தமுஎகச சிவகாசி: கி.ரா நினைவு சிறுகதைப் போட்டியில் 3வது பரிசு பெற்ற கதை *கடல் தாண்டிய பறவைகள்* – ஜனனி அன்பரசு
‘மிருதுவான அந்த பிஞ்சு விரல்கள் என்மீது படர்ந்தன. இப்போதுதான் விரிந்த ரோஜா மொட்டுக்கள் போல இருந்தன அந்த ஸ்பரிசம்’. அந்த நொடி பொழுதில் திடுக்கென விழித்தபோதுதான் அது கனவு என்று புரிந்துகொண்டான் அறிவு. பனி படர்ந்த மரங்களின் இடையே பாய்ந்து வந்த சூரிய ஒளி கீற்று கண்களை கூச செய்தது. மெதுவாக எழுந்தான். கழிவறைக்கு சென்றான்.
பல் துலக்கிக்கொண்டு இருக்கையில் தன்னுடைய செல்போன் சிணுங்கியது. தன் மனைவி அஞ்சலிதான் கூப்பிடுகிறாள் என்று தெரிந்ததும் அந்த அழைப்பை துண்டித்தான். மறுபடியும் செல்போன் சிணுங்க ஆரம்பித்தது. இந்த முறை அழைப்பை ஏற்றான்,
“என்ன அஞ்சலி அவசரம்? நான் இப்போதுதான் எந்திரிச்சேன். எதுக்கு கூப்பிட்ட?”
“ஆமாம் அவசரம்தான். எனக்கு பனிக்குடம் உடஞ்சுருச்சு. நான் ஹாஸ்பிடல்ல இருக்கேன். அத சொல்லத்தான் கூப்பிட்டேன்”
சில மணித்துளிகள் அமைதியாக இருந்துவிட்டு “என்ன சொல்ற? அதான் இன்னும் 15 நாட்கள் இருக்கே?” என்றான்.
“என்னனு தெரியலங்க. மதியம் தூங்கி எழுந்ததுமே பனிக்குடம் உடஞ்சுருச்சு. உடனே கிளம்பி ஹாஸ்பிடல் வந்துட்டோம். இன்னும் டாக்டர் வரவில்லை. இப்போது வரும் நேரம்தான்” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே பின்னாடி சில சத்தங்கள் கேட்டன. “இதோ டாக்டர் செக் அப் பண்ண வந்துட்டாங்க. நான் பாத்துட்டு கூப்பிடுறேன்” என்று சொல்லிவிட்டு அஞ்சலி அழைப்பை துண்டித்தாள்.
அறிவுக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை. மனதில் ஒரு படபடப்பு வர ஆரம்பித்தது. கடைசியாக அஞ்சலியை நியூயார்க் ஏர்போர்டில் விட்டு வந்தது நினைவு வந்தது.
“நீ கண்டிப்பா போய்தான் ஆகணுமா?”
“இதென்னங்க கேள்வி? எல்லாம் ரெடி ஆகியாச்சு, இன்னும் அரை மணி நேரத்துல ஃப்லைட் ஏறனும். ஏன் இப்போ கேக்குறீங்க?”
“நீ இப்படி கர்ப்பமா இருக்கப்போ உனைய தனியா விட எனக்கு மனசு வரல”
“எனக்கு புரியுதுங்க. ஆனா என்ன பண்றது? இது நமக்கு முதல் குழந்தை. இங்க குழந்தை பெத்துக்குட்டா நம்மால எப்படி தனியா குழந்தை பாத்துக்க முடியும்? நம்ம அம்மா, அப்பாவும் வர முடியாதுன்னு சொல்லிட்டாங்க. எல்லாம் கொஞ்ச நாள்தான். குழந்தை பிறக்கிற நேரத்துல லீவ் போட்டுட்டு நீங்க இந்தியா வந்துடுங்க. அப்புறம் எனைய கூடிட்டு போய்டுங்க.”
இருவரும் சமாதானம் செய்து கொண்டாலும் மனம் கனமாகவே இருந்தது. பிரியும் முன்னர் வார்த்தைகள் அற்று போய், கட்டிக்கொண்டு நின்றபோது கண்களில் நீர் வழிந்தது. துக்கத்தை அடைக்க முடியாமல் தொண்டையில் சுளீர் என்று நெருப்பு பட்டது போல வலி. அறிவு கொஞ்சம் சுதாரித்து கொண்டு, “சரி அஞ்சலி நேரம் ஆகிடுச்சு, கிளம்பு. ஃப்லைட் மாறுறப்ப இடம் பத்திரமா பாத்து மாறு. சிரிச்சிட்டே போ” பொய்யான புன்னகையை உதட்டில் ஏந்திக்கொண்டு பிரிந்த அந்த நிமிடம் அறிவின் கண்களில் நிற்கிறது.
மொபைலை எடுத்து தேதியை பார்த்தான். மே 22. மே 20ஆம் தேதி அவன் இந்தியாவிற்கு செல்ல டிக்கெட் போட்டு வைத்திருந்தான். ஆனால் கொரோனா வந்த பின் பயணங்கள் அனைத்தும் ஸ்தம்பித்துவிட்டது. அடுத்த தெருவிர்க்கே போக முடியாத நேரத்தில் அவன் எவ்வாறு கடல் தாண்டி பயணம் செய்ய முடியும். அறிவு அமெரிக்காவில் நியூயோர்க் நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக வேலை செய்கிறான். நுண்ணுயிரிகளை பற்றி ஆராய்ச்சி செய்யும் அவனுக்கு இந்த கொரோன வைரஸ் பற்றியும் பெருந்தொற்றின் கொடுமையை நன்கு அறிந்திருந்தது. இந்த எதிர்பாராத சிக்கலை எண்ணி அவன் வருத்தப்படாத நாட்களே இல்லை.
அஞ்சலியிடமிருந்து மறுபடியும் அழைப்பு வந்தது.
“டாக்டர் என்ன சொன்னாங்க?”
“பனிக்குடம் உடைந்தாலும், கற்பவாயில் இன்னும் திறக்கலையாம். வலியை தூண்டி விட ட்ரிப்ஸ் மூலம் மருந்து ஏத்த போறாங்களாம். மெதுவா நடந்து கொடுக்க சொல்லிருக்காங்க”
“காலைலதானே கொரோன டெஸ்ட் கொடுத்திருக்க. இன்னும் ரிசல்ட் வந்துருக்காதே?”
“ஆமா ங்க. இன்னும் வரல. ஆனா என்ன பண்றது. இது அவசரம் ஆச்சே”
“ஓ அப்போ நயிட்குள்ள குழந்தை பிறந்துடுமா? ஜாலி ஜாலி”
“அடப்பாவி. உனக்கு ஜாலிதான். நான்தான வலி தாங்க போறேன்”
“இப்போ வலிக்க ஆரம்பிச்சுடுச்சா அஞ்சலி?”
“இல்லைங்க சுத்தமா வலி எதுவும் இல்லை. அதுக்குத்தான் நடக்க சொல்றாங்க. மருந்தும் போட போறாங்க. அப்படியும் வலி வரலைனா சிசேரியன் பண்ணிடுவங்களோன்னு பயமா இருக்குங்க.”
“பயப்படாத அஞ்சலி. அதெல்லாம் தேவைப்படாது. குழந்தை உன்னை கஷ்டப்படுத்தாம நல்லபடியா பொறந்துடும்”
“நர்ஸ் வந்துட்டாங்க. நான் அப்பறம் கூப்பிடுறேங்க”
என்னதான் மனைவியிடம் தைரியம் சொன்னாலும் அறிவு மனதில் பயம் கலந்த படபடப்பு இருந்தது. ஒரு கோப்பையில் காபியும் சூடான ரொட்டி துண்டுகளையும் செய்து, மேசைமீது அமர்ந்தான். ஆனால் அவனுக்கு சாப்பிட விருப்பம் இல்லை. மொபைலை எடுத்து அழைப்பு ஏதும் வந்திருக்கிறதா என்று பார்த்தான். எதுவும் வரவில்லை. அவன் பெற்றோர்களுக்கு பேசலாம் என்று அழைத்தான்.
“என்ன தம்பி அஞ்சலியை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டாங்க போல”
“ஆமா அப்பா. உங்களுக்கு எப்படி தெரியும்?”
“அஞ்சலியோட அப்பா கூப்பிட்டாங்க”
“ஓ சரி சரி”
“இந்தா உங்க அம்மாகிட்ட பேசு. அவதான் தவியா தவிக்கிறா”
அறிவின் அம்மா பேச ஆரம்பித்தார்.
“தம்பி அஞ்சலிக்கு வலி வந்துடுச்சாம்ல. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிடங்களாம்”
“இல்ல மா. இன்னும் வலி வரல. பனிக்குடம் உடஞ்சுருக்கு. மருந்து போட்டு வலி வர வைக்கபோரங்களாம்.”
“அப்படியா? அப்போ நாங்க உடனே கெளம்புறோம். பேரகுழந்தைய பாக்கணும். ஈ-பாஸ் ஏதோ போடனுமாம். உடனே போட்டுவிடு”
“உடனே கிடைக்குமானு தெரியல. ஆஸ்பத்திரியிலயும் உள்ள விடுவங்களான்னு தெரியல. அதுவும் இல்லாம இந்த நேரத்துல நீங்க ஒரு ஊர்ல இருந்து இன்னொரு ஊருக்கு போய் குழந்தையை பாக்குறது அவளோ பாதுகாப்பானது இல்லை. இருங்க மா. பாக்கலாம்”
“என்னடா இப்படி சொல்ற? நான் அந்த கிருமியை தூக்கிட்டு போய் என் பேரகுழந்தைக்கு குடுத்துடுவேனா? நான் அப்படி செய்வானா?”
“நீங்க அப்படி செய்ய மாட்டீங்க. ஆனால் நிலைமை அப்படி இருக்கு”
“என்னவோ போ. நான் உன் குழந்தைய பாக்க போகல. விடு”
அறிவுக்கு கோவம் உச்சிக்கு போனது.
“அம்மா நான் என்ன வேணும்னு சொல்றேனா? அவ அங்க பாவம் தனியா வலில இருக்கா. அவக்கூட என்னால இருக்க முடியலயே, குழந்தையை நாம பாக்க முடியாதேனு நினச்சு நானே தவியா தவிச்சு போய் இருக்கேன். நீங்க என்னடான்னா இப்படி பேசறீங்க?”
இருவரும் சில நொடிகள் மௌனமாக இருந்தனர்.
“சரி விடு தம்பி. நீ மனச போட்டு கொளப்பிக்காத. நல்லபடியா குழந்தை பொறக்கும். நீயும் சீக்கிரம் வந்துடுவ.”
எதுவும் பதில் பேசாமல் அழைப்பை துண்டித்தான். பேசினால் அழுதுவிடுவோமா என்ற பயம். என்னதான் பெண் ஒரு குழந்தையை பெற்று எடுத்தாலும் ஆண் அந்த குழந்தையை மனதில் சுமந்து கொண்டே இருக்கிறான். அதிலும் அறிவு மிகுந்த அன்புள்ளம் கொண்டவன். தன் மனைவி கருவுற்ற நேரத்தில் அவளை ஒரு குழந்தை போல தாங்கி வந்தான். முதல் மூன்று மாதங்கள் அஞ்சலி மசக்கையாக இருந்தபோது, சமையல் வேலைகள் வீட்டு வேலைகள் என்று அனைத்தையும் அவனே செய்துவந்தான். கருவுற்ற நாட்களில் பெண்களுக்கு தன் தாய் நினைவு அடிக்கடி வரும் என்று கூறுவார்கள். ஆனால் அப்படி ஒரு நினைப்பு வராதவாறு அறிவு அவளை பார்த்துக்கொண்டான்.
மதிய நேரமாகிவிட்டது. அஞ்சலியிடமிருந்து அழைப்பு வந்தது.
“என்ன பண்ற அஞ்சலி? மருந்து போட்டங்களா?”
“ஆமாங்க. மருந்து போட்டு ஒரு மணி நேரம் ஆச்சு. வலி எதுவும் வரல”
“அப்படியா? எதுவும் சாப்பிட்டயா?”
“இல்லைங்க ஏதும் சாப்பிட கூடாதாம். ஜூஸ் மட்டும் குடிச்சேன். பசி எதுவும் இல்ல.”
“அடுத்து டாக்டர் வந்தாங்களா?”
“இல்லை. நர்ஸ் மட்டும் செக் பன்னாங்க. எந்த முன்னேற்றமும் இல்லைனு சொன்னாங்க”
“சரி எதுவும் நினைக்காத. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. ஏதாவது சந்தோசமா இருக்குர மாறி பாட்டு கேளு”
“அதுக்குத்தான் உங்களுக்கு கூப்பிட்டேன்”
“பாருடா.. என்ன லவ்ஸா?”
“ஆமா லவ் தான். இருக்க கூடாதா?”
“இருக்கலாம். இருக்கலாம். இந்த மாறி நேரத்துல லவ்ஸ் பண்ணுனா, ஹார்மோன்ஸ் ஒர்க் ஆகி, ஈஸியா குழந்தை பொறக்குமாம்.”
“டேய் நான் ஆஸ்பத்திரில இருக்கேன் டா” என்று வெக்கம் வந்து சிரித்தாள்.
“ஹாஹா. சரி சரி. உன்னோட அம்மா கூட இல்லையா? டா போட்டு பேசுரயே?”
“அவங்க பாவம். படுத்ததும் தூங்கிட்டாங்க.ம்ம்ம்”
“என்ன ஆச்சு அஞ்சலி? குரல் மாறுது?”
“லேசா வலிக்க ஆரம்பிச்சுடுச்சுங்க”
“வெரி குட் அஞ்சலி”
“என்னது வெரி குட் டா?”
“ஆமா வலி வந்துட்டா மருந்து உன் உடம்புல வேலை செய்யுது, அதை உன் உடம்பு ஏத்துக்குதுன்னு அர்த்தம். சந்தோஷம்தானே?”
“அட எல்லாத்தையும் நல்லதாவே பாக்க உங்களால மட்டும்தான் முடியும்ங்க. சரி டாக்டர் வர சத்தம் கேக்குது. நான் அப்பறமா கூப்பிடுறேன்”
“சரி என்னனாலும் கூப்பிடு. நான் உனக்காக காத்துட்டு இருப்பேன்”
அறிவு அமெரிக்காவில் இருந்தாலும் அவன் மனம் முழுவதும் இந்தியாவில் இருந்தது. ‘நான் என் மனைவியுடன் இருந்திருக்க வேண்டும். அவளின் கைகளை கோர்த்துக்கொண்டு உனக்காக நான் இருக்கிறேன் என்று கூறியிருக்க வேண்டும். அவள் வலியில் அவதிப்படும் நேரம் முதுகை தடவியிருக்க வேண்டும். அவள் தலையை வருடி அவளை ஆசுவாசப்படுத்தி இருக்க வேண்டும். குழந்தை பிறந்தவுடன் அந்த பிஞ்சு விரலை தொட வேண்டும். இரு கைகளிலும் அள்ளி எடுத்து கொஞ்ச வேண்டும். இந்த நொடி என் வாழ்நாளில் முக்கியமான ஒரு தருணம். ஆனால் நான் இந்த அறையில் தனியாக அமர்ந்திருக்கிறேன். இந்த கடும்பனி காலம்கூட என் மனதில் உள்ள அனலை குளிர்விக்க முடியவில்லை. இந்த உலகமே சூனியம் ஆனதாக உணர்கிறேன். இந்த கொரோன என் வாழ்க்கைவின் அற்புதமான தருணத்தை பரித்துவிட்டது. பணம், புகழ் என எது போயிருந்தாலும் திரும்பி பெற முடிந்திருக்கும். ஆனால் இந்த தருணத்தை தவற விட்டதை எண்ணி என் வாழ்நாள் முழுதும் உள்ளம் குமுறும். எனக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான் போல’ என்று தன் மனதிற்குள் ஆதங்கத்தை கொட்டி கொண்டு இருந்தான்.
சில மணி நேரங்கள் கடந்தன, அஞ்சலியிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. செல்போனை கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தான். யாருக்கும் அழைக்கலாம் என்று பார்த்தால், இந்தியாவில் அது இரவு நேரம். ஒருவேளை உறங்கிக்கொண்டு இருப்பவர்களை எழுப்பிவிட்டால் கஷ்டமாக இருக்கும் என்று காத்திருந்தான். என்ன செய்வது என்ன நினைப்பது என்றுகூட தெரியாமல் ஏதுமற்ற நிலையில் அமர்ந்திருந்தான். அவ்வப்போது காலை கண்ட கனவு மட்டும் கண்ணில் வந்து சென்றது.
மாலை பொழுது ஆகியது. சரி இந்தியாவில் விடிய தொடங்கி இருக்கும். இப்போது யாருக்காவது அழைத்து கேட்டு பார்க்கலாம் என்று அலைபேசியை எடுத்தான். அஞ்சலியுடைய அப்பாவிடமிருந்து அழைப்பு வந்தது. பயம் படபடப்பு என்னவாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டே அழைப்பை ஏற்றான்.
“மாப்பிள்ள, பேத்தி பொறந்துருக்கா. சுகப்பிரசவம். அம்மாவும் குழந்தையும் நல்லா இருக்காங்க. கரெக்டா வெள்ளிக்கிழமை காலைல பொறந்துருக்கா. மகாலட்சுமி வீட்டுக்கு வந்துருக்கு”
அறிவின் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தன.
“ரொம்ப சந்தோசம் மாமா. குழந்தை போட்டோ அனுப்புறீங்களா?”
“இதோ அனுப்புறேன் மாப்பிள்ள” என்று அழைப்பை துண்டித்தார்.
வாட்சப்பில் வந்த அந்த புகைப்படத்தை பார்த்தான். பிஞ்சு விரல்கள், மிருதுவான தோள், நல்ல சிவப்பு நிறம், அழகான முகம் என்று கண்களில் ஒத்தி கொள்ளும் அழகிய குழந்தை. இப்போதும் கண்களில் கண்ணீர் வந்தது. அது ஆனந்த கண்ணீர் இல்லை. என் குழந்தையை என் கையால் ஏந்த முடியவில்லையே என்ற துக்கம்.
சில நேரத்திற்கு பின் அஞ்சலியிடமிருந்து அழைப்பு வந்தது.
“அஞ்சலி நீ ரொம்ப தைரியசாலி. உன்ன நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு. வலியை தாங்கி குழந்தைய பெத்துக்குட்ட. அதுவும் நான் உன் அருகில் இல்லாதபோதும், மனம் தளராம இருந்துட்ட. நிஜமாவே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு”
“எனக்கும்தான் சந்தோசமா இருக்குங்க. பாப்பா போட்டோ பாத்தீங்களா?”
“பாத்தேனே. அவ அப்படியே என்ன மாதிரி”
“அடப்பாவி. என்ன மாதிரி இல்லையா?”
“உன்ன மாதிரி கொஞ்சம். என்ன மாதிரி நிறைய இருக்கா”
“போங்க”
“சரி சரி நீ ரெஸ்ட் எடு. நல்லா சாப்பிடு. பாப்பா தூங்குறப்ப தூங்கு. உன் உடம்ப பாத்துக்கோ. பாப்பாவ பாத்துக்கோ. பாப்பா முழிக்குறப்ப வீடியோ கால் பண்ணு”
“ஏங்க”
“என்ன அஞ்சலி?”
“நீங்க எப்போ வருவீங்க?”
“தெரியல. ஃப்லைட் விட்டதும் வந்துடுவேன்”
“சீக்கிரம் வாங்க. உங்களுக்காக நானும் பாப்பாவும் காத்துட்டு இருக்கோம்” அஞ்சலிக்கு தெரியாமலே அஞ்சலியின் கண்களில் நீர் வழிந்தன.
“அழுகாத அஞ்சலி. இப்படியெல்லாம் நடக்கும்னு நாம நினைச்சுக்கூட பாக்கல. இந்த கொரோன வரும், ஊரடங்கு வரும்னு யாருக்கு தெரியும். நாம எதுவும் தப்பு பண்ணல. விடு. நான் சீக்கிரமே வந்துடுறேன். வந்து உன்னையும் பாப்பாவையும் கூட்டிட்டு போறேன்”
இந்த கடல்தாண்டிய பறவைகள் பிரிந்திருப்பது விதியா? அல்லது காலத்தின் கட்டாயமா? பதில் கூறுவார் யாரோ!
மேற்கண்ட கதையானது தமுஎகச சிவகாசி கிளை சார்பில் நடத்தப்பட்ட கி.ரா நினைவு சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதையாகும்.