சுயம் சிறுகதை – சக்தி ராணி
விறகுகளையும், சுள்ளிகளையும் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு வந்தாள் காளியம்மாள்.
“என்ன காளியம்மா ஆச்சி…இன்னிக்கு இன்னும் வேலை ஆரம்பிக்கலையா, இவ்வளோ நேரம் ஆச்சு?”
“ஆமாம்மா…சுள்ளி எடுத்து வரவே இவ்வளோ நேரம்…
ரொம்ப தூரம் நடந்து வாறீக…இந்தாங்க கொஞ்சம் நீச்சத்தண்ணீர் குடிச்சுட்டுப்போங்க”.
ராசாத்தி…அருமைப்புள்ளையத்தான் உங்கப்பன் பெத்துருக்கான். நல்லாயிருக்கு ஆத்தா…களைப்பு நீங்கி புது தெம்பு வந்துருச்சுமா”.
“அதெல்லாம் இருக்கட்டும். மத்தியானம் வீட்டுக்கு வருவேன். குழாய் புட்டு ரெடியா எடுத்து வைச்சிருக்கணும்”
“ஓ..கோ…அப்படி சொல்ல வாறீயா….உனக்கு இல்லாமலா… வாடி என் தங்கப்புள்ள…”
“சரி நான் வாரேன்”.
புதுத்தெம்பின் வேகத்தில் வேகமாக வீட்டிற்குச்சென்றாள் காளியம்மா. எடுத்து வந்த விறகுகளை சின்னச்சின்னதாக உடைத்தாள். புட்டு தயாரிக்க அரிசி மாவு, கேப்பை மாவு எடுத்து பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வெளியில் அமர்ந்தாள்.
காளியம்மா வீடு ரொம்ப சின்னது. படுத்து எந்திரிக்க மட்டும் தான் இடம் இருக்கும். அதன் வெளியில் சின்னதா ஒரு மண் அடுப்பு மழைநீர் விழாம பாதுகாப்பான அரண் அமைச்சு அமைந்திருக்கும்.
பாத்திரத்தில் மாவு இட்டு சிறிது நீரை கலந்து தேவையான பதம் பார்த்து பிசைந்து கொண்டிருந்தாள்.
மாவு ரெடியாகும் முன்னே, பக்கத்தில் வசிப்பவர்கள் எனக்கு ஐந்து…ஆறு…பத்து என முன்பதிவு செய்து கொண்டிருந்தனர். ஏன்னா, காளியம்மா செய்யும் புட்டு அவ்ளோ மணமா…சுவையா…நா விரும்புவதாக இருக்கும்.
“எல்லாருக்கும் கண்டிப்பா இருக்கும். கொஞ்ச நேரம் கழிச்சு வாங்க. நானே சொல்றேன்” என்றாள்.
“காளியம்மா ஆச்சி…நான் வந்துட்டேன்” என்றே ஓடி வந்தாள் அகல்யா…
“அதுக்குள்ள வந்துட்டியா…எதுக்கு இம்புட்டு வேகமா வார புள்ள?”
“புட்டு தீர்ந்திருச்சுனா…அதான் வேகமா வந்தேன்”.
“அட கழுத உனக்கு இல்லாமலா, நான் வியாபாரம் செய்யப்போறேன்”.
“அதெல்லாம் தெரியாது. சரி…சரி…நீ பேசாம புட்டு அவிச்சு கொடு. நான் உனக்கு எதும் உதவி பண்ணட்டுமா?”
“இந்த தேங்காய் மட்டும் சீவி கொடு”.
“ம்ம்….பண்றேன்”.
புட்டு வாசம் தெரு முழுதும் மணக்க…பக்கத்து வீட்டுக்காரங்க முதல்ல வந்தாங்க.
“என்ன…இசக்கியம்மா…மதிய வேளை முடிஞ்சதோ…முதல்ல வந்துட்ட.”
“வேலையா முக்கியம்…புட்டு தான் முக்கியம்”.
“சரியா சொன்னீங்க…அதான் நானும் வந்தேன்” என்றே பின்குரல் கொடுத்தாள் சீனித் தாயக்கா…
ஆவி பறக்க…வாழை இலையில் புட்டு பரிமாறி அனைவருக்கும் கொடுத்தாள்.
எனக்கு…எனக்குனு கொஞ்ச நேரத்துல இருந்த புட்டெல்லாம் காலிபண்ணியாச்சு.
பாத்திரங்களைக் கழுவி எடுத்துக் கொண்டிருந்தாள் காளியம்மா…
“ஏன் ஆச்சி எல்லா வேலையும் நீங்களே செய்றீங்க… உங்களுக்கு ஒத்தாசைக்கு உங்க புள்ளைங்க இல்லையா?”
“ஏன் இல்ல….எனக்கு மூணு பொம்பளைப்புள்ளைங்க… மூணையும் கட்டிக்கொடுத்து இப்போ எல்லாம் ஒரு ஒரு திசைக்கும் குடும்பம் குழந்தைக னு சந்தோஷமா இருக்குங்க”.
“அப்புறம் என்ன ஆச்சி…நீங்க அங்க போய் இருக்கலாம் ல?”
“கேட்க நல்லாத்தான் இருக்கு.ஆனா…வாழ்ற வரைக்கும் யாருக்கும் பாரமா வாழக்கூடாதுனு என் நினைப்பு. என் புருஷன் இருந்த வரை ஹோட்டல் நடத்தினோம். அவரு போனதுக்கப்புறம் என்னால அத சமாளிக்க முடியலை. புட்டு அவிச்சு இப்போ என் சுய சம்பாத்தியத்துல வாழ்க்கை ஓடுது”.
“என்னது ஹோட்டலாம் இருந்துச்சா?”
“இப்போ இருக்குற கீழ வாசல் தெருவுக்கு முன்னாடி ஒரு ரயில்வே கேட் வருதே அங்கதான். ஊருக்கு போறவுக… வாரவுக எல்லாம் சாப்பிட்டு போவாக. நல்ல வருமானம் தான் அப்போலாம்”
“ம்ம்…புரியுது ஆச்சி”
“இவா ஒருத்தி பெரிய மனுஷி போல பேசுவா பேசிக்கிட்டே இருந்தா…நான் கிளம்பனும் இப்போ”
“எங்க ஆச்சி போறீங்க…?”
“அது சினிமா பார்க்கத்தான்”
“சினிமாவா!”
“சம்பாதிச்ச காசை நமக்காக கொஞ்சம் செலவு பண்ணனும்னு சின்ன வயசுல எங்க அப்பா சொல்லிருக்கார்”.
“அதுக்காக…போறீங்களா?”
“ஆமா…ஆமா…எங்க சின்ன வயசுல நினைச்சப்போ எதும் கிடைக்கல…சினிமா போக முடியாது. கடைத்தெருக்கு போக முடியாது. இப்போபாரு. நான் சொந்தமா கடை வைச்சிருக்கேன். நினைச்சப்போ சினிமா பார்ப்பேன்” என்றே பல் இல்லா பொக்க வாயை காட்டி சிரித்தாள்.
அகல்யாவிற்கு சிரிப்பதை விட சிந்தனை அதிகமானது ஆச்சி வாழ்க்கையை நினைத்து…
“சரி ஆச்சி…எப்போதும் நீ தனியா தான் போற. இன்னிக்கு நான் வரட்டுமா?”
“உனக்கென்ன புத்தி கெட்டு போச்சா…வயசான என் கூட வரேன்ற. உம் அம்மா சம்மதிப்பாளா…இதுக்கு?”
“அதைப்பத்தி ஏன் நீ கவலைப்படுற…நாம போறோம்…நீ வேலையை முடி.நான் அஞ்சு நிமிஷத்துல ஓடியாறேன்”.
கைப்பையில் தின்பண்டம் கொஞ்சம் எடுத்துக்கிட்டு வேகமாக நடை நடந்தாள் காளியம்மா.
“என்ன டிக்கெட் கொடுக்குறவரே…டிக்கெட் கொடுங்க”
“என்ன காளியம்மா…டெய்லி தியேட்டர் பக்கம். உனக்கு பொழுதுபோகலையோ?”
“அது எதுக்கு தேவையில்லாத வேலை… கொடு டிக்கெட்” என்றே வெடுக்கென பிடுங்கினாள்.
“ஆச்சி…ஆச்சி”
“அடியாத்தாடி இங்கயும் வந்துட்டியா?”
“நான் வாரேன் சொன்னேன்ல. விட்டுட்டு வந்துட்ட…இந்தாங்க எனக்கொரு டிக்கெட்”
“என்ன கைத்துடுப்பா…இது?”
“வேலையைப் பாருமய்யா…சும்மா கேள்வி கேட்குற?”
“ஓடியாடி…உள்ள படம் போட்டுருப்பாங்க”
“எவ்ளோ…ஜில்னு இருக்கு பார்த்தியா?”
“ஆமா…இது ஏசி தியேட்டர்ல?”
“வா வா.”
இருக்கையில் அமர்ந்தனர்.
“ஏன் ஆச்சி உனக்கு இவ்வளோ ஆசை…படம் பார்க்குறதுல”
“படம் பார்க்குறதுலயா….இப்போ பாரு”ன்னு தூங்க ஆரம்பித்தாள்.
“அட என்ன ஆச்சி படம் பார்ப்பன்னு வந்தா”
“நான் நிம்மதியா தூங்குற இடமே இது தான்டி. என் வீட்ல ராவெல்லாம் கொசுக்கடி…ஏதோ தனிச்சிருக்கறது என்னை தூங்க விடாது. இப்போ பாரு. என்னை சுத்தி எத்தனை பேர் இருக்காங்கனு நிம்மதியா தூங்குவேன்”.
“இப்போ கூட புரிஞ்சது ஆச்சி”
“ஆமா நீ பெரிய மனுஷி எல்லாம் புரியும். இப்போ கொஞ்சம் தொந்தரவு பண்ணாத…”
ம்ம்…” என்றே படம் பார்த்துக் கொண்டே ஆச்சியையும் பார்த்துக் கொண்டாள். படம் முடியும் நேரம்.
“ஆச்சி எழுந்திரு…எழுந்திரு” என்றாள்.
“அதுக்குள்ள முடிஞ்சா…சரி வா போலாம்” என்றே நடக்கத் தொடங்கினர்.
“என்னடி…இன்னிக்கு முழுத்தும் என் கூடவே இருக்க?”
“என்னவோ உங்கூடவே இருக்கனும் போல இருக்கு…ஏன் ஆச்சி…தனிமைன்னு சொன்னியே..நீ எத்தனை வருஷமா தனியா இருக்க?”
“நான் பத்து வருஷமா தனியா தான் இருக்கேன். வாரம் ஒருமுறை எம் பேர புள்ளைக…புள்ளைங்க எல்லாம் வருவாங்க…சந்தோஷமா பேசிட்டு போயிடுவாங்க”.
“உங்க வீடு சின்னதா இருக்கே…எப்படி அவங்க வந்தா இடம் பத்தும்?”
“இடம் மனசுல நிறையா இருக்குடி…நீ நினைச்சது போல நினைக்கல”
ம்ம்…என்றே மௌனமாக நடந்தாள்.
“கொஞ்ச நேரத்தில் எங்க வீடு ரொம்ப பெருசு. ஆனா எங்க வீட்ல நீ சொல்ற மாதிரி யாரும் இல்லை. நான் எங்க அம்மா மட்டும் தான் இருக்கோம்”.
“வசதியா இருக்குறது விட மனசு சந்தோஷம் தான் இந்த வாழ்க்கைல முக்கியம். நீ கேட்டது போல என் பெரிய மவ வீட்ல…ஒரு வாரம் …சின்ன மவ வீட்ல ஒரு வாரம் இருக்கலாம். ஆனா…எவ்ளோ நாள் ஏத்துப்பாங்க! என்னிக்காவது பிரச்சனை வரும். ஆனா இப்போ பாரு நான் உண்டு என் வேலை உண்டு ஓடுறேன். முடியாத வயசுல எம் புள்ளைங்க என்ன பார்த்தா போதும். அதுவரை நான் எனக்கு ராணி தான்”.
“சரியா தான் இருக்கு உன் சிந்தனை ஆச்சி…ஆனா…”
“உன் ஆனா…எனக்கு தெரியும். இருந்தாலும் இப்போ இது தான் சரின்னு என் மனசுக்கு தோணுது”.
“ம்ம்,.” என்றாள்.
“என் வீடு வந்துருச்சு. நான் போறேன். நீயும் பத்திரமா வீட்டுக்குப் போ” என்றே நின்றாள்.
‘சரி’ என்றே திரும்பிப் பார்க்காமல் அகல்யா நடந்தாள்.
வாசலில் நின்றவாறே அகல்யா செல்வதை பார்த்துக்கொண்டே இருந்தாள். மனம் முழுதும் தெளிவாகத்தான் இருந்தது அகல்யாவின் நினைவில்…
“அம்மா…ஆச்சி வீட்ல விட்டுட்டேன்…பத்திரமா வந்துட்டாங்க…”
“ஏன்டி…நீ எங்க அம்மாவை பத்திரமா பார்த்தியா…வந்தேன் அடி தான்…”
இருவரும் ஓடி சிரித்துக்கொண்டே ஜன்னல் வழியே பார்த்தனர் காளியம்மாள் இளைப்பாறுவதை…
– சக்தி ராணி


கேரளா போய் பாடல் எழுதிய அனுபவம் போல் கேரளத்து நண்பர்கள் சென்னை வந்து என்னிடம் பாடல் வாங்கிய விதமும் அழகானது தான். படத்தின் பெயர் “ட்ராமா” இது இரண்டே ஷாட்டில் எடுக்கப்பட்ட சினிமா. இன்னும் திரைக்கு வரவில்லை. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. விரைவில் திரைக்கு வரும். இந்த வாய்ப்பு என் பெற்றெடுக்கா மகள் விஜயலட்சுமியால் கிடைத்தது. அவர் வாட்ஸ்அப்பில் உரையாடும் போது நீங்கள் மண்வாசனை பாடல் மட்டும் தான் எழுதுவீர்களா வேறு வகைப் பாடல்களும் எழுதுவீர்களா எனக் கேட்டபோது சின்னதான கோபத்தில், நான் இங்கிலீஷ் படத்திற்கே பாடல் எழுதியிருக்கிறேன் என்னப் போய் இப்படி கேட்டிட்டியே மகளே என்றேன்.(அதற்கு அவர் என்ன.. இங்கிலீஷ் படமா என வாயைப் பிளந்தது, பிறகு அது என்ன படம் எனக் கேட்டபோது என் வாய் மூடிக் கொண்டதெல்லாம் எடிட்) அதன் பிறகு தான் இந்த வாய்ப்பு, ஏனெனில் அந்தப் படத்திற்கு விஜயா தான் வசனக்கர்த்தா. அந்தப் படத்தின் இயக்குநர் அஜய்குமார் என் அன்புக்குரியவர். அந்தப் படத்தில் மதுரையின் பெருமையைச் சொல்லும் விதமான ஒரு பாடல் ஜெய கே தாஸின் இசையில் வேல்முருகனின் குரலில்.