இந்தியாவின் வேளாண் சூழலியல் மாறுபாடுகள் கட்டுரை – பேரா.பு.அன்பழகன்

இந்தியாவின் வேளாண் சூழலியல் மாறுபாடுகள் கட்டுரை – பேரா.பு.அன்பழகன்




வேளாண்மை மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யவும் தொழிற் துறைக்கு மூலப்பொருட்களை அளிக்கும் துறையாக உள்ளது. அன்மைக் காலங்களில் உரம், பூச்சிக்கொள்ளி மருந்துகள், செறிவூட்டபட்ட விதைகள், அதிக அளவிலான தண்ணீர் பயன்ப்பாடு போன்றவைகளால் பெருமளவில் சுற்றுச்சூழல் பாதிபடைந்து மக்களின் பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை அரசு தொடர்ந்து எடுத்துவருகிறது. அன்மையில் உலகளவில் சுற்றுச்சூழல் செயலாக்கக் குறியீட்டெண் 2022 (Environmental Performance Index 2022) வெளியிடப்பட்டது. இதன் கொள்கை நேக்கங்களாக, சுகாதாரச் சூழலியல், காலநிலை, சுற்றுச்சூழல் வலிமைகளை அடிப்படையாகக் கொண்டு 11 வகையான அறைகூவல்களை (வேளாண்மை, நீர் ஆதாரம் உட்பட) உள்ளடக்கி 40 தனிப்பட்ட சுற்றுச்சூழல் அளவீடுகளைப் பயன்படுத்தப்படுத்தி இந்த குறியீட்டெண் கணக்கிடப்படுகிறது. இதன் மதிப்பு 0 லிருந்து 100க்குள் இருக்கும். 0 என்பது மிக மேசமான செயல்பாடாகவும். 100 என்பது மிகச் சிறப்பான செயல்பாடாகவும் அடையாளப்படுத்தப்படுகிறது. மொத்தம் 180 நாடுகளின் மதிப்பு புள்ளிகளின் அடிப்படையில் வரிசைபடுத்தப்பட்டுள்ளன. 77.9 மதிப்பெண் புள்ளிகளுடன் டென்மார்க் முதலிடத்தில் உள்ளது 18.9 மதிப்பெண் புள்ளிகளுடன் இநதியா 180வது கடைசி இடத்தில் உள்ளது. இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் மதிப்பெண் புள்ளியில் -0.60ஆக குறைந்துள்ளது. வேளாண்மையைப் பொருத்தமட்டில் இந்தியா 40 மதிப்பெண் புள்ளிகளுடன் 76வது இடத்தில் உள்ளது. நீர் ஆதாரத்தைப் பொருத்தமட்டில் 2.2 மதிப்பெண் புள்ளிகள் பெற்று 112வது இடத்தில் உள்ளது. வேளாண்மையில் உரம், பூச்சிக்கொல்லி பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்குகின்றனர் ஆனால் மண், தண்ணீரின் தன்மை பாதிப்படைகிறது என்தை கவனத்தில் கொள்ளவில்லை. இதனால் மனிதர்களுக்கு நோய் ஏற்படுதல், வறண்ட பூமியாதல், நிலத்தடி நீர குறைதல், சமதள நீர்நிலைகள் வற்றுதல் போன்ற இடர்பாடுகள் எழுகின்றன (EPI 2022). வேளாண் சூழலியல் கடந்த 10 ஆண்டுகளில் கவனிக்கத்தக்கதாக உருவெடுத்துவருகிறது. வேளாண் சூழலியல் என்பது வேளாண் சாகுபடி முறைகளில் காலநிலைகளுக்கு ஏற்ப இயற்கை வளங்களைப் பயன்படுத்தி பல்லுயிர் பெருக்கத்தை நிலையான முறையில் பயன்படுத்தி பாதுகாக்கவும் சமுதாய, விவசாயிகளின் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதாகும்.

தண்ணீர் வேளாண்மையின் ஒரு முக்கிய ஆதாரமாகும். தண்ணீர் சமூகபொருளாதார மேம்பாட்டின் ஒரு அடிப்படை அலகு ஆகும். சுகாதாரம், உணவு அளித்தல், ஆற்றலை உருவாக்குதல், சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குதல் போன்ற நிலைகளில் முக்கியப் பங்கினை வகிக்கிறது. வளர்ந்துவரும் மக்கள்தொகை வளர்ச்சி, நகரமயமாதல், பருவநிலை மாற்றம் போன்றவைகள் தண்ணீரின் தேவையினை பல மடங்காக அதிரிக்கச் செய்துள்ளது. உலகில் உள்ள தண்ணீர் இருப்பிற்கும் தேவைக்கும் பெருமளவிற்கு இடைவெளி உள்ளது. உலகில் 2.2 பில்லியன் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை, 4.2 பில்லியன் மக்கள் பாதுகாப்பான கழிவுநீர் வடிகால் வசதியினைப் பெற்றிருக்கவில்லை, 3 பில்லியன் மக்களுக்கு கை கழுவுவதற்கு தண்ணீர் இல்லை என்கிறது புள்ளிவிவரம். அதே சமயம் உலக அளவில் சுத்தமான குடிநீர் பருகுபவர்கள் 2002ல் 62 விழுக்காடாக இருந்தவர்கள் 2020இல் 74 விழுக்காடாக அதிகரித்துள்ளனர். ஐக்கிய நாடுகளின் சபை முன்மொழிந்த “நீடித்த வளர்ச்சிக் குறிக்கோல்கள்” பூஜ்ய பசி, சுத்தமானக் குடிநீர் வழங்கள் மற்றும் கழிவுநீர் வசதியினை ஏற்படுத்தித் தருதல் போன்றவற்றை முன்னிருத்தியுள்ளது. இவ்விலக்கினை 2030க்குள் அடைய வரையறை செய்யப்பட்டுள்ளது. இதனை அடைய தண்ணீரைத் திறனாகப் பயன்படுத்துவது அவசியமாகிறது.

தண்ணீர் வேளாண்மைப் பொருள் உற்பத்தியின் ஒரு முக்கிய இடுபொருட்களில் ஒன்றாகும். உலகின் மொத்த வேளாண்மைச் சாகுபடியில் 20விழுக்காடு நீர்பாசனம் மூலம் நடைபெறுகிறது இது மொத்த உணவு உற்பத்திக்கு 40 விழுக்காட்டுப் பங்கினை அளிக்கிறது. 2050ல் உலகில் உள்ள மக்கள்தொகை 10 பில்லியனாக இருக்கும் என்றும் இதனால் வேளாண் உற்பத்தி 70 விழுக்காடுவரை அதிகரிக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் உலகளவில் வேளாண்மைக்கு 70 விழுக்காடு நன்னீர் (Fresh water) பயன்படுத்தப்படுகிறது (www.worldbank.org 2020). உலகிலேயே அதித மக்கள்தொகை பெருக்கம், தண்ணீர் பற்றாக்குறை ஆகிய இரண்டு அறைகூவல்களையும் இந்தியா எதிர்கொள்கிறது.

இந்தியாவில் வேளாண்மை முதன்மைத் தொழிலாகும். 45.6 விழுக்காடு (PLFS 2019-20) அதவது 233.2 மில்லியன் மக்கள் வேளாண்மையில் நேரடியாக ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் துறை நாட்டின் ஒட்டு மொத்தப் பொருளாதாரத்திற்கு 14 விழுக்காட்டு பங்கினை அளிக்கிறது. இந்தியா உலக அளவில் இரண்டாவது அதிகம் பயிர்செய்யும் நிலப்பரப்பினை (159.7 மில்லியன் ஹெக்டேர்) உடைய நாடாகும் (முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது). இது போல அதிக அளவிலான மொத்த நீர்பாசன பரப்பளவினைப் (88 மில்லியன் ஹெக்டேர்) பெற்றுள்ள நாடாகும். இந்தியா உலக அளவில் நெல், கோதுமை, எண்ணெய்வித்துக்கள், சணல், டீ, கரும்பு, பால், நறுமணப் பொருட்கள் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை அதிகமாக உற்பத்தி செய்கிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அதிக அளவிலான வளமான-நீர்பாசன விளைநிலங்கள் பாக்கிஸ்தானின் எல்லை பகுதிக்குச் சென்றது. அதிக அளவிலான மக்கள் புலம் பெயர்ந்து இந்தியாவிற்குள் வந்ததனர். இதனால் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு அமெரிக்காவின் உதவியின் அடிப்படையில் பிஎல் 480 வழியாக இந்தியா இறக்குமதி செய்து உணவுத் தேவையினை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பஞ்சம், போர், உலகளாவிய அரசியல் நெருக்கடி போன்றவையினால் இந்தியா வேளாண்மையில் சுயசார்பின்மையினை எட்ட திட்டடம் வகுத்து பசுமைப் புரட்சிக்கு 1960களில் வித்திட்டது. இந்த அடிப்படையில் வேளாண் சீர்திருத்தம் (நிலச் சீர்திருத்தம், வேளாண்மை நவீனமயமாக்கல், வேளாண் கடன் வசதி) முன்னெடுக்கப்பட்டது. தற்போது இந்தியா வேளாண்மையில் சுயசார்பு நிலையினை அடைந்து. உலகில் வேளாண் பொருட்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. உலக நாடுகளுக்கு வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதி செய்யும் முன்னி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 2020-21இல் இந்தியாவிலிருந்து வேளாண் பொருட்கள் மொத்த பொருட்களின் ஏற்றுமதியில் 14.30 விழுக்காடாகும் இதுவே இறக்குமதியில் 5.30 விழுக்காடாகும் (GoI 2022).

இந்தியாவில் 86 விழுக்காடு விவசாயிகள் சிறு, குறு விவசாயிகளாக உள்ளனர். 55 விழுக்காட்டினர் நிலமற்ற விவசாயிகள், 70 விழுக்காட்டு விவசாயிகள் அமைப்புசாரா நிதி அமைப்புகள் வழியாகப் கடன் பெறுகின்றனர், நவீன விவசாய முறைகளைப் பெருமளவிற்கான விவசாயிகள் அணுக முடிவதில்லை, குறைந்தபட்ச ஆதரவு விலை 94 விழுக்காடு விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை, பருவநிலை மாற்றத்தினால் வறட்ச்சி. வெள்ளம் போன்றவற்றை பெருமளவிற்கான விவசாயிகள் எதிர்கொள்கின்றர். இடுபொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்தினால் அதற்கு இணையாக வேளாண் பொருட்களின் விலை உயராததால் பெரும் இழப்பினைச் சந்திக்கின்றனர். இக்காரணங்களினால் சுமார் 3.5 லட்சம் விவசாயிகள் கடந்த 23 ஆண்டுகளில் (1997 முதல் 2020) தற்கொலை செய்துகொண்டனர். இது இந்தியாவின் மொத்த தற்கொலையில் விவசாயிகளின் தற்கொலை 14 விழுக்காடாகும் (Mihir Shah et al 2022, Pradyht Gaha et al 2022). வேளாண்மை லாபகரமான தொழிலாகக் கருத இயலாத சூழலால் வேளாண்மையில் இருந்து அதிக அளவில் வெளியேறி வருகின்றனர். வேளாண்மைத் துறையின் வளர்ச்சியானது கடந்த 70 ஆணடுகளில் சாரசரியாக 2லிருந்து 3 விழுக்காடு வளர்ச்சி பதிவாகியுள்ளது. இவற்றை அதிகரிக்க தற்போது இந்திய அரசு பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. இந்திய வேளாண்மையின் முக்கிய அடிப்படை அறைகூவல்களில் தண்ணீர் பற்றாக்குறையும் ஒன்று. பெருமளவிற்கு இந்திய வேளாண்மை மழையினை சார்ந்ததுள்ளது. இந்திய வேளாண்மையில் நிகர பயிர் சாகுபடி செய்யும் பரப்பில் (2018-19ல்) 71.6 விழுக்காடு நீர்பாசன வசதியினைப் பெற்றுள்ளது (1950-51ல் 20.8 விழுக்காடு). நீர்பாசன வசதி பெற்றுள்ள மொத்த நிலப்பரப்பில் 54.32 விழுக்காடு உணதானிய உற்பத்தி பயிர்கள் பயனடைகின்றன (மொத்த நெல் சகுபடி பரப்பில் 62 விழுக்காடும் கோதுமை சாகுபடி பரப்பில் 95.3 விழுக்காடும் நீர்பாசனம் மூலம் நடைபெறுகிறது). இந்தியாவில் தண்ணீர் இருப்பிற்கும் தேவைக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

வேளாண்மைக்கு அடிப்படையாக தேவையான தண்ணீர் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு பயன்படுத்தப்படுகிறது (நிலத்தடிநீர், சமதளப் பகுதி தண்ணீர்). இந்தியாவில் உள்ள மொத்த சாகுபடி செய்கின்ற நிலத்தில் மழைநீர் பயன்பாடு 4000 கன சதுர கிலோ மீட்டராகும். 122 கன சதுர கிலோ மீட்டர் நீர்வள ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் மொத்த நன்னீரில் 90 விழுக்காடு வேளாண்மைக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்படுவதாகும். வேளாண்மையில் நன்னீரின் தலா நுகர்வு ஒர் ஆண்டிற்கு 4913 முதல் 5800 கிலோ லிட்டர் ஆகும். 60 விழுக்காடு வேளாண் சாகுபடி மழையினைச் சாரந்துள்ளது. இந்தியாவில் விளைவிக்கப்படும் வேளாண் பொருட்கள் (நெல், கோதுமை, கரும்பு, பருத்தி, சணல்) போன்றவைகளுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. நெல்லிற்கு 5லிருந்து 8 செ.மீ தண்ணீரும் பிற தாவர வகைகளுக்கு 60லிருந்து 70 செ.மீ தண்ணீரும் தேக்கவேண்டியுள்ளது இதில் அதிக அளவிற்கு ஆவியாகிறது. நெல், கோதுமை, கரும்பு போன்றவை மொத்த பயிரிடும் பரப்பில் 41 விழுக்காட்டைப் பெற்றுள்ளது ஆனால் இது 80 விழுக்காடு நீர்பாசனத்தைக் கொண்டுள்ளது. இப் பயிரிடும் பரப்பில் அதித மழை, மழைப் பற்றாக்குறை, நிலத்தடி நீர் மட்டம் குறைதல் போன்ற காரணங்களினால் குறைய நேரிட்டால் உணவு பற்றாக்குறையும். உணவு பணவீக்கமும் ஏற்பட்டு பொருளாதாரத்தில் பாதிப்பினை உண்டாக்கும். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் உணவு பணவீக்கம் மிகவும் அதிக அளவில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மின் மோட்டர்கள் வழியாக அதிக அளவிற்கு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. இந்தியாவின் நீர்பாசன முறைகளில் கிணற்று, ஆழ்துளைக் குழாய்ப் பாசனத்தின் பங்கு 2011-16ல் சுமார் 60 விழுக்காடாக உள்ளது இது 1950-56ல் 29 விழுக்காடாக இருந்தது. இந்தியாவில் 21 மில்லியன் மின்சார பம்பு செட்கள் நீர்பாசன பயன்பாட்டில் உள்ளன. பல மாநிலங்களில் வேளாண் நீர்பாசனத்திற்கான இலவச மின்சாரமும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது (Upmanu Lall 2021). இந்தியவில் வேளாண்மைகாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது சீனா, பிரேசில் நாடுகளைவிட 2லிருந்து 4 மடங்குவரை அதிகமாகக் காணப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைவதால் நீர் இறைப்பு செலவு அதிகமாகி வேளாண் பொருளின் மொத்த உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. இந்தியாவின் 60 விழுக்காடு மாவட்டங்களில் அதிஅளவு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் நிலத்தடி நீரில் ஃப்லோரைடு, ஆர்சனிக், மெர்குரி, யுரேனியம், மாங்கனீசு போன்ற நிலைகளில் காணப்படுகிறது. இதனால் வேளாண்மையில் பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்ல மக்களிடையே பல்வேறு நோய்களையும் உருவாக்குகிறது.

பசுமைப் புரட்சியின் ஒரு முக்கிய வெளிப்பாடு மற்ற பயிர்களைவிட நெல், கோதுமை, கரும்பு போன்றவைகளுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகும். பசுமை புரட்சி அறிமுகப்படுத்துவதற்கு முன்பு தினை, பருப்பு, எண்ணெய் வித்துகள் சாகுபடி செய்தவர்கள் நெல், கோதுமை பயிர்களுக்கு கிடைத்த வரவேற்ப்பு, விலை, சலுகைகள் போன்ற காரணங்களை முன்னிருத்தி இவைகளைப் பயிரிடத் தொடங்கினார்கள். அரசு பொதுவிநியோகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாடு, மதிய உணவு திட்டம் போன்றவைகளுக்கு அரிசி, கோதுமைகளை பயன்படுத்தியது இதனால் இவற்றின் தேவை பல மடங்கு அதிகரிக்கத் தொடங்கியது. மேலும் தொன்றுதொட்டு உட்கொள்ளும் உணவு முறையில் மாற்றம் அவ்வகை தானிய உணவு (கேழ்வரகு, சாமை, சோளம், கம்பு, போன்றவைகள்) தேவைகள் குறைந்தது. பயிரிடவும் விவசாயிகள் முன்வரவில்லை. நெல், கோதுமை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பல்வேறு அரசு சலுகைகள் கிடைத்தது. எனவே இந்த வகை வேளாண் பொருட்களின் சாகுபடியினை நோக்கி பெருமளவிற்கான விவசாயிகள் மாறிச் சென்றனர். நெல், கோதுமை பயிர் செய்வதற்கு அதிக தண்ணீர் தேவைப்பட்டது தொடர்ந்து இப்பயிர்களை பயிரிட்டதால் தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இத்துடன் இடுபொருட்களின் (உரம், பூச்சிக்கொல்லி, விதை) கடுமையான விலை அதிகரிப்பு, விளைபொருட்களுக்கு போதுமான விலை கிடைக்காதது போன்றவைகளால் நெல், கோதுமை பயிரிடும் விவசாயிகள் பெரும் அறைகூவல்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த நிலையினை எதிர்கொள்ள ஒரு சில மாநிலங்களில் மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்ய அரசு ஊக்கப்படுத்துகிறது (ஒடிசாவில் தினைப் பயறு இயக்கம் 2017-18ல் துவக்கப்பட்டது. மத்தியப் பிரதேசத்தில் பழங்குடி மக்கள் வாழும் மாவட்டங்களில் தினைப் பயறுகளை கொள்முதல் செய்ய தேஜஸ்வினி கிராமப்புற பெண்கள் அதிகாரமளித்தல் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது).

அதிக அளவிற்கான தண்ணீர் பயன்பாட்டை இனி வரும் காலங்களில் குறைக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதால் தெளிப்பு நீர்பாசனம், சொட்டுநீர்பாசனம், நீர்தேக்க பாசனம் போன்றவற்றைப் முறையாகப் பயன்படுத்தவேண்டிய கட்டாயம் உள்ளது. இந்தியாவில் 13 விழுக்காடு மட்டுமே சிறிய வகை நீர் பாசன (minor irrigation) முறை பயன்படுத்தப்படுகிறது (இஸ்ரேலில் 99 விழுக்காடு) இதுவும் குஜராத். மத்தியப் பிரதேசம். ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மட்டுமே இந்த முறை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது (Agarwal (2019).
பிரதம மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா
வேளாண்மையில் நீர் பயன்பாட்டை திறனுடன் பயன்படுத்த 2015ஆம் ஆண்டு ஒன்றிய அரசினால் பிரதம மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா துவக்கப்பட்டது. இதற்கான நிதியினை ஒன்றிய மாநில அரசுகள் 60:40 என்ற அளவில் பங்கீடு செய்துகொள்கிறன. இந்த திட்டத்தின் வழியாக 10.5 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் பயனடைந்துள்ளது. இந்த திட்டத்தை ஆந்திரப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, மத்திப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் சிறப்பாக நடைமுறைபடுத்தி வருகிறது. இந்த திட்டத்தை நடைமுறைபடுத்துவதால் 80லிருந்து 90 விழுக்காடுவரை தண்ணீர் திறனாகப் பயன்படுத்தப்படுகிறது. 30.5 விழுக்காடு மின்சாரம் சேமிக்கப்படுகிறது. 28.5 விழுக்காடு உரப் பயன்பாடு குறைகிறது. உற்பத்தி திறன் அதிகரிக்கிறது (பழம் 42 விழுக்காடு, காய்கறிகள் 52 விழுக்காடு). இதுபோல் நீர்பாசனத்தில் 31.9 விழுக்காடு செலவு மிச்சப்படுகிறது (Ridham Kumar 2020). ரூ.50000 கோடி மதிப்பீட்டின்படி கால வரையறையினை 2019-20 என நிருணயம் செய்து அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் தற்போது வேறு சில நீர்பாசன திட்டங்களுடன் (AIBP, IWMP. OFWM. NMSA) தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வேளாண்மை சாகுபடியில் தண்ணீர் பயன்பாடு அதிகமாக உள்ளதற்கு தீர்வாக மாற்று பயிர்களை சாகுபடி செய்ய பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அன்மையில் மிஹிர் ஷ, விஜயசங்கர், ஹாரிஹ் ஆகியோரால் நடத்தப்பட்ட 11 மாநிலங்களில் (ஆந்திரப் பிரதேசம், பீகார், குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்திப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கான, தமிழ்நாடு) நடத்தப்பட்ட ஆய்வின்படி 2015-16ல் இம் மாநிங்கள் நாட்டின் மொத்த நீர்பாசன பரப்பில் 66 விழுக்காடு நீர்பாசனத்தினைக் கொண்டுள்ளது. இம் மாநிலங்கள் நெல், கோதுமை, கரும்பு போன்வற்றை முதன்மையாக சாகுபடி செய்பவைகளாகும். இம் மாநிலங்களில் சூழலின் அடிப்படையில் மாற்றுப் பயிராகப் பருப்பு, ஊட்டச்சத்து மிகு-தானியங்களைப் பயிர் செய்ய தொடங்கினால் 18லிருந்து 36 விழுக்காடுவரை தண்ணீர் சேமிக்க முடியும் என்றும் அதே சமயம் நீர்-செறிவு வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.3171 என்றால் மாற்றுப் பயிர்களுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.3821 என்று கிடைக்கும் என்கிறது (Mihir Shah et al 2022). உலகளவில் ஊட்டச்சத்து குறைவாக உள்ளவர்கள் அதிஅளவில் வாழும் நாடாக இந்தியா உள்ளது. இதனைப் போக்க மாற்று பயிர்களினால் உற்பத்தியாகும் ஊட்சத்து மிகு-தானியங்களை உட்கொள்ளலாம். எனவே மாற்றுப்பயிர் சாகுபடியினை ஊக்குவிப்பதும் அதனை சந்தை செய்வதற்கான வழிவகைகளைக் காண்பது. இவ் வேளாண் பொருட்களுக்கு மக்களிடையே நுகர்ச்சிக்கான நாட்டத்தினை உருவாக்க வேண்டியதும் அரசின் கடமையாக உள்ளது.

நீர்மேலாண்மை திறம்பட செயல்படுத்த போதுமான கொள்கைகள் வகுத்து நடைமுறைபடுத்த. வேளாண்மை மற்றும் நீர்பாசனத் துறை அமைச்சர்கள், நீர்பாசன வடிநில காப்பாளர்கள், நீர்பாசன முகவர்கள், நீர்பாசன விவசாயிகள், விவசாய அமைப்புகள் ஓன்றிணைந்து நீர் மேலாண்மையினைத் திறம்பட நடைமுறைபடுத்ப்பட வேண்டும். மண் பரிசோதனை மையங்களை உருவாக்கி அதை ஒரு இயக்கமாக விவசாயிகளிடம் கொண்டுசெல்ல வேண்டும். மண்ணின் தன்மைக்கேற்ப மாற்றுப் பயிர்களை சுழற்சி முறையில் அல்லது ஊடு பயிராக சாகுபடிசெய்தல் அவசியமாகிறது. உரம் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாடுகள் அதிக அளவில் உள்ளது. இதனை தடுக்க உணவு பாதுகாப்பு நடைமுறையின் அடிப்படையில் இவற்றைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட வேண்டும். உணவு, தினைவகை உற்பத்திப் பொருட்களின் சேமிப்புக் கிடங்குகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பினை உருவாக்க வேண்டும். தற்போது அதிக அளவிற்கு உரங்கள். மின்சாரத்திற்கான மானியங்கள் வழங்கப்படுகின்றன அதனை இயற்கை இடுபொருட்கள், மண்வள மேம்பாடு, சுழலியல் சேவைகளுக்கு அளித்து நீடித்த வேளாண்மை வளர்ச்சியினை உறுதி செய்ய வேண்டும். கிராமப்புற சுய உதவிக் குழுக்கள் தினைவகைப் பயிர்களை சந்தைபடுத்தும் செயலில் ஈடுபடுத்தப்பட வேண்டும். வேளாண் விரிவாக்க மையங்களை மறுசீரமைப்பு செய்து அனைத்து சுழலியல் ஆர்வளர்களை ஒன்றினைத்து வேளாண் மேம்பாட்டிற்கு வழிவகுக்க வேண்டும்.