கவிதை : ச.சக்தி kavithai : sa.sakthi

கவிதை : ச.சக்தி



சைக்கிள் ….!

அப்பா
ஆசையாக
வாங்கிக் கொடுத்த
சைக்கிள்
பழுதாகி பழைய
இரும்புக் கடையில்
ஒரு மூளையில் கிடக்கிறது

அந்த
சைக்கிளில் தான்
பள்ளிக்கு சென்று வந்தேன்,
அம்மாவுக்காக
மளிகை கடைக்கு
போயிட்டு வந்தேன்,
அக்காவுக்காக
டைலர் கடைக்கு போயிட்டு வந்தேன்,
அண்ணனுக்காக
டிபன் கடைக்கு போயிட்டு‌ வந்தேன்,
என் காதலிக்காக
களத்துமேட்டுக்கு போயிட்டு ‌ வந்தேன்,

எல்லா இடத்திற்கும்
போயிட்டு வந்த
அப்பா வாங்கிக் கொடுத்த
சைக்கிள்
போகாத
இடத்திற்கு போய்விட்டது
பழுதடைந்த
பழைய சைக்கிளாய் ……!!!!

கவிஞர் ச.சக்தி
பண்ருட்டி.

சுட்டுவிரலுடன் ஓர் சுண்டுவிரல் கவிதை - சே கார்கவி கார்த்திக் sutuviraludan oor sunduviral kavithai kaarkavi kaarthik

சுட்டுவிரலுடன் ஓர் சுண்டுவிரல் கவிதை – கார்கவி கார்த்திக்


ஆறுதல் சொல்லி சொல்லி
கண்ணீருக்கு கைகள்
வலித்துப் போனது

எந்த தீங்கும் செய்ய நினைக்காத மனங்களுக்கு தொடர் காயங்கள் முளைத்துக் கொண்டேயிருக்கின்றன

யாரிடம் சொல்லி அழ
யார் தேற்றலில்
எழுந்து நிற்க

நொந்து போன மனதில்
எத்தனை இரணங்கள்
தீண்டாதீர்கள்
அருகில் வாராதீர்கள்

யாருடைய உறவும் அவசியமில்லை
யாரையும் என் நிழல்கூட
ஏற்க விரும்பவில்லை
நிலை அறிந்து பழகிட யாருமில்லை
எனக்கென்று அவளைத்தவிர யாருமில்லை…

கவலை என்னவென்று
சொல்லி அழுதுவிடுகிறாள்
இந்த மரத்தலான ஆணுக்கு
கண்கள் சிவப்பதோடு
முற்றும் பெறுகிறது கண்ணீர்

யாருக்குதான் கவலையில்லை
என்போல யாருக்குதான்
கவலையில்லை

தொலைந்துவிட தோன்ற நினைக்கையில்
கண்ணீர் துடைக்க வேண்டி
அருகில் அவள்

தொலையட்டும் அனைத்தும்
நான்
அவளோடு மட்டும் பயணிக்கிறேன்
நாங்காளாய்….!

Panagai thamizhan's Poems 4 பாங்கை தமிழனின் கவிதைகள் 4

பாங்கை தமிழனின் கவிதைகள்

பெயரற்ற காதலர்
*********************
எனக்கு
மிகவும் பிடித்தமானவர்
அந்த நாயகனும்
நாயகியும்!

இன்றும்
என்றும்
இளமை…. இனிமை
நிரந்தரமானவர்!

சாயமாக
இனமும் சாதியும்
பூசி அறியா
புனித காதலர்கள்!

அந்ந
நாயகனும் நாயகியும்!

அவர்களுக்குப்
பெயர்கூட இல்லை….

பெயர் பார்த்து
சாதியப் பெருமை பேசி
பீற்றிக் கொள்வர்
என்பதால்;
பெயரும் அற்றவர்கள்!

அவனுக்குத்
தலைவன் என்றும்
அவளுக்குத் தலைவி என்றும்
பெயர்!

சங்ககால இலக்கியம் காட்டும்
நாயகன்..
நாயகி!
பெயரற்ற காதல்
ஆனால்
பெருமை மிகு காதல்!

‘தமிழை விட தரணியில் ஏதுமில்லை’
******************************************       
புகட்டுங்கள்
இது
தாய்ப்பால் நிகர்!
ஊட்டுங்கள்
இது
அமிழ்து!

நாவினிக்கத்
தடவுங்கள்
இது
தேன்!

சுவைக்கக்கொடுங்கள்
இது
முக்கனிக் கலவை!

குடிக்கக் கொடுங்கள்
இது
நனி பசு நல்கியப் பால்!

உண்ணக் கொடுங்கள்
இது
அதியன் ஔவைக்குக் கொடுத்த நெல்லி!

சொல்லிக் கொடுங்கள்
இது
சுந்தரம்!

தொட விடுங்கள்
இது
பனி மலர்!
சுவாசிக்க  விடுங்கள்
இது
பொதிகை தென்றல்!

பூசி விடுங்கள்
இது
பொதிகை சந்தனம்!

குளிப்பாட்டுங்கள்
இது
குற்றால அருவி!
நனைய விடுங்கள்
இது
அந்தி மழை!

அணிவித்து மகிழுங்கள்
இது
பூவாடை!
நீந்த விடுங்கள்
இது
காவேரி!

ஏற்றி விடுங்கள்
இது
திருவாரூர் தேர்!

வணங்கச் சொல்லுங்கள்
இது
தஞ்சை பெரிய கோயில்!
தாகம் பருகச் சொல்லுங்கள்
இது
தாமிரபரணி/சிறுவாணி!

‘இது’தான் ‘தமிழ்’!

இதைவிட ஏதுமில்லை
ஒரு குழந்தைக்கு
‘மொழி’!

இதைவிட ஏதுமில்லை
நம் குழந்தைகட்குத் தாலாட்டு!
இதுவே உயர்வுதரும்!

புரட்சித் தலைவன்
*********************
மண்ணிலே மனிதராக
மலர்ந்திட்ட மானுடர்க்கு
மானிட சமூகம்தானே
துணையென நிற்க வேண்டும்!

வேண்டுவோர் வேண்டாதோரே
வேண்டாமே எண்ணந்தன்னில்;
எல்லோரும் மனிதரென்ற
எண்ணமே வேண்டும் வேண்டும்!

மனிதரை மதிப்போர் யாரும்
மாநில பெருமை கொள்வர்;
மக்களின் மனம் உயர்ந்தே
மாமணி பெறுவார் பேரே!

ரஷ்யாவின் நாடு தன்னில்
ரட்சகன் தோன்றினானே
லெனின் எனும் புரட்சியாளன்
பூகோளம் புரட்டினானே!

விளைகின்ற பயிர்கள்தானே
முளையிலே தெரியும் என்பார்
இளமையில் தெரிந்தார் நல்ல
இளகிய மனத்தினாலே!

அம்மாவை அணுகிக் கேட்பார்
அன்புடன் காசு வேண்டி;
அம்மாதான் கொடுக்கும் காசால்
அடைபட்டக் கிளியை வாங்கி
ஆகாயம் பறக்கச் செய்து
ஆனந்தம் பொங்கி வாழ்வார்!

கிளிகளை கூண்டுக்குள்ளே
கீழமை எண்ணம் கொண்டு
அடைத்திடும் பாவந்தன்னை
அவரென்றும் விரும்ப மாட்டார்!

பறவைகள் பறந்து சென்று
பரவசம் அடைவதைப்போல்
மனிதரும் அடிமையின்றி
மண்ணிலே வாழ வேண்டி;

தன்வாழ்வை அவருக்கீந்தார்
தன்மானத் தலைவரானார்!
அவன்தானே புரட்சியாளன்
அதையெப்போ புரிவோம் நாமே!?