கவிதை : நம்பிக்கை – ஐ.தர்மசிங்
தொடர்-1 : ஏன் இந்தத் தொடர்? – அ.பாக்கியம்
பாங்கைத்தமிழன் கவிதைகள்
‘நோய்களுக்கு மருந்து நீ’
******************************
உலகின் ஒப்பற்ற தேசம்!
அகிலத்தின் அழகு தேசம்
மூத்த இனமும் மொழியும்
தோன்றிய முதன்மை தேசம்!
வற்றா நதிகளும்
வளமார் மண்ணும்
குன்றா வளமும்
குறைவிலா செல்வமும்
மாண்பமை மக்களும்
இயற்கையின் செல்ல தேசம்!
இந்திய தேசம்!
வார்த்தை ஜாலத்திற்காக
வர்ணனை செய்யவில்லை!
இந்த தேசத்தின்
பூர்வக் குடியின்…
இந்த தேசத்தை
சுவாசிக்கும் வார்த்தை
வடிவங்கள்!
இன்று….
முடங்கிக் கிடக்கும் தேசமாக
முட்டுக்கட்டை களைப்
போட்டது யார்?
சுய நலத்திற்காக
உழைக்கும் மக்களை
உடைத்தது யார்?
ஒன்றாகப் பிறந்து
ஒன்றாக உழைத்து
ஒன்றாக உண்டு
ஓர் உணவை உண்டு
ஓரிடத்தில் உறங்கி
ஒரே உறவுகளாய் வாழ்ந்தோமே…. !
இது பொய்யென்றால்
நீ சொன்னாலும்
நான் சொன்னாலும்
இந்த மண்ணின்
பூர்வக்குடிகள் இல்லை நாம்!
மதங்கள் நம்மை அண்டின
சாதிகள் நம்மை தொற்றின
நோய்கள்… நோய்கள்…!
நோய்களை விரட்டுவோம்
‘நோயற்ற வாழ்வுதானே
குறைவற்ற செல்வம்’
இந்த தேசத்திற்கு!
சொர்க்கத்தில்
இருக்கும்
என் பெற்றோர்
என்னிடம் பேசினர்!
கனவின் வழி!!
மீண்டும்
மண்ணுலகில் பிறப்பு
வேண்டுமெனில்
அருளுகின்றேனென
ஆண்டவன்
அனுமதித்துள்ளார் !
மகனே…..
பிறவியெடுத்து
வருவதற்கு…
பேராசைதான்!
இந்தியாவில்
சாதிகளின் பேயாட்டம்
மதம்பிடித்தோர் வெறியாட்டம்
ஏய்ப்போரின் வெறியாட்டம்
அரசியல் வாதிகளின்
கொள்ளைக்கூட்டம்
அழிந்திருந்தால்
சொல் மகனே….
உனக்கே
பிள்ளைகளாகப்
பிறக்கிறோமென்றனர்
என்னத்தச்சொல்ல?
*********************************
ஏமாற்றும்
வித்தைகள்
பல விதம்!
வீதி ஓரங்களில்
வித்தைக் காட்டுபவனின்
வித்தை
வயிற்றுப் பாட்டுக்கானது!
திரைக்காக…
நடிகர் மட்டுமல்ல
திரைப்படம் உருவாக
உழைக்கிறோம் என்போர்
அனைவரின் வித்தை
ஆசைக்கானது!
அலப்பறை செய்து
கொள்ளையே கொள்கை
என்னும்..
அரசியல் பேய்களின்
வித்தை….
அநாகரிகமானது!
மயிர் வளர்ப்பு
அம்மணத் திறப்பு
அங்க வஸ்திர அணிவிப்பு
அருவருப்பான
வேஷ கோஷம்
கூச்சல்… குடைச்சல்
எல்லாமும்
மனநோயின் வித்தை;
மக்களை மயக்கும்
மதிகெட்ட வித்தை!
வித்தைக் காட்டுபவரே
வித்தகனானான்!
விதை போட்டு
வியர்வைசிந்துவோன்
வேடிக்கைப் பொருளானான்!
விந்தை உலகமடா….
இல்லை… இல்லை….
வித்தை உலகமடா!
**************************************
மனிதன்
என்னென்னவோ வேடமிட்டு
பிழைப்பை நடத்திக்
கொண்டிருக்கிறான்!
உலகம் ஒரு நாடகமேடை
நாமெல்லாம் நடிகர்
என்ற
அறிஞனின்
ஆழமான சிந்தனை
எவ்வளவு நிதர்சனம்!
வயிற்றுப் பிழைப்பிற்காக
கடவுள் போன்று
வேடமிட்டு….
பிச்சையெடுக்கின்றார் சிலர்;
ஓ…..
கடவுள் இப்படித்தான் இருப்பாரோ?
வேடமிட்டவனுக்கு எப்படித் தெரியும்?
இந்த
உருவத்தை உருவாக்கியவனுக்குத்தான் தெரியும்!
கடவுளின் உருவம்.
கடவுள் உருவத்தில்
கையேந்தி வருபவருக்கு
ஏன் கற்பூரம் ஏற்றவில்லை?
கடவுள் உருவத்தை
கற்பனையில் உண்டாக்கியவர்!
அவர்களுக்கு
நன்றாகத் தெரியும்
கடவுளுக்கு உருவமில்லை என்பது!
வயிற்றுப் பசிக்காக
கடவுள் வேடமிட்டு
கையேந்தி வந்தாலும்
பிச்சைப் பாத்திரம்
நிரம்புவதில்லை….
பிச்சைப் போடுபவனுக்கும் தெரியும்!
பிச்சையெடுப்பவன்
கடவுள் இல்லையென்பது!
பிச்சையெடுப்பவன்தான்
நம்புகின்றான்…..
பாவம்;கடவுளை!
கலாபுவன் கவிதை
என் ஏகாந்தத்தின் தோழன் கவிதையே
தனிமையில் எழுதும் கவிதை தான் பலருக்கு பிடிக்கிறது
கவிதையே கதையின் சுருக்கம்
நானூறு உணர்ச்சிகளை நாலு வரிகளில் சொல்வது கவிதை
பாநூறு எழுதினாலும் படிப்பதற்கு ஆளில்லை
ஆகவே தான் சில வரிகளில் சிற்பமென செதுக்குகிறேன் கவிதைகளை
ஆராய்ந்து எழுதுகிறேன்
அடுக்கு மொழியில்லை ஆனாலும் நிஜங்களே அவை
தேனூற்று வார்த்தைகளை தேடி எழுதவில்லை
தேடி வருவோர்க்கு தெவிட்டாமல் எழுதுகிறேன்
சீரான வரிகள் இவை
சிந்தனையைத் தூண்டுபவை
கடைசி மனிதனுக்கும் கற்பனை வடிவதில்லை
சோகமோ சுகமோ சொல்லிவிட்டால் ஒரு நிம்மதி தான்
வானிலவு இருக்கும் வரை வாழ்கையில் கவிதையுண்டு
தேனிலவு முடிந்தாலும் திகட்டிடுமோ வாழ்க்கையிங்கு…..
மனிதம் கவிதை – வ. சு. வசந்தா
மனிதம் செத்தால் மாளும் உலகம்.
அன்பே அனைத்தும்
அன்பு அறிவு ஆளுமை
மனிதனாய் இரு மனிதனை
வாழ விடு.
தன்னைப் போல் பிறரை நினை
தலைக்கனம் நீங்கி தலை சிறந்து விளங்கு
வன்முறை, பாலியல், சாதிவெறி நீங்கி நல் சமுதாயம் படைத்திடு!
நன்றியை நட்டாற்றில் விடாதே
கொன்ற பாவத்தை தின்று
தீர்க்காதே
பாவத்தைப் போக்க பரதேசம் போகாதே
வினையை விதைத்து விட்டு விளைவை எதிர்பார்த்திரு
விடிந்தால் நல்வினை
முடிந்தால் தீவினை
நீ நீயாக இரு! தனித்து ஒளிர்வாய்!
பேசு பழகு பொய் கலக்காமல்
கொடு பிரதிபலன் பார்க்காமல்
தடுக்காதே கொடுப்பதை
வல்லவனாய் இரு வன்முறைக்கு அல்ல
சமுதாயம் உயர்த்து
உன் தலை தெரியும்
தன்முனைக் கவிதைகள் – கார்கவி
மனிதனும் மண்ணும்
**************************
நீர் குழைத்த சேற்றில்
ஈரமானது வாழ்க்கை
ஏற்றத்திற்கு ஐம்பதும்
இறக்கத்திற்கு ஐம்பதும் ஆனது
ஈரமான மண்ணில்
ஓங்கி நிற்கும் கட்டிடங்கள்
கூரை மேய்ந்தவன் அவனே
தாரை ஊற்றியவன் அவனே
களத்து மேட்டு நெல்லி்ல்
பசியும் பட்டினியும்
பசுமையோடு உலவி வரும்
பச்சையம் நிறைந்த காற்று
நீர் பாய்ச்சிய மண்ணில்
பரிணாமம் விளைகிறது
பட்டினிகளில் கரங்களுக்கு
பெய்கிறது பசுமை மழை
உடலோடு ஒட்டிய மண்ணில்
உழைப்பு படிகிறது
இரத்தம் வடிதலும்
யுத்தம் பிறப்பதும் இயல்பாகிறது.
நம்பிக்கை
*************
பரிகாரங்களை முடித்த
பாவமான ஆண்மகன்
பக்கத்தில் அமர்கிறாள்
ஒரே நட்சத்திர பெண்மணி
கழுத்தில் மாலையிட்டு
தொட்டு தொட்டு பார்க்கிறான்
நவக்கிரகங்கள் தான்
இடை மறித்து நிற்கின்றன
அவனும் அவளும்
அருகருகே அமர்வு
அந்த செவ்வாய்
திரும்பினால் திருமணம்
நெடுந்தூரம் வேண்டி
கால் கடுக்க பயணம்
காதலித்திருந்தாள் அந்த
மைல்கள் அருகிலோ
உறவுகள் நினைத்திருந்தால்
நீ உற்று உற்று
கும்பிட வேண்டாம்
ஊமைக் கல்லை
காதலிசம்
*************
உன்னை நினைத்த பின்
உலகமே மறக்கிறது
உண்மை தெரிந்த பிறகு
காதலே மறக்கப்படுகிறது
நிலவுக்கு பெயர் வைத்தேன்
நீ என்று
உண்மையில் கரைவது
நான் மட்டும் தான்
ஆற்றோர அமர்வில்
காதல் பயணிக்கிறது
எறிந்த கல்லில்
எத்தனை எண்ணங்களோ
வறண்ட
நிலத்தலும்
சாகுபடி செய்யும் காதல்
வயது என்பதையும்
மறக்கிறது ஒரு காதல்
வானமெல்லாம் எண்ண மழை
தேங்குகிறது மனதில்
விருப்பத்திலும் விருப்பமில்லாமலும்
தேங்கும் பெற்றக்குளம்
மனிதகுலத்தின் பொக்கிஷம் கவிதை – நாகூர் பிச்சை
மனிதன் மனிதனுக்காகவே கண்டுபிடித்தும்
கண்டுபிடித்துக் கொண்டும் இருக்கின்ற
விடயம்தான் அறிவியல்..
ஒன்று இருப்பதை கண்டு பிடிக்கிறான்
இல்லையேல் இருப்பதற்காக
கண்டுபிடிக்கிறான்..
விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் அந்த வானையே
துளைத்து வாழத் துடித்தாலும்..
மனிதனின் வாழ்க்கையை மேன்மை
படுத்துவது கடந்தகால அனுபவங்களும்
அத்தாட்சிகளும் ஆசைகளும் எச்சரிக்கைகளும் தான்..
ஒரு பொருளின் ஆயுட்காலமும் உபயோகமும்
அதிகமாக இருக்க வேண்டும் என்று
சொன்னால்..
அதனுடைய விதிமுறைகளை படித்துவிட்டு
விதிமுறைகளின்படி அதனை
செயல்படுத்தப்படும் போது தான் நாம்
நினைத்தது சாத்தியமாகும்..
அதுபோலத்தான் மனிதகுலம் சிறப்பதற்கு
மனிதனுக்கு என்று வழிமுறைகள் நிச்சயம்
வேண்டும்.
ஆனால் அதனை வழிவகுப்பது மனிதனே
வகுத்துக் கொண்டால் சரியாக இருக்காது..
எப்படி ஒரு பொருளை உருவாக்கிய நிறுவனம்
அதன் விதிமுறைகளை பட்டியலிடுகிறதோ..
அதே போன்று தான் மனிதன் மனிதனுக்காகவே
எழுதப்பட்ட விதிமுறைகள் சற்று ஏதேனும் ஒரு
விடயத்தில் குறை உள்ளதாகவே காணப்படும்..
நாம் நிகழ் கால அனுபவங்களை பார்க்கலாம்
எழுதப்பட்ட சட்டங்கள் எத்தனை முறைகள்
திருத்தி அமைக்கப்படுகிறது..
இன்னும் எத்தனை சட்டங்கள் திருத்தி
அமைக்கப் படலாம்..
ஆக மனிதன் மனிதனுக்காக செய்யப்படும்
எந்த ஒரு சட்டதிட்டங்களும் முழுமை பெறாது
என்பதே நிதர்சனம்..
அப்படி என்றால் மனிதன் வாழ்வதற்காக
நடைமுறை சட்ட திட்டங்களை வழிவகுக்க
மனிதனைப் படைத்த ஒரு சக்தியால் மட்டுமே
இயலும் என்பது உண்மை..
அப்படிப்பட்ட சக்தி தான் இப்பிரபஞ்சத்தை
படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கின்றது..
அப்படிப்பட்ட சக்தியின் மூலமாகவே தான்
படைத்த மனிதகுலத்தை சிறப்பாக வழிநடத்த
முடியும்.
அப்படி மனிதகுலம் சிறப்பதற்காக மனிதனைப்
படைத்த சக்தியினால் இறக்கப்பட்டதே வேதம்..
அந்த வேதம் மனிதர்கள் மூலமாக
இயற்றப்பட்டிருந்தால் அது நிச்சயமாக
முழுமை பெற்றிருக்காது..
இப்படிப்பட்ட வேதம் நிச்சயமாக இறைவன்
புறத்திலிருந்து மட்டுமே இறக்கப்பட்டிருக்க
வேண்டும்..
அப்படிப்பட்ட வேதமானது ஆச்சரியம்
ஊட்டக்கூடிய அதிசயத்தக்க அத்தாட்சிகளை
உள்ளடக்கிய ஒரு மிகச் சிறந்த
அருட்கொடையாகத் தான் இருக்கின்றது..
எக்காலத்திலும் எவராலும் மாற்ற படாமலும்
மாற்றுவதற்கான அவசியம் இல்லாமலும்
இருப்பதால் அது ஒரு பொக்கிஷமாகவே தான்
மனித குலத்திற்கு இருக்க முடியும்..
அப்படிப்பட்ட வேதத்தின் மூலமாகத்தான்
மனிதன் தனது வாழ்வை சிறப்பாக
அமைத்துக்கொள்ள முடியும்..
இறைவனை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு
இயற்கை சக்தியும்
மனித சக்தியும் மட்டுமே இவ்வுலகில்..
ஆனால் இறைவனை ஏற்றுக்
கொண்டவர்களுக்கு அனைத்துமே ஒரே சக்தி
தான் அது இறை சக்தியே..
பகுத்தறிவு என்பது இறையை உணரவே..
அந்த இறைவன் இருப்பதற்கான அத்தாட்சிகள்
ஏராளம் வேதத்தில் உண்டு..
தங்கேஸ் கவிதைகள்
1
தோல் போர்த்திய எலும்புக்கூடு
ஏந்திய கரமொன்றில்
இரண்டு ரூபாய் நாணயத்தை திணித்துவிட்டு
ஏதோ தோன்றமுகம் பார்க்கிறேன்
வருடங்க ளுக்கு முன்பு
தொலைந்து போன
பெரியம்மாவின் சாயல் தென்பட
அப்படி ஏதும் இருந்து விடக் கூடாதென்று
தன்னிச்சையாக
அவ்விடம் விட்டு நகர்கிறேன்
தம்பி என்றழைக்க நினைத்த வார்த்தையை
அவரசமாக விழுங்கி விட்டு
நான் போகும் திசையை வெறித்தபடி
நாணயத்தோடு
அதுவும் நகர்ந்திருக்க கூடும்
வேறு இடம் தேடி
2
வயலுக்குப் போனாலும் வரப்புக்குப் போனாலும்
பார்வதி வாரேன்
என்று சொல்லிவிட்டுப் போகும்
ஆண்டி தாத்தா
பாட்டியிடம் சொல்லாமல் போன
அன்று தான்
ரெட்டைப் புளிய மரப் பிஞ்சையில்
உழவுச்சாலுக்குள்ளேயே பிணமாக
கிடந்தார்
பார்வதிப்பாட்டியும் ஒரு நாள்
தெருப் பார்த்த திண்ணையில் சாய்ந்தவாறே
செத்துப் போயிருந்தாள்
எங்கள் அலுவலகத்தில் ஒரு நாள்
ஏ3 சார்
ஒரு தம்ளர் தண்ணிர்
தொண்டைக்குள் இறங்குவதற்கும் முன்பே
ஒரு வார்த்தை சொல்லாமல்
என் மடியிலேயே உயிரை விட்டிருந்தார்
ஒரு முறை
ஐநூறு மைலுக்கு அப்பாலிருந்த விற்பனைப் பிரதிநிதி
தந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்திருப்பதாக சொன்ன
குறுஞ்செய்திக்கு அலறியடித்து
இரவெல்லாம் பயணித்து
அதிகாலையில்
அவரை வந்து பார்த்த போது
வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும்
வயர்கள் செருகப்பட்டு கிடந்த அவரால்
ஒரு வார்த்தை பேச முடியவில்லை
கடைசி மூச்சு பிரியும் போது
கடைக் கண்ணோரம் சரிந்த
இரண்டு துளி கண்ணீர் மட்டுமே
உருண்டு விழுவதற்காக காத்திருந்தது
சிறிது வெளிச்சம் இருந்தாலும்
தொடர்ந்து வரும் நம் நிழல்
இருளுக்குள் வந்ததும்
சொல்லாமலே விடை பெறுவது போலத்தானா
மனிதர்கள் வாழ்க்கையிடமிருந்து
விடை பெறுவதும்