ஒரு சொல் கேளீர்: 75 வது சுதந்திர தினம் இந்திய விடுதலை போரில் கம்யூனிஸ்ட்களின் பங்கு பகுதி2 – அ.பாக்கியம்
சுதந்திர தின சிறப்பு கட்டுரை: ♥திப்பு சுல்தான்♥ குறித்த சில சுவையான தகவல்கள்
“இன்றும் கூட நடுநிலைப்பள்ளிகளில் போதிக்கப்படும் பொது வரலாற்றுப் பாடமானது திருப்தி அளிப்பதாக இல்லை. வரலாற்றைப் போதிப்பதன் நோக்கம், சில செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் மாணவர்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்காக அல்ல என்பதையும், எந்த யுத்தம் எந்தத் தேதியில் நடந்தது, எந்த ராணுவ அதிகாரிக்கு எப்போது பிறந்த நாள் வந்தது, எந்த அரசனுக்கு எப்போது முடிசூட்டு விழா நடந்தது போன்ற விவரங்களில் மாணவர்களுக்கு அக்கறை இல்லை என்பதையும் எந்த ஆசிரியரும் தெரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. இவற்றை முக்கியமான விஷயமாக யாரும் கவனிப்பதில்லை”
இப்படிக் கூறியது யார் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா? 1924 ஆம் ஆண்டு பவேரியாவில் இருந்த லாண்ட்ஸ்பெர்க் அன் லெக் கோட்டையில் சிறையிலிருந்த அடால்ஃப் ஹிட்லர் எழுதியது. மேலும் அவர் எழுதுகிறார்:
“சரித்திரத்தைப் படிப்பது என்றால், கண்ணுக்கு முன்னே சரித்திர நிகழ்வுகளாகத் தோன்றும் உண்மைகளுக்குக் காரணமான சக்திகளைத் தேடிக் கண்டுபிடித்தலாகும். அவற்றில் அவசியமானவற்றை நினைவில் கொள்வதும் மற்றதை மறந்து போவதும் தான் சரித்திரத்தைப் படித்து ஆராயும் கலையாகும்”
ஒரு தேர்ந்த வரலாற்று ஆசிரியர் போல் இவ்வளவு அழகான வரையறை தரும் ஹிட்லர் தனக்கு அமைந்த சரித்திரப் பேராசிரியர் குறித்து உணர்ச்சி பொங்க விவரிக்கிறார் “மெயின் காம்ஃப்” (எனது போராட்டம்) என்ற அவரது சுயசரிதை நூலில்.

எனவே நாம் ஒரு கணினியின் தகவல் கிடங்கு போல் சரித்திர நிகழ்வுகளை நினைவில் கொள்ளாமல் அவசியமான தகவல்களையும் அதன் பின்புலங்களையும் ஆராய்வோம்.
இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையும் நாம் நமது சரித்திரத்தின் சில பக்கங்களை மீள வாசிப்பதும், அதனின்றும் பெறப்படும் தகவல்களிலிருந்து நம்மை புத்துயிர் ஊட்டிக்கொள்வதும் பொருத்தமாக இருக்கும்.
மைசூர் பேரரசில் ஒரு ராணுவ அதிகாரியாக இருந்த தைலர் அலி 1761-ல் அதன் அரசரானார். தான் முறையாகக் கல்வி கற்கவில்லை என்ற குறையை தீர்த்துக்கொள்ள தலைமகன் திப்பு சுல்தானுக்கு ஆயகலைகள் அத்தனையும் கற்றக்கொள்ள ஏற்பாடு செய்தார். ராஜா வீட்டு கன்றுக்குட்டியும் தன் திறமைகளை வளர்த்துக்கொண்டு பதினாறடி பாய்த் தயாரானது. பதினைந்து வயது வளரிளம் பருவத்திலேயே முதன் போர்க்களம் கண்டார் திப்பு. அதுவும் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக.
இந்த ‘சூரப்புலி’ காட்டில் தன் நண்பருடன் வேட்டையாடச் சென்ற போது எதிரே ஆக்ரோஷமாய் வந்தது அசல் புலி தன் கோரப்பற்களைக் காட்டியபடி. முதலில் நண்பர் புலியின் தாக்குதலில் ஸ்தலத்திலேயே உயிர்விட்டார். திப்புவின் துப்பாக்கியோ கர்ணன் பெற்ற சாபம்போல் அந்த நேரத்தில் இயங்காமல் போய்விட்டது. கையிலிருந்த குறுவாலும் தவறிக்கீழே விழ புலி ரொம்பவும் குஷியாகி திப்புவை தீர்த்துக்கட்டப் பாய்ந்தது. துளியும் தாமதிக்காமல் ‘வேட்டைக்கார எம்.ஜி.யாராய்” கீழே விழுந்த குறுவாளை எடுத்து தினந்தந்தி வாசகம் போல் “சதக், சதக்” என்று குத்தி புலியைப் பரலோகம் அனுப்பினார் திப்பு. அன்று முதல் அவர் ‘மைசூர் புலி” ஆன கதை இதுதான்.
ஆனால் வரலாற்றாசிரியர் விடுவார்களா? திப்புவின் ராணுவ வீரர்கள் புலி வரிகள் கொண்ட சீருடை அணிந்திருந்தனர் என்றும், திப்புவின் சின்னங்களில் புலி உருவம் பொரிக்கப்பட்டிருந்ததென்றும் எடுத்துக்காட்டி புலியின் மீது அவருக்கிருந்த தனிப்பட்ட ஈர்ப்பின் காரணமாகவே திப்பு “மைசூர் புலி” என அழைக்கப்படுவதாக வேறு சிலர் தெரிவிக்கிறார்கள்.

புலி உருவம் பொரிக்கப்பட்ட திப்பு சுல்தான் பயன்படுத்திய வாளின் எடை 7.4 கிலோகிராம். விஜய் மல்லையா (வங்கியிலிருந்து கடனாகக் கொள்ளையடித்த) 21 கோடி ரூபாய்க்கு இதனை ஏலத்தில் வாங்கினார்.
ஒரு பிரிட்டிஷ் அதிகாரியை அலற வைப்பது போன்ற ஒரு பாயும் புலி பொம்மை (உலோகத்தால் செய்யப்பட்டது) திப்புவிற்குப் பிடித்தமானது. இப்போது அது விக்டோரியா- ஆல்பர்ட் மியூசியத்தில் இருக்கிறது.
பெங்களூருவில் உள்ள லால்பாக் தாவரவியல் பூங்காவிற்கு நம்மில் அநேகர் சென்றிருப்போம். நாற்பது ஏக்கர் பரப்பளவில் இதனை உருவாக்கியவர் தோட்டக்கலையில் அதீத ஈடுபாடு கொண்ட திப்பு சுல்தான் தான்.
தான் கண்ட 37 கனவுகளைப் பற்றி திப்பு சுல்தான் தன் கைப்பட எழுதிய அசல் பிரதியை பிரிட்டிஷ் நூலகம் சென்றால் காணலாம். சிக்மன்ட் ஃப்ராய்டின் ‘கனவுகளின் விளக்கம்’ வெளியிடப்பட்ட ஆண்டு 1899. சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன் தன் கனவுகளைப் பதிவு செய்தவர் திப்பு. இவரது கனவுகள் எல்லாமே போர் மற்றும் ஆன்மீகக் கனவுகளே.
“ஆம் நான் அவனைக்கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தை கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிர்ஷ்டம்” மார்க்வெஸ் வெல்லஸ்லி எழுதிய கடிதம் இது.
“கிழக்கிந்திய கம்பெனியின் குலை நடுக்கமாக” இருந்தது திப்புவின் மைசூர் அரசு.
திப்பு சுல்தானின் ஏவுகணைத் தொழில்நுட்பமே பிற்கால பிரிட்டிஷாரின் ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் முன்னோடி.

இலண்டன் அருகில் ஊல்ரிச் எனும் ஊரில் உள்ள ரோதுண்டா அருங்காட்சியகத்தில் திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பார்க்க இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முயற்சி எடுத்துக்கொண்டார். உலக அளவில் முதல் இராணுவ ஏவுகணைகள் அவையே என்பதையும் பிற்காலத்தில் பிரிட்டிஷார் ஆய்வு நடத்தி அவற்றைத் திருத்தியமைத்துப் பயன்படுத்தியதையும், மேலும் இது இந்தியாவில் திப்பு சுல்தானின் சொந்த தொழில்நுட்பம் என்பதையும், பிரெஞ்சு நாட்டினரிடமிருந்து கற்றது அல்ல என்பதினையும் சர் பெர்னார்டு லோவல் எனும் பிரபல பிரிட்டிஷ் விஞ்ஞானி எழுதிய ’விண்வெளி ஆராய்ச்சிகளின் தோற்ற மூலங்களும், பன்னாட்டுப் பொருளாதாரங்களும் (The Origins and International Economics of Space Explorations) எனும் நூலின் உதவியோடு அப்துல் கலாம் நிரூபிக்கிறார்.
திப்புவின் நிர்வாகத்தில் மதுபானம் மற்றும் விபச்சாரம் கறாராகத் தடைசெய்யப்பட்டிருந்தது. கஞ்சா போன்ற போதை தரும் பொருட்களின் பயன்பாடு மற்றும் உற்பத்தியும் தடைசெய்யப்பட்டது.
கேரளாவில் இருந்த பல கணவர் மணம் நடைமுறைகள் திப்பு சுல்தானால் தடைசெய்யப்பட்டது. முந்தைய காலங்களில் முலை வரி பண்பாட்டால் கேரளாவில் அனைத்து பெண்களின் மார்பகங்களையும் மறைப்பது நடைமுறையில் இல்லாததினால், அனைத்து பெண்களும் மார்பகங்களை மறைக்கலாம் என்பதற்காக ஒரு ஆணையை நிறைவேற்றினார்.
ஆணை பின்வருமாறு:
பாலகாட்டின் முழு பிரதேசங்களிலும் (அதாவது, மலை காடுகளின் கீழே உள்ள நாட்டில்) பெரும்பாலான இந்துப் பெண்கள் தங்கள் மார்பகங்களையும் மறைக்காமல், தலைவிரித்து அவிழ்த்துக் கொண்டு செல்கிறார்கள். இது விலங்குகளைப் போன்று நடத்துவதாகும். இந்தப் பெண்களில் யாரும் இனி ஒரு முழுமையான அங்கி (மார்பகங்களை மறைக்க), மற்றும் முக்காடு இல்லாமல் வெளியே செல்லக் கூடாது.
தன் ஆட்சியில் திப்பு சுல்தான் மேலும் பல புதிய அம்சங்களை நடைமுறைப்படுத்தினார்:
அக்காலத்திலேயே கலப்பின விதைகள், உயர்ரகப் பயிர்கள் என்று விவசாயத்தில் பல புதுமைகளைப் புகுத்தினார்.
கப்பல் கட்டும் தளம் அமைத்தார்
இப்போதுள்ள பொதுவிநியோகத்திட்டம் அவர் ஆட்சியில் அப்போதே செயல்பாட்டில் இருந்தது.
வங்கிகளை, கூட்டுறவு நிறுவனங்களையும் ஏற்படுத்தி மக்களிடமிருந்து வைப்புத் தொகையை வாங்கி வட்டியுடன் திருப்பி அளிக்கும் முறையை திப்பு தன் ஆட்சியில் கொண்டுவந்தார்.
மைசூரில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை பண்டமாற்று முறையில் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்தார்.
சர்க்கரை, உப்பு, இரும்பு, புகையிலை, சந்தனம் போன்ற அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், வெள்ளி, தங்கம் போன்ற மதிப்புமிக்க உலோகங்களின் உற்பத்தி ஆகியவைவற்றை அரசின் கீழ் கொண்டுவந்தவர் நேருவுக்கு முன்னதாக திப்பு சுல்தான் தான்.

திப்பு ஒரு மிகப் பெரிய நூலகத்தை ஏற்படுத்தியிருந்தார். உலக இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகள் யாவும் அங்கே இருந்தன. மேலை நாடுகளில் ஏற்பட்டு வந்த நவீன முன்னேற்றங்கள் குறித்துஅவர் தம் கைப்பட எழுதிய குறிப்புகள் அங்கே இருந்தன. வெளிநாடுகளிலிருந்து டெலஸ்கோப், பாரோமீட்டர் போன்ற கருவிகளை வரவழைத்தவர் திப்பு. ராக்கெட் தொழில்நுட்பம் குறித்த பல குறிப்பேடுகளும், நூல்களும் அங்கு பாதுகாக்கப்பட்டன.
இரும்புக்குழாயில் வெடிமருந்தை இடித்துத் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகளை திப்பு பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக பயன்படுத்தி அப்போரில் வெற்றி பெற்றார். அவர் பயன்படுத்திய அத்தனை ராக்கெட்டுகளில் ஒன்று கூட இன்று நம்மிடம் இல்லை. அத்தனையும் இங்கிலாந்தில் பாதுகாப்பாக உள்ளன.
போரில் ராக்கெட் தாக்குதல்களைப் பயன்படுத்தினார் என்பதற்குச் சான்றாக, வாலோபஸ் விண்வெளி நிலையத்தில் உள்ள ஒரு சித்திரத்தில் போரில் ஆசியர்கள் ராக்கெட் பயன்படுத்தும் படம் உள்ளதையும் அது மைசூர் போரில் திப்பு சுல்தான் படை ஆங்கிலேயர்மேல் நடத்திய தாக்குதலைக் குறிப்பதையும் இந்தியாவின் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கண்டு வியந்துள்ளார்.
திப்பு சுல்தானுக்கு ஆதரவாக இருந்தவர்களை சூழ்ச்சியாலும், திப்பு சுல்தானை மைசூர் யுத்தத்திலும் தோற்கடித்த காரன் வாலீஸ், ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கையின்படி பணத்திற்காகத் திப்புவின் இரண்டு மகன்களையும் பணயமாகப் பிடித்து வைத்துக் கொண்டான். சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் உள்ள காரன் வாலீஸ் சிலையில் சரணடைந்த திப்புவின் மகன்களைத் தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கும் காட்சி சித்திரிக்கப்பட்டிருக்கிறது. துரோகத்தின் சின்னமாகக் கருதப்பட்ட இச்சிலை, பொதுமக்களின் எதிர்ப்பால், காரன் வாலீஸ் சிலை சென்னையில் ஊர்ப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டு, சென்னை ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.
பிரான்ஸின் உதவியை திப்பு நாடியதால் அச்சம் கொண்ட பிரிஷ்டிஷ் அரசு தன் படை முழுவதையும் திரட்டி ஶ்ரீரங்கப்பட்டின அரண்மையை முற்றுகையிட்டுத் தாக்கியது. இந்த நான்காம் பிரிட்டிஷ்-மைசூர் போரில்தான் திப்பு தோல்வியை சந்தித்தார்.
திப்புவின் பொன்மொழிகள்:
“ஒரு குள்ளநரியைப் போல 1௦௦ ஆண்டுகள் பிழைப்பதை விட ஒரு சிங்கத்தைப் போல ஒரு நாள் வாழ்ந்து மடியலாம்”
“உனது எதிரியிடம் மண்டியிடுவதை விட சாவதே மேல்”
“இறைவா என் நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று. எதிரிகளிடமிருந்து நானே என்னைக் காத்துக்கொள்கிறேன்”
அசைக்க முடியாத உறுதியுடன் தடைகளையும் துயரங்களையும் எதிர்கொள்வதே வாழ்க்கையின் உண்மையான சந்தோஷம்.
(நன்றி: தமிழ் விக்கிபீடியா மற்றும் சில இணைய தளங்கள்)
மிகவும் இக்கட்டான நிலையில் 75வது சுதந்திர தினம்
இந்தியா, தன்னுடைய 74ஆவது சுதந்திர தினத்தை முடித்து, 2022இல் 75ஆவது சுதந்திர தினத்தில் அடி எடுத்து வைக்கும் இத்தருணத்தில் உண்மையில் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறது.
நம்முடைய குடியரசு அரசமைப்புச்சட்டத்தை உருவாக்குவதற்காகவும், நம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை உயர்த்திப்பிடிப்பதற்காகவும் நாம் சுதந்திரப்போராட்டக் காலத்தில் உயர்த்திப்பிடித்த உன்னதமான குறிக்கோள்கள், கடந்த பல பத்தாண்டுகளில் அரிக்கப்பட்டு வந்திருக்கின்றன.
குறிப்பாக, ஆர்எஸ்எஸ்/பாஜக கூட்டணி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியபின், ஒரு குணாம்சரீதியான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 2014க்குப் பின்னர், சுதந்திரப் போராட்டத்தின் உன்னதக் குறிக்கோள்களாக இருந்த, ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் நாட்டின் இறையாண்மை ஆகிய அனைத்துக்கும் மிகவும் சக்திவாய்ந்த அச்சுறுத்தலாக விளங்கக்கூடியவிதத்தில் இந்துத்துவா மதவெறியும், நவீன தாராளமய முதலாளித்துவக் கொள்கையும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் இப்போதிருக்கும் அமைப்பில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் கையகப்படுத்தியும், அவற்றின் அதிகாரங்களை அரித்து வீழ்த்தியும், தங்களுடைய ‘இந்து ராஷ்ட்ரம்’ என்னும் இலக்கை நோக்கி, கொண்டுசெல்வதற்கு ஏற்றவிதத்தில் கையகப்படுத்திடும் நீண்ட பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக, நரேந்திர மோடியின் சுதந்திர தின உரைகளை ஆராய்ந்தோமானால், அவர்கள் கற்பனை செய்துள்ள “புதிய இந்தியா”வின் உருவறைகள் என்னவென்று புரிந்துகொள்ள முடியும்.
2018 ஆகஸ்ட் 15 அன்று நரேந்திர மோடி ஆற்றிய சுதந்திர தின உரையில், 2022வாக்கில் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் சமயத்தில் “புதிய இந்தியா” உருவாக்கப்படுவதைப் பற்றி பேசியிருந்தார். இவர்களின் புதிய இந்தியா என்பதன் பொருளை பின்னர் இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்க்கத் தொடங்கிவிட்டார்கள். 2019இல் பத்து நாட்கள் கழித்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து ஆகஸ்ட் 5 அன்று ரத்து செய்யப்பட்ட பின், மோடி ஆற்றிய சுதந்திர தின உரையின்போது, “ஒரே நாடு, ஒரே அரசமைப்புச்சட்டம்” என்பதை நிறைவேற்றிவிட்டோம் என்று பெருமையுடன் அறிவித்தார். சர்தார் பட்டேல் கண்ட கனவு “ஒரே பாரதம், ஸ்ரேஸ்தா பாரதம்” அடைந்துவிட்டோம் என்றார். இது கிட்டத்தட்ட ஆர்எஸ்எஸ்-இன் அகண்ட பாரதம் போன்ற கோஷத்தை ஒத்திருக்கிறது.
இதே ஆண்டு டிசம்பரில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாட்டில் முதன்முதலாக குடிமக்கள், தங்கள் மதத்தை அளவுகோலாகக் கொண்டு வரையறுக்கப்பட்டார்கள். இது மதச்சார்பற்ற அரசின் குடிமக்கள் என்னும் கருத்தாக்கத்திற்கு எதிரானதாகும்.

அடுத்த ஆண்டு, 2020இல், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியில், ஆகஸ்ட் 5 அன்று, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழாவின்போது, பிரதமர், ஆர்எஸ்எஸ் தலைவரின் முன்னிலையில், இன்றைய தினமே சுதந்திர தினம் என்று அறிவித்தார். அதன்பின்னர் பத்து நாட்கள் கழித்து அவர் ஆற்றிய சுதந்திரதின உரையின்போது, அவர், “வெகுகாலமாக இருந்து வந்த ராம ஜன்ம பூமி பிரச்சனையில் “அமைதியான முறை”யில் உச்சத்தை அடைந்துவிட்டோம்,” என்று கூறினார். இவர்கள் கூறும் “அமைதியான முறை”யிலான உச்சத்திற்குப் பின்னே, 1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். ஆனால், மோடியைப் பொறுத்தவரை, கோவில் என்பது அவர்களுக்கு வேறு ஏதோ ஒன்றைக் குறிப்பாகத் தெரிவிக்கிறது. “ஒவ்வொரு இந்தியனும் வளர்ச்சிக்கான மகத்தான யாகத்தில் ஏதாவது ஒன்றைத் தியாகம் செய்துதான் ஆக வேண்டும்.” இவ்வாறு கோவில் என்பது இவர்களின் தேசிய வளர்ச்சிக்கான ஓர் அடையாளமாகும். ஒவ்வொரு இந்தியனும் அதற்காகத் தியாகம் செய்திட வேண்டும் என்பது இவர்கள் கூற்று.
இவ்வாறாக இவர்களின் புதிய இந்தியா கடந்த இரண்டு ஆண்டுகளில் – அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, நாடாளுமன்றத்திற்கான புதிய சென்ட்ரல் விஸ்டா கட்டுவது மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஒழித்துக்கட்டியது ஆகியவற்றின் மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவை அனைத்தும் மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றின் மீதான தாக்குதல்களை வக்கிரத்தனமான முறையில் குறிக்கின்றன.
“புதிய இந்தியா” என்பது இந்துத்துவா எதேச்சாதிகாரம் மற்றும் கார்ப்பரேட்டுகளின் நவீன தாராளமயம் ஆகியவை இணைந்த நச்சுக் கலவையாகும். மோடி, “புதிய இந்தியா”வுக்கு இலக்கை நிர்ணயித்து அறிவித்த கடந்த மூன்றாண்டுகளில், கார்ப்பரேட்டுகளின் மீதான வரிகள் கடுமையாக வெட்டப்பட்டிருக்கின்றன, பெரும் கார்ப்பரேட்டுகளின் பல லட்சம் கோடி ரூபாய் கடன்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன, பெரிய அளவில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாரிடம் தாரை வார்த்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. வேளாண் வர்த்தகம் மற்றும் சந்தைகளில் கார்ப்பரேட்டுகள் நுழைவதற்கு வழிவகைகள் செய்து தரும் விதத்தில் நாடாளுமன்றத்தை முடக்கி மூன்று வேளாண் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. மிகவும் அசிங்கமானமுறையில் சமத்துவமின்மையுடன் புதிய இந்தியா உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 2021இல் வெளியாகியுள்ள கிரெடிட் சுஸ்ஸே வெல்த் ரிப்போர்ட் (Credit Suisse Wealth Report of 2021)-இன்படி, நாட்டிலுள்ள உயர் ஒரு சதவீதத்தினரின் செல்வத்தின் பங்கு, 2020 இறுதிவாக்கில் 40.5 சதவீதத்தை எட்டிவிடும். ஃபோர்ப்ஸ் (Forbes) வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையானது, 2020இல் 102 பில்லியனர்களாக இருந்தவர்களின் எண்ணிக்கை 2021இல் 140ஆக உயரும் என்று மதிப்பிட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வறுமை மிகவும் கொடூரமானமுறையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கக்கூடிய நிலையில்தான் இது நடந்திருக்கிறது.
2020இல் பிரதமர் சுதந்திரதின உரை நிகழ்த்தியபோது, “சுயசார்பு பாரதம்” (“Aatmanarbhar Bharat”) என்னும் முழக்கத்தை அளித்தார். அதாவது, “புதிய இந்தியா” என்பது சுயசார்புடன் திகழும் என்று பொருள்படும்படி இவ்வாறு கூறினார். அவர் மேலும், “நாம் 75ஆவது சுதந்திர தினத்தை நோக்கி இன்னும் ஓர் அடி எடுத்து வைக்க வேண்டிய நிலையில் இருப்பதால், இந்தியா போன்ற ஒரு நாடு, தன் சுய காலில் நிற்க வேண்டியதும், சுயசார்புடன் இருக்க வேண்டியதும் அவசியமாகும்,” என்று கூறினார்.
கபடநாடகத்தின் அளவுக்கு எல்லையே இல்லை. மோடி, சுய சார்பு எனப் பிரகடனம் செய்தபின்னர், “சுயசார்பு பாரத் அபியான்” (“Aatmanirbhar Bharat Abhiyan”) என்னும் திட்டத்தின் ஒரு பகுதியாக, மிகமுக்கியமான போர்த்தந்திரரீதியிலான துறைகளைத் தவிர (except strategic sectors) இதர பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியாரிடம் தாரை வார்க்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. போர்த்தந்திரரீதியிலான துறைகளிலும்கூட, அதிகபட்சம் நான்கு துறைகள் மட்டுமே பொதுத்துறையில் நீடிக்கும். அரசாங்கம், பாதுகாப்புத்துறையில் ஏற்கனவே 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்துவிட்டது. இந்நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியப் பெரும் கார்ப்பரேட்டுகள் மற்றும் அந்நிய நிறுவனங்கள் நம் மக்களின் வளங்களைப் பயன்படுத்திக் கட்டி எழுப்பப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் கபளீகரம் செய்திட அனுமதிக்கப்படக் கூடியவைகளாகும். இந்நடவடிக்கைகள் அனைத்தும் நம் பொருளாதார இறையாண்மையை அரித்துவீழ்த்திடும்.

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரை வார்த்திடும் ஒரு பகுதியாக விளங்கும், அரக்கத்தனமான முறையில் பின்பற்றப்பட்டுவரும் நவீன தாராளமயக் கொள்கைகள், நம் அரசியலமைப்பு முறையின்மீதும் நாசகர விளைவுகளை ஏற்படுத்திடும், ஜனநாயகத்தினைத் தேய்வுறச் செய்திடும். இதன்காரணமாகத்தான் அரசியல்வாதிகள் மற்றும் பெரும் வர்த்தகப் புள்ளிகளுக்கு இடையேயான கள்ளப் பிணைப்பு மிகவும் வலுவானமுறையில் மாறியிருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் அமைப்புமுறை இந்தக் கள்ளப்பிணைப்பிற்குச் சிறந்ததோர் உதாரணமாகும். நாடாளுமன்ற நடைமுறையே மதிப்பிழந்துவிடும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுவரும் பிரதிநிதிகள், அந்த மக்களின் கட்டளைகளையே முறியடித்திடும் விதத்தில், மிகப்பெரிய அளவில் கட்சித் தாவலில் ஈடுபடுவதும், மாநில அரசாங்கங்களையே மாற்றியமைப்பதும் நடக்கும். இவ்வாறு இவர்களுடைய “புதிய இந்தியா”வும் அரை-ஜனநாயகமும் ஒரேபொருள்படக்கூடியவையாக மாறி யிருக்கின்றன.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றை மோடி அரசாங்கம் கையாள வேண்டியிருந்ததால், இவர்களின் திட்டம் நிறைவேறுவதில் சற்றே தாமதம் ஏற்பட்டபோதிலும்கூட, இவர்கள் இந்தியாவை மாற்றியமைப்பதை மிகவும் வெறித்தனமான முறையில் வேகமாகச் செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் கூறும் “புதிய இந்தியா”வுக்கும் அறிவியல் மனப்பான்மையுடன் கூடிய ஒரு நவீன, மதச்சார்பற்ற சமூகத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது. இவர்களின் “புதிய இந்தியா”, “இந்து ராஷ்ட்ரத்தின்” அடிப்படையில் அமைந்தது. விடுதலைப் போராட்டத்தில் எவ்விதமான பங்கும் அளிக்காத பேர்வழிகளால் இது வடிவமைக்கப்பட்டு வருகிறது. இவர்களின் இந்தப் புதிய இந்தியாவிற்கும் மதச்சார்பாற்ற ஏகாதிபத்திய எதிர்ப்புக்கும் எவ்விதத்திலும் ஒட்டுதலோ உறவோ கிடையாது.
இவர்களின் புதிய இந்தியாவுக்கும், பூர்ஷ்வா லிபரல் “இந்தியாவின் சிந்தனை”க்கும் கூட (bourgeois liberal to “Idea of India”) எவ்விதமான சம்பந்தமும் கிடையாது. இவர்களுடைய இந்துத்துவாவின் “புதிய இந்தியா”விற்கு மாற்று, ஒரு புதிய கச்சிதமான வடிவத்தின் மூலமாக வெளிவரும். அது மக்களின் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களால் உருவாக்கப்படும்.
இவர்களுடைய “புதிய இந்தியா”வுக்கான சவால், வர்க்க மற்றும் வெகுஜனப் போராட்டங்கள் மூலமாக ஏற்கனவே வடிவம் பெறத் துவங்கிவிட்டன. வரலாறு படைத்துவரும் ஒன்பது மாத விவசாயிகளின் போராட்டம் கார்ப்பரேட் இந்துத்துவா ஆட்சியின் அடிப்படைக்கு சவாலாக மாறி இருக்கிறது. முன்னதாக, குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நடைபெற்ற வெகுஜன கிளர்ச்சி நடவடிக்கைகள் நாட்டின் பெரும்பான்மைவாதத்தை அனுமதித்திட மாட்டோம் என்று அறிவார்ந்த குடிமக்கள் வெளிப்படுத்தியதைக் காட்டியது. தனியார்மயத்திற்கு எதிரான தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்கள், விசாகப்பட்டினம் உருக்காலைத் தனியார் மயத்திற்கு எதிராக மிகப்பெரிய அளவில் நடைபெற்று வரும் போராட்டம் போன்றவை புதிய முத்திரைகளைப் பதித்துக் கொண்டிருக்கின்றன. அதேபோன்று பாதுகாப்பு உற்பத்தித் தொழிலாளர்கள் போராட்டங்கள், இன்சூரன்ஸ் துறை ஊழியர்கள் போராட்டங்கள் மற்றும் இதர துறைகளில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக ஒரு விரிவான அளவில் போராட்டங்கள் வளர்ந்துவருவதற்கான பங்களிப்புகளைக் காட்டுகின்றன.
இத்தகைய எதிர்ப்பு மற்றும் வெகுஜன இயக்கங்களினூடே ஒரு மாற்று உருவாகும். அது ஓர் இடது மற்றும் ஜனநாயகத் திட்டத்தின் அடிப்படையில் ஒரு மாற்றாக அமைந்திட வேண்டும். இத்தகையதொரு திட்டம் நம் விடுதலைப் போராட்டத்தின் இலக்குகளை, அதாவது மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலையை முன்னெடுத்துச் செல்லும். இப்போது நம்முன் உள்ள கடமை என்னவென்றால், உழைக்கும் மக்களில் விரிவான பகுதியினரை அமைப்புரீதியாக அணி திரட்டிட வேண்டும், அத்தகையதொரு மாற்றைச் சுற்றி அனைத்து ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளையும் அணிதிரட்டிட வேண்டும்.
பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (ஆகஸ்ட் 4, 2021)
(தமிழில்: ச.வீரமணி)





