கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 19 – நா.வே.அருள்
கால பைரவர்கள்
**************************
அவர்களுக்குக் கவனிக்க நேரமில்லை
அவர்கள் ஒவ்வொரு சுங்கச் சாவடியிலும்
வரி வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள்
அவர்களுக்குக் கவனிக்க நேரமில்லை
ஒவ்வொரு பொருளின் விலையையும்
உயர்த்த வேண்டியிருக்கிறது.
அவர்களுக்குக் கவனிக்க நேரமில்லை
ஒவ்வொரு மருத்துவ மனைக்கும்
தடுப்பூசிகளை விற்க வேண்டியிருக்கிறது.
அவர்களுக்குக் கவனிக்க நேரமில்லை
ஒவ்வொரு குடிமகனின் குடியுரிமையை
ரத்து செய்ய வேண்டியிருக்கிறது.
அவர்களுக்குக் கவனிக்க நேரமில்லை
கலைமகளின் சடலத்தை
ஒவ்வொரு பள்ளிக்கும் அனுப்ப வேண்டியிருக்கிறது.
அவர்களுக்குக் கவனிக்க நேரமில்லாதபோதும்
கபாலம் பிளக்கும் கலப்பை ஆயுதங்களுடன்
உடல் முழுதும் புழுதி பூசிக்கொண்ட
ருத்ர மூர்த்திகள்
இன்னும்
சுடலைத் தாண்டவம் ஆடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அவர்களுக்குக் கவனிக்க நேரமில்லாதபோதும்
பரம்படித்த பார்வதிகளின்
முலைப்பால்
தேசமெங்கும் தெறித்துக்கொண்டுதான் இருக்கிறது.
ஆனால் ஒருநாள்
நிச்சயம் குலுங்கத்தான் போகின்றன
சுடலையாண்டிகளின் மார்புகளில்
சர்வாதிகாரிகளின்
மண்டையோடுகள்!
கவிதை – நா வே அருள்
ஓவியம் – கார்த்திகேயன்
முந்தைய தொடரை வாசிக்க:
கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 18 – நா.வே.அருள்