நாஞ்சில் நாடனின் “ஊருண்டு காணி இல்லேன்” – நூல் அறிமுகம்
ஜெ.பொன்னுராஜின் “குமாரபுரம் ரயில் நிலையம் சிறுகதைத் தொகுப்பு” – நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: ஒன்றில் ஆயிரம் – எஸ்.ஜெயஸ்ரீ
பெங்களூரில் 107 மொழிகள் பேசப்படுவதாக சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. பல மொழிகள் பேசப்படும் இடமாகவும் பலவிதமான பண்பாடுகளைப் பின்பற்றும் மக்கள் வசிக்கும் இடமாகவும் பெங்களூரு இருப்பதையும் பல கலைகள் செழித்தோங்கும் இடமாக கர்நாடக மாநிலம் விளங்குவதையும் அச்செய்தியின் வழியாக அறிந்துகொள்ள முடிந்தது. சமீபத்தில் படிக்க நேர்ந்த பாவண்ணனின் ‘வெங்கட் சாமிநாதன் : சில பொழுதுகள் சில நினைவுகள்’ புத்தகத்தின் வழியாக அச்செய்தியை உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது.
பாவண்ணன் தமிழ் இலக்கிய உலகில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, நாவல், கட்டுரைகள், சிறுவர் இலக்கியம் என பல தளங்களில் செயல்பட்டபடி இருப்பவர். அவருடைய ‘வெங்கட் சாமிநாதன்: சில பொழுதுகள், சில நினைவுகள்’ என்ற புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனுடன் பாவண்ணன் நேரிடையாகவும், தொலைபேசி வழியாகவும் நிகழ்த்திய உரையாடல்கள் நினைவலைகளாகத் தொகுத்து அருமையான கட்டுரைகளாக்கி, இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார். தேசிய அளவில் நன்கு அறியப்பட்ட வெங்கட் சாமிநாதன் 2015இல் இயற்கையெய்தினார். அவருடைய மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தீராநதி இதழில் ஒரு தொடரை எழுதினார். ஓராண்டு காலம் வெளிவந்த அத்தொடரில் வெங்கட் சாமிநாதனுடன் பழகிய நினைவுகளையும் உரையாடிய தருணங்களையும் நினைவுகூர்ந்து பன்னிரண்டு கட்டுரைகளை எழுதினார். பிறகு 2017இல் அக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல்வடிவம் பெற்று வெளியானது. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு வாசகனுக்கு ஒரு புதிய புத்தகத்தையோ, நாடகத்தையோ, கதை பற்றிய ஆழத்தையோ உணர்த்துவதாக வருகிறது. இலக்கியம் சார்ந்து இருவர் சந்தித்துக் கொள்ளும்போது கிளர்ந்தெழும் சுவாரசியம் புத்தகமெங்கும் வழிந்தோடுகிறது.
பாவண்ணன் இயல்பிலேயே அமைதியானவரும் பிறரோடு உரையாடுவதில் ஆர்வமும் கொண்டவர் படைப்புகளை ஆழ்ந்து வாசித்து அதன் அழகுகளையும் அழகுக்குறைபாடுகளையும் மிக அழகாக முன்வைப்பவர். படைப்புகளை நெருங்கி நின்று அணுகி அறிய முயற்சி செய்வதுபோலவே, பாவண்ணன் மனிதர்களையும் நெருங்கி நின்று புரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்.
முன்னுரையில் பாவண்ணன் முதலில் தான் வெ.சா.விடமிருந்து விலகி நின்றிருந்ததாகவும் ஏதோ ஒரு தருணத்தில் நெருங்கிச் சென்று பழகத் தொடங்கியதாகவும் குறிப்பிடுகிறார். அந்த முதல் சந்திப்பைப்பற்றிய குறிப்புகளை மிகவும் நேர்த்தியாகத் தொகுத்து முன்வைத்திருக்கிறார் பாவண்ணன். அந்தச் சந்திப்பிலேயே அவருடன் ஏன் மற்றவர்கள் சாதாரணமாக நெருங்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை உரையாடலின் ஒரு சிறு துணுக்கின் வழியாக காட்டிவிடுகிறார். தொடர்ந்து வரும் கட்டுரைகள் வழியாக வெ.சா. என்னும் ஆளுமையைப்பற்றிய சித்திரத்தை வாசகர்களின் நெஞ்சில் அழுத்தமாக தீட்டிவிடுகிறார் பாவண்ணன். புத்தகத்தை வாசித்து முடிக்கும் தருணத்தில் அவரை இழந்துவிட்ட வலியை உணரமுடிகிறது.
வெ.சா.வின் உண்மையான வருத்தங்கள், தமிழிலக்கியம் பல்வேறு வகைகளில் சிறப்பாக வளரவேண்டும் என்ற நெஞ்சார்ந்த கனவுகள், அப்படி வளரவில்லையே என்ற அவருடைய ஆதங்கங்கள் எல்லாவற்றையும் ஒருசேரப் படிக்கும்போது, தமிழிலக்கியத்தில் இவைசார்ந்த வளர்ச்சி உருவாகாததன் வருத்தம் புத்தகங்களை வாசிப்பவர்களுக்கும் ஏற்படுகிறது.

வங்காள எழுத்தாளர் ஒருவர் மகாகவி பாரதியாரை, அவரது பாஞ்சாலி சபதத்தை, அதன் நாடகத்தன்மை பற்றியெல்லாம் சொன்ன நிகழ்ச்சியை வெ.சா.விடம் விவரித்து பெருமைப்பட்ட போது, அந்த வங்காள எழுத்தாளரிடம் வங்காள இலக்கியம் பற்றி என்ன கேட்டுத் தெரிந்துகொண்டீர்கள் என்றொரு கேள்வியைத் தொடுக்கிறார் வெ.சா. தான் எதுவும் கேட்கவில்லை என்று பதில் சொல்கிறார் பாவண்ணன். அப்போது மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள நாம் ஏன் கூச்சப்பட வேண்டும் என வெ.சா. கேட்ட கேள்வி இலக்கிய ஆர்வமுடைய ஒவ்வொருவரிடமும் கேட்கப்பட்ட கேள்வியாகவே இருக்கிறது.
நாடகம் என்றொரு இலக்கிய வகை தமிழில் பெரிதாக வளரவில்லை என்ற தன் வருத்தத்தையும் அவர் பதிவு செய்த விதத்தை பாவண்ணன் அழகாக எழுதியிருக்கிறார். கன்னடத்தில் சிறந்த நாடகங்களாக விளங்கக்கூடிய ஹயவதனன், துக்ளக், ஊருபங்க போன்றவற்றைப்பற்றி வாசகர்களும் தெரிந்துகொள்ள முடிகிறது. கன்னட இலக்கியத்தின் வளர்ச்சியையும் கன்னடத்தின் தலைசிறந்த எழுத்தாளரான சிவராம காரந்தரைப்பற்றியும் அவருடைய முக்கியமான நாவல்களான ‘மண்ணும் மனிதரும்’ , ‘பித்து மனத்தின் பத்து முகங்கள்’ போன்றவை பற்றியும் ஒரு கட்டுரை வழியாக நமக்கு அறிமுகம் கிடைக்கிறது.
மற்றொரு கட்டுரையின் வழியாக ந.பிச்சமூர்த்தியின் முக்கியமான படைப்புகளான ‘தவளை ஜபம்’, ’பதினெட்டாம் பெருக்கு’, ‘’மாங்காய்த்தலை’, ‘மோகினி’, ’தாய்’, ‘காவல்’ போன்றவற்றைப்பற்றிய அறிமுகம் கிடைக்கிறது. ‘குடும்பக்கதை’ என்னும் கதையைப்பற்றிய வெ.சா.வின் பார்வை, அந்தச் சிறுகதையை எப்படி அணுகவேண்டும் என்று அவர் எடுத்துரைக்கும் பாங்கு அனைத்தும் சேர்ந்து அவற்றையெல்லாம் தேடியெடுத்து உடனே வாசிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.
இன்னொரு கட்டுரையில் ரயில்வே ஸ்டேஷனில் வெ.சா.வுடன் பாவண்ணனும் மற்றும் சில நண்பர்களும் உரையாடுகிறார்கள். இதுபோன்ற எழுத்தாளுமைகள் சந்தித்துக்கொள்ளும்போது, இயல்பாகவே அவர்களுடைய உரையாடல்கள் இலக்கிய நுட்பங்கள் சார்ந்த பகிர்தல்களாக எப்படி மலர்கின்றன என்பதை உனர்ந்துகொள்ள முடிகிறது. ரயில்வே ஸ்டேஷன் பற்றிய கதைகளைக் குறித்த பகிர்தலாகவே அந்த உரையாடல் அமைந்துவிடுகிறது. கு.அழகிரிசாமியின் ‘குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன்’, பாரதியாரின் ‘ரயில்வே ஸ்தானம்’, கு.ப.ரா.வின் ‘விடியுமா?’ தி.ஜானகிராமனின் ‘சிலிர்ப்பு’ என பல கதைகளை அறிமுகப்படுத்துகிறது.
பாரதியாரின் ‘ரயில்வே ஸ்தானம்’ கதையைப்பற்றி வெ.சா. சொல்லும்போது இந்தக் கதையையெல்லாம் வாசிக்கவில்லையே என்றொரு ஏக்கம் உருவாவதைத் தடுக்க முடியவில்லை. தான் கூட இக்கதையை தொடக்கத்தில் ஒரு நடைச்சித்திரமாகவே நினைத்துக் கொண்டிருந்ததாக பதிவு செய்கிறார் பாவண்ணன். வெ.சா. அந்தக் கதையில் வரும் மூன்று திசைவழி செல்லவிருக்கும் தடங்களையும் பயணிப்பதற்காக அமர்ந்திருக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கை நிலையையும் இணைத்துச் சொல்லும் விதத்தில் இருக்கும் அழகைக் கவனித்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறார்.
ஒரு கதையில் இடம்பெறக்கூடிய ஒவ்வொரு தகவலையும் ஏதோ ஒரு நுட்பமான வகையில் கதையின் மையத்தோடு பிணைத்தே ஒரு படைப்பாளி எழுதிச் செல்கிறான். அந்த நுட்பத்தைக் கண்டடைந்து மகிழ்பவனே உண்மையான வாசகன். வாசிப்பதால் கிடைக்கும் பேரின்பமே அதுதான். பாவண்ணனும் வெ.சா.வும் நிகழ்த்தும் உரையாடல் வழியாக, புனைகதை வாசிப்பு சார்ந்த ஒரு பேருண்மையை வாசகர்களால் எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இப்படியெல்லாம் கதைகளை அணுக வேண்டும் என்பதையும் வாசகனுக்கு உணர்த்துவதோடு கதைகளின் விவரிக்கப்படும் விவரங்களுக்கும் கதைக்கும் உள்ள இணைப்பையும் கண்டடைந்து படிக்கவேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.
மற்றொரு கட்டுரையில் புதுமைப்பித்தனின் செல்லம்மாள் கதையைப் பற்றிய உரையாடலும் மிக முக்கியமானது. அந்த உரையாடல் வழியாக அந்தக் கதையை ஆழமாகப் புரிந்துகொள்ள ஒரு திறப்பு கிடைக்கிறது.

படைப்புகளைப்பற்றி அழகாகச் சொல்வது போலவே வெங்கட் சாமிநாதன் தன் வாழ்வில் தான் சந்தித்த முக்கியமான மனிதர்களைப் பற்றியும் பகிர்ந்துகொள்கிறார். தன்னை வளர்த்த பாட்டி, தன்னை வாழ்க்கையில் கைதூக்கிவிட்ட மாமா, தனக்கு விமான நிலையத்தில் உதவி செய்த பணியாளர் என எல்லா மனிதர்களையும் மறக்காமல் தன் மனத்தில் பதித்திருக்கிறார். இளகிய மனம் உடையவராகவும் தன் கண்களைத் தானம் செய்யும் பெரிய உள்ளம் கொண்டவராகவும் வெ.சா. வாழ்ந்திருக்கிறார் என்னும் செய்தி அவர் மீது பெருமதிப்பை உருவாக்குகிறது.
ஒரு மனிதர் அடுத்த மனிதர் மீது ஏன் கோபப்பட்டுக்கொண்டே இருக்கிறார் என்றும், ஏன் சாடிக்கொண்டே இருக்கிறார் என்றும் புரிந்துகொள்ளாமலேயே, அவரைச் சிடுமூஞ்சி என ஒதுக்கி வைப்பது அனைத்தும் மனித இயல்பாகவே மாறிவிட்டது. அவர்களுடைய கோபம் அல்லது சிடுசிடுப்புக்குப் பின் உள்ள உண்மைப்பொருளை சரியாகப் புரிந்து கொள்ள மறுப்பதும் இயல்பாகிவிட்டது. அப்படி, பலராலும் சரியாகப் புரிந்துகொள்ளப்படாமல் போன, ஒரு நல்ல இலக்கிய விமர்சகரை, இலக்கிய ஆளுமையை சரியாக வெளிக்கொண்டுவர இந்தக் கட்டுரைத்தொகுதி வழியாக பாவண்ணன் முயற்சி செய்திருக்கிறார்.
வெ.சா. என்பவர் வம்பிழுப்பவர் அல்லர். மாறாக, ஒரு சவாலான அழைப்பு விடுப்பவர். சிறப்பாகவும் வித்தியாசமாகவும் இலக்கியங்களைப் படைக்க படைப்பாளர்களுக்கு அறைகூவல் விடுப்பவர். நன்றாகப் படிக்கச் சொல்லி கண்டிக்கும் ஆசிரியரைப்போன்றவர். கண்டிப்பான தந்தையைப்போன்றவர் என ஆங்காங்கே பாவண்ணன் கூறுகிறார். இக்கட்டுரைகளின் மூலம் வாசிப்பவராலும் இதை உணரமுடிகிறது.
பாவண்ணன் கன்னட இலக்கியம் சார்ந்து இயங்கும் தமிழ்ப்படைப்பாளராக இருப்பதனால் பல இடங்களில் கன்னடத்தில் முக்கியமான படைப்புகள் பற்றிய உரையாடல்கள் நிறைந்திருக்கின்றன. அதனால் கன்னட இலக்கியத்தின் முக்கியப்படைப்புகள் குறித்த அறிமுகம் வாசகர்களுக்கு எளிதாகக் கிடைக்கிறது. 117 பக்கங்களில் பன்னிரண்டு கட்டுரைகளைக் கொண்ட இந்தப் புத்தகத்தை வாசிப்பதன் மூலம் பல சிறுகதைகள், நாடகங்கள் பற்றி வாசகர்கள் தெரிந்துகொள்ள முடிகிறது.
பாவண்ணன் உரையாடல்களை மிகச்சரியாக குறிப்பெடுத்துக்கொண்டோ கவனத்திலும் நினைவிலும் கொண்டோ மிக அருமையான கட்டுரைகளாக ஆக்கியிருப்பது பாராட்டுக்குரியது. வெ.சா. மூலம் பல படைப்புகளைப்பற்றிய அறிமுகம் வாசகர்களுக்குக் கிடைக்கிறது. இது இப்புத்தகத்தின் மிகப்பெரிய பயன். உரையாடல்களை மிகச்சிறப்பான கட்டுரைகளாக்கித் தந்திருக்கும் பாவண்ணன் பாராட்டுக்குரியவர். புத்தகத்தை அழகான வடிவமைப்போடு வெளியிட்டிருக்கும் சந்தியா பதிப்பகமும் பாராட்டுக்குரியது.
(வெங்கட் சாமிநாதன் : சில பொழுதுகள் சில நினைவுகள். பாவண்ணன், சந்தியா பதிப்பகம், 53 வது தெரு, 9 வது அவென்யு, அசோக் நகர், சென்னை -83. விலை. ரூ.120)
எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் நாவலின் கேள்விகள் – எஸ். ஜெயஸ்ரீ
1976இல் வெளிவந்த நாவல் போக்கிடம் 45 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு தலைமுறையைக் கடந்து வெளிவந்திருப்பதாகவே கருதலாம். ஆனாலும் அது ஒரு பழைய நாவல் என்னும் தோற்றம் தராத வகையிலும் இன்றைய சூழலுக்கும் பொருந்திப் போகும் வகையிலும் இதன் மையக்கருத்து அமைந்திருக்கிறது.
மலை சார்ந்த ஒரு கிராமத்தில் ஒரு வேதியத் தாது கிடைப்பதை அறிந்தவுடன், அந்த இடம் ஒரு தொழில்மைய நகரமாக மாறத் தொடங்குகிறது. அந்தக் கிராமத்து மக்களும் வேறு போக்கிடமின்றி, அந்தத் தாதுவைத் தோண்டியெடுக்க வருகைதரும் தொழிற்சாலையிடம் தம் நிலத்தையெல்லாம் விட்டுக்கொடுத்து, அதற்கு ஈடாக அவர்கள் தரும் ஈட்டுத்தொகையைப் பெற்றுக்கொண்டு, அருகிலிருக்கும் ஊர்களுக்கோ அல்லது அந்தத் தொழிற்சாலையை ஒட்டிய பகுதிக்கோ குடியேறுகிறார்கள். அதிகாரமும் பணமும் தலைதூக்கும்போது, சாமானியருக்கும் விவசாயத்துக்கும் போக்கிடம்தான் ஏது என்பதை நாவல் பேசுகிறது.
நம் நாடு சுதந்திரமடைந்த கால்நூற்றாண்டுக்குள் தொழிற்சாலைகளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளும் வளர்ந்துவந்த நேரத்திலேயே இந்த நிலைமை தொடங்கிவிட்டது. இன்றோ, சுதந்திரம் அடைந்து முக்கால் நூற்றாண்டுக்காலம் கடந்த நிலையிலும் நம் நாடு இப்படித்தான் இருக்கிறது என்றால், வளர்ந்து வரும் தொழில்மயத்துக்காக நாம் மகிழ்வோமா அல்லது அழிந்துவரும் கிராமப் பொருளாதாரத்திற்காக நாம் வருத்தப்படுவோமா என்ற கேள்வியை விட்டல்ராவின் இந்த நாவல் மனத்தில் தோற்றுவிக்கிறது.
இன்று பல இடங்களில் ’செல் டவர்’ அமைப்பதற்காக எளிய மக்களுக்கு பண ஆசை காட்டப்பட்டு அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. எத்தனையோ கனிமவள நிறுவனங்கள் இழப்பீடு வாங்கித் தருவதாகக் கூறி ஏழை மக்களின் நிலங்களை அபகரித்துக்கொண்டு இழப்பீடும் தராமல் அவர்களை இழுத்தடிக்கின்றன. இப்படியெல்லாம் இன்றும் நிலைமைகள் இருப்பதாலேயே இந்த நாவலின் இளமை குன்றாமல் நீடித்திருக்கின்றது. காலங்கள் மாறினாலும் கடந்தாலும் சாதாரண எளிய மக்களுக்கு எதுதான் போக்கிடம்?
நாவலில் நடைபெறும் மற்ற இரு விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று, கணவனை இழந்த பேச்சி தன் பத்து வயது மகனோடு தனிமையில் வசிக்கிறாள். மற்றொன்று, டேனிஷ்பேட்டையின் பள்ளிக்கூடம். கிராமத்துப் பள்ளிக்கூடங்கள் அன்றிலிருந்து இன்றுவரை இதே நிலைமையில்தான் இருக்கின்றன. கிராமத்துப் பள்ளிக்கூடம் எனில், அந்த ஊருக்கு வரும் அலுவலர்கள் தங்கிச் செல்வதற்கான இடமாகவும் பெரிய மனிதர்கள் வீட்டுப் பொருட்களை இறக்கி வைப்பதற்கான இடமாகவும் பயன்படுத்தப்படுவதையே பல இடங்களில் பார்க்கிறோம். பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் முழுமையான அளவு ஈடுபாடும் காட்டுவதில்லை. ஒரு கிராமத்துப் பள்ளிக்கூடம் நல்ல ஆசிரியர் ஒருவர் கிடைத்தால் சிறப்பாக முன்னேறும் என நினைக்கலாம். ஆனால் அதற்கு மாறாக ஒரு கிராமத்தின் போக்கிடமாக, அதாவது ஒதுங்குமிடமாகவே அது கருதப்படுகிறது.

பேச்சி, கருணையுள்ளத்தோடு படைக்கப்பட்டிருக்கும் ஒரு பெண் பாத்திரம். ஆனால் அந்தப் பெண்ணை தம் உடற்பசிக்கான போக்கிடமாகவே ஆண்கள் பயன்படுத்துகிறார்கள். கவுண்டர், தன் மணவாழ்க்கைக்கு அப்பாற்பட்டு பேச்சியிடம் மிகுந்த அன்பு கொண்டிருப்பது போல ஒரு தோற்றம் இருந்தாலும், அது வெறும் உடற்பசியைத் தீர்த்துக்கொள்ளும் உறவாகவே இருக்கிறது. மேலும், அவர் அவளுடைய நிலங்களையெல்லாம் தானே ஏதோ ஒரு விலை போட்டுக்கொடுத்து தன் பெயரில் மாற்றிக்கொள்வதன் வழியாக பேச்சியை மறைமுகமாக ஏமாற்றுகிறார். பேச்சிக்கோ, தனக்கு கவுண்டரின் உறவு அந்தக் கிராமத்தில் தனித்து வாழ்வதால் நேரும் தொல்லைகள் நேராமல் இருப்பதற்கான ஒரு போக்கிடம். அவ்வளவுதான். பெண்ணின் பாதுகாப்பு தேடும் இந்த நிலையைப் பயன்படுத்திக்கொள்ளும் ஆணின் மனநிலையை, இந்த உறவு கூர்மையாக வெளிப்படுத்துகிறது. நகரத்தைவிட்டு கிராமத்துக்கு வந்திருக்கும் சுகவனம் அவ்வப்போது தன் உடற்பசியை ஆற்றிக்கொள்ளும் ஒரு வழியாக மட்டுமே பேச்சியின் அன்பைப் பயன்படுத்திக்கொள்கிறான். அந்த அபலைக்கு உண்மையான அன்பு இத்தனை இடர்ப்பாடுகளுக்குப் பிறகே பீர்முகம்மதுவிடமிருந்து கிடைக்கிறது.
1976இலேயே விட்டல்ராவ் பேச்சி பாத்திரத்தை தன் உறவு சம்பந்தப்பட்ட விஷயத்தில் சுயமாக யோசித்து முடிவெடுப்பவளாகப் படைத்திருப்பது ஆச்சரியமான விஷயம். அவளும் சுகவனமும் சேர்ந்திருந்ததை, கவுண்டரிடம் சொல்லிவிடுவதாக மிரட்டியே, சுப்புரு அவளை தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறான். ஆனால் பேச்சியோ “போ. யாருகிட்ட வேணா சொல்லிக்கோ. உன்னோட வரமாட்டேன்” என்று சொல்லும் இடம் அபாரம். பிங்க் என்றொரு திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்னால் வந்தது. பெண் என்பவள் தன் விருப்பத்துக்கு ஒரு ஆணுடனான உறவுக்கு உடன்படவோ மறுக்கவோ உரிமையுள்ளவள் என்பதைச் சொல்லும் திரைப்படம் அது. இந்தக் கருத்தை விட்டல்ராவ் 1976இல் தன் நாவலில் பதிவிட்டிருக்கிறார் என்பது பாராட்டுக்குரியது.
“அம்மண ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்” என்பதுபோன்ற நிலை சுகவனத்துக்கு. தொடக்கத்தில் சிறந்த ஆசிரியனாக இருக்க வேண்டும், கிராமத்துப் பிள்ளைகளை முன்னேற்ற வேண்டும் என்ற துடிப்போடு டேனிஷ்பேட்டை கிராமத்துக்கு வரும் சுகவனம் இந்தச் சமூகச் சீர்கேட்டில் நிலவும் சுழலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக தானும் அகப்பட்டுக்கொள்கிறான். கிடைத்த வேலையை விட்டுவிடக் கூடாது என நினைக்கும் அவனுக்கு வேறு என்ன போக்கிடம்? மதிய உணவுத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை சரியாகப் பயன்படுத்த நினைக்கும் அவனுடைய மனம், அப்படிப் பயன்படுத்தாமல், அந்தப் பணத்தை பங்கு போட்டுக்கொள்வதில் தவறேதுமில்லை என நினைக்கும் அளவுக்கு மாற்றமடைந்துவிடுகிறது. பள்ளியில் ஒழுங்காக பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தவன் ப்ரைவேட் டியூஷனில் வரும் வருமானத்திற்காக ஆசைப்படுகிறான். தனக்குக் கிடைத்த ஆசிரியர் வேலையை விட முடியாத அவன் வேறு என்ன செய்ய முடியும்? இந்த அமைப்பின் சீர்கேட்டுக்குள் சிக்கிக்கொள்வதைத் தவிர அவனுக்கென வேறு என்ன போக்கிடம் உள்ளது? அவன் தன் வாழ்க்கைப்போக்கையே மாற்றிக்கொள்கிறான்.
நேர்மை, நியாயம், தர்மம், உண்மை என வாழ நினைப்பவர்களை இந்தச் சமுதாயச் சீர்கேடுகள் நிறைந்த இந்த அமைப்பு அமைதியாக வாழ விடுவதில்லை. வேறு என்னதான் போக்கிடம் என்று அவர்களும் இந்தச் சீர்கெட்ட அமைப்புக்குள்ளேயே வந்துவிடுகிறார்கள்.
விவசாயம், கிராமம் என்று தங்கள் உயிரையே வைத்திருக்கும் மக்களுக்கு இதுபோன்ற தொழிற்சாலைகள் வந்து, வேலை வாய்ப்புகளைக் கொடுத்து நிலங்களைப் பிடுங்கினால், அவர்களுக்கு வேறு எதுதான் போக்கிடம்? தன் நிலத்துக்கு தானே முதலாளியாக இருந்தவன் கூட கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளியாக மாறுவதைத் தவிர அவனுக்கு வேறு என்னதான் போக்கிடம்?

பாவண்ணன் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல ஆட்டின் கால்களில் ஒட்டியிருக்கும் தாரை பீர்முகம்மது அகற்றும் காட்சியும் தீப்பெட்டியில் அடைத்துவைக்கப்பட்ட வண்டு பறந்துபோகும் காட்சியும் நாவலில் மிகவும் ரசிக்கத்தக்கவையாக உள்ளன.
சேலத்து வட்டாரமொழியில் இந்த நாவலை விட்டல்ராவ் அழகாக படைத்துள்ளார். மேலே சொன்ன அத்தனை கேள்விகளையும், நாவலை வாசிக்கும் வாசகர்களின் மனத்தில் தோன்றவைக்கும் விட்டல்ராவ், கதையை அப்படியே சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறார். அவராக தத்துவங்கள், கேள்விகள் என எந்தத் தலையீட்டையும் செய்யவில்லை. நாவல் தெளிவாக நீரோட்டமாக ஒரே வாசிப்பில் படித்து முடிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
பின்னிணைப்பாக விட்டல்ராவின் நேர்காணலை (பாவண்ணனால் எடுக்கப்பட்டது) இணைத்திருப்பது மிகச்சிறப்பாக உள்ளது. இன்று விட்டல்ராவ் எழுபது வயதைக் கடந்தவர். பாவண்ணனுக்கு விளக்கு விருது வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் நான் அவரைச் சந்தித்திருக்கிறேன். எப்போதும் திருத்தமான உடையணிந்து, நிழற்படக்கருவியோடு சுறுசுறுப்பாக இங்குமங்கும் இயங்கியபடியே இருந்தார். அனைவரோடும் கலகலப்பாக பேசினார். போக்கிடம் நாவலை அவர் 1976இல் எழுதியிருக்கிறார் என்றாலும் அவரைப்போலவே நாவலும் புதுப்பொலிவோடு இக்காலத்துக்கும் பொருந்துவதாக இருக்கிறது. மறுபதிப்பாக, இந்த நாவலை வெளியிட்டுள்ள சிறுவாணி வாசகர் மையத்தார் பாராட்டுக்குரியவர்கள்.
(போக்கிடம் – நாவல். விட்டல்ராவ், சிறுவாணி வாசகர் மையம், பவித்ரா பதிப்பகம், 24-5, சின்னம்மாள் வீதி, கே.கே.புதூர், கோவை, 38. விலை ரூ180)