கலில் ஜிப்ரானின் ஆங்கில கவிதை சட்டங்களை இயற்றலும் அமல்படுத்தலும் – தமிழில்: தங்கேஸ்
சட்டங்களை இயற்றலும் அமல்படுத்தலும் (LAWS AND LAW GIVING)
முன்னொரு காலத்தில்
ஒரு அரசன் இருந்தான்
அவன் அறிவுக் கூர்மை
கொண்டவன்
ஒரு நாள் அவன் தன் குடிமக்களுக்காகப்
புதிதாகச் சட்டங்கள் இயற்ற வேண்டுமென்று நினைத்தான்
ஓராயிரம் இனக்குழுக்களிலிருந்து
ஓராயிரம் அறிவாளிகளைத் தேர்ந்தெடுத்துத்
தன் தலை நகரத்துக்கு அழைத்தான்
அவர்களிடம் “நீங்கள் புதிதாகச் சட்டங்களை எழுதுங்கள் ” என்றான்
அதன் படி
ஆயிரம் சட்டங்களும் செம்மறி ஆட்டுத் தோலின் மீது எழுதப்பட்டு
அவன் முன்னே வைக்கப்பட்ட போது
அதை வாசித்து விட்டு அவன்
ஆத்மார்த்தமாய் அழுதான்
கண்ணீர் நிற்கவில்லை
காரணம் கேட்ட போது
” தன் நாட்டில் இப்படி ஓராயிரம் குற்றவாளிகள்
உலவிக் கொண்டிருக்கிறார்களே
அதை தான் முன்பே அறிய முடியவில்லையே” என்றான்
பிறகு தன் எழுத்தரை அழைத்து
உதட்டில் ஒரு புன்னகையுடன்
எழுதிக் கொள்
இனி இந்த நாட்டின் சட்டங்களை
என்று ஒவ்வொன்றாக உரைக்க
ஆரம்பித்தான்
அவன் இயற்றிய சட்டங்கள் மொத்தமே ஏழுதான்
அழைக்கப்பட்டிருந்த அத்தனை அறிவாளிகளும்
ஆறாத கோபத்துடன்
தங்கள் வசிப்பிடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்
தாங்கள் எழுதிய சட்டங்களை
தங்கள் இனக்குழுக்களின் மீது பிரயோகித்தனர்
அன்றிலிருந்து ஒவ்வொரு மனிதனும்
தனக்கு விதிக்கப்பட்ட சட்டத்தை
பின்பற்ற ஆரம்பித்தான்
அதனால் தான் இன்றும் உலவிக் கொண்டிருக்கின்றன
ஆயிரமாயிரம்
சட்டங்கள்
இது ஒரு பெரிய தேசம்
இங்கு ஓராயிரம் சிறைகள்
ஓராயிரம் சிறைகளிலும்
ஆண்கள் பெண்கள்
அத்தனை பேரும் சட்டத்தை மீறியவர்கள்
இது ஒரு பெரிய தேசம் தான்
மக்கள் அனைவரும்
ஓராயிரம் சட்டங்களை இயற்றியவர்களின்
வம்சா வழியில் தோன்றியவர்கள்
ஆனால் அரசன் மட்டும் ஒரே அரசன்
மூலம்: கலில் ஜிப்ரான்
மொழி பெயர்ப்பு: தங்கேஸ்
