கலையரசியின் கவிதைகள்
இருள் காதலன்
*****************
இருட்டிற்கு ஒளி
தாங்கியபடி
ஒனிர்ந்துக் கொண்டிருந்தாள்.
கும்மிருட்டின் மேல்
அவளுக்கு
அப்படி ஒரு காதல்.
காதலனின் வருகைக்காக
பகலெல்லாம் தவமிருந்து
இருளைக் கை கோர்க்க
காத்திருக்கிறாள்.
இருள் காதலன்
இவளது காதலை
சட்டை செய்வதில்லை.
வருவான் போவான்.
அவ்வளவு தான்.!
ஏனோ! காத்துக்
கொண்டே இருக்கிறாள்
இருள் காதலுனுக்காக
“மின்மினி பூச்சி”
மணல் வீடு
**************
கடல் முத்தமிடும்
மணலைப் பார்த்துக்
கொண்டே இருப்பேன்.
சிறு பிள்ளைகள்
கூம்பு வடிவ
வீட்டை ஆசையாக
கட்டிக் கொண்டிருக்க.
“நைந்து வலியைப்
பொறுத்தபடியே
இருக்கும் என்
கைப்பைக்கு” ஓய்வு
அளித்திருந்தேன்.
மணல் வீட்டைக்
கட்டத் தொடங்கினேன்.
“ஈ.எம் ஐ” கட்ட வேண்டாம்.
“அஞ்சு பத்து”
கணக்கு பார்க்க வேண்டாம்..
வாழ்க்கையை அடமானம்
வைக்க வேண்டாம்.
இதெல்லாம் பணம்
உள்ளவர்களுக்கு.
இதோ மணல் வீட்டில்
சொந்த வீட்டு
ஆசையைப் பார்க்கிறேன்.!
கட்ட முடியாது என
தெரிந்தும்.!!
இரா.கலையரசி