சமையலறையில் நான் கவிதை – சத்யா சம்பத்

சமையலறையில் நான் கவிதை – சத்யா சம்பத்




காலையில் கலைந்த தலையுடைய என்னைப்பார்த்து விசிலடிக்கும் முதல் விசிறி பால் குக்கர்!

காப்பி, டீ, பூஸ்ட் என கலக்கும் என்னையே ரசிக்கவைக்கும் குக்கரின் விசில்!

இட்லியுடன் நான் வெந்தாலும் பூ போல இட்லி சிரிக்கும் என் கணவனை பார்த்து!

நெய் ஊற்றிய பெரிய வட்ட தோசை அன்பு மகனின் அன்பைப் பெற்றுத் தரும்!

நெய் மணக்கும் எண்ணெய் கத்திரிக்காய் சிடுமூஞ்சி மாமனாரை சிரிக்க வைக்கும்!

தக்காளி, பூண்டு மணக்கும் ரசமும், கூட்டும் அதிகார மாமியாரை அன்பாக பேச வைக்கும்!

என் வீட்டு டாமிக்கு நான் ஊற்றும் பால் கலந்த சத்துமாவு கஞ்சி வாலையாட்டி என்னை சுற்ற வைக்கும்!

நவ கிரகங்களை போன்ற என் வீட்டினரை ஒன்றாக பாசம் வைக்க வைத்தது என் சமையல்!

தினந்தோறும் வீட்டில் நான் விரும்பி பொழுதை கழிக்கும் இடம் என் சமையலறை!

ஆனாலும்

சமையலறை மட்டும்தான்

எனக்கான அறையா?

– சத்யா சம்பத்

நூல் அறிமுகம்: அம்பையின் ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ – சரிதா

நூல் அறிமுகம்: அம்பையின் ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ – சரிதா




அம்மா ஒரு கொலை செய்தாள் இந்த தலைப்பே நம்மைக் கேள்வி கேட்க வைக்கிறது. அம்மா அப்படி என்ன கொலை செய்துவிட்டாள்? உடலைக் செய்தால்தான் கொலையா? மனதைச் செய்தாலும் கொலையே.

ஆயிரமாயிரம் ஆசைகளோடு அம்மாவின் வருகைக்காகக் காத்திருக்கும் ஒரு பெண் குழந்தையின் மனநிலையை இதைத்தாண்டி எப்படி எழுதிவிட முடியும். பருவம் என்றால் என்ன என்ற கேள்வியை யோசிக்காத சிறுமிகளே இருக்க முடியாது. இந்தக் கேள்வி எனக்குள்ளும் சிறுவயதில் இருந்து பருவ வயது எட்டிய போது நான் அடைந்த பதட்டம் இனி விளையாட முடியாதா? இனி எங்கும் தனியாக வெளியில் செல்ல முடியாதா? இனி பாவாடை சட்டை போட முடியாதா? என்னவாகும்? இப்படியான ஆயிரம் குழப்பங்கள் இவ்வளவு வருடங்கள் கடந்தும் என்னை சிறுவயது பதற்ற நிலைக்கு உள்ளாக்கிய கதை.

சிறகுகள் முறியும் இந்த கதையைப் பற்றி மட்டும் நாள் முழுவதும் பேசிக்கொண்டு இருக்கலாம். எப்படியான மனநிலைகொண்டிருக்கும் பெண் பல சட்டங்களை போடுவாள்?

ரோமம் இல்லாத வழவழத்த மார்பு உள்ள ஆண்கள் மணக்கக்கூடாது என்று ஒரு சட்டம்.

வெற்றிலை சாப்பிட்டு சாப்பிட்டு தகரம் போல் நசுங்கிக் கிடக்கும் பற்களை உடைய ஆண்கள் முத்தமிடக் கூடாது என்று சட்டம்.

ஆவலுடன் மனைவியின் கண்கள் ஒரு பொருளின் மீது படியும் பொழுது பர்சை கெட்டியாக மூடி கொள்ளும் கணவனின் பர்ஸ் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று சட்டம்.

இப்படியாக மனதிற்குள் மட்டுமே சட்டங்களை இயற்றிக் கொண்டு இருக்கும் பெண் ஒரு கட்டத்திற்கு மேல் அனைத்தையும் கடந்து ஒரு விடுதலை அடையப் போகிறோம் என்ற குதுகலத்துடன் இருக்கும் நேரத்தில் ஒரு பேரிடியாக வந்து விழுகிறது அவளுடைய வாழ்க்கையில் அடுத்த… அடுத்த….

வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

எந்த இடத்திலும் மிகைப்படுத்தப்படாத எழுத்து .ஏதாவது ஒரு கட்டத்தில் பெண்கள் இதனை யோசிக்காமல் இருந்திருக்க முடியாது தங்களுடைய வாழ்க்கையில் .

வாசிக்க வாசிக்க ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய வாழ்க்கையில் பொருத்திப் பார்த்துக் கொள்ளும் வரிகள் கிட்டத்தட்ட நான்கு ஐந்து முறைக்கு மேல் இந்த கதையை திரும்பத் திரும்ப வாசித்து முடித்தாயிற்று. ஒவ்வொரு முறை வாசிக்கும் பொழுதும் என்ன மாதிரியான ஒரு கதை எவ்வளவு சுலபமாக அள்ளித் தெளித்து விட்டீர்கள். எப்படி இதிலிருந்து கடந்து வருவது என்று யோசித்துக் கொண்டே இருக்க வைக்கிறது.

வீட்டின் மூலையில் சமையலறை பெண்ணியம் பற்றி பெண்கள் பற்றி பேசும் எந்த ஒரு பெண்ணும் இந்த கதையை கூறாமல் இருக்க முடியாது. சில நாட்களுக்கு முன்பு வந்த கிரேட் இந்தியன் கிச்சன் கதையை நினைவுபடுத்துகிறது. சமையல் அறைக்குள்ளேயே தன்னுடைய வாழ்க்கையை தொலைத்த பெண்கள் எப்படி ஆப்பிள் கீழே விழுவதைப் பார்த்திருக்க முடியும்.

காட்டில் ஒரு மான் மெய்சிலிர்க்க வைக்கும் கதை. மனதை கட்டிப்போட்ட ஒரு கதை. ஆயிரம் கேள்விகள் குழந்தைகள் மனதிற்குள் ஒரு பூப்பெய்தாத பெண்ணைப்பற்றி.

கைலாசம் இப்படியான ஒரு கதையை எப்படி எழுதியிருக்க முடியும். மனதிற்குள் ஒரு பெண்ணை நினைத்து விட்டால் அந்தப் பெண்ணை ஆத்மார்த்தமாக அன்பு செய்யும் ஒரு ஆணால் என்னவெல்லாம் செய்ய முடியாது என்பதை விளக்கியிருக்கும் கதை.

பொதுவாகவே அம்பையின் கதைகளில் பெண்களின் மன உணர்வை அப்பட்டமாக படம் பிடித்து காட்டி இருக்கும் என்பார்கள். அதை தாண்டியும் பயணங்கள் அம்பையின் கதைகளில் அதிகமாகக் காணப்படுகிறது. இவ்வளவு பயணங்கள் செய்து அதனாலோ என்னவோ அவ்வளவு கதைகளில் பயணங்களை கொண்டு வந்திருக்கிறார்.

பயணம் என்றால் சற்றே விலகி இருக்கும் எனக்கு இனி வாழ்க்கையில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் பயணங்களின் வழியாக பல்வேறு மனிதர்களையும் பல்வேறு ஊர்களையும் பல்வேறு நாடுகளையும் அவர்களுடைய மொழிகளையும் அவர்களின் பழக்கவழக்கங்களையும் குணாதிசயங்களையும் கண்டுணர வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

சாகித்ய அகாடமி நாயகி அம்பை கதைகளின் நாயகி தான்.

நூல் : அம்மா ஒரு கொலை செய்தாள்
ஆசிரியர் : அம்பை
விலை : ரூ.₹325
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

தொடர்புக்கு : 044- 24332924

The Great Indian Kitchen Malayalam Movie Review By Pichumani. திரை விமர்சனம்: கிரேட் இந்தியன் கிச்சன் - பிச்சுமணி

திரை விமர்சனம்: கிரேட் இந்தியன் கிச்சன் – பிச்சுமணி




என்ன வேலை செய்யிறிங்க‌?
பெயிண்டர்.
உங்கள் மனைவி?
வீட்ல சும்மாதான் இருக்கிறாள்.
பெயிண்டர் இடத்தில் எந்த வேலையும் போட்டுக் கொள்ளுங்கள். ஆனால் அநேக ஆண்களின் பதில் இதுவாகத்தான் இருக்கும்.

என்ன வேலை பார்க்குறீங்க?
ஆசிரியர்.
உங்கள் மனைவி?
House wife. Sorry.. இல்லத்தரசி.
நீங்க என்ன வேலை செய்யிறிங்க‌?
இஞ்சினியர்.

உங்கள் மனைவி ?
ஆசிரியர்.
உங்களுக்கு சமைக்க தெரியுமா?
தெரியாது.
உங்க வீட்டில் யார் சமையல் செய்வார்?
எனது மனைவி தான்.

சார் உங்களுக்கு சமைக்க தெரியுமா?
தெரியும்.
சமையல் பாத்திரங்களை யார் கழுவுவார்கள்?
எனது மனைவி தான்.

சும்மா தான் இருக்கிறாள், ஹவுஸ் ஒய்ப், சமைக்க தெரியாது, மனைவி தான் பாத்திரம் கழுவுவாள்.. இப்படியான வார்த்தைகள்.. எவ்வளவு பெரிய வன்முறையான வார்த்தைகள் என்பதை சொல்லும் படம்தான் “தி கிரேட் இண்டியன் கிச்சன்”.

கதாநாயகி திருமணத்தோடு படம் தொடங்குகிறது. சமைப்பது.. பாத்திரம் கழுவுதல்.. சமைப்பது.. பாத்திரம் கழுவுதல் என்று அடுப்படி காட்சிகள் அதிகமாக இருந்தாலும்.. சமூகத்தில் ஆணாதிக்க வெறியையும் சோம்பேறிதனத்தையும் தோலுரித்து செவ்விடில் அடித்தால் போல் நமக்கு காட்டுகிறது இந்த படம்.

குக்கர் சோறு வேண்டாம்.. மிக்சியில் அரைக்கவேண்டாம்.. கடுங்காப்பி இப்படிதான் வேணும்… வாசிங்மிஷினில் துணி துவைத்தால் பிடிக்காது.. இப்படி சொந்த வீட்டில் ஆர்டர்கள் போட்டு.. சுகம் களித்து உடல்நலம் பேணும் சோத்து அமுக்கிகளாகிய நாம் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க வேண்டும்.

மாதவிடாய் நாள்களில் பெண்கள்படும்பாடு கொடூரமானது. எவ்வளவு எளிதாக நாம் அவர்களின் மீது வன்முறைய கட்டவிழ்த்து விடுகிறோம் அந்த நாள்களில்.
கதாநாயகி மாதவிடாய் நாள்களில் உதவிக்காக ஒரு பெண்மணி வருவார் படத்தில்..

“எவ்வளவு பெரிய வீடு இந்த வீட்டை சுத்தம் செய்வது பெரும் கஷ்டம்தான்.. நான் குடுத்துவைச்சவ எங்க வீடு இரண்டு சிறிய அறைகள்தான்” பெண் சமூகத்தின் கொடும் வலிய பரிதாபம் கலந்த மன உளைச்சலோடு பதிவு செய்வார்.

கதாநாயகியின் கணவர் கதாபாத்திரமும் மாமனார் கதாபாத்திரமும் ரெம்ப நடிக்காமல் வாழ்ந்தது போலவே இருக்கும். அந்த கதாபாத்திரத்திரங்களில் நமது அப்பாவாகவோ அண்ணாகவோ நீங்களாகவோ நானாகவோ.. பொருத்திப்பார்த்தால். அது படமாக இருக்காது நிசமான நமது மிருகத்தனமான வாழ்க்கையா இருக்கும்.

படத்தில் வரும் பெண்குழந்தை நம் மனதில் கண்டிப்பாக நிற்கும். தீட்டு புனிதம் புடலங்காய் என எதுவும் வசப்படதா அந்த குழந்தை கதாநாயகி மீது அன்பு செலுத்தும் ஒவ்வொரு கட்சியும் அருமை. அதிலும் வயதான பெண் ஒருத்தி கதாநாயகி மாதவிடாய் வந்து தனி அறையில் இருக்கும் போது.. மெத்தையில் படுக்காதே.. இந்தா பாய் என்று தரையில் போட்டு இருக்க சொல்லி கணவனும் மாமனாரும் ஐயப்பசாமிக்கு மாலை போட்டு இருக்கிறார்கள் அவர்கள் முன் வந்துவிடாதே,. சொல்லி செல்லுவாள். ஆனால் பெண் குழந்தை (ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கும்) கதாநாயகிக்கு அன்போடு சாப்பிட ஒன்றை கொடுத்து விட்டு செல்லும் காட்சி.. அன்புக்கும் சமத்துவத்துக்கும் முன்னால் தீட்டு புனிதம் எதுவும் இல்லை என சொல்கிறது.

கீழே விழுந்த தன் கணவனை.. மாதவிடாய் நாளில் கதாநாயகி காப்பாற்ற தூக்கியதால்.. பரிகாரம் செய்யும் கணவன். மறுநாள் காப்பி கேக்கும் போது.. கழிவுநீரை தந்து அதிர்ச்சி அடையவைக்கிறாள். கோபத்தோடு கிச்சனுக்குள் வரும் கணவன், மாமனார்.. முகத்தில் மீது கழிவுநீரை ஊற்றுகிறாள்.. நிச்சயம் அந்த கழிவுநீர் படம் பார்க்கும் அத்தனை ஆண்கள் முகத்திலும் படிந்திருக்கும்.

கோவத்தில் தன் தாய்வீடு நோக்கி வந்து கதாநாயகி.. வீட்டில் அமர்ந்து இருப்பாள் அவளது தம்பி வெளியே இருந்து உள்ளே வரும் போதே…

அம்மா தண்ணீ குடு.. என்பான்.
அம்மா தன் இளைய மகளை தண்ணீரை எடுத்து வரச்சொல்லுவாள்..
கதாநாயகிக்கு கோவம் வந்துவிடும்…
தங்கைய பார்த்து தண்ணீய நீ எடுத்துக் கொடுக்காதே..

டேய்.. நீ போய் தண்ணீ எடுத்து குடிடா.

ஒட்டு மொத்த படத்தின் தீர்வை இந்த கடைசி காட்சி சொல்லி விடும்.

மீண்டும் சொல்லுகிறேன்.

குக்கர் சோறு வேண்டாம்.. மிக்சியில் அரைக்கவேண்டாம்.. கடுங்காப்பி இப்படிதான் வேணும்…வாசிங்மிஷினில் துணி துவைத்தால் பிடிக்காது.. இப்படி சொந்த வீட்டில்ஆர்டர்கள் போட்டு.. சுகம் களித்து உடல்நலம் பேணும் சோத்து அமுக்கிகளாகிய நாம் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க வேண்டும்.

மலையாள படம். கண்டிப்பாக அனைத்து மொழிகளிலும் வர வேண்டும். அரைகுறை மலையாளம்தான் நான். ஆனால் எளிதாக புரிகிறது. இப்படம் பார்க்க மொழி தேவை இல்லை.