிரியர், இந்து மகா சபா, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்திய அரசாங்கத்தின் ஆவணக் காப்பகங்களில் கிடைத்த ஒரிஜினல் ஆவணங்களையே பிரதானமாக சார்ந்திருக்கிறார்.
சாவர்க்கர், விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்கியிருந்தது மட்டுமல்லாமல், பிரிட்டிஷாரின் நலன்களுக்கு எங்கெல்லாம் சவால்கள் ஏற்படுகின்றனவோ அங்கெல்லாம் அவற்றை ஒடுக்குவதற்கு உதவியும் செய்தார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, காலனிய எஜமானர்களின் கொடூரமான அடக்குமுறையை மக்கள் எதிர்கொண்டிருந்த சமயத்தில், சாவர்க்கர் பிரிட்டிஷாரின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஆதரவினை அளித்தார்.
இரண்டாம் உலக யுத்தம் நடந்துகொண்டிருந்த சமயத்தில், சுபாஷ் சந்திர போஸ், இந்தியாவை ராணுவரீதியாக விடுவித்திட முயற்சித்துக் கொண்டிருந்தபோது, சாவர்க்கர் பிரிட்டிஷாரின் யுத்த முயற்சிகளுக்கு வெளிப்படையாகவே உதவும் அளவிற்குச் சென்றார். சாவர்க்கர் எந்த அளவுக்கு பிரிட்டிஷாரின் கூட்டத்துடன் சேர்ந்து அவர்களின் யுத்த நடவடிக்கைகளுக்கு உதவிடத் தீர்மானித்தார் என்பதைக் கீழ்க்கண்ட அவருடைய வார்த்தைகளிலிருந்து நன்கு அறியலாம்.
“இந்து தேசம் இந்தியாவின் பாதுகாப்பைப் பொறுத்தவரை, இந்து தேசத்தைச் சேர்ந்த நம் நலன்களைப் பாதுகாத்திட, இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் வரையிலும், அதற்கு எவ்விதமான தங்குதடையுமின்றி, ராணுவ ரீதியாகவும், கப்பல்படை மற்றும் விமானப்படை மூலமாகவும், இணைந்து, இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி, வெடிமருந்துகள் உற்பத்தி மற்றும் போர்த்தந்திர கருவிகள் உற்பத்தி என அனைத்திலும் பொறுப்புமிக்க ஒத்துழைப்பினை நல்கிட வேண்டும். .. ஜப்பான் யுத்தத்தில் நுழைந்திருப்பது என்பது, பிரிட்டனின் எதிரிகளால் நாம் நேரடியாகவும், உடனடியாகவும் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலைமையை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நாம் குறித்துக்கொள்ள வேண்டும்.
இதன் விளைவாக, நாம் விரும்பினாலும் சரி, அல்லது விரும்பாவிட்டாலும் சரி, யுத்தத்தின் அழிவுகளிலிருந்து நாம் நம் உயிரையும் உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால், அது இந்தியாவைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதன் மூலம் மட்டுமே சாத்தியம். எனவே, இந்து மகாசபைவைச் சேர்ந்தவர்கள், இந்துக்களை, குறிப்பாக வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாகாணங்களில் உள்ள இந்துக்களை எழுச்சியுறச்செய்து அவர்கள் அனைவரும் ராணுவத்தின் அனைத்துப் படைகளிலும் இனியும் ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்கிடாது, தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு கூறியதுடன் மட்டும் நில்லாது பிரிட்டிஷ் ராணுவத்திற்கு ஆளெடுக்கும் பணியில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான இந்துக்களை பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ப்பதற்கும், அதன்மூலம் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்வதற்கும் துணை போனார்.
சாவர்க்கர், சாதியம் மற்றும் இனவெறி ஆகியவற்றின் தீவிரமான நம்பிக்கையாளராக இருந்தார். அவர் தன் வாழ்நாள் முழுவதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளராகவே விளங்கினார். அதனை அவர் இந்துத்துவா என்று அழைத்திட்டார். இவை அனைத்தும் இன்றைய சாவர்க்கர்வாதிகளுக்கு நன்கு தெரியும். எனினும் அவர்கள் இந்த ஆவணங்களை மக்கள் பார்வைக்குக் கொண்டுவராமல் ஒளித்து வைத்திடவே விரும்புகிறார்கள். ஏனெனில் சாவர்க்கரின் உண்மையான சொரூபத்தை மக்களிடம் காட்டினால், இந்துத்துவா படையணியினருக்குப் பேரழிவு நிச்சயம் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். எனவேதான் அதனை வரலாற்றின் குப்பைக்கூடையில் போட்டு வைத்திருக்கிறார்கள். சுயமரியாதை உள்ள எந்தவொரு இந்தியனும், ஏன், காலனியாதிக்க எதிர்ப்புப் பாரம்பர்யத்தில் கொஞ்சமாவது நம்பிக்கையுள்ள எவரும், ‘வீர்’ சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வை சகித்துக்கொள்ள முடியாது., எனவேதான் இந்துத்துவாவாதிகள் இதனை மூடிமறைத்திட முயற்சிக்கிறார்கள். அது நம்மால் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். ஆனால், இந்தியா விடுதலை பெற்று சுமார் நூறாண்டுகளானபின்னரும், ஜனநாயக-மதச்சார்பற்ற இந்திய அரசியலுக்காக நிற்பவர்கள் சாவர்க்கர் தொடர்பான ஆவணங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரத் தயங்குவதுதான் உண்மையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
இந்தப் புத்தகத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ள ஆவணங்கள் நிச்சயமாக ஏமாற்றுதல், மோசடி மற்றும் தவறான தகவல்களையே முழுமையாக நம்பியிருக்கும் இந்துத்துவா படையணியினருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தும். ‘வீர்’ சாவர்க்கர் குறித்து எதுவும் தெரியாது அவரைப் போற்றிப் புகழும் தலைவர்களுக்கும், நபர்களுக்கும் இந்தப் புத்தகமானது அவர் குறித்துக் கூறப்படும் சரடுகளிலிருந்து உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கு உதவிடும் என்று நம்புகிறோம். இந்தப் புத்தகத்தின் ஏழாவது அத்தியாயமும் சாவர்க்கரால் எழுதப்பட்ட இந்துத்துவாவின் 1923ஆம் ஆண்டு பதிப்பினை மதிப்பீடு செய்கிறது. ஏனெனில் அப்போதுதான் இந்தியாவை இல்லாது ஒழித்திட கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சிந்தனைகள் மற்றும் அதன்வழி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதையும் அவற்றின் ஆபத்துக்களையும், ஜனநாயக மதச்சார்பற்ற இந்தியாவை நெஞ்சார நேசிக்கும் அனைவரும் புரிந்துகொள்ள முடியும்.
சாவர்க்கர் குறித்து கூறப்படும் ஏழு சரடுகளைக் கூறி அவற்றுக்கு எதிரான உண்மைகளையும் தக்க ஆவணச்சான்றுகளுடன் இந்தப் புத்தகத்தில் கட்டுரையாளர் வெளிக்கொண்டுவந்திருக்கிறார்.
சாவர்க்கரை வீரரா அல்லது ஐந்து கருணை மனுக்கள் எழுதிக்கொடுத்து பிரிட்டிஷாரின் அடிமையாகச் சேவகம் செய்தவரா என்பதையும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரரா அல்லது இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்குத் துரோகம் இழைத்தவரா என்பதையும் இந்தப்புத்தகத்தைப் படித்திடும் ஒருவர் நன்கு தெரிந்துகொள்ளமுடியும்.
பாரதி புத்தகலாயத்தின் சார்பில் தில்லிப் பல்கலைக் கழகப் பேராசிரியராக இருந்த சம்சுல் இஸ்லாம் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள முகத்திரை அகற்றப்பட்ட சாவர்க்கர் (Savarkar Unmasked) என்னும் இந்நூல் ச.வீரமணி மற்றும் தஞ்சை ரமேஷ் ஆகியோரால் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவர விருக்கிறது.
இந்துத்துவாவை உருவாக்கிய சாவர்க்கரின் உண்மை முகத்தைத் தெரிந்துகொள்ள ஒவ்வொருவரும் அவசியம் படித்திட வேண்டும்.
நூல் அறிமுகம்: புலவர் வே. தமிழ்மாறனின் சனாதன தர்மம் என்றால் என்ன ? – சுரேஷ் இசக்கிபாண்டி
“சனாதனம்” என்றால் என்றைக்குமே மாறாது என்கிறது இந்துத்துவா அடிப்படைகள்
புலவர் வே. தமிழ்மாறன் அவர்களது புகைப்படத்தை திருச்செந்தூர் பகுதிகளில் நினைவஞ்சலி சுவரொட்டியின் மூலம் கண்டேன். ”யார் இவர், இவரை குறித்து இதுவரையில் அறிந்ததே இல்லையே” என யோசித்து கொண்டிருக்கும் கணத்தின் அடுத்த சில நாட்களிலேயே தோழர் மோகனசுந்தரம் அளித்த இப்புத்தகத்தின் வழியாக அறிந்துகொண்டேன். திராவிட இயக்கத்தில் துவங்கிய அவரது பயணம் இறுதியாக மக்கள் விடுதலையை வலியுறுத்தும் மார்க்சிய லட்சியத்தில் கலந்தது. இவர் திருச்செந்தூர் அருகே இருக்கும் பரமன்குறிச்சி கிராமத்தில் உள்ள தொழிலாளர்களிடையே அரசியல் விழிப்புணர்வு வகுப்பில் பேசிய கருத்துக்களே இத்தொகுப்பு.
சனாதன தர்மம் என்றால் வர்ண தர்மம். அதென்ன வர்ண தர்மம். நிறத்தின் அடிப்படையிலான நால்வகை தர்மம். பிராமணன் சத்திரியன் வைசியன் என்ற மூவரும் ஒரே நிறம். மேற்கண்ட மூவருக்கும் சேவகம் செய்ய பிறப்பிலேயே கடவுளால் தீர்மானிக்கப்படுவதாக சாஸ்திரங்கள் சொல்லும் சூத்திரன் (கருப்பு, திராவிடன், பூர்வகுடி). இதில் பிராமணன் தான் கற்ற வேதத்தின் தர்ம ஓதுவார் வேலையை மற்றும் பார்க்க வேண்டும். சத்ரியன் கண்டிப்பாக போர்க்களத்தில் மட்டுமே இருக்க வேண்டும். வைசியன் வணிகத்தை மட்டும் பார்க்க வேண்டும். சூத்திரன் விவசாயத்தை மட்டும் பார்க்க வேண்டும். இந்த நான்கு பிரிவுகளில் இருந்தும், எவனும் ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவு வரக் கூடாது என்கிறது மனுதர்மம். எனவே தான் அவர்களால் பசுவை தேசிய விலங்காக ஏற்றுக்கொள்ள முடிகிறது. தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் அதிகம் தன் வாழ்வில் பயன்படுத்தும் எருமையை அவர்கள் முன்னிறுத்துவது இல்லை என்று எருமை தேசியம் புத்தகத்தின் முன்னுரை மூலமாக உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்த காஞ்ச அய்லய்யா தெரிவிக்கிறார்.
சனாதனம் என்றால் என்றைக்குமே மாறாது என்கிறது இந்துத்துவத்தின் ஆணிவேராகவும், அஸ்திவாரமாகவும் கருதப்படும் மனுதர்மம். ஆனால் சமூக விஞ்ஞான மானுட விடுதலை தத்துவத்தை வைத்த மார்க்ஸ் ” மாறும் என்கிற வார்த்தையை தவிர, இங்கு உள்ள அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டது” என்கிறார்.
ஆகவேதான் இந்த சமூக விதி தலை வீதியில் மாறவே கூடாது என்கிறார்கள் இந்துத்துவவாதிகள். ஏன் மாறக்கூடாது? எதற்கு வரக்கூடாதென ? நாம் கூர்ந்து கவனித்தோமானால் தான் அதனுள் மறைந்திருக்கும் உண்மை புலப்படுகிறது. உதாரணத்திற்கு 200 ரூபாய் மதிப்புள்ள மனுதர்மம், பகவத்கீதை மற்றும் மகாபாரதம் என மூன்றில் ஒரு புத்தகத்தை இலவசமாகவும் வழங்குகிறார்கள். இதற்கு எங்கிருந்து பணம் வருகிறது? இங்கு இருக்கிற உயர் சாதி இந்து பணக்காரர்களிடம் இருந்து வருகிறது என்று புலப்படும்.
ஏன் அவர்கள், தன்னுடைய உழைப்பின் மூலமாக சம்பாதிக்கதாக சொல்லப்படும் பணத்தை இதற்காக செலவிடுகிறார்கள் என்று ஆழ்ந்து யோசித்தோமானால், இதன் மூலமாகத்தான் அவர்களால் நாம் அனைவரையும் சுரண்டி துன்பமில்லாத வாழ்வை வாழ முடியும் என்பதை சொல்லாமல் சொல்லி நமக்கு அறிவிக்கிறார்கள். எனவேதான் அவர்கள் இந்த அமைப்பு முறை தொடர்ந்து தொடர வேண்டும் என விரும்புவதாக புலவர் வே. தமிழ்மாறன் தெரிவிக்கிறார்.
இந்தியாவில் இரண்டாயிரம் வருஷமா முதலாளி முதலாளியாக உட்கார்ந்திருக்கிறான் அல்லது நிலக்கிழார் நிலக்கிழாராக உட்கார்ந்திருக்கிறான். எந்த வேலைக்காரனுக்கும் புரட்சி உண்டாக்கத் தெரியவில்லையே. ஐரோப்பா கண்டத்தில் 100 ஆண்டிற்கு ஒரு புரட்சி வருகிறதே. இந்தியாவில் புரட்சி வரவில்லையே. அது எப்படி? என்று கவனிப்பதற்காக, ஒரு பத்துப் பேரை இங்கே அனுப்புகிறான். இந்தியாவில் புரட்சி வராமல் இருப்பதற்கான அடிப்படைக் காரணம் என்ன? எம்.என்.ராய் அதில் குறிப்பிடுகிறார். அந்தப் பத்துப் பேரும் என்ன சொல்கிறார்கள்? இந்தியாவில் ஆயிரக்கணக்கான சாதி, நான்கு வர்ணம். அந்த நான்கு வர்ணத்திலிருந்தும் வந்த சாதி 4446. அந்த நான்காயிரத்து நானூற்று நாற்பத்தி ஆறில் உண்டான புதுசு புதுசான உட்பிரிவுகள் குலங்கள், உட்குலங்கள், கோத்திரங்கள், மதங்கள். சமயங்கள், நம்பிக்கைகள் இப்படிப்பட்டவைகள் நிறைய இருப்பதனால் இந்தியாவில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக முதலாளி, தொழிலாளி அல்லது பண்ணையார், வேலைக்காரன் என்றப் புரட்சியே வரவில்லை.
இந்தியா மாதிரி பாதுகாப்பான இடம் பணக்காரனுக்கு வேறு எதுவுமே இல்லை என்று அவர்கள் குறிப்பு ஜெர்மனிக்குக் கொண்டு போனதாக நம்முடைய எம்.என்.ராய் குறிப்பிடுகிறார். எனவே. இந்தியாவில் இப்பொழுது இருப்பது முதலாளி, தொழிலாளி முறை. தொழிலாளிக்கு எது விரோதமானது சனாதனம் என்கிறார் புலவர் வே. தமிழ்மாறன்.
ஒரு சாரார் அதாவது பிராமணர்கள் மட்டும் மேலும் மேலும் உயர்ந்தநிலையை சமூகத்தில் அடைந்து கொண்டே இருக்க வேண்டும் என்கிற மனநிலை நம்மிடைய உருவாக்க அவர்கள் சத்திரிய குலத்தில் பிறந்து ஒரு சூத்திரனால் (இடையரால்) வளர்க்கப்பட்ட கிருஷ்ணரை துணைக்கு அழைக்கிறார்கள். ஆகவேதான் அவர் பகவத்கீதையில் “சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் உபாதய” என்று அர்ஜுனனிடம் சொல்கிறார். அதாவது நானே இங்கு நான்கு வர்ணங்களையும் உண்டாக்கினேன். அதை எப்படி உருவாக்கினேன் என்று சொன்னால் குணத்தின் அடிப்படையில் உண்டாக்கினேன் என்கிறார் அவர்.
சூத்திரப் பயலுகளெல்லாம் நீங்கள் கோயிலுக்குள் வந்தால் உங்களைக் கடவுளுக்குப் பிடிக்காது என்று சொல்லித்தான். கோபுரத்தைக் கட்டி வைத்திருக்கிறோம். நீ பனை ஏறுகிறவன். பனையிலிருந்தே பார். கோபுரம் தெரியும். நீ செக்காட்டுகிறவன். செக்கை ஆட்டிக்கொண்டே கோபுரத்தைப் பார் தெரியும். நீ செருப்புத் தைப்பவன், ஊசியைத் தைத்துக்கொண்டே கோபுரத்தைப் பார் தெரியும். இதற்கு என்ன அர்த்தம் என்றால், பலபேர் சொல்கிறார்கள். பகவான் சூத்திரரைத் தண்டிக்கிறார் என்று இல்லை. பகவான் பிராமணரைத் தான் தண்டிக்கிறார். நாங்கள் கோயிலுக்குள் போகவேண்டும் என்றால், குளிக்க வேண்டும் உபவாசம் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சடங்குகள் செய்துதான் நாங்கள் கடவுள் பக்கம் போகலாம்.
மார்க்ஸ் சொன்னான்? துன்பப் பட்டவர்களின் பெருமூச்சு, இதயமில்லாதவர்களின் இதயம். பௌதிகத்தின் ஒரு உயிரான இந்த மதம் நீடிப்பதற்கான பௌதிகக் காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். மதம் நீடிப்பதற்கு என்ன காரணம்? முதலாளித்துவ அடிப்படையில் தொழிலாளிகள் ஒன்று சேரக்கூடாது என்பதற்காக, இந்த சனாதன புத்தகத்தைத் (கீதை, மகாபாரதம்) தருகிறான். இப்படி தகவல்கள் எளிய மொழிநடையில் உள்ளது.
நூல்: சனாதன தர்மம் என்றால் என்ன..?
ஆசிரியர்: புலவர் வே. தமிழ்மாறன்
வெளியீடு: தென்குமரி பதிப்பகம்
விலை: ரூ.60
பக்கம்: 64