Music Life Series Of Cinema Music (Kadhal Isaiyai Sollamal Sonnanadi) Webseries 66 by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 66: காதல் இசையைச் சொல்லாமல் சொன்னானடி - எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 66: காதல் இசையைச் சொல்லாமல் சொன்னானடி ! – எஸ். வி. வேணுகோபாலன்

காதல் இசையைச் சொல்லாமல் சொன்னானடி !
எஸ் வி வேணுகோபாலன்

இசை
மனதுக்கு நெருக்கமான
கவிஞனைப் போலத் தெரிகிறாய்
இன்னும் கொஞ்சம் நெருங்குகிறேன்
ஓவியனாகி விட்டாய்

இன்னும் சற்று அருகில் நான்
இசையானாய்

– இலங்கை மலையகக் கவிஞர் எஸ்தர்
(பெருவெடிப்பு மலைகள் தொகுதியில் இருந்து…)

கொஞ்சம் இடைவெளி விட்டு விட்டு இந்தக் கட்டுரைகள் வந்தாலும், இடையில் இசையிராத இடைவெளிகள் இருக்கவே வாய்ப்பில்லை. அண்மையில் வாசிக்கக் கிடைத்துப் பாராட்டி முந்தைய கட்டுரைகள் தேடியெடுத்து வாசித்து விடுவேன் என்று வாட்ஸ் அப்பில் தெரிவித்த திருமதி மீனாட்சி பாலகணேஷ் ஆகட்டும், என்ன ஆச்சு, அடுத்த கட்டுரை எங்கே என்று கேட்கும் கோவை பாரதியார் பல்கலைக் கழகப் பணி நிறைவு செய்திருக்கும் மனோகர் அவர்களாகட்டும் எண்ணற்ற அன்பர்களது தொடர் மறுமொழி ஆகட்டும், இசை வாழ்க்கையின் நீட்சிக்கு ஊக்கம் வழங்குபவர்களாக இருக்கின்றனர்.

உள்ளபடியே இடைவெளிகளை நிரப்புகிறது இசை. இடைவெளியைக் குறைக்கவும் செய்கிறது, சமயங்களில். கேட்கப் படாத கேள்விகளுக்குப் பதிலாக வந்து சேரும் இசை, பதில்கள் பெற இயலாத கேள்விகளையும் தொடுக்கிறது. இன்னார் இன்னின்ன விரும்புவார் என்று பழங்கள், இனிப்புகள், துணிமணிகள் தேர்வு செய்து கொண்டு வந்து கொடுக்கும் நெருக்கமான உறவுகளைப் போலவே, இன்னாரது இதயத்தைத் தொடும் இது என்று பார்த்துப் பார்த்துக் கேட்டுக் கேட்டு அன்பர்கள் சிலர் அனுப்பிவைக்கும் இசை, தொடர்பு எல்லைக்கு அப்பால் எங்கோ இருப்பவரோடும் பாலம் அமைந்துவிடுகிறது.

அருகே இருந்தும் பார்த்துக் கொள்ள இயலாமல் போகும் இந்தக் கொரோனா கொடுந்தொற்றுக் காலவெளியில் அன்பின் தூது, இசை வழி உரையாடலைக் கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.

அப்படியான ஓர் அருமையான பாடலை அனுப்பி வைத்தார் வங்கி முன்னாள் உதவிப் பொது மேலாளர் கிருஷ்ணன். கதைக்கான இசைப்பாடல் தான் அது என்றாலும், வாலியின் பாடல் வரிகளும், மெல்லிசை மன்னர்களது அபார மேதைமை இசைக்கோவையும் இன்னும் பல்லாண்டுகளுக்குப் பேச வைக்கும் வலிமை நிறைந்தது அது. ஒற்றைக் குழந்தைக்கான இரட்டைத் தாலாட்டு அது.

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரும் குழந்தைக்கான உருக்கமான கீதம் அது. உறவு நிலைக்க எண்ணி, குழந்தையைப் பெற்றவளே வேறு பெற்றோரிடம் ஒப்படைக்கும் குழந்தை அங்கே உறங்க, இங்கே வெறுமையின் தூளி மட்டும் காற்றில் ஆடிக்கொண்டிருக்க, விஷயமறிந்து கோபமும் ஆத்திரமும் அடைந்து தணிந்து குமுறும் தந்தையின் குரலில் இருந்து புறப்படும் கேள்விகளும், தாயின் விளக்கங்களுமாக அமைந்திருக்கும் பாடல், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பது, உறக்கம் வராத எத்தனையோ உள்ளங்களில் புகுந்து கண்ணீர் பெருக்க வல்லது.

எல் ஆர் ஈஸ்வரியின் ‘ஆரீராரிராரோ….’ என்றஅசாத்திய ஹம்மிங் குரலினிமையில் புறப்படுகிறது பாடல், அதற்கான தாளக்கட்டு பாடல் நெடுகக் கம்பீர லயத்தில் நடைபோட்டு வருகிறது. ஹம்மிங் ஏற்படுத்தும் உணர்வுகளில் நேயர் தன்னை ஒரு நெகிழ்ச்சியான அனுபவத்திற்கு உட்படுத்திக் கொள்ளத் தயாராகும்போதே, இசைத்துணுக்குகள் பல்லவியை நோக்கி அழைத்துச் செல்லவும், டி எம் சவுந்திரராஜன் என்ற அந்த அசுரனைத் தவிர வேறு யார் அத்தனை காத்திரமான குரலில், ‘மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க….’ என்று எடுத்திருக்கக் கூடும்! அடுத்த வரி, ‘மன்னவன் மட்டும் அங்கிருக்க’ என்று வேறுபடுத்தி ஒலிக்க, ‘காணிக்கையாக யார் கொடுத்தார்’ என்ற கேள்வியும், ‘அவள் தாயென்று ஏன் தான் பேரெடுத்தாள்’ என்ற தீர்ப்பும் நெஞ்சை உலுக்கி எடுப்பது. ஒரு சின்ன இடைவெளியில், பி சுசீலாவின் அபார குரலெடுப்பில் பல்லவியின் வரிகள் தொடங்கி, ‘காணிக்கையாக ஏன் கொடுத்தேன், அது கடமையென்றே நான் கொடுத்தேன்’ என்ற பதிலை உள்ளத்தைத் தொடும் வண்ணம் இசைத்திருப்பார்.

பல்லவியைத் தொடர்ந்தும், சரணத்திற்கு முன்புமாக பாடல் நெடுக எல் ஆர் ஈஸ்வரியின் ஹம்மிங் பாடலின் உயிரான அம்சமாகத் தொடரும். ஹம்மிங், குழந்தை இருக்குமிடத்தில் இன்பத்தை வெளிப்படுத்தவும், வெற்றுத்தூளி ஆடுமிடத்திற்கான தாலாட்டு துயரத்தைச் சுமக்கவுமாக எப்படி இப்படியோர் இசைக்கோவையை வந்தடைந்தனர் மெல்லிசை மன்னர்கள் என்பது நினைக்க நினைக்க மலைக்க வைப்பது.

‘கொடியில் பிறந்த மலரைக் கொடி புயலின் கைகளில் தருமோ’ என்ற முதல் சரணத்தின் முதல் வரியை இசைக்கையில், ‘தருமோ’ வில் வரும் ‘மோ’வை, டி எம் எஸ் என்னமா இழைத்திருப்பார், இரண்டாம் சரணத்தின் முதல் வரியில், ‘இமையில் வளர்ந்த விழியை இமை எரியும் நெருப்பில் விடுமோ’ என வரும்போதும், அந்த மோ வைக் கவனிக்க முடியும்.

இரண்டு சரணங்களிலும் முதலிரண்டு வரிகளை ஆண் பாடுவதாகவும், அவன் படும் பாடுகளைப் பேசுவதாகவும் அமைய, டி எம் எஸ் அந்த உணர்வுகளை, பாடலைக் கேட்போருக்கும் கடத்துவார்.
தனது குமுறலையே ஆறுதலாக மாற்றிக்கொண்டு இசைக்கும் குரலை, சுசீலா அமுதமாகப் பொழிவார் இரண்டு சரணங்களிலும்.

மூன்றாவது குரலாக ஒலிக்காமல், காலத்தின் குரலாக இழையோடும் ஈஸ்வரியின் ஹம்மிங், குழந்தையைத் தோளில் கதகதப்பாக அணைத்துக் கொண்டு செல்வதுபோலவே பாடலை முன்னெடுத்துச் செல்கிறது. ஹம்மிங் தொடக்கத்தை அடுத்து எடுக்கும் ஆர்கெஸ்ட்ரா தாள லயம் அபாரம், அதையடுத்து உருக்கத்தின் நெருக்கத்திற்கு ஷெனாய் உள்ளிட்ட இசைக் கருவிகள் இழைக்க, மீண்டும் ஈஸ்வரியின் ஹம்மிங் தொடுத்துக் கொடுத்துக் குழலிசையின் இதத்தில் சரணத்தைத் தொடங்குமாறு அமைத்திருக்கின்றனர் மெல்லிசை மன்னர்கள்.

சரணத்தில் தபலா தாளக்கட்டு, பெற்றோரின் இதயத் துடிப்புகளாகவே மாறி ஒலிக்கிறது. எதுகையும் மோனையும் சந்தமும் கொஞ்ச, மிக எளிமையான சொற்களில் கருத்துகளைக் கொணரும் வாலியின் திறம் அபாரமானது.

இரண்டு வாரங்களாக வீதியில் வராதிருக்கும் இளநீர்காரர் செல்வம் அவர்களை அலைபேசியில் அழைக்கும்போது, எதிர்பாராத ஒரு பழைய பாடலை அவர் ரிங் டோனாக வைத்திருந்தது காதில் விழுந்தது. ‘எல்லாமே என் மகன் வேலை அய்யா, இந்த விஷயமெல்லாம் நமக்கு என்ன தெரியும்!’ என்று முன்பே ஒரு முறை அலைபேசி பற்றிக் கேட்டதற்குச் சொல்லி இருந்தார்.

மிக மிகப் பழைய பாடல். ரிங் டோன் ஈர்த்ததற்கு முக்கிய காரணம், தொடக்க இசையின்றி, பல்லவி வரியில் இருந்து ஒலித்ததும், அந்த சொற்கட்டு சந்தத்திற்கேற்ப பளீர் என்று மெட்டு கட்டும் தபலா தாளக்கட்டு காற்றில் வந்து நெஞ்சைத் தழுவிக் கொண்டதும் தான்!

நிர்பந்தத்தில் மணமுடிக்கும் நாயகன், மணமகள் கண் பார்வையற்றவள் என்று அறிந்ததும் கோபத்தில் வெளியேறி, தொலைதூரத்தில் இராணுவப் பணியில் இருக்கும் நீண்ட பிரிவில், நாயகி அவனுக்கு எழுதும் கடிதம் தான் அந்தப் பாடல்.

சாந்தி படத்தின் பாடல்கள் யாவும், விஸ்வநாதன் – இராமமூர்த்தி இசையில் பெரிதும் பேசப்பட்டவை. இந்தப் பாடல், பி சுசீலாவின் நெகிழவைக்கும் குரலினிமையும், கடைசி சரணத்தில் வந்து இணையும் பி பி ஸ்ரீனிவாஸ் அவர்களது மென் குரல் கதகதப்பும் பாடலை வழிநடத்தும் குழலிசையும், வயலின் இசையும், கண்ணதாசனின் கவித்துவமிக்க பாடல் வரிகளுமாக இன்றும் பல்லாயிரம் பேர் கேட்டுக் கொண்டிருக்க வைத்திருக்கிறது.

தன் னா னனனே தா னனனே ….என்ற தத்தகாரத்தை மட்டுமல்ல கதைக்கான காட்சியையும் மனத்தில் ஏந்தியவாறே பாடலை எழுத வேண்டும். ‘செந்தூர் முருகன் கோயிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன்’ என்று எப்படி வந்து விழுகிறது பல்லவி! ‘சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன்’ என்ற அடுத்த வரியை அப்படியே கடந்து விட முடியாது, கண் பார்வையற்றவள் விடியலை ஒரு சேவலின் கூவலில் உணர்வதும், பாடலில் கலப்பதும் எத்தனை கவித்துவ வரிகள்! இங்கே முடியவில்லை, கவிஞரின் அபார ஆற்றல்…சரணங்களிலும் தொடர்கிறது.

‘கண்கள் இரண்டை வேலென எடுத்துக் கையோடு கொண்டானடி’ என்ற வரியில் எத்தனை அசாத்திய செய்தி…’கன்னி என் மனதில் காதல் கவிதை சொல்லாமல் சொன்னானடி’ என்பது அடுத்த வரி. ‘கொண்டானடி’ என்ற நீட்டலில் இருக்கும் அழுத்தம் ஒன்றாகவும்,’சொன்னானடி’ என்ற சமாதானத்தில் நிலவும் அழுத்தம் வேறாகவும் ஒலிக்கிறது அவரது குரலில். கண்கள் இரண்டை என்கிற சொற்களில் ஒரு துள்ளல், வேலென எடுத்து சம தளத்தில், பின்னர் கையோடு கொண்டானடி என்கிற சொற்களுக்குத் தான் எத்தனை கூடுதல் உயிர்ப்பு, இரண்டாம் அடியில் வரும் காதல் கவிதை என்கிற சொற்களில், நாயகன் இருக்கும் தொலைதூரத்திற்கு நீட்டி ஒலிக்கிறது அந்தக் காதல் ! ‘சொல்லாமல் சொன்னானடி’ என்பது உளவியல் பாடுகளின் இசையியல் மொழிபெயர்ப்பு அன்றி வேறென்ன….

இரண்டாவது சரணம், கவிஞர் இன்னும் அசாத்திய மொழித்திறனை வெளிப்படுத்தும் இடம். ‘ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம் வாராமல் நின்றானடி, வாராமல் வந்தவன் பாவை உடலைச் சேராமல் சென்றானடி’ என்பது, மணமுடித்த பெண் இல்வாழ்க்கையைத் தொடங்க இயலாத பரிதவிப்பை என்னமாகப் பரிமாறுகிறது! பாவை உடலை என்கிற சொற்களையும், சேராமல் சென்றானடி என்பதையும் சுசீலா குரல் உள்ளே ஒலிக்க எண்ணற்ற அப்பாவிப் பெண்களின் பரிதவிப்பாகவே எதிரொலிக்கிறது.

உள்ளக் கொதிப்பை, உடலின் தவிப்பை, உணர்வுகளின் ஏமாற்றத்தை, உணர்ச்சிகளின் கொந்தளிப்பை பி சுசீலா சொல்லுக்குச் சொல், அப்படியே பற்ற வைப்பதைப் பாடல் முழுவதும் அனுபவிக்க முடியும். எம் எஸ் வி அவர்களது ரசிகை மீனாட்சி என்பவர் (அமெரிக்காவில் இருந்து), பாடலை எப்படியெல்லாம் ரசிக்கிறார் என்பதை இணையத்தில் வாசிக்க முடியும். http://msvtimes.com/forum/viewtopic.php?t=1541&sid=1036d5ad804a2d5dfd24a65fd9247dd0

கடைசி சரணத்தில், நாயகியின் உணர்வுகளின் எழுத்தை நாயகன் வாசிப்பில் பிபி ஸ்ரீனிவாஸ் குரலில், ‘நாளை வருவான் நாயகன் என்று நல்லோர்கள் சொன்னாரடி’ என்று எடுக்குமிடம், காயத்திற்கு மருந்து பூசுவதாக ஒலிக்கும். அபூர்வமான அந்தக் குரலின் தனித்துவத்தில் பாடல் இன்னும் ஒரு படி கூடுதலாக்கும் ரசனையை.

இந்தப் பாடலை யூ டியூபில் கேட்கையில், நேயர்கள் பலரது பரவசமிக்க கருத்துகளும் அங்கே வாசிக்க முடிந்தது. ஆனால், ஒரு ரசிகரது எழுத்துகள் உற்று வாசிக்க வைத்தது: ‘திருச்செந்தூர் ஶ்ரீ முருகன் என் மகன், மகள் திருமணங்கள் இரண்டும் நடக்க அருள வேண்டுகிறேன்’ என்று எழுதத் தொடங்கி, ‘தற்சமயம் என்னைக் குறை சொல்கிறார்கள்’ என்று முடித்திருக்கும் இடத்தில், பெற்றோர் என்ற முறையில் தனது பதைபதைப்பை ஓர் இசைப்பாடல் வழி பதிவு செய்திருப்பது, உள்ளத்தைத் திறந்து பேச வைக்கும் சக்தி இசைக்கு இருப்பதை உணர்த்தியது. அந்த அன்பரது மனக்குறை விரைவில் தீரட்டும்.

இந்தப் பாடலை யூ டியூபில் கேட்கையில், நேயர்கள் பலரது பரவசமிக்க கருத்துகளும் அங்கே வாசிக்க முடிந்தது. ஆனால், ஒரு ரசிகரது எழுத்துகள் உற்று வாசிக்க வைத்தது: ‘திருச்செந்தூர் ஶ்ரீ முருகன் என் மகன் மகள் திருமணம் நடக்க அருள வேண்டுகிறேன்’ என்று எழுதத் தொடங்கி, ‘தற்சமயம் என்னைக் குறை சொல்கிறார்கள்’ என்று முடித்திருக்கும் இடத்தில், பெற்றோர் என்ற முறையில் தனது பதைபதைப்பை ஓர் இசைப்பாடல் வழி பதிவு செய்திருப்பது, உள்ளத்தைத் திறந்து பேச வைக்கும் சக்தி இசைக்கு இருப்பதை உணர்த்தியது. அந்த அன்பரது மனக்குறை விரைவில் தீரட்டும்.

ரிங் டோன் ஓய்ந்ததே தவிர, இளநீர்க்காரர் அலைபேசி அழைப்பை ஏற்கவில்லை, இன்னும் வீதியில் அவர் குரல் கேட்கவில்லை. ஓரிரு நாளில் வரத்தான் செய்வார். ஆனாலுமென்ன, உள்ளத்தைக் குளிர்விக்கும் இசையை அலைபேசியில் சீவி, ஓர் உறிஞ்சி வைத்து அனுப்பி விட்டதற்காக நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.

இந்தக் கட்டுரையின் முகப்பில் உள்ள ‘இசை’ என்ற தலைப்பிலான கவிதை, எஸ்தர் என்ற இலங்கைக் கவிஞர் தொகுப்பில் வாசித்தது. அண்மையில் சென்னை புத்தகக் கண்காட்சி நிறைவு பெறும் நாளன்று மிகவும் தற்செயலாக ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கடக்கையில், ‘என் புத்தகம் ஒன்றை உங்களால் வாங்கிக் கொள்ள முடியுமா?’ என்ற குரல் கேட்கத் திரும்பினால், அறிமுகமற்ற நம்பிக்கை முகமாக இவர் தென்பட்டார். ‘இப்படி ஓர் எழுத்தாளர் கேட்கும்போது எப்படி வாங்கிக் கொள்ளாமல் செல்ல முடியும்?’ என்ற பதிலோடு, ‘எத்தனை புத்தகங்கள் கொண்டு வந்திருக்கிறீர்கள்?’ என்றும் கேட்க, இரண்டு கவிதை தொகுப்புகளை மிகுந்த மலர்ச்சியோடு எடுத்துக் கொடுத்தார்.

வீடு திரும்பி வாசிக்கத் தொடங்கிய போது, அதிலிருந்து இசை ஒலிக்கத் தொடங்கி இருந்தது, அந்த மண்ணின் குரல், மனிதர்களின் குரல், இதயங்களின் குரல் விதவிதமான உணர்வுகளின் இசையாகவே!

கவிதையில் சொற்கள் மட்டுமே இருப்பதாக யார் சொன்னது, இசையில் ஊறியும் இசையில் மிதந்தும் இசையோடு இழைந்தும் இசையாகவே ஒலிப்பதாகவும் இருக்கின்றன சொற்கள்! பேச்சில், முணுமுணுப்பில், ஆவேசத்தில், சிரிப்பில், அழுகையில், மௌனத்திலும் இசை, தேவைக்கேற்ற அளவில் கூடியும் குறைத்துமாக ஒலிக்கிறது. வாழ்க்கையே இசை.

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com

முந்தைய தொடர்களை வாசிக்க:

இசை வாழ்க்கை 62: உள்ளம் இசைத்தது மெல்ல – எஸ். வி. வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 63: இசை கேளாது நாம் இன்று நாம் இல்லையே – எஸ். வி. வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 64: சிந்தை மயக்கும் விந்தை இசை – எஸ். வி. வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 65: கொட்டட்டும் மேளம் தான் பாடல் தேரோட்டம் – எஸ். வி. வேணுகோபாலன்

Music Life Series Of Cinema Music (Kottatum Melamthan Padal Therottam) Webseries 65 by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 65: கொட்டட்டும் மேளம் தான் பாடல் தேரோட்டம் - எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 65: கொட்டட்டும் மேளம் தான் பாடல் தேரோட்டம் – எஸ். வி. வேணுகோபாலன்



கொட்டட்டும் மேளம் தான் பாடல் தேரோட்டம்
எஸ் வி வேணுகோபாலன்

“எங்கே, உங்கள் குரல் நாண்களைக் கொஞ்சம் நான் தொட்டுத் தடவிப் பார்க்கவேண்டும், எப்பேற்பட்ட குரல்…என்ன இசை அது!” என்று ஒரு பாடகி, தன்னின் மூத்த பாடகி ஒருவரின் அசாத்திய குரலினிமை, இசை ஞானம் கண்டு உளப்பூர்வமாக உருகிப் பாராட்டுவது எத்தனை அருமையான விஷயம்.

Music Life Series Of Cinema Music (Kottatum Melamthan Padal Therottam) Webseries 65 by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 65: கொட்டட்டும் மேளம் தான் பாடல் தேரோட்டம் - எஸ் வி வேணுகோபாலன் 

அண்மையில் மறைந்த தேனிசைக் குரலரசி லதா மங்கேஷ்கர் தான் அப்படிக் கரைந்துருகி நின்றது. அவரை அசத்திய மூத்த இசைக்கலைஞர் கே பி சுந்தராம்பாள். சென்னை வந்தபோது ஜெமினி நிறுவனத்தின் புகழ் பெற்ற அவ்வை திரைப்படம் பார்த்திருக்கிறார் லதா. அதில் கேபிஎஸ் அபாரமாக வழங்கி இருந்த நடிப்பும், அற்புதமான பாடல்களும் அவரை ஓடோடிப் போய் நேரில் சந்தித்துத் தமது மரியாதையைத் தெரிவிக்க வைத்திருக்கிறது. அந்த சந்திப்பு ஓர் அரிய புகைப்படமாக வரலாற்றில் நிலைத்து விட்டதற்கு மவுண்ட் ரோடு – பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் ஸ்டூடியோ வைத்திருந்த வைத்தி என்பவர் காரணம்.

https://www.thehindu.com/entertainment/music/lata-mangeshkars-connect-with-the-carnatic-world/article38407828.ece

“என்னவோர் அழகான குரல்…நான் மட்டும் கணேசக் கடவுளாக இருந்தால், என் மீது இத்தனை பக்தி கீதங்கள் பொழியும் குரலுக்குரிய பக்தை மீது நான் காலமெல்லாம் துதி பாடிக்கொண்டிருப்பேன்” என்று காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி அவர் நெகிழ்ந்ததை எழுத்தாளர் சோழநாடன் கொடுமுடி கோகிலம் கேபி சுந்தராம்பாள் வரலாறு (ரிஷபம் பதிப்பகம்) எனும் புத்தகத்தில் பதிவு செய்திருப்பதை இசை விமர்சகர், ஆய்வாளர் வி ஸ்ரீராம் தி இந்து ஆங்கில நாளிதழில் வெள்ளிக்கிழமை சிறப்பு இணைப்பில் லதா மங்கேஷ்கர் அவர்களுக்கான புகழஞ்சலி கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

Music Life Series Of Cinema Music (Kottatum Melamthan Padal Therottam) Webseries 65 by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 65: கொட்டட்டும் மேளம் தான் பாடல் தேரோட்டம் - எஸ் வி வேணுகோபாலன் 

லதா அவர்களுக்கும் தென்னக இசைக்கலைஞர்களுக்குமான நெருக்கமான உறவு இருந்திருக்கிறது. எம் எஸ் சுப்புலட்சுமி, லால்குடி ஜெயராமன் என கர்நாடக இசையுலக முக்கிய கலைஞர்களை நேரில் வந்து சிறப்பித்திருக்கிறார் லதா. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது அன்னை இல்லம், லதாவுக்கு ஓர் அண்ணன் இல்லம், அத்தனை அன்பு கொண்டாடி இருக்கும் நேயமிக்க இதயங்கள்.

Music Life Series Of Cinema Music (Kottatum Melamthan Padal Therottam) Webseries 65 by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 65: கொட்டட்டும் மேளம் தான் பாடல் தேரோட்டம் - எஸ் வி வேணுகோபாலன் 

அவரது இந்தி, மராத்தி மொழி திரைப் பாடல்கள், பக்தி கீதங்களுக்கு இங்கே தமிழகத்திலும் எண்ணற்ற ரசிகர்கள் எப்போதும் உண்டு. அவரது மறைவு பழைய நினைவுகளை அசைபோட வைக்கிறது பலரையும்! நாதஸ்வர கலைஞர்கள் உள்பட, ஸ்வரங்களை, பாவங்களை எத்தனை நுட்பமாக இசைக்கவேண்டும் என்பதற்கு லதாவை உன்னிப்பாகக் கவனித்துக் கேட்கச் சொல்வார்கள் என்பதெல்லாம் வாசிக்கையில் அத்தனை பெருமையாக உணர முடிகிறது.

Music Life Series Of Cinema Music (Kottatum Melamthan Padal Therottam) Webseries 65 by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 65: கொட்டட்டும் மேளம் தான் பாடல் தேரோட்டம் - எஸ் வி வேணுகோபாலன் 

இசையும் ஓவியமும் பின்னிப் பிணைந்திருப்பதை, மும்பை கோகுல் ஆர்ட் ஸ்கூல் மாணவர்கள், மறைந்த இசைக் கலைஞருக்கு ஓவிய அஞ்சலி செலுத்தியதில் காணமுடிந்தது.
1950களிலேயே இந்தியிலிருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட படங்கள் சிலவற்றில் தமிழ்ப் பாடல்கள் பாடி இருந்த லதாவை, எண்பதுகளில் இளையராஜா மீண்டும் இங்கே பாடவைத்திருக்கிறார். நவுஷத் கம்பதாசன் எழுதி இசையமைத்த பாடல்கள் முதலில் பாடியவர், இரண்டாம் வருகையில், கங்கை அமரன் எழுதிய பாடலை இளையராஜா இசையில் பாடிய ஆராரோ ஆராரோ ஒரு மென் காதல் தாலாட்டு. சத்யா படத்திற்காக வாலி எழுதிய வளையோசை கலகல கலகல ..ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு.

ஹம்மிங் எப்போதும் லதாவின் சிறப்பம்சம் என்பதை ராஜா அம்சமாகக் கொணர்ந்திருப்பார். லதா அவர்கள் மறைவு அடுத்து யூ டியூபில் அவரது பாடல்களை ஏராளமான ரசிகர்கள் திரும்பத் திரும்ப விரும்பிக் கேட்பதைக் காண முடிகிறது. ஆராரோ ஆராரோ பாடலை, அதன் சரணத்தின் நிறைவுச் சொல்லில் அவர் அசாத்தியமாக வழங்கும் சுவாரசியமான திருப்பத்திற்காக, இரண்டு சரணங்களிலும் வரிகளின் ஊடே வரும் ஹம்மிங் இசைக்காக, தத்தகாரத்தின் துள்ளல் சொற்களை ஒரு குழந்தைமைக் கொஞ்சலோடு பாடும் குரலுக்காக, பாடல் நிறைவுபெறும்போது பல்லவியில் எதிரொலிக்கும் மேல் ஸ்தாயி – கீழ் ஸ்தாயி ஆராரரோ எதிரொலிக்காக, பாடலின் அருமையான தபேலா தாளக்கட்டில் பயணம் செய்யும் அந்தக் குரலினிமைக்காக, வயலின்களும் குழலும் இழைக்கும் சுகத்திற்காக விரும்பிக் கேட்பதுண்டு.

ஆராரோ ஆராரோ பாடலை லதாவின் குரலில் பல்லவியின் முதல் வரி கொண்டு திறக்கிறார் ராஜா. பிறகு குரலை விடுவித்துப் புல்லாங்குழலை ஒலிக்கவைக்கும் அந்தச் சிறிய இடைவெளியில் லதா பின்னர் குரலில் கொண்டுவரவிருக்கும் முத்திரை இடங்களை, அதற்கான தமது கற்பனையை அந்த இசையால் நிரப்பி இருப்பார் இசை ஞானி.

ஆராரோ ஆராரோ என்று லதா இசைக்கும் ஒவ்வொரு முறையும் அவரது குரலோடு இயைந்து, குரலைத் தொடர்ந்து அதே கதியில் ஒலிக்கும் ஒரு சிற்றிசையை எப்படி வருணிக்க! அந்த ஆராரோ, நான் வேறோ …அந்த ரோ ரோ ரோ வைத் தொடரும் ஓ ஓ ஓ ..வை எப்படி விவரிக்க!

முதல் சரணத்தை நோக்கிய இசை விரிப்பில் வயலின்களும், குழலும் பாடலின் திசைக்கான இசையின் வரைபடம். இரண்டாம் சரணத்தை நோக்கிய நடையில் மெல்லிய காதல் உணர்வுகளை மேலும் மென்மையாக்கி இழைக்கும் இசைக்கருவிகள்.

இப்போது கேட்கும்போதும், ஆராரோ பாடலின் ஒவ்வொரு சரணத்தின் நிறைவிலும், கங்கை அமரனின் சந்த நயத்தில் உருண்டோடும் சொற்களை ‘அள்ளித்தான் கிள்ளித்தான் காதலன் தான்…அன்னத்தை எண்ணம் போல் வாழ வைத்தான்’ என்று முதல் சரணத்திலும், ‘எத்திக்கும் தித்திக்கும் இசை பிறக்க மெத்தைக்குள் தத்தை தான் விருந்து வைக்க’ என்று இரண்டாம் சரணத்திலும் என்னமாக இசைத்திருக்கிறார் லதா என்று தோன்றும். முழு பாடலும், அந்த இதமான தாளக்கட்டும், வயலின்களும் உள்ளே யாரோ அமர்ந்து இழைத்துக்கொண்டே இருப்பது போல் கேட்டுக் கொண்டே இருக்கும்.

வேறொரு பாடல் பதிவுக்காக லதா மங்கேஷ்கர் சென்னை வந்திருக்கிறார் என்பதறிந்து, அப்போது சத்யா படத் தயாரிப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில், இந்தப் படத்திலும் அவரைப் பாடவைக்கலாம் என்று இளையராஜா கேட்க, இயக்குநர் கிருஷ்ணா, கமல் இருவரும் ஆர்வத்தோடு அணுக, நமக்கு கிடைக்கப்பெற்ற அருமையான காதல் கீதம் தான் வளையோசை.

புல்லாங்குழல் திறந்து கொடுக்கிறது அந்தக் காதல் சிறகடிப்பை! குழலில் மலரும் இசையில் மென் பாதங்களின் ஜதியைப் போலும் தாளக்கட்டில் சட்டென்று ஒத்தி ஒத்தி எடுக்கும் பஞ்சுக் குரலில் ‘வளையோசை கலகல….’ என்று பல்லவியை எஸ் பி பாலசுப்பிரமணியன் எடுக்கும் இடம் அபாரம்.

படத்தில், கமல் பேருந்தில் எப்படி ஓடோடிப் போய்ப் படிகளில் தொற்றிக் கொள்வாரோ அப்படியான மெட்டு எப்படி ராஜா உருவாக்கினார் என்று அடிக்கடி தோன்றுவதுண்டு. முரட்டு வாலிபனின் மென்மையான காதல் இதயத்தின் இதமான அரவணைப்பில் சிறகடிக்கும் ஒரு பட்டாம்பூச்சி நாயகி என்ற ஒற்றை வரியில் எடுத்திருப்பாரா இந்த இசைக்கோவையை!

பல்லவி தொடங்கவும் இரண்டாம் வரியில் ‘சில நேரம் சிலு சிலு என..’ என்று லதா இணைகிறார். இரட்டைக் கிளவி, அடுக்குத் தொடர் எல்லாம் கலந்து பறக்கும் வேக சந்தங்களில் புகுந்து கலந்து எழுந்து வருமாறு வாலி படைத்த பாடலை அத்தனை அழகோடு பாடி இருப்பார். பல்லவியின் கடைசி வரியில் ‘காதல் தேரோட்டம்’ என்ற சொற்களை ஒவ்வொருமுறையும் அப்படி ஒரு போதை முகவரியோடு வழங்கி இருப்பார் லதா.

முதல் சரணத்தில் ‘ஒரு காதல் கடிதம் விழி போடும்’ என்று அப்பாவி போல் தொடங்கும் பாலு, ‘உன்னைக் காணும் சபலம் வரக்கூடும்’ என்பதில் சிந்தும் காதல் சிரிப்பு.. ஆஹா..அதைத் தொடரும் ‘நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும் நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்’ என்ற வாலியின் அபாரக் காதல் முரண்பாட்டு நயவரிகளை லதா இசைக்கும் பாங்கில் ஒரு பாசாங்கு புகார் குரலின்வழி பதிவேறும்.

அதற்கடுத்த வரிகளில் காதலன் பரிந்துரைக்கும் காதல் நிவாரணமும், அதை வேண்டாததுபோல் காட்டிக்கொண்டு ஏற்றுக் கொள்ளும் காதலியின் தோரணையுமாக நகர்கிறது பாடல். ‘கண்ணே என் கண் பட்ட காயம்’ என்றதும் இழைக்கும் வயலின் இசைக்கீற்று, ‘கை வைக்க தானாக ஆறும்’ என்ற இடத்திலும் ஒரு மின்னல் கீற்றாக வந்து போகிறது.

இரண்டாம் சரணத்தை நோக்கிய திசை ஓர் இசைச் சோலை.! காதல் அவஸ்தையின் பரஸ்பர தாபங்களும், மோகங்களும் பொங்கித் ததும்பும் குரல்களின் இடையே, வாலியின் சொற்கள் கொண்டு, ‘ராகங்கள் தாளங்கள் நூறு, ராஜாவின் பேர் சொல்லும் பாரு’ என்று லதாவே வாழ்த்திச் சென்றிருக்கிறார் இசை ஞானியை! காதல் மிதவையின் ஒவ்வொரு வரியும் கொட்டட்டும் மேளம் தான் என்ற காதல் தேரோட்டம் தான்!

பாலுவின் துள்ளாட்டக் குரலும், இடையே சிரிப்பு ஸ்வரங்களும், சங்கதிகளும், சாகசமுமாக வளர்கிற பாடலின் இரண்டாம் சரணத்தில் இசைவழி ஒரு தியானம் போல நீள் ஹம்மிங் எடுப்பார் லதா. அதில் சன்னமான எதிரொலியாக எஸ் பி பி யின் ஹம்மிங். . வயலின்களும், புல்லாங்குழலும், இடையே கிடாரின் இசை மீட்டலுமாக உள்ளத்தினுள் தந்திகளை மீட்டிக் கொண்டே இருக்கும் பாடலாக நிலைத்து விட்டது வளையோசை.

தமிழ் உச்சரிப்பு ஒழுங்காக வரவேண்டும் என்ற அக்கறையோடு, லதா மங்கேஷ்கர், வளையோசை பாடல் வரிகளை யாரேனும் பாடிய ஆடியோ பதிவை அனுப்புமாறு முதலிலேயே சொல்லி இருக்கிறார், ராஜாவே பாடி அந்த ஆடியோ பதிவை அவருக்குச் சேர்த்திருக்கிறார். அதன் பிறகு பாடல் வரிகளை இந்தியில் எழுதிப் பாடிப் பார்த்து, ஏற்கெனவே ஏக் துஜே கேலியே படத்தின் ‘தேரே மேரே பீச் மெய்ன்’ பாடலில் வரும் தமிழ் சொற்களை அவருக்கு எடுத்துச் சொல்லித் தந்த எஸ் பி பி இந்தப் பாடல் முழுவதுக்கும் அவர் கேட்ட உதவியைச் செய்தார், பாடல் முழுவதும் பாடி முடித்ததும் அங்கிருந்த அத்தனை கலைஞர்களும் மற்றவர்களும் ஒன்றுபோல் கரவொலி எழுப்பி அவரைக் கொண்டாடினார்களாம், இருந்தாலும், லதா விடாமல், உங்களுக்கு முழு நிறைவு ஏற்பட்டதா, திரும்ப ஒரு முறை நான் பாட வேண்டி இருக்குமா என்று ராஜாவை அத்தனை அர்ப்பணிப்பு உணர்வோடு கேட்டார் என்று இயக்குநர் கிருஷ்ணா நாற்பதாண்டுக்கு முந்தைய நினைவுகளோடு அஞ்சலி செலுத்தி உள்ளார் லதாவுக்கு.

Music Life Series Of Cinema Music (Kottatum Melamthan Padal Therottam) Webseries 65 by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 65: கொட்டட்டும் மேளம் தான் பாடல் தேரோட்டம் - எஸ் வி வேணுகோபாலன் 

தமது காலத்தின் இசையை லதா மேலும் பரிமளிக்கச் செய்தார், சம காலத்தின் பாடகர்களில் அவர் இன்றும் பேசப்படுவதன் காரணம், இசையில் ஒன்றிய இதயமும், இசைக்காகத் தம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட உணர்வுகளும் தான் என்று எழுதுகின்றனர் இசையறிஞர்கள். இந்திப் பாடல்களில் பரிச்சயம் அற்றுப் போனோமே என்று ஒவ்வொரு முறை எஸ் பி பி அவர்களின் பதிவுகளில் முகமது ரபி பற்றி கேட்கும் போதும், இசை ஆர்வலர்கள் சில முக்கியமான பாடல்கள் குறித்துப் பேசும் போதும் தோன்றிக்கொண்டே இருக்கும். லதாவின் அபாரமான பாடல்கள் சிலவற்றைக் கேட்கும்போதும் அப்படியான உணர்வு மேலிடவே செய்கிறது.

மொழி கடந்து பேசிக்கொண்டே இருக்கிறது இசை. மொழி கடந்தும் மௌனத்தில் ஆழ்த்துகிறது இசை. மொழிக்கு அப்பால் உயரே பறக்கிறது இசையின் கொடி. பேச்சற்ற வேளைகளிலும் கூடப் பார்வைகளால் பரிமாறப்படும் மொழியைப் போலவே, எத்தனையோ உணர்வுகளை இசையும் கடத்தி விடுகிறது. இசைக் குயில் மறைந்தாலும், இசை அவரது உயிலாக வந்தடைந்து விட்டது இன்னும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் ! இசை வாழ்க்கை என்றால் வேறென்ன!

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com

முந்தைய தொடர்களை வாசிக்க:

இசை வாழ்க்கை 58: தேகம் தழுவும் இசைக் காற்று – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 59: இது வசந்த காலமோ என் இசையின் கோலமோ – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 60: பாட்டு நம்மை அடிமை என்று விலகவில்லையே – எஸ். வி. வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 61: இசையும் அழுத ஒரு மழை இரவு – எஸ். வி. வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 62: உள்ளம் இசைத்தது மெல்ல – எஸ். வி. வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 63: இசை கேளாது நாம் இன்று நாம் இல்லையே – எஸ். வி. வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 64: சிந்தை மயக்கும் விந்தை இசை – எஸ். வி. வேணுகோபாலன்