வானவில்லை வளைத்தாடும் எண்ணத்துப்பூச்சி கவிதை – சே கார்கவி

வானவில்லை வளைத்தாடும் எண்ணத்துப்பூச்சி கவிதை – சே கார்கவி




அந்த வானத்தையும்
நிலவையும் பார்த்தபடி
அமைந்த உள்ளத்திற்கு
வெள்ளைப் பர வளையத்தைச் சுற்றி
மையிடப்படுகிறது

நேராய்
வலதாய்
இடதாய்
குறுகலாய்
சற்று இட வலமாய்
இவற்றை வாரிய
விரிந்த நிலையாய்
உருண்டாடும் கண்களுக்கு மட்டும்தான்
எத்தனைத் திருஷ்டி வெடிப்புகள்….!

ராட்சசர்களை
ஒரு கூண்டில் வைப்பதற்கு
கடவுள் மனங்கள்
சாவிகளை விழுங்க வேண்டியுள்ளது
உணர்வுகள் மனங்களைத் தாண்டி
சாத்தான்களின் மலங்களில்
ஒரு விதை வளர கனவினைத் தெளிக்கத் தொடங்குகின்றன….

மை வேண்டாம்
சிறு கனவு வரைந்து
காதம் தொடர்ந்தால் போதும்
வாழ்க்கை இடதோ வலமோ வசப்பட்டுவிடும்
என் நிழலுக்கு…

– கவிஞர் சே கார்கவி

கார்கவியின் கவிதைகள்

கார்கவியின் கவிதைகள்




எங்கள் ஊர்த் திருவிழா
**************************
சாலையெல்லாம் விளையாட்டுப் பொம்மைகள் இருந்தபோதும்
வயிறோடு பசி விளையாடிக் கொண்டுதான இருக்கிறது
அந்த யாரும் அற்ற குழந்தைக்கு….!

கண்ணாடிக் கடைகளில்
வளையலோடு மின்னுகிறது
காதலனின் கைப்பட்ட வளையல் அணிந்து
குலுங்கச்செய்யும் காட்சி….!

மாரியம்மனும் காளியம்மனும்
ஒன்றோடு ஒன்றோடு பார்த்துக் கொண்டாலும்
உரசாமல் உசாராக செல்கின்றன வடம் பிடித்த வெவ்வேறு சாதிகள்….!

ஏதோ ஒருநாள் செய்த தவறுக்கு
வாண வேடிக்கையை மட்டும் பார்த்துத் தலை நிமிர்த்துகிறது,
அப்பனின் அறியாத தவறு அறியாக் குழந்தை….!

வருடா வருடம் வந்து செல்கிறது…
வாசலோடு சென்று விடுகிறது தெய்வம்
விபூதி பட்டைவரை நிலைத்திருக்கிறது பக்தி…!

அவளதிகாரம்
*****************
காதுகளை அழுத்தி
நீ
தோப்புக்கரணமிடும் பொழுதெல்லாம்
ஒரு சுற்று நான் இளைப்பதும்
உலகம் பல சுற்று மறப்பதுமான நிலையாகிப் போய்விடுகிறது….!

அங்க பிரதட்சணைகளில்
கோயில் பிரகாரமே உன் இடைபிடித்து உருட்டி
கோரிக்கையைக் கடவுளின் முன் வைக்கிறது…..!

மெட்டிகளோடு நீ போராடும்
விரல் விட்டு வருடும் நொடிகளுக்காக
அந்தச் சிறு முத்துக்கள் அவ்வப்போது ஏங்கதான் செய்கின்றன…..!

சோப்புக் கட்டிகளின் தேய்மானத்தில் பிறக்கிறது
உன்னைப் பார்த்தபடியே
மெல்ல மெல்ல நகர்ந்து
உயிர்போகும் குமிழிகளின் வாழ்க்கை நீளம்……!

இருக்கையோ
இல்லை நின்றபடி நீ செல்லும்
பயணமோ
நிறுத்தம் முற்றுப் பெற்றாலும் உன்னிடமே பயணிக்கின்றது
பயணச்சீட்டின்றி
பயணப்படும் ஆசையில்…..!

– கவிஞர் சே கார்கவி

சே.கார்கவி கவிதை

சே.கார்கவி கவிதை




நாம்
யாருடனும்
ஒப்பிட முடியாத
காதலில்
முழ்கியிருக்கும் பொழுது
மழைத்துளியின் வருடலுக்கு
சருமங்கள் பதிலளித்து விடுகின்றன
இன்று போய் நாளை வாவென……..

மயில் தோகைகளை
ஆசையாக சேகரித்து
அவள் படித்து முடித்த புத்தகத்தில் செருகி
அதனுடே ஆரம்பமாகிறது
மயில் தோகையின் வண்ணமாகிய
காதல் மழை….!

உன் மனதின் சிறு ஓரங்களின் மறைவுக்காக நெடுங்கால மழையைக் கேட்கிறேன்…
நீ
ஒரு துளி காதல் கொடுக்கிறாய்….!

எனது
உத்திரவாதங்கள்
உனது முத்தங்களின்
மத்தியில் களைந்து போய்விடுகின்றன
இருப்பினும் இதோ
வைத்துக்கொள்
என் இதயம்
அடுத்த முத்தம் தருவதற்கு முன்னே சம்மதம் பெற்றுவிடு…..!

இதழைப்பார்த்தேன்
வானம் பார்த்தேன்
மீண்டும் இதழைப் பார்த்தேன்
மழையைப் பார்த்தேன்
இதழ் வெடிப்பை பார்த்தேன்
வறட்சியை பார்த்தேன்
காதோர முடிப் பார்த்தேன்
தூரமான குதிரையின் அலாதியான வால் பார்த்தேன்
இதயம் பார்த்தேன்
பூசிய வண்ணம் பார்த்தேன்
தூரமாக பூசிக்கொண்டு பறக்கிறது
அணியின் பட்டாம்பூச்சி…….

ஒட்டுமொத்தமாக
சொல்லிவிடு
இந்த மௌன நடையில்
முதல் பாதம் யாருடைய குத்தகை……
யாரை ஈர்த்து தள்ளும் ஒத்திகை….

– கவிஞர் சே கார்கவி

சே.கார்கவி கவிதைகள்

சே.கார்கவி கவிதைகள்




வாழ்க்கை என்பது மழைத்துளியின் ஆரம்பம் வரை……
*************************************************************
எத்தனை மௌனங்களை இடிகளாய் ஏற்பது
எத்தனை இன்னல்களை மின்னல்களாய் ஏற்பது
மேகம் விலகுமென
நீண்டநேரமாக நிலவிற்கு காத்திருக்கிறது
மண்ணில் வாழ் குழந்தை…..!

மாடியிலிருந்து வானை கீற முயன்ற கல்
காற்றைக் கிழித்த திருப்தியில் பூமியை அடைந்தது…..!

காற்றைக் கிழித்து விழுந்த கல்
குழுந்தைகளுக்கு
ஆற்றில் கோலம் வரையும் புள்ளிகள் ஆகிவிட்டன….!

ஆற்றில் உருவான வளைய கோலம்
அடுத்த கரையை தொடும் முன் முற்றுப் பெறுகிறது,
சிறு மீன் துள்ளி மீண்டும் உருவாக்கிய இன்ப வளையத்திற்கு முன்….!

மீனின் துள்ளலும், ஆற்றின் கரையோர சிறுவர்களின் நீச்சலும்

ஒன்றாகவே மூழ்குகின்றன,
மொத்தமாக உலகை நகர்த்தும் ஆற்றின் நீரோட்டத்தில்…..!

ஓடும் ஆற்று நீரின் உச்சபட்ச தேவை என்னவென்றால்
அதன் வாழ்க்கை என்பது மழைத்துளியின் ஆரம்பம் வரை
என்பதில் எந்த மாற்றமும் இல்லை………!

மெல்லியதொரு_இறுக்கம்
*******************************
இறுக அழுத்தி
கரம்பற்றி நகரும்
துணைகளுக்கு
இறுக்கத்தை மேலும் கற்றுத்தருகின்றன
இருவித்திலை தாவரங்கள்….

யதார்த்தமாக
கரம் கோர்த்த ஒரு மோதிரத்தின் வலி
கரம் மாறும் பொழுது வலிக்கத்தான் செய்கிறது்…….

ஒத்து ஊதும் நாயனத்தின் இறுதியில் இரு உள்ளங்களின் சிரிப்புதான்
நுரையீரலை இசைப்படுத்துகிறது…….

கைப்பிடித்து
முகம்பார்த்து
பூச்செண்டை விசிறி எறியும் பொழுது அறிவதில்லை
எறிவது மீண்டும் தரை திரும்புமென…….

சிவப்புக் கம்பள விரிப்புகளுல்
அவ்வப்போது விருப்பப் பாதங்களும்
அன்றாடம் வெறுப்பு பாதங்களும் சற்று அதிகமாகவே பதிவுறுகிறது……..

கடற்கரைப் பாதங்கள்
***************************
உனது மொத்த தலைகணத்தையும் இறக்கி வைத்த
பள்ளத்தில் நிரம்பி வழிந்து ஆரம்பமாகிறது
அலைகளின் தலைகணநிரப்பங்கள்………….

உனது ஒட்டுமொத்த எடையை அழுத்தி நகர்ந்த உனக்கு
என்னை மிதித்து சென்றதாக கவலையில்லை
நன்றிகெட்ட முன்னேற்றச்சுவடுகளாய்……..

அழைத்து சென்றேன்
அழித்து சென்றது
எழுந்து நடந்தேன்
என்னை ஒரு நூல் இறக்கியது………..

மணற்கம்பளத்தை வரியில்லாது மிதித்து சென்று
எறி இறங்க இயலாத நண்டுகளை படைத்ததுதான்
ஆகச்சிறந்த படைத்தலாகிறது…….

உனது அருகில் நான்
எனது அருகில் நீ
பாதியாக்கப்பட்ட யாரோ ஒருவர்
இங்காவது ஒற்றுமைக் காப்போம்
அலையடிக்கும் வரையில்………

அவளுக்கான அழுத்தங்களை
எடையாக்கி மிதித்து சென்றேன்
நீரின்றி நினைவுகள் மணலாய் ஒட்டியது…
நீர்பட்டு விரக்திகள் நீரோடு வழிந்தோடியது……….

அலைகளின் ஓயாத கரையேறுதலி்ல்
பலர் அறிய இயலாமல் போய்விடுகிறது
நேற்றைய நலம் விரும்பிகளின்
உண்மையான் கடற்கரைப் பாதங்கள்………

கவிஞர் சே.கார்கவி

கார்கவியின் கவிதைகள்

கார்கவியின் கவிதைகள்




படித்தீர்களா_அவற்றை
****************************
உலகின் அனைத்துப் பகுதிகளிலும்
ஏதோ ஒரு தகவல்
நம்மைச் சுற்றிப் பரவிக்கொண்டே இருக்கும்….
படித்தீர்களா அவற்றை…!

யாருடையை கருத்தும்
எவரையும் ஒத்திருக்கவில்லை,
மாற்றமும் ஏமாற்றமும் நிறைந்துள்ளன
படித்தீர்களா அவற்றை…!

மனிதனின் உடல் நிலைப்பொருத்து
அவன் தலை முதல் கால் வரை…
மனம் முதல் நோய் வரை…
நிலம் முதல் வானம் வரை…
பத்தினி முதல் பத்மினி வரை…
அனைத்தும் இக்காலகட்டத்தில்
தகவல்களுடன் பரிமாற்றத்தில்
அடங்கிவிடுகின்றன..
படித்தீர்களா அவற்றை…!

அக்கால தகவல்கள் ஓலையில் எழுதப்பட்டு
ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு
ஒற்றன் மூலம் கொண்டு செல்லப்பட்டது….
தற்பொழது சொடுக்கிடும் வேளையில்
தனிநபருக்கோ, தலைமையை கொண்ட குழுவினருக்கோ
அடுத்த நொடியே சென்றடையும் அளவிற்குத்
தற்காலத்தில் தகவல் தொழில்நுட்பம் முன்னேறி உள்ளது…
படித்தீர்களா அவற்றை…!

காலையில் எழுந்ததும் கண் விழிப்பது புலனம் என்றானது…
கண்ட செய்திகளும் அதனுள்ளே…
கருத்துகள் நிறைந்த செய்திகளும் அதனுள்ளே…
படித்தீர்களா அவற்றை…!

கைக்குட்டை அளவிற்கு
தகவல் தாள்கள் வண்ணவண்ணமாகப் பரவிக் கிடக்கின்றன..
யாரும் எடுக்காத காரணத்தினால்
கால்நடை தீவனமாய் மாறிவிட்டன… படித்தீர்களா அவற்றை…!

எத்தனையோ தேவை செய்திகள்
யார் யாரோ கால் பட சாலைகளில் பறக்கின்றன…
காற்று படித்த மீத செய்திகள் அனைத்தையும்…
படித்தீர்களா அவற்றை…!

ஏதோ சில அவசரத் தேவைகள் நிறைந்த எழுத்துக்களை
யார் யாரோ உள்ளங்கைகள் மறைத்த பேருந்து நிறுத்தங்கள்
ஏராளம்…என்னதான் கூறியுள்ளனர்…
படித்தீர்களா அவற்றை…!

உண்மையான செய்திகளும்..
உலகாளும் விருதுகளும்
எவரெல்லாம் வாங்கி சென்றனர்…
எவரெல்லாம் இழந்து சென்றனர்…
படித்தீர்களா அவற்றை…!

உனக்கான இடம் யாருக்குக் கிடைத்ததென்றும்…
உன்னுடைய உறவு யாரிடம் இணைந்த்தென்றும்
எதார்த்த வார்த்தைகளில்
படித்தீர்களா அவற்றை…!

சர்ச்சைக்குரிய சாமியாரும்,
சமயோசித சீஷயையும்
சிந்தனைக்கடலில் சிலுமிசத்துடன் இணைந்த தகவல்…
படித்தீர்களா அவற்றை…!

மனைவியை சேர்க்க இடமில்லை…
இறந்தபின் கொண்டு செல்ல வண்டி இல்லை…
கண்கலங்கிக் கொண்டே தூக்கிச் சென்றான் கணவன்..
படித்தீர்களா அவற்றை…!

அலைகள் நிறைய விழுந்தாலும்
மூன்றாம் அலையை நோக்கி ஓடும் நாடு…
யாரெல்லாம் இருப்பர்..யாரெல்லாம் இறப்பர்…..
படித்தீர்களா அவற்றை…!

நோய் வந்து சாகாமல்
பசிவந்து இறந்தார்கள்..
பற்ற வைக்க இடமின்றி
கண்ட இடமெல்லாம் எரித்தார்கள்…
படித்தீர்களா அவற்றை…!

தொடரும் தகவல்களைத்
தினம் தினம் சூடாய் எடுக்கும் நாளிதலும்,
படிக்கும் நாளிதழ்களிலும்
படித்து வைக்கும் வரை கையைச் சுடுகிறதே….
மனதையும் சேர்த்து சுடுகிறதே…
படித்தீர்களா அவற்றை…!

மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்…
என்றென்றும்
படித்தீர்களா அவற்றை…!

அந்த ஆணின் பிம்பத்தில் யார் அவர்கள்
***********************************************
உலகில் எத்தனையோ வகை ஆண்கள் உண்டு…
யாரும் பார்த்திடாத ஆண்கள் உண்டு…
நம்பிக்கையின் வழியில் கரம் பிடித்து நடக்கும் ஆண்கள் ஆயிரம்…
உழைப்பில் உயர்வுண்டு என்று அதில் வெற்றி பெரும் ஆண்கள் ஆயிரம்….

கட்டாந்தரை படுக்கையில் காலம் களிக்கும் ஆண்களுண்டு..
கை நிரம்பும் சீட்டுகட்டுகளில் குடும்பத்தை சோக்கர் ஆக்கும் ஆண்களுண்டு…

அத்தனை ஆண்களில் இவர்களும் உண்டு..

யார் அவர்கள்….

அரை டவுசர் காலம் முதல்
சைக்கிள் உந்தி அரிசி மூட்டை சுமந்து
அந்த அண்ணாச்சிக் கடையில் கொடுத்துவிட்டு
கிரிஸ் நிறைந்த சைக்கிள் செயினை
விரல் விட்டு நேர் செய்து மை துடைத்த டவுசர் கொண்ட
இளமை கால என் அப்பா அவர்…..!

ஆடு்மாடு மேய்த்து பட்டியிலிட்டு…
தலைமேல் கரும்பைச் சுமந்து
மாட்டுக் கொட்டகையில் தஞ்சம் அடைந்து
சொந்த இடத்தில் வாடகை இல்லாத எரவாணத்தில்
காற்றுக்கும் மழைக்கும் சவால்விட்டு
கோவணத்தின் மறைப்பில்
குளிர் மறைந்த என் அப்பா அவர்….!

திருமணத்தின் விவரம் அறியா துணையாக
என் அம்மையைக் கொண்டு …!

அறியாத பருவமாக அந்த தருணத்தைக் கையில் கொண்டு
உழைப்பை மட்டும் உயர்வாகவும்,
கௌரவத்தைக் குடும்பமாகவும் கொண்டு
உழைத்துக்கொட்டிய என் அப்பா அவர்….!

அப்பனின் அச்சைப்பெற்று
வீட்டின் மூத்தவனாய் முந்திக்கொண்டு பிறந்து
முற்றுப் பெறாத படிப்பினைப் பெற்று
முடித்த மேல்நிலையில் வேலை சென்று
வீட்டிற்கு உழைக்க சென்றவர் என் அண்ணன் அவர்….!

காலகாலத்தில் கல்வி பெற்று..இல்லை இல்லை கல்வி இழந்து…!

வயது இழந்த திருமணம் கொண்டு
வாழ்க்கையில் போராட்டத்தைக் கையில் கொண்டு
குடும்பம் ஒன்றே உலகாய் கொண்டவர்…என் அண்ணன் அவர்….!

எத்தனையோ ஆண்களை நாம் அன்றாட வாழ்வில் பார்த்திருப்போம்….!

ஒரு அரைமணி நேரம் நாம் சாலையில் பயணிப்பதாகக் கொள்வோம்……!

அதோ..

அவசரவசரமாகக் கிளம்பும்
ஐந்தாயிரம் ஊதியம் பெறும் அடகுக் கடை ஊழியராய்…!

உண்பதைக் கட்டிக்கொண்டு
மதிய உணவைக் குறைத்துக் கொண்டு
ஓயாமல் பாடுபடும் ஏதோ ஒரு கார்பரேட்டின் கடைமட்ட ஊழியனாய்….!

கட்டிய கைலி கழண்டு விழாத கட்டுயிட்டு
முண்டாபனியலில் முழுதாகக் குளித்து..
முண்டாசு அவிழ்த்து கழுத்து துடைக்கும் மூட்டை மடை ராமசாமியாய்….!

மூக்கைப்பிடித்துக் கொண்டு மூலையில் நிற்கும் ஆணாய்……!

அவன் முன் ட்ரௌசரில் கழிவுநீர்க்குழி இறங்கும் துப்புரவாளனாய்….!

நிமிர்ந்து பார்த்தால் மின்கம்பியில் தைரியவானாய்…!

தடுக்கிவிழுந்தால் உயிர்போகும் டவர்களின் மேல் ஏறும் தைரிய இளசாய்….!

இப்படி சொல்லிக்கொண்டே போகும் வண்ணம்..!

தூய மனிதனாய்…!
துள்ளித்திரியும் காளையாய்…!
துவண்ட மனமாய்…!
தைரிய விளக்கமாய்…!
தத்ரூப மாந்தனாய்…!
மானசீகக் காதலனாய்…!
குடும்பப் பொறுப்பாளனாய்…!
குடியில் மன்னனாய்…!
குட்டிக்குழந்தையின் தகப்பனாய்…!
வளர்ந்த குழந்தையின் கணவனாய்….!
பேரன் பேத்தியின் தாத்தனாய்…!
தகப்பனில்லா மகளுக்கு அப்பனாய்…!
தாயில்லாக் குழந்தைக்கு அன்னையாய்…!

வீரம் கொண்ட தங்கைக்கு அண்ணணாய்…!
பயம்கொண்ட அக்காளுக்குத் தம்பியாய்…!
நோய் வாய் பட்ட குடும்பத்திற்கு மருந்தாய்…!
நொடிந்த அப்பனுக்கு நம்பிக்கையில் தடியாய்…!
நாள்காட்டியை கிழிக்கும் மகனாய்…!
நல்லது கெட்டது அறியா மகனாய்…!
குழந்தையில் நெஞ்சில் உதைக்கும் பேரனாய்…!
வளர்ந்தும் நெஞ்சில் உதைக்கும் மகனாய்..!

எத்தனை ஆண்களடா…!
அந்த இத்தனை ஆண்களின் பிம்பத்தில் யார் அவர்கள்…!

– சே கார்கவி

கார்கவியின் கவிதைகள்

கார்கவியின் கவிதைகள்




மென்மைப்பூச்சி
********************
பறக்க நினைக்கும் பொழுதெல்லாம்
ஏதோ ஒரு காரணத்தினால்
இறகின் வண்ணத்தைத்
தூரிகையில் பதம் பார்த்து விடுகிறாய்
உன் பார்வைகளால்
பார்வையாளர்களை எப்படி நான் கவர்வது.?…………

நான் தினம் பறக்கும்
நிலவின் நிழலில் மட்டும்
என்னை மிஞ்சிய பல பட்டாம்பூச்சிகள்
நீ மேனி உரசிய காரணத்தினால்
கலைந்துவிட்டன காத்திருப்பு வண்ணங்கள்…………….

ஒரு புள்ளியில் யாரெல்லாம்
அழகை அடைகாத்து சிலாகித்தார்களோ
அவர்களுக்கு மட்டும்
கன்னத்தை வண்ணமாக்கிச் செல்கிறது
இந்த அழகு பட்டாம்பூச்சி……

நானும் வண்ணமாகி விடுகிறேன்
குழந்தையின் கையில் சிக்கிய வானவில் வளையங்களைப் போல
நீளமும் சதுரமும் வட்டமுமாய் மாறிப் போன
உணர்வி ததும்பிகளாய்
வண்ணங்கள் மட்டும் எனது எண்ணத்தூரிகையில்
மேலும் கீழுமாக…….

இருக்கட்டும்
இறுக்கம் திறந்த இறகுகளைக் கொண்ட அந்த ஒரு பட்டாம்பூச்சி
வானவில்லாய்
எனது எட்டாவது வண்ணத்தில்…………..

மெல்லியதொரு_இறுக்கம்
*******************************
இறுக அழுத்தி
கரம்பற்றி நகரும்
துணைகளுக்கு
இறுக்கத்தை மேலும் கற்றுத்தருகின்றன
இருவித்திலை தாவரங்கள்….

யதார்த்தமாக
கரம் கோர்த்த ஒரு மோதிரத்தின் வலி
கரம் மாறும் பொழுது வலிக்கத்தான் செய்கிறது்…….

ஒத்து ஊதும் நாயனத்தின் இறுதியில்
இரு உள்ளங்களின் சிரிப்புதான்
நுரையீரலை இசைப்படுத்துகிறது…….

கைப்பிடித்து
முகம்பார்த்து
பூச்செண்டை விசிறி எறியும் பொழுது
அறிவதில்லை
எறிவது மீண்டும் தரை திரும்புமென…….

சிவப்புக் கம்பள விரிப்புகளுள்
அவ்வப்போது விருப்பப் பாதங்களும்
அன்றாடம் வெறுப்பு பாதங்களும்
சற்று அதிகமாகவே பதிவுறுகின்றன……..

கவிஞர் சே கார்கவி

கார்கவியின் கவிதைகள்

கார்கவியின் கவிதைகள்




சித்திரைப் பெருவிழா
***************************
வருடா வருடம் வந்து செல்கிறது
பலர் திறந்த கதவுகளில்
சந்தோசமும் இந்நாளும்……
வந்தவர் போனவரெல்லாம்
பார்த்துக் குதுகலிக்கும் வண்ணத்தில்
வடிவமைக்கப் பட்டிருந்தாள் அந்த அம்மன்
யாருக்கு என்ன வேண்டுதலோ
எல்லாம் வரிசையாக அர்ச்சகரிடம்
பரிந்துரைக்கப்பட்ட நிலையில்
பத்து ருபாயும் நூறு ருபாயுமாய்
வைத்துச் சொல்லப்படுகிறது.
பலநூறு கிலோமீட்டரில்
இருந்து வந்தவரின் கோரிக்கைகள்
இடுப்பில் பிள்ளை வைத்து
இராட்டினம் பார்த்தவளுக்கு
பக்கத்தில் கையேந்தும்
பிள்ளையின் உருவம் தெரியவில்லை
அந்த திருவிழா பெருவெளியில்
கரகாட்டம் ஒருபக்கம்
ஒயிலாட்டம் மறுபக்கம்
சிலம்பாட்டம் ஆரவாரம்
அந்த தெய்வீகப் பொங்கலுக்காக
வறுமை ஆடிய ஆட்டத்தை
அந்தத் திருவிழாவின் பொழுது
காணாதது வருத்தம் தான்……
கூடியிருந்த திருவிழாக் கூட்டத்தில்
தள்ளுவண்டி பலூன்காரனிடம்
நிரம்பி இருந்தன
நல்லமனம் கொண்ட
காற்று நிரம்பிய பலூன்கள்….
பட்டை தீட்டிய கத்திகளில்
பளீரெனத் தெரிகிறது இருப்பவரின்
பணமும் இல்லாதவனின் குணமும்……
இனிப்புகள் எல்லாம் விலைபோனால்
இனிதாகிவிடும் அவர்களின் அந்நாள்.
எங்கோ பிறந்தவன்
வேறெங்கோ வாக்கப்பட்டு
சென்றவள் என அனைவரும்
கூடும் நேரத்தில்
வந்து வளைந்து நிற்கின்றன
போன வருட பழிக்குப்பழி பாவங்கள்……..
இத்தனையும்
நிறைந்து வழியும் திருவிழாவில்
எல்லாம் நல்லது என நினைத்தவனிடம்
ஒளியூட்டி அமைதி வழங்குகிறது
அருளுடன் சேர்ந்த அந்த சிறு தீப ஒளி………
*******************************************

ஒரு மாட்டிற்கு ஒரு சூடு என்பர்..
மனிதனாகிப் போனதால்
கண்டுக்கொள்ள தயங்குகிறோம் நாம்……

அப்பாவின் பேச்சுகளில் எல்லாம்
சலிப்பூட்டும் மகனுக்கு
இறுதிச்சடங்கில் மயிரே போனாலும்
சரி என்ற எண்ணம் தானாக பிறக்கிறது
அவரின் இறுதி ஊர்வலத்தில்……

வெற்றியை நீ பெற
திறமையை கொடுப்பதற்கு முன்
நேரத்தைக் கொடு
வெற்றி உன்னிடமே….

ஒரு தேயிலை கோப்பையில்
வாய் வைத்த நிலைக்கு
நகர்ந்து அமரும் மனிதர்கள் மத்தியில்
நகராமல் தாங்கி நிற்கிறது
வேற்றுமை பார்த்தவர்களையும் சேர்த்து
அந்த புனித மரம்….

கவிஞர் சே. கார்கவி

கார்கவியின் கவிதைகள்

கார்கவியின் கவிதைகள்

நிழல் மனிதர்கள் எனது தலை மயிர் முதல் பாதவெடிப்பு வரை அனைத்தையும் இருளில் புதைத்துவிட்டு நான் எந்த இரவிற்கு நிழல் வழங்குவது........ உனது இமை விலகி கருவிழியை தொடும் நேரத்தில் நான் கண்ணீரின் நிழலில் நிறுத்தம் கொடு சற்று தாகம் தனித்துக்…
துயரிலும் துளிர்விடு கவிதை – கார்கவி

துயரிலும் துளிர்விடு கவிதை – கார்கவி




அந்த விதை அங்குதான் விதைக்கப்பட்டது
எச்சில்கள் துப்பப்பட்டன
யாரோ ஒருவரின் கழிவு அங்கே கழிக்கப்பட்டது
மொத்தமான இயற்கையை ஒண்டிப்பிடித்து
புல்லினங்காலின் அழகுகளில் படாது தப்பிய விதையின்
விருட்சத்தின் கிளையில்தான்
நீங்கள் அமர்ந்து யோசிக்கும் நாற்காலி உருவாகியுள்ளது…….

நித்திரை கலைந்த மொத்த இருளின்
யாரோ ஒருவரின் இருட்பசியை போக்கிட
சிறு விளக்கு வெளிச்சத்தில்
மொத்த மோகப்பெருவெளியில்
அடர்ந்த மேகமாய் சூழ்ந்த
மனிதப் பரப்பில் சிறு சிறு காயங்களைத் துடைத்தெறிந்த
அந்தவொரு மெல்லிய தேகத்தில்
சிலிர்த்து எழும்பி பறிபோகிறது ஒரு துளி குருதியில்
யாரோ ஒருவரின் அராஜக வேகமும்…மோகமும்……

கிளறிய மண்ணுக்குள்
தீ நுழைந்து நீங்கள் மரமாக வேண்டாம்
மண்புழு செரித்திடாத ஒரு பசித்தாவரமாய் இல்லாத
இறுகப்பற்றும் ஆல விழுதாய் மாறிடப்பழகுங்கள்…….

இந்த ஈர காற்றுவெளியில் ஏதோ சிலாகித்தலை
ஆழ்த்தும் அந்த ஏகாந்த நொடிகளைப் பற்றி
அகலும் உனது ஒட்டுமொத்த தேவைகளைப் பறித்துச் செல்லும் இடத்தில்
ஓர் அடி பின்னால் வைத்து உனது உரிமையை இழுக்கப் பழகுங்கள்……..

அனாதையில்லங்களின் வாசலில்
இரட்டை மரங்களிலிருந்து சிந்திய
தனியொரு அனாதை தென்னங்கீற்று பெருக்கெடுத்து
துயரம் பாய்ந்தாற்போல் ஒவ்வொரு கீற்றிலும்
சுத்தம் செய்யும்விரல்களாய்
உனது கரங்களை ஊன்றிடப் பழகுங்கள்…..

கண்ணீர்க் கடலில் கட்டுமரமும்
அலையுமான அனைத்து ஏற்ற இறக்கங்களில்
சிறு அலையெனத் துள்ளிடும்
மீனின் சிறு கடல் துளியாய்
நீ நீச்சலில் காதம் பற்றி பலதூரம் கடந்திடு
நித்தம் துயரிலும் விருட்சமாய் துளிர்விடு……

கவிஞர் சே.கார்கவி