தொடர் 14: கவிதை உலா – நா.வே.அருள்
கவிதை உலா 9: ஒரு சுற்று வாழ்க்கை – நா.வே.அருள்
ஒரு சுற்று வாழ்க்கை
*****************************
கவிஞர்கள் – சந்துரு .ஆர்.சி, நிலாக்கண்ணன், சரஸ்வதி
அர்த்த விளையாட்டாக இருக்கிற வாழ்க்கைதான் அபத்த விளையாட்டாகவும் இருக்கிறது. விசித்திரங்களின் விமான ஓடுதளததில் நத்தையாக நகர்வதும் வாழ்க்கைதான். ஊர்ந்து செல்லும் மரவட்டையின் கால்களாக ஓயாமல் விரைவதும் வாழ்க்கைதான். காசே இல்லாத போது உண்டியலில் கம்பி விட்டு நாணயங்களை எடுக்கிறபோது என்ன சந்தோஷம் வருமோ அப்படியான சந்தோஷங்களைக் கொண்டிருப்பதும் வாழ்க்கைததான். மீண்டும் கிடைக்கவே கிடைக்காத பொக்கிஷங்களை எண்ணிக் காலமெல்லாம் ஏங்க வைப்பதும் வாழ்க்கைதான். மொத்தத்தில் வாழ்க்கையே ஒரு முரண்களின் மூட்டைதான்.
இதில் கொள்கை, சித்தாந்தம் என்று பேசி தம்மை வருத்திக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். விட்டேத்தியாக வாழ்ந்து உடன் இருப்பவர்களை வருத்திக் கொல்பவர்களும் இருக்கிறார்கள். வாழ்க்கை சேகரித்து வைத்த அனுபவங்களை அவ்வளவு இலேசில் புறந்தள்ளி விட முடிவதில்லை. காலற்றவர்களுக்குச் சக்கர நாற்காலிபோல வாழ்க்கை அவரவருக்குமான தேவைகளைப் பூர்த்தி செய்யத்தான் செய்கிறது. சிலர் திருப்திப் படுகிறார்கள். சிலர் எதற்குமே திருப்தியுறாமல் அடுத்தவரைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்கள். அவர்களைப் பார்த்துப் பாடத் தோன்றுகிறது…. “இவ்வளவுதான் வாழ்க்கை… இவ்வளவுதான்…”
சந்துரு .ஆர்.சி
**********************
இது அலைபேசிகளின் காலம். ஆனால், சைக்கிள் மிதித்தே களைத்துப் போன கால்களின் வலிகளின் உக்கிரத்தை எந்தச் சுயமியால் எடுத்துக் காட்ட முடியும்? சைக்கிள் சீட் இறுக்கியே விரைவாதம் வந்த எத்தனையோ பேர்களின் வலிகளுக்கு இந்த வாழ்க்கை எந்தக் களிம்பை வைத்திருக்கிறது?
மாதங்கள் கடந்தும்
சாத்தி வைத்த சுவற்றில்
துருப்பிடித்து
சீந்துவாரற்று கிடக்கிறது
பெடலுடைந்த சைக்கிள்.
கலகலத்து ஆடியபோதும்
ஓட்டம் குறையாத அதன் மேல்
அரூபமாய் அமர்ந்து இளைப்பாறிக்கொண்டிருக்கிறது
ஓட்டை வண்டியை உருட்டியே
ஒவ்வொன்றாய் கரையேற்றி
களைத்துப்போன முதியவனொருவனின்
வாழ்வு…
எல்லாமே சாதாரணமாக நடந்துவிடுவதாக நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் எல்லாமே யாரோ சிலரின் திட்டமிடுதல்களாலும், தந்திரங்களாலும், அவற்றிற்கு ஆட்படுபவர்களின் வெள்ளந்தித் தனத்தாலும், யோசிப்பின்மையாலும் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றன. இது மேய்ப்பர்களின் மேய்ப்பர்கள் காலம்.
மேய்ச்சல் முடித்து
கனத்த வயிற்றுடன்
திரும்புகின்றன மாடுகள்.
வற்றிய வயிற்றுடன்
பின் தொடர்கிறான் மேய்ப்பன்.
வழி நடத்தியவனின்
பசியுணராமல்
நன்றியோடு
குரலெழுப்புகின்றன அவை.
மேய்ப்பனின் எஜமானர்கள்
தந்திரம் மிக்கவர்களென்று
ஒருபோதும்
மந்தைகள் அறிவதில்லை
மேய்ப்பனும்தான்…
நிலாக்கண்ணன்
************************
அம்மா எடுக்காத அவதாரமில்லை. சமையல்காரி முதல் தையல்காரி வரை… அவளது கைகளில் ஊசி குத்திய காயங்கள் ஆறியிருக்கலாம்…. ஆனால் அவள் தைத்துக் கொடுத்த ஆடைகள் கொடுத்த கதகதப்பு மாறியிருக்குமா?…. இன்றைக்கும் ஏங்குகிறோம்….
அவள் ஒரு வயலினிஸ்ட்
கிழிந்த ஆடைகளை
சிறு ஊசியால் வயலினைப்போல மீட்டுவாள்
அந்த இசையை நாங்கள் உடுத்தியிருந்தோம்.
💜💜💜
கவிஞர் சோலை பழநியின் கவிதையொன்று நினைவில் நிழலாடுகிறது. பள்ளிக் கூடத்தில் சத்துணவு சாப்பிடும் சின்னஞ்சிறு பையனுக்கு“ இந்த உலகம் ஒரு சோற்று உருண்டையைப்போலத்தான் தெரிகிறது”. நிலாக் கண்ணனுக்கும் இந்த அனுபவம் நேர்கிறது. சுவரொட்டி ஒட்டும் பையன் கவிஞனின் மனசில் கவிதையினை ஒட்டி விட்டுச் செல்கிறான்.
ஒரு இரவென்பது
நான்கு முனைகளுடன் கூடிய
சதுரமான காகிதமாய் இருக்கிறது
நகரத்தின் மையத்தில்
போஸ்ட்டர் ஒட்டும் சிறுவனுக்கு.
அவன்தான் இரவின் மீது
பசை தடவி
இந்தபூமியில் ஒட்டிவிடுகிறான்.
💜💜💜
கவிதை ஜோசியம் பார்க்கும் கவிஞர்கள் ஏராளம். அவர்களிடம் இருப்பவை ஏராளமான நெல்மணிகள்… சிறகுகள் கத்தரிக்கப்பட்ட சில கிளிகளும்! ஆனால் இந்தக் கவிஞன் சொல்கிற கதையே வேறு…வாழ்க்கையே பொய்த்துப் போன ஒருவன் ஜோசியத்துக்கு உயிர் கொடுக்கிறான்….. மொட்டைப் பனையில் பிடித்த கிளியோடும் விதை நெல்லோடும் செத்துப் போன விவசாயி… ஜோசியக்காரனாக உயிர் பிழைத்துக் கொள்கிறான்…. கவிதையின் கடைசி இரண்டு வரிகள் கண்ணீரை வரவழைத்து விடுகின்றன.
மொட்டைப்பனையில்
பிடித்த கிளியோடும்
கொஞ்சம் விதை நெல்லோடும்
ஊரை விட்டு ஒடி வந்த விவசாயி
மெரினா கடற்கரையில்தான்
ஜோசியம் பார்க்கிறார்
அவரை நீங்கள்
சந்திக்க நேர்ந்தால்
பரிவோடு நலம் விசாரியுங்கள்
ஏனெனில் அவரின்
நெல்மணிகளைத் தின்ற
கிளிகள் நாம்
சரஸ்வதி
************
முகநூல் பல சௌகரியங்களைச் செய்து கொடுக்கிறது. உலகம் முழுவதையும் நமது வாசலுக்கு வரவழைத்துவிடுகிறது. அங்கு நேரும் கொண்டாட்டங்கள் நமது கொண்டாட்டங்கள். அங்கு நேரும் துக்கங்கள் நமது துக்கங்கள். ஆனால் மாறி மாறி அலைக் கழிக்கையில் கல்யாண விருந்து சாப்பிட்ட கையோடு காரியத்தில் கலந்துகொண்டு பங்காளிக்குத் “தலைகட்ட” வேண்டியிருக்கிறது. கண்ணீர் புன்னகையாக மாற கால அவகாசம் கூட கிடைப்பதில்லை. இதயத்தின் இடப்புறத்தில் மணமேடை… வலப்புறத்தில் பிணமேடை….இப்படித்தான் வாழ்க்கை கண்ணாமூச்சி ஆடுகிறது. இந்தக் கவிதையின் மூலம் கவிஞர் நமது கண்கட்டை அவிழ்த்து விடுகிறார்.
“ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து விட்டு மனம் கனக்க
தொடுதிரையை மேலேற்றினால்
நண்பனின் பிறந்த நாளுக்கு வாழ்த்தச் சொல்கிறது முகநூல்
சட்டென்ற மனமாறுதலைப் பெற முடிந்த இயந்திர உலகில்
சற்று முன் அறிவித்த வருத்தங்களைத்
துடைத்தெறிந்துவிட்டு உடனே சிரித்தபடிச் சொல்ல முடிகிறது பிறந்த நாள் வாழ்த்தொன்றை”
கவிஞர் நினைத்தால் ஒரு தெருவோர வியாபாரி கடவுளாகலாம். கடவுளின் பழைய பிரதிமைகள் அழிக்கப் படுகின்றன. புனைவு வழி விரிவது புதிய கடவுள். ஒரு பெண்தான் நாள்தோறும் பழைய கோலத்தை அழித்துப் புதிய கோலத்தைப் போடுபவள். கடவுளின் முகவரியைத் தேடி அலுத்துப் போனவர்களுக்குக் கவிஞர் கொடுப்பது பசியின் முகவரி….இது கடவுளுக்கே பசியை அடையாளம் காட்டும் கவிதை. வேறு வேறு கோலம் போட்டாலும் வாசல் அழகாகிவிடுகிறது.
மூங்கில்களுக்குள்
இசையை நிரப்பி
விற்று வருகிறார்
அந்த நவீன கிருஷ்ணர்…
உதடுகளின் உரசல்களுக்கும்
முகக் கவசத்திற்குமான
இடைவெளியில்
காற்றாடிக் கொண்டிருக்கிறது
பசி.
முந்தைய தொடர்களை படிக்க:
தொடர் 1 : கவி உலா – நா.வே.அருள்
தொடர் 2 : கவிதை உலா 2 – நா.வே.அருள்
தொடர் 3 : கவிதை உலா 3 – நா.வே.அருள்
தொடர் 4 : கவிதை உலா 4 – நா.வே.அருள்
தொடர் 5 : கவிதை உலா 5 – நா.வே.அருள்
தொடர் 6 : கவிதை உலா 6 – நா.வே.அருள்
தொடர் 7 : கவிதை உலா 7 (சிலுவை ஆணிகள்) நா.வே.அருள்
தொடர் 8: கவிதை உலா 8: மன ஊரின் கவிதைக் குடிசைகள்- நா.வே.அருள்
கவிதை உலா 8: மன ஊரின் கவிதைக் குடிசைகள்- நா.வே.அருள்
மன ஊரின் கவிதைக் குடிசைகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கவிஞர்கள்
க. அம்சப்ரியா, ராம் பெரியசாமி, கோ. பாரதிமோகன், டீன் கபூர், கயல், அசோக்ராஜ்
சூட்சுமங்களை உள்ளடக்கிய சின்ன கவிதைகள் சிக்கனத்தின் செய்நேர்த்திகள். சொல்ல வந்ததைச் சுருக்கென்று சொல்லிவிடுகிற வசீகரமான வசியங்கள்; உள்ளத்தைக் கிள்ளும் வாய்த் துடுக்குகள். இலக்கை எய்தி இரையைக் கொத்திக் கொள்கிற சுருக்கச் சொல்லம்புகள்.
பூமி முழுவதும் ‘பொய்’களின் புல்வெளிகள். வசீகரமான ‘வஞ்சகப்’ பூக்கள். படபடக்கும் ‘துரோகங்க’ளின் பட்டாம் பூச்சிகள். பெரிய பெரிய ‘பேராசை’ மரங்கள். காணவில்லை அறிவிப்புப் பலகையின் கீழே சின்ன எழுத்துகளில் பரிதாபமாக எழுதப் பட்டிருந்தது… உருவப் பொலிவிழந்த “உண்மை.”
வரிசை
இந்த வரிசைக்கு எப்படி வந்தேன்
என்று தெரியவில்லை
பின்னால் என்னைவிட உயரமாக
இரண்டு பொய்கள்
முன்னால் என்னிலும் வலுவான
நாலைந்து துரோகங்கள்
வஞ்சகம்தான் வரிசையை
நடத்திக் கொண்டிருந்தது
கட்டக் கடைசியில் பேராசை
நின்று தள்ளிக் கொண்டிருந்தது
நிற்க முடியாமல் விழுந்த
என்னைக் கண்டு எல்லாம் சிரித்தன
என்ன சத்தம் என்று வஞ்சகம்
திரும்பிப் பார்த்தது
உண்மை விழுந்துவிட்டது என்றது
என் பின்னாலிருந்த பொய்!
–அசோக்ராஜ்
சண்டை போடுவதற்காகவே வாய் திறக்கும் காதலன், சாளரத்தைச் சாத்துகிற காற்றுதானே? கண் இல்லாத காற்றே! முகத்தில் அடித்த மாதிரி மூடிவிடுகிற உன்னிடம் முணுமுணுத்து என்ன பயன்? காதலி பாவம் வெக்கையில் கரைந்து போகிறாள்…. ஆனாலும் காதலில் உறைந்து போகிறாள்!
நுட்பத்தில் நெய்த கைக்குட்டைதான் இந்தக் கவிதை….
வருகைக்காக வைக்கப்பட்ட சாளரத்தை
அறைந்து சாத்தியடியே வரும் காற்று
சந்தித்த மறு நொடி
நீ துவக்கும் பிணக்கு.

–கயல்.
பிரபஞ்சத்தின் மிகப் பெரிய பேரிடரே “மானுடன்”தான் போலும். மரம்தான். மரம்தான். எல்லாம் மரம்தான். மறந்தான். மறந்தான். மனிதன் மறந்தான்.” பாகப் பிரிவினையின் போது பங்குக்கு வந்து விடுகிற பங்காளிகள் மாதிரி, பார்வையில் படாதவர்கள் எல்லாம் பயன்களை அனுபவிக்க மட்டும் பக்கத்தில் வந்துவிடுகிறார்கள். விதைக்காதவர்கள் அறுவடைக்கு வருகிறார்கள்….
“விதையிடவில்லை
முளைத்த காலம் தெரியாது
வளர்ந்த காலத்தில்
நீரூற்றவில்லை
மரமான பின்
எங்கிருந்தோ வந்தார்கள்
பொருத்தமான ஆயுதங்களோடு”

–க. அம்சப்ரியா
அப்துல் ரகுமானைத் தொடர்ந்து ஏராளமான இளைய சக்திகள் கஸலைக் கையில் எடுத்திருக்கிறார்கள். கவிஞர் பாரதி மோகன் கஸல்களின் பேருந்தில் ஜன்னலோரப் பிரசன்னம்! அவை கஸல்கள் அல்ல; காதலின் கையெறிகுண்டுகள்! ஆனால் அவை காதலிக்கோ புளகிக்கும் பூச்செண்டுகள். எல்லோரும் விண்மீனைப் பார்த்துத்தான் வியந்துபோவோம். கவிஞன் கதையைத் திருப்பிப் போடுகிறான். விண்ணுக்கு வாய்க்காத நீர்மீன்கள்… அபாரம் கவிஞனே… இதோ….
கண்ணீர்த் துளிகளில் மையெடுக்கிறான் இந்தக் கஸல் கவிஞன்.
பெருகினாலென்ன கண்ணீர்
எனது கஸலுக்கான மை அது
உனது வேலையெல்லாம்
தீராத துயரைத் தருவதே
புதிதொன்றுமில்லை புகாரி
கள்ளித் தோட்டத்தில் அலையும்
காற்று என் காதல்
அண்ணாந்து மட்டுமே பார்க்கலாம்
விண்ணிற்கு வாய்க்காத நீர்மீன்கள்
வலையோ தூண்டிலோ
தக்கை மூழ்கினால்
முடிந்தது எல்லாம்

–கோ. பாரதிமோகன்
ஹைகூவை மிகவும் லாவகமாகக் கவிதையில் வைத்து புள்ளியைக் கோடாக்குகிறான் ஒரு கவிஞன். ஜப்பானியக் கவி பாஷோவின் பரிமாணங்கள் தமிழ்க் கவிதையுலகில் தனக்கான இடத்தைப் பரவலாகத் தக்கவைத்திருக்கிறது. உதிர்ந்த பூவின் வண்ணத்துப் பூச்சியைப் பார்த்த கண்கள்தாம் இப்போது வண்ணத்துப் பூச்சியின் இறக்கையில் வானவில்லைத் தரிசிக்கிறது. இறகு மனிதனுக்கு இறகு. காகங்களுக்கு காற்றில் சட சடத்து இறங்கும் சடலம்! வார்த்தைகளை வீழ்த்த வார்த்தைகளையே பயன்படுத்தும் விநோதம்தான் வாழ்க்கை! மனதிற்குள் கைநுழைத்துக் கண்டுபிடிக்கிறான் கவிஞன்.
வீழ்ந்து கிடந்த வண்ணத்துப் பூச்சியின் இறக்கையிலிருந்து
வானவில் எழுந்தது.
••••
மனிதன் யாதுமறியாது செல்கிறான்.
ஓர் இறகை உயிரென மதிக்கும்
காகங்கள் கரையத் தொடங்கின.
•••
நான்
நீ
என்ற பாகுபாட்டுடன்தான்
வாழ்கிறது
பிரபஞ்சம்.
சில வார்த்தைகள்
தப்பித்துக் கொள்வதற்காக
இன்னொரு வார்த்தையின் உதவியை நாடவேண்டி இருக்கிறது.

–டீன் கபூர்
வாழ்க்கையை விதவிதமாகக் கவிதையில் ஓவியமாகத் தீட்டிவிடுகிறார்கள் நவீன கவிஞர்கள். அதிலொருவன்தான் ரணகளக் கவிஞன் ராம் பெரியசாமி. எந்தவிதப் புகார்கள் எழுதாமல் ஒரு மனு சமர்ப்பித்துவிடுகிற சாமர்த்தியம் நிகழ்கிறது ராம் பெரியசாமியின் இந்தக் கவிதையில். அய்யோ…. அம்மா…. பார்த்தீர்களா…. என்னே கொடுமை…. என்றெல்லாம் வியப்புக் குறி வார்த்தைகளை விலக்கிவிட்டு ஒரு சித்திரத்தைக் காட்டுகிறான். பாசி விலக்கித் தண்ணீர் குடிக்கிற பக்குவம். விளக்கமே தேவைப்பாடாத கவிதை… நம் மனசை விட்டு விலகவே விலகாத கவிதை!
ஒரு செருப்புடன்
வீட்டிற்கு வருகிறார் அப்பா…
குடம் ஓட்டையெனத்தெரிந்தும்
தண்ணீர் கொண்டு
வருகிறாள் அம்மா…
பொத்தான் இல்லாத சட்டையை ஊக்கு போட்டு
பள்ளி கிளம்புகிறாள் அக்கா..
பழைய சாதத்தை அடுப்பேற்றி
சொப்புச்சாமானில் சமைக்கிறாள் அம்முக்குட்டி.

–ராம் பெரியசாமி
முந்தைய தொடர்களை படிக்க:
தொடர் 1 : கவி உலா – நா.வே.அருள்
தொடர் 2 : கவிதை உலா 2 – நா.வே.அருள்
தொடர் 3 : கவிதை உலா 3 – நா.வே.அருள்
தொடர் 4 : கவிதை உலா 4 – நா.வே.அருள்
தொடர் 5 : கவிதை உலா 5 – நா.வே.அருள்
தொடர் 6 : கவிதை உலா 6 – நா.வே.அருள்
தொடர் 7 : கவிதை உலா 7 (சிலுவை ஆணிகள்) நா.வே.அருள்
கவிதை உலா 6 – நா.வே.அருள்
காலம் தன் கேமராவை வைத்துப் படம் பிடித்துக் கொண்டேயிருக்கிறது கவிஞர்கள் அக்காட்சிகளைப் பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
கவிஞர்களின் கண்கள் மீன்கொத்திப் பறவையின் அலகு போல அவ்வளவு லாவகமாகவும், கூர்மையாகவும் சரக்கென்று கவிதை மீனைக் கொத்திப் பறந்துவிட வல்லவை
அவர்களிடம் வெவ்வேறு காட்சிகள் மண்டியிடுகின்றன. அடம்பிடித்து அழுகின்றன. அவர்கள் ஒரு சில காட்சிகளுக்குத்தான் சொல் தோல் போர்த்தி அழகிய பொம்மைகளாக்குகிறார்கள். அப்படியான சில பொம்மைகளைத்தான் இங்கே அடையாளம் காட்டுகிறேன்.
கவிஞர்கள் – Anbazhagan G , ச.ஜெயலட்சுமி, ச.ப்ரியா, ச.கோபிநாத், புதுகை விஜய் ஆனந்த்
கவிதை 1
எந்தவொரு செயலுக்குப் பின்னாலும் ஒரு மனிதனின் வாழ்நிலை இருக்கிறது. வசதியுள்ள ஒருவன் தனது ஞாபகங்களை வெறும் நினைவுகளாக மாத்திரம் வைத்திருப்பதில்லை. மலரும் நினைவுகளை கடந்தகாலப் பொருள்களுடனே காப்பாற்றிக் கொள்ள முடிகிறது. அன்றாடம் ஜீவனைத் தள்ள இற்றுப்போன ஒரு பழைய சைக்கிளை தினமும் மிதித்தவனுக்கு தனது ஞாபகார்த்தமாக பழைய சைக்கிளைப் பாதுகாக்க முடிவுதில்லை. அந்த சைக்கிளை யார் தின்றிருக்க முடியும்? இயலாமையின் ஞாபகச் சின்னம்.
“ஞாபகார்த்தமாய்
அந்த பணக்காரன்
பழைய மிதிவண்டியை
வீட்டின் ஓர் அறையில்
பத்திரமாய் வைத்துள்ளான்.
என் ஓட்டை சைக்கிளை
அப்போதே
பசி தின்றுவிட்டது.”
Anbazhagan
கவிதை 2
கால மாற்றங்கள் கவிதை அலைகளை நவீனக் கரையோரம் தள்ளித் தள்ளி விட்டாலும் மீண்டும் மனது என்னவோ பழைய அமைதியின் நடுக்கடலுக்குப் போகத்தான் பிரியப்படுகிறது. கடந்துபோன காதலை அசை போடுவதற்கு ஒரு நாட்டுப்புறப் பாணியிலான கவிதை மனசுக்குள் ஒரு வெடிகுண்டு போல வேலை செய்கிறது. அருவா மீசைக்காரனின் முந்தானை முடிச்சு.
“நெஞ்சுக்குள்ளே உன் நெனப்பு !
கரிக்கருவா புருவத்துல
கன்னியென்ன அறுக்குறியே
காட்டுமரம் தேகத்துல
கட்டழகால் நொறுக்குறியே
அள்ளி தலைமுடிஞ்சு
அடுக்குமல்லிப் பூமுடிஞ்சு
காலில் சக்கரமா
கலத்துமேடு தாண்டிவந்தேன்
……….
வெள்ளெருக்கம் பூவாட்டாம்
வெடிச்சிருக்கு
என்மனசு
புல்லறுத்துப் போறவளச்
சொல்லெடுத்து வீசுமய்யா..!”
ச.ஜெயலட்சுமி
காதலின் இன்னொரு காட்சி. சாதாரணமாக அன்றாடம் சந்திக்கும் காதலர்கள் கவிதையில் அமரத்துவம் எய்திவிடுகிறார்கள். ஒரு காதலனை கற்பனையின் சிகரங்களில் மாறி மாறி ஏற்றி வைத்துவிடுகிறது காதலியின் ஒரு ஜிமிக்கி.
கற்பனையின் கலாபம்!
“தாஜ்மஹாலின் மேற்கூரை
கைப்பிடியில்லா குடை
காம்பில்லாத காளான்
கவிழ்த்து வைக்கப்பட்ட மதுக்கோப்பை
அத்தனைக்கும்
அவள் காதினில் தொங்கும் ஜிமிக்கி யின் சாயல்”
ச.ப்ரியா
கவிதை 3
தாயைப் பற்றி ஆயிரம் கவிதைகள் அன்றாடம் வந்து கொண்டேயிருந்தாலும், திரும்பத் திரும்ப அவளது அன்பு தீரா பேசுபொருளாகித் திகைக்க வைக்கிறது. தாயின் செவிகளில் இடியோசை புகுமுன்னே குழந்தையை அணைக்கத் தாயின் கரங்கள் தவிக்கின்றன! பாசத்தின் படக்காட்சி.
திடீரென கேட்கும் இடியோசை
குழந்தையை அணைத்தன
அம்மாவின் கரங்கள்
ச. கோபிநாத்
சேலம்
கவிதை 4
உள்ளிருக்கும் மர்மங்களை அவிழ்த்துக் காட்டும் மந்திரவாதியாகிறான் கவிஞன். விவசாயிக்கு ஒரு கவிஞன் அடிக்கிற எச்சரிக்கை மணி. ஆனால் விவசாயத்தைத் தாண்டியும் கவிதை பல பொருண்மைகளை நோக்கிப் பயணம் செய்கிறது. படிமத்தின் பன்முகம்.
இரை…
கொஞ்சமே
கொஞ்சம் தவிடுக்கும்
குருணைக்கும்
ஆசைப்பட்டு
தலைகுனிகையில்…
ஒரு மலைப்பாம்பின்
பெரும்பசிக்கு
இரையாகிறீர்கள்….
— புதுகை விஜய்ஆனந்த்.✍
தொடர் 1 : கவி உலா – நா.வே.அருள்
தொடர் 2 : கவிதை உலா 2 – நா.வே.அருள்
தொடர் 3 : கவிதை உலா 3 – நா.வே.அருள்
தொடர் 4 : கவிதை உலா 4 – நா.வே.அருள்
தொடர் 5 : கவிதை உலா 5 – நா.வே.அருள்











