One Cut Two Cut Moviereview By Era. Ramanan திரைவிமர்சனம்: ‘ஒன் கட் டூ கட்’  - இரா. இரமணன்

திரைவிமர்சனம்: ‘ஒன் கட் டூ கட்’ (one cut two cut) – இரா. இரமணன்




பிப்ரவரி மூன்றாம் தேதி வெளிவந்திருக்கும் கன்னட திரைப்படம் ‘ஒன் கட் டூ கட்’. சமூகப் பிரச்சனைகளை நகைச்சுவையாக சொல்ல முயன்றிருக்கின்றனர். அண்மையில் மறைந்த புனீத் ராஜ்குமார் நினைவாக அஷ்வினி புனீத் ராஜ்குமாரும் குருதத்தா தல்வாரும் இணைந்து தயாரித்துள்ளனர்.வம்சிதர் போகராஜூ இயக்கியுள்ள இதில் டேனிஷ் செயிட், பிரகாஷ் பெலவாடி, சம்யுக்த ஹோர்நாட், வினீத்’பீப்’குமார், சம்பத் மைத்ரேயா, அருணா பால்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிரச்சனைகளை விவாதிக்கும் குழுவை சேர்ந்த ஒருவர் ஆர்பாட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்கிறார்.அதற்கு நான்கே பேர்தான் வருகின்றனர். தங்கள் பிரச்சனைகளை அரசு கவனிக்க ஏதாவது தீவிரமாக செய்ய வேண்டும் என்று திட்டமிடுகின்றனர்.வேகன் உணவை ஆதரிக்கும் ஒரு வடநாட்டுப் பெண், நகைச்சுவை நடிகராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள தத்தளிக்கும் சென்னை வாலிபனொருவன், பசு மாமிசத்தை தடை செய்யக் கோரும் முன்னாள் ராணுவ வீரர், தன்னைவிட அமிதாப்பச்சனுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் தன் கலை வாழ்வு சிதைந்துவிட்டதாக நினைக்கும் ரேடியோ தொகுப்பாளர் ஒருவர், இவர்களே இந்த நான்கு பேரும்.

முன்னாள் ராணுவ வீரரின் துப்பாக்கி ஒன்றை எடுத்துக்கொண்டு சிவப்பு உடைகளை அணிந்துகொண்டு முகம் தெரியாமல் இருக்க ஜோக்கர் போன்ற முகமூடிகளை அணிந்து கொண்டு ‘புரட்சி’ என்று முழங்குகின்றனர். அரசுப் பள்ளி ஒன்றில் கொரோனா காரணமாக குறைவாகவே வந்திருக்கும் மாணவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கின்றனர். அன்றுதான் முதன்முதலாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கோபி என்கிற கைவினை ஆசிரியர் இந்த நிலைமையை எவ்வாறு சமாளித்து மாணவர்களை காப்பாறுகிறார் என்பதே கதை.

கதாநாயகன் கோபி சற்று விசித்திரமானவன்.பழைய ஸ்கூட்டரில் மெதுவாக செல்லும் அவன் சாப்ளின் போன்ற தோற்றமும் பாவனைகளும் உடையவன். ஆங்கிலத்தை தவறாக எழுதினாலும் பேச்சு ஆங்கிலேயர்கள் பேசுவதுபோல் பார்மலாக பேசுபவன்.குழந்தைகளைக் கவரும் வண்ணம் காகிதத்தில் பல வடிவங்களை எளிதாக செய்பவன். அவன் மணம் முடிப்பதற்காக பெண் பார்த்த பள்ளி ஆசிரியையும் அங்கு பணிபுரிகிறார்.அவளது தந்தை அவன் ஆர்ட் பட்டதாரி என்பதால் திருமணம் செய்து கொடுக்க மறுத்துவிடுகிறார். இப்போது இந்த ‘தீவிரவாதிகள்’ நிகழ்வில் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அவளுக்காவும் அவன் செயல்படுகிறான். இறுதியில் துணிச்சலாக தன் உயிரையும் பொருட்படுத்தாமல் எல்லோரையும் காப்பாற்றுகிறான். அவளுக்கு வேறு ஒருவனுடன் திருமணம் நடப்பதாக படத்தின் இறுதியில் காட்டுவது சற்று சோகத்தை வரவழைக்கிறது.

கதையினூடே அரசுப் பள்ளிகளில் வழங்கும் தரமற்ற உணவு, சுத்தமற்ற கழிப்பறைகள் போன்றவை காட்டப்பட்டாலும் அவை போதுமான அளவுக்கு திரையில் வளர்க்கப்படவில்லை என்கிறார் ஒரு விமர்சகர். நான்கு பேரும் தங்கள் கோரிக்கைகளை தனித்தனியே எழுதி முதலமைச்சரின் செயலாளருக்கு அனுப்பும்போது அவை ஒன்றுக்கொன்று முரணானதாக இருக்கின்றன. இது சமூக ஊடகப் போராளிகள் பிரச்சனைகளை முழுமையாகப் பார்க்காமல் துண்டு துண்டாக பார்க்கிறார்கள் என்கிற விமர்சனமாக எடுத்துக் கொள்ளலாம். நான்கு பேருமே கன்னடம் பேசுவதில்லை. இதுவும் மக்கள் பிரச்சனைகளில் தலையிட வேண்டுமென்றால் அவர்களது உணவு,கலாச்சாரம்,மொழி ஆகியவை குறித்து அறிந்திருக்க வேண்டும் என்பதை சுட்டுவதாக உள்ளது.

தொலைக்காட்சி சேனல்கள் முக்கியமான சமுதாயப் பிரச்சனைகளை விட டிஆர்பி ரேட்டிங் வரும் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது பல படங்களில் காட்டப்படுகிறது. இதிலும் குழந்தைகள் பிணைக் கைதிகளாக இருப்பதைவிட முதலமைச்சரின் மகள் ஹூலா ஆடுவதை படமாக்க சொல்கிறார் சேனல் உரிமையாளர்.

அரசின் ரகசியப் படை செயல்படுவதையும் கேலிக்கூத்தாக காட்டியிருக்கிறார்கள். நகைச்சுவை என்று எடுத்துக் கொள்ளலாம் என்றாலும் அதன் கொடுமைகளை அனுபவித்தவர்களை நினைத்துப் பார்க்கும்போது அந்தக் காட்சிகளை ரசிக்க முடியவில்லை. ஆனால் அதே சமயம்,விஷயம் வெளியில் வராமல் இருக்க ’ தீவிரவாதிகளை’ மட்டுமல்ல அங்குள்ள அனைவரையுமே தீர்த்துக் கட்டிவிடுங்கள் என்று முதலமைச்சரின் செயலாளர் உத்தரவிடுவது அரசின் இரக்கமற்ற அரக்கத்தன்மையை காட்டுகிறது.

மொத்தத்தில் தீவிரமான சமூக பிரச்சனைகளை நகைச்சுவையாக சொல்ல முயன்றிருக்கிறார்கள். ஆனால் வெற்றி பெறவில்லை. நகர்புற நடுத்தர மக்களை நோக்கி எடுக்கப்பட்ட படம்.