தோழர் பி.சீனிவாச ராவ் நினைவு தின கட்டுரை – என்.சிவகுரு

தோழர் பி.சீனிவாச ராவ் நினைவு தின கட்டுரை – என்.சிவகுரு



மூன்றெழுத்து மகத்துவம்- பி.எஸ்.ஆர்

இன்று ஒரு வெளிமாநிலத்திற்கு நாம் பயணப்பட திட்டமிடும் போதே அந்த பகுதியின் விவரங்கள், எதெல்லாம் அங்கு பிரபலமான இடங்கள், அப்ப்குதியின் மொழியில் உள்ள சில இலகுவான பயன்பாட்டு வார்த்தைகள், உடை, உணவு கலாச்சாரம் என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு அதெற்கேற்ப நமது பயண திட்டத்தை தீர்மானிக்கிறோம்…அறிவியல் வளர்ச்சி நமக்கு பேருதவி செய்கிறது..தகவமைத்து கொள்கிறோம். 

ஆனால் தான் சார்ந்திருக்கும் கட்சியை உருவாக்க, கட்டமைக்க, விரிவுபடுத்த, 70 ஆண்டுகளுக்கு முன்னால் மொழி தெரியாத ஒரு பகுதிக்கு வந்திறங்கி சரித்திரமாகி போன ஒருவரை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? 

மேல இருக்கறவன் பாத்துக்குவான், கை விட மாட்டான், மரத்த வெச்சவன் தண்ணி ஊத்துவான் என நம்பும் மக்கள் கூட்டம், நமக்கு விதிச்சது அவ்வளவு தான் , யாரு வந்து என்ன செய்ய முடியும் என நொந்து போய் வாழ்வின் அனைத்து துயரங்களுக்கும் வேறு ஏதோ ஒன்று காரணம் என நினைத்து கொண்டிருந்த அப்பாவி மக்கள் மத்தியில் நமக்கான மாற்றத்தை நாமே உருவாக்க முடியும் , அது நம் காலத்திலேயே சாத்தியம் என சாதித்து காட்டிய ஒருவர் சம காலத்தில் வாழ்ந்து மறைந்துள்ளார் ..அவர் யாரென தெரிந்து கொள்ள வேண்டாமா? 

ஒரேயொரு மனிதன் அனைத்து சாகசங்களையும் செய்து மக்களை துன்பங்களிலிருந்து காப்பாற்றியவர் எனும் திரை கதாநாயகர்களை பார்த்து பிரமித்து நின்ற சமயத்தில் தங்களுடைய அன்றாட வாழ்வில் எவ்வித ஒளி வட்டமும் இல்லாமல், வாழ்வின் அத்தனை அம்சங்களோடும் ஒன்றர கலந்த ஒளி ஏற்றிய ஒரு போராளியை பற்றி தற்கால தலைமுறைக்கு அவ்வரலாற்றை சொல்ல வேண்டுமே…

அப்படி என்ன செய்தார் ? என்ன சாதனை ? என்ன வாழ்க்கை மாற்றத்தை தந்தார் ? யாரவர்? 

பி.சீனிவாச ராவ் எனும் பெயர் கொண்ட பி.எஸ்.ஆர். 

1907 கர்நாடக மாநிலத்தில் பிறந்த பி.எஸ்.ஆர் சிறு வயதிலேயே தந்தையை இழந்து , தாயின் வளர்ப்பில் உருவானவர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்பதற்காக படிப்பை, பின் செய்த வேலையை துறந்து போராட்டங்களில் ஈடுபட்டவர். அப்படி நடந்த போராட்டங்களின் போது பிரிட்டிஷ் போலீசால் தாக்கப்பட்டு, சாக்கடையில் வீசப்பட்ட போது, உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை காப்பாற்றியவர் ஒரு தாசி தாய் .. அவரையும் தன் தாயாக போற்றியவர் பி.எஸ்.ஆர்.

விடுதலை வேள்வியில் தன்னை அர்ப்பணித்த சீனிவாச ராவ் சிறையிலிருந்த போது நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தொடர்பு கிடைத்தது. ஏகாதிபத்தியத்தின் கோர முகம் பற்றி தெளிவான பார்வை பெற்றார். சோசலிச கருத்துக்கள் பற்றி தெரிய வந்தது. தொடர் சிறை வாசத்தில் நடந்த உரையாடல்கள் அவருக்கு அரசியல் வெளிச்சத்தை ஊட்டியது. 

தென் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதற்காக பணிக்கப்பட்ட மகத்தான தோழர் அமீர் ஹைதர் கான் அவர்களை சிறையில் சந்திக்கும் வாய்ப்பை அந்நிய துணி எரிக்கும் போராட்டம் உருவாக்கி தருகிறது. இருவரும் ஒரே சிறையில்.. விவாதங்கள்..அரசியல் பார்வை விசாலம் அடைகிறது. அமீர் ஹைதர் கான் பேராசான் காரல் மார்க்ஸ் ,பிரெடிரிக் ஏங்கெல்ஸ் எழுதிய “ கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை” வாசிக்கிறார். சிந்தனை மாற்றம் வித்திடுகிறது. 

மீண்டும் ஒரு முறை படிக்க… தேசிய சிந்தனை மாறி வர்க்க பார்வை மேலோங்குகிறது. மானுட விடுதலைக்கு மார்க்சிய தத்துவமே தீர்வு என திடமாக நம்புகிறார். 

இரண்டாவது காவிரியாக: 

தான் ஏற்றுக்கொண்ட கட்சியினை அமைப்பாக உருவாக்க தம்ழகத்துக்கு அனுப்பபடும் தோழர் சீனிவாச ராவ் எதிலிருந்து துவங்குவது என யோசித்து , கிராமப்புற விவசாயிகளையும், தொழிலாளர்களையும் திரட்ட முடிவெடுத்து ஒருங்கிணைந்த அன்றைய தஞ்சை மாவட்டத்திற்கு வருகிறார். மொழி ஓரளவே தெரியும்..கட்சி அமைப்பே கிடையாது. 

அடிப்படையிலிருந்து உருவாக்க வேண்டும். எப்படி செய்வது? அதற்கு மக்களின் பாடுகள் தெரிந்து கொள்ள வேண்டும்… கிராமங்களுக்கு சென்று விவசாயிகளின் துன்ப துயரங்களை பார்த்தார்.. அதிகாலை 4மணிக்கு கொம்பு ஊதியதிலிருந்து துவங்கும் வேலை.,ஓய்வில்லாமல் வெறும் கஞ்சியை குடித்து, அந்தி போய் இரவு 8 மணி வரை வயலில் முதுகெலும்பு ஒடிந்து வளைந்து போய் …என்ன துயரமான வாழ்க்கை..

உடல் நலம் சரி இல்லையென்றால் கூட விடுப்பு சொல்ல முடியாது.. வந்து நொந்து தான் ஆக வேண்டும். அதையும் மீறி வரவில்லை என்றால் சவுக்கடி தான். ஏனென்றால் அவர்கள் பண்ணைகளின் அடிமைகள்.. 

அடிமையா? அதென்ன என தெரிந்து கொண்டார். விவசாய கூலி தொழிலாளர்களின் வீட்டு குழந்தைகள் படிக்க கூடாது, பண்ணையாரின் அனுமதி பெற்ற பின்னர் தான் திருமணம், திருமணத்திற்கு முன்னரே வயது வந்த பிள்ளைகளை பாலியல் வல்லுறவுக்கு கொடுப்பது, வளர்க்கும் மாடுகளின் முதல் கன்றை அளிப்பது, வயல் வேலை மட்டுமல்லாமல் பண்ணையார் வீட்டுக்கு தேவையான பணிவிடைகளை செய்வது என கொடுந்துயர் மிக்க வாழ்க்கையை வாழும் மக்களின் துயர் போக்கவேண்டும் என்பதே பிரதானம் என முடிவெடுத்தார். 

விவசாயிகளுக்கு இந்த கொடுமையிலிருந்து விடுதலை பெற்று தருவதே குறிக்கோள், அதற்காக இந்த ஏதுமறியாத அப்பாவிகளை திரட்டி உரிமைகளை பெற்று தருவதே இவர்களுக்கான வாழ்வின் விடியல் என தீர்மானித்து களமிறங்கினார்.

 நிலத்தை வளமாக்கும் காவிரியை போல் வாழ்வை வளமாக்க காவிரியாக கிராமங்களை வலம் வந்தார் பி.எஸ்.ஆர். மொழியை, அவர்களின் அன்றாட வாழ்வியலை அம்மக்களோடு ஒன்றர கலந்து கற்று கொண்டார். அவர்கள் கொடுத்த நத்தை, நண்டு என அனைத்தையும் உவகையோடு சாப்பிட்டார்.

அவர்களிடம் உரிமைகள், ஒன்று சேர வேண்டிய தேவை, சங்கம் அமைப்பது என எளிமையான மொழியில் உரையாடினார். உள்ளுக்குள் அச்சம் இருந்தது.. இவரு சொல்லிட்டு போயிடுவாரு ..யாரு நம்மளோடு நிக்க போறா … எனும் கேள்விக்கு அவரே பதிலளித்தார்.

ஆகப்பெரிய பண்ணைகளும், ஜமீன்களும் , கத்தி, வேல்கம்பு, வீச்சரிவாள் என வந்தாலும் நெஞ்சுரத்தோடு கம்பீரமாக களத்தில் துணிச்சலோடு எல்லா போராட்டங்களுக்கு முன்னின்று நடத்திய போது மக்களுக்கு இயல்பாகவே நம்பிக்கை வந்தது. 

ஆண்டைகளுக்கு நாம் இனி அடிமை இல்லை, நமக்கும் உரிமைகள் உண்டு , அதைப்பெற சங்கமும் இருக்கு எனும் சிந்தனையை மேலோங்க வைத்தார்.. விளைவு மன்னார்குடி வட்டம் தென்பரை கிராமத்தில் முதல் விவசாயிகள் சங்கம் உருவாக்கப்பட்டது. 

தென்பரையில் துவங்கியது கிளை அல்ல…ஏற்றப்பட்டது செங்கொடி அல்ல… ஒரு பெரிய மாற்றத்திற்கான துவக்கம். 

தடை அதை தகர்தெறி; 

கூலி தொழிலாளிகள் ஒன்று சேர நிலவுடமையாளர்கள் விடுவார்களா? வன்முறையால அடக்க பார்த்தார்கள்- ஆயுதம் கொண்டு மிரட்டினார்கள்…

ஆனால் அந்த ஒடுக்கப்பட்ட மக்களின் காதுகளில் தோழர் பி.எஸ்.ஆர் சொன்னதே ஒலித்து வந்தது… ’”அடித்தால் திருப்பி அடி “ 

பிசிறில்லாமல் பின்பற்றினார்கள்…எதிர் தாக்குதல் பலமாக இருந்தது. உற்சாகமாக மக்கள் தோழருக்கு பின்னால் திரண்டனர். 

இந்த மாற்றங்கள் திரைப்படத்தில் வருவது போல் ஒரே பாடலின் போது மாறவில்லை… இரவு ,பகல் பாராமல் அயராத அவரின் மக்கள் சந்திப்பு..விவசாயிகளிடம் பேச இரவு கூட்டங்கள், அமாவாசை ஊர் கூட்டம் என ஜமீந்தார்களின் தடைகளை உடைத்தெறிந்து ஒன்றிணைத்தார். பல நாட்கள் உணவே இல்லாமல், இரவில் தூக்கம் துறந்து உழைத்ததின் விளைவு தஞ்சை மாவட்டம் முழுவதும் செங்கொடி இயக்கத்தை பற்றியே பேசப்பட்டது. கிராமம் தோறும் கிளைகள், கூலி உயர்வுக்காக மன்னார்குடியில் 80 ஆண்டுகளுக்கு முன்னரே 5000 பேரை திரட்டி பிரம்மாண்டமான பேரணி. இப்போது யோசிக்கும் போதே மலைப்பாக உள்ளது. 

சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் சமரசமின்றி போராடினார்.

திருத்துறைப்பூண்டியில் இருக்கும் பெரியநாயகி அம்மன் கோயில் திருவிழாவுக்கு கொடி ஏற்றிவிட்டால், வெளியாட்கள் யாரும் ஊருக்குள் நுழையக்கூடாது என்பது கட்டுப்பாடு. இது தெரியாமல் நகருக்குள் மனைவியோடு நுழைந்து விடுகிறார் தலித் தோழர் சீரங்கன்… அடித்து நொறுக்கி, கை கால்களை உடைத்து திருப்பி அனுப்புகிறார்கள் அந்த காலத்து ஆண்ட பரம்பரைகள்…. விசயம் தோழரின் கவனத்திற்கு செல்கிறது…

தேர் திருவிழா நடக்கும் போது ஐநூறுக்கும் அதிகமான மக்களை திரட்டி , ரோட்டில் மறியல் செய்து எல்லோருக்கும் பொதுவான சாமியை ஏன் ஒரு சாதிகாரங்க மட்டும் தேர் இழுக்கிறாங்க..எங்களுக்கும் உரிமை உண்டு என சொல்ல, அரசு அதிகாரிகள் மிரண்டு போக சமரச பேச்சுவார்த்தை… எல்லோரும் சாமி தேரை இழுக்கலாம் என முடிவாகிறது…இது போல சம்பவங்கள் ஓராயிரம் இருக்கு. 

அன்றும்- இன்றும்- என்றும்.;

விவசாயிகளை திரட்டி , அவர்களை அரசியலாக்கியதின் விளைவு ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் 1952 முதல் பொது தேர்தலில் பெரும்பாலான இடங்களை கம்யூனிஸ்ட் கட்சி கைபற்றியது. அதற்கு வித்திட்டவர் தோழர் பி.எஸ்.ஆர். 

இன்றும் விவசாயிகளின் நிலை துயரமானதே.. கார்ப்பரேட்டுகள் விவசாயத்தில் புகுந்து பெரும் சுரண்டலை செய்ய துவங்கியுள்ள இந்த நவீன காலத்தில், இதை பயன்படுத்தி பாசிச மதவெறி சக்திகள், அடையாள அரசியல் பேசி சாதி வாரியாக மக்களை பிரித்து வெற்றி பெற நினைக்கிறார்கள். 

தோழர் சீனிவாச ராவ் போல அம் மக்களுடன் ஒன்றர கலந்து அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக உழைத்தால் நிச்சயமாக மாற்றம் உருவாகும்.அதை நிச்சயமாக செய்வோம்.

– என்.சிவகுரு  

நூல் அறிமுகம் : தமிழவனின் ’ஷம்பாலா ஓர் அரசியல் நாவல்’ – அன்புச்செல்வன்

நூல் அறிமுகம் : தமிழவனின் ’ஷம்பாலா ஓர் அரசியல் நாவல்’ – அன்புச்செல்வன்




நூல் : ஷம்பாலா ஓர் அரசியல் நாவல்
ஆசிரியர் : தமிழவன்
விலை : ரூ. 210/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு :044 – 24332424 /24330024/
விற்பனை : 24332934

புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

தமிழவனின் 6வது நாவல் இது. தொடக்கம் முதலே நேரடி குரலில் அரசியல் பேசுகிற பிரதி, முழுக்கக் குறியீடாகவும் வாசிக்கும் வகையில் மற்றொரு பிரதியாகவும் உருமாற்றம் கொள்கிறது.

ஒற்றைத்துவத்தை முன்னிருத்தும் அரசு அதிகாரம் மேற்கொள்ளும் பன்மய சிந்தனா ஒழிப்பு நடவடிக்கைகள் பற்றிய தொகுப்பாக அமர்நாத் என்ற கருத்தியல் செயற்பாட்டாளர் வாழ்க்கை வழி விரிகிறது. அறிவுத்தளத்தில் மாற்றுக் கருத்து கொண்டுள்ளோர் – அத்தகைய கருத்தியல்களை பிரதிகளின்வழி – சமூக ஊடகங்களின்வழி உருவாக்குவோர் – ஆகியோரை தொடர்ந்து கண்காணிப்பதன் வழியாக அறிவார்ந்த தளத்தில் ஒரு பதட்ட நிலையை உருவாக்கி அறிவை அதன்பாற்பட்ட செயலை முடக்கும் சூழல் உருவாக்கப்படுகிறது. இது நெருக்கடி நிலை பிரகடனத்தின் இன்றைய வடிவமே என நிறுவுகிறது நாவல்.

ஏன் பெரும்பான்மைக்குள் இருப்பதை ஒரு பாதுகாப்பாக ஒடுக்கப்பட்டோர் உணருகின்றனர் – தலித் என்பதை விட இந்து என்பதில் தலித் தன்னிலையானது கொள்ளும் மன உணர்வுகள் – ‘மானம்’, மத உணர்வு, சாதி பெருமிதம் ஆகியவற்றின் மூலம் ஒடுக்கப்பட்டோரை மீள பெரும்பான்மை அரசியலுக்குள் எவ்வாறு “அரசியல் நீக்கம்” செய்யப்பட்டு இழுக்கப்படுகின்றனர் – ராமர் கோவில் உள்ளிட்ட கோவில் கட்டுதல், கோவில் நிர்வாகக் கையகப்படுத்துதல் போன்றவற்றை முன்னிருத்தி புதிதாகக் கட்டமைக்கப்பட்டு வரும் வலதுசாரி பொருளாதாரம் – படிக்காத/படிப்பு வராத வேலையற்றோர் x அறிவுசார் வர்க்கம் என்ற விசித்திர முரணை (படிக்காததற்குப் படிப்பு வராததற்குக் காரணங்களைப் பகுத்துச் சொல்லும் அறிவுசார் செயற்பாட்டாளர்களை எதிரானவர்களாக முன்னிலைப்படுத்தி) கட்டமைத்து அதன் மூலம் நவீன வலதுசாரித்துவத்தை அறுவடை செய்வது – இப்படியான பல முக்கிய விவாதப் புள்ளிகளையும், கேள்விகளையும் பிரதியின் “அமர்நாத்” பகுதி எழுப்பியபடியே செல்கிறது.

மற்றொரு தளத்தில் “ஹிட்லரின்” கதைப் பகுதியானது சுவாரசியமாகவும் பகடித்தன்மையுடனும், அடியோடிய எள்ளலோடும் முழுக்கக் குறியீட்டுத்தனதுடன் கூறப்படுகிறது. இறுதியில் இந்த “ஹிட்லர்” கதையானது, அரசு மற்றும் சிந்தனை தடுப்பு காவல்துறையினரின் கண்காணிப்பு மற்றும் அழுத்தத்தின் விளைவாக அமர்நாத்தின் மனதில் எழுந்த கலகக் கதை வடிவமாக்கியிருப்பது ஈர்ப்புடைய இணைப்பு.

நவீன மோஸ்தரில் உலா வரும் சமஸ்கிருத பண்டித சாமியார் முன்வைக்கும் உலக அதிகாரக் குவி மையமான ‘ஷம்பாலா’ நோக்கிய நகர்வே அமர்நாத்தை போன்ற “இடதுசாரி தாராளவாதி”யான அவர் தோழர் சுரேஷை சிந்தனா போலீசார் கைது செய்தது..!

நடப்பியல் வாழ்விலும் வரவரராவ், ஆனந் டெல்டும்டே, கவுதம் நவ்லக்கா, உமர் காலித், ஸ்டேன் சுவாமி, அருண் ஃபெரேரா, இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட பல சமூக ஆர்வலர்கள், அறிவுசார் செயற்பாட்டாளர்கள் கைதுகளும், கல்புர்கி, பன்சாரே, தபோல்கர், கவுரி லங்கேஷ் உள்ளிட்ட மாற்று அரசியல் கருத்தியல்வாதிகள்/செயற்பாட்டாளர்களின் படுகொலைகளும் நிகழும் வெறுப்புணர்வின் அரசியல் காலத்தில் வாழ்கிறோம். இந்தப் பிரதி இக்காலத்தின் வெட்டப்பட்ட ஒரு துண்டு.

இப்பிரதியை வாசித்து முடித்த நாளில், செயற்பாட்டாளர் தீஸ்தா செடல்வாட் கைது செய்யப்பட்டது ஒரு ‘துன்பியல்’ தற்செயலே..! அவ்வாறாக, “ஷம்பாலா”வுக்கான ‘விழைவு’ இந்திய அரசியல் களத்தில் உச்சத்தை நோக்கி சென்றபடி…

– அன்புச்செல்வன்

நூல் அறிமுகம் : விஜய் பிரசாத் (தமிழில்) பேரா.பொன்னுராஜின் ’வாஷிங்டன் தோட்டாக்கள்’ – இரா. சிந்தன்

நூல் அறிமுகம் : விஜய் பிரசாத் (தமிழில்) பேரா.பொன்னுராஜின் ’வாஷிங்டன் தோட்டாக்கள்’ – இரா. சிந்தன்




நூல்: வாஷிங்டன் தோட்டாக்கள்
ஆசிரியர் : விஜய் பிரசாத் (தமிழில்) பேரா.பொன்னுராஜ்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : 185
தொடர்பு எண் ; 044 24332924
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும் : thamizhbooks.com

முக்கண்ட சமூக ஆய்வுக் கழகத்தின் செயல் இயக்குனரும்,லெஃப்ட்வேர்ட் பதிப்பகத்தின் ஆசிரியருமான விஜய் பிரசாத் எழுதிய ‘வாஷிங்டன் தோட்டாக்கள்’ என்ற புத்தகம், அமெரிக்கா எப்படி ‘ஏகாதிபத்தியமாக’ தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்பதை விளக்குகிறது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த புத்தகத்தை பேராசிரியர் பொன்ராஜ் தமிழில் கொடுத்துள்ளார்.

‘புரட்சியை கட்டமைக்கிற இடதுசாரிகளின் சொற்களை கொண்டதாகவும், அதனை அடக்குகிற அரசு ஆவணங்களை அடிப்படையாக கொண்டும்’ எழுதப்பட்டிருக்கும் இந்த நூல், விஜய் பிரசாத் அவர்களுடைய பல ஆண்டு பணிகளின் விளைவாகும். இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கும் பல சதி வேலைகள், அந்த வேலைகளை கருவியாக இருந்து முன்னெடுத்த ‘உளவாளிகளுடனான’ நேர்காணல்களில் இருந்தும் பெறப்பட்டுள்ளன. ஏராளமான அரசு ஆவணங்களில் இருந்து விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இருப்பினும், ரத்தினச் சுருக்கமாகவும், புரிந்துகொள்ள எளிதான மொழியிலும் எழுதியிருக்கிறார்.

இந்த புத்தகம் 3 பகுதிகளைக் கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு முன் நிலவிய காலனி ஆதிக்க சூழலும், பிறகு அமெரிக்கா உலகின் முதன்மை சக்தியாக ஆனதுடன், அமெரிக்காவை மையமாக கொண்டு, பழைய ஏகாதிபத்திய நாடுகளை தனது ஆரமாக மாற்றிக் கொண்டது எப்படி?. அந்த ஆபத்தான சக்கரங்கள், உலகம் முழுவதும் பறந்து, மக்களின் இயல்பான விடுதலை வேட்கையினை சிதைக்கும் வழிமுறைகள் என்னென்ன?. சோவியத் ஒன்றியம் சிதைந்ததற்கு பிறகு இந்த உத்திகள் ‘கலப்பு யுத்தம்’ என்ற வடிவத்தை கூடுதலாக மேற்கொண்டது எப்படி? என்பதையும் இந்த நூல் விளக்குகிறது.

2021 ஆம் ஆண்டின் மத்தியில் பெண்டகன் வெளியிட்ட விபரங்களின்படி, உலகின் 80 நாடுகளில், 750 ராணுவத் தளங்களை அமெரிக்கா வைத்துள்ளது.ஆனால் உண்மையில் சிறிதும், பெரிதுமாக ராணுவம் நிலை கொண்டிருக்கும் நாடுகளின் எண்ணிக்கை 183 ஆகும். கண்களுக்கு முன் எந்த எதிரியும் தென்படாத நிலையில், உலகம் முழுவதும் அவர்கள் யாரை எதிர்த்து போர் செய்கிறார்கள்?

அமெரிக்காவின் ராணுவ தளங்களை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்று, ஜப்பான். ஜப்பான் நாட்டின் ஒக்கினாவா தீவில் அமையப்பெற்ற ராணுவ தளங்கள், பெண்கள் மீதான வன்முறையின் மையமாக இருக்கின்றன. அந்த தளங்களுக்கு எதிராக மக்களின் கோபம் குவிந்தது. இப்பிரச்சனை பேசிய ஹடோயாமா புகியோகத், 2009ஆம் ஆண்டு தேர்தலில் பெரும் வெற்றி பெற்றார். பிறகு அவர் அமெரிக்காவின் ராணுவ தளங்களுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்தார்.

அதன் பின்னர், ஒபாமாவின் நிர்வாகம் ஜப்பானிடம் மிகக் கடுமையாக நடந்துகொண்டது. சில ஆண்டுகளில் ஹடோயாமா புகியோகத் தனது கட்சியாலேயே தனிமைப்படுத்தப்பட்டார்.

கேள்விகளுக்கு அப்பாற்பட்ட இந்த அதிகாரம் எப்படி நிறுவப்பட்டது? எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது? உலக மக்களின் மிக இயல்பான, ஜனநாயக விருப்பங்களை அது எப்படி நசுக்கி அழிக்கிறது என்பதைத்தான் இந்த நூல் ஏராளமான உதாரணங்களின் வழியாக விளக்குகிறது.

அமெரிக்காவின் பிறப்பு

அமெரிக்கா எப்படி உருவாக்கப்பட்டது என்பதில் இருந்துதான் அதன் அதிகாரம் தொடங்குகிறது. 1776 ஆம் ஆண்டில் நடந்த அமெரிக்க புரட்சியை, விஜய் பிரசாத் விளக்குகிறார். “முதலில் அது ஒரு புரட்சியா” என கேள்வி எழுப்பும் அவர். “அதில் வர்க்கப் போராட்டம் எதுவும் இல்லை. புரட்சிகர நடவடிக்கை என்ற வரையறைக்கு உட்பட்ட தொழிலாளர் இயக்கம் எதுவும் மக்களிடமிருந்து எழவில்லை. அந்த போராட்டத்தில் பல்வேறு தரப்பட்ட மக்களின் சமூக ஒற்றுமை வெளிப்படவில்லை. மாறாக பூர்வ குடி மக்களை இனப்படுகொலை செய்யும் உணர்வு இருந்தது. அடிமையாக்கப்பட்ட ஆப்பிரிக்கர்களின் கலகம் பற்றிய பெரும் அச்சம் இருந்தது.”

ஆம்!. அமெரிக்கா பிறந்த போதே அது தனது காலனி ஆதிக்கத்தை உறுதி செய்துகொள்ளும் பூர்வகுடி மக்கள் மீதான தாக்குதலையும், அண்டை நாடுகளின் மீதான ஆக்கிரமிப்பையும் நடத்தி முடித்திருந்தது.இரண்டாம் உலகப்போர் நடந்து முடிந்த பின்னர், உலகின் யதார்த்தங்கள் மாறியிருந்தன. அதனை ஏற்க மறுத்த இங்கிலாந்தும் ஃபிரான்சும் தங்களுடைய பிரதான இடத்தை மீண்டும் அடைந்துவிட முடியும் என்று நம்பினார்கள்.

அல்ஜீரியா முதல் மலாயா வரை, வியட்நாம் முதல் கயானாவரை அவர்கள் காலனி ஆதிக்க போர்களை முன்னெடுத்தார்கள். ஆனால் அவை தேசிய எழுச்சிகளை எதிர்கொள்ள முடியாமல் பலவீனமடைந்தன. 1956 ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாய் மீதான தங்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்த, இஸ்ரேலின் உதவியோடு பல தந்திரங்களை முன்னெடுத்தார்கள், ஆனால் அவை தோல்வியில் முடிந்தன.

சோசலிச முகாமாக அமைந்த சோவியத் ஒன்றியமும் தனது தொழில் தளங்களை இழந்திருந்தது. அந்த நாட்டில் 52 ஆயிரம் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி நின்று போயிருந்தது. மூலதன பங்கு 30% வீழ்ச்சியை சந்தித்தது. 2 கோடியே 70 லட்சம் பேர்களை போர்க்களத்தில் அது இழந்திருந்தது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் இரண்டாம் உலகப்போரின் காரணமாக சோவியத் ஒன்றியத்தின் குடிமக்கள் தங்கள் 25 வருட வருமானத்தை, போரின் விலையாக கொடுத்திருந்தார்கள்.

அதே சமயத்தில், அமெரிக்கா மிகவும் குறைவான சேதங்களை மட்டுமே எதிர்கொண்டிருந்தது. 4 லட்சத்திற்கும் சற்று அதிகமானவர்களை போரில் இழந்திருந்தாலும், அதன் உற்பத்தி திறனும், பண்பாட்டு வளர்ச்சியும் தடைபடவில்லை. இவை அமெரிக்காவிற்கு சாதகமாக அமைந்தது. இப்படித்தான் உலகத்தின் மைய இடத்திற்கு அமெரிக்கா வந்து சேர்ந்தது.

அமெரிக்கா மையமாக இருக்கிறது. ஃபிரான்சும், இங்கிலாந்தும் இன்ன பிற நாடுகளும் ஆரங்களாக உள்ளன. 1946, 49 மற்றும் 1952 காலகட்டத்தில் ஜப்பானில் நடந்த தேர்தல்களில் அமெரிக்கா தலையிட்டது. லிபரல் கட்சிக்கும், ஜனநாயக கட்சிக்கும் இடையில் கூட்டணி உருவாக்க, அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகள் அரும்பாடுபட்டன. இதன் மூலம் சோசலிஸ்ட் கட்சி பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஜப்பான் அமெரிக்காவின் ஆரமாக ஆனது. இத்தாலியின் பிரதமர் அல்சைட் டி காஸ்பரி, பிரான்சு பிரதமர் பால் ராமடியர் ஆகிய இருவருடைய அரசிலும் கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து இடம்பெற்றால் அந்த நாடுகளுக்கு நிதி எதுவும் வழங்கப்படாது என்று அமெரிக்கா மிரட்டியது. 1963 முதல் 1972 வரை இதனை சாதித்திட பெரும்பணம் செலவிடப்பட்டது. பின் அந்த நாடுகளும் அமெரிக்காவிற்கு ஆரமாகின.

ஒரு மோசமான ‘சக்கர வியூகம்’ செயல்படுகிறது. அது ஏராளமான படுகொலைகளையும், அதிகாரப் பறிப்பையும் செய்துள்ளது, செய்து வருகிறது.

புதிய ஒழுங்கு

உலகப்போர் முடிந்த பின், 1944 ஆம் ஆண்டில் பிரெட்டன்வுட்ஸ் நகரில் அமெரிக்கா கூட்டிய மாநாடு, உலக அரங்கில் அதன் முதன்மை விருப்பத்தை பறைசாற்றியது. 1948 ஆம் ஆண்டில் ஐரோப்பிய பொருளாதார கூட்டுறவு அமைப்பு பிறந்தது. இதற்காக அமெரிக்கா 12 பில்லியன் டாலர்கள் கடனாக கொடுத்தது. 1949ஆம் ஆண்டில் நேட்டோ பிறப்பெடுத்தது. நேட்டோவில் அதன் உறுப்பினர்களுக்கு பங்கு எதுவும் கிடையாது. அமெரிக்காதான் அதன் விதிகளை முடிவு செய்தது.அமெரிக்க கண்ட நாடுகளின் அமைப்பு 1948ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு லத்தீன் அமெரிக்காவில், அமெரிக்காவின் செல்வாக்கை உறுதி செய்யும் விதமாக ஏற்படுத்தப்பட்டதாகும்.

இந்த அமைப்பின் முதல் கூட்டம் கொலம்பியாவில் நடைபெற்ற அதே சமயத்தில், கொலம்பியா நாட்டில் ஏழை மக்களின் விருப்பத்திற்குரிய தலைவராக இருந்த ஜார்ஜ் கெய்டான் சுட்டுக்கொல்லப்பட்டார். அதனை ஒட்டி எழுந்த மக்கள் எழுச்சி ‘கம்யூனிசமாக’ அடையாளப்படுத்தப்பட்டு, வன்முறையில் வீழ்த்தப்பட்டது. பொகாட்டாவில் நடந்த மாநாட்டின் முடிவில், கம்யூனிஸ்டுகளை ‘அழித்து ஒழிப்பது’ ஒரு சட்டமாகவே ஆக்கப்பட்டது.1954ஆம் ஆண்டில் இதே போல தெற்காசிய ஒப்பந்த அமைப்பு, மணிலா ஒப்பந்தம், 1955ஆம் ஆண்டில் மத்திய ஒப்பந்த அமைப்பு – பாக்தாத் ஒப்பந்தம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டன.

ஐரோப்பிய பகுதிகளில் நேட்டோ விரிவாக்கம் செய்யப்பட்டதன் மூலம் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மீது நிர்ப்பந்தம் செலுத்தப்பட்டது. லத்தீன் அமெரிக்காவில் நடந்த எழுச்சிகள் வீழ்த்தப்பட்டன. இவ்வாறு மாற்று அதிகாரத் தளங்கள் உருவாவதற்கான எந்த சிறு முயற்சியையும் தடுக்க அமெரிக்கா தொடர்ந்து முயன்றது.

ராணுவ கூட்டு பயிற்சிகள் என்ற பெயரால், வலுக்குறைந்த நாடுகளின் படைகள் அமெரிக்க கட்டமைப்பாக மாற்றப்பட்டன. மேலும் இந்த ராணுவங்கள், நவீன தளவாடங்களை வாங்கிச் சேர்க்கவும் வற்புறுத்தப்பட்டன. இப்போதுள்ள அமைப்பின் வலிமையைக் கொண்டு, உலகத்தின் எந்தவொரு பகுதியிலும் அமெரிக்க தாக்குதலை முன்னெடுப்பதற்கு ஒரு மணி நேர அவகாசமே தேவைப்படும்.

ஐ.நாவும், காலனிய நீக்கமும்

இரண்டாம் உலகப் போருக்கு பிறகான ஆண்டுகளில் உலகின் முதன்மையான முரண்பாடாக அமைந்தது வடக்கு – தெற்கு முரண்பாடே. அதாவது காலனி நாடுகளின் மீதான ஆதிக்கத்தை கைவிட மறுத்த ஏகாதிபத்தியத்தின் போர்களே அந்த காலகட்டத்தின் முதன்மையான முரண்பாடாக அமைந்தது என்கிறார் விஜய் பிரசாத்.

1945ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை உருவானது. உலகளாவிய சட்ட வரையறைகளுக்கும், காலனி நாடுகளின் யதார்த்த நிலைமைகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை தீர்ப்பதில் ஐ.நா செய்ய முடிந்தது என்ன?அது மேலை நாடுகள் மேற்கொள்ளும் வரன்முறையற்ற தலையீடுகளை சட்டப்பூர்வமாக்கியது. ஆம். சுதந்திர நாடுகளுக்குள் தலையீடு செய்யும் அதிகாரத்தை பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுப்பினர்களான ஐந்து நாடுகள் மட்டும் பெற்றார்கள்.

இந்த ஏற்பாட்டினை சோவியத் ஒன்றியம் எதிர்த்தது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களை புறக்கணிப்பு செய்தது. இந்த புறக்கணிப்பை பயன்படுத்திக் கொண்டு, வட கொரியாவை நிலைகுலையச் செய்திடும் தலையீடுகளை வேகப்படுத்த முயன்றன ஏகாதிபத்திய நாடுகள். அதன் பின் சோவியத் ஒன்றியம் தனது புறக்கணிப்பு முடிவுகளை மாற்றிக் கொண்டது. ஐ.நா பாதுகாப்புக்குழுவில் பயன்படுத்தப்பட்ட முதல் 56 தடுப்பு அதிகாரங்கள் (வீட்டோ பவர்) சோவியத் ஒன்றியத்தினால், தேச விடுதலை இயக்கங்களை பாதுகாக்கும் நோக்கில் செய்யப்பட்டன.

ஐ.நாவின் செயல்பாடுகள் முதல் பார்வையிலேயே பாரபட்சமாக தோன்றுகின்றன. அதற்கு முன் நிலவிய ஏற்பாடுகளின் தொடர்ச்சியாகவே இதுவும் அமைந்திருப்பதை இந்த புத்தகம் விளக்குகிறது.

சுக்கா மிளகா சுதந்திரம்?

1864 ஆம் ஆண்டில் ‘ஜெனீவா மாநாடு’ நடந்தபோது, காலனி ஆதிக்க போர்களை பற்றி எதுவும் பேசப்படவில்லை. இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் அந்த மண்ணின் பூர்வ குடிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூர வன்முறைகளைப் பற்றி எதுவுமே பேசப்படவில்லை.1943 ஆம் ஆண்டில் ரூஸ்வெல்ட் மிக வெளிப்படையாகவே பேசினார். “காலனி ஆதிக்க அமைப்பு என்பதன் பொருள் போர்” என்ற அவர், “இந்தியா, பர்மா, ஜாவா ஆகிய நாடுகளின் வளங்களைச் சுரண்டி, அந்த நாடுகளின் வளங்களை அங்கிருந்து அகற்ற வேண்டும்” என்பதை தெளிவுபடுத்தினார் அதே சமயத்தில் “கல்வி, தரமான வாழ்நிலை மற்றும் குறைந்தபட்ச உடல்நலம் ஆகிய அடிப்படை தேவைகளை அவர்களுக்கு ஒருபோதும் கொடுத்துவிடக் கூடாது” என்று வெளிப்படையாக முன்வைத்தார்.

ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்ட பின்னரும் இனப்படுகொலைகளுக்கு முடிவு ஏற்படவில்லை. 1952 முதல் 1960 வரை கென்யாவில் இனப்படுகொலைகளை முன்னெடுத்தது இங்கிலாந்து. ‘விடுதலை விருட்சத்திற்கு என் குருதி நீராகப் பாயட்டும்’ என்று முழங்கிவிட்டு மரணித்தார் கென்ய புரட்சியாளர் கிமாதி.

1945ஆம் ஆண்டில் இந்தோ சீனாவின் விடுதலையை ஹோசிமின் அறிவித்த உடனே அப்பகுதியை கைப்பற்ற பிரெஞ்சுப் படைகள் மீண்டும் வந்தன. காலனிய நீக்கத்திற்கான உலக மக்களின் விருப்பங்கள் ஏராளமான உயிர்த் தியாகங்களைக் கொண்டே சாதிக்கப்பட்டன.

காலனி நீக்கம் ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வுப்போக்கு என்பதை அமெரிக்கா புரிந்து கொண்டது.மேற்கு நாடுகளில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பயன் கொடுக்கும் முதலாளித்துவ சமூக அமைப்பினை பாதுகாத்து நீடிக்கச் செய்யும் பணியை அமெரிக்கா முன்னெடுக்கும் என்பதை அவர் பிரகடனம் செய்தார். இதனை அவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடே மேற்கொண்டார்கள்.

“அமெரிக்கா மறைவாக, பின்னணியில் இயங்க வேண்டியது முக்கியம். அதே நேரத்தில் தேவைப்படும் இடங்களில் தளவாடங்களையும், ஆலோசனைகளையும், பயிற்சியையும் வழங்குவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். உள்ளூர் அரசில் தலையிடும் முயற்சிகள் மீது வெறுப்பு வராமல் தலையீடு செய்வதும், காலனி ஆதிக்கம் என்ற புகார்கள் தேவையின்றி எழாமல் பார்த்துக்கொள்வதும் அமெரிக்காவுக்கு முக்கியம்” என்று சி.ஐ.ஏ துணை இயக்குனர் பிஸ்ஸல் எழுதினார். அவர்கள் உருவாக்கிய உத்திகளில் ஒன்றுதான் ‘கலப்பு யுத்தம்’.

கலப்பு யுத்தங்கள்

சீரழிவு வேலைகள், பொருளாதாரத் தடைகள், திரிக்கப்பட்ட உண்மைகளைக் கொண்ட ஊடக பிரச்சாரம், பண்பாட்டுத் தலையீடுகள் ஆகியவை உள்ளடங்கியதே ‘கலப்பு யுத்தம்’ ஆகும். சமூக மற்றும் அரசியல் தளங்களில் செயல்படும் அரசுப் பணியாளர்களையும், அரசு சாரா பணியாளர்களையும் கொண்டு, மரபு வழிமுறைகளிலும், மரபு அல்லாத வழிகளிலும் இந்த போர் முன்னெடுக்கப்படுகிறது. கருத்தியல் மேலாதிக்கம் இந்த போரின் ஒரு பகுதியாக அமைகிறது.

அமெரிக்காவும், சுயநலம் மிக்க அதன் கூட்டாளிகளும் முதலில் ஒரு நாட்டின் மீது பொருளாதார தாக்குதலை முன்னெடுக்கிறார்கள். பிறகு அந்த நாட்டு மக்களிடையே கலகங்கள் தூண்டப்படுகின்றன. ஆட்சி மாற்றங்கள் இவ்வாறு திணிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு நாட்டிலும், பழைய மேட்டுக்குடிகளும், நிலம்படைத்த சுய நலமிகளும் அமெரிக்காவின் ஆரங்களை வலுப்படுத்த விரும்பினார்கள். சோசலிசமும், கம்யூனிசமும் தங்களை ஓரங்கட்டிவிடும் என்று அஞ்சி நடுங்கினார்கள். அவர்களுக்கு சி.ஐ.ஏ உதவி செய்கிறது. ஆலை முதலாளிகளும், மதகுருமார்களும் துணையாக நிற்கிறார்கள்.

இந்த கலப்பு யுத்தத்தில், வங்கிகளின் பங்கு மிக முக்கியமான ஒன்றாகும். ‘தற்காலத்தில்ஆட்சிக் கவிழ்ப்புகள் இராணுவ டாங்கிகளைக் கொண்டு ஏற்படுத்தப்படும் அவசியம் கிடையாது; பல சமயங்களில் அது வங்கிகளின் வழியாகவே நடக்கிறது’ என்று கிரேக்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்து கச்சிதமான எடுத்தாளப்பட்டுள்ளது.

காட் ஒப்பந்தம், உலக வர்த்தக அமைப்பு, சர்வதேச நாணய நிதியம் ஆகிய அமைப்புகளும் இந்த நோக்கத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அவை வெறுமனே வர்த்தக ஏற்பாடுகளாக இல்லை.

சில உதாரணங்களை பார்க்கலாம்!

பெரு என்ற நாட்டில் அலைன் கார்சியா என்ற சோசலிச தலைவர் இருந்தார். அவருக்கு மக்களிடையே செல்வாக்கு இருந்தது. அவர் நிகரகுவா, சோவியத் ஒன்றியம் மற்றும் கியூபாவிற்கு ஆதரவாக பேசிவந்தார். உடனே அந்த நாட்டின் மீது ஐ.எம்.எஃப் நடவடிக்கை ஏவியது. கடன் வாய்ப்புக்கள் அத்தனையும் அடைக்கப்பட்டன. இதனால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் அந்த நாடு சிக்கியது. கார்சியாவின் அரசியல் செல்வாக்கு சரிந்தது. அவர் பதவியிலிருந்து விலக, ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் அதிகாரத்தை பிடித்தார்கள்.

அப்பர் வோல்ட்டா என்ற நாட்டின் தலைவராக தாமஸ் சங்கரா என்ற இளைஞர் பதவிக்கு வந்தார். தங்கள் நாட்டின் பெயரை ‘நேர்மையான மனிதர்களின் நாடு’ என்று (பர்கினோ பாசோ) மாற்றினார். அப்போது அந்த நாட்டின் மீது ஐ.எம்.எப் கடன் வலை மிக மோசமான நெருக்கடிகளை உருவாக்கியிருந்தது. இந்த கடன்களுக்கு எதிரான ஆப்ரிக்க நாடுகளின் ஒன்றுபட்ட அமைப்பை உருவாக்க முயன்றார். ஏகாதிபத்தியம் அவருக்கு எதிராக குண்டுகளை குறிபார்த்தது. சங்கரா கொல்லப்பட்டார்.

ஏழ்மைப்படுத்தப்பட்ட நாடான குவாதேமாலாவில், ஜனநாயக விருப்பங்களைக் கொண்ட, ஜாக்கப் அர்பென்ஸ் ஆட்சிக்கு வந்தார். அந்த நாட்டின் வளமான நிலங்கள் அமெரிக்காவின் யுனைடெட் ஃபுரூட்ஸ் என்ற நிறுவனத்தின் வசம் இருந்தன. அந்த நிலங்களில் ஒரு பகுதியை எடுத்து, மக்களுக்கு வழங்கும் உறுதியோடு அவர் இருந்தார். நிறுவனத்தின் வசம் இருந்த 2 லட்சம் ஏக்கர் நிலங்களை அவர் கையகப்படுத்தினார். உடனே அர்பென்ஸ் ஆட்சிக்கு எதிராக சி.ஐ.ஏ. களத்தில் குதித்தது.

1990, ஈராக் மீது ஐநா சபை விதித்த தடைகளினால் 5 லட்சத்து 67 ஆயிரம் குழந்தைகள் மரணமடைந்தார்கள். அணுகுண்டு வீச்சால் இறந்த குழந்தைகளை விடவும் அதிகமான எண்ணிக்கை இது. ஆனால் இந்த விலை அவசியமானது என்று அமெரிக்கா தயக்கமின்றி முன்வைத்தது.

உலகமயத்தை ஒழுங்காற்றும் விதிகள் அனைத்தையுமே அமெரிக்கா உருவாக்கியது, அமெரிக்க டாலர் அதன் மைய செலாவணியாக இருந்தது. அமெரிக்க மேலாதிக்கம் கொண்ட ‘சர்வதேச நாணய நிதியம்’ (ஐஎம்எஃப்) மற்றும் அமெரிக்க தரவரிசை முகமைகள் உலக நாடுகளின் பொருளாதார வலிமையை மதிப்பீடு செய்யும் நிறுவனங்களாக ஆகின. நாடுகளுக்கிடையில் பண வர்த்தகத்தை மேற்கொள்ளும் சேவை நிறுவனமான ‘ஸ்விஃப்ட்’ என்ற ஐரோப்பிய நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த அனைத்து ஏற்பாடுகளும், அமெரிக்காவின் விதிகளுக்கு இணங்காத நாடுகளின் மீது தாக்குதல் தொடுப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன.

அரசு சாரா அமைப்புகள்

சர்வதேச நாணய நிதியம் செய்கிற வற்புறுத்தல்களுக்கு கட்டுப்பட்டு பல நாடுகளும் தங்கள் மக்கள் நலத்திட்டங்களை சுருக்கிக் கொள்கிறார்கள். அப்போது உருவாகும் சூழலை பயன்படுத்தி என்.ஜி.ஓ (அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகள் தொடங்குகின்றன. இந்த அமைப்புகளும் ஏகாதிபத்திய திட்டத்தின் ஒரு பகுதியாக அமைகின்றன. அவர்கள் அரசுகளை சாராதவர்கள். ஆனால் தங்களுக்கு நிதி கொடுக்கும் ஏற்பாடுகளைச் சார்ந்தவர்கள். என்.ஜி.ஓ அமைப்புகளுக்கான நிதி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்தே வருகின்றன.

என்.ஜி.ஓ அமைப்புகளின் ஏகாதிபத்திய ஆதரவு செயல்பாடுகளின் உதாரணத்தை உணர்த்த, ஹெய்ட்டி என்ற நாட்டின் 200 ஆண்டுகால வரலாறு இந்த நூலில் சுருக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பொருளாதார தடைகள் ஏற்படுத்தும் கொடூரமான விளைவுகளையும், உயிர் காக்கும் சிகிச்சைகளைக் கூட பெற முடியாத ஆபத்தான நிலைமையையும் புரிந்துகொள்ள ஈரான் பற்றிய விவரிப்புகள் உதவுகின்றன.

பிரேசில் நாட்டில் ‘பசிஅழிப்புத்திட்டம்’ கொண்டுவந்த உலகப் புகழ்பெற்ற தலைவரான லூலாவிற்கு 86% மக்கள் ஆதரவு இருந்தது. ஆனால், அந்த நாட்டிலும் அமெரிக்க வல்லூறு நுழைந்தது. லூலாவிற்கு எதிராகஅந்த நாட்டின் ‘சட்டமே’ ஒரு கருவியாகப் பயன்படுத்தப் பட்டது.

அதே சமயத்தில், இந்தக் கலப்பு யுத்தங்கள் மக்கள் சக்தியினால் முறியடிக்கப்பட்ட உதாரணங்களையும் பார்க்கிறோம். வெனிசுவேலா என்ற நாட்டில் மதுரோவின் அரசுக்கு எதிராக அமெரிக்க ஆதரவுடன் ஒரு முற்றுகை முன்னெடுக்கப்பட்டது. இந்த முற்றுகையை மக்கள் ஆதரவே முறியடித்தது.

பொலீவியா நாட்டில், ஈவோ மொரேல்ஸ் ஆய்மா ஆட்சிக்கு வந்தார். பொலிவிய குடியரசின் வரலாற்றில், உள்ளூர் இனக்குழுவைச் சேர்ந்த முதல் ஆட்சியாளர் ஈவோதான். அவருடைய இயக்கத்தின் பெயர் ‘சோசலிசத்திற்கானஇயக்கம்’. இயற்கை வளங்களை வரன்முறையற்று சுரண்டும் சக்திகளுக்கு எதிராக அவர் உறுதி காட்டினார். அவருடைய முன்னெடுப்புகள் மக்களிடையே ஆதரவினை விரிவாக்கின. அவருக்கு எதிரான சதிகள் மக்கள் சக்தியின் மூலம் முறியடிக்கப்பட்டன.

ஆதிக்கத்தின் செயல் திட்டம்

‘கிரெனெடா’ ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நாடு.அந்த நாட்டின் மக்கள் ‘புதியஅணிகலன்இயக்கத்தின்’ மூலமாக, தங்கள் நாட்டுக்கு ஏற்ற சோசலிச அமைப்பை உருவாக்க முயன்றது. 1983ஆம் ஆண்டில் அமெரிக்க படையெடுப்பினால் நசுக்கப்பட்டது.

இப்படி எந்தவொரு நாட்டிலும், உழைப்பாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் அதிகாரம் கிடைக்கும் சூழல் ஏற்படுமானால் ஏகாதிபத்தியம் அதற்கு எதிராக களத்தில் இறங்குகிறது. ஏகாதிபத்தியத்தின் ஆணைகளை மறுப்பதற்கு ஏதாவதொரு நாடு முயற்சி செய்யும் என்றால், அங்கே தலையீடுகள் செய்யப்படுகின்றன. தேர்தல்களில் தலையீடு அல்லது ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்படுகிறது.

அந்த நடைமுறைகளை விஜய் பிரசாத் விரிவாக விளக்கியுள்ளார். செயல் திட்டம் இதுதான்.

பொதுக் கருத்தை உருவாக்குதல் – உண்மைக்கு மாறான, அச்சமூட்டும் கதைகளை செய்திகளாக திரித்து பரப்புதல்.
ஆட்சிக் கவிழ்ப்பின் திறமை வாய்ந்த உளவாளியை களத்தில் இறக்குதல்.
கூலிப்படை, ராணுவத்தை தயார் செய்தல்
பொருளாதார வாய்ப்புகளை முடக்கி முற்றுகையிடுவது
பிற நாடுகளிடம் இருந்து துண்டித்தல்
பெருந்திரள் போராட்டங்களை ‘உருவாக்குதல்’
அமெரிக்காவின் பங்கை மறுத்தல் (அச்சத்தை பரவவிடல்)
மறக்கச் செய்தல்
முற்போக்கான குருமார்களை கொலை செய்தல்
பல நாடுகளிலும் பரிசோதிக்கப்பட்ட மேலே குறிப்பிட்ட வழிமுறைகளை படிக்கும்போது, இந்தியாவில் நடக்கும் பல்வேறு மாற்றங்களையும் கூட நம்மால் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. உண்மையில், பாசிச – நாஜி சக்திகளோடு கைகோர்ப்பதில் அமெரிக்காவிற்கு எந்த வெட்கமும் இருக்கவில்லை என்பதை இந்த புத்தகம் ஆதாரத்துடன் விளக்குகிறது.

மேலும், இஸ்லாமை மையப்படுத்தி, கம்யூனிச வெறுப்பினை கட்டமைப்பதற்காக ‘ஹாஜி யூசுப் சங்’முன்வைத்த திட்டம் இந்த நூலில் உள்ளது.

இஸ்லாமிய பண்பாட்டு சங்கம் ஒன்றை தொடங்கி, சீனா மற்றும் மத்திய கிழக்கு இஸ்லாமியத்தோடும், உலகம் முழுவதும் தொடர்புகளை அதிகமாக்க வேண்டும்.
அமெரிக்கர்களையும், இஸ்லாமியர்களையும் கம்யூனிசத்திற்கு எதிராக திரட்டும் விதமான பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும்.
அந்த அமைப்புகளுக்கு சீனா அல்லது பிற இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களே தலைவர்களாக இருக்க வேண்டும். அமெரிக்காவின் பின்புலம் மறைவாகவே இருக்க வேண்டும்.
இதுதான் அவர் அனுப்பிய ஆவணத்தின் சாரமாக அமைந்த கருத்துக்கள்.

இந்த திட்டம் அரேபிய மன்னர்களாலும், சி.ஐ.ஏ.வினாலும் 1951ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முன்னெடுக்கப்பட்டதை புத்தகத்தின் மூலம் விரிவாக அறிந்துகொள்கிறோம்.

கியூபாவில் எழுந்த நம்பிக்கை

எத்தனை அதிகாரம் மிக்கதாக இருந்தாலும், மக்கள் சக்தியின் துணையைக் கொண்டு ஏகாதிபத்தியத்தை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கையை வழங்கும் ஊற்றாக இருப்பது கியூபாவே ஆகும். கியூப நாடு தனது நாட்டு மக்களின் விடுதலையை சாதித்ததுடன் போராட்டத்தை முடித்துக்கொள்ளவில்லை. எப்போதும் அது உலக மக்களுடன் தனது பிணைப்பை வலுப்படுத்திக் கொண்டுள்ளது.

1966 ஆம் ஆண்டில், தேச விடுதலை இயக்கங்களை, ஃபிடல் காஸ்ட்ரோ ஹவானாவிற்கு அழைத்தார். முக்கண்ட மாநாட்டில், “காலனி உலகெங்கிலும் புரட்சிகர விடுதலைப் போர்களுக்கான ஆதரவையும் ஒத்துழைப்பையும் இந்த அமைப்பு வழங்கிடும். விடுதலை இயக்கங்கள் எங்கே நடைபெற்றாலும் அவை அனைத்திற்கும் கியூப அரசும், மக்களும் தங்கள் சக்திக்கு உட்பட்டு பொருள் உதவியையும், அனைத்து உதவிகளையும் வழங்கிடும்’ என காஸ்ட்ரோ அறிவித்தார்.

இந்த மாநாட்டுக்கான அவசியம், அதற்கு முந்தைய ஆண்டுகளில் தொடங்கிய வன்முறை தாக்குதல்களில் இருந்து எழுந்தது.

1960 களிலும், 1970 களிலும் நடந்த விடுதலை போராட்டங்களுக்கு எதிராக கொடூர வன்முறையை ஏகாதிபத்தியம் முன்னெடுத்தது. மலாய அவசர நிலை (1948-1960), கென்ய அவசர நிலை (1952), அல்ஜீரியா மீது ஃபிரெஞ்சு போர் (1954-1962), வியட்நாம் மீதான ஃபிரெஞ்சு போர் (1946-1954), அமெரிக்கா – வியட்நாம் போர் (1954-1975), கியூபா மீதான அமெரிக்க படையெடுப்பு (1961), காங்கோவில் பேட்ரிஸ் லுமூம்பாவின் படுகொலை (1961), குவட்டமாலா மீது படையெடுப்பு (1954), டொமினியன் குடியரசு மீது அமெரிக்க படையெடுப்பு (1965), இந்தோனேசியாவில் கம்யூனிஸ்டுகள் மீதான இனப்படுகொலை (1965) என அடுத்தடுத்து முன்னெடுக்கப்பட்ட ஆதிக்க வன்முறைகளும், கொத்துக்கொத்தான மரணங்களுமே திரிகண்ட மாநாட்டில் கூடிய விடுதலைப் படைகளின் உத்திகளை வடிவமைத்தன. வன்முறை அவர்கள் மீது திணிக்கப்பட்டது.

1979 டிசம்பர் 31 ஆம் தேதி என்ற மலைமுகட்டின் மேல் நின்று அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் உலகில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களை நமக்கு எடுத்துக் காட்டுகிறார் விஜய் பிரசாத். காலனி ஆதிக்கங்களில் இருந்து அங்கோபா, கேபோ வெர்டே, கினியா பிசாவ் மற்றும் மொசாம்பி ஆகிய நாடுகள் போர்த்துகீசியர்களுக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றன. ரொடீசியாவில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்தன. 1980ஆம் ஆண்டில் ஜிம்பாவே விடுதலை பெற்றது. வியட்நாம் போர் 1975ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. ஆனால் அந்த நாட்டின் நிலம் வேதியல் குண்டு வீச்சுகளினால் நச்சுத் தன்மை அடைந்திருந்தது. ஆப்கானிஸ்தான், நிகரகுவா மற்றும் கிரனடா ஆகிய மூன்று ஏழை நாடுகளில் புரட்சிகள் நடந்தன. ஆனால் அவை நிலைப்பெற்றிடும் முன்பாக முறியடிக்கப்பட்டன. வங்க தேசத்திலும், சாட், பாகிஸ்தான், ஈராக், தென் கொரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டன. இந்த எல்லா இடங்களிலும் அமெரிக்காவின் கொடும் கரங்கள் இருந்தன.

1946 – 1949 ஆண்டுகளில் கிரேக்க நாட்டில் பாசிஸ்டுகள் இடதுசாரிகளை ஒடுக்கினார்கள். இந்த அழித்தொழிப்பினை அமெரிக்கா தனது ஊடகங்களின் பலத்தைக் கொண்டு மறைத்தது. இந்தோனேசியாவில் இடதுசாரிகளும், இடதுசாரி ஆதரவாளர்களும் 1965 ஆம் ஆண்டில் தொடங்கி பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டார்கள். ஆம். இந்த இன அழிப்பில் 10 லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள். இந்த காலகட்டம் தொடர்பான ஆவணங்களை முழுமையாக வெளியிட அமெரிக்கா மறுப்பு தெரிவிக்கிறது. இருப்பினும், ஜகார்த்தாவில் இருந்த அமெரிக்க தூதரகத்திற்கு நடப்பவை தெரிந்தே இருந்தன என்பதை இந்த நூல் எடுத்துக்காட்டுகிறது.

குவாடேமலாவிலோ அல்லது இந்தோனேசியாவிலோ அல்லது தெற்கு வியட்நாமில் செயல்படுத்தப்பட்ட ஃபீனிக்ஸ் முன்னெடுப்புகளோ, இடதுசாரிகளை அழித்தொழிப்பதற்கு உள்ளூர் சுயநல சக்திகளையும், ராணுவ கூட்டாளிகளையும் அமெரிக்காவே தூண்டியது.

உலகம் தழுவிய வர்க்கப்போர்

ஆம்!. நடந்துகொண்டிருப்பது தெள்ளத் தெளிவாகவே ஒரு வர்க்கப் போர் தான். உலகம் முழுவதுமே அது உழைக்கும் மக்களுக்கு எதிராக தனது துப்பாக்கியை நீட்டிக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் நடக்கும் கனிம வளச் சுரண்டல்களை எதிர்த்து போரிடும் மக்களை போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய பெயர்களில் முத்திரையிடுவதன் மூலம் தங்கள் சுரண்டலுக்கு எவ்வித ஆபத்தும் இல்லாமல் தடுத்துக் கொள்கிறார்கள்.

மன்னர்கள், தங்கள் விருப்பப்படி எதையும் செய்துகொள்வதற்கான ‘புனித உரிமையை’ கடவுள் வழங்கியிருப்பதாக பழங்கால கோட்பாடு ஒன்று உண்டு. அப்படிப்பட்ட ‘புனித உரிமை’ கொண்டிருப்பவர்களாகவே ஏகாதிபத்தியம் தன்னை கருதிக் கொண்டு இயங்குகிறது என்பதை ‘வாசிங்டன் தோட்டாக்கள்’ விளக்குகிறது.அவர்களுடைய தாரக மந்திரம் இதுதான்,‘கம்யூனிசத்தைக் காட்டிலும் பிற்போக்குத்தனம் சிறந்தது.’

சில விமர்சனங்கள்

கடும் உழைப்பின் பலனாக வெளிவந்திருக்கும் இந்த நூல் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் அவசியத்தை விளக்குகிறது. அதே சமயத்தில், வீழ்த்தப்பட்ட புரட்சிகளின் கதையையே மையப்படுத்தி இருப்பது ஒரு குறையாகும். இந்தியா போன்ற நாடுகளிலும் ஏகாதிபத்திய திட்டங்கள் செயல்படுவதை இந்த நூலின் ஒரு பகுதியாக கொண்டுவந்திருக்க வேண்டும். அது இந்திய வாசகர்களுக்கு நூலை கூடுதலாக நெருக்கமாக்கியிருக்கும். சோசலிச சக்திகளின் தவிர்க்க முடியாத பாத்திரத்தை விளக்கும் இந்த நூலில் அதற்கென தனியாக ஒரு பகுதி இல்லாததும், கட்டுரையாளரின் பார்வையில் குறைகளாக படுகின்றன. இவ்வளவு சிறப்பான நூலை நமக்கு கொடுத்திருக்கும் விஜய் பிரசாத் பாராட்டுக்குரியவர். தமிழில் அதன் பொருள் குன்றாமல் நமக்கு அளித்துள்ள மொழிபெயர்ப்பாளர் பணியும், பாரதி புத்தகாலயத்தின் பணியும் பாராட்டுக்குரியது.

இரா. சிந்தன்

இலங்கை நெருக்கடியும் மக்களின் போராட்டமும் கட்டுரை – தமிழில் : ச.வீரமணி

இலங்கை நெருக்கடியும் மக்களின் போராட்டமும் கட்டுரை – தமிழில் : ச.வீரமணி




இலங்கையில் மே 9 அன்று நடைபெற்ற வன்முறை நிகழ்வுகள், நாடு மிகவும் ஆழமான பொருளாதார நெருக்கடியால் சீர்கேடு அடைந்துகொண்டிருந்த நிலையில் அதற்கு ஒரு கூர்மையான நிவாரணத்தை அளித்திருக்கிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடி இப்போது அரசியல் அமைப்பு முறை மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தையும் முழுமையாகக் கவ்விப்பிடித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குப் பிரதான காரணமாக ராஜபக்சே குடும்பத்தின் ஆட்சி அமைந்திருக்கிறது. ஜனாதிபதியான கோட்டபய ராஜபக்சே தன்னுடைய நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தி, தள்ளாடிக்கொண்டிருக்கும் ஆட்சிக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு முயற்சியாக தன் மூத்த சகோதரர் மகிந்தா ராஜபக்சேயை பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யக் கோரியிருக்கிறார். முன்னதாக, ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்திருந்தது. அதனைத்தொடர்ந்து மகிந்தா ராஜபக்சே தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம் செய்யப்பட்டிருந்தது.

ராஜபக்சே அரசு மேற்கொண்ட பேரழிவு தரத்தக்க முடிவுகள்தான் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும். வரிகளை வெட்டியது, வேளாண்மைக்குப் பயன்படுத்துவதற்கான ரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்தது, வெற்று ஆரவாரத் திட்டங்களுக்கு அதிக அளவில் முதலீடுகளைச் செய்தது, எதேச்சாதிகார ராஜபக்சே ஆட்சி மேற்கொண்ட இந்நடவடிக்கைகள் அனைத்தும் அரசின் வருவாயைக் குறைத்தது, வேளாண் உற்பத்தியைச் சீர்குலைத்தது, கடன் சுமை அதிகரிப்புக்கு இட்டுச் சென்றது.

கோவிட் பெருந்தொற்று பொருளாதார நெருக்கடியை மேலும் விரைவுபடுத்துவதற்கே இட்டுச் சென்றது. இதன் காரணமாகச் சுற்றுலா முற்றிலுமாக நின்றதால் அந்நியச் செலாவணி வருமானங்களில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இத்துடன் வெளிநாட்டில் வேலை பார்க்கும் இலங்கைத் தொழிலாளர்கள் பணம் அனுப்புவதும் நின்றுவிட்டது.

பொருளாதாரம் நிலைகுலைந்ததைத் தொடர்ந்து, மக்கள் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் கிடைக்காமல் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். விலைவாசிகளும் பாய்ச்சல் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு தாங்கமுடியாத அளவிற்கு நிலைமைகள் சென்றபின்னர் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் துவங்கிவிட்டார்கள். மார்ச் 31இலிருந்து கிளர்ச்சியாளர்கள் மத்திய கொழும்பு, காலிமுகத்திடல் பூங்கா பகுதியிலும், பிரதமரின் இல்லத்திற்கு வெளியேயும் அணிதிரண்டு, முகாமிட்டிருக்கிறார்கள். அமைதியான முறையில் நடந்து வந்த இந்தக் கிளர்ச்சிப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். இந்தப் போராட்டமானது, ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் என அனைத்துத்தரப்பினரின் ஆதரவையும் பெற்றிருக்கிறது.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்களின் இக்கிளர்ச்சி இயக்கத்தில் தொழிலாளர் வர்க்கம் முக்கியமான பங்களிப்பினைச் செய்திருக்கிறது. தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 28 அன்று பொது வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தில் பல லட்சக்கணக்கானோர் பங்கேற்றார்கள். பின்னர் மீண்டும் மே 5 அன்று இரண்டாவது ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் மற்றும் ஹர்த்தால் நடைபெற்றன. இதிலும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் இதர அலுவலர்கள் உட்பட ஏராளமானவர்கள் பெரிய அளவில் பங்கேற்றார்கள். இந்த வேலை நிறுத்தங்களின்போது ஜனாதிபதியும் அவருடைய அரசாங்கமும் ராஜினாமா செய்திட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டன.

இவ்வாறு வேலைநிறுத்தப் போராட்டங்கள் வீறுகொண்டு நடைபெற்றதைத் தொடர்ந்து பீதியடைந்த ஜனாதிபதி கோட்டபயா, இரண்டாவது முறையாக ஒரு மாத கால அளவில், மீண்டும் அவசரநிலைப் பிரகடனம் செய்தார். ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. எனினும் போராட்டக்காரர்கள் அதனை மீறினார்கள். உண்மையில் ஆட்சியாளர்கள் விழிபிதுங்கி நின்றனர். அவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மே 9 அன்று நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் என்பவவை, அமைதியாக நடைபெற்று வந்த போராட்டத்தைச் சீர்குலைப்பதற்காக, ராஜபக்சே தரப்பில் மேற்கொள்ளப்பட்ட கடைசி முயற்சியாகும்.

மகிந்த ராஜபக்சே, போராடுவோரின் கோரிக்கையை ஏற்று ராஜினாமா செய்வதற்குப் பதிலாக, தன் கட்சி (எஸ்எல்பிபி) ஆதரவாளர்களை தன் இல்லத்திற்கு அழைத்து, அவர்கள் மத்தியில் ஆத்திரமூட்டும் விதத்தில் பேசிய பின்னர், அவருடைய ஆதரவாளர்கள் வெளியே வந்து, அமைதியாகப் போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கின்றனர், அவர்களின் தற்காலிக பந்தல்களை நாசமாக்கி இருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து காலி ஃபேஸ் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த முகாம்கள் மீது தாக்குதல்கள் தொடுத்தனர். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்தார்கள். அங்கே நின்றிருந்த காவல்துறையினர் இவர்களை அடக்குவதற்குத் தவறிவிட்டனர்.

ஆளும் கட்சித் தரப்பு ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய கேவலமான வன்முறை நடவடிக்கைகள்தான் கொழும்புவுக்கு வெளியிலும் போராட்ட உணர்வைக் கொண்டு சென்று, இதற்குப் பதிலடி கொடுக்கும் நிலையை உருவாக்கியது. ஆயிரக்கணக்கான மக்கள் பிரதமரின் இல்லம், டெம்பிள் ட்ரீஸ் முன் (Temple Trees) கூடி, அதனைத் தாக்க முற்பட்டார்கள். இறுதியாக, பிரதமர் பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்ட மகிந்த ராஜபக்சேயும் அவருடைய குடும்பத்தினரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு, பாதுகாப்பிற்காகக் கடற்படைத் தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். இதன் பின்னர் ராஜபக்சே குடும்பத்தினரின் அனைத்து வீடுகளும், முன்னாள் அமைச்சர்கள் வீடுகளும், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளும் குறிவைத்துத் தாக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன.

இதற்கிடையில், பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும், சமாஜி ஜன பாலவெகயா கூட்டணி (SJB alliance), ஜனாதிபதி கோட்டபயா தலைமையின்கீழ் அமையும் எவ்விதமான அனைத்துக் கட்சி அல்லது இடைக்கால அரசாங்கத்திலும் இணைய மாட்டோம் என அறிவித்தது. கோட்டபயாவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள். இடதுசாரிக் கட்சிகளும், ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) ஆகியவையும் புதிய தேர்தல்கள் நடைபெறும் வரையிலும் இடைக்கால ஜனாதிபதியும், இடைக்கால அரசாங்கமுமே வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.

நாட்டில் அளவிடற்கரிய அதிகாரங்களைப் பெற்றிருக்கும் ஜனாதிபதி கோட்டபயா வெளியேற வேண்டும் என்று கோருவது நியாயமே. ஏனெனில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் குளறுபடிகளுக்குப் பிரதான காரணமே இவர்தான். இவரால் உருவாக்கப்பட்டதுதான் இப்போதிருந்துவரும் எதேச்சாதிகார தேசியப் பாதுகாப்பு அரசு. பொருளாதார நெருக்கடியும் அரசியல் நெருக்கடியும் பின்னிப்பிணைந்தவைகளாகும்.

ராஜபக்சே ஆட்சி அகற்றப்படுவதுடன், இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகளில் ஜனநாயக பூர்வமான முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அனைத்து அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதி ஆட்சி ஒழித்துக்கட்டப்பட வேண்டும். மத்தியத்துவப்படுத்தப்பட்ட தேசியப் பாதுகாப்பு அரசும் கலைக்கப்பட வேண்டும். நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக மக்கள் ஆதரவு வளர்ச்சிப் பாதைக்கான கொள்கை ஏற்படுத்தப்பட வேண்டும். ராஜபக்சே குலத்தினரின் மீதான மாயை காணாமல் போயிருப்பதன் காரணமாக அது சிங்கள பெளத்தமத தேசியவாதம் மங்குவதற்கும் இட்டுச் செல்வதுடன், அதற்குப் பதிலாக மொழி மற்றும் மத சிறுபான்மையினர் மீது ஜனநாயக பூர்வமான அணுகுமுறையுடன் கூடிய அனைத்து மக்களின் ஒற்றுமைக்கான அடித்தளம் அமைக்கப்படும் என நம்புவோம்.

இலங்கை அரசாங்கம், கடன் பெறுவதற்காக, சர்வதேச நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு சர்வதேச நிதியம் அளிக்கும் நிபந்தனைகள் என்பவை, சமூக நலத்திட்டங்களில் வெட்டு, சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் மற்றும் தனியார்மயத்தை மேலும் விரிவுபடுத்திட வேண்டும் என்பவைகளாகும். இப்போதுள்ள ஆட்சியாளர்கள் இவற்றுக்கு உட்படுவதைத் தவிர வேறு வழியில்லை.. ஆனால், இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆழமான கட்டமைப்பு நெருக்கடிக்கு இது தீர்வாகாது.

இதற்கு எதிராக மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் விதத்திலும், நிதிமூலதனத்தின் இழிவுகளிலிருந்து இலங்கையைப் பாதுகாத்திடும் விதத்திலும் ஒரு மாற்றுப்பாதை அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இலங்கையில் உள்ள இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு ஓர் அபூர்வமான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனை அவர்கள் பயன்படுத்திக்கொண்டு இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புமுறைகளில் மறுகட்டமைப்பை ஏற்படுத்திடவும், அத்தகைய மாற்றத்திற்கான போராட்டத்திற்கு மக்களை அணிதிரட்டிடவும் அவர்கள் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.

(மே 11, 2022)
(நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி)