அத்தியாயம் 27: பெண் அன்றும், இன்றும் – நர்மதா தேவி
அத்தியாயம் 26: பெண் அன்றும், இன்றும் – நர்மதா தேவி
கவிதையில் கண்ணீர் சிந்தும்நொய்யல் கவிதை – ஆதித் சக்திவேல்
சிந்தக் கண்ணீர் இன்றி
வறண்ட நொய்யல்
என் கவிதையில் – அதைச்
சிந்திக் கொண்டிருக்கிறது
சத்தமின்றி
கவிதையில்
எழுத முடியாச் சொற்கள்
என் கண்களும் முகமும் சிவக்கின்றன
தொண்டையை அடைக்கும்
விம்மலின் ஊடே
எழுதி முடித்த பின்
கூர்ந்து கவனித்தேன்
கசிகிறது ரத்தம்
எழுத்துக்கள் ஒவ்வொன்றிலிருந்தும்
சொட்டுச் சொட்டாய்
ஆற்றில் வேதிக் கழிவு கலப்போர்- தாயின்
சோற்றில் நஞ்சு கலப்போர்
நீரை உறிஞ்சி விற்போர்
தாய்ப் பாலைத் திருடி விற்போர்
ஆக்ரமித்து அதை நெருங்குவோர்
பெற்ற தாயின் கழுத்தை நெறுக்குவோர்
அடி மணலை அள்ளிச் செல்வோர்
அவளது உயிரையே உருவிச் செல்வோர்
இவரெல்லாம் முறை வைத்து
நொய்யலின் முதுகில் குத்தியதில்
நீரோடு கலந்து ஓடிய ரத்தம் – கவிதையின்
ஒவ்வொரு எழுத்திலும் வடிகிறது
மணலில் ஓடிய நொய்யல் – எங்கள்
மனதிலும் ஓடி – அன்று
சிந்து பாடிய அது – இன்று
நொந்து வாடியது
அன்னையை விற்றுப்
பணம் எண்ணும்
பிணங்களை எண்ணி எண்ணி
பயிருக்கு நீர் தந்த நொய்யல்
நம் உயிருக்கும் தந்த அதை
வரம்பு ஏதுமின்றிச்
சுரண்டிச் சூறையாடிய பின்
நரம்பு அறுந்த அந்த வீணையில்
ஈரம் இழந்த உயிரின் இதயம்
துயரைத் தானே மீட்டும் இனி
காலத்திடம் கேட்க
ஒன்று தான் உண்டு எனக்கு
மரமாக மாற்றி விடு என்னை
நொய்யலின் கரையில் நின்று
காக்கிறேன் கடைசி வரை அதை
அது முடியாது எனில்
நோய் இல் நதி – இன்று
பாயில் சுருண்ட அது
நோயில் விழ – அதைச்
சாவின் விளிம்பில் நிறுத்தியோரை
நீங்காச் சின்னமாய்
நீராய் ஓடிய கற்கண்டை
நினைவுச் சின்னமாக்கிய
நீசரை
காலத்துக்கும்
காணக் கிடைக்கா அமிர்த ஓட்டத்தை
காணக் காண
காணாமல் செய்தோரை
ஓடிக்கொண்டிருந்த
ஓவியத்தைத்
தீவைத்து எரித்தோரை
வணிகம் சார்ந்தோரை
மனிதம் சார்ந்தோராய்
நீரைக் கெடுக்கும் நாசகாரரை
மனிதராய்
மாற்றி விடு
சட்டம் செய்யப்படும் நாளிலேயே
அதன் விலையும் ஓட்டைகளும்
நிர்ணயம் செய்யப்படும் நாட்டிலே
வான் நோக்கிக் கதறும்
என் குரலில் நிறைந்திருக்கிறது
“எத்தனை கொலைகாரர்கள் இங்கே ….
என்னை அவர்களில் ஒருவன் ஆக்கிடாதே” எனும்
என் இயலாமையின் இறைஞ்சல்
ஆதித் சக்திவேல்
கோவை
8903671246
மறதி கவிதை – ஐ. தர்மசிங்
“ஆகாயத்தின் அடிவாரத்தில் ஊஞ்சல் கட்டி
அனைவரையும் ஆனந்தமாக ஆடவிடுவோம்
அலைகளின் மேலே
நடை பழகும் வித்தையை
கண்டிப்பாகக் கற்றுத் தருவோம்
காற்றிலும் பறந்து மகிழ
வினோதமான சிறகுகளை
விலை குறைவாக வழங்குவோம்
பசி போக்கும் மாத்திரைகளை
இலவசமாக
வீடுகளிலேயே விநியோகிப்போம்
நகரும் வீடுகளை உருவாக்கி
எங்கேயும் வசிக்கும் உரிமையை
சட்ட வடிவமாக்குவோம்
ஒளியினைச் சேகரித்து
இருளில்லாப் பாதைகளில்
பயமின்றி உலவச் செய்வோம்
கார் மேகங்களைக் கட்டிப்போட்டு
ஒளிந்திருக்கும் மழைத்துளிகளை
அவிழ்த்து விடுவோம்”
இப்படித்தான்
முன்பும் சொன்னார்கள்
இப்போதும் சொல்கிறார்கள்
எப்போதும் சொல்வார்கள்
அவர்களுக்கு துல்லியமாகத் தெரியும்
எத்தனைமுறை ஏமாந்து போனாலும்
கரவொலிகளோடு
நாம்
காத்திருக்கும் இரகசியம்
நமது இரகசியமே
அவர்களின் முதலீடு
அவர்களின் முதலீடு
என்பது
நமது மறதி…
நூல் மதிப்புரை: ஜீவாவின் துர்கா மாதா நாவல் – கருப்பு அன்பரசன்
தமிழகம் முழுவதிலும் சட்டம் ஒழுங்கை காப்பதற்கு1541 காவல் நிலையங்களும் ஒரு லட்சத்து 36 ஆயிரம் காவலர்கள் பணியில் இருப்பதாக புள்ளிவிவரங்களில் அறிய முடிகிறது. மரியாதைக்குரிய நீதி வழங்க.. நீதி பரிபாலனம் செய்ய 214 நீதிமன்றங்கள் இருப்பதாகவும் காட்டுகிறது புள்ளிவிவரம்.. சட்டம் ஒழுங்கு தமிழகம் முழுவதிலும் எப்படி காப்பாற்றப்பட்டு வருகிறது, பாதுகாப்பு யாருக்கு வழங்கப்படுகிறது என்பதை சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் கேள்விப்பட்டு வருகிறோம் கண்கூடாக பார்த்தும் வருகிறோம்.
இருக்கக்கூடிய அனைத்து நீதிமன்றங்களிலும் தினம் ஏதேனும் ஒரு வழக்கிற்காகவது நீதி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும்.. நீதி பரிபாலனை என்பது தினந்தோறும் எல்லா நீதிமன்றங்களிலும் நிகழ்ந்து கொண்டு வந்தாலும் எங்கேயாவது எப்போதாவது வழங்கப்படும் நீதி மட்டுமே இங்கு எல்லோராலும் பேசப்படுகிறது.. கொண்டாடப்படுகிறது. அப்படி என்றால்
நீதிமன்றங்கள் யாருக்கு ஆதரவாக நீதி வழங்க.. காவல்துறை யார் நலன் காக்க சட்டம் ஒழுங்கு பராமரிக்க.. பாதுகாக்க அமைக்கப்படுகிறது என்பது மிகப் பெரிய கேள்விக்குறியே.
இவை இரண்டுமே எவர் கைகளில் அரசு இருக்கிறதோ அதைப் பொறுத்து இரண்டும் செயல்படும். பெரும்பான்மை மக்களுக்கு ஆதரவாக இவர்கள் இருப்பது உண்மை என்று இங்கு நாம் நம்பினால் தஞ்சை கீழ் வெண்மணி தொடங்கி பொள்ளாச்சி சம்பவங்கள் வரை நீதிமன்றமும் காவல்துறையும் இணைந்து நடததிய கொடூரங்கள் என்பது குற்றங்களுக்கு காரணமானவர்கள் செய்து காட்டிய கொடுமைகளைக் காட்டிலும் பெரும் கொடூரங்களாகவே தெரிகிறது.
இப்படியான சூழலில்தான் நிலவுடைமையாளர்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு அதிகாரப் பொறுப்பில் வரும்பொழுது எளிய மக்களுக்கு பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நிகழ்த்த எல்லைகளை விரிவு படுத்திக் கொள்கிறார்கள்.. கூடவே அவர்களின் உழைப்பை ஏமாற்றி சுரண்டி மிரட்டி பணிய வைத்து தங்களின் வளமையை பெருக்கிக் கொள்கிறார்கள். கீழமையான செயல்களை வழமையாக்கிப் பணம் பார்க்க.. பணம் பறிக்க எந்த எல்லைக்கும் செல்கிறார்கள் நில உடமையாளர்களாக இருக்கக் கூடிய பல நிறுவனங்களின் முதலாளிகள். விழித்துக் கொண்டவர்கள் ஒத்து வராதவர்கள் என தாங்கள் நினைக்கக் கூடியவர்களை கொலையும் செய்கிறார்கள், பாதுகாப்பாக சட்டத்தையும் நீதியையும் பணம் கொடுத்து தங்களுக்கானதாக மாற்றிக் கொள்கிறார்கள்.
பொதுவெளியில் பலது விவாதத்திற்கு, பலராலும் கண்டனத்திற்கு உள்ளாக்கப்படும் பொழுதும் யாராவது எதையாவது சொல்லி வைக்கப் போகிறார்கள் என்கிற கபடம் மிகுந்த எண்ணத்தில் அநீதிகளை கலந்தே நீதி வழங்குகிறார்கள். பொதுவெளியில் வேறு பல விஷயங்கள் பேசப்படும் பொழுது அல்லது திட்டமிட்டு மடை மாற்றப்படும் பொழுது ஒட்டிக்கொண்டிருந்த நீதியும் விலக்கி, நீக்கி, அநீதி நெஞ்சை நிமிர்த்தி வஞ்சகமாக உலா வர இன்னொரு நிதி மன்றத் தீர்ப்பு எழுதப்படுகிறது கள்ளமான தரவுகள் தயார் படுத்தப்பட்டு ஒரு வழக்கிற்கு இரண்டு மூன்று தீர்ப்புகள் வருவது என்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது என்பதை பல்வேறு வழக்குகளில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
எளியவர்களுக்கும், எல்லா நிலையிலுள்ள பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும், உழைக்கும் மக்களுக்கும் எதிராக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வசதி படைத்தவர்கள் மற்றும் நில உடைமையாளர்களின் கரங்களில் அதிகாரத்தின் அத்தனை சாட்டைகளும் இருக்கும் பொழுது “அண்ணா.. உங்களை நம்பித்தானே வந்தேன் என்னை விட்டுவிடுங்கள்” என்று அலறிடும் இளம் பெண்கள்; சொந்த மாநிலத்தில் வாழ வழியில்லாமல் ஆட்சியாளர்களால் அதிகாரத்தால் விரட்டப்பட்டு தமிழ்நாட்டின் கோவை திருப்பூர் சென்னை இன்னும் பல தொழில் நகரங்களில் தினம் செத்து வாழ்ந்துகொண்டிருக்கும் இலட்சக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்.. பிழைக்க வந்தவர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக தமிழகத்தில் குற்றச்செயல்கள் எங்கு நடைபெற்றாலும் கைதாகி சிறைக்குள்ளும்.. வீதியில் நடந்திடும் குற்றச் செயல் எதுவாக இருந்தாலும் அங்கே மொழி தெரியாத வேற்று மாநிலத்தவர் இருந்தால் அவரை சந்தேகப்பட்டு கம்பத்தில் கட்டி அடிப்பதும்..
இன்னொருவர் செய்த குற்றச் செயலுக்கு மொழி தெரியாத ஆண் பெண் தொழிலாளர்களை பொறுப்பாக்கி இனவெறி தூண்டும் செயல்களும் தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பது.. பார்வையாளராக இருக்கும் நம்மில் எத்தனை பேர் அம்மக்களை பிழைக்க வந்தவர்கள்; நம்மை நம்பி வந்தவர்கள் அவர்களை பாதுகாப்பது நமது கடமை என்கிற எண்ணம் இருக்கிறது என்பதை அவரவர் மனசாட்சிக்கே விட்டு விடுவோம்..
அம்மக்கள் குடியிருக்க வாடகை வீடு கேட்டு வந்தால்கூட அவர்கள் குறித்த என்ன பார்வையோடு அவர்களை நாம் அணுகுகிறோம் அவர்களோடு எவ்வாறு உரையாடுகிறோம்..? இப்படியான மனநிலையை நமக்குள் கட்டமைத்து வைத்தது யார்?.. அதிலிருந்து எப்பொழுது நாம் விடுபடப் போகிறோம்..? இந்தக் கேள்விகளை நமக்குள் நாமே கேட்டுக் கொண்டு தொடர்வோம்.
இங்கே எழுத்தாளர் ஜீவா அவர்களின் கண்ணிற்கும் மனதிற்கும் நாள் ஒன்றின் பொழுதினில் கண்களில் இருட்டை அப்பிக்கொண்டு நாள் முழுவதும் தாங்கிடும் பணிச்சுமையின் உடல் வலியோடு சமையல் கூடம் ஒன்றினில் மற்றவர்கள் சாப்பிட்ட எச்சில் தட்டுகளை தழுவிக் கொண்டிருக்கும் மொழி அறியாத புலம்பெயர்ந்து பெண் தொழிலாளி ஒருவர் தென்படுகிறார்.. அவரோடு சேர்த்து திருப்பூர் நகரம் முழுவதும் பணியின் தொழிற்சாலைகளிலும் இன்னும் பல தொழில் நிறுவனங்களிலும் நிறுவனத்தின் உரிமையாளர்களும், அவர்களுக்கு வெளிமாநிலத்தில் இருந்து ஆட்களை அடிமையாக பிடித்து வரும் புரோக்கர்களும் ஆண் பெண் தொழிலாளர்களும் உடல் சூம்பிக் கிடக்கும் அவர்களின் குழந்தைகளும்.. குறிப்பாக பெண் குழந்தைகளும், பெண்களும் உடலுழைப்பு வழியாக சுரண்டப் படுவதோடு, அவர்களின் ஏழ்மையை இல்லாமையை, இயலாமையை தங்களுக்கு சாதகமாக்கி.. பாலியல் வக்கிர தோடு அவர்களை அணுகி, அதிகாரத்தின் துணையோடும் அரசியல் பாதுகாப்போடும் திமிர் எடுத்து வாழ்ந்திடும் கொடூர நெஞ்சம் படைத்தவர்களை கண்டிடுக்கிறார்..
இவர்களையே தன்னுடைய “துர்கா மாதா” புதினத்தில் கதாபாத்திரங்களாக படைத்திருக்கிறார்.. சாப்பாட்டுக் கூடத்தில் எச்சில் தட்டுகளை கழுவிக் கொண்டிருந்த பெண்ணை; அந்தப் புலம்பெயர்ந்து தொழிலாளியை அரசியல் அறிந்த, தெளிவு பெற்ற பெண்ணியப் போராளியாக துர்காவாகப் படைத்திருக்கிறார். புலம்பெயர்ந்து தொழிலாளிகள், அதிகாரம் ப்படைத்தவர்களால் யாரோ செய்த குற்ற செயல்களுக்கு பலிகடாவாக மாற்றப்படுவது என்பது தமிழ்நாடு முழுவதிலும் எவ்வாறு நிகழ்ந்து வருகிறது என்பதை எளிய வார்த்தைகளில் தனது புதினத்தில் கொடுத்திருக்கிறார். நில உடைமையாளர்களின் பாலியல் வக்கிரத்திற்கு இளம் பெண்கள் வஞ்சகமாக ஆட்ப்படுத்தப்படுவதெப்படி.. காவல் துறையும் அதற்கு எவ்வாறு உடந்தையாக கள்ளத்தனம் மிகுந்து செயல்பட்டது என்பதினை பொள்ளாச்சியில் நடைபெற்ற கொடூர நிகழ்வின் வலியோடு கொண்டுவந்திருக்கிறார் துர்கா மாதாவில்.
பள்ளிகளில் “குட் டச்,பேட் டச்” என்பதை தவறான புரிதலோடு சொல்லிக் கொடுப்பதால் வீட்டில் இருக்கும் அப்பா உள்ளிட்ட ஆண்களோடு உரையாடுவது பழகுவது என்பதிலிருந்து பெண் குழந்தைகள் எவ்வாறு அன்னியப்பட்டு இருக்கிறார்கள் என்பதை ஆழமான செரிரிவான உரையாடல் வழியாக ஆழமாக பேசி இருக்கிறார். உடல் சார்ந்து பார்வையினை குழந்தைகளுக்குள் அவர்களை அறியாமலேயே வேறு திசை வழிக்கு கொண்டு செல்லும் அபாயத்தை இத்தகைய பயிற்றுவிப்பால் ஆசிரியர் பெருமக்கள் செய்து வருகிறார்கள் என்பதை காத்திரமாக பதிவு செய்து இருக்கிறார் ஆசிரியர்.
“எனது உடல் எனது உரிமை” என்கிற பெண் உரிமை சார்ந்த முழக்கம் ஒருவகையில் பெண்களுக்கு எதிராக மாறிடும் அபாயத்தை இன்றைய நுகர்வு கலாச்சாரமும் முதலாளித்துவமும் அதனுடைய லாப வெறியும் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதையும் பேசியிருக்கிறார். சமூகத்தில் எத்தகைய அரசியல் மாற்றம் நிகழ்ந்தால், நிகழ்த்தினால் மட்டுமே பெண்கள் மீதான பெண் தொழிலாளிகள் மீதான உழைப்புச் சுரண்டலும் பாலியல் வக்கிரத்தை அணுகுவதில் சிறு மாறுதலையும் ஏற்படுத்த முடியும் என்பதை துர்கா மற்றும் டாக்டர் ரவீந்திரன் கதாபாத்திரங்கள் வழியாக உரையாட செய்திருப்பார்.
சமூகத்தின் மேல் அக்கறை கொண்டவர்கள் படைக்கும் கலை இலக்கியம் சார்ந்து எதுவாக இருந்தாலும் அது எளிய மக்களுக்கு ஆதரவாகவும் ஏறி மிதிக்கும் ஏமாற்றுக்காரர்களுக்கு, வஞ்சகர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பிரச்சாரமே. இந்தப் பிரச்சாரத்தை அழகியலோடும் இலக்கிய நயத்தோடும் ஒருபுறமும்; அதே நேரத்தில் சாதாரண மக்கள் பேசக்கூடிய வார்த்தைகளின் வழியாக எளிய சொற்களை கைகொண்டு பிரச்சாரத்தை நேரடியாக நிகழ்த்துவது இன்னொரு புறமும் நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும்..
இந்த இரண்டு வகையான உத்திகளும் சமூக மாற்றத்திற்கு அரசியல் மாற்றத்திற்கு வெவ்வேறு தளத்தில் இயங்கக்கூடிய மக்களைச் சென்றடையும். இரண்டு விதமான உத்திகளுமே அனைத்து மக்களின் வாழ்வினை மேம்படுத்துவதற்காக தான் என்பதை புரிந்து கொண்டு இந்தப் புதினத்தை நாம் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. துர்கா மாதா நேரடி அரசியலை நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி உரையாடி வெளிவந்திருக்கிறது.
நாவலாசிரியர் ஜீவா பெண்களுக்கு எதிராக இருக்கக்கூடிய பாலியல் வக்கிர தன்மையின் மூல காரணியாக இருக்கக்கூடிய சமூக காரணங்கள் அனைத்தையும் அனைவரையும் ஒரே நாவலுக்குள் கொண்டு வந்து விடலாம் என்கிற எண்ணத்தோடு இதை எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன்.. இதை தவிர்த்திருந்தால் புதினத்துக்கு இன்னும் கூடுதல் பலம் கிடைத்திருக்கும்.
புலம்பெயர்ந்து தமிழகத்தில் வாழ்ந்து வரும் எளிய மக்களை சமூக விரோதிகளாகவே கட்டமைத்து வரும் சமூக ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் என அனைத்திற்கும் எதிராக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் படும் அவலங்களை, அவர்கள் உழைப்பு சுரண்டப்படுவதை, பெண் தொழிலாளிகள் வஞ்சிக்கப்படும் அவலத்தை பேசியதோடு மட்டுமல்லாமல் புலம்பெயர்ந்த பெண் ஒருவரையும் தேர்ந்த அரசியல் போராளியாக சித்தரித்து இந்த புதினத்தில் களமாட விட்டிருக்கிறார் வாசிப்பவர்களின் மனதில்.
வாழ்த்துக்கள் தோழர் ஜீவா.
நல்ல முறையில் அச்சடித்து வெளிக் கொண்டு வந்திருக்கிறார்கள் பொன்னுலகம் புத்தக வெளியீட்டாளர்கள். தெளிவான அரசியல் பேசும் க்ரைம் நாவல் துர்கா மாதா.
நூல்: துர்கா மாதா
ஆசிரியர்: ஜீவா
வெளியீடு: பொன்னுலகம் புத்தக_நிலையம்
விலை ₹.150/-
தெளிவு படுத்தாத சட்டம் – மு தனஞ்செழியன்
அது ஒரு வினோத
பழக்கம் தான்
தினமும் குளிப்பது.
நிலக்கரி சுரங்கத்தைச்
சுற்றித் திடீரென
உருவாகும் மேடுகளைப் போல
அறையின் மூலையில்
குவிந்து கிடந்தன.
அதற்கெல்லாம் ஒரு எசமானி இருக்கிறாள்
இந்திய அரசியல் அடிப்படைச் சட்டத்தில் கூட
தெளிவு படுத்தாததைக்
கையில் எடுக்கிறாள்
வீட்டார் அனைவரும்
உள்ளாடையை
தனித் தனியாக அணிந்தாலும்
எல்லோர் உள்ளாடையையும்
அவள் மட்டும் துவைக்கிறாள்.
கலில் ஜிப்ரானின் ஆங்கில கவிதை சட்டங்களை இயற்றலும் அமல்படுத்தலும் – தமிழில்: தங்கேஸ்
சட்டங்களை இயற்றலும் அமல்படுத்தலும் (LAWS AND LAW GIVING)
முன்னொரு காலத்தில்
ஒரு அரசன் இருந்தான்
அவன் அறிவுக் கூர்மை
கொண்டவன்
ஒரு நாள் அவன் தன் குடிமக்களுக்காகப்
புதிதாகச் சட்டங்கள் இயற்ற வேண்டுமென்று நினைத்தான்
ஓராயிரம் இனக்குழுக்களிலிருந்து
ஓராயிரம் அறிவாளிகளைத் தேர்ந்தெடுத்துத்
தன் தலை நகரத்துக்கு அழைத்தான்
அவர்களிடம் “நீங்கள் புதிதாகச் சட்டங்களை எழுதுங்கள் ” என்றான்
அதன் படி
ஆயிரம் சட்டங்களும் செம்மறி ஆட்டுத் தோலின் மீது எழுதப்பட்டு
அவன் முன்னே வைக்கப்பட்ட போது
அதை வாசித்து விட்டு அவன்
ஆத்மார்த்தமாய் அழுதான்
கண்ணீர் நிற்கவில்லை
காரணம் கேட்ட போது
” தன் நாட்டில் இப்படி ஓராயிரம் குற்றவாளிகள்
உலவிக் கொண்டிருக்கிறார்களே
அதை தான் முன்பே அறிய முடியவில்லையே” என்றான்
பிறகு தன் எழுத்தரை அழைத்து
உதட்டில் ஒரு புன்னகையுடன்
எழுதிக் கொள்
இனி இந்த நாட்டின் சட்டங்களை
என்று ஒவ்வொன்றாக உரைக்க
ஆரம்பித்தான்
அவன் இயற்றிய சட்டங்கள் மொத்தமே ஏழுதான்
அழைக்கப்பட்டிருந்த அத்தனை அறிவாளிகளும்
ஆறாத கோபத்துடன்
தங்கள் வசிப்பிடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்
தாங்கள் எழுதிய சட்டங்களை
தங்கள் இனக்குழுக்களின் மீது பிரயோகித்தனர்
அன்றிலிருந்து ஒவ்வொரு மனிதனும்
தனக்கு விதிக்கப்பட்ட சட்டத்தை
பின்பற்ற ஆரம்பித்தான்
அதனால் தான் இன்றும் உலவிக் கொண்டிருக்கின்றன
ஆயிரமாயிரம்
சட்டங்கள்
இது ஒரு பெரிய தேசம்
இங்கு ஓராயிரம் சிறைகள்
ஓராயிரம் சிறைகளிலும்
ஆண்கள் பெண்கள்
அத்தனை பேரும் சட்டத்தை மீறியவர்கள்
இது ஒரு பெரிய தேசம் தான்
மக்கள் அனைவரும்
ஓராயிரம் சட்டங்களை இயற்றியவர்களின்
வம்சா வழியில் தோன்றியவர்கள்
ஆனால் அரசன் மட்டும் ஒரே அரசன்
மூலம்: கலில் ஜிப்ரான்
மொழி பெயர்ப்பு: தங்கேஸ்
கவியோவியத் தொடர்: மகத்தானவர்கள் 20 – நா.வே.அருள்
மகத்தானவர்கள்
*************************
கவிதைத் திருத்தச் சட்டங்கள் கொண்டுவந்து
அவசர அவசரமாக அமுல்படுத்துகிறபோது
கவிஞர்கள் என்ன செய்வார்கள்?
கவிதைக்குக் குறைந்தபட்ச மதிப்பு கேட்டு
திடீரென உலகிலுள்ள எல்லாக் கவிஞர்களும்
வேலை நிறுத்தம் செய்தால்
என்னாகும் சொற்களுக்கு?
உருட்டி விளையாட ஒரு குழந்தையில்லாத வருத்தத்தில்
மணலில் புதைந்து கிடக்கும் மரப்பாச்சியைப் போல
எல்லா சொற்களும் அநாதையாய்க் கிடக்குமோ?
அவை அநாதைகளாகி
யாரிடம் போய் பிச்சையெடுக்கும்?
அவை விதைகளாக மாறிவிடும்
ஒரு விவசாயியின் கைகளின் வழியே
கலப்பைக் கீறலில்
ஒவ்வொன்றாய் விழுந்து
வேர்க்கடலைச் செடியாகும்.
பறிப்பவர்களின் கைகளில் மண்வாசம் எழும்.
மண்வாசம் மீண்டும் சொற்களாய் மாறி
விவசாயிகளைக்
கவிஞர்களாக மாற்றவல்லவை.
விவசாயிகள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்
போராட்டத்தில் களைத்துப்போன கவிஞர்களுக்குப்
புசிக்க ரொட்டிகளுடன் வருவார்கள்.
நடுங்கும் குளிரில் விறைத்துப்போனவர்களுக்குப்
போர்வைகளுடன் வருவார்கள்.
குளிரில் இறந்துபோன கவிஞர்களுக்கு
இரங்கல் உழவு உழுவார்கள்
கவிஞர்களின் வெற்றியைக் கொண்டாட
ஒரு குடியரசு தினத்தில்
கண்டிப்பாய் டிராக்டர்களுடன் வருவார்கள்.
கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்
முந்தைய தொடரை வாசிக்க:
கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 18 – நா.வே.அருள்








