புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: கே. முத்தையா ஒரு பல்கலைக்கழகம்! – மதுக்கூர் இராமலிங்கம்

புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: கே. முத்தையா ஒரு பல்கலைக்கழகம்! – மதுக்கூர் இராமலிங்கம்




தோழர் கே. முத்தையா பன்முகத்திறன் கொண்ட ஒரு பேராளுமை. பத்திரிகையாசியர், நாவலாசிரியர், நாடகாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், அமைப்பாளர் என அவர் தொடாத துறைகள் இல்லை. தொட்டத் துறைகள் அத்தனையிலும் மிளிர்ந்தவர்.

அன்றைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம், பேராவூரணி பொன்னாங்கன்னி காடு கிராமத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர், பள்ளிப் படிப்பை பட்டுக்கோட்டையில் முடித்த பின்பு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஹானர்ஸ் பொருளாதாரப் படிப்பில் சேர்ந்தார். விடுதலைப் போராட்டம் வீறு கொண்டெழுந்த நேரமது. அண்ணாலை பல்கலைக்கழகத்தில் பொதுவுடமை இயக்கச் சிந்தனை கொண்ட மாணவர்கள் பலர் இருந்தனர். அவர்களுடன் தோழர் கே. முத்தையாவும் இணைந்தார். விடுதலைப் போராட்டத்திலும், மாணவர் போராட்டத்திலும் ஈடுபட்ட காரணத்தினால், பல்கலைக்கழக இறுதித் தேர்வை அவரால் எழுத முடியவில்லை. மாணவனாக இருக்கும்போதே கைது செய்யப்பட்டார். அதன்பின் இறுதிவரை போராட்டமே அவரது வாழ்க்கை முறையானது.

‘ஜனசக்தி’யின் பொறுப்பாசிரியராகவும், பின்னர் நீண்டகாலம் ‘தீக்கதிர்’ ஏட்டின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். ஒரு பல்கலைக்கழகத்தைப் போன்று பலநூறு பத்திரிகையாளர்களை உருவாக்கியவர் அவர். ‘செம்மலர்’ ஏட்டைத் துவக்கி முதல் ஆசிரியராக தோழர் கு. சின்னப்ப பாரதி நடத்தினார். சில மாதங்களுக்குப் பின்பு தோழர் கே. முத்தையா, ‘செம்மலர்’ ஆசிரியர் பொறுப்பையும் ஏற்றார். செம்மலரில் எழுதிவந்த எழுத்தாளர்கள் ஒன்றுகூடி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கினர். தோழர் கே. முத்தையா சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், தலைவராகவும், கௌரவத் தலைவராகவும் பல பத்தாண்டுகள் பணியாற்றி வழிகாட்டினார்.

‘செம்மலர்’ ஏட்டின் அவர் தொடராக எழுதிய இரண்டு நாவல்கள், ‘உலைக்களம்’, ‘விளைநிலம்’ ஆகியன ஆகும். இந்த இரண்டும் இன்றைக்கும் குறிப்பிடத்தக்க நாவல்களாக விளங்குகின்றன. தமிழகத்தின் பொதுவுடமை இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, கருத்து மோதல்கள், களப்போராட்டங்களை அருமையான கலைவடிவத்தில் பேசும் நாவல்கள் இவை.

1948 முதல் 1962 வரையிலான பொதுவுடமை இயக்க வரலாற்றின் போக்குகளை இவ்விரண்டு நாவல்களும் துல்லியமாக படம்பிடித்துக் காட்டியவை.

‘செவ்வானம்’, ‘ஏரோட்டி மகன்’, ‘புதிய தலைமுறைகள்’ என தோழர் கே. முத்தையா எழுதிய மூன்று மேடைநாடகங்கள், தமிழகத்தில் பலமுறை அரங்கேற்றப்பட்டுள்ளன. சில இசைப்பாடல்களையும் அவர் எழுதியுள்ளார்.

இலக்கியத் திறனாய்வில், மார்க்சிய அணுகுமுறையை பின்பற்றியவர்களில் தோழர் கே. முத்தையாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. ‘தமிழ் இலக்கியங்கள் கூறும் வர்க்கச் சமுதாயம்’, ‘இராமாயணம்- உண்மையும் புரட்டும்’, ‘சிலப்பதிகாரம் உண்மையும் புரட்டும்’ உள்ளிட்ட ஆய்வு நூல்கள் இன்றளவும் கவனிக்கத்தக்கவையாக உள்ளன. திருக்குறள் குறித்து அவர் எழுதியுள்ள நூலும் முக்கியமான ஒன்று.

ஒரு பத்திரிகையாளராக ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ள அவர், மார்க்ஸ் எழுதிய ‘தத்துவத்தின் வறுமை’ என்ற நூலையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

ஒரு எழுத்தாளராக மட்டுமன்றி, பலநூறு எழுத்தாளர்களை உருவாக்கியவர் அவர். அதை ஒரு இயக்கமாக அவர் செய்து வந்தார். தன்னுடைய இறுதிக்காலம் வரை ஒரு கர்மயோகியைப் போல செயல்பட்ட அவரது பெருமையை ‘தீக்கதிர்’, ‘செம்மலர்’ போன்ற ஏடுகளும், ‘தமுஎகச’ போன்ற அமைப்புக்களும் இன்றளவும் எடுத்துரைக்கின்றன.

படைப்புகள்

* சிலப்பதிகாரம் உண்மையும் புரட்டும்(1981)

* இராமாயணம் ஒரு ஆய்வு(1981)

* வீர பரம்பரை

* சட்டமன்றத்தில் நாம்

* திமுக எங்கே செல்கிறது

* இதுதான் அண்ணாயிசமா?

* மார்க்சியமும் தமிழ் கலை இலக்கியங்களும்

* தத்துவத்தின் வறுமை (காரல் மார்க்ஸ்-எழுதியது-தமிழாக்கம்)

* தமிழ் இலக்கியங்கள் கூறும் வர்க்க சமுதாயம் (1968)

* தமிழ் இலக்கிய வரலாறு

நாவல்கள்

* உலைகளம் (முதல் நாவல்)

* விளைநிலம்(1989)

நாடகங்கள்

* செவ்வானம் (நாடகம்)

* புதிய தலைமுறை (நாடகம்)

* ஏரோட்டி மகன் (நாடகம் (2012) 

புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: மண்ணுக்கேற்ற மார்க்சியர் அருணன் – நா.முத்துநிலவன்

புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: மண்ணுக்கேற்ற மார்க்சியர் அருணன் – நா.முத்துநிலவன்




உலகை விளக்கியவர் பலர்! இதை மாற்றுவது எப்படி என்பதுதான் மார்க்சியத்தின் வெற்றி என்பார்கள். தமிழ்ச் சமூகத்தை விளக்கிய தமிழறிஞர் பலர் என்றாலும் தமிழ் மண்ணுக்கான மார்க்சிய ஆய்வுகளைத் தந்ததில் தோழர் அருணன்தான் முன்வரிசையில் நிற்கிறார்.

தந்தையார் வாழைப்பழக் கடை வைத்திருந்தவர் என்பதைச் சொல்லத் தயங்காத அருணன், அவரது குடும்பத்தில் பட்ட மேற்படிப்புப் படித்த முதல்பிள்ளை இவர்தான் என்பதையும் குறிப்பிடுகிறார்!

மேலூர் அருகில் ஒரு சிறு கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அருணன், மதுரையில் பிறந்து, மதுரைப் பல்கலைக்கழகப் பேராசிரியராக உயர்ந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் கே.முத்தையாவைத் தனது எழுத்துக்கும் இயக்கத்துக்கும் முன்னோடியாகக் கொண்டார். 47ஆண்டுகளாக தமிழ்ப் பண்பாட்டின் மனச்சாட்சியாகத் திகழும் தமுஎகசவின் அடிஉரமாகத் திகழ்ந்தவர். பணி நிறைவுக்குப் பின், மதுரையிலிருந்து புலம்பெயர்ந்து, சென்னையில் தன் மகனோடு இருந்தாலும், தொலைக்காட்சி விவாதங்களிலும், “அருணன் தமிழ்” வலைக்காட்சியிலும் மார்க்சிய ஒளிவீசித் திகழ்பவர் அருணன்.

மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் ஏ.கே.கோபாலன் மறைந்த போது அவரைப் பற்றிய -1977- தீக்கதிர்க் கட்டுரைதான் தனது முதல் படைப்பு எனும் தோழர் அருணன், “ஒரு தலைவரின் மரணம், ஒரு எழுத்தாளரின் ஜனனத்துக்குக் காரணமானது” என்பதோடு, “அது அரசியல் எழுத்தின் துவக்கம், எனது இலக்கியஎழுத்து, செம்மலரில் எழுதிய நாவல் மதிப்பீட்டுடன் துவங்கியது” என்கிறார்! (“மனு தர்மத்துக்கு நேர் எதிரானது மார்க்சியத்தின் சமதர்மம்” – அருணன் நேர்காணல் – தமுஎகச அறம் கிளையின் ப.தி.ராஜேந்திரன் எழுதிய சிறு நூல் – பாரதி புத்தகாலயம் -2019)

நாற்பது நூல்கள் தந்திருக்கும் இவர் “படைத்ததில் பிடித்த பட்டியல்” இது: நாவல்களில் – “நிழல்தரா மரம்”

சமூக ஆய்வில் – “தமிழகத்தில் சமூக சீர்திருத்தம்”

தத்துவத்தில் – “தமிழரின் தத்துவ மரபு”

வரலாற்றில் – “காலந்தோறும் பிராமணியம்”

நாட்டுப்புறவியலில் – “கொலைக்களங்களின் வாக்குமூலம்”

இலக்கிய விமர்சனத்தில் – “வளரும் சிகரம் வைரமுத்து”

தமுஎகச மாநில மாநாடுகளில் தோழர் அருணனின் நிறைவுரை, தொகுப்புரைகளில் அடுத்த சில ஆண்டு உழைப்புக்கான “பேட்டரி சார்ஜ்” ஆகித் திரும்புவோர் – என்னைப் போல் தமுஎகச தோழர் – ஏராளமானோர்!

தோழர் கே.முத்தையாவுக்குப் பிறகு மாநிலப் பொதுச்செயலர், மாநிலத் தலைவர் என இவர் வழிகாட்டுதலில் வளர்ந்ததே இன்றைய தமுஎகச! அமைப்பும் படைப்பும் இரண்டு கண்களாகவே உணர்த்துபவர். “தமுஎகச எனது இன்னொரு பள்ளி, அதுதான் எனக்கு பள்ளியில் கிட்டாத கல்வியைத் தந்தது” எனும் அருணன், தமுஎகச மாநிலச் செயற்குழு, பொதுக்குழு விவாதங்களின் போது, குறை நிறைகளைச் சுட்டிக்காட்டி, முன்வைத்த கருத்துகள், ஒரு கருத்தை எப்படி அணுகவேண்டும் என்று இளையவர்க்கு நடத்திய பாடங்கள்! இதோடு, மாநாட்டு நிறைவில் “எழுதுவது அல்ல எழுப்புவதே எழுத்து” என்று, அவர் முழங்கியது, பலர் நெஞ்சில் இன்னும் பதிந்து கிடக்கும் கல்வெட்டு!

சங்க இலக்கியத்தில் ஆதித் தமிழ்ச் சமூக தரிசனம் கண்டவர், கம்பனை ரசித்தது எப்படி, சேக்கிழாரை ரசிக்க முடியாதது ஏன் என்பதை இவரது எளிமையும் வலிமையுமான நூல்களைப் படித்தால் புரியும்.

“இன்றைக்கும் ஒரு சாதிக்குள்தான் பெரும்பாலான திருமணங்கள் நடக்கின்றன. பெண்ணைத் தாழ்ந்த பிறவியாக நோக்கும் சிந்தனையும், நடப்பும் உள்ளது. ஜோதிடம் பார்க்கும் பழக்கம் பரவியுள்ளது. இதெல்லாம் சேர்ந்ததுதான் பிராமணியம்” எனும் தோழர் அருணன், “பிறப்பிலேயே பேதம் கற்பிக்கும் பிராமணியத்திற்கெதிராக பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம் இணைவதே திரிசூலமாகும்” என்பது இவரது ஆயுத எழுத்து!

தோழர் அருணன் அவர்களின் பன்முகத் திறனை அறிந்த இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இவருக்கு விருது ஏதும் தராமல், விருதுக்குழுத் தலைவராக்கி அழகு பார்த்தார்! பல்கலைக் கழகம்தான் பட்டம் தரும், பல்கலைக் கழகத்துக்கே எப்படிப் பட்டம் தர முடியும்?
எழுபத்தொன்றைக் கடந்து, இப்போதும் எழுதி இயங்கி விவாதித்து வரும் தோழர் அருணன், இன்னும் பல பத்தாண்டுகள் வாழ்ந்து தமிழ்ச் சமூகப் பணிகளைத் தொடர வேண்டும் என்பதே தமிழ் கூறும் நல்லுலகின் நன்றி கலந்த எதிர்பார்ப்பு. “அருணன் தமிழ்” வளர்க!

– நா.முத்துநிலவன்