தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 7 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி பாகம் – ΙΙ : தொடர் 7 – டாக்டர் இடங்கர் பாவலன்



தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
பாடம் -4
குழந்தையின் பசியைக் கவனித்தல்

சத்தம் போடாதே, கவனி! என்று பிள்ளைகளின் சத்தத்திற்கு ஏற்ப ஆசிரியரின் கூக்குரலும் வகுப்பறையில் அதிகமாகவே இருக்கும். அமைதியாக உதட்டைக் குவித்து விரலை அதில் அதக்கியபடியே கப்சுப்பென்று கவனித்திருக்கும் பிள்ளைகளுக்கு முன்பு ஆசிரியர் மட்டும் ஏனோ மடமடவென பாடத்தை ஒப்பித்துக் கொண்டிருப்பார். ஆனால் நமது பள்ளியறையிலோ குழந்தைகள் கியாமுயாவென்று கத்திக் கொண்டிருக்க மாணவப் பெற்றோர்களாகிய நாமெல்லாம் சாந்தமாக அமர்ந்து அவர்களைக் கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டியிருக்கும். ஆம், அவர்கள் தானே இவ்வகுப்பறையில் நமக்கெல்லாம் வாத்தியார்களாக இருக்கப் போகிறார்கள்! பின்னே, குழந்தைகளின் பசியை வேறெப்படிக் கண்டறிவது?

குழந்தையின் வயிற்றுக்குள் தாய்ப்பால் செல்லச் செல்ல, அது நம்மைப் போலவே செரிமானமாக வேண்டி மெதுவாக குடலிற்குள் செல்வதற்கான அவசியமில்லாத காரணத்தால் அவர்கள் குடிக்க, சத்துக்களை குடல் உறிஞ்சிக் கொள்ள, மலம் சிறுநீரென கழிக்கவென்று சில நிமிடங்களிலேயே வெளியேறி வயிறும் சட்டென்று காலியாகிவிடும். அதுவும் நம்மைப் போல பற்களால், இரைப்பையால், குடல் நொதியால் அரைத்து அதை நையப்புடைத்து தாமதமாக மலத்தைக் கழிக்க வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இருப்பதில்லை. ஆக, இத்தகைய காலியான வயிற்றினாலே அடிக்கடி அவர்களுக்குப் பசித்துக் கொண்டேதானிருக்கும்.

அதேசமயம் பிறந்த பிள்ளைகள் பொழுதன்னைக்கும் தூங்கிக் கொண்டே தான் இருப்பார்கள். அவர்கள் எழுவதற்கான, உடலை முறுக்கிக் கொள்வதான, கண்ணைக் கண்ணைச் சிமிட்டிக் கொள்வதான முயற்சிகளெல்லாம் பசிப்பதற்கென அவர்கள் உருவாக்கிக் கொள்கிற சமிக்கைகள் தானே! ஆக, ஆரம்பகால கட்டத்தில் அய்யா..! அம்மா..! பசிக்குதம்மா! என்றெல்லாம் அவர்கள் நம்மிடம் தாய்ப்பால் கேட்டு வரமாட்டார்கள். நாம் தான் பிள்ளையின் பசியறிந்து ஊட்ட வேண்டியிருக்கும்.

அதாவது பிள்ளைகள் வயிற்றுக்குள் இருக்கிறவரை நஞ்சுப்பைதான் ஒரு தானியங்கி இயந்திரம் போல குழந்தையின் ஒவ்வொரு மாத வளர்ச்சிக்கும் ஏற்ப அம்மாவின் இரத்தத்திலிருந்து சத்துகளைக் கவனமாகக் கறந்தெடுத்து, அதைச் சரியான அளவில் கணக்கிட்டு கருவிற்கு ஊட்டி ஊட்டி வளர்த்தெடுக்கிறது. இதற்கெல்லாம் நமது உடலில் இயல்பாகவே இருக்கிற உயிர்க்கடிகாரத்தின் இயக்கமும், ஒவ்வொரு பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கென்றே இருக்கிற நுட்பமான உயிரியல் வடிவமைப்பும் தான் காரணமே. இதனால் தானே மனம்பிறழந்தவளால்கூட பிள்ளையை வயிற்றுக்குள் சீராட்டி வளர்க்க முடிகிறது!

ஏனென்றால் அவளது பித்தம் தெளியாவிட்டாலும்கூட அவளுக்குள் இயங்கிக் கொண்டிருக்கிற உயிர்க்கடிகாரம் அவளது பிள்ளையை முறையாகக் கவனித்துக் கொள்ளும். ஆனால் அதேசமயத்தில் பிள்ளை பிறந்தவுடனே தாய்ப்பால் புகட்டுவது என்பதோ முற்றிலும் அம்மாவின் மனக்கணக்கைப் பொறுத்தே அமைந்துவிடுகிறது அல்லவா! ″பிள்ளை அரைமணி நேரத்திற்கு முன்னாடி தான் பால் குடித்தான், இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து குடிக்கட்டும்″ என்றோ, ″பிள்ளை தூங்குகிறானே! அவனை எப்படி எழுப்பிப் புகட்டுவது? இன்னும் சற்று நேரம் கழித்து புகட்டுவோம்!″ என்றோ நமது புரிதலை வைத்துப் புகட்டுவது தானே இப்போது பிள்ளை பிறந்த பின்னால் உடலிற்கு வெளியே நடக்கிறது. ஆக, நஞ்சுப்பை உள்ளே தன்னியல்பில் செய்த வேலையை நாமோ வெளியே இருந்து கொண்டு விழிப்புணர்வுடன் இதைப் புரிந்து கொண்டு செய்ய வேண்டிய நிர்பந்தம் வந்துவிடுகிறதல்லவா! ஆனால், என்னவோ இதிலே தானே சிக்கலே வருகிறது?

குழந்தைகள் பிறந்த பின்னால் என்னதான் உடலானது மார்பகத்தின் வழியே பிள்ளைக்குப் பாலூட்ட ஆயத்தமாக இருந்தாலும், தாய்ப்பால் புகட்டுதல் தொடர்பான நம்முடைய புரிதலின்மை காரணமாக பிள்ளைக்குத் தாய்ப்பால் கொடுப்பதில் குறைபாடுகள் இருக்கத் தானே செய்கிறது. ஆகவே தான் பிள்ளையின் பசியை சரியாகக் கணக்கிட்டு அவர்களுக்குத் தக்க சமயத்தில் பசியாற்றுகிற வழிமுறையைக் கற்றுத் தேறுவதற்கு நம்முடைய பள்ளியில் கவனமாக இங்கே படிக்க வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு குழந்தைகளுக்கென்றும் பிரத்தியேகமாக ஒரு பாஷை இருக்கிறது. அதுதான் அவர்களின் உடல்மொழி. நாம் என்ன மொழி பேசினாலும் குழந்தைகளின் உடல்மொழியைக் கற்றுத் தேர்ந்தால் மட்டுமே நம் பிள்ளையை வளர்த்தெடுக்க முடியும். ஆக, இங்கு நாம் கற்றுக் கொள்ள போவது என்னவோ உடல்மொழிப் பாடம் தான் தாய்மார்களே! பேசா மடந்தைகளின் சைகை பாஷைகளைக் கற்றுத் தருகிற செவித்திறன் குறையுடையோர் பள்ளியைப் போலவே, நாமும் இங்கே குழந்தைகளின் சப்தங்களை, அசைவுகளை, முகமாற்றங்களை அவை ஒவ்வொன்றுக்குமான அர்த்தங்களை என்று முறையாகக் கற்றுக் கொள்ளப் போகிறோம். ஏனென்றால் அவர்கள் வெளிப்படுத்துகிற ஒவ்வொறு அசைவிற்கும் ஒரு அர்த்தமிருக்கிறதே!

தாய்மார்களே, நாமெல்லாம் இன்னும் பச்சைப் பிள்ளையாய் இருக்கிறோம்! குழந்தைகள் அழுதால் தான் அவர்களுக்குப் பசிக்கிறதென்று மேம்போக்காக இன்னமும்கூட நாம் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனாலும் குழந்தைகள் அழுவதென்கென்று காரணமா வேண்டும்?

அருகாமையில் அம்மாவின் வாசமோ, தோலோடு தோலான நெருக்கமோ இல்லாமல் போகும் போதோ, பருத்தியாலான நைலான் போன்ற துணியின் மினுமினுப்பில் கிடந்து உழன்று கொண்டிருக்கும் குழந்தைக்கு அதனால் உண்டாகும் எரிச்சலிலோ, படுக்கை வாசத்திற்கு ஊர்ந்து வருகிற எறும்பின் கடியாலோ, அடிக்கடி உச்சா போவதினால், மலம் கழிப்பதினால் உண்டாகிற அசௌகரியத்தினாலோ குழந்தைகளும் அழுது ஆர்ப்பாட்டம் செய்தபடி இருக்கிறார்கள் தானே? ஆனாலும் இது என்னவோ காக்கி உடையணிந்தவர்கள் எல்லாம் கூர்காவாகிப் போன கதைதான்.

இந்த சமயத்தில் பிள்ளைகள் அழுவது ஒன்றுமட்டுமே பசிக்கான அர்த்தமல்ல என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். ஒருவகையில் குழந்தைகள் பசிக்கையில் அழத்தான் செய்கிறார்கள் என்றாலும்கூட அது அவர்களது பசிக்கான இறுதிகட்ட முயற்சியாகத் தானே இருக்கிறது? ஆம், அழுகை என்பது பசித்து பசித்து ஒவ்வொன்றாக பிள்ளைகள் வெளிப்படுத்துகிற சமிக்கைகளை நாம் உதாசீனப்படுத்துகிற போதுதான் அவர்களின் கடைசி முயற்சியாக, அதுவும் ஒருவித விரக்தியாக அழுகையை வெளிப்படுத்துகிறார்கள்! இதைப் பற்றி புரிந்து கொள்ள பசிக்கான உணர்வை எப்படியெல்லாம் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்பதான விசயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஏற்கனவே நாம் சொன்னபடி தாய்ப்பால் அருந்த அருந்த இரண்டு மணி நேரத்திற்குள்ளே குழந்தையின் வயிறு மொத்தமாகவே காலியாகி வயிறும் கூப்பாடு போடத்துவங்கிவிடும். ஆம், பிள்ளையின் வயிறோ பேசத் துவங்கிவிடும். ஆனால், அம்மாவின் காதுகளுக்குக் கேட்கிற அளவிற்கு சப்தம் எழுப்பத் தெரியாத வாயில்லா பிள்ளையாகிய இரைப்பையானது வேறுவழியின்றி குழந்தையின் மூளையை பசியின் நரம்புத் தூண்டலால் கிள்ளிவிட்டு அதற்கேற்ப சமிக்கைகளை வெளிப்படுத்த வைக்கும். இப்படிக் காலியாகிற வயிற்றின் ஆரம்பகட்ட உணர்வுகளையெல்லாம் பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு குழந்தைகளுமே தனித்துவமானவர்கள், ஒவ்வொருவருமே வெவ்வேறு விதமான சமிக்கைகளை ஒரே காரணத்திற்காக வெளிப்படுத்துவார்கள் என்பதையெல்லாம் நாம் ஏற்கனவே புரிந்து வைத்திருக்கிறோம் அல்லவா!

அதாவது பசியின் துவக்கத்தில், தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளோ சட்டென்று உடம்பை முறுக்கி எழுவார்கள். எழுவார்கள் என்றால், பிள்ளைகள் விசயத்தில் கண்ணை விழித்துக் கொண்டு காபி அருந்த படுக்கையிலிருந்து எழுவார்கள் என்று அர்த்தமில்லை. சாந்தமாக துயில் கொண்டிருக்கிற அவர்களோ கைகால்களை அசைத்தபடி உடலை நெட்டித்துக் கொள்வதும்கூட அவர்களைப் பொறுத்த வரையில் எழுவதுதான். ஒருசில குழ்நதைகள் அமைதியாக இருக்கும் போதே சட்டென்று சுறுசுறுப்பாகத் தெரிவார்கள். துருதுருவென முண்டத் துவங்குவார்கள். இதுவும் ஒருவகையில் பசியை வெளிப்படுத்துகிற சமிக்கைதான். வேறுசில குழந்தைகளோ இமைகள் மூடியபடியிருக்க அவர்களது கருவிழிகள் கடிகார நாக்கு அலைவுறுவதைப் போல அசைந்தபடி பசியை அறிவிப்பார்கள். சிலரோ கண்ணைக் கண்ணை சிமிட்டி தங்களது பசியை வெளிப்படுத்துவார்கள்.

பெரும்பாலான குழந்தைகள் வாயை அகலத்திறந்து மூடுவதும், பாம்பு போலான துருத்தலான நாக்கை நீட்டி காற்றிலே துலாவுவதும், அங்கு ஏதும் கிட்டாத இல்லாத போது உதட்டையே தழுவிச் சுவைப்பதும் அல்லது எவரேனும் தூக்கிக் கொஞ்சினால் அவர்களின் சட்டையையோ, தோலையோ விரல்களையோ சுவைப்பதும், அப்படியும் யாருமே அருகில் இல்லாத பட்சத்தில் தன் கைகால்களை முகத்தருகே கொண்டு வந்து விரல்களைச் சவைப்பதுமாக பசியுணர்ச்சியை தெரிவிப்பார்கள். சிலநேரங்களில் குழந்தைகளைச் சுற்றி போர்த்தியிருக்கிற துணியையே சவைத்தவாறு சப்தமெழுப்பியபடியும், வெறுமனே உதட்டைக் குவித்து பாலருந்துவது போலான சப்தமெழுப்பி நம்மைக் கவருவதைப் போலவும் செய்யத் துவங்குவார்கள். அப்படியும் இல்லாவிட்டால் ஙாக்…ஙாக்.. என்று கூவியபடி நம் கவனத்தைப் பெறுவதற்கு ஒரு ஆர்க்கஸ்ட்ரா நிகழ்ச்சியையே அவர்கள் அரங்கேற்றிக் கொண்டிருப்பார்கள். இச்சமயத்தில் அவர்களை அள்ளியெடுத்து மார்பருகே கொண்டு போனாலே அவர்களும் உடனே மார்பைக் கைகளில் பற்றி நுகர்ந்தபடி காம்பைக் கவ்விச் சுவைக்கத் துவங்கிவிடுவார்கள்.

பெற்றோர்களாகிய நாம் இதை வைத்தே பிள்ளைகளின் பசியையும், அவர்கள் பசியெடுக்கிற போதெல்லாம் பிள்ளைகள் எப்படியான உணர்வுகளை, சமிக்கைகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதையும் கற்றுக் கொள்ள முடியும். அதேசமயம் இப்படியான உணர்வுகளை மட்டுமே பிள்ளைகள் வெளிப்படுத்த வேண்டுமென்ற எந்தக் கட்டாயமும் இல்லை. நாமெல்லாம் பிள்ளைகளைக் கூர்ந்து கவனிக்கத் துவங்கினாலே விளையாட்டுப் போக்கில் தங்களது பசியை வெளிக்காட்டுவதற்கு அவர்கள் செய்கிற சுட்டித்தனங்களை இன்னும்கூட நாம் நிறையவே கண்டுகொள்ள முடியும். தாயிற்கு மட்டுமே புரிகிற ஒரு மந்திரப் பார்வையோடு அவர்கள் பார்க்கிற போதும், மெலிசாக ஏக்கத்தைப் போலழுகிற பிள்ளையின் வித்தியாசமான குரலை வைத்தும், அவன் பால்தான் கேட்கிறான்..! என்று சில தாய்மார்கள் புரிந்து கொள்வதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

அதேசமயத்தில் அவர்களது பசியைக் கண்டுபிடித்து மார்பில் போட்டாலுமே சில குழந்தைகள் பாலைக் குடிக்காமல் மார்பில் வெறுமனவே வாய் வைத்துக் கொண்டு விளையாடியபடி இருப்பார்கள். வீட்டில் வளர்ந்த பிள்ளைகளே, எதைப் பார்த்தாலும் விளையாடுவதற்கு அதுவேண்டும், இதுவேண்டுமென்று அடம்பிடித்து எந்நேரமும் விளையாடத் துடிதுடிக்கிறார்களே! அப்படியிருக்க, இன்னும் தவழக்கூடத் தெரியாத பிள்ளைக்கு விளையாட உங்கள் மார்பைத் தவிர வேறென்ன இருக்கிறது, தாய்மார்களே?

குழந்தைகளைப் பொறுத்தவரை எதுவெல்லாம் உண்ணக் கிடைக்கிறதோ அதுவெல்லாம் விளையாடுவதற்குரிய விசயம்தான். அதனால் தான் உண்ணுவதற்கு சாதத்தைக் கொடுத்தால் சிதறடித்து விளையாடுவதும், விளையாட்டு பார்பி பொம்மையைக் கொடுத்தால் வாயில் சவைத்து பொன்னிற முடியைக் கடித்து தும்சம் செய்வதுமாக இருக்கிறார்கள். ஆக, மார்பில் போட்டு அவர்கள் விளையாடுகிறார்கள் என்றால் அதற்கும் நாம் அனுமதித்து மடியில் போட்டு தூங்க வைக்க வேண்டியதைத் தவிர வேறுவழியில்லை. ஆனால் போகிற போக்கிலே அவர்களும் பசிக்கேற்ப புசிக்கவும், பொழுதிற்கு விளையாடவும் மார்பைப் பற்றி புரிந்து கொள்வார்கள். அதேபோல நாமுமே மார்பில் விளையாடுகிறார்களா அல்லது பாலருந்துகிறார்களா என்பதை மார்பிலிட்ட அடுத்த கணமே கண்டுபிடிக்கிற அளவிற்குக் கற்றுத் தேர்ந்துவிட முடியும்.

ஆனால் இப்படியெல்லாம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி அதையெல்லாம் பெற்றோர்களாகிய நாம் கண்டுகொள்ளாத போதுதான் குழந்தைகளும் விரக்தியாகி அதற்குரிய கோபத்தை வெளிக்காட்டுகிறார்கள். குழந்தைகளுக்கும் சிரிப்பு, அழுகை வருவது போல கோபமும் மனஅழுத்தமும் உண்டாகும் என்பதையும்கூட நாம் இக்கணத்திலே நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் தாய்மார்களே!

குழந்தையை தாயிடமிருந்து பிரித்து தனியே தொட்டிலில் போடுகிற போதும், உறவினர்கள் அடிக்கடி பிள்ளையைத் தூக்கி வைத்துக் கொஞ்சுகிற போதும் இப்படியான பிள்ளையின் தனித்துவமான உணர்வுகளை ஒரு தாயினால் கண்டுகொள்ள முடியாமல் போகிறது. அப்போதுதான் அம்மா மீதான கோபத்தில் பசிக்கு உணவில்லாத ஏக்கத்தில் உரத்து பிள்ளைகள் அழுகிறார்கள். பசிக்கு அழுதழுது சோர்ந்து போய் எரிச்சலடைந்து ஒருகட்டத்தில் மீண்டும் அவர்கள் உறங்கியும் விடுகிறார்கள். வீட்டில் பசியென்று நுழைந்து உணவில்லை என்றதும் சட்டென்று பெரியவர்களாகிய நமக்கே கோபமும் எரிச்சலும் வருகிற போது பிள்ளைகளுக்கு மட்டும் வராதா என்ன?

இப்படி விரக்தியடைந்துவிட்ட குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கு முன்பாக நாம் அவர்களைச் சமாதானப்படுத்த வேண்டியிருக்கிறது. அழுகையின் துவக்கத்திலிருக்கிற பிள்ளைகள் மட்டும் மார்பில் போட்டதும் முரண்டு பிடிக்காமல் காம்பில் பொருத்தி மன்னிக்கும் மனப்பான்மையோடு நடந்து கொள்வார்கள். ஆனால் விரக்திநிலைக்குச் சென்ற, மார்பில் போட்டாலும் பால்குடிக்காமல் ஆர்ப்பாட்டம் பண்ணுகிற பிள்ளைகளை சில நொடிகள் அவர்களின் விரல்களை உதட்டில் சுவைக்க வைத்து அழுகையை ஆற்றுப்படுத்திவிட்ட பின்னரே பாலூட்ட செய்யலாம். அப்போது அவர்களும் அமைதியாய் நம் மார்பில் பாலூட்ட இசைவு தெரிவித்துவிடுவார்கள்.

இத்தகைய பசியுணரும் பயிற்சிகளை நாம் பள்ளியில் இருக்கிற காலத்திலேயே கற்றுக் கொள்ள முடியும். இதனால் பசித்து அழுவதற்கு முன்பே அவர்களின் ஆரம்பகட்ட பசியுணர்வைப் புரிந்து கொண்டு பிள்ளைக்குப் பாலூட்ட நாம் தயாராகிவிட முடிகிறது. துவக்கத்தில் எப்போதும் தூக்கநிலையிலேயே இருக்கிற பிள்ளைகளின் பசியுணர்வை அறிந்து கொள்ள கொஞ்சம் சிரமங்கள் இருந்தாலும் போகப்போக இதுவெல்லாம் சரியாகிவிடும் தாய்மார்களே! அதேசமயம் பிள்ளைகள் பசியில்லாமல் இருக்கையில் விடாப்பிடியாகப் பாலூட்டுவதையும் தவிர்த்துவிட வேண்டும். இதனால் அவர்கள் இயல்பாகவே பசித்து உண்ணுகிற உணர்வில் ஏதும் குழப்பம் வந்துவிடக் கூடாதல்லவா!

ஆக, இப்போது பிள்ளையின் பசியை எப்படியெல்லாம் அறிந்து கொள்ளலாம் என்று நாம் புரிந்து கொண்டாம். நம்முடைய ஆசானாகிய பிள்ளையிடமிருந்து நாமும் உடல்மொழிப் பாடத்தை இப்போது நன்றாகவே கற்றத் தேர்ந்துவிட்டோம். சரி, அடுத்தென்ன, இனி பாலூட்டத் துவங்கிவிடலாம் தானே!

– டாக்டர் இடங்கர் பாவலன்

நூல் அறிமுகம் : அல்லி உதயனின் ’அரண்’ நாவல் – ஜனநேசன்

நூல் அறிமுகம் : அல்லி உதயனின் ’அரண்’ நாவல் – ஜனநேசன்




நூல் : அரண்
ஆசிரியர் : அல்லி உதயன்
விலை : ரூ. 150.
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332934
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

நவீன மணிமேகலையை நவிலும் “அரண்” நாவல்

தென்மேற்கு பருவக்காற்றில் மிதந்து உலாவும் வாய்ப்பு பெற்ற தேனியைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் அல்லி உதயன் அரண் என்ற நாவல் மூலம் நாவலாசிரியராக அடி எடுத்து வைத்திருக்கிறார்.

வயிற்றுப்பசி தான் உலகின் பற்பல மாற்றங்களின் ஊற்று என்பதை சீத்தலை சாத்தனார், இராமலிங்க வள்ளலார் தொட்டு மாமேதைகள் மார்க்ஸ் ஏங்கல்ஸ் வரை தம் படைப்புகளில் பதிவு செய்து மானிட சமூக முன்னேற்றத்திற்கான வழிகளை உலகிற்குத் தந்துள்ளனர். தாதுவருஷ பஞ்ச காலத்தில் மதுரை மண்ணின் மாண்பினை உணர்த்திய மனுஷி அம்மணி அம்மாள் தன் சொத்துகளை விற்று மக்களின் வயிற்றுத்தீயை அணைத்த வரலாறு அறிவோம்.

இதேபோல் தேனி அருகில் கிராமத்தில் ஒரு பஞ்சாலையில் நடந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளிகளுக்கு வயிற்றுப்பசி தீர்த்து அரணாக இருந்து அவர்களது போராட்டத்தை வெற்றிபெற உதவிய ஒரு பெண்ணின் கதைஇந்த நாவல். வைராக்கிய பெண் முத்துமாடத்தியின் போரட்டபாடுகளை, உதவிய ஊர்மக்களின் கருணைமிகு இயல்பினை, வழிகாட்டிய இயக்கங்களின் காத்திரமான பங்களிப்பை அல்லி உதயன் நாவலாக்க முயன்றுள்ளார். இம்முயற்சிக்கு , தேனி மாவட்ட மக்களின் இயல்பான மொழியை சிக்கல் சிடுக்கு இல்லா எளிமையான நடையில் சொல்லும் அல்லி உதயனின் எழுத்தாற்றல் கைகொடுக்கிறது.இது நாவலைச் சரளமாக வாசிக்கவைக்கிறது.

மனங்களைப் பிளவு படுத்தும் மத அறிவும், அரசு அதிகாரமும், மக்களைப் பாதுகாக்காது. மக்களின் உறுபசி தீர்த்து, கருணையோடு நடத்துவது தான் உயர்பண்பு. உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர் என்று உலகிற்கு பிரகடனப்பபடுத்திய மணிமேகலை பாத்திரத்தை முன்மாதிரி படுத்தி முத்துமாடத்தி எனும் பாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார் அல்லி உதயன். முத்துமாடத்தியைக்கொண்டு தொழிலாளர் பசி தீர்த்து தொழிலாளர் போராட்டத்தை நீர்த்துவிடாமல் வெற்றிபெறச் செய்கிறார்.

சரளமான வாசிப்பு நடையுள்ள “அரண்” என்னும் இந்நாவல் புதியதாக எழுதவருபவர்களுக்கும், எழுதிக் கொண்டிருப்பவருக்கும் பகிர் நிறையக் கூறுகளை கொண்டிருக்கிறது. வாங்கி வாசித்துணரலாம்.

மாச்சில் சிறுகதை – அமீபா

மாச்சில் சிறுகதை – அமீபா




பளபளக்கும் வெள்ளை நிற காகிதத்தை கிழித்து அதனுள்ளிருந்து வட்ட வடிவமான அந்த கோதுமை பிஸ்கட்டை எடுத்து கடித்தார். மொறு மொறுப்பாக அது உடைந்தது.

பட்

திடீரென அவருக்கு நேற்று தெருவில் வைத்து நான்கு பேர் ஒருவனை அடித்தது நினைவில் வந்தது. தேங்காய் பிஸ்கட் சாப்பிடுகிறவனாம்.
ச் சே.. என்ன பிஸ்கட் அது. கரடுமுரடான வடிவத்தில், கடிக்கவே முடியாதபடி கடினமாக எப்படித்தான் அதை சாப்பிடுகிறார்களோ… அதுவும் சுலபத்தில் கெட்டுவிடும். தேங்காய் அது தெய்வத்திற்கு படைக்கும் பொருள். தேங்காயிலிருந்து பால் எடுக்க முடியும்… அதைப்போய் எப்படித்தான் சாப்பிடுகிறார்களோ… என பலவிதமாக யோசித்தார்.

தனது பொருளாதார வசதிக்கும், பசிக்கும் இதுவே உகந்தது என அவன் ஆத்திரத்துடன் சொன்னதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேயில்லை. இவர் காதிலும் அது சரியாக விழவில்லை.

அதுவும் இந்த பக்கத்து வீட்டுக்காரன் இருக்கிறானே உப்பு பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டு. உலகத்திலேயே நாங்கள்தான் அதிக ரோசமானவர்கள். அதனால் தான் நாங்கள் உப்பு பிஸ்கட் சாப்பிடுகிறோம் என சொல்லிக்கொண்டு திரிந்தான். ரோசம் கெட்டு இருந்தவனை உணர்வு பெற உப்பு பிஸ்கட் சாப்பிட சொன்னதே நாங்கள்தான் என அவர்கள் சொல்ல தொடங்கியதை அடுத்து இப்பொழுது உப்பும் இனிப்பும் கலந்து சாப்பிடுகிறார்கள் சதுரமான வடிவத்தில். என்ன வடிவம் இது… கொஞ்சமும் அழகியலே இல்லாமல் இருக்கிறார்கள். நிலவு போல, சூரியன் போல, பூமி போல அழகிய வட்ட வடிவத்திற்கு நிகர் உண்டா..

தன் கையிலிருந்து ஒரு பிஸ்கட்டை எடுத்து கண்களின் முன்னால் வைத்து பார்த்தார். அதன் வடிவம் அவர் மனதை கொள்ளை கொண்டது.

ஆனாலும் இதே வடிவத்தில், இதே போன்று உள்ள மைதா பிஸ்கட் சாப்பிடுபவர்களும், கோதுமை பிஸ்கட் சாப்பிடும் தம்மை போலத்தான் என்று சொல்லிக் கொண்டு திரிவதை இவரால் ஏற்றுக்கொள்ளவே முடியாமல் எரிச்சல் பட்டார்.

தொலைவிலுள்ள ஊர்களிலெல்லாம் தேங்காய் பிஸ்கட்டை எடுத்து பிடிக்க முடியாதபடி அவர்களுடைய கட்டைவிரல் வெட்டப்படுவதாக செய்திகளை கேட்டுக்கொண்டிருந்தார். எப்படியோ போய்த் தொலையட்டும் என்று இருந்தார். அப்படியே இந்த சதுர பிஸ்கட்டை சாப்பிடுபவர்களையும் ஏதாவது செய்யட்டும் என நினைத்துக் கொண்டார்.

தன் வீட்டில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டுகள் எல்லாம் தீர்ந்த பிறகு புதிதாக வாங்குவதற்காக கடைத்தெருவிற்கு ஒரு நாள் சென்றார். அங்கே எங்கேயும் பிஸ்கட்டுகள் விற்பனையில் இல்லை. அதற்கு பதிலாக “கோதுமமிர்தம்” என்று ஒன்றை விற்றார்கள். அதைத்தான் இனி சாப்பிட வேண்டும் என்றார்கள். மஞ்சள் நிறத்தில் கொழக் கொழப்பாக பாட்டிலில் உள்ள அதைப் பார்த்த போதே இவருக்கு ஏதோ தோன்றி குமட்டிக்கொண்டு வந்தது.

கால காலமாக நான் சாப்பிட்டு வந்த பிஸ்கட்டை சாப்பிடக்கூடாது என சொல்வதற்கு இவர்கள் யார் என கேட்க நினைத்த போதே இவரது கட்டைவிரல் நடுங்கியது. ஆனால் இதே கேள்வியை கடைத்தெருவில் பலரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு கட்டைவிரலே இல்லை. அது அவர்களிடம் இருந்தபோது நடுங்கியதே இல்லை.

– அமீபா

வசந்ததீபனின் கவிதைகள்

வசந்ததீபனின் கவிதைகள்




பூக்களற்ற நிலம்
********************
பசித்த வயிறுக்கு பத்து வாய்கள்
யாசிக்கும் உடலுக்குப் பதினாறு கைகள்
புசிக்க வழியற்று அல்லாடும் உலகம்
மெளனத்தை வரையறுத்தேன்
ஒலிக்குள் ஒலி உறைந்து போனது
ணங்கென்ற சம்மட்டிச் சத்தம்
திகைத்து நின்றது
நெருப்பாய் நீராய் உரு மாறுகிறேன்
ஒளியாய் ஒலியாய் உயிர் தரிக்கிறேன்
காற்றாய்க் களிப்பாட்டாய்ப்
புவனத்தில் வலம் வருகிறேன்
பசிக்குது என்றான்
பத்து ரூபாய் கொடுத்தேன்
இருபது வேண்டும் என்கிறான்
விழிக்கத் தொடங்கினான்
துக்கம் உறங்கிப்போனது
இதயத்தில் வண்ண வண்ணப்பூக்கள்.
கூப்பிட்டேன்
பதில் இல்லை
மவுனத்துள் ஒலி ஒடுங்கிப் போனது.
பார்வை பட்டதும் கல்லானேன்
தேகம் பட்டதும் பூவானேன்
அவளின் முத்தங்கள் என்னை குழந்தையாக்கியது.
நடைப் பிணம் கீழ்மையானது
பிணம் மேன்மையானது
வாழ்க்கை மதிப்புமிக்கது.

துக்கம் உதிர்க்கும் தானியங்கள்
**************************************
அணில்கள் மரக்கிளைகளில் ஓடிப்பிடித்து விளையாடுகின்றன
சிட்டுக்குருவிகள்
பறந்து பறந்து சிரிக்கின்றன
நடக்க இயலாத அவன் சிறிது சந்தோஷப்பட்டுக் கொள்கிறான்
வனத்துள் காட்டுக்குதிரை மேய்கிறது
குளம் நீர்த்தூரிகையால்
அதனை வரைகிறது
பனிசூடிய மலையும் ஊசியிலைமரங்களும் வியக்கின்றன
நதியில் மிதந்து வருகின்றன பூக்கள்
நீர்ப் பரப்பில் இசை குமிழியிடுகிறது
மஞ்சள் ஒளியில் காதல் பொழிகிறது
அடிமை வாய்க்குப் பூட்டு

எடுபிடி மூளையை
கட்டியிருக்கிறது சங்கிலி
மொழி திண்டாடுகிறது
வரப்புகளில் கரிசாலையும் நெருஞ்சியும் பூத்திருந்தன
கொறவையும் கெழுறும் நெல் பயிருக்குள் நீந்தித் திரிந்தன
கொக்குகளும் மடையான்களும் கூத்தடித்தன
ஒரு காலம்
இரவு குடிகாரன்
பகல் குடிகாரனை திட்டுகிறான்
பகல் குடிகாரன்
இரவுகுடிகாரனை ஏசுகிறான்
எல்லா குடிகாரன்களையும்
உலகம் வைகிறது.

– வசந்ததீபன்

கோடுகள் கவிதை – ச.சக்தி

கோடுகள் கவிதை – ச.சக்தி




இறந்த
உடல்களை
வேக வைத்துக்கொண்டிருக்கும்
தாத்தாவின்
வயிற்றில்
நெருப்பாக எரிகிறது
நெளியும் புழுவாகிய பசி,

கிழிந்த
செருப்புகளைத்
தைத்துக் கொண்டிருக்கும்
அப்பாவின் கைகளில்
நெளிய ஆரம்பிக்கிறது பலரது பாதங்களுக்கான
பாதைகள்,

தேநீர்க் கடையில்
யாரோ குடித்து
வைத்த தேநீர்க் குவளையைக்
கழுவ முற்படும்
சிறுவனின்
கண்களில்
வழிய ஆரம்பிக்கிறது
குடும்பத்தின் வறுமை,

வேகமாக சென்று
கொண்டிருந்த
இருசக்கர வாகனத்தில்
அடிப்பட்டு
இறந்து போன
அணில் குஞ்சின்

தலையில்
வரையப் பட்டிருக்கிறது
நில்,கவனி,செல் என்ற
மூன்று மந்திர கோடுகள்,

கவிஞர் ச.சக்தி ,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,
9791742986,

தினம் ஒரு பூ கவிதை – பாங்கைத் தமிழன்

தினம் ஒரு பூ கவிதை – பாங்கைத் தமிழன்




வேண்டுகோள்தான் இது;
இறுக்காதே இன்னும்!
வலிமையற்றவர்
வாழ வேண்டும் இங்கு!

வியாபாரிகளுக்குத்தான்
வீரியமென்றால்
வியர்வை சிந்துபவனுக்கு
வீரியமும் வீரமும் விவேகமும் அதிகம்தான்!

இந்த தேசத்தில்
தேச பக்தனை
அடையாளம் தெரிந்துகொள்ளாமல் வாழ்வது
எவ்வளவு பெரிய அவலம்; அவமானம்!

இந்த மண்ணை
நேசிப்பதல்ல….
நம்புவதுதான்
பெரிய தேசபக்தி!

இந்த மண்ணே
வழி…
வாழ்வு….

பக்தி என்பதை
வேஷத்தை வைத்து
எடைபோடும் நிலை
எப்போது வந்தது
இந்த மண்ணில்?

வேஷம் போடத் தெரியாமல்
வியர்வையை மட்டுமே
இந்த மண்ணில் சிந்தும்
மண்ணுக்குச் சொந்தக்காரனின்
வேண்டுகோள்!

இடையில் வந்த
எதனை வேண்டுமானாலும்
விற்றுக்கொள்;
ஆணவம் வந்தால்
அதிக பசி வரும்தான்;
அதை இதை
எதை வேண்டுமானாலும்
பிராய்ந்து போட்டுக்கொள்;
பெரும்பசிக்காரனே!

ஆள வந்தால் மட்டுமே
அடிமட்டத்துக்காரனின்
பசியும் வலியும் தெரியும்!

ஆசைப் படுபவனும்
அள்ளிக் கொள்ள நினைப்பவனும்
வறுமைப் புத்தகத்தை
வாசிக்க முடியாதுதான்!

மீண்டும் மீண்டும்
வலியுறுத்துகிறேன்;
என்னுடைய வேண்டுகோள்
ஒன்றேவொன்றுதான்!
இடையில் வந்த
எதனை வேண்டுமானாலும்
விற்று, பசி போக்கிக்கொள்!

உனக்கு
இந்த மண்ணின்
பூர்வ குடியானவனின்

ஒரேயொரு….
இரகசியம் சொல்கிறேன்!

உலகில்
இருநூற்று முப்பதுக்கும்
மேலான
நாடுகளாம்!

எந்த நாட்டிற்கும்
இல்லாத பெருமை
என் தாயகத்திற்கு
மட்டுமே உண்டு;வியாபாரியே!
அது தெரியுமா உனக்கு?

பூ….
பூ தெரியுமா உனக்கு?
மென்மையும் செழுமையும்
வளமையும் உள்ள இடத்தில்
மட்டுமே பூக்குமே….
பூ….
அதனின் இரசியம்
சொல்கிறேன்!

உலகில் உள்ள நாடுகளில்
முன்னூற்று அறுபத்தைந்து
நாட்களிலும்
ஏதாவது ஒரு பூ
தினமும் கிடைத்துக்கொண்டே
இருக்கும் ஒரே தேசம்
என் இந்திய தேசம் மட்டுமே!

அந்த
என் தேசத்தை மட்டும்
விற்றுவிடாதே!

பாங்கைத் தமிழன்.

கார்கவியின் ஹைக்கூ கவிதைகள்

கார்கவியின் ஹைக்கூ கவிதைகள்




பசி
பறிமாறி பசியாறுகிறது
மனிதம்

அம்மாவின் கையில் உணவு
அலைகளில் நுரையில் தீரும்
குளக்கரை மீனின் தாகம்

சுட்டப்பழம்
ஒட்டிய மண்ணில் பிளிருகிறது
மண் யானை

ஏற்க இயலாத மொழி
சரி தவறு குறிக்கும்
பள்ளிக்குழந்தை

அப்பாவின் கை பீடி
பகையோடு பரவலாகிறது
புகை

எட்டாவது அதிசயம்
பிரம்மிப்பின் உச்சத்தில்
சொந்த வீடு

கார்கவியின் கவிதைகள்

கார்கவியின் கவிதைகள்




அளவறிந்து_வாழ்..!
***************************
இரவு பகல் பாராமல் சுக துக்கங்களை மறந்து
பணத்திற்காக ஓடுகிறான் குடும்ப தலைவன்…….

எவ்வளவு பெற்றால் இல்லை என்ற வாரத்தையை மட்டும்
நுனி நாக்கில் வைத்திருக்கிறாள்
குடும்பத் தலைவி…….

அப்பன் சேர்த்த சொத்துக்களை இளமையிலிருந்தே
விரயத்தில் முனைப்பாகிறான் மூத்த மகன்……..

தனக்கு மூத்தவன் பார்த்துக் கொள்வான் என
அண்ணனை மிஞ்சி வலம் வருகிறான் இளைய மகன்…….

இவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும்
வாசலில் யாரோ அழைத்தது போல் எட்டிப் பார்க்கிறது
வாசலில் இப்பொழுது எழுதப்பட்டு நகரும்
“ஆசையில் வாழாதே அளவறிந்து வாழ்”
என வண்ணம் குழைப்பவனின்
தூரிகையில் சொட்டும் கடைசி சொட்டு………

வெண்புகை
******************
இருசக்கர வாகனங்களும் அவ்வப்போது வந்து செல்லும்
நான்கு சக்கர வாகனங்களும்……..
நின்று செல்லும் முச்சந்தியில்
நான்கு கால் ஊன்றப்பட்டு….
ஆலாக்கு நீரில் இரண்டு அடுக்குகளாய் வெந்து
திணறுகிறது இட்டலிகள்

மூன்று ஈடு முடிந்ததும் நீரை அளந்து ஊற்றும் வேளையில்
சாலையை அளந்து வருகிறான் கணவன்…..
வட்ட நாற்காலிகளில் தட்டேந்தி நிற்பவர்க்கு
சுடச்சுட பசியாற்றும் இவளுக்கு முட்டி மோதி தட்டி தூக்கி
சத்தமில்லாமல் மறுகி தவிக்கும் காற்றோடும் காலத்தோடும்
கலந்த தலையெழுத்தாய் கரைந்து வெளியேறுகிறது
கவலை நீரில் கொதித்தெழுந்த வெண்புகை……..

உண்மையான மழை
***************************
நான்கு கால் சௌக்கை மரங்களின் தாங்களில்
தகரங்களை தாங்கியபடி நிற்கிறது பந்தல்
குளு குளு ஏசிபாக்சின் மேல குதுகலமாய்
நிரந்தர துயில் கொள்கிறார் துக்கசாமி

முகம் மறைக்க மாலை நிரம்பியது
யாரோ ஒரு சொந்தகாரன் எடுத்து ஓரம் அடுக்கி வைக்கிறான்…
மனைவி ஒருபக்கம் கண்ணீரில்
மகன்கள் ஒருபக்கம் அடுத்தகட்ட பணிகளில்…
மருமகள் தலையிலும் காலிலும் பிடித்த வண்ணம் அழுகை…
மகள்கள் பெட்டியை பிடித்த வண்ணம் கண்ணீரில் புலம்பிடும் பழைய கதைகள்

தெரிந்தும் தெரியாமல் பெரியோர் அழுகைக்கு ஈடுகொடுத்து
தேம்பலில் அமர்ந்தழும் பேரபிள்ளைகளை என பந்தல் நிரம்பிய நிலையில்
யாரும் அறியாத ஆன்மாவாய் பந்தல் நடுவே நாற்காலி போட்டு
அனைத்தையும் பார்த்து வான் நிமிர்கிறார் துக்கசாமி

நிரந்த பிரவை ஆறுதல் செய்திட
அளவில்லாமல் கொட்டித் தீர்க்கிறது…
இந்த துக்கங்கள் தொண்டையை நனைத்தபடி உண்மையான மழை……..

Sooravalikkul Urangugirom Poem By Vasanthadheepan. சூறாவளிக்குள் தூங்குகிறோம் கவிதை - வசந்ததீபன்

சூறாவளிக்குள் தூங்குகிறோம் கவிதை – வசந்ததீபன்

சாக்கடையில் விழுந்து புரண்டன
தேடித்தேடி வயிறை நிரப்பின
பள்ளம் தோண்டி
ஒய்யாரமாய்ப் படுத்துக்
கனவு காண்கின்றன
அழைத்தான் வரவில்லை
வந்தது அழைக்கவில்லை
அழையா விருந்தாளியாய்ப் போகிறான்
மலரினும் மெல்லியது காதல்
மழைத்துளியின் கனம் தான் காமம்
மண் வாசனையாய்
கமழ்கிறது ஊடல்
அவளது நாக்கு வாளாய் மின்னுகிறது
வார்த்தைகள் வெட்டிச் சாய்க்கின்றன
குற்றுயிரும் குலையுயிருமாய் அவன்
பலாப்பழத்தை அறுத்துச் சொளையெடுக்கலாம்
பப்பாளியை வெட்டிக் கீத்தெடுக்கலாம்
சண்டாளர்கள் பணத்துக்காக
வயிற்றுத்துக் குழந்தையெடுக்கிறார்கள்
மெளனமாக இருக்க முயல்கிறேன்
காற்று
ஆடையைப் பறிக்க
பிரயாசைப் படுகிறது
அடைமழை
உயிரைப் பிடுங்க
உக்கிர தாண்டவமாடுகிறது
தண்டவாளங்கள் சாட்சி சொல்லியது
புகைவண்டி அறியாமல் செய்து விட்டது
நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது
சுதந்திரமாய்ப் பிறந்தோம்
அடிமைகளாய் வாழ்கிறோம்
சுதந்திர அடிமைகளாய்ப்
போய்ச் சேருவோம்.