Posted inPoetry
காலமாய் கரைந்தவர்கள் கவிதை – சிவகுமார்
உங்கள் நினைவுகளைச் சுமந்தே
என் இமைகள் கனக்கின்றன்.
நாளை வருவேன் என்றாயே
மடிந்த நாளைகள் எத்தனையோ
நீ வரும் நாளை எதுவென நானறிவேன்.
கண்ணாடிச் சிதறல்களில் வழிந்தோடும்
இரத்தச்சேற்றின் ஊடே சிதறிக்கிடகின்றதே
என் தம்பியின் பால்புட்டி.
என் அன்னையின் முகமெங்கே
சேலையே அவளின் அடையாள முகமானதே
என்னை சுமந்தவளை மண் சுமக்கின்றது.
அப்பா…..
உன் ஒரு நொடி கண்ணயர்வில்
என் ஒவ்வொரு நொடிப்பொழுதும் ரணமானதே.
காலமாய் கரைந்த கரும்புகை
பார்த்து அன்று விம்மிய குரல்களின்
அர்த்தம் இன்று புரிகின்றது.
நீங்கள் அன்றே காற்றோடு கலந்து
என் சுவாசமாகி விட்டீர்களென்று.
ஆதலால் காற்றோடு பேசுகிறேன்
அன்னையே உன் ஸ்பரிசம் தேடி.
