Kadakka Mudiyatha Tharunangal Poem By Sudha கடக்க முடியாத தருணங்கள் - சுதா

கடக்க முடியாத தருணங்கள் – சுதா




யாரேனும் கேட்டதுண்டா
ஒற்றைப்பனைக்
குருவியின் ஓசையை…

மாட்டுத்தொழுவத்தில்
மாடு கட்டும் குச்சியின்
வெறுமையை…

நீர் வற்றிய கிணற்றில்…
வற்றாத ஒரு பகுதி
நீரின் பயத்தை…

வீசப்பட்ட இலையில்
சிதறி விழும் பருக்கையின்
இயலாமையை…

மார்கழிக் குளிரில்
மரத்தின் கீழ் சுருண்டு
கிடக்கும் கிழவியின்
இல்லாத குடும்பம் பற்றி…

குடித்து வீங்கிய முகத்தோடு
தெருவோரத்தில் உச்சிவெயிலில்
உறங்கும் பெண் முன்பு இருக்கும்
வாழ்வின் அகோர முகத்தை
யாரேனும் கேட்டதுண்டா…

ஒருவேளை யாரேனும்
கேட்டிருந்தால்…மாற்றமொன்று
நிகழ்ந்திருந்தால்…இயல்பாய்
கடந்திருப்போம்…