நூல் அறிமுகம்: வண்ணநிலவனின் மறக்கமுடியாத மனிதர்கள்  – பொன் விஜி

நூல் அறிமுகம்: வண்ணநிலவனின் மறக்கமுடியாத மனிதர்கள் – பொன் விஜி




உறவினர்களைவிட நண்பர்கள்தான் அடிக்கடி ஞாபகத்திற்கு வருகிறார்கள். உறவினர்களைவிட நண்பர்களுடன்தான் அதிகமாகப் பழகியிருக்கிறேன் என்கிறார் ஆசிரியர் வண்ணநிலவன் அவர்கள்.

ராமச்சந்திரன் என்ற பெயரிலிருந்து எப்படி வண்ணநிலவன் என்ற பெயர் மாற்றம் வந்தது, இதற்கு முற்று முழுதாக யார் காரணகர்த்தாவாக இருந்தார் என்ற ஆரம்பத்துடன் தனது இக் கட்டுரைகளை ஆரம்பிக்கிறார் ஆசிரியர் வண்ணநிலவன் அவர்கள்.

தனது அனுபவங்களையும், தான் சந்தித்த படைப்பாளிகளையும், நண்பர்களையும், அவர் சென்று வந்த, மற்றும் பத்திரிகைத் துறையில் வேலை செய்த அனுபவங்களையும் இங்கே எங்களுடன் பகிர்ந்து கொள்கிறார் வண்ணநிலவன்.

இதில் 18 வேறுபட்ட எழுத்தாளர்களை நினைவு கூர்கிறார்.
* வல்லிக்கண்ணன்
* விக்ரமாதித்யன்
* பா. ஜெயப்பிரகாசம்
* கலாப்ரியா
* கி. ராஜநாராயணன்
* திருலோக சீதாராம்
* வெ. கிருஷ்ணமூர்த்தி
* தி. க. சிவசங்கரன்
* ஜி. எம். எல். பிரகாஷ்
* சுந்தர ராமசாமி
* பிரபஞ்சன்
* அம்பை
* அசோகமித்திரன்
* நா. பார்த்தசாரதி
* கா. நா. சுப்பிரமணியம்
* தி. ஜானகிராமன்
* கண்ணதாசன்
* சோ
ஆசிரியர் இங்கே தனது 60/70/80 பதுகளில் தான் கண்ட, பேசிய, உணர்ந்த எழுத்தாளரர்களையும், பத்திரிகையாளர்களையும், மறக்கமுடியாத தனது நண்பர்களையும், தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை யும் வெளிப்படுத்துகிறார் என்றே தோன்றுகின்றது. அதன் மூலமாக அடுத்த படைப்பாளிகளையும் நாம் அறிந்து கொள்ள நல்ல வாய்பு என்றே சொல்லலாம்.

இதேபோல், பவா செல்லத்துரை, எஸ். ராமகிருஷ்ணன், பா. ராகவன் போன்றோர், எப்படி எல்லாம் மற்ற படைப்பாளிகளை அறிமுகம் செய்கிறார்களோ அதேபோல், இன்னும் வளர்ந்து வரும் அடுத்த படைப்பாளிகளையும் வாசிப்போராகிய எங்களுக்கு அறிமுகம். செய்து வருவது மிகவும் பாராட்டத்தக்க விடையம். அதில் நாம் அக்கறையுடையவர்களாக இருந்தால், எல்லோரும் நம் பக்கத்தில் இருப்பதாக உணரலாம்.

இன்றைய கால கட்டத்தில் தொடர்பு சாதனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாம் அன்றாடம் பார்க்கின்றோம். அதை வேளையில், இதையிட்டுப் பல சிக்கல்களையும் (இடியாப்பச் சிக்கலைக் கூட மிகவும் பொறுமையாக இருந்து எடுத்தால் கூட எடுத்து விடலாம்) எதிர் கொண்டு வருகிறோம். ஜிங் ஜாங்  என்பது போல் இதில் (பாசிட்டிவ், நெக்கடிவ்) இரண்டு பக்கங்களுக்கும் நாம் முகம் காட்டத்தான் வேண்டும். தவிர்கமுடியாததொன்று எனலாம். மாற்றங்களை நாம் திணித்தாலும், திணிக்காவிட்டாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆசிரியர் வண்ணநிலவன் இங்கே, தனது ஆரம்பகால, படிக்கும் காலம், படித்து முடிந்து வேலை தேடித்திரியும் காலம், இவற்றுடன் தொடர்புடைய கடிதப் போக்குவரத்து எவ்வளவு முக்கியம் வாய்ந்ததாக இருந்தது, அத்துடன் பிரயாணங்களில் ஏற்பட்ட இடர்பாடுகள், வறுமை, எதிர்பார்ப்புக்கள் போன்றவற்றை உணர்பூர்வமாகப் பதிவு செய்கிறார்.

குறிப்பாக, அன்பு, அரவணைப்பு, உண்ண உணவு, உறங்குவதற்கான இடம் இதுபோன்ற மிக உயர்ந்த குணங்களைக் கொண்டிருந்தார்கள் என்பதனை வெளிப்படையாகப் பல இடங்களில் பதிவு செய்கிறார் வண்ணநிலவன் அவர்கள். தான் பட்ட கஷ்டங்களில் யார்யார் தனக்காக உறுதுணையாக இருந்து, தன்னை இவ்வளவு தூரம் உயர்த்தி விட்டவர்களை அன்போடு நினைப்பதை இந் நூல்மூலம் வாசிக்க முடிகிறது நண்பர்களே.

அத்துடன், ஆசிரியர் அவர்கள், தான் நேரில் சந்திக்க முடியாத, இன்னொருவரால் தனக்கு வந்த உதவிகளையும், அவர்களுடனான தொடர்புபளையும் மறக்கமுடியாத தருணம். என்பதைச் சுட்டிக்காட்டுவது, அவரது மிக உயர்ந்த பண்பை எடுத்துக் காட்டு வதைக் காணலாம்.

அன்றைய சூழ்நிலையில் ஒரு படைப்பாளியையோ அல்லது ஒரு வெளியீட்டு நிறுவனத்தையோ அன்றைய இளம் எழுத்தாளர்கள் நெருங்குவதாய் இருந்தால் எவ்வளவு ஆதங்கங்கள் , சிரமங்கள், தொடர்புகள், இவற்றுக்காக ஏங்கித் தவித்த நீண்ட பயணங்களாக இருந்தது. ஆனால் இன்றைய அதிவேக தொடர்பு சாதனங்களால் மேற்குறிக்கப்பட்ட விடயங்களை ஒரு நொடியில் (வாட்ஸ்அப், முகப்புத்தகம், இன்ரகிராம், கூகிள் இவைபோன்ற) பெறக்கூடியதாக இருப்பதை உணருகின்றோம்.

இந்தப் படைப்பாளி தான் உயர்ந்தவர், மற்றவர்கள் கொஞ்சம் அப்படி இப்படித்தான் என்ற வேறபாடற்று, எல்லோரையும் ஒரே கூரைக்குள் கொண்டுவருவது, அவரது மற்றுமொரு உச்சம் என்றே கூறலாம்.. நண்பர்களே, இவரது இப் படைப்பான மறக்கமுடியாத மனிதர்களை ஆசிரியர் வண்ணநிலவன் அவர்கள் ஒரே கூரைக்குள் என்னதான் அடக்கியுள்ளார் என்பதனை உங்கள் கதவு வழியாகச் சென்று உற்று நோக்க வேண்டும் என்பதே எனது ஆதங்கம்.. என்ன ஆயத்தமா வாசிப்பு நண்பர்களே..
நன்றிகள்

பொன் விஜி -சுவிஸ்.

நூல் : மறக்கமுடியாத மனிதர்கள் 
ஆசிரியர் : வண்ணநிலவன் 
விலை : ரூ.₹200/-
பக்கம் : 167

வெளியீடு : காலச் சுவடு
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: கே. முத்தையா ஒரு பல்கலைக்கழகம்! – மதுக்கூர் இராமலிங்கம்

புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: கே. முத்தையா ஒரு பல்கலைக்கழகம்! – மதுக்கூர் இராமலிங்கம்




தோழர் கே. முத்தையா பன்முகத்திறன் கொண்ட ஒரு பேராளுமை. பத்திரிகையாசியர், நாவலாசிரியர், நாடகாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், அமைப்பாளர் என அவர் தொடாத துறைகள் இல்லை. தொட்டத் துறைகள் அத்தனையிலும் மிளிர்ந்தவர்.

அன்றைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம், பேராவூரணி பொன்னாங்கன்னி காடு கிராமத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர், பள்ளிப் படிப்பை பட்டுக்கோட்டையில் முடித்த பின்பு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஹானர்ஸ் பொருளாதாரப் படிப்பில் சேர்ந்தார். விடுதலைப் போராட்டம் வீறு கொண்டெழுந்த நேரமது. அண்ணாலை பல்கலைக்கழகத்தில் பொதுவுடமை இயக்கச் சிந்தனை கொண்ட மாணவர்கள் பலர் இருந்தனர். அவர்களுடன் தோழர் கே. முத்தையாவும் இணைந்தார். விடுதலைப் போராட்டத்திலும், மாணவர் போராட்டத்திலும் ஈடுபட்ட காரணத்தினால், பல்கலைக்கழக இறுதித் தேர்வை அவரால் எழுத முடியவில்லை. மாணவனாக இருக்கும்போதே கைது செய்யப்பட்டார். அதன்பின் இறுதிவரை போராட்டமே அவரது வாழ்க்கை முறையானது.

‘ஜனசக்தி’யின் பொறுப்பாசிரியராகவும், பின்னர் நீண்டகாலம் ‘தீக்கதிர்’ ஏட்டின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். ஒரு பல்கலைக்கழகத்தைப் போன்று பலநூறு பத்திரிகையாளர்களை உருவாக்கியவர் அவர். ‘செம்மலர்’ ஏட்டைத் துவக்கி முதல் ஆசிரியராக தோழர் கு. சின்னப்ப பாரதி நடத்தினார். சில மாதங்களுக்குப் பின்பு தோழர் கே. முத்தையா, ‘செம்மலர்’ ஆசிரியர் பொறுப்பையும் ஏற்றார். செம்மலரில் எழுதிவந்த எழுத்தாளர்கள் ஒன்றுகூடி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கினர். தோழர் கே. முத்தையா சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், தலைவராகவும், கௌரவத் தலைவராகவும் பல பத்தாண்டுகள் பணியாற்றி வழிகாட்டினார்.

‘செம்மலர்’ ஏட்டின் அவர் தொடராக எழுதிய இரண்டு நாவல்கள், ‘உலைக்களம்’, ‘விளைநிலம்’ ஆகியன ஆகும். இந்த இரண்டும் இன்றைக்கும் குறிப்பிடத்தக்க நாவல்களாக விளங்குகின்றன. தமிழகத்தின் பொதுவுடமை இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, கருத்து மோதல்கள், களப்போராட்டங்களை அருமையான கலைவடிவத்தில் பேசும் நாவல்கள் இவை.

1948 முதல் 1962 வரையிலான பொதுவுடமை இயக்க வரலாற்றின் போக்குகளை இவ்விரண்டு நாவல்களும் துல்லியமாக படம்பிடித்துக் காட்டியவை.

‘செவ்வானம்’, ‘ஏரோட்டி மகன்’, ‘புதிய தலைமுறைகள்’ என தோழர் கே. முத்தையா எழுதிய மூன்று மேடைநாடகங்கள், தமிழகத்தில் பலமுறை அரங்கேற்றப்பட்டுள்ளன. சில இசைப்பாடல்களையும் அவர் எழுதியுள்ளார்.

இலக்கியத் திறனாய்வில், மார்க்சிய அணுகுமுறையை பின்பற்றியவர்களில் தோழர் கே. முத்தையாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. ‘தமிழ் இலக்கியங்கள் கூறும் வர்க்கச் சமுதாயம்’, ‘இராமாயணம்- உண்மையும் புரட்டும்’, ‘சிலப்பதிகாரம் உண்மையும் புரட்டும்’ உள்ளிட்ட ஆய்வு நூல்கள் இன்றளவும் கவனிக்கத்தக்கவையாக உள்ளன. திருக்குறள் குறித்து அவர் எழுதியுள்ள நூலும் முக்கியமான ஒன்று.

ஒரு பத்திரிகையாளராக ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ள அவர், மார்க்ஸ் எழுதிய ‘தத்துவத்தின் வறுமை’ என்ற நூலையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

ஒரு எழுத்தாளராக மட்டுமன்றி, பலநூறு எழுத்தாளர்களை உருவாக்கியவர் அவர். அதை ஒரு இயக்கமாக அவர் செய்து வந்தார். தன்னுடைய இறுதிக்காலம் வரை ஒரு கர்மயோகியைப் போல செயல்பட்ட அவரது பெருமையை ‘தீக்கதிர்’, ‘செம்மலர்’ போன்ற ஏடுகளும், ‘தமுஎகச’ போன்ற அமைப்புக்களும் இன்றளவும் எடுத்துரைக்கின்றன.

படைப்புகள்

* சிலப்பதிகாரம் உண்மையும் புரட்டும்(1981)

* இராமாயணம் ஒரு ஆய்வு(1981)

* வீர பரம்பரை

* சட்டமன்றத்தில் நாம்

* திமுக எங்கே செல்கிறது

* இதுதான் அண்ணாயிசமா?

* மார்க்சியமும் தமிழ் கலை இலக்கியங்களும்

* தத்துவத்தின் வறுமை (காரல் மார்க்ஸ்-எழுதியது-தமிழாக்கம்)

* தமிழ் இலக்கியங்கள் கூறும் வர்க்க சமுதாயம் (1968)

* தமிழ் இலக்கிய வரலாறு

நாவல்கள்

* உலைகளம் (முதல் நாவல்)

* விளைநிலம்(1989)

நாடகங்கள்

* செவ்வானம் (நாடகம்)

* புதிய தலைமுறை (நாடகம்)

* ஏரோட்டி மகன் (நாடகம் (2012) 

நான் ஒரு பத்திரிகையாளர், அதனாலேயே அர்னாப் கோஸ்வாமிக்கு ஆதரவாக நிற்கப் போவதில்லை – அர்ஃபா கனும் ஷெர்வானி (தமிழில்: தா.சந்திரகுரு)

நான் ஒரு பத்திரிகையாளர், அதனாலேயே அர்னாப் கோஸ்வாமிக்கு ஆதரவாக நிற்கப் போவதில்லை – அர்ஃபா கனும் ஷெர்வானி (தமிழில்: தா.சந்திரகுரு)

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் உரிமையாளர்/தலைமை ஆசிரியரான அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்ட செய்தி வந்தவுடன், எல்லா இடங்களிலிருந்தும் அவருக்கான ஆதரவு வெளியானது. மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஸ்மிருதி இரானி, பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் பலரும், கட்சியின் மூத்த…
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை முடிவுக்கு வர வேண்டும். அது தான் எப்போது ? – பத்திரிக்கையாளர் சுதா ராமச்சந்திரன் (தமிழில் சிந்துஜா சுந்தர் ராஜ்)

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை முடிவுக்கு வர வேண்டும். அது தான் எப்போது ? – பத்திரிக்கையாளர் சுதா ராமச்சந்திரன் (தமிழில் சிந்துஜா சுந்தர் ராஜ்)

19 வயதான தலித் பெண் மீது சமீபத்தில் நடந்த மிருகத்தனமான பாலின தாக்குதல்  மற்றும் சாதி வன்முறை குறித்த இந்தியாவின் பயங்கரமான தட பதிவை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது. செப்டம்பர் 14 ஆம் தேதி, வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது தலித் (முன்னர் “தீண்டத்தகாத”)…