Posted inPoetry Series
கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: கணக்கு 30 – நா.வே.அருள்
கணக்கு
*********************
நாங்கள் காயம்பட்டுத் திரும்பியிருக்கிறோம்
துரோகங்களின் ஆயுதங்கள்
துளைத்துவிட்டன.
இன்று இரவு எங்கள் கூடாரத்தில்
கர்ஜிக்கும் சிங்கத்துடன் உறங்கி எழுவோம்.
பிடரி மயிர் சிலிர்க்க
பிறகு பிறகு என்று
போராடிக் கொண்டே இருப்போம்.
எங்கள் ஓணான்களுடன்
பச்சோந்தியை அனுப்பி வைக்கும்
தந்திர மிருகங்களின்
குணமறிவோம்.
விடுதலை என்பது வலி மிகுந்த
சுயமரியாதை.
அதன் ருசி துரோகிகளுக்குத் தெரியாது.
இது தோல்வியல்ல
துயரங்களைக் குருதியில் குழைத்து
மனம் முழுதும் பூசிக் கொள்கிறோம்
எங்கள் ஏர்க்கலப்பைகள்
ஆயுதங்களாக மாறிவிடுகின்றன.
துரோகிகளின் பாதத் தடங்கள்
இந்தியாவின் பிச்சைப் பாத்திரங்கள்.
எங்களுக்குத் தெரியும்
விடுதலை வீரர்களின் பாதத் தடங்கள்
சுதந்திர தேவியின் மலர் மாலைகள்.
கவிதை – நா.வே.அருள்
கார்த்திகேயன் – ஓவியம்
