Posted inPoetry
கரட்டான் கவிதை – இரா. கலையரசி
வேலியில் தவழ்ந்து வந்த
வயதான கரட்டான் ஒன்று
கண்களை சுருக்கிக் கொண்டது.
தடித்த கண்கள் கோலிகுண்டாக
வறண்டு வாடிய நாக்கை நீட்டியது.
தொண்டைகுழி விட்டு விட்டு துடிக்க
மீனின் செதிலாய் தோல் சொரசொரக்க
நகர மறுத்து உடம்பு நிற்கிறது.
பொடைத்த கண்கள்” வாங்கிய
அடியில் வீங்கி பருத்து இருக்கிறது.
பழத்தைக் கொரித்த அணில் ஒன்று
பயத்தில் பதுங்கி நிற்க,
கீச்சு குரலில் ரகசியம் பேசியது.
“பேயி பேயி”னு ஓட எத்தனிக்க
விழ இருந்த அணிலை
முதிர்ந்த கைகள் தாங்கின.
அம்மா நினைவுக்கு வந்துசேர
ஆசையாய் பார்த்தது குட்டிஅணில்.
பழுத்த பழத்தினை பார்த்த மகிழ்வாய்
முரட்டு கரட்டானை தொட்டு பார்க்க
“மெல்லிய அணிலின்” கைகள் படர
அணிலை அணைத்தபடி
தரைக்கு உயிரை தந்தது.
