நூல் அறிமுகம்: இமையத்தின் ‘செல்லாத பணம்’ – பேரா எ.பாவலன்
ஆணவக் கொலையின் வாக்குமூலம்
செல்லாத பணம் என்னும் நாவல் அண்மையில் வெளிவந்து தமிழ்ச்சமூகம் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஓர் அற்புதமான கலைப் படைப்பு. இதன் ஆசிரியர் எழுத்தாளர் இமையம். இது 2020 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளது. இந்தத் தலைப்பே ஒரு வசீகரமான தலைப்பாகும். அதனால் இந்தத் தலைப்பைப் பார்க்கும் பொழுது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் நாள் இந்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பீடு நடவடிக்கையை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதனாலும் இந்நாவல் கூடுதல் கவனம் பெற்றதாக உணர முடியும். அதன் காரணமாக இந்த நாவலை படிக்கும் ஆர்வத்தையும் தூண்டுகிறது. அந்த வகையில் இந்த நாவல் முன்வைக்கும் கருத்துக்களை வெளிக்கொணரும் தன்மையில் இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.
இந்த நாவல் மற்ற படைப்புகளில் இருந்து வேறுபடுவததற்கும், கவனம் பெற்றதற்கும் இரண்டு காரணங்களை முன்வைக்க முடியும். ஒன்று கதைக்கரு. மற்றொன்று மொழிநடை. இவ்விரண்டும் கனகச்சிதமாக பொருந்தியப் படைப்பாகச் செல்லாதபணம் நாவல் திகழ்கிறது.
இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும், கௌரவத்தின் பெயராலும், பெண்கள் ஒடுக்கு முறைக்கு ஆளாகக்கூடும் என்ற கேள்வியை இப்படைப்பு எழுப்புகிறது. ஒருபக்கம் கௌரவம் என்கின்ற பெயரில் பெற்றோர்கள் தன்னுடையப் பிள்ளைகளின் நலன்களில் அக்கறைக் கொள்ளாமல், சுயமாக வாழ்வதற்கு அனுமதிக்க மறுக்கின்றனர். மற்றொரு சூழலில் தான் விரும்பி நேசித்து பின்தொடர்ந்து சென்ற காதலன், மிக சொற்பமான நாட்களிலேயே அவன் சுயரூபம் வெளிப்பட்டு விடுகிறது. அல்லது அவனுடைய நிறம் வெளுத்து விடுகிறது என்றுதான் சொல்ல முடியும். பெற்றோர்களும் தன் விருப்பத்தை நிறைவேற்றி தருவதில் இருக்கும் வரட்டு கவுரவம் காதலித்தபோது இருந்த அன்பு, கணவனாகிய பின்பு காட்டும் அதிகாரம் இப்படிப்பட்ட சூழலில் பெண்கள் இருதலை கொல்லியாக தான் வாழ்கிறார்கள்.
இந்த நாவலைப் படிக்கத் தொடங்கும் பொழுது ரேவதிக்கு தீ மூட்டியது யார்? என்ற கேள்வி முன்னெழுகிறது. செல்லாத பணம் நாவலின் கரு இந்தக் கேள்வியைக் கேட்கிறது. அந்தப் பாத்திரத்தைப் பற்றி தான் கதையும் நகர்கிறது. அதனால் இப்படைப்பின் நாயகி ரேவதி என்றுக் கூற முடியும்.
நடேசன் – அமராவதி என்ற தம்பதிகளின் பிள்ளைகள் இருவர். மூத்தவன் முருகன். சென்னையில் பெரிய ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறான். அவனுக்கு திருமணமாகி விட்டது. அடுத்து மகள் ரேவதி. ரேவதி… ஒரு பொறியியல் பட்டதாரி. அவள் படித்த கல்லூரியிலேயே 98 சதவீதம் மதிப்பெண் பெற்று முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றவள். நடேசன் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர். கைநிறைய வருமானம். தேவைக்குப்போக இருக்கும் பணத்தை நிலத்தில் முதலீடு செய்வது, தங்கம் வாங்குவது, சொத்து வாங்குவது, வங்கியில் சேமிப்பது. இதனால் அவர்கள் பொருளாதாரத்தில் வசதியானவர்கள். இந்தச் சூழலில்தான் ரேவதி ஆட்டோ ஓட்டும் ரவியை காதலித்து திருமணம் செய்துகொண்டாள். ரவி ஒரு அகதி. சமூக அந்தஸ்திலும், பொருளாதார நிலையிலும் நடேசன் குடும்பத்திற்கு பொருத்தமற்றவன். ஆனாலும் ரவியின் அதிதீவிரமான காதலால் ரேவதியால் அவனை மறுக்க முடியவில்லை.
நடேசனும் அவர் குடும்பத்தினரும் மற்ற உறவுகளும் எல்லோரும் பலமுறை ரவியை திருமணம் செய்து கொள்ள வேண்டாமென்று சொல்லிய பிறகும், ரேவதி விடாப்பிடியாக இருந்ததனால் பெயரளவிற்கு வேண்டா வெறுப்பாகத் திருமணம் செய்து வைத்தனர். அப்பா நடேசனும், அண்ணன் முருகனும் திருமணத்திற்கு பிறகு, குடும்பம் சரியில்லை, கணவன் குடிக்கிறான், அடிக்கிறான், உதைக்கிறான், திட்டுகிறான், பணம் கேட்கிறான், என்பதாக வந்து எங்களிடம் முறையிட கூடாது என்று உறுதியாக கூறிவிட்டனர். திருமணம் முடிந்து உள்ளூரில் குடி இருந்தாலும் ஆறு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஒருநாளும் அப்பா முகம் கொடுத்து பேசியதில்லை. தெருவிலும், பொது இடங்களிலும் எங்கு பார்த்தாலும், பார்க்காதது போல முகத்தை திருப்பிக் கொண்டு போய்விடுவார்.
ரேவதி, ரவியை திருமணம் முடித்த கையோடு சென்னைக்குச் சென்று ஏதாவது நிறுவனத்தில் சேர்ந்து சம்பாதித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று திட்டம் போட்டு இருந்தாள். ரவியோ தனியாக இருக்கும் தன் அம்மாவையும், திருமணமாகாத அக்காவையும் விட்டு வர முடியாது என்பதை உறுதியாக கூறிவிட்டான். இதனால் ரேவதி தான் கண்ட கனவு நிறைவேறாமல் போகுதே என்று வருந்தினாள். மேலும் வேலைக்கும் போக கூடாது என்ற கட்டுப்பாடு விதித்தும் இன்னும் அவளை மன அழுத்தத்திற்கு ஆளாகிவிட்டான். அதுமட்டுமல்ல குடித்து விட்டு வீட்டுக்கு வருவது வழக்கமாகிவிட்டது. ரேவதியின் அப்பா சொன்னதைப் போலவே அவளுடைய வாழ்க்கை பெரிய சிக்கலுக்கு உள்ளாகிவிட்டது. இதனால் நிலைகுலைந்து செய்வதறியாமல் திகைத்துப்போய் இருந்தவளுக்கு அவளுடைய அம்மா அமராவதி வடிகாலாக இருந்தாள். உள்ளூர் என்பதனால் தன்னுடைய அப்பாவிற்கும், அண்ணனுக்கும் தெரியாமல் அம்மாவைப் பார்த்து பேசுவதற்காக வீட்டிற்கு வந்து சென்று வருவது வழக்கமாகிவிட்டது. இதை அவளுடைய அப்பாவும், அண்ணனும் கண்டும் காணாதது போல நடந்து கொள்வார்கள். அவர்கள் இருவரும் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து தான் தன்னுடைய அம்மாவைப் பார்ப்பதற்காக ரேவதி வருவாள். சில சமயத்தில் அவருடைய அப்பாவோ அல்லது அண்ணனோ வீட்டில் இருந்தால் வீட்டிற்குள் வராமல் அப்படியே சென்று விடுவாள். அல்லது அவள் வீட்டில் இருக்கும் போது இவர்களில் யாராவது வந்துவிட்டால் ஒரு திருடியைப் போல பதுங்கிப்பதுங்கி கண்களில் படாதவாறு ஓடி விடுவாள். இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு நாள் ரேவதி காதுபடவே முருகன் அவள் குடும்பத்தையும், கணவனையும், பிள்ளைகளையும் பற்றி மிகத் தரக்குறைவாகப் பேசிவிட்டான். அத்தோடு நிற்காமல், அவளுக்கு பிறந்த பிள்ளைகள் யாரும் இந்த வீட்டில் கால் வைக்கக் கூடாது. இப்படி கறாராக பேசிய பின்னர் திரும்பவும் அவளுக்கு குறைந்தபட்சம் இருந்த உரிமையும் துண்டித்து விட்டதாக உணர்ந்தாள்.
தன்னைப் பெற்ற உறவுகளையும் தூக்கி எறிந்து சென்ற ரேவதிக்கு கணவனாலும் எந்த நலனும் இல்லை. அதேபோன்று தவறான பாதையை தேர்ந்தெடுத்துவிட்டோம் என்பதனாலும் பெற்ற தந்தையும், கூட பிறந்த அண்ணனும் அருவருக்க தகுந்த வகையில் அவளை பார்ப்பதாலும் இப்படிப்பட்ட இந்தச் சூழலில் யாருக்காக வாழ்வது என்ற கேள்விதான் அவளை மேலும் கலக்கம் அடையச் செய்தது. இதன்பிறகு அவள் யாருக்காக வாழ வேண்டும் என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது. இத்தனைக் கொடுமைகளுக்குப் பிறகும், பிள்ளைகளுக்காக வாழவேண்டிய கட்டாயம் அவளுக்கு மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை.
ரேவதி வாழ்க்கை, வெறுமையின் விளிம்பு வரை சென்றுவிட்டது. இதற்கிடையில் உடலில் மண்ணெண்ணெய்ப் பட்டு உடல் முழுவதும் எரிந்து, மருத்துவமனையில் மரணத்தோடுப் போராடிக் கொண்டிருந்தாள். மரண வாக்குமூலம் பெறுவதற்காக மாவட்ட நீதிபதியும், காவல்துறை அதிகாரியிடமும் அவள் யாரையும் குற்றம் சுமத்தவில்லை. மட்டுமல்ல அவள் சொன்ன காரணம் நிச்சயம் யாராலும் ஏற்க முடியாது. சமையலறையில் அலமாரியில் வைத்திருந்த மண்ணெண்ணெய் பாத்திரம் தெரியாமல் மேலே கொட்டுவதற்கும் சமையல் அறையில் எரிந்துகொண்டிருந்த நெருப்பு உடனே என் மீது பட்டு தீக்கரைக்கு ஆளாக்கப்பட்டது என்ற வாக்குமூலத்தை கூறிவிட்டாள். ஆனால் இந்த வாக்குமூலம் அவளுடைய பெற்றோருக்கும், காவல்துறைக்கும் பெரிய அதிர்ச்சியை அளித்தது. அவள் இறக்கும் பொழுதாவதுதான், நிம்மதியாக சாகவேண்டும் என்று நினைத்தாளோ என்னவோ. அல்லது தான் இறந்த பிறகாவது தன் பெற்றோர்கள் எந்தவிதமான துர்ப்பாக்கியமான நிகழ்வுக்கு நீதிமன்றம், காவல்துறை, மருத்துவமனை இப்படி ஓடி அலையாமல் நிம்மதிப் பெருமூச்சு விட்டு அமைதியாக இருக்கவேண்டும் என்பதனாலோ என்னவோ? அவள் எல்லாவற்றையும் மறைத்து விட்டாளோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அவளை அன்றி வேறு யாராலும் அந்த உண்மையை அறிய முடிகிறது .
காவல்துறைக்கும், ரேவதியின் உறவுகளுக்கும் கூட ரவி மீதுதான் பெரிய சந்தேகம் இருந்தது. உண்மையில் இயற்கையாகவே ரேவதி உடல் மீது தீ பரவியதா? அல்லது கணவன் ரவி அவளை கொளுத்திவிட்டு நாடகம் ஆடுகிறானா? என்ற கேள்வியும் எழுகிறது. ரேவதியின் மரணத்திற்கு யார் காரணம்?.
தனக்குப் பிடித்தவனை திருமணம் செய்து கொண்டதற்காக ஆறு ஆண்டுகளாகப்பேச மறுப்பது மரணத்தை விட கொடுமையானது. அதேபோன்று ஆசை ஆசையாக தான் விரும்பி காதலித்தக் கணவனை திருமணம் செய்து கொண்டு அதற்குப் பிறகு எங்காவது சென்று நம் புது வாழ்வை வாழத் தொடங்கலாம் என்ற திட்டத்தை ரேவதி முன்வைத்த போதும் அதற்கு ரவி வேண்டாம் என்று நிராகரித்து விட்டான். இதனால் ரேவதி கொடுத்த பரிசு உயிர். தன்னை உயிருக்குயிராக பெற்று வளர்த்து, ஆளாக்கிய பெற்றோரை விட்டுட்டு, காதலன் ரவியை நம்பி சென்றாள். அவனும் அவளின் உணர்வைப் புரிந்து கொள்ளவில்லை. கணவன் சரி இல்லை என்பதை சொல்லாமல் சொல்லியப் பிறகும். அப்பாவும் அண்ணனும் அவளிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை. இப்படி எள்ளளவேனும் ரேவதியின் சுயமரியாதைக்கு மதிப்பளிக்கவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு. ரவியும் தன் பங்குக்கு ரேவதியை பழி வாங்கி விட்டதாகவே தோன்றுகிறது. தன்னுடைய அம்மாவையும் அக்காவையும் விட்டுவிட்டு அவளுடன் சென்னை வர மறுத்ததும் அவளை தற்கொலைச் செய்ய தூண்டியிருக்கக்கூடும். வாழ வேண்டிய வயதில் மரணத்தை அணைத்துக்கொண்டாள்.
பெரும்பாலும் இங்கு யாரை நம்பினாலும் அவர்கள் அனைவருமே சுயநலமாக இருக்கிறார்கள். அதிலும் ஆணாதிக்க சிந்தனை கொண்டவர்கள் முற்றிலும் சுயநலவாதிகள் தான் என்பதை மீண்டும் மீண்டும் அப்பா நடேசன், அண்ணன் முருகன், கணவன் ரவி ஆகியோர் மூவரும் இதற்குச் சான்றாகத் திகழ்கிறார்.
தன் குலப்பெருமையைக் குழிதோண்டிப் புதைத்து விட்டாள் என்ற ஆதங்கத்தை நடேசன், அவளை ஒரு மகளாக மட்டுமல்ல ஒரு சராசரிப் மனுசியாகக்கூட பார்க்க மறுத்த காரணத்தினால் ரேவதியின் பாதி உயிரை காவு வாங்கிவிட்டது. மற்றொரு வகையில் ரத்தமும் சதையுமாக உடன் பிறந்த அண்ணன், தன்னை புரிந்து கொள்ளாமல் பேச மறுக்கும் காரணத்தினால் அவன் பங்குக்கும் அவனும் அவளை மனதளவில் கொலை செய்து விட்டான். இன்னும் ஒருபடி மேலே சென்று கணவன் என்று நம்பி வந்த ரவியும் நட்டாற்றில் கைவிட்டதைப்போல மீதி இருந்த நம்பிக்கையும் கொன்று புதைத்து விட்டான்.
சாதி மேலாதிக்கம் எவ்வளவு பெரிய கீழ்த்தரமான சிந்தனையை தூண்டுகிறது என்பதற்கு நன்கு படித்து கல்வி போதிக்கும் தலைமையாசிரியர் நடேசன் அவர்களும் விதிவிலக்கல்ல. தன் மனதுக்குப் பிடித்த ஒரு ஆடவனை சுதந்திரமாக தேர்வு செய்யும் உரிமை இல்லாத நிலையில்தான் பெண்கள் இன்றளவும் இருந்து கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு சாதிய மனோபாவமும், ஆணாதிக்க சிந்தனையும், பழமை மாறாத மனுதர்ம கோட்பாடும் இதற்கு துணை நிற்கிறது. அதனால் தான் நடேசன் ஊருக்கு பயந்தாரே தவிர, தன் மகளின் உணர்வுக்கு துளி அளவேனும் மதிப்பளிக்கவில்லை.
ரேவதி மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் பொழுது நடேசன் பத்துலட்ச ரூபாய் ரொக்கமும், தான் வாங்கிய நிலத்தின் பத்திரங்களும், வங்கியின் ஏடிஎம் காடுகளையும் வைத்துக்கொண்டு எப்படியாவது என் மகளை உயிர் பெற்றுக் கொடுங்கவென்று எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று அழுதுபுலம்புகிறார். இதே வார்த்தை அவள் உயிரோடு இருந்த பொழுது சொல்லியிருந்தால் நிச்சயம் அந்த உயிர் போய் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.
இன்று பிணமாக கிடக்கும் ரேவதியை பார்த்து எல்லோரும் மாரடித்து புலம்புகின்றனர். மட்டுமல்ல ஒருத்தர் மீது ஒருத்தர் வசைமாரி பழி சுமத்திக் கொள்ளவும் தயங்கவில்லை.
நடேசன் தரப்பு நியாயம் இது. ரவியைப் பார்த்து, என் மகளை அநியாயமாக கொலை செய்து விட்டாயே? அவளை பெற்று வளர்த்து, ஆளாக்கி, படிக்க வைத்து, ஒரு நல்ல இடத்தில் திருமணம் முடித்துக் கொடுத்து அவள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று பெரிய கனவோடு இருந்த எங்களையும், அவளையும் காதல் என்ற போர்வையில் மயக்கி சம்மதிக்கச் செய்து எங்களை விட்டு உன்னோடு வருவதற்கு எப்படி சம்மதித்தாள்? அல்லது நீதான் என்ன வசியம் செய்தாய்? உன்னை நம்பி வந்தவளை தினம் தினம் துன்புறுத்துவது உனக்கு எப்படி மனம் வந்தது? வாழ்க்கை வாழ தெரியாத உனக்கு எல்லாம் எதற்கு திருமணம், மனைவி? இப்பொழுது அவளை நீயே எரித்துவிட்டு நாடகம் ஆடுவது எந்தளவிற்கு நியாயம் என்று ரவியை பார்த்து அவளுடைய பெற்றோரும் உறவுகளும் கதறிக்கொண்டே கேள்வி எழுப்புகின்றனர்.
அதற்கு ரவியும், கொஞ்சமும் தயங்காமல் நடேசனையும் அவர் குடும்பத்தையும் பார்த்து கேட்கும் கேள்வியும் பொருட்படுத்தத் தான் வேண்டும். அவள் எனக்கு இன்னொரு தாயாக இருந்தாள். அவள் என்னை திருமணம் செய்ததைத் தவிர வேறு எந்தத் தவறும் செய்யாதவள். அவளை கண்டிக்கிறேன் என்று இப்படி தண்டித்து விட்டீர்களே. திருமணமாகி ஆறு ஆண்டுகள் கடந்த பிறகும் அவளிடம் ஒரு நாள்கூட பேசமனமில்லாமல் அவளைப் பார்த்தாலே ஏதோ அருவருக்கத்தக்க ஒரு ஜந்துவைப் பார்த்ததைப் போல முகத்தை திருப்பிக் கொண்டு செல்வதை எத்தனை முறை என்னிடம் சொல்லி அழுது இருக்கிறாள். திருமணத்திற்கு பிறகான வாழ்நாட்களில் என்னிடம் பெருபாலும் உங்கள் குடும்ப உறவுகளைப் பற்றி மட்டுமே சிலாகித்துப் பேசிக் கொண்டிருப்பாள்.
அவள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் உங்கள் நினைவு பொதிந்து இருக்கும். பலமுறை என்னிடம் உங்களுடைய உணர்வுகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பாள். என்னை தண்டிப்பதாக நினைத்து அவளுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளை கூட உங்கள் வீட்டு வாசலில் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட போது, அவள் வேறு எங்கே செல்ல முடியும். அவளுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகள் மீதும் உங்களுக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் பேச மறுத்த காரணத்தினால் இப்படி அவள் மரணத்தை தழுவுவதற்கு நீங்கள்தான் காரணம்.
இப்படி மாறி மாறி பழிசுமத்திக் கொண்டிருந்தாலும், இறந்துபோன ரேவதி ஒருநாளும் எழுந்து வரப் போவதில்லை என்பதால் என்னவோ இவர்கள் பழி சுமத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதையெல்லாம் ரேவதி தான் பேசியிருக்க வேண்டும். யார் மீது தவறு என்பது அவள் கடைசிவரை சொல்லாமல் சென்றதுதான் அவர்கள் இப்படி பேசுவதற்கு காரணமாக அமைந்தது.
இருப்பினும் ரேவதியின் மரணத்தில் நூற்றுக்கணக்கான சந்தேகங்கள் வலுக்கிறது. எப்படி பார்த்தாலும் இங்கு குற்றவாளி யாராக இருக்க முடியும்? ஒரு பெண் என்று பாராமல் ரவி கொலை செய்ததற்கு முயற்சித்தாலும, அவன்தான் குற்றவாளி. ஒருவேளை ரவி செய்யாமல் ரேவதி தானாகவே தற்கொலை செய்வதற்கு முயன்றிருந்தால் அப்பா நடேசனும், அண்ணன் முருகனும் அவ்விருவரும் மட்டுமல்ல ரவியும் குற்றவாளிதான். எனினும் இது நவீன தீண்டாமையின் ஆணவக்கொலை என்பதற்கே வலுசேர்க்கிறது.
பேரா. முனைவர் எ. பாவலன்,
உதவிப் பேராசிரியர்,
இலயோலா கல்லூரி,
சென்னை – 34.
[email protected]
நூல் : செல்லாத பணம்
ஆசிரியர் : இமையம்
விலை : ரூ.₹325/-
வெளியீடு : க்ரியா
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
நூல் அறிமுகம்: இமையத்தின் வாழ்க வாழ்க – எஸ்.குமரவேல்
தமிழகம் மற்ற எல்லா மாநிலங்களை காட்டிலும் ஏதோ ஒரு வகையில் அல்லது குறிப்பிட்ட குணாம்சம் கொண்ட வழியில் பயணித்துக் கொண்டே தான் இருக்கிறது, மிக முக்கியமாக அரசியல் சூழல் இந்திய துணைக்கண்டம் முழுவது ஒரே திசையில் பயணிக்கிறது என எத்தனிக்கும் வேளையில் அது இல்லை உண்மை என்பதை தென்னிந்திய மாநிலங்கள் பறைசாற்றுகின்றன அவற்றுள் கேரளாவும் தமிழகமும் தனித்துவமானது அப்படி பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாத அரசியல் நிகழ்வை மையப்படுத்தி எழுதப்பட்டதுதான் எழுத்தாளர் இமயம் அவர்கள் எழுதிய வாழ்க வாழ்க என்ற நாவல்.
வாழ்க என்கிற வார்த்தை அரசியல் களத்தில் மிக முக்கியமானது இந்த வார்த்தை இரண்டு வகையாக பயன்படுத்தப்படுகிறது சிலர் கொள்கைகளை வாழ்க வாழ்க என்கிறார்கள் பலர் தங்களுடைய தலைவர்களை வாழ்க வாழ்க என வாழ்த்துகிறார்கள் அப்படி இந்த நாவல் குறிப்பிடுவது ஒரு அரசியல் தலைவரின் முன்னால் வாழ்க வாழ்க என வான் அதிர எழும் சத்ததிற்கு பின்னால் இருக்கும் மக்கள் படும் அவதியைதான் இந்த நாவல் ஆழமாக பேசுகிறது.
என்னதான் அரசியல் சூழல் வேறாக இருந்தாலும் கூட இந்தியா முழுவதுமே அரசியல் கூட்டங்கள் என்றால் ஒரே மாதிரியான அவதிகளை தான் குறிப்பாக வலதுசாரி சித்தாந்தங்கள் கொண்ட கட்சிகளின் கூட்டங்கள் வெளிப்படுத்துகின்றன மக்கள் அதில் உழன்றுகொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் மக்கள் அப்படி இருக்க பல்வேறு காரணங்கள் இருக்கிறது.
நாவலின் கதைக்களம் அரசியல் எழுச்சி மாநாடுதான், ஒரு கிராமத்திலிருந்து நகர்ப்புறம் நோக்கி மக்களை அத்துக்கூலிகளைப் போல தலைக்கு ஐநூறு ரூபாய் பணமும் பிரியாணி பொட்டலம் தருவதாக சொல்லி தேர்தல் பிரச்சார பொது கூட்டத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் காலையில் 10 மணிக்கு துவங்குவதாக இருந்த மாநாடு பிற்பகல் மூன்று பதினைந்து மணிக்கு துவங்குகிறது காலை 7 மணி முதல் மாநாடு முடியும் வரை நிகழக்கூடிய நிகழ்வுகள்தான் தான் ஒட்டு மொத்த கதையும். 93 பக்கம் கொண்ட நாவல் ஒரு நாள் அரசியல் மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் நான்கு பெண்கள் மற்றும் அவளை அழைத்துச் செல்லும் வெங்கடேச பெருமாள் என்ற அரசியல் கட்சி பிரமுகரை மையப்படுத்தி ஒரு திரைப்படத்தின் விறு விறு திரைக்கதைக்குசற்றும் குறைவில்லாத சுவாரஸ்யம் நிறைந்து இருக்கிறது.
நாவலில் குறிப்பிட்டுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் பற்றிய தரவுகள் அனைத்தும் தமிழக தமிழக அரசியல் களத்தை நிச்சயம் நமக்கு நினைவூட்டும் குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் இரு திராவிடக் கட்சிகளின் மாநாடுகளை நமக்கு நினைவூட்டும்.
தமிழக அரசியல் களத்தில் குறிப்பாக தேர்தல் காலத்தில் பொதுக்கூட்டங்களுக்கு என பிரதான இடம் உண்டு, பிரம்மாண்ட மேடைகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் லட்சக்கணக்கான நாற்காலிகள் மேடைக்கு 5 மையிலுக்கு அப்பால் இருந்து சாலை ஓரங்களில் இருபுறம் சுவர் எழுப்பியது போன்று காணப்படும் டிஜிட்டல் பேனர்கள் போஸ்டர்கள் விதவிதமான கட் அவுட்டுகள் வானைப் பிளக்கும் அளவிற்கு சத்தம் எழுப்பும் ஒழிபெருக்கிகள், கணிக்கிட முடியாத அளவிற்கு தீப்பெட்டிகளை போல வாகனங்கள், லட்சோப லட்ச மக்கள் திரல் வெட்டு சத்தம், கலை நிகழ்ச்சிகள், பிரமாண்ட மேடை அலங்காரம் எல்.இ.டி திரை என வாழ்நாளில் இதுவரை கண்டிராத ஆச்சரியத்தை கிராமத்திலிருந்து நகர்ப்புறம் நோக்கி வரக் கூடிய மக்களுக்கு இந்த மாநாட்டு ஏற்பாடுகள் தருகிறது குறிப்பாக இந்த பெண்களுக்கு தருகிறது.
காலையில் வேனில் ஏறி எப்படியோ அடித்து பிடித்து மாநாட்டில் நாற்காலியை எடுத்து வருகிறார்கள் மேடை மற்றும் நடன நிகழ்ச்சி நடக்கிறது மேடையில் நடனமாடும் பெண்கள் அனைவரும் இருபத்தி ஒரு வயதை தாண்டி இருக்க வாய்ப்பில்லை மாநாட்டுக்கு வந்த பெண்கள் நால்வரும் மேடையில் நடனமாடும் பெண்களின் அலங்காரம் உடை, மார்பகம் என அவர்களின் நடத்தை மீதான விமர்சனத்தை அள்ளி வீசுகிறார்கள்,
நேரம் கடந்து கொண்டே இருக்கிறது மாநாடு துவங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லை அழைத்து வந்து அரசியல் பிரமுகரும் எப்போது கூட்டம் நடக்கும் என்று கேட்டால் இதோ இதோ உடனே நடந்திடும் என பிடிப்பின்றி பதில் அளிக்கிறார் எப்போது உங்க தலைவி வருவாங்க என பெண்கள் சற்று எரிச்சலுடன் கேள்வி கேட்கிறார்கள் மீண்டும் ஏதோ ஒரு காரணம் சொல்லி தப்பிக்கிறான் வெங்கடேசப்பெருமாள்.
வெயில் ஏறுகிறது அனைவருமே நா வரண்டு தண்ணீரின் தேவை மரத்துப் போகும் அளவிற்கு போகிறார்கள் எங்காவது ஒரு துளி தண்ணீர் கிடைத்து விடாதா என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள்,
“இந்த படுபாவி பய நம்மள இழுத்து வந்து விட்டானே தண்ணி கூட கொடுக்கமாட்டேங்கரான் பாரு” காலை பேசும்போது மட்டும் வா அண்ணி நான் உன்ன பாத்துக்கிறேன் வசனமா பேசினா’ அந்த பையன் எங்க இருக்கான்னு தெரியல என நினைச்சுட்டு இருக்கும் போது வெங்கடேச பெருமாள் தண்ணீர் பாட்டில் க்கு பதிலாக கையில் கட்சியினுடைய பதாகையையும் தொப்பியும் கொண்டு வந்து கையில் கொடுத்தான் பிறகு கூடியிருந்த அனைத்து பெண்களும் தண்ணீர் என சத்தம் போட்ட பின்னால் ஆளுக்கொரு தண்ணீர் பாக்கெட் கொடுத்தான் வெங்கடேசப்பெருமாள், அது அவர்களுக்கு தொண்டையை நனைக்க மட்டுமே உதவியது, நேரம் சென்று கொண்டே இருந்தது பசி அனைவருக்குமே காதை அடைத்தது அசைவச் சாப்பாடு தருவதாக சொல்லி சைவ சாப்பாடு வழங்கினான் அதிலும் அவர்களுக்கு ஏமாற்றம், திட்டித் தீர்த்துக் கொண்டே சாப்பிட்டார்கள் என்ன கேள்வி கேட்டாலும் வெங்கடேசப்பெருமாளிடம் சரியான பதில் இல்லை காலையில் வெங்கடேச பெருமாள் நடந்து கொண்டதற்கும் மாலையில் வெங்கடேச பெருமாள் நடந்து கொண்டதற்கு நடத்தையும், பேச்சும் வித்தியாசமாக இருந்தது.
ஒருவழியாக மாநாடு 3.15மணிக்கு தொடங்கியது பிரம்மாண்ட ஹெலிகாப்டர் சத்தம் வானைப் பிளக்க கொடிகள் பறக்க கூட்டம் அம்மா வாழ்க, வாழ்க, என ஆர்ப்பரிக்க தலைவி வந்து இறங்கினார் நேராக மேடைக்கு வந்து என் உயிரின் உயிரான சொந்த பந்தங்கள் என்று எதிர்க் கட்சியின் மீதான விமர்சன கணைகளை பேசிச்சின் வழியே வீசினார்.
கீழ் இருந்த பெண்களில் ஒருவருக்கு அவர் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது ஓட்டு போட்டா அம்மாவுக்குத்தான் ஓட்டு போடுவேன் அப்படினு நெனச்சுட்டு பேசிக்கொண்டே இருக்கும்போது அந்த தலைவி பேசி முடிக்கும் சமயத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் இருந்த தடுப்பு கட்டை உடைந்து மள மளவென பெண்கள் பக்கம் சரிந்தது ஒரு சிறுமி உட்பட நான்கு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் கூட்டநெரிசலில் ஒட்டுமொத்த பொதுக் கூட்டத்தின் ஒரு பகுதி புழுதிக்காடு காணப்பட்டது, இது எதைப் பற்றியும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை,
தலைவி தான் பேச வந்ததை பேசிவிட்டு புழுதி பறக்க ஹெலிகாப்டரில் ஏறி சென்றதாக எழுத்தாளர் எழுதி இருக்கிறார், கோடிக்கணக்கில் செலவிடப்பட்டு நடைபெறுகின்ற ஒரு மாநாட்டில் பெண்கள் தங்களுடைய இயற்கை உபாதைகளை கழிப்பதற்கான இடமில்லாமல் இருக்கும் அவலத்தையும்.
கிராமங்களில் பெண்கள் மத்தியில் எவ்வாறு சாதிய பிடிமானம் இறுகிப் போயிருக்கிறது என்பதை அங்கு நடக்கக்கூடிய இரு வேறு சாதிப் பெண்களுக்கு இடையே நடைபெறும் நாற்காலி சண்டையும் அதில் அவர்கள் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகள் போன்றவற்றை எழுத்தாளர் ஆழாக பதிவு செய்கிறார் எழுத்தாளர் இமயம் எப்போதும் தான் யார் பக்கம் நிற்கிறேன் யாருடைய வலியை பேசுகிறேன் என்பதில் எப்பேதும் உறுதியாகவே இருக்கிறார்.
நாவல் என்னவோ அனைத்து உழைப்பாளி மக்களும் அரசியல்வாதிளால் படும் துன்பத்தை பேசி இருந்தாலும் கூட அந்த உழைப்பாளி மக்கள் மத்தியிலும் கூட சாதிய பிடிமானம் குறிப்பாக பெண்கள் மத்தியில் சாதி அபிமானம் எவ்வாறானதாக இறுகிப் போயிருக்கிறது என்பதை எழுத்தாளர் தன்னுடைய எழுத்துகள் மூலம் ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.
அரசியல் எவ்வாறான பரிணாம வளர்ச்சியை கொண்டுள்ளது ஒரு அரசியல் பிரமுகர் அவருடைய தனிப்பட்ட வளர்ச்சி அவர்கள் மீதான சமூகத்தின் பார்வை என ஒரு மிகச்சிறந்த அரசியல் நாவலாக வாழ்க வாழ்க இருக்கிறது..
நாவலில் உள்ள கதாபாத்திரம் குறிப்பாக அரசியல் பிரமுகர் வெங்கடேசப் பெருமாள் கதாபாத்திரம் வடிவமைத்த விதம் உருவ ஒற்றுமை என அனைத்துமே படிக்கப் படிக்க கன கச்சிதம் ஏதேனும் ஒரு அரசியல்வாதியை வாசிப்பவர் முன்னால் உருவகப்படுத்தி காட்டும். நாம் இந்த நாவலைப் படித்து முடிக்கும் தருவாயில் சர்வ நிச்சயமாக நீங்கள் தமிழக அரசியல் கட்சிகளின் ஏதோ ஒரு மாநாட்டு நிகழ்வு உங்கள் கண் முன்னால் வந்து போவதை தவிர்க்கவே முடியாது, ஏனென்றால் பெரும்பாலும் வெளிப்படையாகவே இருக்கிறது.
நாவலில் வரும் அரசியல் வசனங்கள் எள்ளலும் துள்ளலும் நிறைந்தது. குறிப்பாக
“அரசியல்வாதிகள் தங்களை வளர்த்துக் கொள்வதை கட்டிலும் அடுத்தவன் வளராமல் இருப்பதில் கவனமாக இருக்கிறான்”
“கட்சிங்கறதும் பதவிங்கறதும் ஒருத்தவ மேல ஒருத்தன் ஏறி
நின்னுகிட்டு உலகத்திலேயே நான்தான் ஓக்கியனு சொல்வதுதான்”
“சகித்துக் கொண்டு போறது தான் அரசியல், வெட்கப்படுகிறவன்
அரசியலுக்கு வரக்கூடாது எல்லோரும் வெட்கம் மானம் பாத்த அப்புறம்
யாரு எம்.எல்.ஏ எம்.பி ஆகுறது’
போன்ற அரசியல் சார்ந்த வரிகள் ஒரு சினிமாவின் வசனத்திற்கு எந்த வகையிலும் குறைவில்லாதது,
ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் மக்கள் படும் துன்பத்தை அவதியை அதனுடைய இறுக்கத்தை பிரம்மாண்டமான பரந்த வெளியில் நடைபெறும் மாநாட்டில் மக்கள் படும் துன்பத்தை அதற்கு பின்னால் இருக்கக்கூடிய சிரமங்களைநாவல் நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது….
வாழ்க வாழ்க – பார்த்த கேட்ட நிகழ்வின் தொகுப்பு…
நூலின்பெயர் : வாழ்கவாழ்க
ஆசிரியர் : இமையம்
பதிப்பகம் : கிரியாபதிப்பகம்
பக்கங்கள்: 93
விலை : 110
தோழமையுடன்
எஸ்.குமரவேல்
மாவட்ட செயலாளர்
இந்திய மாணவர் சங்கம்
கடலூர் மாவட்டக்குழு