யானைத் தாலி - நூல் அறிமுகம் : இரா.இயேசுதாஸ் yaanaithaali - nool arimugam : era.yesudoss

யானைத் தாலி – நூல் அறிமுகம் : இரா.இயேசுதாஸ்


யானைத் தாலி நூல்கவிஞர் ரவி சுப்பிரமணியம் அவர்களின் முன்னுரையோடு வெளிவந்திருக்கிறது.

சமூகத்தின் சாதாரண.. அடித்தட்டு மனிதர்களை “அப்படி” முழுவதுமாய் வாசித்திருக்கிறார் நூல்ஆசிரியர்.. கதைகளில் ஒரு வரி கூட கற்பனை கிடையாது.. ‘ஓவர் பில்டப்பும்’ கிடையாது.. நம் வீட்டில் ..பக்கத்து வீட்டில்.. நம் தெருவில் நடப்பது ..நமக்கு சீரியஸாகத் தெரியாது. இவர் எப்படி சீரியஸாக கண்டு.. கதையாக்கி விடுகிறார் என்பது ஆச்சரியம்! ஒரு கட்டத்தில் நாமும் இவர் போல எழுதி விடலாம் என்று கூட தோன்றும்.. ஆனால் இவ்வளவு நுட்பமாக உட்கிரகித்து.. உரிய இடத்தில்.. உரிய வார்த்தைகளோடு.. வெளிப்படுத்த முடியுமா என்ற பயம் ..மிரட்சி வந்துவிடும்..”குதிப்பி” நாவலில்.. சமையல்காரர்களை மையப்படுத்தி என்னமாய் எழுதி இருந்தார் காமுத்துரை. அதுவே இன்னும் “ஹேங்ஓவராக “இருக்கும் போது.. இன்றைக்கு இந்த சிறுகதை தொகுப்பு வந்திருக்கிறது.

ஒவ்வொரு சிறுகதையுமே வாசகனை வளைத்து போட்டு கிறங்க வைக்கும் வசீகரத்துடன் இருக்கிறது .கதையின் கதாபாத்திரங்கள் மீது வாசகனுக்கு இரக்கமும்.. கோபமும்.. ஆற்றாமையும் ஏற்பட்டு விடுகிறது. கதையின் ஆரம்பத்தில்… தொடர்வில்.. கதை முடிவு இப்படித்தான் இருக்கும் என சற்றும் யூகிக்க முடியாத படி ஒவ்வொரு கதையுமே .. நியாயமான முடிவுடன் அமைந்து விடுகின்றன.. குடியின் கேட்டால் தாயே மகன் “இறந்து தொலையட்டும்” என விட்டு விடுவதை” யானைத்தாலி” கதை நியாயப்படுத்துகிறது. இப்படி ஒவ்வொரு கதையின் உள்ளடக்கத்தையும் விமர்சனம் என்ற பெயரில் வெளிப்படுத்துவது வாசகனின் வாசிப்பு ‘திரில்’ இல்லாமல் செய்து விடும் என்பதனால் ஒவ்வொரு கதையின் உள்ளடக்கத்தையும் வேண்டுமென்றே வெளிப்படுத்த விருப்பமில்லை!

சிவப்புச் சிந்தனைகள் ..காவி அரசியல்.. சங்க வாதியின் நேர்மை.. தாய் பாசம் ..மாமியார்- மருமகள் உறவு.. சொந்தங்களுக்கு இடையே ரத்த உறவுகளுக்கு இடையே ஏற்படும் கொடுக்கல், வாங்கல்கள் அடிப்படை மருத்துவ வசதி கூட இல்லாத கிராமங்கள் .. நண்பர்களிடையேநிலவும் நையாண்டி கலாட்டா.. வெள்ளந்தியென நாம் கருதுவோரிடம் இருக்கும் வஞ்சகஏமாற்றுத்தனம்.. வஞ்சகம் இல்லாமல் உழைக்கும் உழைப்பாளிகள்.. வாய்ப்பேச்சு மூலமே காரியம் சாதிக்கும் கடை உரிமையாளர்.. சீரியசான விஷயத்தையும் சிக்கென முடித்துவிடும் கிராமத்து ஜனம் ..இந்தக் காலத்திலும் பிழைக்கத் தெரியாதவன் என பெயரோடு நேர்மையாக இருக்கும் சில மனிதர்கள்.. கணவனை திருத்த மனைவி எடுக்கும் அதிரடி முடிவு.. கந்துவட்டி பிரச்சனை.. வறுமை.. கொரோனா காலத்தில் உறவுகளுக்கு இடையே நிலவிய யதார்த்த நிலைமைகள்..என இவை
எல்லாம் கதை கருக்களாகியுள்ளன.

நாம் சமூகத்தில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்தையும் ..மிக எதார்த்தமாக.. வசீகரமாக.. வாசகனை கட்டிப்போடும் எளிய வார்த்தைகளில்..  வாசிப்பை நிறுத்த முடியாத அளவுக்கு எழுதி இருக்கிறார் எழுத்தாளர் ம. காமுத் துரை. இன்னும் இப்படிப்பட்ட படைப்புகள் அவரிடமிருந்து நிறைய வரும்…நிறைவாய் வரும் என ஆவலாய் எதிர்பார்க்கிறோம்..

ஒவ்வொரு வாசகனும் பல நூல்களை வாசித்து தெரிந்து கொள்ளக்கூடிய ஏராளமான விஷயங்களை.. இந்த 17 சிறுகதைகளில் ..176 பக்கங்களிலேயே கிடைத்து விடுகிறது. வாசித்த பின் வாசகனுக்கு ஒரு வாசிப்பு திருப்தியையும் நூல் தருகிறது என்றால் அது மிகையல்ல.!

யானைத்தாலி  |  ம.காமுத்துரை

டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் வெளியீடு
176 பக்கங்கள்: ரூபாய் 200/-

புத்தகம் வாங்க இங்கே கிளிக் செய்யவும்

https://thamizhbooks.com/product/yaanai-thaali/

சூரியதாஸ்  கவிதைகள்

சூரியதாஸ் கவிதைகள்




நிறங்களின் உரையாடல்
*****************************
நீலம், கருப்பு, சிவப்பு மூன்றும் ஒன்றாய்ச் சேர்ந்து
சமூக நீதி காத்தல் பற்றி
மும்முரமாய்ச் சிந்தித்துக் கொண்டிருந்தன.

அப்போது முந்திரிக்கொட்டையெனக் காவியும்
இடையில் வந்து மூக்கை நுழைத்தது.

வண்ணங்களிடையே உரையாடல்
முறையாய்த் தொடர்ந்தது.

மாட்டுச் சாணி பூசி
மூத்திரம் குடிக்கப்
பரிந்துரைக்கிறார்களே என்றது நீலம்

கிருமிகள் சாகும் என்றது காவி

சாதி,மத வெறுப்பை உமிழ்கிறார்களே என்றது
கலையுடன் கருப்பு

நல்லது.
மகா மந்திரியாகலாம் என்றது காவி.

பெட்ரோல் டீசல் விலை
எகிறிவிட்டதே.
கால்நடையாய் மாறச் சொல்வது தான்
திட்டமோ
என்றது சிவப்பு.

நடப்பது நல்லது.
சக்கரை வியாதி அண்டாது
என்றது காவி

மக்கள் நாய்க்கறி சாப்பிடுகிறார்களே
நல்லதா என்றது நீலம்.

பிற கறிகளின்
விலை குறையும்
விறைப்பாய்ச்
சொன்து காவி

மெத்தப் படித்தவர்ககளும்
அகோரிச் சாமியார்களின்
அந்தரங்கங்க உறுப்பை
முத்தமிடுகிறார்களே கேவலம் என்றது கருப்பு

இதிலென்ன கேவலம்
அதிகார பீடத்தில் அமரலாம் என்று
இறுமாப்பாய்ச் சொன்னது காவி

சிலர் உண்டு கொழுக்கப்
பலர் உழைத்துக் கொண்டேயிருக்கிறார்களே
என்றது சிவப்பு.

நல்லது
வியர்வைச் சுரப்பிகள் நன்கு சுரந்து
உடல் கட்டுக் கோப்பாயிருக்கும்
என்றது காவி.

உண்ண உணவில்லையா

நல்லது
தொப்பை வளராது என்றது காவி.

சொந்த மக்களே சொந்த நாட்டின்
அகதியாகிறார்களே என்றது நீலம்.

நல்லது
யாதும் ஊரே
யாவரும் கேளீர் என உலகம் எங்கும் சென்று வாழலாம்
என்று நையாண்டி செய்தது காவி

மக்கள் நோயில் இறக்கிறார்களே என்றது கவலையில்
கருப்பு

இறப்பது நல்லது
செத்தவரை எந்த நோயும் தாக்காது என்றது காவி

தலை தவிர்த்து உடலாயிருந்து
ஊதியமின்றி உழைத்து உழைத்து நோகிறார்களே
என்றது சிவப்பு

நல்லது
தலையாயிருந்து
பிறரை அடிமை செய்யச் சிந்திக்க வேண்டியிராது
என்று சிரித்துக்கொண்டே சொன்னது காவி

இப்போது
கருப்பு சிவப்பு, நீலம் மூன்றும் சற்றே
கடுப்புடன்
மூத்திரம் குடிக்கலாம் மூளை வளரும் என்றன

அப்படி வாருங்கள் வழிக்கு என்று அட்டகாசமாய்ச் சிரித்தது காவி

என்ன மூத்திரம் என்றது?

எங்கள் மூத்திரம் என்ற கருப்பும் சிவப்பும் நீலமும்
அடக்கமாய் மூளையும் வளரும் சமூகநீதியும் மலரும் என்றன.

ஓரிடத்தில்
அம்பேத்கர், பெரியார், மார்க்ஸின்
மூத்திரம் ஒரு குவளையில் சேகரமாகிக் கொண்டிருந்தது.

இப்போது
கால்கள் நடுநடுங்க அஞ்சிக் காவி அமர்ந்திருந்ததின்
காரணம் புரியவில்லை.

மூடிக்கிடக்கும் மூன்றாம் கண்
************************************
மாணவர்களுக்கு
நுழைவுத் தேர்வு என்னும் கொலைச் சாலை
பசுக்களைப் பாதுகாக்கக்
கோசாலைகள்

எந்நாவில் வாழும்
தமிழைச் சாகடிக்கத் திட்டம் தீட்டுகிறார்கள்
ஐ.நாவில் அரைகுறைத் தமிழ் பேசுகிறார்கள்.

நிதிநிலை அறிக்கையின் முதல் பக்கத்திலிருக்கும்
திருக்குறளுக்குக் கடைசிப் பக்கத்தில் கூட
நிதி ஒதுக்கப்படுவதில்லை..

விதி முறைகளுக்குட் பட்டே
நம் விழிகளைக் குத்துவதாய் விளக்கம் சொல்கிறார்கள்.

தமிழை அழிக்க விஸ்வாமித்திரத்தவம் செய்கின்றார்கள்
இடையில் மோகினியாட்டம் கண்டு
சிறிது மூத்திரம் குடிக்கின்றார்கள்.

இரு புருவ நடுவிலே
நெற்றியின் மத்தியிலே
நேராக நிமிர்ந்து நிற்கும்
தீமைகளைச் சுட்டெரிக்கும்
நெற்றிக்கண்
என்ன ஆனது

நடப்பவற்றைக் கண்டு புருவம் சுருக்கியதில்
நெற்றிக்கண் நெருக்கப்பட்டு
சுருங்கிப் போனதா?

ஒன்றிய அரசின் அநீதிச் சாம்பல் விழுந்து
எரிச்சல் தாழாமல் இமைகள் மூடிக் கொண்டனவா?

சுற்றி நடப்பவற்றால்
நெற்றி வியர்த்து நீர்பட்டு நெற்றிக்கண்
நீர்த்துப் போனதா?

மக்கள் தம் நெற்றிக்கண் திறந்து நீதி வழங்கும் காலம் நெருங்கிவிட்டது.

விதிமுறைக்குட்பட்டே இங்கு எல்லாமும் விரட்டியடிக்கப்படும்.

என்றாலும் ஓர் எச்சரிக்கை.……
மக்கள்
பொங்கியெழுந்தால் அவர்களுக்கு ஏது விதிமுறை
மக்களே சட்டம்
மக்கள் செயலே நீதியாகும்.

அவர்களுக்கே ஒட்டுப் போடுகிறார்கள்
********************************************
ஊட்டச் சத்துக் முறைவால்
உதிர்ந்தாலும்
உயிர் காக்கும் பிராண வாயுவின்றிக் குழந்கைள் இறந்தாலும்
அவர்தம் பெற்றோர் அவர்களுக்கே ஓட்டுப் போடுவார்கள்
மின்னணு வாக்கு எந்திரம் (EVM) இருக்கும் வரை…

நாய்க்கறி தின்று நடையாய் நடந்து
ஊர் சென்றாலும்
நலிந்தவர்கள் அவர்களுககே
ஓட்டுப் போடுவார்கள்
EVM இருக்கும் வரை…

குவியல் குவியலாய்
கோவிட்டில் புதைத்தாலும் கங்கையில் பிணங்கள் மிதந்தாலும்
அவர்களுக்கே ஒட்டுப் போடுவார்கள்
EVM இருக்கும் வரை…

கோவிலுக்குள் வைத்துக் கூட்டுப் பலாத்காரம் செய்தாலும்
எவர் கண்ணிலும் காட்டாமல்
சிதை வைத்து எரித்தாலும் அவர்களுக்கே ஓட்டுப் போடுவார்கள்
EVM இருக்கும் வரை…

மாட்டுக்கறி தின்னக் கூடாதன்று
மகனோ, கணவனோ, தந்தையோ யார் அடித்துக் கொல்லப்பட்டாலும்
இலலாமியப் பெண்களுக்குக் கவலையில்லை
அவர்களுக்கே ஓட்டுப் போடுவார்கள்
EVM இருக்கும் வரை…

கார் ஏற்றிக் கொன்றாலும்
போராட்டக் களத்தில் எத்தனை பேர்
செத்து விழுந்தாலும்
விவசாயிகள்
அவர்களுக்கே ஒட்டுப் போடுவார்கள்
EVM இருக்கும் வரை…

காங்கிரஸ் முக்த் பாரத்தும்
கம்யூனிஸ்ட் முக்த் பாரத்தும் சாத்தியமே
EVM இருக்கும் வரை…

உயிர்க்க உயிர்க்க இந்திய இயேசுவை
சிலுவையில் அவர்கள் அறைவார்கள்
EVM இருக்கும் வரை…

வாக்குச் சீட்டுமுறை வராதவரை அவர்களே வெல்வார்கள்
தினம் தினம் மக்களை அவர்களே கொல்வார்கள்

அவர்களுக்கு ஓட்டுப் போட்டு விட்டுச் செத்துப் போகலாம் அல்லது
உங்கள் ஓட்டுப் போடப்பட்டுச் சாகடிக்கப்படுவீர்கள் EVM இருக்கும் வரை…

இதை அறிந்தால் வெல்லலாம்
அடுத்த தேர்தலில் நின்னு
இதை அறியாதவர் வாயில்
அடுத்த தேர்தலிலும் மண்ணு..

– சூரியதாஸ்