இசை வாழ்க்கை 79: காற்றில் மிதக்கும் இசை போலே … – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 79: காற்றில் மிதக்கும் இசை போலே … – எஸ் வி வேணுகோபாலன்




நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் வந்துசென்ற பின்னும் வீடெங்கும் அவர்கள் பேச்சும் சிரிப்பும் சூழ்ந்திருக்கும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு எழுதியிருந்த சில பாடல்கள் இன்னும் நெஞ்சில் சுழன்ற வண்ணம் உள்ளன. அதே போலவே, எப்போதோ கேட்ட சில பாடல்களும்! அப்படியான இசைப்பாடல் ஒன்றை எதிர்பாராத நேரத்தில் யாரோ இசைத்தட்டு சுழலவிட்டுக் காந்த ஊசியைப் பொருத்த நேருமானால்…ஆஹா…

எழுபதுகளில் வானொலியில் அதிகம் ஈர்த்த பாடல்களில் ஒன்று அது. யூ டியூபில் போய்ப் பார்த்தால், 1973இல் வந்த படத்தின் பாடலை 2 லட்சம் பேர் அண்மைக் காலத்தில் கேட்டிருக்கின்றனர். பாடலைக் கேட்டுவருவோரின் பதிவுகளைப் பார்த்தால் ‘இது எனது கதை, எனது பாடல்’ என்கிறார் ஒருவர். அவரைப் போலவே இன்னும் சிலர். மறக்க முடியாத தங்களது இளமைக் காலத்தின் காதல் தீயை இந்தப் பாடலை வைத்து மீண்டும் மீண்டும் பற்ற வைத்துக் கொண்டு பலரும் படும் பாடுகள் பார்க்க முடிகிறது.

சொல்லாமல் இருப்பதே காதலுக்குப் பெருமை என்று தங்களுக்குள் எழுதியெழுதி வைத்துக் கொண்டு தங்களது கண்ணீரால் தாங்களே அதை அழித்துக் கொண்டவர்கள், பாடலின் தூண்டலில் இன்னும் அணையாத நெருப்பின் கங்கு இப்போதும் ஒளிர்வதில் அதே கண்ணீரில் கன்னங்களின் பளபளப்பதைப் பார்த்துக் கொள்கின்றனர். அது மெல்லிசை மன்னரின் மாயமா, கவிஞர் வாலியின் மந்திரமா தெரியாது…

எளிய சொற்களில் எண்ணற்ற ரசிகர்களின் உள்ளத்தைச் சென்றடைய முடியும் என்பது மட்டுமல்ல, அவர்கள் மனத்தில் நினைப்பதெல்லாம் பாடலில் ஒலிப்பது தான் அந்த மாயமும் மந்திரமும். காதலைச் சொல்ல முடியாது என்பதை எத்தனையோ விதங்களில் ஒருவரால் சொல்ல முடியும் என்றால் அதைவிடவும் காதல் அவஸ்தையை வேறு எப்படி விளக்கி விட முடியும்….எத்தனையோ வார்த்தைகள் இருந்தாலும், அதைச் சொல்வதற்கு ஒரு வாய் இருந்தபோதும் சொல்லாமலே நினைப்பதும் துடிப்பதும் தவிப்பதும் தான் அந்தப் பாடல்….

பாடலைத் தானே பாடுவது என்றும், பெண் குரல் ஜானகியாக இருக்கட்டும் என்றும் எந்த முக்கிய தருணத்தில் முடிவெடுத்தாரோ எம் எஸ் வி, எத்தனை அம்சமான பாடல் வாய்த்தது ரசிகர்களுக்கு !

விஸ்வநாதன் அவர்களது மேதைமையை எண்ணியெண்ணி வியக்க வைக்கும் கம்போசிங் வரிசையில் இந்தப் பாடல் நிச்சயம் இடம் பெறும். கதைக் களத்தில் குறிப்பிட்ட காட்சிக்கான பாடல்கள் ஒரு விதம், பாத்திரங்களின் மனச் சலனங்கள் குறித்த பாடல்கள் வேறு விதம். இந்தப் பாடல் அந்த ரகம். அப்படியானால் பாடலின் உள்ளடக்கம் பேசுவதை இசையும் சேர்ந்து பேசவேண்டும். இசை எடுத்துக் கொடுக்கப் பாடல் சொல்லும் கதையை மீண்டும் வாங்கிக் கொண்டு அடுத்த செய்திக்கு, இசை, பாடலை முன்னகர்த்த வேண்டும். பாடல் வரிகளில் ஆழும் ரசிகரை அவரது மனநிலைக்குப் பக்கத்திலிருந்து அதே உணர்வுகளில் மேற்கொண்டு உலவுவதற்கு ஏற்ற இசை கொண்டு பாடல் வழங்கப் படவேண்டும்.

‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ பாடல் அதனால் தான் 50 ஆண்டுகளுக்குப் பிறகும் விரும்பிக் கேட்கும் பாடல் வரிசையில் இருக்கிறது. கவிஞர் வாலியின் எழுத்து. வேறென்ன வேண்டும்…

சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாயிருந்தும்
சொல்வதற்கு
வார்த்தையின்றித் தவிக்கிறேன்

என்ற இந்தக் கட்டமைப்பு, எந்த விதத்தில் இசைக்கப்பட்டால் நாயகனின் பரிதவிப்பை அப்படியே கடத்த முடியும் என்பதைத் தன்னியல்பாகச் சென்றடையும் இடத்தில் சிறக்கிறது இசையமைப்பாளர் பங்களிப்பு. கிடார், வயலின், புல்லாங்குழல், தாளக்கருவிகள் ….என்று இசைக்கருவிகள் தேர்வும், தேர்ச்சியான பயன்பாடும் !

பல்லவி வரிகளை அப்படியே பாடிக்கொண்டு செல்வதில்லை எம் எஸ் வி…. தொடக்கச் சிற்றிசைக்குப் பின் சட்டென்று தொடங்கும் அவரது குரலே தனித்துவமான உணர்வுகளின் வார்ப்பாக அமைந்துவிடுவது. ஒவ்வொரு வரியாக ஒவ்வோர் உணர்வாக ஒவ்வொரு தளமாக இந்தப் பாடலை எடுத்துச் செல்லும் அவரது நடை, ஒற்றைப் படகில் மிக மெதுவாக ஒற்றைத் துடுப்பு போட்டுக் கொண்டு நீர்ப்பரப்பைக் கடக்கும் ஒற்றை மனிதர் போன்ற பயணமாக இருக்கும். வாயிருந்தும் …. சொல்வதற்கு …. என்ற அடுத்தடுத்த துடுப்புகளை அடுத்து, வார்த்தையின்றி என்ற இடத்தில் சற்று ஆழமாக நீரையள்ளி எடுத்துக் கொள்கிறது அவரது துடுப்பு ..அத்தனை சுயகழிவிரக்கம் அந்தச் சொல்லுக்குக் கூட்டுகிறார் எம் எஸ் வி. ‘தவிக்கிறேன்’ என்பது அடுத்த துடுப்பு. அந்தத் தனிமை போக்கிக் கொள்ளச் சுருக்கமான ஹம்மிங் சேர்த்து ஆற்றுப் படுத்திக் கொள்ளும் உணர்வு மேலிடச் செய்கிறார்.

முதல் சரணத்தை நோக்கிய இசை இந்த ஆற்றுப் பயணத்தின் நீரலைகளின் நெளிவே தான்….அழுத்தமான மென்குரலில் வயலின் உள்ளோடிக் கொண்டிருக்க, புல்லாங்குழல் தாபத்தைப் பரவவிடுகிறது. அருகே தட்டுப்படுகிறது இப்போது மற்றுமொரு ஒற்றைப் படகு, சற்று வேகமான துடுப்பு வலித்து வருபவளின் குரலைப் பளீர் என்று எடுக்கிறார் எஸ் ஜானகி. ‘காற்றில் மிதக்கும் புகை போலே …’ என்று தொடங்கும் வரிகளில், நினைவுகளே… என்பது காற்றில் அலைமோதி எதிரொலிக்கிறது. தபேலா அம்சமாக வாங்கி நிறைத்துத் திருப்பிக் கொடுத்து நடத்துகிறது பாடல் வரிகளை. ‘மன வீடு அவன் தனி வீடு அதில் புகுந்தானோ என்றும் நிறைந்தானோ..’ என்று வேகத் துடுப்புகளில் கேள்வியெழுப்பி வேறு யாரும் வேறு பதிலேதும் தந்து விட இடமின்றி, ‘அதில் புகுந்தானே என்றும் நிறைந்தானே’ என்று பதிலும் சொல்லப்பட்டு விடுகிறது. சரணங்கள் நான்கிலும் இதே பாணியைப் பயன்படுத்தி இருப்பார்கள். சரணத்தின் முடிவில் அதே ஹம்மிங் எடுக்கும் ஜானகி, சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற பல்லவியை மிகவும் ஒயிலாக எடுக்கிறார்.

இரண்டாம் சரணத்தை நோக்கிய பயணத்தில் அந்த ஒற்றை வயலின் இசை…ஆஹா…ஆஹா… அதன் தாக்கத்தில் எம் எஸ் வி எடுக்கும், ‘காதல் என்பது மழையானால்’ என்ற வரிகள் எழுபதுகளில் மிகவும் கொண்டாடிக் கேட்டு ரசிகர்கள் பாடிக்கொண்டே இருந்ததுண்டு. ‘காதல் என்பது மழையானால் அவள் கண்கள் தானே கார்மேகம்’ என்பதை வாலியை விடவும் ரசித்து லயித்துக் குரலில் கொண்டுவந்திருப்பார் மெல்லிசை மன்னர். ‘நீராட்ட நான் பாராட்ட…’ என்ற இடத்தில் அந்த சந்தம் என்னமாகக் கொஞ்சல் நடை பயில்கிறது! ‘அவள் வருவாளே சுகம் தருவாளே ‘ என்ற ஆசுவாசம் சரணத்தை நேர்த்தியாக்குகிறது.

‘ஆசை பொங்குது பால் போலே’ என்ற மூன்றாவது சரணத்திலும் ஜானகியின் குரலினிமை சிறப்பானது. ‘அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே’ வரிகளில் எத்தனை காதலும் சேர்ந்து பாலோடு பொங்குகிறது! ‘கொதித்த மனம்…கொஞ்சம் குளிரும் விதம்’ என்றவரிகளில் இயைபு அபாரம், வாலியின் முத்திரை அது. ‘அவன் அணைப்பானோ இல்லை மாட்டானோ’ என்ற கேள்வி காதலிசைப் பாடல்களில் பெண் மனத்தின் உள்ளுணர்வை வெளிப்படுத்தும் மிகச் சில வரிகளில் ஒன்று.

நான்காம் சரணத்தை நோக்கிய வேகத்தில் விசில் இசையைக் கொண்டுவந்திருப்பது எழுப்பப்படும் உணர்வுகளின் உல்லாசத்தை பிரதிபலிக்கிறது. ஒற்றை வயலின் அதைப் பற்றிக் கொள்கிறது. அதன் தொடர்ச்சியில், ‘நேரில் நின்றாள் ஓவியமாய்’ என்ற கடைசி சரணத்தில் எம் எஸ் வி இன்னும் நெருக்கத்திற்கு எடுத்துச் செல்கிறார் தாபத்தை! இரண்டாம் முறை பாடுகையில், ‘ஓவியமாய்’ என்ற சொல்லை இன்னும் அழகாகத் தீட்டுவார்! ‘நான் பாதி அவள் தான் பாதி’ என்பதை அவர் இசைக்கும் விதம் சுவாரசியமானது. சரணத்தின் நிறைவில் ‘நெஞ்சில் கலந்தாளே கண்ணில் மலர்ந்தாளே’ என்ற உளநிறைவு அபாரமாக இருக்கும்.

பாடலின் நிறைவில் படகுகள் இரண்டும் அருகருகே சம வேகத்தில் துடுப்பு போட்டபடி நகர்ந்து கண்ணிலிருந்து மறையுமிடத்தில் நிறைவு பெறுகிறது பாடல். ஆனாலும் நீரலைகளின் மீது தெறிக்கும் ஒளியும், அவற்றின் மென் அதிர்வுகளும் ரசிகர் நெஞ்சில் தெறித்துக் கொண்டே இருக்கின்றன. அதனால் தான் கடந்த ஒருவாரமாக உள்ளே ஓடிக் கொண்டே இருக்கிறது, சுழன்ற வண்ணம் இம்சை செய்து கொண்டிருக்கிறது…அப்படி என்னதான் இருக்கிறது என்று கேட்டுச் சொல்லுங்களேன் என்று அதைத் தெரிந்து கொண்டே வாட்ஸ் அப்பில் கேட்கத் தோன்றுகிறது ஒற்றியூர் சந்திரசேகரன் அவர்களுக்கு!

கதைகளையும் சேர்த்து அசைபோட வைக்கின்றன பாடல்கள். பாடலை அசைபோடுகின்றன மனங்கள். காலத்தின் முன்னும் பின்னும் மனத்தை வழி நடத்துவதில் இசை ஓர் உளவியல் பயிற்சியாளர் போல் இயங்குகிறது. ஒரு மனத்திலிருந்து எண்ணற்ற உள்ளங்களையும் ஒருமிக்கிறது. அந்தப் பரவசத்தை வாரண்டி கியாரண்டி குறிப்பிடத் தேவையே இல்லாத அளவு உறுதிப்படுத்துகிறது. பொய்யாமொழி தான் இசையும்.

(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

இசை வாழ்க்கை 78: பாட்டு வெள்ளம் நிக்காது  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 78: பாட்டு வெள்ளம் நிக்காது – எஸ் வி வேணுகோபாலன்




திருமண வரவேற்பில் அருமையான இசைக் கச்சேரியில் ஒற்றைப் பாடல் கேட்டு விடைபெற நேர்வது உள்ளபடியே குற்ற உணர்ச்சியையும், ஏமாற்றத்தையும் பெருக்குவதாகும். அதுவும் பாடகர்கள் நாம் அறிந்தவர்களாக இருந்தால், அவர்களையும் மிகப் பெரிய இடைவெளிக்குப் பிறகு சந்திக்கும் சூழலாக இருந்தால்….

இ மு வெற்றிவளவன் எண்பதுகளில் அருகே சென்று பேச வாய்த்த அருமையான கவிஞர், பாடலாசிரியர். ‘ஈர நாற்றுக் கட்டு சுமந்தேன் உச்சி எரிய….நான் உள்ளதெல்லாம் சொல்லியறியேன் செல்லக் கிளியே’ என்ற பாடலை எழுதி இருக்கிறேன், எப்படி இருக்கிறது என்று அவரே பாடிக் கேட்ட நினைவு மங்கலாக இருக்கிறது. பின்னொரு சமயம் வேறொரு பாடல்….செருப்பு தைக்கும் தொழிலாளியின் குரலை வேறு யார் பாடல் ஆக்கி இருக்கிறார்….

மகத்தான தோழர் விபி சிந்தன் மே 1987ல் மறைந்தபோது, பெரம்பூர் குக்ஸ் சாலை ஏ பி நினைவகத்தில் அவருடல் தொழிலாளி வர்க்கத்தின் இறுதி மரியாதைக்கு வைக்கப்பட்டிருக்கையில், ஒலிபெருக்கியில் மிக மிக உருக்கமாக ஒரு குரல் கேட்டுக் கொண்டிருந்தது, பாடகர் யாராக இருக்கும் என்பது முதல் சொல்லிலேயே பிடிபட்டது. அந்தப் பாடலை எழுதியதும் வெற்றி வளவன் தான்.

மலையாள தேசம் தந்த மாணிக்கமே – தமிழ்
மண்ணோடு கலந்தவரே மார்க்சியமே
போராடி வாழ்ந்தவரே சரித்திரமே – உங்கள்
போராட்டம் என்றும் எங்கள் படிப்பினையே

அன்று மாலை இரங்கல் கூட்டம் ஓட்டேரி இடுகாட்டில் நடக்கையில், தோழர் விபிசி மறைவின் அதிர்ச்சியில் பேச இயலாது உடைந்துபோய்க் கதறியவர் விடுதலை போராட்ட வீரர் தோழர் பி இராமமூர்த்தி. அவரையும் டிசம்பர் 15, 1987 அன்று பறிகொடுத்தோம். அன்று காலை சென்னை வடபழனியில் தொடங்க இருந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மூன்றாவது அகில இந்திய மாநாட்டுக்கு வரவேற்புக்குழு தலைவரே அவர் தான். அவரது உடலும் அதே குக்ஸ் சாலை அலுவலகத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக்கையில், சிந்தன் அவர்களுக்கு எழுதிய பாடலில் சில திருத்தங்களோடு வெற்றி வளவன் எழுதிய பாடலையும் அதே பாடகர் மிகவும் நெகிழ்ச்சியுற வைக்கும் குரலில் இசைத்தார்.

இதய வானிலே உதய தீபமாய்
இடது சாரிகள் வளரும் நேரத்தில்

அகில இந்திய வாலிபர் சங்க மாநாட்டுக்கு நீ
தலைமை ஏற்றும் வரவில்லையே, ஏன் தோழனே…

என்ற இடத்தில் அங்கே கதறி அழாதார் கிடையாது. அடுத்த வரிகளில், ‘தஞ்சைத் தரணி தந்த மாணிக்கமே, தமிழ் மண்ணோடு கலந்தவரே மார்க்சியமே’ என்று கொணர்ந்திருந்தார் வளவன். அந்தப் பாடலை இசைத்தவரைத் தான் திருமண வரவேற்பில் பார்த்தது.

மக்கள் பிரச்சனைகள், சமூக பிரச்சனைகள் குறித்த பாடல்களை பொதுவுடைமை இயக்கம் பதிவு செய்து ஒலிப்பேழைகளில் கொண்டுவந்தபோது, ‘காலத்துக்கும் உழைச்சு உழைச்சுக் கண்டது என்ன மாமா, காளையாட்டம் நேத்து இருந்த உடம்பு போச்சுதே வீணா’ என்ற பல்லவியை அபாரமாக வாணி ஜெயராம் தொடங்க, அவரோடு இணைந்து பாடி இருந்த உதய பாண்டியன் தான் அவர்.

அண்மையில் ஒரு திருமண வரவேற்பில் மணமக்களை வாழ்த்த மேடை நோக்கிப் போய்க் கொண்டிருக்கையில், அத்தனை அசத்தலாக பாடிக் கொண்டிருந்தார் ஒருவர். முதல் பார்வையிலேயே, அந்தக் குரலைக் கேட்டதுமே பிடிபட்டுவிட்டது. மின்னலும் இடியும் ஒரு சேர நிகழ்வது போல் உணர்ந்த இன்ப அதிர்ச்சி நேரமது.

பாடல் முடியக் காத்திருந்து, ‘தோழர் உதயபாண்டியன் தானே…’ என்றதும், அவரும் சட்டென்று அன்போடு இறங்கி வந்து, ‘முப்பது வருஷம் ஆகி இருக்குமா, பார்த்து!” என்று கேட்டார். ‘அருமையாகப் பாடினீர்கள் தோழா….அவங்களுக்கும் சொல்லுங்க” என்றதும், ‘பர்வீன்’ என்று அழைத்து உடன் பாடிய பாடகிக்கும் பாராட்டைச் சேர்த்தார். பாடலின் நுட்பமான இடங்களை அத்தனை அம்சமாகக் கொண்டு வந்திருந்தார் உதயபாண்டியன்.

கோவில்பட்டியின் முற்போக்கு வாசகர் பள்ளியைச் சார்ந்த பாரத ஸ்டேட் வங்கி தோழர் பால்ராஜ் அவர்களுடைய மகள் திருமண வரவேற்பில், வங்கி ஊழியர் கலைக்குழு (பீட்) ஸ்ரீதர் அவர்களை சந்தித்ததும் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சி, தோழர் உதய பாண்டியனைப் பார்த்ததும் பன்மடங்கு பெருகியது. இசைக் குழுவின் தபேலா கலைஞரின் வாசிப்பும் அபாரம். அவர் வாசிப்பின்போதே என் கொண்டாட்ட உணர்வைக் கண்களாலேயே கடத்த, அவரும் வாசித்தவாறு அதை ஏற்றுக் கொண்டு விடுத்த புன்னகை உருவிலான பதிலை எழுத்தில் வடிக்க முடியாது.
முதல் மரியாதை படம் மலேசியா வாசுதேவன், எஸ் ஜானகி இருவரின் மிகச் சிறந்த பாடல்களை இளையராஜா இசையில் வழங்க வைத்தது. அவற்றில் அம்சமான ஒன்று தான், அன்று உதயபாண்டியன் பாடியது.

காதல் இருவர் கருத்து ஒருமித்து வாழ்தல் மட்டுமல்ல, ஆதரவு பட்டதே இன்பம் என்று எழுதிச் சென்றாள் அவ்வை. அந்த ஆதரவு படும் பாடு தான் சமூகத்தின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று. இந்தப் பாடலின் கதைக் களம், சாதீய பெருமிதத்தைக் கீழிறக்கி அந்தக் கம்பத்தில் காதலின் கொடியேற்றுவதைச் சொல்கிறது. பிரச்சனைகளின் அடிவேரில் சாதி இருக்கிறது, ஆனால், மானுட வரலாற்றின் வேரில் தூய அன்பு தான் இருக்கிறது. அந்த வெட்டி வேர் வாசம் தான் பாடலின் பல்லவி.

பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு, மண்ணின் கவிஞர் என்ற அடைமொழியை பாடல்களுக்கான ஒலிப்பேழை அறிமுகத்தில் சொல்லியிருப்பார் இயக்குநர் பாரதிராஜா. ராக ராஜாங்கமே நடத்தி இருக்கிறார் என்பது ராஜாவுக்கு அவர் கொடுத்த பாராட்டு. நடிகர் திலகத்தின் திரை வாழ்க்கையில் முக்கியமாகப் பேசப் படவேண்டிய ஒன்றாக அமைந்த படத்தில் ராதாவுக்கு வாய்த்த இடமும் சிறப்பானது. இந்தப் பாடலில் தோன்றும் பாத்திரங்கள் – பாடல் முடிவில் உருளும் பாத்திரங்கள் வரை அத்தனை செம்மையான நடிப்பை வழங்கி இருப்பார்கள்.

எந்த இசை முன் பொழிவும் இன்றி, திடீர் என்று பெய்யத் தொடங்கும் மழை போல், சட்டென்று பல்லவியை எடுக்கிறார் எஸ் ஜானகி, ‘வெட்டி வேரு வாசம், வெடலப் புள்ள நேசம்’ என்று! அதிலிருந்து, ‘பூவுக்கு வாசம் உண்டு, பூமிக்கும் வாசம் உண்டு….’ என்று அவர் கதாபாத்திரத்தின் பாச உணர்ச்சியை நீட்டிக்கும் இடத்தில், ‘வேருக்கு வாசம் வந்ததுண்டோ…’ என்று பற்றிக் கொள்ளும் மலேசியா வாசுதேவன், ‘மா….னே’ என்று அந்த உணர்வை அப்படியே திரும்பக் கையளித்து, பல்லவியைச் சென்றடைய, லயிக்க வைத்துவிடுகிறது தாளக்கட்டு.

முதல் சரணத்தை நோக்கிய உணர்ச்சி வெளிப்பாட்டில் வயலின்களின் ஆரத் தழுவலும், புல்லாங்குழலும் மட்டிலுமே அல்ல, ஷெனாய் உள்பட கொண்டு வந்திருப்பாரோ ராஜா என்ற தேடலில், கிடாரின் முத்தத் துளிகளும், அபாரமான ஷெனாய் வாசிப்பும், நிழலோட்டமாக கிளாரினெட் இசையும், துந்தனா கருவியும் இருப்பது நோட்ஸ் குறிப்பேட்டில் காணக் கிடைத்து குதூகலிக்க வைத்தது. கதைக் காட்சிக்கான பாடலை அல்லது அதற்கான இசையை மட்டுமல்ல, அதற்குமேல் சென்று அந்த நேரத்து உணர்வுகளையும் தேர்ச்சியாக ரசிகர்களைச் சென்றடைய வைக்கும் ராஜாவின் ஞானம் அபாரமானது. புல்லாங்குழல் சரணங்களுக்கு இடையே வரும் போதும், சரணங்களில் வரிகளுக்கு இடையே நுழைந்து வெளிப்படும்போதும் காதல் தாபத்தையும், மோகத்தையும் பிழிந்து கொடுக்கிறது எனில், சமூகத்தின் எதிர்வினைகளை மற்ற கருவிகளின் வழி கேட்க முடியும் பாடல் நெடுக.

எதிர்ப்புகளின் இடையே விளையும் காதல், காதும் காதும் வைத்ததுபோல் பரஸ்பரம் இரகசியமாகத் தானே பரவும், மலேசியா வாசுதேவன் குரலில் அந்த வேதியல் பொருள் இழைத்துக் குழைத்து வழங்கப்பட்டிருக்கும்.

முதல் சரணத்தின், ‘பச்சைக் கிளியோ….’ என்ற தொடக்கத்தில் சிறகு சிலிர்த்துக் கொண்டு காதல் உறவைப் பறந்து போய்த் தேடும் கிளி, ‘இச்சைக் கிளியோ….’ என்ற நீட்சியில் தக்க இடத்தை வந்தடைந்து கொஞ்சத் தொடங்கி விடுகிறது. பச்சை மனசில் காதல் நெருப்பு பத்திக்கிருச்சு என்பதை ஜானகி என்னமாகப் பற்ற வைக்கிறார் ! தங்கள் காதலின் கம்பீரத்தில் சமூகத்தைப் பார்த்து இருவரும், ‘கையைக் கட்டி நிக்கச் சொன்னா, காட்டு வெள்ளம் நிக்காது, காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது’ என்று இசைப்பது ஒரு கோட்பாட்டின் பிரகடனம் போல் ஒலிக்கிறது. அடுத்த வரிகள் அவற்றை மேலும் அழுத்தமாகப் பதிக்கின்றன. சரணத்தின் நிறைவில் ஒரு சொடுக்கு போட்டு முடித்து, பல்லவியில் மீண்டும் சுவாரசியமாக வந்து இணையும் தபேலா தாளத்தின் கொண்டாட்டம் இனிமையானது.

இரண்டாம் சரணத்தை நோக்கிய நடையில் ராஜா சூழலின் உணர்ச்சிகளை வழங்கும் கருவிகளாகத் தேர்வு செய்து (இசைக்குறிப்புகள் பார்த்தால் சந்தூர், கலிம்பா என்று விரிகிறது….இத்தனை நுட்பங்கள் எல்லாம் கற்காமல் போனோமே என்று மீண்டும் தோன்றியது) பயன்படுத்தி இருப்பது பாடலோடு மேலும் நெருக்கத்தைக் கூட்டுகிறது.

இரண்டாம் சரணத்தை ஜானகி முன் மொழிய, வாசுதேவன் வழி மொழிகிறார். ‘உன்னக் கண்டு நான் சொக்கி நிக்கிறேன்’ என்று ஜானகி இசைப்பதில், அந்த ‘நான்’ எத்தனை சுழற்சிக்குள்ளாகிச் சொக்க வைக்கிறது. ‘கண்ணுக்குள்ள நான் கண்ணி வைக்கிறேன்’ என்னுமிடத்தில் அந்த மயக்கம் குரலில் மேவிவிடுகிறது. ‘சொல்லாமத் தான் தத்தளிக்கிறேன்…தாளாமத் தான் தள்ளி நிக்கிறேன்’ என்ற வரிகளில் குரலில் தவிப்பின் மை தொட்டு எழுதுகிறார் வாசுதேவன். அடுத்த இரு வரிகள் திரைக்கதையின் உட்கருவைப் பேசுகின்றன. ‘குருவி கட்டும் கூண்டுக்குள்ள குண்டு வைக்கக் கூடாது’ என்பது மிக முக்கியமான வரி.

‘புத்தி கெட்ட தேசம் பொடி வச்சுப் பேசும்’ என்பதை ஜானகி எத்தனை அவஸ்தை பொங்கும் பதைபதைப்போடு வெளிப்படுத்துகிறார். ‘சாதி மத பேதமெல்லாம் ..’ என்று ஓங்கரிக்கும் மலேசியாவின் குரல், ‘முன்னவங்க செஞ்ச மோசம்’ என்று தணிவான குரலுக்கு இறங்கி அநீதியைச் சாடும் இடத்தில், ஆணவக் கொலைக் களங்களில் உண்மையை உரத்துப் பேச முடியாத நெருக்கடியை பிரதிபலிக்கிறது.

பாடல் வெளிவந்த காலத்தைவிடவும் இப்போது ஆகப் பொருத்தமானது என்று தோன்றும் இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும், இசை இந்த உலகத்தின் வெறுப்பு உணர்ச்சிகளைக் களை பிடுங்கிப் போட்டுவிடக் கூடாதா, சமூகத்தின் இதய சாளரத்தை மேலும் கூடுதலாகத் திறந்து கொடுத்துக் காற்று தவழ விடாதா என்ற உணர்வு மேலிடுகிறது.

உன்னதமான உணர்வுகளை இன்பியலாகவோ, துன்பியலாகவோ கிளர்த்தி விடுகிறது இசை. நேருக்கு நேர் நின்று பேசுகையில் சொல்ல முடியாத சொற்களை, ஒப்புக் கொள்ள முடியாத சங்கதிகளை இரவின் தனிமையில் கேட்கும் இசை உட்புகுந்து கண்ணீராக மொழிமாற்றம் செய்து வரவழைத்துவிடுகிறது. சமூகத்தின் மனசாட்சியை இசை நிச்சயம் அசைத்துக் கொண்டே தான் இருக்கிறது.

(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

நூல் வெளியீடு : மகாத்மா மண்ணில் மதவெறி – ஜி‌.ராமகிருஷ்ணன்

நூல் வெளியீடு : மகாத்மா மண்ணில் மதவெறி – ஜி‌.ராமகிருஷ்ணன்





மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி‌. ராமகிருஷ்ணன் எழுதி நக்கீரன் பதிப்பகம் பதிப்பித்துள்ள ‘மகாத்மா மண்ணில் மதவெறி‘ நூல் வெளியீட்டு விழா வெள்ளியன்று (ஜூலை 1) தி.நகரில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நூலை வெளியிட தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பெற்றுக் கொண்டார். உடன் ஜி.ராமகிருஷ்ணன், நக்கீரன் கோபால், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், வாலிபர் சங்க நிர்வாகிகள் எம்.ஆர்.சுரேஷ், ஜானகி ஆகியோர் உடன் உள்ளனர்.

நூல் : மகாத்மா மண்ணில் மதவெறி

ஆசிரியர் : ஜி‌.ராமகிருஷ்ணன்
விலை : ரூ. 125.
வெளியீடு : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com

நன்றி : தீக்கதிர்

Music Life Series Of Cinema Music (Ithu Vasantha Kalamo En Isaiyin Kolamo) Webseries by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 59: இது வசந்த காலமோ என் இசையின் கோலமோ - எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 59: இது வசந்த காலமோ என் இசையின் கோலமோ – எஸ் வி வேணுகோபாலன்




மழை வாழ்க்கை இன்னும் தொடர்கிறது. வாழ்க்கை மழையைப் பார்த்து மலைத்து நிற்கிறது. ‘மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே, தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே’ என்று பாடியது போல், தேங்கும் மழை நீரை வாங்கும் வழியின்றித் தவிக்கிறது மாநகரத்தின் மக்கள் கூட்டம்.

இசைப்பாடல் ஒன்றோடு போதுமா, எங்கே அடுத்த பாடல் என்று மாணவி கேட்டார். இதென்னடா வம்பாய்ப் போச்சு என்று உடனே அடுத்த பாடல் ஒன்று புனைந்து அவருக்கு அனுப்பி வைத்தேன்.

மழையோ என்று எட்டிப் பார்த்தேன்
மழை தான் மழை தான் மழையே தான்
பொழியாதென்று எண்ணி இருந்தேன்
மழை தான் மழை தான் மழையே தான்

உறக்கம் கலைந்து காலடி கேட்டு
உள்ளம் சிலிர்க்கக் கதவு திறந்தேன்
அவள் தான் அவள் தான் அவளே தான்
மழையோ என்று எட்டிப் பார்த்தேன்…….

இது தான் பல்லவி….
இப்போது எட்டிப் பார்த்தாலும், குட்டிக் கரணம் அடித்தாலும், வீடு திரும்ப முடியாத படி அடித்துக் கொண்டிருக்கிறது விட்டு விட்டு மழை. பள்ளிக்கூட நாட்களில் ஆசிரியர் அல்லது ஆசிரியர்களில் சிலர் அடியடி என்று அடித்துவிட்டுத் தனது இருக்கை நோக்கிச் சென்று கொண்டிருப்பார்கள் (என்று நினைத்துக் கொண்டிருக்கையில், திடீர் என்று திரும்பி) அதே மாணவரைப் போய் இன்னும் கடுமையாக அடிப்பதுபோல் அடித்து நிமிர்த்துகிறது மழை.

வேடிக்கை என்னவென்றால், மழைக்காகப் புதிய நாள்காட்டி தயார் செய்து அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். மிதமான, நடுத்தரமான, கனமான, அதி கனமான நாட்களாகவே இருக்கும் போலிருக்கிறது வருகிற நாட்கள்.

முதல் மழைக்கும் இரண்டாம் மழைக்கும் இடைப்பட்ட மழை நாள் ஒன்றில், புதிய ஆசிரியன் வாசகர்கள் குழுவில், சகாயராஜா அவர்கள் பகிர்ந்திருந்த காணொளிப் பதிவு, ஆஹா…ஆஹா…. உள்ளபடியே, அக்டோபர் 2020ல் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் இயக்கத் தோழர் ரமணி, முக நூல் இணைப்போடு அனுப்பிய, இதே காணொளிப் பதிவை அப்போது பார்க்கத் தவறி இருக்கிறேன், இந்தப் பாவங்களுக்கு எல்லாம் என்ன தண்டனை!.

1970களின் பிற்பகுதியில் மிகவும் கொண்டாடப்பட்ட இந்திப் பாடல்களில், மகத்தான இசைப் பாடகி லதா மங்கேஷ்கர் அவர்களது அசாத்திய குரலினிமையில் உரக்க ஒலித்துக் கொண்டே இருந்த திரைப்பாடல் அது. லக்ஷ்மிகாந்த் பியாரிலால் இசையில் கோரஸ் முழங்க, சத்யம் சிவம் சுந்தரம் படத்தின் அந்தப் பாடல், அடுத்தடுத்த தலைமுறை இளம் பாடகர்களும் முயற்சி செய்து கொண்டே இருக்கும் பாடல்களில் ஒன்று.

https://www.youtube.com/watch?v=FLzhXNayLJo

ஆர்யானந்தா, கேரளத்துச் சிறுமி. இந்தி அத்தனை சுத்தமாகப் பேச வராதாம், ஆனால், மிகப் பெரிய சபையில், எண்பது வயதான பியாரிலால் முன்னிலையில் (லட்சுமிகாந்த் இப்போது இல்லை), லதாவின் நுட்பமான சங்கதிகள், நுணுக்கமான இழைத்தலும், குழைத்தலும் பொதிந்த பதங்கள் அப்படியே அபார ஆற்றலோடு, தன்னடக்கமும் தன்னம்பிக்கையும் மிளிர இந்தச் சிறுமி பாடப்பாட (குமார் சாணு, உதித் நாராயணன், என்னால் முகங்கள் வைத்து அறிய மாட்டாத வேறு பிரபலங்கள்) பாடலை இசையமைத்த பெரியவரின் மின்னல் தெறிக்கும் கண்களால் கொண்டாட்ட வரவேற்பு கிடைக்கும் காட்சி சிலிர்க்க வைத்தது.

ஏற்கெனவே பலமுறை கேட்டு ரசித்த பாடலை அதே பாவங்களோடு (க்யா ஃ பீல் ஹை என்று இடையே இடையே ஒலிக்கும் குரல்கள் கேளுங்கள்) உணர்ச்சிகரமாக ஓர் இளம் பாடகர் இசைக்கும்போது, ரசிகர்கள் உள்ளம் ஆரவாரிக்கிறது. ஓர் இசைப்பொழிவை அதன் தரத்திற்கேற்ற பாராட்டு எதிர்கொள்வதும் மழைப்பொழிவு அன்றி வேறென்ன… கனமழை பார்த்தாயிற்று அல்லவா, மென் தென்றல் பாட்டு ஒன்று காத்திருக்கிறது அடுத்தது. அது வந்து சேர்ந்த கதை சுவாரசியமானது.

புலவர் கீரன் பேசப் பேச அப்படியே மலைத்துப் போய்ப் பார்த்த நாட்கள் மறக்காது. கல்லூரித் தொடக்க காலம் அது. ஒரு கூட்டத்தில் சொன்னார், ‘எனக்கு கந்த புராணம் தலைகீழ்ப் பாடம். கம்பராமாயணம் அத்தனை முறை படித்திருக்கிறேன். இதை கர்வமாகச் சொல்லவில்லை, ஒரு நிகழ்ச்சியில் பள்ளி மாணவி ஒரு செய்யுள் இசைக்கிறாள், அதன் சொற்களைக் கேட்டு, கம்பன் எழுதியது தான், இந்த காண்டத்தில் இந்த இடத்தில் ஒருவேளை அது வந்திருக்கும் என்று உத்தேசமாகத் தான் நினைக்க முடிந்ததே தவிர பளிச்சென்று நினைவுக்கு வரவில்லை. அப்போதெல்லாம் செருக்கு கொஞ்சம் அடங்கும்’.

எனக்கு கர்வம் வருகிற அளவுக்கு இசைப்பாடல்கள் தெரிந்திருக்க எந்த நியாயமும் இல்லை. ஆனாலும், தெரிந்த பாடல்கள் யாராவது குறிப்பிடும் போது, ஒரு மிதப்பு தோன்றி மறையும். அந்த மிதப்பு உணர்வு அவ்வப்பொழுது அடி வாங்கும், ஆனால், அது சுவாரசியமான அனுபவமாகவே இருக்கும். அந்த மிதப்பு அப்படியோர் அடி வாங்கியது, இந்த வாரம்!

பண்பலை கேட்க கார்ட்ஸ் இல்லை என்று அலைபேசியில் யூ டியூப் தொட்டெடுத்து, காலைப் பொழுதுக்கான பாடல்கள் என்ற வரிசையில் பாடல்கள் ஒலிக்கக் கேட்டபடி இருந்த என் வாழ்க்கை இணையர் தோழர் ராஜி, சமையலறை வேலையில் இணைந்த என்னிடம், ப்பா…இந்தப் பாட்டு தெரியுமா, உங்களுக்கு…அய்யோ கேளுங்களேன்” என்றார்.

அடடா….எஸ் ஜானகியின் அபாரமான பாடல்களில் ஒன்றான அதைக் கேட்ட நினைவே இல்லை. சங்கர் கணேஷ் இசையில், புலவர் புலமைப்பித்தன் அவர்களது அருமையான இசைப்பாடல் அது. எப்படி நழுவ விட்டேன்!

காலையில் மட்டுமல்ல எப்போது கேட்டாலும், அதிகாலைப் பொழுதில் கேட்போரைக் கொண்டு குடிவைக்கும் குரலில் அப்படி பாடி இருக்கிறார் ஜானகி. பறவைகளின் உறக்க முறிவில் பிறக்கும் நேயமிக்க கீச் கீச், குக்கூ நம்மைப் போர்வையை உதறிப் போட்டுப் பார்க்க தேவைப்படுகின்றன. ஊடே குழலிசை கண்ணைத் திறந்து தேட வைக்கின்றது. அப்போது யாரோ நம்மைப் படுக்கையிலிருந்து எழுப்ப, காதருகே வந்து சிலிர்க்கவைக்கும் இரகசிய குரலில் சொல்கிறார்கள்: காலைப் பொழுது….என்று. என்னவாம் காலைப் பொழுதுக்கு என்று நாம் கேட்கிறோம் என்றால், விடிந்தது என்று பதில் வருகிறது, அதற்கு என்ன, இன்று மட்டும் எப்படி விடிந்ததாம் என்று கேட்போம் என்றால், என் நெஞ்சத்தைப் போலே என்று பளீர் என்று பதில் வருகிறது. பார்ரா ….

‘காலைப் பொழுது விடிந்தது என் நெஞ்சத்தைப் போலே …..’ என்ன ஒரு பல்லவியின் தொடக்க வரி. அப்புறம்? ‘சோலை மலரும் மலர்ந்தது…’.அது எப்படியாம்? என் கண்களைப் போலே’ ! அப்படி என்றால் இது என்ன காலம், ‘அது வசந்த காலமோ, என் இளமைக் கோலமோ’ என்கிறாள் அந்த இளம் பெண்.

புலமைப் பித்தன் காதல் பாடல்களை இயற்கையோடு இயைந்து எழுதுவதில் எத்தனை தேர்ச்சி பெற்றவர் என்பதன் சாட்சியமாக அமைந்த பாடலின் பல்லவியில் இருந்து காலைப் பூக்களில் வந்து அமரும் தேனீ போல் சுறுசுறுப்பாகவும், வண்ணத்துப் பூச்சி போல் நிறங்களின் கலவையாகவும், வண்டாக ரீங்கரிக்கவும் செய்கிறது ஜானகியின் குரல்.

அந்த ‘காலைப் பொழுதை’ அவர் இஷ்டம் போல் விரிவாக்கவும், மடித்து வைத்துக் கொள்ளவும், சட்டென்று சிமிட்டிப் பார்க்கவுமாக பாடல் நெடுக விதவிதமாக இசைப்பதைக் கேட்கமுடியும். அதே போலவே,என் நெஞ்சத்தைப் போலே வரும், போலே அவருக்கு ஒரு ஸ்கிப்பிங் கயிறு போல வாகாக வளைத்துக் குதிக்க வைப்பதைத் திரும்பத்திரும்ப கேட்டுக் கொண்டே இருக்க வைக்கும்.

பாடல் முழுவதும் தாளக்கட்டு அந்தக் காலைப்பொழுதைக் களைகட்ட வைக்கிறது. தபேலா மட்டுமல்ல, சரணங்கள் இடையே மிருதங்க இசை கூட ஒலிப்பது போல் தெரிந்தது. வயலின்களும், புல்லாங்குழலும், இன்ன பிற இசைக்கருவிகளும் எஸ் ஜானகியின் குரலில் மயங்கிக் குரலோடு இயங்கி வழங்கி வரும் இசை, கேட்பவர் கால்களும் தம்மையறியாமல் தாளத்தில் இணையவைக்கும்.

‘இளைய தென்றல் மென்காற்று எனக்குச் சொல்லும் நல்வாழ்த்து’ என்ற முதல் சரணத்தின் அடுத்த அடி, ‘அருவி கூட தாளக்கோட்டில் அசைந்து செல்லாதோ’ என்று இழைக்கிறது. அத்தனை துள்ளோட்டமாக இந்த முதல் வரிகளை மெட்டமைக்கும் சங்கர் கணேஷ், அடுத்து, ‘முகத்தில் சிந்தூரம், மனசில் சந்தோஷம், சகல சௌபாக்கியம் நிலைக்கும் எந்நாளும் ‘ என்று இரட்டை இரட்டை பதங்களாக நான்கு அடிகளில் இளம்பெண்ணின் குதூகலமான உள்மனத்து உரையாடலை மேலும் மென்குரல்களில் பாடவைக்கிறார் ஜானகியை.

சரணத்திலிருந்து பல்லவிக்கு மீளும் இடத்தில் ஜானகியின் ஊஞ்சலாட்டம் தொடர்கிறது. அதில் சோலையின் சோவில் ஒரு புது சுகம் வைக்கிறார், அந்த மலரும் மலர்ந்தது என்பதில் சங்கதி சேர்த்து ஒய்யாரமாக மேலும் மலரவைக்கிறார். வசந்த காலமோ, என் இளமைக் கோலமோ என்ற வரிகளை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நகாசு வேலையோடு மின்ன வைக்கிறார்.

இரண்டாம் சரணத்தில், ‘மதுரை அன்னை மீனாட்சி மனது வைக்கும் நாளாச்சு அமிர்தயோகம் நாளை என்று எழுதி வச்சாச்சு’ என்ற வரிகளில் அப்படியோர் ஆர்ப்பரிக்கும் மனத்தை எடுத்து வைக்கிறார் ஜானகி. இதற்கு அடுத்த கட்டம் முகமும் அகமும் மேற்கொள்ள வேண்டிய அலங்காரத்தை, ‘விழியில் மையோடு வளையல் கையோடு ஒருவன் நெஞ்சோடு உறவு கொண்டாடு’ என்று படைத்திருக்கிறார் புலமைப்பித்தன். மூன்றாம் சரணம் உணர்வுகளின் அடுத்த கட்ட பொங்குதல். நினைப்பது நடப்பதும் அது இன்பமாக நிலைப்பதும்!

பாடலின் சொற்களுக்கு ஜானகி வழங்கும் உயிரோட்டமும் உணர்வூட்டமும் உணர்ச்சியாற்றலும் அபாரம். காலைப் பொழுதில் உற்சாகம் ததும்பும் உளவியலை வீச்சாகக் கொண்டு போகிறது அவரது குரலும், உடன் ஒட்டிய நிழலாகவே தொடரும் இசையும். நிறைவாகப் பல்லவியை வந்தடையும் போது, அதே ரகசியக் குரலில், ‘காலைப் பொழுது விடிந்தது என் நெஞ்சத்தைப் போலே’ என ஒயிலாக வடிப்பது அத்தனை அம்சமாக இருக்கும்.

படத்தில் இடம்பெறும் காட்சியை விடவும், ஆடியோ மட்டும் கேட்கும் யூ டியூப் பதிவே சிறப்பாக ஒலிக்கிறது, எனவே அந்த இணைப்பை இங்கே தந்திருக்கிறேன்.

ராஜராஜேஸ்வரி படத்தில் சுஜாதா இந்தப் பாடலுக்கு வடிக்கும் பாவங்கள், ஒரு சிறப்பான திறன் படைத்திருந்தும் முழுமையாகத் திரையில் அதை வெளிப்படுத்த வாய்ப்பு வாய்க்காத திரைக் கலைஞரில் ஒருவர் அவர் என்று மீண்டும் ஒரு முறை மனத்தில் தோன்றியது.

https://www.youtube.com/watch?v=tlOueWXb1KA

பாடல் காட்சியைப் பார்க்க விரும்புவோருக்கு இந்தக் காணொளிப் பதிவு பயன்படும்.

காலைப் பொழுது விடிந்தது எப்படி இருந்தாலும், இந்த நவம்பர் 19 அன்று ஒன்பது மணிக்குப் பிறகு காதில் விழுந்த செய்தி அன்றைய பொழுதை மேலும் இன்பமயமாக்கியது! ‘நினைத்த தெல்லாம் நன்றாகும், நிலைத்த இன்பம் உண்டாகும், மனசு போல வாழ்க்கை என்று உலகம் சொல்லாதோ’ என்று மூன்றாம் சரணத்தில் சொற்களை புலவர் அடுக்கி இருந்தது எத்தனை பொருத்தமானது!

எல்லா இடர்ப்பாடுகளையும், தாக்குதல்களையும், அவதூறுகளையும், அபாண்டமான குற்றச்சாட்டுகளையும், கண்ணீர்ப் புகை வீச்சு, தடியடி அராஜக நடவடிக்கைகள் எல்லாம் எதிர்கொண்டு இந்திய விவசாயிகள் தங்கள் அமைதியான, உறுதியான, விடாப்பிடியான போராட்டத்தின் வாயிலாக ஏற்படுத்திய தாக்கம், மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து என்று பிரதமரை அறிவிக்க வைத்தது.

‘இனிய சங்கீதம், இதயப் பண்பாடு, தினமும் நன்னாளே, எதிரில் கண்டேனே…..காலைப் பொழுது விடிந்தது என் நெஞ்சத்தைப் போ….லே…..’ என்று மாற்றத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை மலர ஒவ்வொரு நாளும் அந்தப் போராளிகள் பாடிக்கொண்டிருக்கின்றனர் என்றே தெரிந்தது. இந்த வார இசை வாழ்க்கை, அவர்கள் வெற்றிக்குப் படைக்கப்படுகிறது.

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

முந்தைய தொடரை வாசிக்க:

இசை வாழ்க்கை 52: இசையில் வந்தவர் யாரெனக் கேட்டேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 53: பூவிதழ் மேலொரு இசைத்துளி இருக்க – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 54: தென் பொதிகை தென்றல் வந்து ஆரீரோ பாடட்டும் ! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 55: இப்போதும் எப்போதும் முப்போதும் இசைப் பாட்டு  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 56: இசையே இசையின் ஒலியே  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 57: மெட்டுக்களோ கண்கள்  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 58: தேகம் தழுவும் இசைக் காற்று – எஸ் வி வேணுகோபாலன்