கொடிப் பயணம் கவிதை – நா.வே.அருள்

கொடிப் பயணம் கவிதை – நா.வே.அருள்




அன்று…
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும்
சுதந்திரம் இருக்க
தெருவில் பறந்தது
தேசியக் கொடி
இன்று…
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும்
கொடிகள் பறக்க.
தெருவில் நசுங்கும்
வாங்கிய சுதந்திரம்.

நாங்கள் விடுதலையின் புத்திரர்கள்
வீர நடை போடுகிறோம்.

குடியாத்தத்திலிருந்து
கொடியை
ஒரு குழந்தையைப் போல
ஏந்தி வருகிறோம்.

மாநிலம் முழுவதும்
சுற்றி வருகிறோம்
மாபெரும் சுதந்திரம்
பற்றி வருகிறோம்
கொடிகாக்கும் குமரர்களாய்க்
கூடி வருகிறோம்.

நதியைப் போல நடந்து வருகிறோம்
கடலைப் போல எழுந்து வருகிறோம்
கதிரைப் போல சுடர்ந்து வருகிறோம்

பாரதியின் தாழ்வாரத்தில் பதியமிட்டு
பாரதிதாசனின் பலகணியில் ஒளிரவிட்டு
பட்டுக்கோட்டைப் பாட்டில் பறக்கவிட்டு
தமிழ்ஒளி நெஞ்சத்தில் தழையவிட்டு
பாலசரஸ்வதி கலைக்கூடத்தில் நடனமிட்டு
சங்கரய்யா நல்லகண்ணு கரங்கள் தொட்டு
தாரிகாமி கொடியேற்ற
இந்திய ஒற்றுமையை
ஏந்தி வருகிறோம்.

குருதிக் குளியலுக்குப் பிறகு
இந்தியத் தாய் உடுத்திய
ஒற்றை உடைதான்
தேசியக் கொடி!

அந்த உடைக்குள்தான்
விடுதலையின் புத்திரர்கள்
இழைகளாக இருக்கிறார்கள்.

தேசியக் கொடி….
தியாகிகளின்
நெஞ்சங்களில் நடந்த நெசவு
அதிகாரத்தின் கைக்குட்டையாவதில்லை

உறங்காமல் விழித்திருக்கும்
ஒற்றைக் கணதான்
அசோகச் சக்கரம்!

வெள்ளையனை விரட்டியடித்த
வீரத் தழும்புகளுக்கு
கட்டுப் போட்டுக் காய்ந்த சிவப்புதான்
காவி நிறம்.

சாதிகளற்று சங்கமமாகி
துரோகிகளை அடையாளம் காட்டும்
தூய வெள்ளை

வளர்ச்சிக்கான பாலமாகி…
பசியில் கருத்திருக்கும் பச்சை

கண்ணீரும் வியர்வையும் குருதியும்
கலந்த
மூவண்ணங்களின்
முடி மகுடம்தான் கருநீலம்!

கர்ம வீரர்களின்
கடைசிப் போர்வை
இது கொடியல்ல…
ஒவ்வொருவர் கண்ணுக்குள்ளும்
உறைந்திருக்கும் உயிர்த்துணி.

ஆகஸ்டுக் காற்றில் அசைந்து
மையம் கொண்ட புயல்களின்
மலரும் நினைவுகளில்.
உலக அழகென
கம்பத்தின் உச்சியில் அசையும்
கடைசி இந்தியனின் கனவு

தேசியக் கொடியின் அட்சயப் பாத்திரத்திலிருந்துதான்
ஆயிரமாயிரம் அம்மணக் கம்பங்களுக்கு
ஆடை கிடைக்கிறது!

தேசியக் கொடியின் நிழலிலிருந்து
உருவாகும்
மின்சாரத் தீப்பந்தம் கண்டு
கொலைகாரர்கள் நடுங்குகிறார்கள்
கொள்ளைக்காரர்கள் பதுங்குகிறார்கள்
துரோகிகள் ஒதுங்குகிறார்கள்

தேசியக் கொடியின்
தேசிய கீதம் இதுதான்….
“அடிமைகள் கைப்பற்றும்போது
கம்பம் கழுமரமாகும்!
விடுதலை வீரர்களின் விரல்பட்டால்
கம்பம் கொடிமரமாகும்!”

– நா.வே.அருள்
மாநிலக் குழு உறுப்பினர்
தமுஎகசவின் 15 ஆம் மாநில மாநாட்டையொட்டி எழுதிய கொடிப்பயணக் கவிதை

Viduthalaikkana Veli Thiranthu Kidakkirathu Poem By Vasanthadheepan. விடுதலைக்கான வெளி திறந்து கிடக்கிறது கவிதை - வசந்ததீபன்

விடுதலைக்கான வெளி திறந்து கிடக்கிறது கவிதை – வசந்ததீபன்

விடுதலைக்கான வெளி திறந்து கிடக்கிறது
***************************************************
வண்ணத்துப்பூச்சி
வெளியேற முடியாத அறை
பறந்து பறந்து சுழல்கிறது
கழிவிரக்கம் மேலிடுகிறது
அவன் வயரைக்கடித்து இறந்து போனான்
சுவிட்சு போர்டுக்கும் வயருக்கும் தண்டனை
பறத்தல் பறவைகளுக்கானது மட்டுமல்ல
விடுதலையாகிப் பறக்கின்றன
எருக்கம் விதைகள்
கட்டு மீறிக் களிக்கிறது மனசு
வெறிநாய் எதிர்ப்படுகிறது
காருண்யம் உனக்கு உதவாது
கொல்வதைப் பற்றி யோசி
விழித்துக் கொள்
அறம் செத்த தேசம்
நீதி பிறழ்ந்து திரியும்
ஜன்னலை மட்டும் திறந்து விட்டால் போதாது
கதவுகளையெல்லாம் திறந்து விடுங்கள்
வெளிச்சம் வீட்டில் நிரம்ப வேண்டும்
எனக்கான விடுதலை
நீ தான் எழுத வேண்டும்
நாம் தான் கொண்டாடுவோம்
ரத்தக்கறை படிந்த சட்டை கிடந்தது
விபத்தா? அல்லது பலியா?
புரிபடாமல் இருப்பதே நல்லது
நோய்கள் எல்லோருக்கும் வருகின்றன

வைத்தியம் சிலருக்குத்தான் கிடைக்கிறது
ஏற்றத்தாழ்வு இருக்கும் வரை இப்படித்தான்
குழாயடியில் குடமும் நீரும் சந்தித்தன
இசைக்கச்சேரி ஆரம்பமானது
ரசிக்காமல் எல்லோரும் சண்டையிடுகிறார்கள்.

An insult to the federal philosophy and the values ​​of the liberation struggle Article By Veeramani. கூட்டாட்சித் தத்துவத்திற்கும், விடுதலைப் போராட்டத்தின் விழுமியங்களுக்கும் அவமதிப்பு - வீரமணி

கூட்டாட்சித் தத்துவத்திற்கும், விடுதலைப் போராட்டத்தின் விழுமியங்களுக்கும் அவமதிப்பு – வீரமணி




ஜனவரி 26 அன்று குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக சில மாநில அரசுகள் அனுப்பிய அலங்கார ஊர்திகளை ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் நிராகரித்திருக்கும் விதம், அவர்களின் மனோநிலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.

கேரளம், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில அரசாங்கங்களின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டிருப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கும், விடுதலைப் போராட்டத்தின் சமூக-கலாச்சாரப் பாரம்பர்யங்களுக்குமான ஆழமான அவமதிப்பையே காட்டுகிறது.

இந்த ஆண்டு அணிவகுப்பு சுதந்திர தினத்தின் 75ஆவது ஆண்டைக் குறிப்பதால், அதற்கேற்ற விதத்தில் மேற்கு வங்க அரசு நேதாஜி சுபாஷ் சந்திர போசையும், விடுதலைப் போராட்டத்தில் இந்திய தேசிய ராணுவத்தின் பங்களிப்பையும் சித்தரிக்கும் விதத்தில் அலங்கார ஊர்தியை அனுப்பியிருந்தது. இது நிராகரிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு, மாநிலத்தின் முக்கிய விடுதலைப் போராட்ட வீரர்களாக விளங்கிய வ.உ.சிதம்பரனார், விடுதலைப் போராட்டத்தின் தேசியக் கவி, சுப்பிரமணிய பாரதியார் மற்றும் சிலரை அலங்கார ஊர்தியில் சித்தரித்திருந்தது. இதனையும் ஒன்றிய அரசு ஏற்கவில்லை.

கேரளாவின் அலங்கார ஊர்தியில் மாபெரும் சாதி ஒழிப்புப் போராளியும், மறுமலர்ச்சி இயக்க வீரருமான ஸ்ரீ நாராயண குருவின் சிலை வைக்கப்பட்டிருந்தது. இதனையும் ஒன்றிய அரசு நிராகரித்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாகும். அலங்கார ஊர்திகளை அனுமதித்திடும் வல்லுநர் குழுவானது, ஸ்ரீ நாராயண குருவின் சிலைக்குப் பதிலாக ஆதி சங்கராச்சாரியார் சிலை வைக்கப்பட வேண்டும் என்று விரும்பியதாகக் கூறப்படுகிறது. ஆயினும் கேரள அரசு ஸ்ரீ நாராயண குருவின் சிலையை அப்புறப்படுத்த மறுத்ததன் காரணமாக, கேரள அரசின் அலங்கார ஊர்தியும் நிராகரிக்கப்பட்டது.

20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சமூக சீர்திருத்தவாதியாக இருந்து, விடுதலை இயக்கத்திற்கும், மறுமலர்ச்சி இயக்கத்திற்கும் பங்களிப்பினைச் செய்தவரைவிட, எட்டாம் நூற்றாண்டில் பிராமண தர்மத்தை மீட்டமைத்திட்ட ஒரு சாமியார், எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும்? இதனை இந்துத்துவா சித்தாந்தத்தின் அடிப்படையில் இயங்கிடும் ஒன்றிய ஆட்சியாளர்கள்தான் விளக்கிட முடியும். கேரளாவின் அலங்கார ஊர்தியில் ஆதி சங்கராச்சார்யாவின் சிலையை வைத்திட வேண்டும் என்று ஒன்றிய அரசின் வல்லுநர் குழு வற்புறுத்தியதன்மூலம் அது ஸ்ரீ நாராயண குருவை மட்டும் அவமதித்திடவில்லை, கேரளாவின் ஒட்டுமொத்த முற்போக்கு சமூக-கலாச்சாரப் பாரம்பர்யத்திற்கும் ஏற்படுத்தப்பட்ட அவமதிப்பாகும்.

தங்கள் மாநில அலங்கார ஊர்திகளை விலக்கிவைத்திருப்பதனை எதிர்த்துக் கடிதம் எழுதிய மேற்கு வங்க மற்றும் தமிழ்நாடு அரசு முதல்வர்களின் கடிதங்களுக்குப் பதில் அளித்துள்ள ஒன்றிய ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங், அவ்வாறு விலக்கியிருப்பதை நியாயப்படுத்தி இருக்கிறார். அவரின் கூற்றுப்படி, அலங்கார ஊர்திகளை அனுமதித்திடும் வல்லுநர் குழுவில், கலை, கலாச்சாரம், இசை, கட்டிடக்கலை முதலானவற்றில் புகழ்பெற்ற நபர்கள் அங்கம் வகிக்கிறார்கள் என்பதாகும். இந்த 75ஆம் ஆண்டு சுதந்திரதினத்தைக் கொண்டாடும் குடியரசு தின அணி வகுப்பிற்கு மிகவும் பொருத்தமான நபராக ஆதி சங்கராச்சார்யாவைக் கருதிய வல்லுநர் யார் என்று தெரிந்துகொள்ளவே ஒருவர் விரும்புவார்.

ராஜ்நாத் சிங், மேற்கு வங்க முதல்வருக்கு எழுதியிருக்கும் பதிலில், மத்தியப் பொதுப் பணித்துறையும் ஓர் அலங்கார ஊர்தியைப் பெற்றிருப்பதாகவும் அதில் சுபாஷ் சந்திர போசுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் அந்த அலங்கார ஊர்தி அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவர் கூறும் கூற்றுப்படி, ஒரு மாநிலஅரசின் அலங்கார ஊர்தியைவிட ஒன்றிய அரசின் ஒரு துறை அளித்துள்ள அலங்கார ஊர்தி முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது என்பதாகும்.

மோடி அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான மற்றும் குறுங்குழுவாதக் கண்ணோட்டத்தின் காரணமாக நடைமுறையில் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தின் அலங்கார ஊர்திகளும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கவில்லை. இது, அரசாங்கத்தின் கூட்டாட்சித்தத்துவத்திற்கு எதிரான அணுகுமுறையையே காட்டுகிறது. ஜனவரி 26 இந்தியக் குடியரசு உருவானதையும், இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என வரையறுத்திடும் அரசமைப்புச்சட்டம் பிரகடனம் செய்யப்பட்டதையும் குறிக்கும் தினமாகும். மோடி அரசாங்கம், இவ்வாறு அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை நெறிமுறைகளையே மீறிக் கொண்டிருக்கிறது.

(ஜனவரி 19, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

Kaviyoviyathodar Yuthageethangal - Viduthalai 28 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர் யுத்தகீதங்கள்- விடுதலை 28

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: விடுதலை 28 – நா.வே.அருள்




விடுதலை
****************
ஒரு விவசாயியின் அரிசியில்
கடவுளின் கையெழுத்து இருக்கிறது
சாத்தான்களால் படிக்க முடிவதில்லை.

ஒரு விவசாயி
மணிலாவை உரிக்கிறபோது
உள்ளே உருளும் இரண்டு பிணங்கள்!.

வயக்காட்டின் சேற்றில்
விவசாயிகளின் வாழ்க்கைக் குறிப்பு இருக்கிறது.

அவர்கள் குடிக்கும் கூழ்
உங்கள் மதுக்கோப்பைகளில்
போதையைத் தருவதில்லை.

குருவிக்காரப் பெண்மணிகள்
மார்பில் குழந்தைகளைக் கட்டி வருவதுபோல
உழைத்துக் களைத்த விவசாயப் பெண்களின்
மடி நிறைய கீரைக் குழந்தைகள்.

இரவு எட்டு மணிக்கு மேல்தான்
அவர்கள் அடுப்பு புகைய ஆரம்பிக்கிறது.
அப்போதெல்லாம் உங்கள்
மதுச் சாலைகளில்
கோப்பைகளின் கிண்கிணியோசைகள்.

அவர்களின் நெற்றிப் பட்டைகள்
தேசியக் கொடிகள்
அவர்களின் வயிற்றுச் சுருக்கங்கள்
தேச வரைபடம்.

மனித மூக்குக்கு
மூக்கணாங்கயிறா?
அவர்கள் காளைகளின் திமில்கள்.

உங்கள் காதுகளில் அடைத்திருக்கும்
பஞ்சினை அகற்றித்தான்
அவர்களின் காயங்களுக்குக் கட்டுப்போட முடியும்.

முன்னோர்களின் ரத்தக்கறை படிந்த
விடுதலை மண்ணை விழுங்கிச் செரிக்க
நவீன சட்டங்களின் கறுப்பு எழுத்துகள் திணறுகின்றன.

உயிரை நீக்கியபின்
பிணத்திற்கு மருத்துவம் பார்க்கிற
விசித்திரங்களே
புதிய வேளாண் சட்டங்கள்!
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்
அவர்களின் டிராக்டர்களுக்கு
விடுதலை விவசாயம் தெரியும்!!

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்