பல்கலைகழக மானியக்குழு வெளியிட்ட வரைவு அறிக்கையை திரும்பப்பெறக்கோரி 900க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கல்வியாளர்கள் எதிர்ப்பு அறிக்கை…! | தமிழில் – மோசஸ் பிரபு
B.Sc பட்டப் படிப்பிற்கான யுஜிசியின் மாடல் பாடத்திட்டம் – சர்ச்சைக்குரியது | பேரா.வி.முருகன்
எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 15: சினிமாவில் புராதன தர்மங்கள்
இந்து மதமும் இந்துத்துவாவும் ஒன்றல்ல – நூல் அறிமுகம்
ஹிந்து தேசியவாதத்தின் பாசிசம் மீதான ஏக்கம் – அன்வேஷ் சத்பதி | தமிழில்: தா.சந்திரகுரு
மோடி-அதானி சாம்ராஜ்ய ஊழல் – சீத்தாராம் யெச்சூரி
அதானி குழுமம் தன்னுடைய கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தை எப்படிக் கட்டி எழுப்பியிருக்கிறது என்பதையும், 2014இல் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் எப்படி கார்ப்பரேட்-இந்துத்துவா மதவெறி சக்திகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதையும் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது. மோடி அரசாங்கம் எப்படி பிபிசி ஆவணப்படமானது “காலனிய மனோபாவத்தின் உற்பத்தி” (“products of a colonial mindset”) என்று முத்திரை குத்தியதோ அதேபோன்று அதானியும், தன்னுடைய கார்ப்பரேட் சாம்ராஜ்யம் கட்டி எழுப்பப்பட்டுள்ள விதம் குறித்துக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, “இந்திய தேசத்திற்கு எதிரான தாக்குதல்” என்று கூறிக் கொண்டிருக்கிறார். இவர்களின் தில்லுமுல்லுகள் ஏதாவது வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டால் உடனே அதை “இந்தியாவின் மீதான தாக்குதல்” (“attack on the ‘Indian Nation) என்று வகைப்படுத்துகின்றனர். கூட்டுக் களவாணி முதலாளித்துவம்தான் (crony capitalism) இவ்வாறு இந்தியாவின் நலன்களுக்கு ஏற்றது என்று இவர்களால் நியாயப்படுத்தப்படுகிறது. மோடி அரசாங்கத்துடன் நெருக்கமாகவுள்ள கூட்டுக் களவாணிகள் நாட்டின் சொத்துக்களை எப்படியெல்லாம் சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள், மக்கள் நலத் திட்டங்களுக்கு அளித்துவந்த செலவினங்களையெல்லாம் வெட்டிச் சுருக்கி தங்களின் கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்ட மடைமாற்றம் செய்யப்படுவதன் மூலம் தாங்க முடியாத சுமைகளை சாமானிய மக்கள் மீது ஏற்றியிருக்கிறார்கள், எனக் கூறும் அனைவரும் ‘தேச விரோதிகள்’ என முத்திரை குத்தி முழு அளவிலான எதேச்சாதிகாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
இவற்றிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நடைபெற்றுள்ள வெட்கங்கெட்ட துற்செயல்கள் குறித்து எந்தவிதமான விசாரணையும் தேவையில்லை என்று மோடி அரசு கருதுகிறது. கூட்டுக் களவாணி முதலாளித்துவத்துடன் உள்ள இந்தப் பிணைப்பு எவ்வாறு தகாத வகைகளில் செயல்பட்டிருக்கிறது, பொதுத்துறை நிதி நிறுவனங்களான பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எல்ஐசி ஆகியவற்றிலிருந்து மக்களின் கடின உழைப்பில் சேமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் எவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்று விசாரணை மேற்கொள்ள, ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைப்பதற்கோ அல்லது உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் ஓர் உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து இந்த முறைகேடுகளை விசாரிக்கவோ மோடி அரசு நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொள்ளவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக மோடி அரசாங்கத்தின் தாராள உதவிகள் இக்குழுமத்திற்கு கிடைத்துள்ளன. அரசு நிலங்கள் சொற்ப விலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றால் ஏற்படும் காலநிலை சீற்றங்களை கருத்தில் கொள்ளாமல் சுற்றுச்சூழல் உரிமங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அரசுசார் நிதி நிறுவனங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடமிருந்து கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற தனியார் நிறுவனங்களின் சொத்துக்களை இக்குழுமம் வாங்க அரசு உதவி செய்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களையும், துறைமுகங்களையும் வாங்குவதற்கு அரசின் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நிதியங்கள் மூலம் செயல்பட்டது மட்டுமல்லாமல், உள்பேர வர்த்தகம் (Insider trading) ஒரு நிறுவனத்தின் கூருணர்வு மிக்க ரகசியத் தகவல்களை தனது சுயலாபத்திற்காக வெளியிட்டு தவறாக செயல்பட்டு வர்த்தகம் புரிதல்), ‘ரௌண்ட் டிரிப்பிங்’ (round tripping) எனப்படும் சுற்றிவளைத்த வர்த்தகம் (அதாவது, தனது சொத்துக்களின் மூலம் வரும் வருமானத்தை சட்டவிரோத முறையில் ஊதிப்பெரிதாக்கிக் காட்டுவது), சூழ்ச்சி முறையில் பங்குகளை கையாள்வது போன்ற நடவடிக்கைகளில் அதானி குழுமம் ஈடுபட்டபோதிலும், இவற்றை சந்தை ஒழுங்குமுறை அமைப்புகள் கண்டுகொள்ளாமல் உதாசீனம் செய்துள்ளன.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்த பிறகு, அதானியின் சாம்ராஜ்ய மதிப்பானது 200 பில்லியன் டாலர்களிலிருந்து சரிபாதியாகக் குறைந்துள்ளது. அதானி பங்குகளில் முதலீடு செய்தவர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளானார்கள்.
இந்தப் பின்னணியில்தான் இவர்களின் கார்ப்பரேட்-இந்துத்துவா மதவெறிக் கூட்டணி எப்படிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதையும், அது இந்திய அரசு எந்திரத்தை முழுமையாகத் துஷ்பிரயோகம் செய்து கூட்டுக் களவாணி முதலாளித்துவத்தை ஊட்டி வளர்த்துக்கொண்டிருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முயற்சிப்பது அவசியமாகும். இந்தத் திசை வழியில் ஒரு முயற்சியே இச்சிறு புத்தகமாகும்.
மோடி- அதானி சாம்ராஜ்ய ஊழல் இன் நூல் முன்னுரையில் இருந்து
சீத்தாராம் யெச்சூரி
பொதுச் செயலர் சிபிஐ(எம்)
விலை : ரூ.₹30/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
நூல் அறிமுகம்: விடுதலை இராசேந்திரனின் ’ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்’ – பொ. நாகராஜன்
● பெரியாரிய சிந்தனையாளர், தோழர். விடுதலை இராசேந்திரன் ‘ அறிந்திடுவீர் ஆர்எஸ்எஸ்ஸின் கதையை ‘ என்ற தலைப்பில் ‘ கங்கை கொண்டான் ‘ என்ற புனைப்பெயரில், விடுதலை நாளேட்டில், 1980ல் தொடராக எழுதி வந்தார். தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், 1982ல் தொகுக்கப்பட்டு ஒரே நூலாக வெளியானது தான் இந்த படைப்பு !
● அன்றும் இன்றும் இந்தியாவை உள்ளிருந்தே அழிக்கும் நச்சுக் கிருமியாகவும், மதத்தின் அடிப்படையில் நாட்டை துண்டாட துடிக்கும் பாசிச அமைப்பாகவும், இந்துத்துவா என்ற பிரிவினை வாதத்தை விதைத்து வரும் அரசியல் கருத்தாகவும் விளங்குகின்ற ஒரே அமைப்பு – ஆர்எஸ்எஸ் ! அதைப் பற்றிய விரிவாக எழுதப்பட்டதே இந்த நூல் !
● விடுதலை இராசேந்திரனின் அயராத உழைப்பில் ஆர்எஸ்எஸ் பற்றிய எல்லா விவரங்களையும் உள்ளடக்கியதாக நூல் அமைந்துள்ளது. மக்களுக்கு கெடுதல் தரும் ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கம் பற்றி, ஒரு சிலரே இந்த அளவு மெனக் கெடலுடன் தரவுகளை சேகரித்திருப்பார்கள் !
● நூலில் காணக் கிடைக்கும் தகவல்கள் :
ஆர்எஸ்எஸ் தோற்றம் | ஹெட்கேவர் தலைமை | கோல்வால்கர் பங்களிப்பு | கோல்வால்கரின் ஞான கங்கை நூல் | காந்தி கொலையின் பின்னணி | சாவர்க்கர், கோட்சே பற்றிய திடுக்கிடும் தகவல்கள் | ஆர்எஸ்எஸ் அரங்கேற்றிய கலவரங்கள் |
● முக்கிய தலைவர்களை கொலை செய்ய நடந்த முயற்சிகள் | மராட்டிய சித்பவன் பார்ப்பனர்களின் சித்து விளையாட்டுகள் – இவ்வாறு ஒரு துப்பறியும் நாவலைப் படிக்கும் போது ஏற்படும் அதிர்வையும் மர்மத்தையும் மாறி மாறி நம்மால் இந்த நூலில் உணர முடிகின்றது !
● ஆர்எஸ்எஸ் – ராஷ்டிரிய சுயம்சேவக் சங் என்ற அமைப்பு 1925ம் ஆண்டு, விஜயதசமி அன்று (25.09.1925) துவக்கப்பட்டது . அதை தோற்றுவித்த ஐந்து பேரும் மராட்டிய சித்பவன் பார்ப்பனர்கள் !
● அவர்களில் முன்னோடி – கேசவ் பலிராம் ஹெட்கேவர் (1889 – 1940). அவரே சங்கின் முதல் தலைவர். தனது தலைமையின் போது, யாரையும் கேள்வி கேட்க விடாமல், ‘ தலைவர் சொல்லே மந்திரம் ‘ என்ற கட்டுப்பாட்டோடு இயக்கத்தை வளர்த்தார் !
● ஹெட்கேவருக்கு அடுத்து தலைவர் ஆனவரும் சித்பவன் பார்ப்பனர் தான் ! மாதவராவ் கோல்வால்கர் (1906 – 1973)
ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கைகளை உருவாக்கியவர். இவர் எழுதிய நூலான ஞான கங்கை ( Bunch of thoughts ) சங்கிகளுக்கான வேதப் புத்தகம் ! ‘ அரசியலை இந்துமயமாக்கு ! இந்துக்களை ராணுவ மயமாக்கு ! என்ற கொள்கையைப் பரப்பியவர் !
● ஆர்எஸ்எஸ்ஸின் மூன்றாவது தலைவராக ஆனவரும் அதே சித்பவன் பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர். பாலாசாகேப் தேவ்ரஸ் ( 1915 – 1996 ) தீவிர இந்துத்துவா வெறியர். இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு யாரும் மாறிவிடக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தார் . இந்தியாவில் வேறு மதத்தினருக்கு இடமில்லை என்பதை வெளிப்படையாக பேசியவர் !
● இவ்வாறு முதலாவதாக ஹெட்கேவர், இரண்டாவதாக கோல்வால்கர், மூன்றாவதாக தேவரஸ் போன்ற மராட்டிய சித்பவன் பார்ப்பனர்களால் வழி நடத்தப்பட்ட ஆர்எஸ்எஸ் இயக்கம் – இந்தியாவில் இந்து ராஷ்ட்ரா நிர்மாணம் என்ற பெயரில், மனு சாஸ்திர, வேத சாஸ்திர அடிப்படையில், பார்ப்பனர்களின் ஆட்சியை நிறுவுவதற்கே இன்று வரை தொடர்ந்து செயல் பட்டு வருகின்றது !
● தங்களது கொள்கையை ‘ இந்துத்துவா ‘ என அழைக்கின்றார்கள். அதை அடைவதற்கு இந்தியாவின் பல பகுதிகளில் மதக் கலவரங்களை ஈவிரக்கமின்றி நடத்தியுள்ளார்கள் .நூலில் பட்டியலிடப்பட்ட கலவரங்கள் :
● 1927ல் நாக்பூர் | 1970ல் ராஞ்சி | 1971ல் தெள்ளிச்சேரி – கேரளா | 1971ல் ஜாம்ஷெட்பூர் | 1973ல் அகமதாபாத் | 1975ல் அலிகார் | 1980ல் மொராதாபாத் | 1981ல் பீகார் ஷெரிப் |
( இந்த நூலில் பட்டியலிடப் பட்டவைகள் 1982ம் ஆண்டு வரைக்கும் மட்டுமே )
● ஆர்எஸ்எஸ் ஓர் அபாயம் என இந்திய மக்கள் அனைவரும் உணர்ந்த நாள் – காந்தி கொலை செய்யப்பட்ட நாள் ! 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதியன்று மகாத்மா காந்தியை, ஆர்எஸ்எஸ் சீடன், இந்து மகாசபையைச் சேர்ந்த, மராட்டிய சித்பவன் பார்ப்பனன் நாதுராம் கோட்சே, துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான் !
● இதன் காரணமாக ஆர்எஸ்எஸ் 04.02.1948 முதல் 12.07.1949 வரை தடை செய்யப்பட்டது ! சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதல் அரசியல் கொலையை கோட்சே செய்தான் !
● காந்தியின் கொலை வழக்கை விசாரிக்க நீதிபதி ஆத்மாசரண் நியமிக்கப்பட்டார். நீதிமன்றத்தில் விசாரணை 22.06.1948 முதல் 21.06.1949 வரை நடைபெற்று தீர்ப்பும் வழங்கப்பட்டது. நாதுராம் கோட்சே 15.11.1949 அன்று தூக்கிலிடப்பட்டான் !
● காந்தியின் கொலையில் அரை டஜன் சித்பவன் பார்ப்பனர்கள் சம்பந்தப் பட்டிருந்தார்கள். அதன் காரணமாக மராட்டியத்தில் பார்ப்பனர்களுக்கு எதிரான வன்முறை நடந்தது! ஆர்எஸ்எஸ்ஸின் கோல்வால்கரை தூக்கில் போடு என முழக்கமும் கேட்டதாம் !
● அதே காலகட்டத்தில், தமிழகத்தில் தந்தை பெரியார், இங்கிருந்த பார்ப்பனர்களுக்கு எதிராக எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் பார்த்துக் கொண்டார். காந்தியின் கொலையை கண்டனம் செய்தவர் பார்ப்பனர்களுக்கு எதிராக எதுவும் கருத்துக் கூறவில்லை !
● ” நாதுராம் கோட்சே பார்ப்பனராக இருப்பதற்காக அவனையோ அவனது சமூகத்தையோ தாக்குவதை விட , காந்தியின் கொலைக்கான உண்மையான காரணங்களை அறிந்து அதை எவ்வாறு சரி செய்வது என சிந்திக்க வேண்டும் ! ” …என்று தந்தை பெரியார் அகில இந்திய வானொலியில் பேசும் போது கருத்து தெரிவித்தார் !
● ஆர்எஸ்எஸ் காந்தியை கொன்றது மட்டுமல்ல பல்வேறு தலைவர்களை தீர்த்து கட்ட தொடர்ந்து அவர்கள் மீது தாக்குதல்களை நடத்தி வந்தது ! மாற்று கருத்துக்களை எதிர் கொள்ள திராணியற்ற இயக்கம் என்பதற்கு அவர்கள் நடத்திய சில தாக்குதல் பட்டியல் :
● டெல்லியில் காமராசரை 07.11.1976 அன்று அவரது வீட்டில் தீவைத்து கொல்ல முயற்சி | அம்பேத்கரை விஷம் வைத்துக் கொல்ல சாவர்க்கரின் தம்பி பாபா சாவர்க்கர் முயற்சி | பீகார் முதல்வர் கர்பூரி தாக்கூரை 22.10.1979 அன்று கொலை வெறித் தாக்குதல் |
● உ.பி. முதல்வர் ராம் நரேஷ் யாதவை வீடு புகுந்து கத்தியால் குத்தியது | ஜனதா தள் தலைவர் ராஜ்நாராயணின் மண்டையை ராஜஸ்தான் கோட்டாவில் உடைத்தது | மைசூரில் ஜார்ஜ் பெர்னான்டசை குண்டர்கள் தாக்கியது |
● இவ்வாறு இந்திய மக்களை மதத்தால் பிரித்து, வன்முறையால் பயமுறுத்தி, அதிகாரத்தால் அடக்கி ஆள தொடர்ந்து முயற்சி செய்யும் பாசிச இயக்கமே – ஆர்எஸ்எஸ் !
● நூலைப் படிக்கும் முன்பு – ஆர்எஸ்எஸ் ஓர் அபாயம் என அறிந்தவன் !
நூலைப் படித்த பின்னர் –
ஆர்எஸ்எஸ் ஒரு பேரபாயம் என
உணர்ந்து கொண்டேன் !
பொ. நாகராஜன்,
பெரியாரிய ஆய்வாளர்,
சென்னை – 09.03.2023.
நூல் : ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்
ஆசிரியர் : விடுதலை இராசேந்திரன்
விலை : ரூ.₹300/-
பக்கங்கள்: 301
முதல் பதிப்பு 1982
வெளியீடு : கருஞ்சட்டைப் பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com
ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களை வீழ்த்திட மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றுபட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி (தமிழில்: ச.வீரமணி)
சீத்தாராம் யெச்சூரி
(தமிழில்: ச.வீரமணி)

[இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு, அக்டோபர் 14-18 தேதிகளில் விஜயவாடாவில் நடைபெற்றது. அக்டோபர் 15 அன்று நடைபெற்ற துவக்கவிழா மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:]
அன்பார்ந்த தோழர்களே!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டிற்கு இதமான சகோதர வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் துவக்க விழா நிகழ்வுகளில் பங்கேற்க என்னை அழைத்தமைக்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இன்றைய தினம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பெரிய அளவிலான சவால்களை எதிர்கொள்ள இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காக, இடதுசாரிக் கட்சிகளிடையே பரஸ்பரம் ஒற்றுமை உணர்வு ஏற்பட்டிருப்பதற்காக இதர இடது சாரித் தலைவர்களையும் வாழ்த்துகிறேன்.
தோழர்களே, நண்பர்களே!
ஆந்திர மாநிலத்தின் அரசியல் மையமாக விளங்கும் விஜயவாடாவில் நீங்கள் கூடியிருக்கிறீர்கள். இந்த மாநகரமானது பல பத்தாண்டுகளாக கம்யூனிஸ்ட்டுகளின் புரட்சிகர நடவடிக்கைகளில் மையமாக இருந்திருக்கிறது. அது இன்றளவும் தொடர்கிறது. நம் நாட்டில் நடைபெற்ற மிகவும் குறிப்பிடத்தக்க மாபெரும் மக்கள் போராட்டம் நடந்த இடங்களில், மிகவும் கொடூரமான நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறைக்கு எதிரதாக விவசாயிகள் மேற்கொண்ட ஆயுதப் போராட்டம் நடந்த இடங்களில் ஒன்றாக விளங்கும் அரசியல் மையத்தில் நீங்கள் கூடியிருக்கிறீர்கள். இந்த ஆயுதப் போராட்டம், 18 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று, சுமார் 30 லட்சம் விவசாயிகளை விடுவித்தது. 16 ஆயிரம் சதுர மைல்களில் அமைந்திருந்த மூவாயிரம் கிராமங்களில் பத்து லட்சம் ஏக்கர் நிலங்களை விவசாயிகளுக்கு விநியோகித்தது.
இந்த ஆயுதப் போராட்டமும், இதேபோன்று கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையில் வங்கத்தில் நடைபெற்ற தேபாகா போராட்டம், கேரளாவில் நடைபெற்ற புன்னப்பரா-வயலார் போராட்டம், மகாராஷ்ட்ராவில் நடைபெற்ற ஓர்லி பழங்குடியினர் போராட்டம், அஸ்ஸாமில் சுர்மா பள்ளத்தாக்கில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்கள்தான் நாட்டிலிருந்த ஜமீன்தாரி அமைப்புமுறை ஒழிப்பு, பல்வேறு நிலச்சீர்திருத்தங்களை நாட்டின் மையத்திற்குக் கொண்டு வந்தது. இவ்வாறு கம்யூனிஸ்ட் இயக்கம் நடைபெற்ற பகுதிகள் அனைத்திலும் ஆர்எஸ்எஸ்/பாஜக-விற்கு எதிரான போராட்டங்கள் ஆழமாக வேரூன்றியுள்ளன. அவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்தில் இம்மாநாடு நடைபெறுவது கம்யூனிச செல்வாக்கை மேலும் வளர்ப்பதற்கும், இடதுசாரிக் கட்சிகளின் மத்தியில் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்துவதற்கும் உதவிடும் என நான் நம்புகிறேன்.
தோழர்களே! நண்பர்களே!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு, சுதந்திர இந்தியாவும் நம் மக்களும் அனைத்துவிதத்திலும் நெருக்கடிக்கு உள்ளாகி மிகப்பெரிய அளவில் சவால்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிற நிலையில் நடந்துகொண்டிருக்கிறது.
ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக பாஜக அரசாங்கம் பாசிஸ்ட் ஆர்எஸ்எஸ்-இன் இந்துத்துவா மதவெறி நிகழ்ச்சிநிரலை மிகவும் வெறித்தனமாகப் பின்பற்றிக்கொண்டிருக்கிறது. மதச் சிறுபான்மையினரை, குறிப்பாக முஸ்லீம்களைக் குறிவைத்து, தன்னுடைய நச்சு வெறுப்புப் பிரச்சாரத்தையும் வன்முறை வெறியாட்டங்களையும் வெறித்தனமான முறையில் மேற்கொண்டு வருகிறது. இத்துடன் இந்தியக் குடியரசின் இன்றைய மதச்சார்பற்ற ஜனநாயகக் குணாம்சத்தைத் தங்களின் சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் இந்துத்துவா ராஷ்ட்ரமாக மாற்றுவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
அதேசமயத்தில் பாஜக அரசாங்கம் நவீன தாராளமய சீர்திருத்தங்களை, மதவெறி-கார்ப்பரேட் கள்ளப்பிணைப்பின் மூலமாக வலுப்படுத்தி, தன்னுடைய கூட்டுக் களவாணி கார்ப்பரேட்டுகளுடன் சேர்ந்து நாட்டின் சொத்துக்களை சூறையாடிக்கொண்டிருக்கிறது, அரசியலில் லஞ்ச ஊழலை சட்டபூர்வமாக்கி இருக்கிறது. ஜனநாயக உரிமைகளையும் குடிமை உரிமைகளையும் எதேச்சாதிகாரமுறையில் முழுமையாகத் தாக்குதலுக்கு உள்ளாக்கி இருக்கிறது.
நண்பர்களே! தோழர்களே!
இந்தியக் குடியரசின் குணாம்சத்தை மாற்றுவதற்காக திட்டமிட்ட முயற்சிகளில் இறங்கி இருக்கிறது. இந்திய அரசமைப்புச்சட்டத்தின் மதச்சார்பற்ற ஜனநாயகம், கூட்டாட்சி அமைப்புமுறை, சமூக நீதி மற்றும் பொருளாதார இறையாண்மை ஆகிய நான்கு அடிப்படைத் தூண்களும் இவர்களின் ஆட்சியில் அடித்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள் மிகவும் வெறித்தனமான முறையில் அமல்படுத்தப்படுகிறது. இந்தியாவின் பொருளாதார இறையாண்மையையே ஒழித்துக்கட்டும் விதத்தில் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியார்மயமாக்கும் முயற்சிகள் எல்லையில்லாமல் சென்றுகொண்டிருக்கின்றன. கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகைகளும் வாரிவழங்கப்பட்டு வருகின்றன.
அரசமைப்புச்சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கொள்கைகள் மீது கடும் தாக்குதல்கள். இவை அனைத்தும் மோடி அரசாங்கம், இந்தியாவை ஓர் இந்துத்துவா நாடாக மாற்றுவதற்காக மேற்கொண்டுள்ள எதார்த்த நடவடிக்கைகளின் சமிக்ஞைகளாகும்.
ஒன்றிய மோடி அரசாங்கமும், மாநிலங்களை ஆளும் பல்வேறு பாஜக அரசாங்கங்களும் மதவெறித் தீயை விசிறிவிடும் வேலைகளை நோக்கமாகக் கொண்டு சட்டங்களை இயற்றி இருக்கின்றன. இந்தச் சட்டங்கள் அப்பாவி சிறுபான்மையினரைக் குறிவைத்துப் பிரயோகிக்கப்படுகின்றன. அவர்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு, அவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகின்றனர்.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டத்தில் உள்ள தேசத்துரோகக் குற்றப்பிரிவு, தேசியப் பாதுகாப்புச் சட்டம் முதலானவை வகைதொகையின்றி பயன்படுத்தப்பட்டு நூற்றுக்கணக்கானவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சட்டப் பிரிவுகள் சிறுபான்மையினருக்கு எதிராக மட்டுமல்ல, தங்கள் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்துக்கூறும் இதழாளர்கள் மற்றும் இதர பிரிவினருக்கு எதிராகவும் ஏவப்படுகின்றன. தங்கள் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்து கூறப்படுவதே, தேசத்துரோகம் என்று கருதப்படுகிறது. இந்த ஆண்டு கல்வி, அரசியல், சமூகம், கலாச்சாரம் மற்றும் நிதி போன்று பல முனைகளிலும் கூட்டாட்சி அமைப்புமுறையின்கீழ் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டதைப் பார்த்தோம்.
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்களின் செயல்பாடுகள் பாஜக-வின் அரசியல் நிகழ்ச்சிநிரலை அமல்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பதையும் பார்க்கிறோம். அரசமைப்புச்சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் போன்றவையும் பாஜக ஆட்சியாளர்களால் அரித்து வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகமும், அதிலும் குறிப்பாக அமலாக்கத் துறையும் எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறி வைத்து, ஆளும் கட்சியின் ஓர் அரசியல் அங்கமாகவே செயல்படுவது அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக ஜோடனை செய்யப்பட்ட செய்திகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
ஆட்சியாளர்களின் இந்துத்துவா மதவெறி சித்தாந்தம் அறிவியலுக்குப் புறம்பானது, வரலாற்றுக்குப் புறம்பானது, பகுத்தறிவற்றதாகும். இந்து புராணங்களின் பத்தாம்பசலித்தனமான சிந்தனைகளையும், கண்மூடித்தனமான மூட நம்பிக்கைகளையும் உண்மையான வரலாறு எனக் கூறி பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
தோழர்களே! நண்பர்களே!
மோடி அரசாங்கமானது இந்தியா காலங்காலமாகப் பின்பற்றிவந்த சுயேச்சையான அயல்துறைக் கொள்கையைக் கைவிட்டுவிட்டது. இந்தியா இப்போது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக தன்னைத் தரம் தாழ்த்திக்கொண்டுவிட்டது. இஸ்ரேலுடன் போர்த்தந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் நாம் காலங்காலமாக பாலஸ்தீன போராட்டத்திற்கு அளித்து வந்த ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் நீர்த்துப்போகச் செய்திருக்கிறது. அமெரிக்கா-இஸ்ரேல்-இந்தியா பிணைப்பு ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
மேலும் இந்தியா, அமெரிக்காவுடன் தன் ராணுவ ஒப்பந்தங்களைக் கெட்டிப்படுத்தி இருக்கிறது. சீனாவைத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா-ஜப்பான்-ஆஸ்திரேலியா-இந்தியா ஆகிய நான்கு நாடுகளின் கூட்டணியை (QUAD alliance) ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
தோழர்களே! நண்பர்களே!
அரசாங்கம், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவிட்டோம் என்று என்னதான் தம்பட்டம் அடித்தபோதிலும், நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக அதலபாதாள நிலைமைக்குச் சென்றுகொண்டிருக்கிறது. கோவிட் பெருந்தொற்றைக் கையாள முடியாத கையாலாகத்தனத்தின் காரணமாக மக்களின் வாழ்வாதாரங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் கடுமையாக அதிகரித்திருக்கின்றன. வேலையின்மை மிகவும் உச்சத்திற்குச் சென்றிருக்கிறது. அதிகரித்துவரும் பணவீக்கம் கோடிக்கணக்கான மக்களை வறுமை மற்றும் பசி-பட்டினிக் கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கின்றன.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளும், அதிகரித்துவரும் எதேச்சாதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளும், மக்களின் வாழ்வாதாரங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகவும் மக்களின் போராட்டங்கள் உக்கிரமடைந்திருக்கின்றன.
குடியுரிமைத் திருத்தத் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்கள், குறிப்பாக பெண்களும் இளைஞர்களும் பெரும் திரளாக அணிதிரண்டதைப் பார்த்தோம்.
ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டம், மிகவும் முரட்டுத்தனத்துடன் இருந்துவந்த மோடி அரசாங்கத்தை, படுபிற்போக்குத்தனமான வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வைத்தது. மத்தியத் தொழிற்சங்கங்களும் தொழிலாளர் சட்டங்களைத் தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றியதற்கு எதிராக அகில இந்திய வேலை நிறுத்தங்களை வெற்றிகரமாக நடத்தி இருக்கின்றன. சமீபத்தில் அவர்கள் மார்ச் 28-29 தேதிகளில் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டம் மகத்தான வெற்றி பெற்றது. சமீப காலங்களில் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நடத்திடும் போராட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெற்றி பெற்று வருகின்றன.
மக்கள் போராட்டங்களை மேலும் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றிட இடதுசாரி சக்திகளின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகும். அதன் அடிப்படையில் இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை ஒரு மாற்றுக் கொள்கைத் திசைவழியுடன் ஒருங்கிணைத்திட வேண்டும்.
அதே சமயத்தில் இந்துத்துவா மதவெறியர்களின் தாக்குதல்களைத் தனிமைப்படுத்தி, முறியடித்திட மதச்சார்பற்ற சக்திகளை அணிதிரட்ட வேண்டியதும் அவசியமாகும்.
கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம், தன்னுடைய மாற்று மக்கள் ஆதரவுக் கொள்கைகள் மூலமாக மக்களின் மத்தியில் நல்லாதரவைப் பெற்று, கேரளாவின் தேர்தல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது. அதன் சாதனைகள் காரணமாக கேரளம், நாட்டிலேயே மனிதவள வளர்ச்சி அட்டவணையில் உயர்ந்த இடத்தைப் பதிவு செய்திருக்கிறது. இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தைப் பலவீனப்படுத்திட ஆர்எஸ்எஸ்-உம், ஒன்றிய அரசாங்கமும் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தவிடுபொடியாயின. இடதுசாரி சக்திகள் அனைத்தும் ஒன்றுதிரண்டு இவர்களின் முயற்சிகளை முறியடித்திட வேண்டும்.
இடதுசாரி கட்சிகளும், இடதுசாரி சக்திகளும் இணைந்து, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும், மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கும், இந்திய மக்களின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குணாம் சத்தைப் பாதுகாப்பதற்கும், மக்களுக்கான சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதற்காக முன்னேறிச் செல்வதற்கும், நாட்டு மக்களை அணிதிரட்டுவதன் மூலம் இந்தக் கடமைகளை நிறைவேற்றிட முடியும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்புகிறது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
ஆர்எஸ்எஸ்/பாஜக அரசாங்கத்தை வீழ்த்திடுவோம்!
இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்தி, ஒருங்கிணைத்திடுவோம்!
மாற்றுக் கொள்கைகளுக்கான போராட்டங்களில் இடது ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை ஒருங்கிணைத்திடுவோம்!
இந்துத்துவா மதவெறிக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகளை விரிவான அளவில் அணிதிரட்டிடுவோம்!
மார்க்சிசம்-லெனினிசம் நீடூழி வாழ்க!








